முதல் வாசகம்
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 4: 42-44

அந்நாள்களில் பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வந்தார். எலிசா, மக்களுக்கு உண்ணக் கொடு என்றார். அவருடைய பணியாளன், இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்? என்றான். அவரோ, இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் உண்ட பின்னும் மீதி இருக்கும் என்று ஆண்டவர் கூறுகிறார் என்றார். அவ்வாறே அவன் அவர்களுக்குப் பரிமாற, அவர்கள் உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 145: 10-11. 15-16. 17-18

பல்லவி: ஆண்டவரே, எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்;
உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்;
உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். -பல்லவி

15 எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன;
தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்.
16 நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். -பல்லவி

17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்;
அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்,
ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். -பல்லவி



இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-6


சகோதரர் சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

யோவான் 6:1-15

பொதுக்காலம் 17 வாரம் ஞாயிறு

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15


அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறு கரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, ``இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?'' என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறு மொழியாக, ``இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே'' என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, ``இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?'' என்றார். இயேசு, ``மக்களை அமரச் செய்யுங்கள்'' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந் தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டியமட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், ``ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்'' என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், ``உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே'' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

பொதுக்காலம் 16-ம் ஞாயிறு
பதவிக்கான ஆசை உங்களை விரட்டுகிறதா?
யோவான் 6:1-15

திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் (போப் பெனடிக்ட் XVI), உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தையாக இருந்தவர் ஆவார். இவர் 1927 ஏப்ரல் திங்கள் 16 ஆம் நாள் பவேரியா, ஜெர்மனியில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் ராட்ஸிங்கர் என்பதாகும். 2005 ஏப்பிரல் திங்கள் 19 ஆம் நாள் தனது 78 அகவையில் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். இவர் மூனிச் உயர் மறைமாவட்டத்தின் கர்தினால்-பேராயராக செயல்பட்டு வந்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 264 திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார். இவர் தன் வாழ்வில் செய்த ஒரு சிறப்பான செயல் இன்றும் நம் மனக்கண் முன் நிற்கின்றது. ஒருபோதும் நாம் அதை மறக்க முடியாது. அது நம் அனைவருக்கான அழியா பாடம், அழகான பாடம்.

2013 பிப்ரவரி மாதம் 28ம் தேதி திருத்தந்தை பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை வெளியிட்டு அறிக்கை ஒன்றை 11 பிப்ரவரி 2013 அன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வெளியிட்டார். முதுமை காரணமாக திருத்தந்தைக்குரிய பணிகளை சரியாக ஏற்று நடத்தமுடியாத நிலையில் இம்முடிவை எடுத்துள்ளதாகவும், 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் கர்தினால்கள் அவையால் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட இப்பொறுப்பிலிருந்து பிப்ரவரி 28ம் தேதி உரோம் நேரம் இரவு 8 மணியிலிருந்து பதவி விலகுவதாக அவ்வறிக்கையில் கூறியிருந்தார். இவர் நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் தனது பணிகளை சரியாக ஏற்று நடத்தமுடியாத நிலையில் பணி துறப்பு முடிவை எடுத்தார். திருத்தந்தையின் இந்த முடிவு அவருக்கும் பதவி ஆசைக்கும் அதிக தூரம் இருப்பதை நமக்கு இனிதே எடுத்துக்காட்டுகிறது. பதவிக்காகவே வாழ்ந்துக்கொண்டிருக்கிற ஓடிக்கொண்டிருக்கிற நம்மில் பலர் இவரைப் பார்த்து படித்து பண்பான வாழ்விலுக்குள் கடந்து சென்றால் அதுவே மிகவும் சிறப்பாக இருக்கும்.

பதவிக்கான ஆசை நமக்குள் வரும்போதும், பிறர் பதவிக்கான ஆசையை நமக்குள் தூண்டும் போதும் நாம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக கற்றுத்தருகிறார்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும், இரண்டு மீன்களையும் வைத்து ஐயாயிரம் பேருக்கு அதிசய உணவு அளிக்கிறார். அதைப் பார்த்த மக்கள் கூட்டம் உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் இவரே என சொல்லி அவரை அரசராக்க மிகவும் ஆசைப்படுவதை எண்ணிய இயேசு அவ்விடத்திலிருந்து மிகவும் விவேகமாய் கடந்து செல்கிறார். மாபெரும் அதிசயத்தை தன் வழியாய் தந்தை வெளிப்படுத்தியதற்காக ஜெபத்தில் கரம் குவித்து நன்றி சொல்ல மலைக்குச் செல்கிறார்.

பதவி ஆசை நமக்குள் வரும்போது பல அபாயங்கள் நமக்கு நடப்பது உண்டு. நம்மை மனிதர்களாக நடமாட விடாமல் வெறியர்களாக மாற்றி நம்மை வேடிக்கைப் பார்க்கிறது. பதவி ஆசையினால் விளையும் பக்கவிளைவுகள் இரண்டு.

பக்கவிளைவு 1: ஆண்டவரை விரட்டுகிறது
சான்றோர்கள் அருமையாக சொல்வார்கள், "ஆசையை தொட்டவன் ஆண்டவரை விட்டவன்". இது நூறு சதவிகிதம் முலாம் பூசப்படாத உண்மை. பதவி ஆசை வர வர பணம் தான் கடவுளாகத் தெரிகிறது. கடவுள் காணாமல் போகிறார். ஆகவே பதவி ஆசை வந்தவர்கள் ஊதாரி மைந்தர்களாக திரிகிறார்கள். இவர்களிடம் மனிதநேயம், மக்கள் மய்யம் இவைகள் இல்லாமல் போகின்றது. ஆசையின் உச்சக்கட்டத்திற்கே இவர்கள் செல்வதால் வாழ்வில் மனவிரக்தியையே அனுபவிக்கிறார்கள்.

பக்கவிளைவு 2: பாவச்செயல்களுக்கு காரணமாகிறது
இப்போது பதவிக்காக ஆசைப்படுகிற பலர் பதவிக்காக பிறருடைய உயிரையும் எடுப்பதற்கு அஞ்சுவதில்லை. கூலிப்படையின் மூலம் மனசாட்சி இல்லாமல் கடவுளுக்கு அஞ்சாமல் இந்த அநீத செயலை அவர்கள் செய்வதும் இந்த பதவி ஆசையினாலே.

இந்த இரண்டு பக்கவிளைவுகளையும் சந்திக்கிற மனிதர்கள் இவ்வுலகில் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ்வதில்லை. பதவி ஆசை வருகின்ற போது நாம் அதை எப்படி கையாள வேண்டும், அதிலிருந்து நம்மை எப்படி மீட்டெடுக்க வேண்டும் என்பதை நாம் அறிவது மிகவும் அவசியமானது. இரண்டு நிலைகளில் நாம் அதை செய்யலாம்.

1. பிறருடைய சோதனைக்குட்பட வேண்டாம்
பதவிக்கான ஆசையை தூண்டும் நண்பர்கள் நமக்கு இருந்தால் அதைக் குறித்து மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். பெரும்பாலும் நமக்கான பதவி ஆசையை தூண்டுவது நண்பர்களே. அவர்கள் தூண்டி விடுவார்கள். ஆனால் நாம் பாதிக்கப்படும் போது அவர்களை நம் பக்கத்தில் பார்க்கவே முடியாது. ஆகவே அந்த சோதனையில் உட்படாதிருப்பது உன்னதமான வாழ்க்கைக்கு அழைத்து செல்லும்.

2. ஜெபத்தில் ஈடுபட வேண்டும்
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை மக்கள் அரசராக்க வேண்டும் என்று வந்த போது அவர்களிடமிருந்து தப்பித்து அவர் விவேகமாக தன் தந்தையிடம் சென்றார். தந்தையோடு தனியாக பயணித்தார். பதவி ஆசை வரும்போது ஓட வேண்டும். தப்பித்து ஓட வேண்டும். ஆண்டவர் இயேசுவிடம் ஓட வேண்டும். தனிமையிலே அவரோடிருந்து ஞானமும், விவேகமும் பெற்று வாழ்வை கொண்டாடுவதற்காக ஆசீரையும், அருளையும், ஆற்றலையும் பெற வேண்டும்.

அன்புமக்களே! பதவி ஆசை நமக்கு எதற்கு? அதனால் வரும் பாதிப்புக்களை தெளிவாக பார்த்த நாம் அதன் பக்கம் தலை வைத்து படுக்கலாமா? பதவி ஆசையை விடுத்து இறைவன் மீது ஆசை கொள்வோம். இறைவன் மீதுள்ள கொள்கிற ஆசை பல அவசிமற்ற ஆசைகளை விரட்டுகிறது. இறைவனை விரும்புவோம். இலவசமாக நிலையான இன்பங்களை இன்றே பெற்று தொடா்ந்து நம் வாழ்வை அனுபவிப்போம்.

மனதில் கேட்க…
• பதவி ஆசையினால் விளைவுகள் பக்கவிளைவுகள் வேண்டாமல்லவா?
• பதவி ஆசையை விட இறைவன்ஆசைக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கலாமா?

மனதில் பதிக்க…
இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள் (கொலோ 3:2)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

எரேமியா 13: 1 – 11
இறைவழியில் நடப்போம்

தவறான நடத்தை ஒருவரை அழிவுக்கு அழைத்துச் செல்லும் என்பதை, இன்றைய வாசகம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. கடவுள் இஸ்ரயேல் மக்களை தன் சொந்த மக்களாக தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்களை கண்ணும் கருத்துமாக வளர்த்தெடுக்கிறார். அவர்கள் வழியாக இந்த உலகத்திற்கு மீட்பு கொண்டு வர வேண்டும் என்பதே, இறைத்தந்தையின் விருப்பமாக இருக்கிறது. தன்னுடைய எண்ணம் நிறைவேறுவதற்கு இஸ்ரயேல் மக்களின் ஒத்துழைப்பு அவசியமானதாக இருக்கிறது. அவர்களும் கடவுளுக்கு பிரமாணிக்கமாக இருக்கிறார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்ல, அவர்களது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட தொடங்குகிறது.

கடவுள் பயம் அவர்களிடத்தில் குறையத் தொடங்குகிறது. கடவுள் பயம் என்பது கடவுளைப் பார்த்து பயப்பட வேண்டும் என்கிற எண்ணமல்ல. மாறாக, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற செயல்பாடு. கடவுள் பொறுமையாக இருக்கிறார். எப்படியும் அவர்கள் தன்னிடத்தில் திரும்பி வருவார்கள் என்கிற எதிர்பார்ப்போடு இருக்கிறார். ஆனால், அவர்கள் கடவுளை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறார்கள். கடவுள் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார். எனவே, அவர்களுக்கு நடக்க இருப்பதை, காட்சி வழியாக, இறைவாக்கினருக்கு விளக்கி, இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்கச் செய்கிறார். இது இஸ்ரயேல் மக்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, அப்படியாவது அவர்கள் திருந்தி, தன்னிடம் திரும்பி வர மாட்டார்களா? என்பதற்காகத்தான். தான் இஸ்ரயேல் மக்கள் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பையும், அவா்கள் வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்றதையும் அவர் எடுத்துரைக்கிறார். அதற்காக வருத்தப்படுகிறார். அவர்களை தன்னிடத்தில் திரும்பி வருவதற்கு அழைப்புவிடுக்கிறார்.

இறைவன் எப்போதும் அவருடைய பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று விரும்புகிறார். இறைவன் நம் மீது காட்டும் அன்புக்கு, குறைந்தபட்சம், அவருடைய கட்டளைகளை மதித்து நடப்பதற்கு நாம் முயற்சி எடுக்க வேண்டும். அவரது வழியில் நடப்பதற்கு நாம் முனைப்புகாட்டுவோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

2அரசர்கள் 4: 42 – 44
இறைத்திருவுளத்தை நிறைவேற்றுவோம்

இறைவனுடைய வார்த்தை ஒருபோதும் பொய்த்துப் போகாது என்பதற்கு இன்றைய வாசகம் சிறந்த சான்றாக இருக்கிறது. இறைவாக்கினர் எலிசா ஆண்டவருடைய வார்த்தையை துணிவோடு மக்களுக்கு அறிவித்த ஓர் இறைவாக்கினர். வாற்கோதுமை அப்பங்களையும், தானியக் கதிர்களையும் நூறு பேருக்கும் மேல் இருக்கிற மக்கள் கூட்டத்திற்கு பரிமாறச் சொல்கிறார். பணியாளன் அவனுடைய சந்தேகத்தை எழுப்புகிறான். அது முடியாத காரியம் என்கிற எண்ணத்தில் அவன் நியாயமாகவே வெளிப்படுத்துகிறான். ஆனால், எலிசா இறைவனுடைய வார்த்தையின்படி, அவர்களுக்கு உண்ணக் கொடுக்க கட்டளையிடுகிறார். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது.

இறைவன் தன்னுடைய வார்த்தைகளுக்கு ஏற்ப நடக்கிறவர். இறைவாக்கினர் வழியாக மக்களுக்கு தொடர்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறவர். இங்கு, இறைவாக்கினர் எலிசாவின் பணி முக்கியமானது. அவருக்கென்று, ஒரு மனிதராக சந்தேகம் இருந்தாலும் அவர் ஆண்டவருடைய வார்த்தையை முழுமையாக நம்புகிறார். ஆண்டவர் சொன்னால் அது கண்டிப்பாக நடக்கும் என்று விசுவசிக்கிறார். இந்த விசுவாசம் நிச்சயமாக அவர் இறைவாக்கினர் எலியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட விசுவாசமாகத்தான் இருக்க முடியும். கடவுள் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் என்றுமே கைவிடப்பட மாட்டார்கள் என்கிற ஆழமான விசுவாசம், அவருடைய வாழ்க்கையில் வெளிப்படுகிறது. அதுதான், இறைத்திருவுளம் செயல்படுவதற்கு தூண்டுகோலாய் அமைகிறது.

இறைவாக்கினர்கள் கடவுள் மீது கொண்டிருந்த விசுவாசம் நம்முடைய விசுவாசமாக மாற வேண்டும். இறைவன் தன்னுடைய அன்பையும், ஆற்றலையும் எடுத்துரைக்க நம்மை கருவியாக பயன்படுத்துகிறபோது, இறைவாக்கினர் எலிசாவைப் போல நம்பிக்கையுள்ளவர்களாக நம்மைக் கையளிக்க வேண்டும். நிச்சயம், பலருடைய விசுவாசத்திற்கு அது தூண்டுகோலாய் அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இயேசுவிடம் அழைத்து வருவோம்

இயேசு கப்பர்நாகுமிலிருந்து கலிலேயா கடற்கரையின் மறுபக்கத்திற்குச் செல்கிறார். இரண்டுக்கும் இடையிலான கடற்பயண தூரம் ஏறக்குறைய நான்கு மைல்கள். இயேசு செல்லக்கூடிய இடம் மக்களுக்குத் தெரிந்தவுடன் அவர்கள் கால்நடையாக செல்ல ஆரம்பிக்கின்றனர். அவர்கள் அங்கே கால்நடையாகச் செல்வதற்கு சுமார் 9 மைல்கள் நடக்க வேண்டும். ஆனால், இயேசு அங்கு வந்து சேர்ந்தவுடன் அவர்களும் கூட்டம், கூட்டமாக வரத்தொடங்கினார்கள். இதிலிருந்து, எந்த அளவுக்கு மக்கள் இயேசுவைப் பார்க்க வேகமாக தங்கள் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

இன்றைய நற்செய்தியில் பேதுருவின் சகோதரர் அந்திரேயாவின் பணி பாராட்டுதற்குரியது. நாம் நமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பணி ஆகும். அவர்தான், சிறுவன் ஒருவனை இயேசுவுக்கு அறிமுகப்படுத்துகிறார். அந்திரேயாவிற்கு அந்த சிறுவனை இயேசுவிடத்தில் அறிமுகப்படுத்துகிறபோது, என்ன நடக்கும்? என்பது தெரியாது. ஆனால், ஏதாவது செய்வதற்கு வாய்ப்பிருக்கிறதா? என்று அறிமுகப்படுத்துகிறார். அறிமுகப்படுத்துதல் ஒரு முக்கியமான பணி. நாம் ஒருவரை இயேசுவிடத்தில் கூட்டி வருகிறபோது, அவர் வழியாக கடவுள் செய்யவிருக்கிற அற்புத செயல்கள் நாம் அறியாமல் இருக்கிறோம். ஆனால், கடவுள் வல்ல செயல்கள் செய்வதற்கு அவரையே பயன்படுத்தலாம், அந்த சிறுவனைப்பயன்படுத்தியது போல.

இயேசுவிடம் மற்றவர்களைக் கூட்டி வருவதற்கு நம் அனைவருக்குமே பொறுப்பிருக்கிறது. அது குறிப்பிட்ட பணியாளர்களுக்கு மட்டுமல்ல. திருமுழுக்கு பெற்றிருக்கிற அனைவருக்குமே இருக்கிறது. இயேசுவை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துகிற நற்செய்திப்பணியை நாம் அனைவரும் செய்வோம். நற்செய்தி அறிவிப்பில் நம்மையே ஈடுபடுத்துவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கடவுளுக்கு நாம் செவிமடுப்போம்

இயேசு மக்களுக்கு அப்பங்களைப் பகிர்ந்து கொடுக்கிறார். இயேசுவின் புதுமை செய்யும் ஆற்றலைப்பார்த்த மக்கள், ”உலகிற்கு வரவிருநத உண்மையான இறைவாக்கினர் இவரே” என்று இயேசுவைப் புகழ்கிறரர்கள். எதற்காக இயேசுவை மக்கள் இறைவாக்கினராகப் பார்க்கத் தொடங்கினார்கள் என்பதற்கு இணைச்சட்ட நூல் ஓர் ஆதாரத்தைத் தருகிறது. ”உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு”(18: 15). இந்த இறைவார்த்தை இயேசுவில் உண்மையாவதை மக்கள் பார்க்கத் தொடங்கினார்கள்.

அந்த நேரத்தில் அவர்கள் இயேசுவை தாங்கள் எதிர்பார்த்த மெசியாவாக ஏற்றுக்கொள்ளத்தொடங்கினார்கள். ஆனால், சிலநாட்களில், அதே மக்கள், ”அவனைச்சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்” என்று கத்தத்தொடங்கினார்கள். ஏன் மக்கள் மனதில் உடனடி மாற்றம்? அதற்கான காரணம் இதோ: இயேசு நோயுற்றவர்களைக் குணமாக்கியபோதும், முடவர்களை நடக்கச்செய்தபோதும், செவிடர்களைக் கேட்கச்செய்தபோதும், இயேசுவை மெசியாவாகத்தான் மக்கள் நினைத்தனர். ஆனால், தங்கள் விருப்பப்படிதான் இயேசு இருக்க வேண்டும் என்றும் , தங்களது எண்ணத்திற்கேற்ப இயேசு இருக்க வேண்டும் என்றும் கடிவாளம் போட ஆரம்பித்தபோது, அதற்கு இயேசுவின் போக்கு இசைவு கொடுக்காததால் அவரைக் கொன்றுவிட முடிவு செய்தனர்.

கடவுளை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது. கடவுளுடைய எண்ணத்தின்படி நாம் தான், நமது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். அவருக்கு எதிராக நாம் செல்கிறபோது, அது தோல்வியில்தான் முடியும். இந்த உண்மையை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இறைவன் நமது வானகத்தந்தை

சில நேரங்களில் இயேசு மக்கள் கூட்டத்தினரிடமிருந்து விலகி இருந்த நிகழ்ச்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். அதற்குக்காரணம், மக்களை ஒதுக்குவது அல்ல, மாறாக, சீடர்களைப் பக்குவப்படுத்துவதற்கும், செபத்தில் நேரத்தில் செலவிடுவதற்கும் தான். ஆனாலும், அதையும் மீறி பல சமயங்களில் மக்கள் பணியே கடவுளின் பணியாகச்செய்து மிகச்சிறந்த எடுத்துக்காட்டினையும் நமக்கு காட்டியிருக்கிறார். இன்றைய நற்செய்தியிலே, யூதர்களின் பாஸ்கா விழா அண்மையிலிருந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே பெரும்பாலும், யெருசலேமுக்கு திருயாத்திரையாகச்செல்லும் திருப்பயணிகள் அந்த வழியாக வரும்போது, இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டிரு;ததால், அவரைப்பார்க்க அங்கே கூடியிருக்கலாம். எது எப்படியிருந்தாலும், அங்கே மிகப்பெரிய கூட்டம் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இயேசுவும் மக்களும் திரளாக இருந்த பகுதி பெத்சாய்தா.

இயேசு மக்கள் கூட்டத்திடம் பரிவுகொண்டு, பிலிப்பிடம் அவர்களுக்கு ஏதாவது கொடுக்க முடியுமா? என்று கேட்கிறார். பிலிப்பிடம் இயேசு கேட்பதற்கு காரணம், அவர் பெத்சாய்தாவைச் சேர்ந்தவர். அவருக்கு அங்குள்ள நிலைமை நன்றாகத்தெரியும். எனவேதான் அவரிடம் கேட்கிறார். பிலிப்பின் பதில் எதிர்மறையாக இருக்கிறது. இயேசு மக்களை அமரவைத்து, அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கிறார். இங்கே இயேசு ஒரு குடும்பத்தலைவர் செய்கிற பணியைச்செய்கிறார். பொதுவாக, யூதக்குடும்பங்களில் தந்தைதான் குடும்பத்தலைவர். முக்கிய திருவிழாக்களில் அவர்தான் இறைவேண்டல் செய்வார். இயேசு இங்கே இறைவேண்டல் செய்வதன் மூலம் தன்னை மக்கள் அனைவருக்கும் தந்தையாக உருவகப்படுத்துகிறார். அவர்களின் வாழ்விற்கு பொறுப்பேற்கிறார்.

இறைவன் நமது வானகத்தந்தை. நாம் அவருடைய பிள்ளைகள். தந்தைக்கு தன்னுடைய பிள்ளைகளுக்குச்செய்ய வேண்டியது நன்றாகத்தெரியும். எதை, எந்தநேரத்தில், எப்படி செய்ய வேண்டும் என்பதில், தந்தைக்கு நிகர் தந்தைதான். பிள்ளைகளின் வளர்ச்சியில் அதிக அக்கறை எடுத்து அன்பு செலுத்தும் தந்தையாகிய கடவுளைப்பெற்றிருக்கிற நாம் எதற்கும் அஞ்சத்தேவையில்லை. தந்தையின் அருகில் இருக்கும் பிள்ளைகள் அஞ்சாது இருப்பதுபோல, நாமும் இறைவன் நமது விண்ணகத்தந்தை என்ற மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

உணவைப் பெருக்கும் உயிர்த்த ஆண்டவர்!

இயேசு ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு உணவளித்த இந்த அற்புத நிகழ்வை அனைத்து நற்செய்தியாளர்களும் பதிவு செய்திருக்கிறார்கள்.

யோவானின் நற்செய்தியாளரின் இந்தப் பதிவு இயேசுவின் உயிர்ப்புக் காலத்துக்குப் பொருத்தமான நற்செய்திப் பகுதியாக அமைந்துள்ளது. இயேசுவின் உயிர்ப்பு அச்சத்தை, கலக்கத்தை, கண்ணீரை, கவலையை, நம்பிக்கையின்மையைப் போக்கிய அற்புத நிகழ்வு என்பதைக் கடந்த வாரம் முழுவதும் தரப்பட்ட நற்செய்திப் பகுதிகளில் கண்டோம்.

அப்பங்களைப் பலுக்கிய நிகழ்வு இயேசு பசியைப் போக்கி, நிறைவு தருபவர் என்ற செய்தியை நமக்கு வழங்குகிறது. மக்களின் ஆன்மீகப் பசியைப் போக்க விரும்பிய இயேசு முதலில் அவர்களின் உடற் பசியைப் போக்குகிறார். உடற் பசியைப் போக்கிய அந்த அப்பமே, ஆன்மீகப் பசி போக்கும் நற்கருணையின் முன் அடையாளமாக விளங்கியது.

இன்றைய திருப்பலியில் நாம் பெறும் நற்கருணை உணவு, நமது பசியைப் போக்கி, மனநிறைவு தருவதாக!

மன்றாடுவோமாக: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். பசியால் வாடிய மக்களின் பசி போக்கி, நிறைவு செய்த நீர் நற்கருணை என்னும் விருந்தால், எங்களின் உடல், உள்ள, ஆன்ம பசியைத் தணிப்பீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

வரவிருந்தவர் இவரே!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு ஐந்து அப்பங்களைக் கொண்டு, ஐயாயிரம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு உணவளித்த நிகழ்வை நாம் எத்தனையோ முறை வாசித்திருக்கிறோம். தியானித்திருக்கிறோம். எனவே, இன்று நாம் இந்த நிகழ்வை இன்னொரு கோணத்தில் பார்ப்போம். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், #8220;உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றார்கள். இயேசுவே மெசியா, வரவிருந்தவர், இறைவனால் அனுப்பப்பட்டவர் என்பதை இயேசு பல வழிகளில் வெளிப்படுத்தினார். அவரது அதிகாரம் நிறைந்த போதனை, அவரது பரிவு, அவரது நற்செய்தி அறிவிப்புப் பணிரூhநடடip; இவை அனைத்துக்கும் சிகரமாக அவரது வல்ல செயல்கள். அனைத்தும் அவரை வரவிருந்தவராக, தந்தையால் அனுப்பப்பட்டவராக அடையாளம் காட்டின.

நம்முடைய வாழ்வில் இயேசுவின் அடையாளத்தை நாமும் பல வழிகளில் காணவேண்டும். சிறப்பாக, இயேசு தன்னையே உணவாகத் தரும் நற்கருணை விருந்தில்; அவரை மெசியாவாகக் கண்டுகொள்வோமாக!

மன்றாடுவோம்: இறைவாக்;கினரான இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறோம். ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தீரே. இன்றும் எண்ணிலடங்கா மக்களுக்கு உம்மையே உணவாகத் தருகிறீரே. உம்மைப் போற்றுகிறோம். நற்கருணை விருந்தில் உம்மை இறைவனாக, ஆண்டவராகக் கண்டு ஆராதிக்க அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

----------------------

வயிறார உண்டனர் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இறைவனின் பண்புகளுள் ஒன்று அவர் நிறைவானவர், நிறைவளிப்பவர். விவிலியத்தின் பல பக்கங்கள் இந்த உண்மையை எடுத்துரைக்கின்றன. இன்றைய நற்செய்தி வாசகமும் இதைத் தெளிவாகச் சொல்கிறது. பாலை நிலத்தில் பசியோடு இருந்த மக்களுக்கு இயேசு அற்புதமான வகையில் உணவளிக்கிறார். எப்படிப்பட்ட முறையில்? அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டனர் என்று வாசிக்கிறோம்.

இறைவனின் ஆசிகள் எப்போதும் அப்படித்தான். அமுக்கிக் குலுக்கி சரிந்து விழும்படியாக நம் மடிமீது போடுபவர் (லுhக் 6;38) இறைவன். நாம வேண்டுவதற்கும், விரும்புவதற்கும் மேலாகவே நம்மை ஆசிர்வதிப்பவர் நம் இறைவன் (எபே 3;20). அவர் நிறைவான, முழமையான அமைதியை, ஆசிர்வாதத்தை நமக்குத் தர விரும்புகிறார். நாம் நிறைவான வாழ்வு வாழ நம்மை அழைக்கிறார்.

எனவே, அழிந்துபோகும் உணவுக்காக உழைக்காமல், அழியாத வாழ்வு தரும், நிறைவான உணவாம் இயேசுவுக்காக நாம் ஏங்குவோமா!

மன்றாடுவோம்; நிறைவின் உருவே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். அன்று பாலை நிலத்தில் உமது வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு நீர் வயிறார உணவளித்தீரே. வேண்டிய மட்டும் அளித்தீரே. உமக்கு நன்றி. எனது வாழ்விலும் நாம் வேண்டியதற்கும், நினைத்ததற்கம் மேலாகவே என்னை ஆசிர்வதித்திருக்கிறீர். உயர்த்தியிருக்கிறீர். உமக்கு நன்றி. நிறைவற்ற பொருள்கள்மீது பற்று கொள்ளாமல், நிறைவான இன்பமாம் உம்மையே பற்றிக்கொண்டு வாழ எனக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

''மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச்
சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்'' (யோவான் 6:13)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- அப்பம் பலுகிய நிகழ்ச்சிக்கும் நற்கருணையை இயேசு ஏற்படுத்தியதற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதையும் யோவான் காட்டுகிறார். ''இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், 'ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்' என்று தம் சீடரிடம் கூறினார்'' (யோவா 6:11-12) என்று யோவான் குறிப்பிடுகிறார். இங்கே இயேசு அப்பத்தை ''எடுத்தார்'' எனவும், கடவுளுக்கு ''நன்றிசெலுத்தினார்'' எனவும், ''பகிர்ந்தளித்தார்'' எனவும், மக்களுக்கு ''வேண்டிய மட்டும் இருந்தது'' எனவும், ''எஞ்சிய துண்டுகள் சேர்த்துவைக்கப்பட்டன'' எனவும் வருகின்ற சொற்றொடர்களை நாம் கருதலாம். இச்சொற்றொடர்கள் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய பிற நற்செய்தி நூல்களில் இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்ச்சி தொடர்பாக வருகின்ற தகவல்களை உள்ளடக்கியவை என நாம் அறிகிறோம்.

-- உணவு உண்ணும்போது தட்டிலோ இலையிலோ மீதி வைக்கக் கூடாது எனவும் உணவை வீணடிக்கக் கூடாது எனவும் குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்றுக்கொடுப்பர். ஆனால் இன்றும் பல இடங்களில் பலர் உணவைத் தூர எறிந்து வீணடிப்பது வழக்கமாயுள்ளது. இயேசு ஐயாயிரத்திற்கு மேலான மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவளித்தபின் ''பன்னிரு கூடை'' நிறைய அப்பம் எஞ்சியது. பன்னிரண்டு என்னும் எண் பன்னிரு குலங்களை உள்ளடக்கிய இஸ்ரயேல் மக்களைக் குறித்ததால் இங்கே எல்லா மக்களுக்கும் பயன்படும் வண்ணம் உணவு சேமிக்கப்படுவதை யோவான் குறிப்பிடுகிறார். எஞ்சியிருந்த அப்பம் ஏழைகளுக்கு உணவாக மாறும். நாம் உண்டோம், நிறைவடைந்தோம் என்றிராமல் பிறருடைய பசியை ஆற்றுவதற்கு நாம் அப்பத்தைச் சேர்க்க வேண்டும். கடவுள் தருகின்ற எந்தக் கொடையும் மக்களின் பயன்பாட்டுக்கு உரியதே ஒழிய வீணடிக்கப்படுவதற்கு அல்ல. இயேசு தம்மையே உணவாகத் தருகின்ற நற்கருணையும் இந்த உலகத்தின் பசியைப் போக்க நமக்குத் தூண்டுதலாக அமைய வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, மக்களின் பசியை ஆற்றிட நீர் வழங்கும் கொடைகளை நாங்கள் வீணடிக்காமல் பயன்படுத்த அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார்.
அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது'' (யோவான் 6:11)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளர்களும் இயேசு புரிந்த பல அருஞ்செயல்களைப் பதிவுசெய்துள்ளனர். ஒரு நற்செய்தியாளர் குறிப்பிடும் அருஞ்செயல் பிற நற்செய்தியாளர்களால் குறிப்பிடப்படாமல் இருக்கலாம். ஆனால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அற்புதமான விதத்தில் இயேசு உணவளித்தார் என்னும் அருஞ்செயல் மட்டுமே நான்கு நற்செய்தியாளர்களாலும் தவறாமல் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது (மத் 14:13-21; 15:32-38; மாற் 6:31-44; 8:1-10; லூக் 9:10-17; யோவா 6:1-15). இயேசு அப்பங்களை ''எடுத்தார்''; ''கடவுளுக்கு நன்றி செலுத்தினார்''; ''மக்களுக்குக் கொடுத்தார்'' என இந்நிகழ்ச்சியை யோவான் விவரிப்பது அன்றைய கிறிஸ்தவ சமூகத்தில் நிகழ்ந்த ''நற்கருணைக் கொண்டாட்டம்'' நிகழ்ந்த முறையை அழகாக எடுத்துக்கூறுகிறது.

-- இயேசு புரிந்த அருஞ்செயலைக் கண்ட மக்கள் இயேசுவே கடவுளால் தரப்பட்ட உணவு என்பதைக் கண்டுகொள்கிறார்கள். எனவே, அவர்கள் ''உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் இவரே'' என அறிக்கையிடுகிறார்கள் (காண்க: யோவா 6:14). இயேசு மக்களுக்கு உணவளித்தது அவர் தம்மையே நமக்கு உணவாக அளித்ததற்கு அடையாளம் ஆயிற்று. இன்று நாம் கொண்டாடுகின்ற நற்கருணை இவ்வுலகில் பசியால் வாடுகின்ற மக்களுக்கு உணவளிக்க வேண்டிய கடமையை நமக்கு உணர்த்துகிறது. இவ்வாறு கடவுள் நமக்கு வெளிப்படுத்துகின்ற அன்பு நம் வாழ்வில் பிறரன்பாகப் பரிணமிக்க வேண்டும் என்பதும் பெறப்படுகிறது. நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது ''வார்த்தை வழிபாடு'' என்னும் பகுதியும் ''திருவிருந்து வழிபாடு'' என்னும் பகுதியும் உண்டு. இந்த இரண்டு பகுதிகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இயேசு கடவுளின் ''வார்த்தை''யாக நம்மிடையே வந்தார். அவரே கடவுளின் ''வார்த்தை''யை நமக்கு அறிவித்தார். அதே நேரத்தில், இயேசு தம்மையே நமக்கு ''உணவாக'' அளித்தார். ஆக, இயேசுவின் வார்த்தையும் அவருடைய உடலும் நமக்கு உணவாக உள்ளன. இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோர் அவரிடமிருந்து வாழ்வு பெறுவர்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனை எங்களுக்கு உணவாக அளித்ததற்கு நன்றி!

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"200 தெனாரியத்திற்கு வாங்கினாலும் சிறு துண்டும் கிடைக்காதே"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

பிரச்சனைகளுக்குத் தீர்வு பணத்தால் கிடைத்து விடுவதல்ல. அல்லது அறிவுத் திறமையால் சாதித்துவிடுவதும் அல்ல. பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் பணத்தை வைத்து தீர்க்கப் பார்க்கிறோம். பத்துப்பேரை வைத்து சாதிக்கலாம் என நினைக்கிறோம். ஆண்கள் மட்டும் ஏறக்குரைய 5000 பேர்,பெண்கள் குழந்தைள் வேறு. இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு, அதுவும் மூன்று நாட்கள் பசியாக இருக்கும் கூட்டத்திற்கு ஒரு வனாந்தரத்தில், அக்கம் பக்கம் ஆள் அரவம் இல்லாத இடத்தில்,உணவு கொடுக்க வேண்டும். இது பெரிய பிரச்சனை.

பணத்தால் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முற்பட்டால்,திருத்தூதர் பிலிப்பு சொன்னதுபோல இரு நூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காது. இரண்டாவதாக, பணத்தை வைத்து அல்லது பணத்தைக் கொடுத்து, சோறு போட்டு, முட்டை கொடுத்து, சைக்கிள், தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்து செய்யும் முயற்சிகள் எல்லாம் பிரச்சனைகளுக்குத் தீர்வு தருவதல்ல. பிரச்சனைகளைப் பின் விழைவுகளோடு பெரிதாக்குபவை.

ஆகவே திருத்தூதர் அந்திரேயா காட்டிய வழியே சரியானது. "இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வார்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன" என அடையாளம் காட்டி, அனைவரின் பங்களிப்புக்கும் அடித்தளமிடுகிறார். கடவுளுக்கு நன்றி செலுத்தியதன் வழியாக ஆன்மீகத்தை கூட்டத்துள் ஏற்படுத்தி, அனைவரையும் தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளும் பண்பாளர்களாக்குகிறார். பசி பிரச்சனை பறந்தோடுகிறது. ஆகவே ஆன்மீகத்தை அனைத்துப் பிரச்சனையினுள்ளும் அனுமதிப்போம். தீர்வு காண்போம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்