முதல் வாசகம்
சனவரி 3

முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 29-3: 6

அன்பிற்குரியவர்களே, இறைவன் நேர்மையாளர் என நீங்கள் அறிந்துகொண்டால், நேர்மையாகச் செயல்படுவோர் அனைவரும் அவரிடமிருந்து பிறந்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பதுபோல் தம்மையே தூயவராக்க வேண்டும். பாவம் செய்யும் அனைவரும் சட்டத்தை மீறுகின்றனர். சட்டத்தை மீறுவதே பாவம். பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவம் இல்லை. அவரோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை. பாவம் செய்பவர் எவரும் அவரைக் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 98: 1. 3b-4. 5-6
பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.
அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. -பல்லவி

3b உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். -பல்லவி

5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்;
யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.
6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி
கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா.

யோவான் 1:29-34

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-34

அக்காலத்தில் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், ”இதோ! கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்'' என்றார். தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: ”தூய ஆவி புறாவைப் போல வானிலிருந்து இறங்கி இவர்மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று என்குத் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் `தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்' என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

அடையாளம்
03.01.2023 – யோவான் 1: 29 - 34

இந்த சமுதாயத்தில் ஒவ்வொருவரின் தியாகச் செயல்களால் அவர்கள் அடையாளப்படுத்தப் படுகிறார்கள். கல்விக்கு அடையாளம் காமராசர், உழைப்புக்கு அடையாளம் டாக்டர். அப்துல் கலாம், நீதிக்கு அடையாளம் மைக்கில் குன்கா, உண்மைக்கு அடையாளம் சகாயம் ஐஏஎஸ், ஒடுக்கப்பட்டோருக்கு அடையாளம் அருட்தந்தை. ஸ்டேன் (இயேசு சபை துறவி) – இவர்கள் அனைவருமே தாங்கள் செய்த செயல்களால் இந்த சமுதாயத்தினரால் அடையாளப்படுத்தப் படுகின்றார்கள். அதே போல இயேசு யார்? என்று இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக திருமுழுக்கு யோவான் அடையாளப்படுத்துகின்றார்.

இத்தகைய அடையாளம் சமுதாயத்தினரால் அல்ல, மாறாக கடவுளால் அவருக்கு வெளிப்படுத்தப்படுகிறது. அதனால் தான் திருமுழுக்கு யோவான் அவரை இறைமகன் என அடையாளப் படுத்துகின்றார். நாம் அனைவருமே திருமுழுக்கு பெற்று கடவுளின் பிள்ளைகளாக வாழ அழைக்கப்பட்டிருக்கின்றோம். அப்படியென்றால் எனது அடையாளம் என்ன? நான் எத்தகைய அடையாளத்தை விரும்புகிறேன்? சிந்திப்போம்.

அருட்பணி. பிரதாப்

=========================

 

தியானப் பாடல் சிந்தனை: திருப்பாடல் 98: 1- 6

”மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்”

ஆண்டவரை வாழ்த்த வேண்டும், போற்ற வேண்டும், புகழ வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் அழைப்பவிடுக்கிறார். எதற்காக கடவுளைப் போற்ற வேண்டும்? ஏனென்றால், அவர் இந்த உலகம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த விடுதலையை நமக்குத்தந்திருக்கிறார். இங்கே விடுதலை என்று சொல்லப்படுவது என்ன? எந்த விடுதலையை ஆசிரியர் இங்கே கோடிட்டுக்காட்டுகிறார்? தொடக்கநூலில் (1: 31) நாம் பார்க்கிறோம்: ”கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாக இருந்தன”. தொடக்கத்தில் இருந்த இந்த ஆரோக்யமான நிலை தொடரவில்லை. அது மனிதனின் கீழ்ப்படியாமையால் இழந்துபோனதாக மாறியது. மனிதனின் தவறால் தீமை இந்த உலகத்திற்குள் நுழைந்தது. தான் படைத்த மனிதனே இப்படி தீமை நுழைவதற்கு காரணமாகிவிட்டானே என்று, கடவுள் கோபம் கொண்டு மானுட சமுதாயத்தை புறந்தள்ளி விடவில்லை. இழந்து போனதை மீட்டெடுக்க வாக்குறுதி கொடுக்கிறார். அந்த எதிர்கால விடுதலையை இறைவாக்கினர் வாயிலாக முன்னறிவிக்கிறார். அந்த விடுதலையைத்தான் இந்த திருப்பாடலில் நாம் பார்க்கிறோம்.

இந்த விடுதலை குறிப்பிட்ட மக்களுக்கானது மட்டுமல்ல. ஏனென்றால், இஸ்ரயேல் மக்கள் என்றைக்குமே தாங்கள் தான் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்ற மமதை கொண்டிருந்தனர். வேற்றினத்தாருக்கு விடுதலை கிடையாது என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், கடவுள் மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பவர் கிடையாது. ஒட்டுமொத்த உலகமாகத்தான் மனிதர்களைப் பார்க்கிறார். எனவே, அவர் கொடுக்கக்கூடிய விடுதலை, குறிப்பிட்ட மக்களுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்திற்கானது. அந்த விடுதலையை நம்பிக்கை உள்ள அனைவருமே பெற்றுக்கொள்ள முடியும். அந்த விடுதலையைக் கொடுப்பவர் தான், நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து என்பதை, யோவான் மக்களுக்கு வெளிப்படுத்துகிறார். அந்த விடுதலையை எப்படிக் கொண்டு வரப்போகிறார் என்பதை, ”இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி” என்ற குறிப்பால் உணர்த்துகிறார். பழைய ஏற்பாட்டில், எவ்வாறு செம்மறி ஆட்டின் இரத்தம் மக்களின் பாவங்களைப் போக்கியதோ, அதே போல, இயேசு செம்மறியாக இறந்து, மக்களின் பாவங்களைப் போக்கி, கடவுள் அருளிய விடுதலையைக் கொண்டு வரப்போகிறவர் என்று, யோவான் சொல்கிறார்.

நம் அனைவர் மட்டிலும் அன்பு கொண்டு, தன் ஒரே மகனையே நமக்கு பலிகொடுத்து, மீட்பைப் பெற்றுக்கொடுத்திருக்கிற, இறைமகன் இயேசுகிறிஸ்துவுக்கு நாம் எப்படி கைம்மாறு செய்யப்போகிறோம்? என்ன செய்யப்போகிறோம்? சிந்திப்போம். செயல்படுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------

”உலகின் பாவம் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டி இயேசு”

”உலகின் பாவம் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டி இயேசு” இது திருமுழுக்கு யோவான் இயேசுவுக்குத் தரும் சாட்சியம். சாட்கியத் குரலாக அனுப்பட்பட்ட யோவான் இந்த சாட்சியம் சொல்ல பயமோ, தயக்கமமோ காட்டவில்லை. பாவம் என்பது உலகின் எல்லா தீமைகளும் ஒன்றிணைந்த தீமையின் மொத்தம். இந்த தீமையை இறைவனின் மாசற்ற ஆட்டுக்குட்டியான இயேசுதான் தன் அன்பின் தியாகப் பலியாயல் நீக்க முடியும். இந்த தியாகத்தின் மூலம்தான் இயேசு தரும் ஆவியின் வளமான நீருற்று, இறைவார்த்தை. அருட்சாதனங்கள் வழியாக அருள் வாழ்வாக திருச்சபையிலும பாய்ந்து அருள்வளம் சேர்க்கிறது. நாமும் இந்த அருள்வாழ்வில் இணைவோம்.

பணி. மைக்கிள் மரியதாஸ் cmf.

--------------------------------------

திருப்பாடல் 98: 1- 6

"மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்"

இன்றும் நமது பதிலுரைப் பாடல் திருப்பாடல் 98தான். ஏன், நாளையும் இதே திருப்பாடல் 98ஐயே பாடப்போகிறோம்.

திருப்பாடல் 98 ஓர் இறைபுகழ்த் திருப்பாடல். அத்துடன், "அனைத்து உலகின் தலைவர்" எனத் தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பா யாவே இறைவனை அரசராகப் பாவிக்கும் ஒரு "யாவேயின் அரச மாண்புப் பாடல்" என்னும் உள்பிரிவைச் சேர்ந்தது.

இத்திருப்பாடல் நம்மை "ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள். மகிழ்ச்சியுடன், ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்" (98:4) என்று அழைக்கிறது. இந்த வரிகளைச் சிந்திக்கும்போது, இறைபுகழ்ச்சி பற்றிய சில அடிப்படைப் பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம்.

• பாடுவது- இறைபுகழ்ச்சியின் இனிமையான ஒரு வெளிப்பாடு. திருப்பாடல்கள் அனைத்துமே பாடப்படவேண்டியவை என்பதை நினைவில் கொள்வோம்.

• மகிழ்ச்சி - இறைபுகழ்ச்சி இருக்குமிடத்தில் மகிழ்ச்சி இருக்கும். மகிழ்ச்சி இருக்குமிடத்தில் இறைபுகழ்ச்சி இருக்கும். "உங்களுள் யாரேனும்... மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும்" (யாக் 5:13) என்று புனித யாக்கோபு எழுதியுள்ளதை நினைவில் கொள்வோம்.

• ஆர்ப்பரிப்பு - "உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்" (மத் 12: 34) என்னும் இறைவாக்கிற்கேற்ப உள்ளத்தில் இறைபுகழ்ச்சி பொங்கி வழிந்தால், அது வாயிலிருந்தும் ஆர்ப்பரித்துப் பொங்கிவருவது பொருத்தமானதே.

இன்று நம் செபத்தில் இந்த மூன்றும் இருக்கட்டும். ஒவ்வொரு முறை நாம் இறைபுகழ்ச்சியில் ஈடுபடும்போதும், பாடல், மகிழ்ச்சி, ஆர்ப்பரிப்பு இணைந்திருக்கும்படி பார்த்துக்கொள்வோம்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது திருமகன் இயேசுவின் பிறப்பிலே உலகம் முழுவதும் விடுதலை காணச் செய்தீரே. நாங்கள் அக்களிக்கிறோம், ஆர்ப்பரிக்கிறோம், மகிழ்ந்து பாடி உம்மைப் போற்றுகிறோம். எங்களது இறைபுகழ்ச்சி எப்போதும் ஆர்ப்பரிப்புடன் கூடிய மகிழ்ச்சிப் பாடலாக அமைவதாக, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

என்னைவிட முன்னிடம் பெற்றவர் !

"பிறர் உங்களைவிட மதிப்புக்குரியவர் என எண்ணுங்கள்" (உரோ 12: 10). திருமுழுக்கு யோவானிடமிருந்து இன்று நாம் கற்றுக்கொள்ளும் உளவியல் மற்றும் ஆன்மீகப் பாடம் இதுதான். பிறரை நம்மைவிட மேலானவராகவும், மதிப்புக்குரியவராகவும் உண்மையிலேயே எண்ணுதல், சொல்லுதல், செயல்படுதல். இந்தக் கடினமாக மதிப்பீட்டை திருமுழுக்கு யோவான் எளிதில் செயல்படுத்திக் காட்டினார். "இதோ, கடவுளின் செம்மறி. இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப் பின்வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்" எனச் சான்று பகர்ந்தார்.

நாம் எப்படி? நம்மோடு பணியாற்றபவர்கள், அல்லது நமக்குப் பின் நமது பணியைத் தொடர்பவர்கள் (ளரஉஉநளளழசள) - இவர்கள் பற்றி நமது மனநிலை என்ன? நமது சொற்கள் என்ன? நமது சான்று என்ன? யோவானைப் போல நம்மாலும் பிறரைப் பாராட்டீ. சான்று பகர முடியுமா?

இன்று இந்தப் பயிற்சியைச் செய்வோமா? இன்று நமது கண்ணில் காணும் அனைவரையும் "இவர் என்னைவிட மதிப்புக்குரியவர்" என மனதிற்குள் சொல்வோம். வாய்ப்பு கிடைத்தால், வாயாலும் அறிக்கையிடுவோம்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். பிறரை எங்களைவிட மதிப்புக்குரியவர் என எண்ணும் நல்ல, நேர்மையான உள்ளத்தை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
--------------------------------------------------------------------------

இணையதள உறவுகளே

திருமுழுக்கு யோவானுக்கு இயேசுவை அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் இயேசுவை இவ்வாறு அறிமுகம் செய்கிறார். இவர் ஒரு பலி கடா. அப்பாவி. எதார்த்தவாதி. பிறருக்காக எதையும் இழப்பதற்கு தயாராக இருப்பார். அடுத்தவன் வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். தன் நேரம், பணம், உழைப்பு அனைத்தையும் பொதுப்பணிக்கென செலவிடுவார். இதுபோன்ற அனைத்தையும் உள்ளடக்கி,  அவர் ஒரு ஆட்டுக்குட்டி என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துவிட்டார்.

என்னையும் உங்களையும் ஒரு மேடையில் ஒருவரை அறிமுகப்படுத்தச் சொன்னால், நம்மைப்பற்றி என்ன சொல்வார்?  

அடுத்ததாக, நீங்களும் நானும் ஒருவரை அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி செயல்படுவோம்?. என்ன சொல்வோம்? இன்று நாம் மேடைகளில் பார்க்கின்றோமே அதுபோல வானளாவப் புகழ்வோமா? அல்லது எதார்தமாக, உள்ளதை உள்ளவாறு சொல்வோமா? திருமுழுக்கு யோவான்போல நெஞ்சில் உரமும் நேர்மை திறனும் இருந்தால் நெத்தியடியாக நாம் அறிமுகப்படுத்துவோம். தீர்மானிப்போம். செயல்படுவோம்.

-ஜோசப் லீயோன்

-----------------------------------

 

''இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!
ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்...' என்றார்'' (யோவான் 1:29)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- இயேசு யார் என்பதை மக்களுக்கு அறிவிக்கும் விதத்தில் சான்றுபகர்ந்தவர்கள் பலர் இருந்தனர். அவ்வாறு சான்று பகர்ந்தவர்களில் மிகச் சிறந்தவர் திருமுழுக்கு யோவான் என்றால் மிகையாகாது, யோவான் இயேசு யார் என்பதைப் பல உருவகங்கள் வழியாக விளக்கினார். அவற்றுள் ஒன்றுதான் ''ஆட்டுக்குட்டி'' என்பதாகும். இதன் பொருள் என்ன? கால்நடைகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த அக்கால மக்கள் நடுவே ''ஆட்டுக்குட்டி'' என்பதற்கு ''அன்பார்ந்த குழந்தை'' என்றொரு பொருள் உண்டு. நாம் ''செல்லப் பிள்ளை'' என்பது இதைப் போன்றதுதான். இயேசு உண்மையிலேயே கடவுளின் அன்பார்ந்த மகன் என்பது இதனால் உணர்த்தப்படுகிறது. ஆட்டுக்குட்டி யூதர்கள் நடுவே இன்னொரு சிறப்புப் பொருளையும் கொண்டிருந்தது. அதாவது, கோவிலில் பலி செலுத்துவதற்காகப் பயன்பட்ட சிறந்த பலிப்பொருள் ஆட்டுக்குட்டி. இயேசு இப்பெயரால் அழைக்கப்படுவது அவர் தம்மையே கடவுளுக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பார் என்பதைக் குறிக்கிறது.

-- ஆட்டுக்குட்டி பலியாக்கப்படுவது கடவுளிடமிருந்து பாவ மன்னிப்பை இறைஞ்சுவதற்காக. எனவே, இயேசு என்னும் ஆட்டுக்குட்டி பாவங்களைப் போக்குபவர் ஆவர். ஆக, யோவான் இயேசுவைக் கடவுளின் ஆட்டுக்குட்டி என்று அடையாளம் காட்டியதன் மூலம் இயேசு ஆற்றவிருந்த பணியைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறிவிட்டார்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

;