யோவான் 3:7-15

பாஸ்கா காலம்-இரண்டாம் வாரம் செவ்வாய்

 

7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம்.

8 காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும்  எங்கு செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்" என்றார்.

9 நிக்கதேம் அவரைப் பார்த்தது, "இது எப்படி நிகழ முடியும்?" என்று கேட்டார்.

10 அதற்கு இயேசு கூறியது; "நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரிவில்லையே!

11 எங்களுக்குத் தெரிந்ததைப் பற்றியே பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப் பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்.

12 மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும் போது எப்படி நம்பப்போகிறீர்கள்?

13 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.

14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.

15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.

 

-------------------------

துhய ஆவி தரும் விடுதலை !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

நேற்றைய நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியாக இன்றைய வாசகம் அமைந்திருக்கிறது. நிக்கதேமுடன் உரையாடல் நடத்திய இறைமகன் இயேசு அவருக்குப் புதுப்பிறப்பு பற்றிய போதனையைத் தொடர்ந்து வழங்குகிறார். புதுப்பிறப்பு அடைந்த மக்கள் எவ்வாறு வாழ்வர் என்று விளக்குகிறார் இயேசு. #8220;காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை கேட்கிறது. ஆனால், எங்கிருந்து வருகிறது என்றும், எங்கே செல்கிறது என்றும் தெரியாது. துhய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்” என்கிறார் ஆண்டவர்.

காற்று கட்டுப்பாடற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதுபோலவே, துhய ஆவியால் பிறக்கும் ஒவ்வொருவரும் விடுதலை பெற்றவர்களாக வாழ்வர். பாவம், நோய், சாவு போன்ற எதுவும் ஆவியால் பிறக்கின்றவர்களைத் தடை செய்ய இயலாது. ஏனெனில், துhய ஆவியானவர் ஆற்றல் மிக்கவர். வல்லமை தருபவர். எனவே, மண்ணுலகு சார்ந்தவை எதுவும் ஆவியால் பிறப்பவர்களைத் தடை செய்யாது, அவர்கள் விண்ணுலகு சார்ந்தவர்களாக வாழ்வர் என்கிறார் ஆண்டவர். இந்த பாஸ்கா காலத்தில் நாமும் மண்ணுலகு சார்ந்து வாழாமல், விண்ணுலகு சார்ந்தவர்களாய் வாழவும், துhய ஆவியில் புதுப்பிறப்பு அடைந்து, விடுதலை அனுபவம் பெறவும் உயிர்த்த இயேசுவிடம் மன்றாடுவோம்.

மன்றாடுவோம்: உயிர்த்த மாட்சியின் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். என்னைப் புதுப்பிறப்பு அடைந்தவனாக மாற்றும். உமது துhய ஆவியால் என்னை நிரப்பும். விடுதலை அனுபவத்தை எனக்குத் தாரும். உயிர்ப்பின் மாட்சியில் என்னை வழிநடத்தும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்

--அருட்தந்தை குமார்ராஜா

-----------------------

''இயேசு நிக்கதேமைப் பார்த்து, 'பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல
மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும்
நிலைவாழ்வு பெறுவர்' என்றார்'' (யோவான் 3:14-15)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- பழைய ஏற்பாட்டு எண்ணிக்கை நூல் ''வெண்கலப் பாம்பு'' பற்றிப் பேசுகிறது. இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்டு, பாலைநிலத்தில் பயணமாகிச் சென்ற வேளையில் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள். அப்போது கடவுளின் கட்டளைப்படி மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தி உயர்த்துகிறார். அந்த வெண்கலப் பாம்பை ஏறிட்டுப் பார்த்தோர் உயிர்பிழைக்கின்றனர் (காண்க: எண் 21:4-9). இந்நிகழ்ச்சியை இயேசு நிக்கதேமுக்கு நினைவூட்டுகிறார். இயேசுவும் சிலுவை என்னும் மரத்தில் ''உயர்த்தப்படுவார்''. அவருடைய சிலுவைச் சாவு துன்பதுயரத்தின் வெளிப்பாடு மட்டும் அல்ல, அவர் அடைகின்ற மாட்சியும் அதில் அடங்கும். எனவே இயேசு சிலுவையில் ''உயர்த்தப்பட்டார்''; அதாவது இயேசுவின் சிலுவைச் சாவு அவருடைய உயிர்த்தெழுதலும் மாட்சிமைக்கும் வழியாயிற்று. அதே நேரத்தில் இயேசு நமக்கு வாழ்வளிக்கிறார். இவ்வாழ்வு மண்ணுலகில் நாம் சாகாமல் வாழ்வதைக் குறிப்பதல்ல; மாறாக, விண்ணகத்தில் நாம் ''நிலைவாழ்வு'' பெறுவதைக் குறிக்கிறது. இந்த நிலைவாழ்வு கடவுளின் ஆட்சியில் நாம் பெறவிருக்கின்ற பங்கேற்பைக் குறித்துநிற்கிறது.

-- இயேசுவின் சிலுவைச் சாவின் வழியாக நாம் நிலைவாழ்வு பெற வேண்டும் என்றால் நாம் இயேசுவிடத்தில் ''நம்பிக்கை'' கொள்ளவேண்டும். இந்நம்பிக்கை எதில் அடங்கியுள்ளது என்பதை இயேசுவே நமக்கு அறிவிக்கிறார். அதாவது, கடவுள் நம்மை அன்புசெய்து நம் மீட்புக்காகத் தம் திருமகனைக் கையளித்துள்ளார் என்னும் உண்மையை நாம் உளமார ஏற்று, அந்த அன்புக் கடவுளால் வழிநடத்தப்பட நம்மையே அர்ப்பணிக்க வேண்டும். இவ்வாறு கடவுளை அணுகிச் செல்வோர் அவரிடத்தில் நம்பிக்கை கொள்வர்; அவர் அனுப்பிய மீட்பராம் இயேசுவிடத்திலும் நம்பிக்கை கொள்வர். இந்நம்பிக்கை நம்மில் ஒரு மாற்றத்தைக் கொணர்கின்றது. அதாவது இயேசுவின் வல்லமையாகிய தூய ஆவி நமக்கு அருளப்பட்டு நாம் கடவுளின் பிள்ளைகளாக ஏற்கப்படுகிறோம். கடவுளின் உயிர் நமக்கு வழங்கப்படுகிறது. அந்த அன்புப் பிணைப்பினால் நாம் ''நிலைவாழ்வு'' என்னும் கொடையைக் கடவுளிடமிருந்து பெறுகிறோம்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனை நம்பிக்கையோடு ஏற்றிட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

'நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்'

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இந்த நிக்கதேம் ஒரு நல்ல மனிதர். நல்லவராக வாழ வேண்டும் என்ற ஆசையுள்ள மனிதர். ஆகவே இயேசுவைத் தேடி வந்தார். இயேசு அவரைப் பார்த்து, "மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது"(யோவா3:3) மறுபடியும் பிறந்தால்தான் நன்றாக நல்லவனாக வாழமுடியும் என்றார்.

மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா? என்று நிக்கதேம் கேட்ட உடலின் பிறப்பு அல்ல. மாறாக ஆன்ம வாழ்வுக்குள் பிறக்கும் புதுப்பிறப்பு. இயல்பான முறைப்படி பிறந்தவன், தூய ஆவியின் ஆற்றலால் பிறந்தவன் என்று பிறப்பை இரு வகைப்படுத்துகிறார் பவுலடியார்(வாசிக்க கலாத் 4:29) தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்" என்றார்.( யோவா 3:8) "கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை" (1 யோவான் 5 :18) "அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்" (1 யோவா4:7) புனித யோவானின் "தீமையைப் பின்பற்ற வேண்டாம்; நன்மையையே பின்பற்றும். நன்மை செய்வோர் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்" என்னும் இவ் அறிவுரைப்படி வாழும் வாழ்க்கை ஒரு மறு பிறப்புக்குச் சமம்.

இந்த பிறப்பு ஒருநாள், ஒரு முறை ஒருவருடைய வாழ்க்கையில் நடைபெறுவதல்ல. ஞானஸ்நானத்தில் நீராலும் தூய ஆவியாலும் திருமுழுக்குப் பெற்றோம். மறு பிறப்படைந்தோம். உண்மைதான். ஆனால் அதோடு முடிந்து விடும் ஒருநாள் கூத்து அல்ல. தினமும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நற்செயல்கள் செய்து புதிது புதிதாக மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டே இருக்க வேண்டும். நிக்கதேமிடம் எதிர்பார்த்தது இப்பிறப்பை. நம்மிடமும் அதையே எதிர்பார்க்கிறார். மீண்டும் மீண்டும் பிறப்போம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்