முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 27-33

அந்நாள்களில் காவலர்கள் திருத்தூதர்களை அழைத்துக்கொண்டுவந்து யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி, ``நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப்பார்க்கிறீர்களே!'' என்றார். அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, ``மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். இஸ்ரயேல் மக்களுக்கு மனமாற்றத்தையும் பாவ மன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்'' என்றனர். இவற்றைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் கொதித்தெழுந்து, திருத் தூதர்களைக் கொல்லத் திட்டமிட்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 34: 1,8. 16-17. 18-19

பல்லவி: ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;
அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்;
அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். -பல்லவி

16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது;
அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார்.
17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;
அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். -பல்லவி

18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்;
நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.
19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல;
அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ``தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர்,'' பேறுபெற்றோர். அல்லேலூயா.

யோவான் 3:31-36

பாஸ்கா காலம்-இரண்டாம் வாரம் வியாழன்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-36

அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர். தாம் கண்டதையும் கேட்டதையும் பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் தரும் சான்றை ஏற்றுக்கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார். கடவுளால் அனுப்பப்பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார். தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------

யோவான் 3: 31 - 36
செயலாக்கம்

கடற்கரை கிராமத்தில் ஒரு அரசியல்வாதியின் வாக்குறுதி “எங்களை வெற்றி பெற செய்தால் நாங்கள் உங்கள் ஊரில் கப்பல் தளம் அமைத்து தருவோம்”. தமிழ்நாட்டில் கடந்த மாதத்தில் மட்டும் போக்குவரத்துத்துறை வழியாக வந்த அபராதம் மட்டும் 2 கோடி என அமைச்சர் தெரிவித்தார். இந்து மத துறவி ஒருவர் நாட்டில் கொடிய நோயின் தாக்கம் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் நரகபலி கொடுக்க வேண்டும் என்று பேட்டியளிக்கின்றார். இவர்கள் அனைவருமே சமுதாயத்தில் உயர்ந்த மனிதர்களாக எண்பிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களின் செயல்கள் எல்லாமே மனிதநேயத்திற்கு எதிரானதாகவே இருக்கும். காரணம் தாங்கள் மேலிருந்து வந்தவர்கள் என்ற மமந்தை.

உண்மையிலே மேலிருந்து வந்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று இயேசு நிக்கதேமிடம் எடுத்துக் கூறுகின்றார். கடந்த ஒரு சில நாட்களாக உயிர்த்த ஆண்டவர் நிக்கதேமிடம் தான் உரையாடுவது போன்று யோவான் நற்செய்தியாளர் வடிவமைத்துள்ளார். காரணம் உயிர்த்த ஆண்டவர் மீது அவர் வைத்துள்ள அன்பு. விண்ணிலிருந்து வந்தவனின் செயல்பாடு தூய ஆவியின் கொடைகளை அடிப்படையாக கொண்டுள்ளதாக காணப்படும். இது இயேசுவின் வாழ்வில் பிரதிபலிக்கின்றது. அதனால் தான் பணி பெற அல்ல, பணி புரியவே வந்தேன் என்று தன்னை தாழ்த்துகின்றார். இது தான் மேலிருந்து வந்தவனுக்குரிய சிறப்பான பண்பு என்று இயேசு கற்றுக் கொடுக்கின்றார். நம்முடைய திருத்தந்தை பிரான்சிஸ், திருத்தந்தையாகவே தோ்வு செய்யப்பட்டபோது அவர் செய்த செயல், அவரைக் காட்டிக் கொடுக்கின்றது எத்தகைய ஒரு பணியாளர் அவர் என்று.

நான் என் செயலின் வழியாக என்னை யார் என்று காண்பிக்கின்றேனா? அல்லது என்னிடம் இருக்கின்ற நிலபுலன்களை வைத்து காண்பிக்க முயல்கிறேனா? சிந்திப்போம்.

அருட்பணி. பிரதாப்

===========================

நான் தந்தையுள்ளும் தந்தை என்னுள்ளும் (யோவான் 3 : 31-36)

நற்செய்தியாளர் யோவான் திருமுழுக்கு யோவானின் சீடராவார் என விவிலிய அறிஞர்கள் கூறுகிறார்கள். அதனால்தான் திருமுழுக்கு யோவானைப் பற்றிய பல நெருங்கிய குறிப்புகளை யோவான் நற்செய்தியில் அதிகமாகக் காணமுடிகின்றது. உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியை குருவே தமது சீடர்க்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இடியின் மகன் என்று அழைக்கப்படும் யோவான் இதனாலேயே இறைமகன் என்ற உண்மையைத் திருமுழுக்கு யோவான் வாயிலாக வலியுறுத்துகிறார்.

கூடவே இருந்து அறிந்ததால்தான் தனது நற்செய்தியின் தொடக்கத்திலேயே இயேசுவை விண்ணக மகனாக நமக்கு எழுதுகிறார். “தொடக்கத்தில் வாக்கு இருந்தது, அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது” என்ற மறையுரைக்குச் சான்று பகர்கிறார் திருமுழுக்கு யோவான். “ மேலிருந்து வருபவர் அனைவருக்கும் மேலானவர், தாம் கண்டதையும் கேட்டதையும் பற்றியே அவர் சான்று பகர்கிறார் (3:32) நாம் ஒரு நபரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவரைப்பற்றி நெருக்கமாக அறிந்தவரிடம் விசாரிப்போம். ஓர் ஊரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவ்வூரிலேயே பிறந்து வளர்ந்தவரிடம் விசாரிப்பதே சாலச் சிறந்தது. மண்ணுலகைச் சார்ந்தவன் மண்ணுலகைப் பற்றித்தான் கூறமுடியும். விண்ணுலகைச் சார்ந்தவரே விண்ணுலகைப் பற்றி எடுத்துரைக்க முடியும். எனவே தந்தையைப் பற்றித் தெரிந்து கொள்ள அவருடைய மகனின் வார்;தைகளைக் கேட்டு அறிந்து கொள்வதே நல்லது. மகனைப் பற்றித் தெரிந்து கொள்ள அவரது அன்புச் சீடரின் (யோவான்) வார்த்தைகளை வாசிப்பது சிறந்தது. “நான் தந்தையுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறார்” (யோவான் 14:10)

இச்சான்றுகளை வைத்து இறைமகன் என்று ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவரின் செயல்களைக் கொண்டாவது தம்மை இறைமகன் என்று நாம் இந்த உயிர்ப்பின் காலத்தில் ஏற்றுக் கொள்வோம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 34: 1, 8, 16 – 17, 18 – 19
”ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்”

ஒரு மனிதரைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்றால், அவருடைய நெருக்கமானவரிடத்தில் கேட்டால் முழுமையாக அறிந்து கொள்ளலாம். இந்த உலகத்தில் இருக்கிற மனிதர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொருவிதமான ஆளுமையைப் பெற்றவர்கள். ஒரு சிலரைப் பார்த்தால் பயமாக இருக்கும். ஒரு சிலரைப் பார்த்தால் பேச வேண்டும் என்பது போல இருக்கும். ஆனால், வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரை நாம் எடைபோட்டு விட முடியாது. வெளியில் சிரித்துக்கொண்டிருக்கிறவரின் பின்புலம் மோசமானதாகக் கூட இருக்கலாம். ஒருவரிடம் உள்ள நெருக்கம் தான், அவரைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவுகிறது.

கடவுள் இனியவர் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். காரணம், அவர் கடவுளை முழுமையாக சுவைத்திருக்கிறார். முழுமையாக அனுபவித்திருக்கிறார். கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும் அதிகமாக பெற்றிருக்கிறார். எனவே தான், கடவுளை அவர் இனியவர் என்று சொல்கிறார். கடவுளின் இனிமையை நாம் சுவைக்க வேண்டுமென்றால், முதலில் நாம் அவரோடு நெருக்கமாக வேண்டும். தொலைவில் இருந்து பார்த்தால், கடவுளின் இனிமையை நாம் சுவைத்து உணர முடியாது. அவரோடு இருந்து, அவரை அனுபவித்தால் தான், நம்மால் கடவுளின் இனிமையை அறிந்து கொள்ள முடியும்.

கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும் நமக்கு திருச்சபை அதிகமாகவே வழங்கியிருக்கிறது. நாம் அனைவருமே கடவுளின் இனிமையான பண்பை, ஒவ்வொருநாளும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்பது, தனிப்பட்ட முறையில் நாம் அறிந்த ஒன்று. இன்னும் ஆண்டவரோடு நெருங்கி வருவதற்கு நாம் உறுதி எடுப்போம். ஒவ்வொருநாளும் ஆண்டவரோடு இணைந்து வருவதற்கு நாம் முயற்சி எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

இயேசுவின் நற்செய்தி தரும் படிப்பினை

யோவான் நற்செய்தியாளரின் முக்கியமான கவலைகளில் ஒன்று, இயேசுவை ஒருசிலரே நம்புகிறார்கள் என்பது. ஒரு சிலரே இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதும், அவரது கவலையாக இருந்தது. ஆனால், இயேசுவை நம்புகிறவர்கள், உடனே அவரது வார்த்தையையும் நம்புகிறவர்களாக இருந்தது அவருக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.

முற்காலத்தில் ஒரு ஆவணத்தை ஒருவர் ஏற்றுக்கொள்வதாக இருந்தால், அந்த ஆவணத்தின் கீழே, தான் ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக, தனது அச்சைப் பதிப்பார். அந்த அச்சு, ஒருவர் அந்த ஆவணத்தை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக இருந்தது. அந்த அச்சு தான், அந்த ஒப்பந்ததத்திற்கு, குறிப்பிட்ட நபர் கட்டுப்பட்டவர் என்பதை அறிவிப்பதாக இருந்தது. அதேபோல, இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்கள், அவரையும், அவரது வாழ்வையும், தாங்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்வையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் அர்த்தம்.

இன்றைக்கு நாம் இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்களாக இருந்தால், அவரையும், அவர் நமக்கு காட்டுகிற, அறிவுறுத்துகிற வாழ்வையும் ஏற்றுக்கொள்வதாகத்தான் அர்த்தமாக இருக்கும். அத்தகைய ஒரு வாழ்வை நாம் நேர்மறையான எண்ணத்தோடு வாழ, இறையருள் வேண்டுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

கடவுளின் மகன் – இயேசு கிறிஸ்து

யோவான் நற்செய்தியாளர் இந்த நற்செய்தியின் வாயிலாக இயேசுவின் அதிகாரத்தை நிலைநாட்டுகிறார். ஒருவரைப்பற்றிய செய்தி நமக்கு முழுமையாகத் தெரியவேண்டுமென்றால், அவருடைய குடும்பத்தில் இருக்கிறவர்தான் அதை நமக்குத் தர முடியும். அதுதான் உண்மையானதாக இருக்கும். ஒரு நகரைப்பற்றி நமக்குத்தெரிய வேண்டுமென்றால், அந்த நகரத்தில் வசிக்கிறவர்தான் அதைப்பற்றி நமக்குத்துல்லியமாக தர முடியும். கடவுளைப்பற்றிய செய்தி நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால், அது கடவுளின் மகனால் மட்டும்தான் முடியும். அதேபோல், விண்ணகத்தைப்பற்றியும், அதைச்சார்ந்தவை பற்றியும் நமக்குத்தெரிய வேண்டுமென்றால், அங்கிருந்து வந்தவர்களால் தான் நமக்கு முழுமையாகக் கொடுக்க முடியும்.

சரியான தகவல்களை இரண்டாம் கட்ட நபர்களிடமிருந்து நாம் பெற முடியாது. இவ்வாறு சொல்வதன் மூலம் இயேசு தான் கடவுளின் மகன் என்பதையும், வரவிருக்கிற மெசியா என்பதையும் யோவான் நற்செய்தியாளர் உறுதிப்படுத்துகிறார். யோவான் நற்செய்தியாளர் தனது நற்செய்தியில் இந்தச் செய்தியைத்தான் ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். அவர் நற்செய்தியை எழுதுவதன் நோக்கமாகவும் இதையேத்தான் சொல்கிறார். இயேசுதான் மீட்பர், கடவுளின் மகன் என்பதை நாம் நம்புவதற்காகவே இந்த நற்செய்தியை எழுதுவதாகத் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார். ஆக, இங்கே இயேசு கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை அவரது போதனையே, நமக்குப்போதுமானதாக எடுத்துரைத்துவிடுகிறது.

இயேசுவை மீட்பராக, கடவுளின் மகனாக ஏற்றுக்கொள்கிறவர் அனைவரும் நிலையான வாழ்வை நிச்சயமாகப் பெற்றுக்கொள்வர். ஏனென்றால், அவரை ஏற்றுக்கொள்கிறவர் அவரை அனுப்பியத்தந்தையை ஏற்றுக்கொள்கிறார். தந்தையை ஏற்றுக்கொள்கிறபோது, நிச்சயம், கடவுளின் அருள் ஒருவருக்கு நிறைவாகக்கிடைக்கும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

விண்ணுலகைச் சார்ந்தவர் !

நேற்றைய நற்செய்தி வாசகம் இருள்-ஒளி வேறுபாட்டைப் பற்றிப் பேசியது. இன்றைய வாசகத்தில் ஆண்டவர் இயேசு விண்ணுலகைச் சார்ந்தவருக்கும், மண்ணுலகைச் சார்ந்தவருக்கும் உள்ள வேறுபாடுகளைப் பட்டியலிடுகிறார்

1. விண்ணுலகைச் சார்ந்தவர் அனைவருக்கும் மேலானவர். அவர் இவ்வுலகைப் பற்றிக்கொண்டு வாழ்வதில்லை.

2. அவர் தாம் கண்டதையும், கேட்டதையும் பற்றி சான்று பகர்கிறார்.

3. அவர் கடவுளின் வார்த்தையைப் பேசுகிறார்.

4. அவர் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிப் பெறுகிறார்.

இயேசுவோடு நமது பாவத்துக்கு இறந்து, அவரோடு உயிர்த்தெழுந்த நாமும் இவ்வுலகப் பொருள்கள், செல்வங்கள், இன்பங்கள், மனிதர்கள்மேல் பற்றுக்கொள்ளாமல், விண்ணுலகைச் சார்ந்தவை மட்டில் ஆர்வம் கொண்டு இறைவார்த்தையைப் பற்றியே எப்போதும் பேசுவோம், ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிப் பெற்றுக்கொள்வோம்.

மன்றாடுவோம்: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது சீடர்கள் அனைவருக்கும் நீர் வழங்கிய தூய ஆவி என்னும் கொடையை எங்களுக்கும் தந்து, நாங்கள் விண்ணுலகைச் சார்ந்தவர்களாக வாழ அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

விண்ணுலகு சார்ந்தவர் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

#8220;மேலிருந்து வருபவர் அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சார்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர் அனைவருக்கும் மேலானவர். தாம் கண்டதையும் கேட்டதையும் பற்றியே அவர் சான்று பகர்கிறார்” என்னும் இயேசுவின் சொற்களை இன்று தியானிப்போம்.

இயேசு இவ்வுலக மாந்தரை இரு பிரிவினராகப் பிரிக்கிறார். ஒரு சாரார் மண்ணுலகு சார்ந்தவர். இவர்கள் இவ்வுலகக் கவலைகள், வாழ்வின் இன்பங்கள், செல்வம் பற்றியே எப்போதும் சிந்தித்துக்கொண்டும், செயல்பட்டுக்கொண்டும் இருக்கின்றனர். இவர்களே பெரும்பான்மையினர், அகன்ற வாயில் வழியே நுழைகின்றவர்கள். இவர்களுக்கு விண்ணரசு உரிமையாகாது. விண்ணுலகு சார்ந்தவர்களோ மண்ணில் வாழ்ந்தாலும், எண்ணங்களை, இதயத்தை விண்ணகம் நோக்கியே எழுப்புகிறவர்கள். இவர்கள் சிறுபான்மையினர், குறுகிய வாயில் வழியே நுழையப் பாடுபடுவர்கள். இவர்களுக்கே விண்ணரசு உரிமையாகும். பாஸ்கா ஒளியில் வாழும் நாம், உயிர்த்த இயேசுவின் அடிச்சுவட்டில் விண்ணுலகு சார்ந்தே வாழ்வோமாக.

மன்றாடுவோம்: விண்ணிலிருந்து இறங்கி வந்த நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உயிர்ப்பின் மாட்சியில் வாழ்கிற நாங்கள் இம்மண்ணுலக இன்பங்கள்மீது நாட்டம் கொள்ளாமல், விண்ணுலகு சார்ந்தே வாழும் வரத்தைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

----------------------

 

''தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்'' (யோவான் 3:35)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு கடவுளைத் தம் தந்தை என அழைத்தார். இவ்வுலக உறவுகளில் தந்தை (தாய்) - பிள்ளை உறவு தனித்தன்மை வாய்ந்தது. பெற்றோர் தம் பிள்ளைக்குக் கடவுளின் துணையோடு உயிர்கொடுக்கின்றனர். பிள்ளை தன் பெற்றோரைச் சார்ந்து வாழ்கிறது; பெற்றோரின் அன்பில் திளைக்கிறது; பெற்றோரின் துணையோடு வாழ்வில் வளம் பெறுகிறது. இயேசு கடவுளைத் தம் தந்தை என அழைத்தபோது இவ்வுலகில் நாம் தந்தை-பிள்ளை உறவு பற்றி அறிகின்ற, பெறுகின்ற அனுபத்தை வெளிப்படுத்துகிறார் என்பதில் ஐயமில்லை. எனினும், இயேசுவுக்கும் கடவுளுக்கும் இடையே நிலவுகின்ற உறவு மனித உறவுகளை விஞ்சியது. மனித அறிவால் அந்த உறவை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது. ஏனென்றால் கடவுளின் உள்தன்மையை நேரடியாக அனுபவித்து அறிகின்ற ஆற்றல் மனிதப்பிறவிகளுக்கு இல்லை. இருப்பினும் கடவுளைப் பற்றி நாம் ஒன்றுமே அறியமுடியாது என்பதும் சரியல்ல. ஏனென்றால் கடவுள் தம்மை நமக்குப் பலவிதங்களில் வெளிப்டுத்தியுள்ளார். படைப்பைக் காண்போர் படைத்தவனை ஒருவிதத்தில், சிறிதளவாவது காணமுடியும் என்பதே உண்மை. உலகம் அனைத்தும் கடவுளின் படைப்பு என்றால் கடவுள் ஆற்றல் மிக்கவர் எனவும், நம்மை ஆழ்ந்த விதத்தில் அன்புசெய்பவர் எனவும் நாம் உணரமுடியும். ஆனால் கடவுள் தம்மை வரலாற்று நிகழ்ச்சிகள் வழியாகவும், குறிப்பாக மீட்பு வரலாற்றின் வழியாகவும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வரலாற்றின் பதிவை நாம் விவிலியத்தில் காண்கின்றோம். இறுதியாக, கடவுள் தம்மைத் தம் ஒரே மகன் இயேசு வழியாக வெளிப்படுத்தினார். இந்த இயேசுவே கடவுளின் முழுமையான, நிறைவான வெளிப்பாடு என நாம் நம்புகிறோம்.

-- இயேசு கடவுளைத் தம் தந்தை என அழைப்பதால் கடவுளோடு, கடவுள் தன்மையில் நிலைத்திருப்பவர் என நாம் அறியலாம். ஆனால் இயேசு ஒரு கடவுள் என்றும், அவர் தந்தை என அழைப்பவர் இன்னொரு கடவுள் என்றும் நாம் கருதினால் அது தவறு. ஏனென்றால் கடவுளைத் தம் தந்தை என அழைக்கின்ற இயேசு ''நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்'' என்றார் (காண்க: யோவா 10:30). மேலும், ''உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்'' கடவுளிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் புறப்பட்டு வந்து நமக்குத் துணையாக இருப்பார் எனவும் இயேசு போதித்தார் (காண்க: யோவா 14:16-17). இவ்வாறு தந்தை, மகன், தூய ஆவி என ஒரே கடவுள் மூன்று ஆள்களாகச் செயல்படுவதை நாம் இயேசுவின் போதனைவழி அறிந்து, ஏற்று, நம்புகிறோம். கடவுளை நமக்கு வெளிப்படுத்தும் இயேசுவை நம்பிக்கையோடு ஏற்று, அவர் வழியில் செல்வோர் வாழ்வு பெறுவர்.

மன்றாட்டு
இறைவா, உம்மை நம்பி வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

ஐயோ பாவம்; கை இல்லையே என்று கவலைப்படுவோர் தங்களிடம் 'நம்பிக்கை' இ;ல்லை என்று அல்லவா கவலைப்பட வேண்டும். நம்பிக்கை, கையைவிட மிகவும் அவசியமானது. அதிலும் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டோருக்கு எந்த குறையுமிருக்காது. தன்மீது நம்பிக்கைக் கொண்டோரை அவர் கைவிடுவதில்லை.

கூரையைப் பிறித்து இறக்கிய முடக்குவாதமுற்ற மனிதனைக் குணப்படுத்தியது அவர்களின் நம்பிக்கை. பார்வையற்ற இருவரும் மீண்டும் பார்வை பெற்றது அவர்களது நம்பிக்கையாலே.(மத் 9:28) " நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்" (மாற்9:23) நம்பிக்கையின் வலிமைக்கு இயேசு தரும் சாட்சியம். நம் இறைவன் இயேசுவை நம்புகிறவர்களுக்கு எந்த நன்மைகளுக்கும் குறையிருக்காது. நிலையான வாழ்வைப் பெறுவார்கள். எல்லா நலன்களும் அவர்களுக்குக் கிடைக்கும். செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்கள்.

கடவுள் மீது நம்பிக்கை இழந்தோர் வாழ்வை இழப்பது உறுதி. வாழ்கைச் சிக்கலில் இறைவன் இயேசுவின் மீது நம்பிக்கை இழந்த காரணத்தால் தன்னம்பிக்கையை இழக்கின்றனர். தொடர்ந்து பொன் பொருளை இழக்கின்றனர். பணம் கரைந்ததும் நட்பும் உறவும் ஓடிவிடும். எல்லாம் இழந்த நிலையில் தன் உயிரையும் இழப்பதற்கு தயாராகிறான். ஆனால் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோம் இச்சூழலிலும் வானிலிருந்து உதவியைப் பெறுவர். அவர்கள் வாழ்வு பெறுவர்;.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்