முதல் வாசகம்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 1-7

அந்நாள்களில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர். எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, ``நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். நாங்களோ இறைவேண்டலிலும், இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்'' என்று கூறினர். திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக் கருத்தை ஏற்றுக் கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிக்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர். கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக்கொண்டே சென்றது. குருக்களுள் பெருங்கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 33: 1-2. 4-5. 18-19

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!

1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்;
நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.
2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். -பல்லவி

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது;
அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்;
அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. -பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக்
காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்;
அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்; அனைத்தையும் படைத்தவர் அவரே; மானிடக்குலத்தின்மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா.

யோவான் 6:16-21

பாஸ்கா காலம்-இரண்டாம் வாரம் வெள்ளி

நற்செய்தி வாசகம்
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 16-21

மாலை வேளையானதும் இயேசுவின் சீடர்கள் கடற்கரைக்கு வந்து, படகேறி மறுகரையிலுள்ள கப்பர்நாகுமுக்குப் புறப்பட்டார்கள், ஏற்கெனவே இருட்டிவிட்டது. இயேசுவும் அவர்களிடம் அதுவரை வந்து சேரவில்லை. அப்போது பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது. அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தொலை படகு ஓட்டியபின் இயேசு கடல்மீது நடந்து படகருகில் வருவதைக் கண்டு அஞ்சினார்கள். இயேசு அவர்களிடம், ``நான்தான், அஞ்சாதீர்கள்'' என்றார். அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம் போய்ச் சேர்ந்துவிட்டது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------

யோவான் 6: 16 - 21
தனிமை

தனிமையிலே இனிமை காண முடியுமா? என்ற திரைப்பட பாடல் தனிமையின் எதிர்மறை சிந்தனையைத் தருகின்றது. ஆனால் தனிமையினால் பலர் இந்த சமுதாயத்தில் சாதித்திருக்கின்றார்கள். சாதித்துக் கொண்டும் இருக்கின்றார்கள். பல மனிதர்களை நாம் உதாரணத்திற்கு கூறலாம். மோடி, காமராசர், ராகுல் காந்தி – இவர்கள் அனைவருமே தனிமையின் வழியாக தான் சமுதாயத்தில் உயர்ந்திருக்கின்றார்கள்.

தனிமையில் நாம் எவ்வாறு இருக்க வேண்டும்? யாரோடு இருக்க வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலைத் தான் இன்றைய நற்செய்தியின் பின்புலம் எடுத்துக் கூறுகின்றது. ஏனென்றால் வயிரார உண்ட பின்பு சீடர்கள் மறுகரைக்குச் செல்ல புறப்படுகின்றார்கள். ஆனால் இயேசு தன் தந்தையோடு உறவாட தனிமைக்கு செல்கின்றார். இயேசுவின் வாழ்வை இரண்டாக பிரிப்பார்கள். தந்தையோடு இருக்கின்ற நேரம், மக்களோடு இருக்கின்ற நேரம். இரவு முழுவதுமே தந்தையோடு தனிமையில் இருக்கின்றார். அதனால் தான் மாற்கு நற்செய்தியாளர் விடியற்காலை (கரும்பகல்) என்று நூலில் பதிவு செய்கின்றார். விழித்திருந்து தந்தையோடு உரையாடிக் கொண்டு, பகலில் தேவையில் இருப்பவர்களோடு இருக்கின்றார். இயேசுவின் தனிமை தந்தையிடமிருந்து வல்லமை பெறக்கூடிய தனிமையாக அமைகின்றது. அந்த வல்லமையின் வெளிப்பாடு தான் கடல் மீது நடந்து வருவதை பார்க்கின்றோம். ஆனால் சீடர்கள் தனிமையில் இருக்கும்போது அழைத்த இயேசுவோடு இருப்பதில்லை. அதனால் தான் இயேசுவின் நடைபயணத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள்.

நாம் தனிமையில் இருக்கும்போது எவற்றினை விரும்புகிறோம்? இறைஞானத்தை பெற விரும்புகிறோமா(விவிலியம்,புனிதர்கள்,வரலாறு)? அல்லது சமுதாய சீர்குலைப்பு ஞானத்தை (முகநூல், படவரி, காயலை) விரும்புகிறோமா? சிந்திப்போம்.

அருட்பணி. பிரதாப்

===========================

தனிமையில் இனிமை (யோவான் 6 : 16 – 21)

நமது நிறைவாழ்வு பயணத்தில் நாம் வான் வீட்டை அடைய நமக்கு வழியும் துணையும் இயேசுதான். நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் புயலை இளந் தென்றலாக மாற்றுபவர் இயேசுதான். அவரது உடனிருப்பினால் புயலென எழும்பும் ஆர்ப்பாட்டங்களையும், தீய சக்திகளையும் அடக்கி விடுவார். இதனை அவர் எவ்வாறு வென்று எடுத்தார் என்ற செயல் மாதிரியையும் நம் கண்முன் விட்டுச் செல்கின்றார்.

வயிறார உண்டபின் மக்கள் வீடு திரும்பினர். சீடர்கள் அக்கரைக்கு ஓய்வெடுக்கச் செல்கின்றனர். ஆனால் ஆண்டவர் இயேசுவோ தன்னைத் தனிமைப்படுத்தி தந்தையின் உடனிருப்பில் இனிமை காண்கின்றார். இரவு முழுவதும் செபிக்கின்றார். தன்னை வலுப்படுத்துகின்றார். முட்டிப் போட்டு செபித்ததால் எட்டிப்பார்த்த துன்பங்கள் எல்லாம் விரட்டியடிக்கப்படுகின்றன. கலங்கி நின்ற சீடர்களின் கண்முன்னே காலடியை உறுதியாக எடுத்து வைத்து சீடர்களை கரை சேர்க்கின்றார். அவரே அவர்கள் கரை சேரும் வரை முன் சென்று வழிகாட்டுகின்றார். நானே வழி என்னைப் பின்பற்றுங்கள் என்று சொல்லாமல் செய்து காட்டிவிட்டார்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 33: 1 – 2, 4 – 5, 18 – 19
”நீதியுள்ளோர் ஆண்டவரைப்புகழ்வது பொருத்தமானதே”

இந்த உலகத்தில் நீதிமான்களை எல்லாருமே புறந்தள்ளிவிடுகிறார்கள். அவர்களை எள்ளி நகையாடுகிறார்கள். அவர்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அவர்கள் அனைவராலும் ஏளனமாகப் பார்க்கப்படுகிறார்கள். எதற்காக? ஏன் அவர்கள் இப்படிப் பார்க்கப்படுகிறார்கள்? அவர்கள் நீதியோடு, நேர்மையோடு வாழ வேண்டும் என்பது, இந்த உலகத்தின் பார்வையில் வாழத்தெரியாத மனிதர்களாக அவர்களை அடையாளம் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அவர்கள் நேர்மையாக வாழ்ந்ததால், அவர்கள் பல துன்பங்களையும் சந்திக்க நேரிடுகிறது. அந்த துன்பங்களைப் பார்க்கிறபோது, நாம் ஏன் நேர்மையோடு வாழ வேண்டும் என்கிற எண்ணம் நமக்குள்ளாக வருகிறது.

ஆனால், இதுதான் சரியான வாழ்க்கை, இப்படி வாழ்வது தான் இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை என்பதை, திருப்பாடல் ஆசிரியர் வலியுறுத்திச் சொல்கிறார். அது கடினமான வாழ்க்கை தான். இந்த உலகத்தின் பார்வையில் பரிகாசம் செய்யப்படக்கூடிய வாழ்க்கை தான். ஆனாலும், அந்த வாழ்க்கையின் நிறைவை, அதை வாழ்பவர்கள் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். அப்படிப்பட்ட வாழ்வை வாழுகிறவர்கள் மட்டுமே, அதனுடைய முழுமையான அர்த்தத்தை உணர்ந்து கொள்ள முடியும். மற்றவர்கள் பார்வையில் அது ஏளனமாகத் தெரியலாம். ஆனால், கடவுளின் பார்வையில் அதுதான், விலைமதிக்க முடியாத வாழ்க்கை. கடவுளின் அன்பையும், அருளையும் முழுமையாகப் பெறக்கூடிய வாழ்க்கை. அந்த வாழ்க்கையை நாம் எப்போதும் வாழ்வதற்கு உறுதி எடுக்க வேண்டும்.

கடவுளின் அன்பை நாம் உணர வேண்டுமென்றால், அவருக்குரிய வாழ்க்கையை நாம் வாழ வேண்டும். அவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிற வாழ்வை நாம் வாழ்கிறபோது மட்டும் தான், அந்த வாழ்க்கையின் இனிமையினையும், கடவுளின் பேரன்பையும் முழுமையாக நம்மால் உணர முடியும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------

இயேசுவின் உடனிருப்பும், உதவியும்

உடனிருந்து உதவுகிறவர் தான் நாம் வழிபடக்கூடிய கடவுள். நமது துன்ப நேரத்தில் நம்மை, நிர்கதியாக விட்டுவிட்டு ஓடக்கூடியவர் அல்ல என்பதை, ஆணித்தரமாக எடுத்துரைப்பதுதான், இன்றைக்கு நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி. சீடர்கள் படகில் இருக்கிறார்கள். இயேசு அவர்களோடு இல்லை. அலை சற்று கோரமாக எழ ஆரம்பிக்கிறது. கடல் தான் அவர்கள் வாழ்வு என்றாலும், அந்த அலையைப் பார்த்தவுடன் பயப்பட ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்குள்ளாக பயம் எழ ஆரம்பித்தவுடன் இயேசு அங்கே வருகிறார். அதுதான் இயேசு.

தன்னுடைய சீடர்களை, தான் அன்பு செய்கிறவர்களை இயேசு எப்போதும் தனியே விடுவது கிடையாது. அவர் எப்போதும் உடனிருக்கிறார். நாம் எப்போதுமே தனியே விடப்படுவது இல்லை. இயேசு நம்மோடு இருக்கிறார். நம் அருகிலேயே இருக்கிறார். நமது வாழ்வில் சவால்கள், துன்பங்கள், துயரங்கள் வருகிறபோது, அவற்றை நாம் பயத்தோடு எதிர்கொள்கிறபோது, நமது விடிவுக்கு, மீட்பிற்கு, தீர்விற்கு இயேசு வருகிறார். நம்மை நிரந்தரமாக, நமது பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கிறார். அதுதான் இயேசு. நமக்காக, நமது நலனுக்காக, நாம் இந்த வாழ்வை நிறைவோடு வாழ வேண்டும் என்பதற்காக அவர் இருக்கிறார்.

வாழ்வில் போராட்டங்களைச் சந்திக்கிறபோது, என் இயேசு என்னோடு இருக்கிறார் என்று எண்ணுவோம். அவர் நம்மை வழிநடத்துவார் என்று விசுவசிப்போம். அவர் நமக்கு விடுதலையைத் தருவார் என்று நம்புவோம். நம்புங்கள். செபியுங்கள். நல்லதே நடக்கும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

யோவானின் அனுபவத்தில் இயேசு

யோவான் நற்செய்தியாளர் இயேசு கடல் மீது நடந்து வருகிற நிகழ்வை அருமையாக விவரிக்கிறார். அவருடைய பார்வையில் இந்த நிகழ்ச்சியோடு கடவுள் அனுபவத்தை நாம் ஒப்பிட்டுப்பார்க்கலாம். யோவானுடைய பார்வையில் இயேசு சீடர்களைப்பார்த்துக்கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு முறையும் சீடர்கள் துடுப்பு வலிக்கும்போது, அவர்களை அவர் பார்க்கிறார். கடல் அலை சீறி எழுந்தாலும், அந்த அலைகளுக்கு எதிராக சீடர்கள் கடுமையாகப் போராடினாலும், அவர்கள் நிச்சயம் அலைகளுக்கு எதிரானப்போராட்டத்தில் வெற்றிபெற முடியும் என்றாலும், இயேசுவின் பார்வை அவர்கள் மீது இருக்கிறது. அது அவரது அன்பை எடுத்துக்காட்டுகிறது. நாம் துன்பங்களை எதிர்த்து நிற்கிறபோது, கடவுளின் பார்வை நம்மை விட்டு விலகுவதில்லை. நம்மை நோக்கிய அவரது பார்வையை விலக்குவதில்லை.

யோவானின் பார்வையில் இயேசு அவர்களை நோக்கி வருகிறார். சீடர்கள் எவ்வளவுதான் கடுமையான அலைகளுக்கு எதிராகப்போராடினாலும், அவர்களுக்கு உற்சாகம் தரக்கூடிய வகையில், சோர்ந்து போகாமல் உளரீதியாக பலம் தருகின்ற வகையில், இயேவின் வருகை அமைந்திருந்தது. இயேசு வெறுமனே தூரத்தில் இருந்து மட்டும் அவர்களைப்பார்க்கவில்லை. அவர்களுடன் இருப்பவராக வருகிறார். சீடர்களுக்குத்தேவையான வல்லமையோடு, அவர் வருகிறார். அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதற்காக வருகிறார். நமது வாழ்விலும் இயேசு நாம் வாழ்க்கைத்துன்பங்களை எதிர்த்துப்போராடுகிறபோது, அவர் நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் உடனிருக்கிறவராக இருக்கிறார்.

யோவானின் பார்வையில் இயேசுவின் பிரசன்னம் அவர்கள் சேரவேண்டிய இலக்கை அடைய வைக்கிறது. இயேசு அருகில் வந்தவுடன், அவர்கள் எங்கே செல்ல வேண்டுமோ, அங்கே இயல்பாகவே செல்கிறார்கள். இயேசுவின் பிரசன்னம் நாம் அடைய வேண்டிய விண்ணக வாழ்வை நமக்கு நிச்சயம் பெற்றுத்தரும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

தந்தையைப் போல மகன் !

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே நிலவும் உறவை ஆண்டவர் இயேசு தெளிவாக எடுத்துரைக்கின்றார். அந்த உறவின் கூறுகளாகப் பின்வருவனவற்றைக் காண்கிறோம்:

1. "என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார், நானும் செயலாற்றுகிறேன்" என்னும் வாக்கிலிருந்து ஓய்வுநாளிலும் இறைவன் செயல்படுவதைச் சுட்டிக்காட்டி, அவ்வாறே ஓய்வுநாளிலும் தாம் மீட்பின் பணியைச் செய்வதாக இயேசு வாக்குமூலம் தருகிறார். நாமும் நற்பணியாற்றுவதிலும், நேர்மையானவற்றைச் செய்வதிலும், ஓய்வின்றி உழைக்க வேண்டும்.

2. "தந்தை செய்பவற்றையே மகனும் செய்கிறார்". தந்தை இறைவன் தமது பேரன்பை, பேரிரக்கத்தை மீட்புச் செயல்களாக வெளிப்படுத்துகிறார். அவ்வாறே, இயேசுவும் பாவங்களை மன்னிப்பது, நோயிலிருந்து நலமளிப்பது போன்ற செயல்களை அல்லும் பகலும் ஆற்றிவந்தார். நாமும் இத்தகைய பணிகளை, மாந்தரை இறைவனுடனும், மனிதருடனும் ஒப்புரவாக்கும் பணியை எப்போதும் ஆற்றவேண்டும்.

3. "தந்தை தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பதுபோல, மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்". இயேசுவிடம் வந்தவர்கள் சாவிலிருந்து விடுதலைபெற்று, புதுவாழ்வைப் பெற்றுக்கொண்டனர். நாமும் வாழ்வின் வழிகாட்டிகளாகத் திகழவேண்டும்.

4. "தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது, ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்" என்னும் சொற்களிலிருந்து, இயேசுவின் தீர்ப்பு நீதியானது என்பதை உணர்கிறோம். நாமும் நியாய உணர்வு மிக்கவர்களாய், நன்மை, எது தீமை என்பதை அறிந்தவர்களாய், ஞானம் நிறைந்தவர்களாய் வாழ இறையருள் வேண்டுவோம்.

மன்றாடுவோம்: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது சீடர்கள் அனைவருக்கும் நீர் வழங்கிய தூய ஆவி என்னும் கொடையை எங்களுக்கும் தந்து, நாங்கள் விடுதலை அனுபவம் பெற அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

படகில் ஏற்றிக்கொள்ள !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு கடல்மீது நடந்து வந்ததையும், #8220;நான்தான் அஞ்சாதீர்கள்” என்று வலிமைப்படுத்தியதையும் கண்ட சீடர்கள் துணிவுபெற்றனர். எனவே,”அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள்” என்று வாசிக்கிறோம். என்னே ஓர் எண்ணம்! ஆண்டவரைத் தங்கள் படகில் ஏற்றிக்கொள்வதன் மூலம் இரண்டு நன்மைகள் அவர்களுக்குக் கிடைக்கும். 1. பாதுகாப்பு. இயேசுவே அவர்களோடு பயணம் செய்வதால் புயற்காற்றுக்கோ, வேறு எந்தத் தீமைகளுக்கோ அஞ்ச வேண்டியதில்லை. 2. அருகாமை. இயேசுவோடு இருக்க வேண்டும் என்னும் எண்ணம் ஈடேறும். அவர்கள் பயணம் செய்வதன் நோக்கமே இயேசுவோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே! அந்த எண்ணம் ஈடேறும்.

நம்முடைய வாழ்க்கை என்னும் படகிலும் ஆண்டவர் இயேசுவை நாம் ஏற்றிக்கொள்ள விரும்புகிறோமா என்று நம்மையே இன்று கேட்டுக்கொள்வோம். நமது படகில் இயேசு இருந்தால் நமக்குப் பாதுகாப்பும் கிடைக்கும், இறைவனின் உடனிருப்பு என்னும் ஆன்மீக நிறைவும் கிடைக்கும். சீடர்களைப் போல நாமும் அந்த விருப்பம் கொள்வோமாக!

மன்றாடுவோம்: உயிர்த்த மகிமையின் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்க்கை என்னும் படகில் நீர் ஏறி எங்களோடு பயணம் செய்யவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வாரும், ஆண்டவரே வாரும். எங்களோடு பயணம் செய்யும்.  உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

----------------------

 

வயிறார உண்டனர் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இறைவனின் பண்புகளுள் ஒன்று அவர் நிறைவானவர், நிறைவளிப்பவர். விவிலியத்தின் பல பக்கங்கள் இந்த உண்மையை எடுத்துரைக்கின்றன. இன்றைய நற்செய்தி வாசகமும் இதைத் தெளிவாகச் சொல்கிறது. பாலை நிலத்தில் பசியோடு இருந்த மக்களுக்கு இயேசு அற்புதமான வகையில் உணவளிக்கிறார். எப்படிப்பட்ட முறையில்? அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டனர் என்று வாசிக்கிறோம்.

இறைவனின் ஆசிகள் எப்போதும் அப்படித்தான். அமுக்கிக் குலுக்கி சரிந்து விழும்படியாக நம் மடிமீது போடுபவர் (லுhக் 6;38) இறைவன். நாம வேண்டுவதற்கும், விரும்புவதற்கும் மேலாகவே நம்மை ஆசிர்வதிப்பவர் நம் இறைவன் (எபே 3;20). அவர் நிறைவான, முழமையான அமைதியை, ஆசிர்வாதத்தை நமக்குத் தர விரும்புகிறார். நாம் நிறைவான வாழ்வு வாழ நம்மை அழைக்கிறார்.

எனவே, அழிந்துபோகும் உணவுக்காக உழைக்காமல், அழியாத வாழ்வு தரும், நிறைவான உணவாம் இயேசுவுக்காக நாம் ஏங்குவோமா!

மன்றாடுவோம்; நிறைவின் உருவே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். அன்று பாலை நிலத்தில் உமது வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு நீர் வயிறார உணவளித்தீரே. வேண்டிய மட்டும் அளித்தீரே. உமக்கு நன்றி. எனது வாழ்விலும் நாம் வேண்டியதற்கும், நினைத்ததற்கம் மேலாகவே என்னை ஆசிர்வதித்திருக்கிறீர். உயர்த்தியிருக்கிறீர். உமக்கு நன்றி. நிறைவற்ற பொருள்கள்மீது பற்று கொள்ளாமல், நிறைவான இன்பமாம் உம்மையே பற்றிக்கொண்டு வாழ எனக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

----------------------

''மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச்
சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்'' (யோவான் 6:13)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- அப்பம் பலுகிய நிகழ்ச்சிக்கும் நற்கருணையை இயேசு ஏற்படுத்தியதற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதையும் யோவான் காட்டுகிறார். ''இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், 'ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்' என்று தம் சீடரிடம் கூறினார்'' (யோவா 6:11-12) என்று யோவான் குறிப்பிடுகிறார். இங்கே இயேசு அப்பத்தை ''எடுத்தார்'' எனவும், கடவுளுக்கு ''நன்றிசெலுத்தினார்'' எனவும், ''பகிர்ந்தளித்தார்'' எனவும், மக்களுக்கு ''வேண்டிய மட்டும் இருந்தது'' எனவும், ''எஞ்சிய துண்டுகள் சேர்த்துவைக்கப்பட்டன'' எனவும் வருகின்ற சொற்றொடர்களை நாம் கருதலாம். இச்சொற்றொடர்கள் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய பிற நற்செய்தி நூல்களில் இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்ச்சி தொடர்பாக வருகின்ற தகவல்களை உள்ளடக்கியவை என நாம் அறிகிறோம்.

-- உணவு உண்ணும்போது தட்டிலோ இலையிலோ மீதி வைக்கக் கூடாது எனவும் உணவை வீணடிக்கக் கூடாது எனவும் குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்றுக்கொடுப்பர். ஆனால் இன்றும் பல இடங்களில் பலர் உணவைத் தூர எறிந்து வீணடிப்பது வழக்கமாயுள்ளது. இயேசு ஐயாயிரத்திற்கு மேலான மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவளித்தபின் ''பன்னிரு கூடை'' நிறைய அப்பம் எஞ்சியது. பன்னிரண்டு என்னும் எண் பன்னிரு குலங்களை உள்ளடக்கிய இஸ்ரயேல் மக்களைக் குறித்ததால் இங்கே எல்லா மக்களுக்கும் பயன்படும் வண்ணம் உணவு சேமிக்கப்படுவதை யோவான் குறிப்பிடுகிறார். எஞ்சியிருந்த அப்பம் ஏழைகளுக்கு உணவாக மாறும். நாம் உண்டோம், நிறைவடைந்தோம் என்றிராமல் பிறருடைய பசியை ஆற்றுவதற்கு நாம் அப்பத்தைச் சேர்க்க வேண்டும். கடவுள் தருகின்ற எந்தக் கொடையும் மக்களின் பயன்பாட்டுக்கு உரியதே ஒழிய வீணடிக்கப்படுவதற்கு அல்ல. இயேசு தம்மையே உணவாகத் தருகின்ற நற்கருணையும் இந்த உலகத்தின் பசியைப் போக்க நமக்குத் தூண்டுதலாக அமைய வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, மக்களின் பசியை ஆற்றிட நீர் வழங்கும் கொடைகளை நாங்கள் வீணடிக்காமல் பயன்படுத்த அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார்.
அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது'' (யோவான் 6:11)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளர்களும் இயேசு புரிந்த பல அருஞ்செயல்களைப் பதிவுசெய்துள்ளனர். ஒரு நற்செய்தியாளர் குறிப்பிடும் அருஞ்செயல் பிற நற்செய்தியாளர்களால் குறிப்பிடப்படாமல் இருக்கலாம். ஆனால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அற்புதமான விதத்தில் இயேசு உணவளித்தார் என்னும் அருஞ்செயல் மட்டுமே நான்கு நற்செய்தியாளர்களாலும் தவறாமல் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது (மத் 14:13-21; 15:32-38; மாற் 6:31-44; 8:1-10; லூக் 9:10-17; யோவா 6:1-15). இயேசு அப்பங்களை ''எடுத்தார்''; ''கடவுளுக்கு நன்றி செலுத்தினார்''; ''மக்களுக்குக் கொடுத்தார்'' என இந்நிகழ்ச்சியை யோவான் விவரிப்பது அன்றைய கிறிஸ்தவ சமூகத்தில் நிகழ்ந்த ''நற்கருணைக் கொண்டாட்டம்'' நிகழ்ந்த முறையை அழகாக எடுத்துக்கூறுகிறது.

-- இயேசு புரிந்த அருஞ்செயலைக் கண்ட மக்கள் இயேசுவே கடவுளால் தரப்பட்ட உணவு என்பதைக் கண்டுகொள்கிறார்கள். எனவே, அவர்கள் ''உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் இவரே'' என அறிக்கையிடுகிறார்கள் (காண்க: யோவா 6:14). இயேசு மக்களுக்கு உணவளித்தது அவர் தம்மையே நமக்கு உணவாக அளித்ததற்கு அடையாளம் ஆயிற்று. இன்று நாம் கொண்டாடுகின்ற நற்கருணை இவ்வுலகில் பசியால் வாடுகின்ற மக்களுக்கு உணவளிக்க வேண்டிய கடமையை நமக்கு உணர்த்துகிறது. இவ்வாறு கடவுள் நமக்கு வெளிப்படுத்துகின்ற அன்பு நம் வாழ்வில் பிறரன்பாகப் பரிணமிக்க வேண்டும் என்பதும் பெறப்படுகிறது. நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது ''வார்த்தை வழிபாடு'' என்னும் பகுதியும் ''திருவிருந்து வழிபாடு'' என்னும் பகுதியும் உண்டு. இந்த இரண்டு பகுதிகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இயேசு கடவுளின் ''வார்த்தை''யாக நம்மிடையே வந்தார். அவரே கடவுளின் ''வார்த்தை''யை நமக்கு அறிவித்தார். அதே நேரத்தில், இயேசு தம்மையே நமக்கு ''உணவாக'' அளித்தார். ஆக, இயேசுவின் வார்த்தையும் அவருடைய உடலும் நமக்கு உணவாக உள்ளன. இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோர் அவரிடமிருந்து வாழ்வு பெறுவர்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனை எங்களுக்கு உணவாக அளித்ததற்கு நன்றி!

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"200 தெனாரியத்திற்கு வாங்கினாலும் சிறு துண்டும் கிடைக்காதே"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

பிரச்சனைகளுக்குத் தீர்வு பணத்தால் கிடைத்து விடுவதல்ல. அல்லது அறிவுத் திறமையால் சாதித்துவிடுவதும் அல்ல. பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் பணத்தை வைத்து தீர்க்கப் பார்க்கிறோம். பத்துப்பேரை வைத்து சாதிக்கலாம் என நினைக்கிறோம். ஆண்கள் மட்டும் ஏறக்குரைய 5000 பேர்,பெண்கள் குழந்தைள் வேறு. இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு, அதுவும் மூன்று நாட்கள் பசியாக இருக்கும் கூட்டத்திற்கு ஒரு வனாந்தரத்தில், அக்கம் பக்கம் ஆள் அரவம் இல்லாத இடத்தில்,உணவு கொடுக்க வேண்டும். இது பெரிய பிரச்சனை.

பணத்தால் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முற்பட்டால்,திருத்தூதர் பிலிப்பு சொன்னதுபோல இரு நூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காது. இரண்டாவதாக, பணத்தை வைத்து அல்லது பணத்தைக் கொடுத்து, சோறு போட்டு, முட்டை கொடுத்து, சைக்கிள், தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்து செய்யும் முயற்சிகள் எல்லாம் பிரச்சனைகளுக்குத் தீர்வு தருவதல்ல. பிரச்சனைகளைப் பின் விழைவுகளோடு பெரிதாக்குபவை.

ஆகவே திருத்தூதர் அந்திரேயா காட்டிய வழியே சரியானது. "இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வார்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன" என அடையாளம் காட்டி, அனைவரின் பங்களிப்புக்கும் அடித்தளமிடுகிறார். கடவுளுக்கு நன்றி செலுத்தியதன் வழியாக ஆன்மீகத்தை கூட்டத்துள் ஏற்படுத்தி, அனைவரையும் தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளும் பண்பாளர்களாக்குகிறார். பசி பிரச்சனை பறந்தோடுகிறது. ஆகவே ஆன்மீகத்தை அனைத்துப் பிரச்சனையினுள்ளும் அனுமதிப்போம். தீர்வு காண்போம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்