முதலாம் வாசகம் குறிப்பேடு 36:14-16,19-23

அதுபோல், குருக்களின் தலைவர்களும், மக்களும் வேற்றினத்தாரின் அனைத்து அருவருப்புகளையும் தொடர்ந்து செய்து, உண்மையற்றவர்களாய், ஆண்டவர் தமக்காக எருசலேமில் தூய்மையாக்கியிருந்த திருக்கோவிலை மேலும் தீட்டுப்படுத்தினர். அவர்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவர் தம் மக்களின் மீதும், தம் உறைவிடத்தின் மீதும் இரக்கம் கொண்டு, தம் தூதர்களை மீண்டும் மீண்டும் அவர்களிடம் அனுப்பினார். ஆனால் அவர்கள் கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்தம் வார்த்தைகளைப் புறக்கணித்து, அவர்தம் இறைவாக்கினர்களை இழித்துரைத்தனர். ஆதலால், அவர்கள் தப்பமுடியாத அளவுக்கு ஆண்டவரது சினம் அவர்கள்மேல் கனன்றெழுந்தது. கடவுளின் இல்லத்தை அவர்கள் எரித்து, எருசலேமின் மதில்களைத் தகர்த்தனர்: அங்கிருந்த அனைத்து அரண்மனைகளையும் தீக்கிரையாக்கி, விலையுயர்ந்த பொருள்கள் அனைத்தையும் அழித்தனர். மேலும் அவன் வாளுக்குத் தப்பியவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினான்: பாரசீக அரசு எழும்பும்வரை அங்கே, அவர்கள் அவனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் அடிமைகளாக இருந்தனர். 'நாடு ஓய்வு நாள்களைக் கடைப்பிடிக்காததால், எழுபது ஆண்டுகள் பாழாய்க் கிடக்கும் ' என்று எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் இவ்வாறு நிறைவேறின. பாரசீக மன்னன் சைரசு ஆட்சியின்முதல் ஆண்டில், எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் நிறைவேறும் வண்ணம், ஆண்டவர் அவனது மனத்தைத் தூண்டி எழுப்பினார். எனவே அவன் தனது நாடு முழுவதற்கும் மடல் வரைந்து அறிவித்தது யாதெனில்: 'பாரசீக மன்னராகிய சைரசு என்னும் யாம் கூறுவது இதுவே: விண்ணகக் கடவுளாம் ஆண்டவர் மண்ணக அரசுகள் எல்லாவற்றையும் எனக்கு அளித்துள்ளார். மேலும் யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்குத் திருக்கோவில் எழுப்புமாறு எனக்குப் பணித்துள்ளார். எனவே, அவருடைய மக்களாக இருப்பவர் அங்கு செல்லட்டும்! கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக! '

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திருப்பாடல் 137:1-2, 3, 4-5, 6.

 

பல்லவி: 'உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!"

1 பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்.
2 அங்கிருந்த அலரிச் செடிகள் மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். -பல்லவி

3 ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்;
எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். '
சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்' என்றனர். -பல்லவி

4 ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம்; பாடுவோம்?
5 எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக! -பல்லவி

6 உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில்,
என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக! -பல்லவி

இரண்டாம் வாசகம்

எபேசியர் எழுதிய திருமுகத்திலிலிருந்து இரண்டாம் வாசகம் (எபேசியர் 2:4-10)

ஆனால் கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்புகொண்டுள்ளார். குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர் பெறச் செய்தார். நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே. இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும் விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார். கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மையையும் அவரது ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும் இனிவரும் காலங்களிலும் எடுத்துக் காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார். நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல: மாறாக இது கடவுளின் கொடை. இது மனிதச் செயல்காளல் ஆனது அல்ல. எனவே எவரும் பெருமை பாராட்ட இயலாது. ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு: நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வசனம்
"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்".

யோவான் 3:14-21

தவக்காலம் -நான்காம் வாரம் ஞாயிறு

புனித. யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (யோவான் 3:14-21)

பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை: ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

கடவுளின் அன்பும், நீதியும்

ஒருபுறத்திலே கடவுளின் அன்பு சொல்லப்படுகிறது. அது முடிந்தவுடனே, கடவுளின் தண்டனைப்பற்றி சொல்லப்படுகிறது. இது ஒரு முரண்பாடான வாக்கியம் போல் தோன்றுகிறது. அன்பே உருவான கடவுளால் எப்படி, மற்றவர்களைத்தண்டிக்க முடியும்? இரக்கம் காட்டுகிற கடவுளிடமிருந்து, நாம் எப்படி கோபத்தை எதிர்பார்க்க முடியும்?

இங்கு, கடவுளை அன்பாகப்பார்ப்பதும், தண்டிக்கக்கூடியவராகப் பார்ப்பதும் நமது பார்வையில் தான் இருக்கிறது. கடவுள் எப்போதும் நம்மை அன்பு செய்யவே விரும்புகிறார். கடவுளின் அன்பு இந்த உலகத்திலே இருக்கிற எல்லார்க்கும் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. கடவுள் அனைவரையும் அன்பு செய்கிறார். ஆனால், அந்த அன்பை ஏற்றுக்கொள்வதும், உதறித்தள்ளுவதும் நம்மிடம்தான் இருக்கிறது. கடவுளுடைய தண்டனையைப்பெறுவதும் நம்மிடம்தான் உள்ளது. கடவுளிடத்தில் அன்பை எதிர்பார்த்தால், நாம் அன்புள்ள கடவுளைப் பார்க்கிறோம். அந்த அன்பை உதறித்தள்ளிவிட்டு மனம்போன போக்கில் வாழ்ந்தால், கடவுளின் தண்டனையை எதிர்பார்க்கிறோம்.

கடவுளின் அன்பை நமது வாழ்வில் உணர்வதற்கு அழைக்கப்படுகிறோம். கடவுள் எப்போதும் நம்மை அன்பு செய்கிறவராக இருக்கிறார். தனது இரக்கத்தை, மன்னிப்பை நம்மீது பொழிவதற்கு தயாராக இருக்கிறார். அவரது அன்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோமா? சிந்திப்போம். செயல்படுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறையன்பும், இறைத் தீர்ப்பும் !

இன்றைய வாசகங்கள் இறைவனின் பேரன்பையும், அதே வேளையில் அவரது தீர்ப்பு என்றால் என்ன என்பது பற்றியும் பேசுகின்றன.

1. இறைவனின் அன்பு: "தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்;ந்தார்". இறைவனின் பேரன்பை விளக்கும் அருமையான இறைவாக்கு இது. இதனையே இன்றைய இரண்டாம் வாசகத்திலும் பார்க்கிறோம்: "கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்புகொண்டுள்ளார். குற்ற்ங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர்பெறச் செய்தார்" என்கிறார் பவுலடியார். இறைத் தந்தையின் அன்புக்காக என்றும் நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

2. இறைவனின் தீர்ப்பு: உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பு அளிப்பது இறைவனின் விருப்பம் அல்ல. "உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்" என்னும் இறைவாக்கும், இறைவனின் விருப்பத்தை, இரக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. தண்டனை என்பது இறைவன் நமக்குத் தருவது அல்ல, மாறாக நாமே நமக்குத் தேடிக்கொள்வது என்னும் தெளிவை இந்த வசனங்களில் பார்க்கிறோம்: "ஒளி உலகிற்கு வந்திருந்தும், தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது". ஆம், தண்டனைத் தீர்ப்பு என்பது இறைவன் தருவதல்ல, தீய மனிதர்கள் இறைவனைவிட்டு விலகி, தாங்களாகவே தேடிக்கொள்வது.

இறைவனின் தண்டனைத் தீர்ப்பு பற்றி அஞ்சாமல், அவரது இரக்கத்தில் நம்பிக்கை கொண்டு "அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக" (எபி 4: 16).

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இறைவனின் இரக்கம் மற்றும் தண்டனைத் தீர்ப்பு பற்றிய உமது போதனைக்காக நன்றி செலுத்துகிறோம். எங்களது பாவங்களுக்கான தண்டனைத் தீர்ப்பு குறித்து அஞ்சாமல், இறைத் தந்தையின் பேரன்பில் நம்பிக்கை கொண்டு உம்மை நாடிவரும் வரத்தை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

''இயேசு, ''தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும்
அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு
அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக்
கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்' என்றார்'' (யோவான் 3:16)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- விவிலியத்திலேயே மிக மையமான ஒரு சொற்றொடர் யோவான் 3:16 என்பது அறிஞர் கருத்து. இதில் கடவுளுக்கும் அவர் அனுப்பிய திருமகன் இயேசுவுக்கும் மனித குலம் முழுவதற்கும் இடையே நிலவுகின்ற உறவு அழகாக, ஆழமாக எடுத்துக் கூறப்படுகிறது. முதன்முதலில் கடவுளின் அன்பு எல்லையற்றது என்னும் கருத்து இங்கே துலங்குகின்றது. அந்த அன்பு மனிதர் வாழ்கின்ற இந்த உலகின்மீது கடவுள் கொண்ட பாசத்தையும் பரிவையும் வெளிப்படுத்துகிறது. இவ்வாறு உலகத்தை எல்லையற்ற விதத்தில் அன்புசெய்கின்ற கடவுள் தம் திருமகனாம் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்புகிறார். இயேசுவின் வழியாக, குறிப்பாக அவருடைய சிலுவைச் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக (''பாஸ்கா மறைபொருள்'') கடவுளின் அன்பு நமக்கு வெளிப்படுத்தப்பட்டது.

-- கடவுள் நமக்குக் காட்டுகின்ற அன்பு வெறும் உணர்ச்சியோடு நின்றுவிடுவதில்லை. நம்மைத் தம்மோடு இணைத்து நமக்கு நிலைவாழ்வில் பங்களிப்பதற்காகவே கடவுள் தம் திருமகனை நமக்கு அளித்தார். இவ்வாறு நாம் நிலைவாழ்வில், நிறைவாழ்வில் பங்கு பெறும் பொருட்டு நமக்காகத் தம்மையே பலியாக்கிய இயேசுவை நாம் நம்பிக்கையோடு பற்றிக்கொள்ள வேண்டும். இந்நம்பிக்கை நம்மில் உறுதியாக வேரூயஅp;ன்றியிருக்க வேண்டும். கடவுளின் எல்லையற்ற வல்லமையால் அனைத்தும் கைகூடும் என்னும் உறுதியோடு நாம் கடவுளையும் அவரது மகன் இயேசுவையும் அணுகிச் சென்றால் அவர் நமக்குக் கொடையாகத் தருகின்ற நிலைவாழ்வு எதிர்காலத்தில் ஒருநாள் விடியும் என்பது மட்டுமல்லாமல், ஏற்கெனவே இவ்வுலகில் தொடங்கிவிட்டது என்பதையும் நாம் உணர்வோம். இவ்வாறு கடவுளின் வல்லமையான தூய ஆவியார் நம்மில் செயல்பட்டு நாம் நம்பிக்கைகொண்டோராக மாறும்போது அதிசய செயல்கள் நம்மில் நிகழும். அதன் விளைவாக, நாம் கடவுளின் அன்பை நம் இதயத்தில் உணர்வதோடு அந்த அன்பினை நம் சகோதரர் சகோதரிகளோடு மனமகிழ்வோடு பகிர்ந்திடுவோம்.

மன்றாட்டு
இறைவா, எங்களை எல்லையற்ற விதத்தில் அன்புசெய்கின்ற உம்மில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

"மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இனிய சுவையுடன் கனிந்த கனி இருக்க கள்ளிக் காயைக் கடிக்கும் கடின மனத்தினர் சிலர். ஊரெல்லாம் ஒளி வெள்ளமாக இருந்தாலும் சிலர் ஒதுங்கியே இருப்பர். ஊரெல்லாம் ஒன்று கூடி தேரிளுக்கும். ஆனால் அவர்கள் மட்டும் வேரெதையோ நோட்டமிட்டிருப்பார்கள். கலகலப்பாக கலக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு சிலர் கல்லாகி மூலையில் முடங்கிக்கிடப்பர்.

இப்படி இயல்பானதை விட்டு விட்டு,முரணான முறையில் செயல்படும்போது அவனில் ஏதோ ஒரு குறை உள்ளது என்று பொருள். ஒளியில் வந்தால் தன் அழுக்கு, அசிங்கம், குறை. குற்றம் தனக்குத் தெறிய வரும். பிறர் தெறிய நேரிடும். தன்போக்கினை மாற்ற வேண்டும் என்ற தயக்கம். கோயிலுக்கு வந்தால் தன் பாவ வாழ்வு தனக்குத் தெறிய வரும். மனமாற்ற வாழ்வுக்கு தயாராக வேண்டுமே என்ற பயம்.

இருளில் இருப்பது இப்படிப்பட்டவர்களுக்கு வசதியானது; சுகமானது; சௌகரியமானது. ஒளிக்குள் வருவதற்கு உடலை வளைக்க வேண்டும். உள்ளத்தை ஒடுக்கவேண்டும். நாலுபேரோடு கூடி கலகலப்பாக நல்லதைச் செய்ய பலவற்றை இழக்க வேண்டும். இவ்வளவு கஷ்டப்பட்டு கிடைக்கும் இன்பத்தைவிட வலி இல்லாமல் கிடைக்கும் அற்ப இன்பம் போதும் என விட்டில் பூச்சிளாய், ஒளியைவிட இருளையே விரும்பி வாழ்வை இழந்து விடுகின்றனர். ஒளியைத் தேடுவோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்