முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 18-21


குழந்தைகளே, இதுவே இறுதிக் காலம். எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். ஆகவே இறுதிக் காலம் இதுவே என அறிகிறோம். இவர்கள் நம்மிடமிருந்து பிரிந்தவர்கள்; உண்மையில் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களே அல்ல; நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் நம்மோடு சேர்ந்தே இருந்திருப்பார்கள். ஆகையால் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது வெள்ளிடைமலை. நீங்கள் தூயவரால் அருள்பொழிவு பெற்றிருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் அறிவு பெற்றுள்ளீர்கள். நீங்கள் உண்மையை அறியவில்லை என்பதால் நான் உங்களுக்கு எழுதவில்லை; மாறாக, அதை அறிந்துள்ளீர்கள் என்பதாலும் பொய் எதுவும் உண்மையிலிருந்து வராது என்பதாலுமே நான் எழுதியுள்ளேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.




பதிலுரைப் பாடல்�

திபா 96: 1-2. 11-12. 13

பல்லவி: விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்;
அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். -பல்லவி

11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக;
கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்;
அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். -பல்லவி

13 ஏனெனில் அவர் வருகின்றார்;
மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;
நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா.

டிசம்பர் 31 யோவான் 1:1-18

டிசம்பர் 31

நற்செய்தி வாசகம்�
+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-18

தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.

கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது.

ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ள வில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள். வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.

யோவான் அவரைக் குறித்து, �எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்'' என உரத்த குரலில் சான்று பகர்ந்தார். இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

31.12.2018 – யோவான் 1: 1 – 8
1யோவான் 2: 18 – 21
வாழ்வின் சோதனைகள்

சோதனை என்பது வாழ்வின் எல்லாருக்கும் வரக்கூடியது. ஒரு சிலர் சோதனைகளைத் தாங்க முடியாமல், அந்த சோதனைகளுக்கு பலியாகி விடுகின்றனர். ஒரு சிலர் அதனை எதிர்த்து நிற்கின்றனர். மற்றும் சிலர், சோதிக்கிறவர்களோடு சேர்ந்து கொள்கிறார்கள். இன்றைய வாசகம், இப்படிப்பட்டவர்கள் மட்டில், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறது. நாம் கிறிஸ்துவோடு இருக்கிறபோது, நமக்கு பல்வேறு சோதனைகள் வரும். கிறிஸ்துவுக்கு எதிராக இருக்கிறவர்கள் இந்த சோதனைகளை நமக்கு ஏற்படுத்துவார்கள்.

நம்மை கிறிஸ்துவிடமிருந்து பிரிக்க முயற்சி எடுப்பார்கள். நாம் அவர்களின் சோதனைகளுக்கு பலியாகி விடக்கூடாது என்பது தான், யோவான் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிடுகிறார். ஏனென்றால், எதற்காக நாம் இதுவரை காத்திருந்தோமோ, அந்த காலம் வந்து விட்டது. கிறிஸ்துவுக்காக காத்திருந்த காலம் கனிந்து விட்டது. இந்த காலத்திற்காகத்தான் இவ்வளவு நாட்கள் நம்மையே நாம் தயாரித்துக் கொண்டு இருந்தோம். இவ்வளவு நாட்கள் பொறுமையாக இருந்த நாம், இந்த சோதனையான காலத்திலும் பொறுமையாக இருந்தால், நிச்சயம் நாம் கிறிஸ்து நமக்காக ஏற்பாடு செய்திருக்க விண்ணக பேரின்ப விருந்தில் கலந்து கொள்ள முடியும்.

கிறிஸ்துவில் இணைந்திருப்பது என்பது சாதாரணமான காரியம் அல்ல. பல்வேறு சோதனைகளை எதிர்த்து துணிவோடு போராடக்கூடிய கடமை, நமக்கு இருக்கிறது. அந்த சூழ்நிலையில் நாம் சோதனைகளுக்கு பலியாகிவிடாமல், துணிவோடு, விடாப்பிடியாக விசுவாசத்தைப் பற்றிப்பிடித்துக் கொள்வோம். நம் ஆண்டவர் தரும் மகிழ்ச்சியில் திளைத்திருப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

மனிதத்தின் புனிதம்

மனிதர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் படைப்பின் உயர்ந்த சிகரம். இன்று மனிதர்களையும் சாதாரண படைப்பாக நாம் நினைத்துவிட முடியாது. காரணம், அவர்கள் கடவுளின் அன்பினின்று படைக்கப்பட்டவர்கள். அதற்கும் மேலாக, கடவுளே மனிதர்களில் ஒருவராக பிறந்து, இந்த மனிதத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.

இன்றைய வாசகம், மனிதத்தின் புனிதத்தன்மையை நமக்கு பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. இன்றைக்கு வாழ்வை வாழக்கூடிய மனிதர்கள் ஏனோ தானோவென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த மானுட வாழ்வின் முக்கியத்துவம் தெரிவதாக இல்லை. எனவே தான், கொலை, தற்கொலை என்று, மனிதத்திற்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மனிதம் என்பது போற்றுதற்குரியது. மனிதம் என்பது உயர்ந்த மதிப்பீடுகளைக்கொண்டு வாழப்பட வேண்டியது. அத்தகைய மனித வாழ்வை நாம் வாழ்வதற்கு நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.

மனிதத்தின் புனிதத்தன்மையை நாம் உணர்வதற்கு ஒவ்வொருநாளும் முயற்சி எடுக்க வேண்டும். கடவுள் இந்த மனித உருவத்தை எடுத்து, இதற்கு மகிமை சேர்த்திருக்கிறார். இதனுடைய புனிதத்தன்மையை வாழ்ந்துகாட்டியிருக்கிறார். நாமும் அதனை நமது வாழ்வில் வாழ்ந்து காட்டுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

உண்மையான கடவுள்

நற்செய்தியாளர்களில் மிகவும் நேர்த்தியாக, இறையியலை அதிகம் கலந்து, இயேசுவை மிகத்தெளிவாக, ஆணித்தரமாக தனது எழுத்துக்களில் வெளிப்படுத்தியவர் யோவான் நற்செய்தியாளர். அவருடைய நேர்த்திக்கான சிறந்த எடுத்துக்காட்டு அவருடைய தொடக்கஉரை. இயேசுவைப்பற்றி அறிவிப்பதுதான் அவருடைய மையக்கருத்து என்றாலும், இந்த இயேசு யார்? யாரிடமிருந்து வருகிறார்? என்பதை மிகச்சிறந்த விதத்தில், அவர் வெளிப்படுத்துகிறார்.

இயேசு வெறும் படைப்பு அல்ல, மாறாக, படைப்பு நடைபெறும்போதே இருந்தவர். படைப்பிற்கு முன்பே இருந்தவர் என்று இயேசுவைப்பற்றி வெளிப்படுத்துவது நற்செய்தியாளரின் நோக்கமாக இருக்கிறது. இயேசுவின் தொடக்கத்தை அறிவிப்பது ஒரு சவாலான ஒன்று. அதேபோல அதை விளக்குவதும் கடினமான ஒன்று. ஆனால், யோவான் நற்செய்தியாளர் மிகவும் எளிதாக, கடவுளின் மறுசாயல் தான் இயேசு என்பதை அருமையாக இந்த பகுதியில் வெளிப்படுத்துகிறார். இதுவரை, பழைய ஏற்பாட்டு நூல்களில் கடவுளை சராசரி நீதிபதியாக, கோபமுள்ளவராக பார்த்திருக்கிறோம். ஆனால், இயேசுவில், கடவுள் எத்தனை அன்புள்ளவராக இருக்கிறார் என்கிற புதிய பார்வையை, நற்செய்தியின் தொடக்கம் நமக்கு தெளிவாக்குகிறது.

இன்றைக்கு நாம் தவறான கடவுளை மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறோம். நம்முடைய வசதிக்கு ஏற்றாற்போல, நமது சுயநலத்தோடு, கடவுளை நமது தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். உண்மையான கடவுளையும், கடவுளின் பண்புகளையும் விட்டுவிட்டு, தவறான தகவல்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அதனைவிடுத்து, மக்களுக்கு சரியான கடவுளைப் போதிப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நன்றி கூறுவோம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று ஆண்டின் இறுதி நாள்! இறைவனுக்கு நன்றி கூறும் நாள். இந்த ஆண்டைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்து அதன் நன்மைகளுக்காக, ஆசிர்வாதங்களுக்காக, வெற்றிகளுக்காக நன்றி கூறும் நாள். இந்த நாளில் ஆண்டு முழுவதும் நம்மை அரவணைத்த அன்பு இறைவனைப் போற்றுவோம். இந்த ஆண்டில் நாம் அடைந்த வளர்ச்சிகளுக்காக நன்றி கூறுவோம்.

இந்த ஆண்டின் தவறுகள், தோல்விகள், நோய்கள், இன்னல்களையும் நினைத்துப் பார்ப்போம். அவற்றிலிருந்து சில பாடங்களைக் கற்றுக்கொள்வது நல்லது. எந்தத் தோல்வியிலிருந்தும், தவறிலிருந்தும் நாம் நன்மைகளை அடையலாம். முதலில், தவறுகளை, தோல்விகளை ஏற்றுக்கொள்வோம். தோல்வி என்பது யாருக்கும் நேர்வதுதான். அதில் தவறில்லை. தோல்வியிலேயே துவண்டுவிடுவதுதான் தவறு. அடுத்து, அந்தத் தோல்விகள், தவறுகள் ஏன் நிகழ்ந்தன என எண்ணிப்பார்ப்பதும், ஆய்வு செய்வதும் நன்று. இவையும் நமக்கு உதவும். மூன்றாவதாக, இனி இத்தகைய தோல்விகள், தவறுகள் நேராதபடி கவனமாயிருக்க உறுதி பூணுவோம். இந்த ஆண்டின் இறுதி நாளை மகிழ்ச்சியுடன் கழிப்போம்.

மன்றாடுவோம்: தொடக்கமும், முடிவுமான இறைவா, இந்த ஆண்டின் இறுதி நாளில் நன்றியோடு உம்மைப் போற்றுகிறேன். இந்த ஆண்டு முழுவதும் காத்துக்கொண்டீரெ, உடலுக்கும், உள்ளத்துக்கும் நலம் தந்தீரே. வெற்றிகளும், பெருமைகளும், ஆசிகளும் தந்தீரே, உமக்கு நன்றி. இந்த ஆண்டில் நான் செய்த தவறுகள், செய்யத் தவறிய நன்மைகளுக்காக வருந்துகிறேன். மன்னியும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

---------------------------

''வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்'' (யோவான் 1:14)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- கடவுள் மனிதரிடமிருந்து வேறுபட்டவர் என்றும் மனிதரை விட்டு வெகு தொலையில் வாழ்பவர் என்றும் சிலர் உருவகிப்பதுண்டு. கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் கடவுள் மனிதரை விட்டு அகன்று நிற்பவர் அல்ல. மனிதரைப் படைத்தவர் கடவுள் என்பதால் அவர் நம்மோடு நெருங்கிய விதத்தில் இணைந்துள்ளார். ஆனால், கடவுள் அதைவிடவும் மேலாகத் தம்மை மனிதரோடு ஒன்றித்திட விரும்பினார். கடவுளே மனிதராக மாறிட விழைந்தார். இதை நாம் ஒரு மறைபொருள் என அழைக்கிறோம். இதன் முழுப் பொருளும் நமக்கு ஒருநாளும் தெளிவாகாது என்றாலும் கடவுள் மனிதராக மாறிய உண்மையை விவிலியம் தெளிவாக எடுத்துரைக்கிறது. குறிப்பாக யோவான் நற்செய்தி இதை உணர்த்துகிறது. கடவுளோடு எக்காலத்திலும் இணைந்திருந்த வாக்கு காலம் நிறைவேறியபோது மனிதராக மாறினார் என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் செய்தி. நம்மைத் தேடிவந்த கடவுளை நாம் அடையாளம் காண வேண்டும். மனிதர் ஆன வாக்கு ''நம்மிடையே குடிகொண்டார்'' என்பதால் அவருடைய உடனிருப்பு ஒரு தொடர் நிகழ்வாகிறது.

-- கடவுள் நம்மிடையே குடிகொண்டிருக்கின்ற உண்மையிலிருந்து சில முக்கிய விளைவுகள் பிறக்கின்றன. கடவுளை விட்டு மனிதர் அகன்றிருப்பதில்லை என்பதால் அந்த உடனிருப்பை நாம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்திட வேண்டும். அந்த உணர்வோடு நம் செயலும் ஒருங்கிணைந்து சென்றால் கடவுளின் விருப்பம் நமது விருப்பமாக மாறும். அப்போது நமது செயலும் விருப்பும் ஒன்றாக இணைந்த விதத்தில் நம் வாழ்வும் பொருள்பொதிந்ததாக உருப்பெறும். மனிதரான கடவுள் தம்மை ஒவ்வொரு மனிதரோடும் இணைத்துக்கொண்ட உண்மை நம்மை வழிநடத்த வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் உடனிருப்பை எங்கள் உள்ளத்தில் உணர்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-----------------------------------

அன்பே தாய்மொழி

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

மனிதனோடு மிக நெருங்கி தொடர்புடையது அவனது தாய் மொழி. அவன் மதமும் மொழியும் அவனிலிருந்து பிறிக்கமுடியாதவை. இந்த இரண்டுக்கும் நெருக்கம் அதிகம். ஓன்றிலிருந்து ஒன்றைப் பிறிக்கமுடியாது. எனவேதான் மதத்திற்காகவும் மொழிக்காகவும் தன் உயிரையும் இழக்கத் தயாராக இருக்கிறான்.

மனிதனை இந்நிலையில் படைத்த இறைவன், அதே நிலையில் அவனைச் சந்திப்பது அருமையிலும் அருமை. "தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது; வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லைஅவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது." (யோவா 1:1-4) இப் பகுதியில் "வாக்கு" மனிதனான இறைவன் இயேசுவைக் குறிப்பிடுகிறது. இறை தந்தையோடு உள்ள தொடர்பையும், மனிதனின் படைப்பில் அவருக்குள்ள ஈடுபாட்டையும் சொல்கிறது.மனிதனை மீட்க, அவரே(வாக்கு) மனிதனானதை விவரிக்கிறார். மனிதனான வாக்கு இறைவன் பாடுகள் பட்டு மீட்டதையும் படிக்கிறோம்.
மனிதனின் மொழியின் பிற வடிவங்கள், "வார்த்தை, 'வாக்கு'. மனிதனான இறைவன் இயேசுவைக் குறிப்பிடும்போது, யோவான் நற்செய்தியாளர், 'வாக்கு' என்னும் மொழி தொடர்பான பதம் ஒன்றைப் பயன்படுத்துவதன் மூலம் மனிதனுக்கும் வாக்கு மனிதனான இயேசுவுக்கும் இடையே உள்ள நெருக்கத்தை சுட்டிக்காட்டுகிறார்.
இத்தயை நெருக்கம் உள்ள மனிதன், இயேசுவை எவ்வாறு புறக்கணிக்க முடியும் என்பதே நற்செய்தியாளர் கேள்வி. "அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை."(யோவா 1:11) உன் தாய்மொழியை உதறித்தள்ள முடியுமா?! அவ்வாரே, இயேசுவையும் மறுக்கமுடியாது.
ஆண்டின் இறுதி நாளில், அற்புதமாக, எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை தாங்கி, காத்து, நற்சுகம், போதுமான செல்வம், பிறியாத உறவுகள்,நிம்மதியான வாழ்வு தந்த இறைவனுக்கு நன்றி சொல்வோம். இறiவா! என் இயேசுவே, உமக்கு என் நன்றி. தொடர்ந்து உம் ஆசீர் தாரும்.

அருட்திரு ஜோசப் லியோன்