முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-15

அந்நாள்களில் ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தை களையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை. பின்பு அவர்கள், ``இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்'' என்று கூறச் சிலரைத் தூண்டிவிட்டனர். அவ்வாறே அவர்கள் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல் அறிஞர்களையும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தார்கள். உடனே அவர்கள் எழுந்துவந்து அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்துக்கு இழுத்துச் சென்றார்கள்; மேலும் பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்கள், ``இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசிவருகிறான்'' என்று கூறினார்கள். மேலும் அவர்கள், ``நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார் என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை மாற்றிவிடுவார் என்றும் இவன் கூறக் கேட்டோம்'' என்றார்கள். தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப்பார்த்தபோது அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 119: 23-24. 26-27. 29-30
பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.

23 தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும்,
உம் ஊழியன் உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே சிந்திக்கின்றேன்.
24 ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன;
அவையே எனக்கு அறிவுரையாளர். -பல்லவி

26 என் வழிமுறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்;
நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்;
உம் விதிமுறைகளை எனக்குக் கற்றுத்தாரும்.
27 உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்;
உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். -பல்லவி

29 பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்;
உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும்.
30 உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்;
உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.

யோவான் 6:22-29

பாஸ்கா காலம்-3 வாரம் திங்கள்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 22-29

இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த பின், சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறுநாளும் மக்கள் கூட்டமாய் நின்றுகொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத் தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள். அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில், திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, ``ரபி, எப்போது இங்கு வந்தீர்?'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, ``நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்'' என்றார். அவர்கள் அவரை நோக்கி, ``எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ``கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 6: 22 - 29
உழைப்பாளியாவோம்

வாழ்க்கைப் பயணத்தில் நாம் சாதனை சிகரத்தை அடைய நமக்கு வேண்டிய மூலதனம் உழைப்பு. தன் 20 ஆண்டு கண்டுபிடிப்புகளை அவரது அன்பு நாய் நெருப்புக்கு இரையாக்கிய போது வருந்தவில்லை ஐசக் நியூட்டன். மேலும் உழைப்பை கொடுத்து மாற்றியமைக்கின்றார். வழக்கறிஞரான தி.வே.சுந்தரம் மதுரையில் போக்குவரத்து கழகம் துவங்கி டிவிஎஸ் என்ற குழுமத்தை உண்டாக்கியது அவரது உழைப்பு. செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனான ஆபிரகாம் லிங்கன் அமொிக்க அதிபரானது அவரது உழைப்பு. இவ்வாறு பல மனிதர்கள் இந்த சமுதாயத்திலே உழைப்பால் முன்வந்திருக்கின்றார்கள்.

இயேசுவின் உழைப்பு அனுபவம் சற்று வித்தியாசமான அனுபவத்தை கற்றுக்கொடுக்கின்றது. ஏனென்றால் இயேசுவை மக்கள் 3 நோக்கத்திற்காக தேடினார்கள். இவர் நம்முடைய வாழ்வில் அற்புதங்களை செய்வார், உணவு தருவார், உரோமை அரசை எதிர்த்து போராடுவார். இத்தகைய நோக்கத்திற்காக தான் மக்கள் இயேசுவை தேடினார்கள். வயிராற உண்ட மூன்றாவது நாளிலே மக்கள் இயேசுவை தேடி வருகின்றார்கள். அப்பொழுது தான் இயேசு அழியா உணவுக்காக உழையுங்கள் என்று கூறுகின்றார். அதாவது (அன்பு, இரக்கம், கருணை) இவைகள் தான் அழியா உணவாக இயேசு கற்றுக் கொடுக்கின்றார். இதனைத் தான் மறைமுகமாக உங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று தன் சீடர்களை பார்த்தும் மக்களைப் பார்த்தும் கூறுகின்றார்.

நாம் எத்தகைய உணவிற்காக உழைக்கின்றோம்? சமுதாய உணவிற்காகவா? அல்லது விண்ணக உணவிற்காகவா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

அற்ப அற்புதங்களா? (யோவான் 6 : 22-29)

உணவினை உண்ட மக்கள் மறுநாளும் இயேசுவுக்காகக் காத்திருக்கின்றனர். அதுமட்டுமன்றி, இயேசுவைத் தேடி படகுகளில் ஏறி கப்பர்நகூமுக்கு வருகின்றனர். ஆனால் இயேசு இதனை விரும்பவில்லை, கண்டிக்கின்றார். காரணம் மக்கள் இயேசுவைத் தேடியது அவருக்காக அன்று, தங்களது வயிறுகளை நிரப்பும் அப்பத்திற்காகவே. உண்மையான வாஞ்சை என்பது அவர்மேல் இருந்ததைக் காட்டிலும், அவர் செய்த புதுமைகள் மேலும் அற்புதங்கள் மேலும் தான் இருந்தன. இந்தத் தேடலை இயேசுவே மிக அற்பமாக நினைக்கின்றார். காரணம் அவர்கள் நிலையற்ற ஒன்றிற்காக நிலையான ஆண்டவர் இயேசுவை விட்டுவிட்டனர்.

இன்றும் இது தொடர்கின்றதா என்றால் நம்மால் உறுதியாகக் கூற முடியும் ‘ஆம்’ என்று. காரணம் இன்றும் நம்மில் பலர் ஆண்டவரைத் தேடுவது அப்பம் என்ற அற்புதத்திற்காகவே. அவரைவிட அற்புதங்களும் புதுமைகளுமே இன்று நம்மில் பலருக்கு முக்கியமான தேவையாகத் தெரிகின்றது. இன்று, பலபேர் பிற சபைகளுக்கு, எந்தவொரு அடிப்படைத் தகுதியுமில்லாத போதகர்களிடம் செல்வது இப்படிப்பட்ட அற்ப அற்புதங்களுக்காகவே. ஆண்டவரைத் தேடுவதைக் காட்டிலும் அற்புதங்களுக்காக தினம் ஒரு சபையைத் தேடி நாம் அலைகிறோமா? என சிந்திப்போம்.

இயேசு இந்தக் கேள்வியைக் கேட்பது நற்கருணை இறையியலின் மையமான வினா. சாதாரண அப்பத்தில் இயேசுவினைப் பார்ப்பதைக் காட்டிலும் மிகப்பெரிய அற்புதமோ அதிசயமோ நம்முடைய வாழ்வில் நடைபெறப் போவதில்லை. அப்படி நடந்தாலும் அது நமக்குத் தேவையில்லை என்ற வைராக்கியத்தோடு ஆண்டவரை மட்டும் தேடுபவர்களாக நிலையான, அவர் ஏற்படுத்திய திரு அவையில் அவரோடு இருப்போம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 119: 23 – 24, 26 – 27, 29 – 30
”ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்”

இறைவன் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களை தான் வாக்களித்த நாட்டிற்கு வழிநடத்தினார் என்பதை, மீட்பின் வரலாறு நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. இந்த மீட்பின் வரலாற்றில் பல இலட்சக்கணக்கான மக்களை வழிநடத்துவது என்பது எளிதான காரியமல்ல. அவர்களைக் கட்டுக்கோப்பாக வன்முறையில்லாமல், பாதுகாப்பாக வழிநடத்த வேண்டுமென்றால், இறைவனின் துணையும், அவர் கொடுத்திருந்த வழிமுறைகளையும் கடைப்பிடிப்பது அவசியமாகிறது. இத்தகைய எண்ணத்தை வலியுறுத்தக்கூடிய வகையில் அமைந்ததுதான், இந்த திருப்பாடல்.

கடவுளின் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் வலியுறுத்துகிறார். கடவுளின் சட்டப்படி நாம் நடக்கிறபோது, நமது வாழ்க்கையில் நாம் இடறி விழமாட்டோம். கடவுளின் சட்டங்களைக் கடைப்பிடிப்பது எளிதானது அல்ல. ஆனால், நமது வாழ்க்கையில், நாம் துணிவோடு நடப்பதற்கு, அது வழிசெய்யக்கூடியதாக இருக்கிறது. நம்மை அரவணைத்துச்செல்லக்கூடியதாக இருக்கிறது. சிதறிக்கிடந்த இஸ்ரயேல் மக்களை ஒன்றுசேர்ப்பதற்கு உதவியாக இருந்தது கடவுளின் சட்டங்கள் தான். அதனை நமது வாழ்க்கையில் கடைப்பிடித்தால், நிச்சயம் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வார்கள்.

நமது வாழ்க்கையில் நாம் எப்போதும், கடவுள் காட்டுகிற வழியில் வாழ அழைக்கப்படுகிறோம். கடவுளின் வழியில் நாம் நடக்கிறபோது, நாம் தவறிச்சென்று விடாமல் இருக்க அவர் நமக்கு உதவி செய்வார். அவருடைய விழுமியங்களின்படி வாழ, நமக்கு உறுதுணையாக இருப்பார்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

நிம்மதி தருபவர் இயேசு கிறிஸ்து

தங்கள் வயிற்றுக்காக உணவைத் தேடி அலைகிற மக்கள்கூட்டத்தைப் பார்த்து, இயேசு பரிதாபப்படுகிறார். அவர்கள் பசியால் இருக்கிறார்கள் என்பதற்காக அல்ல, மாறாக, தன்னுடைய புதுமையின் பொருளை அறிந்து கொள்ளாமல், வெறுமனே பசியாற்றுவதற்காக தன்னைத் தேடி வருகிறார்களே? என்கிற வேதனைதான். இயேசுவின் நோக்கம் உடற்பசியை ஆற்றுவது மட்டுமல்ல, மக்களின் ஆன்மீகப்பசியை போக்க வேண்டும் என்பதுதான். அந்த ஆன்மீகப்பசியை அவர்கள் இயேசுவை நம்புவதன் மூலமாக மட்டும் தான், தணிக்க முடியும். அதனை அறிந்துகொள்ளாம் மக்கள் இருக்கிறார்களே? என்பதுதான் இயேசுவின் வேதனைக்கான காரணம்.

ஆன்மீகப்பசியைப் போக்கும் அருமருந்து இயேசு. ஏன்? கடவுள், இயேசுவில் தான், தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார். முற்காலத்தில் முத்திரை என்பது அதிக சக்தி வாய்ந்தது. அது கையொப்பம் போன்றது அல்ல. அதனைவிட வலிமை வாய்ந்தது. அரசியல் உலகிலும், வியாபார உடன்பாட்டிலும் முத்திரை தான், ஒரு ஆவணத்தை சட்டப்பூர்வமாக்கியது. இந்த முத்திரை தான், உயிலை அதிகாரப்பூர்வமாக்கியது. அதுபோல இயேசு கடவுளின் அன்பை வெளிப்படுத்தக்கூடிய அதிகாரப்பூர்வமான முத்திரையாக இருக்கிறார். இதுவரை எத்தனையோ பேர் கடவுளின் அன்பைப்பற்றி எடுத்துரைத்திருக்கலாம். ஆனால், இயேசு தான் உண்மையிலேயே கடவுளின் அன்பை நமக்கு உறுதியான வகையில் எடுத்துரைத்தவர்.

வேகமாகச் செல்லும் இந்த உலகத்தில், மனிதன் நிம்மதியின்றி அலைந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். நமக்கு நிம்மதியைத்தருவது ஆன்மீகம் தான். அந்த ஆன்மீகத்தின் நிறைவு நம் ஆண்டவர், நமக்கு மீட்பைப் பெற்றுத்தந்த இயேசு கிறிஸ்து. அவரிடத்தில் முழுமையாக நம்மையே கையளிப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசு காட்டுகின்ற கடவுள்

”எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று யூதர்கள் இயேசுவிடத்திலே கேட்டார்கள். யூதர்கள் இப்படி கேட்டதற்கு பிண்ணனி இல்லாமல் இல்லை. யூதர்களைப்பொறுத்தவரையில் இந்த உலகத்திலே மூன்று வகையான மக்கள் இருக்கிறார்கள். நல்லவர்கள், கெட்டவர்கள், இந்த இரண்டிற்கும் இடைப்பட்டவர்கள். அதாவது நல்லதும், கெட்டதும் செய்கிறவர்கள். இவர்கள் நன்மை அதிகமாகச்செய்தால், நல்லவர்கள் குழுவில் சேர்ந்துவிடுவார்கள். இயேசுவிடத்திலே மேற்சொன்ன கேள்வியைக்கேட்டபோது, அவர்கள் நல்லது செய்வதற்கான வழிமுறைகளை இயேசு சொல்வார் என்றுதான் எதிர்பார்த்தனர்.

ஆனால் இயேசு அவர்கள் எதிர்பாராத பதிலைச்சொல்கிறார். ”கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்” என்பதுதான் அந்தப்பதில். அதாவது நம்பிக்கை. நம்பிக்கை என்றால் என்ன? நம்பிக்கை என்பது கடவுள் உடனான ஓர் உறவுநிலை. நாம் கடவுளோடு கொள்ளக்கூடிய நட்புறவு. கடவுளைப்பார்த்து நாம் பயப்படத்தேவையில்லை. கடவுளைப்பார்த்து நாம் ஓடி ஒளியத்தேவையில்லை. கடவுளை நமது தந்தையாக, நல்ல நண்பராக எண்ணுவதுதான் நம்பிக்கை. இயேசுதான் கடவுளை நமக்குக்காட்டுகிறவராக, காட்டியவராக இருக்கிறார். எனவே, இயேசுவில் நம்பிக்கை வைப்பது, கடவுளை நாம் நெருங்கிவருவதற்கு உதவியாக இருக்கும்.

கடவுள் எப்படிப்பட்டவர்? என்பதை இயேசு நமக்குக்கற்றுத்தந்திருக்கிறார். காட்டியிருக்கிறார். இயேசு நமக்குக்காட்டியிருக்கிற கடவுளிடத்தில் முழுமையான அன்பு வைப்போம். அவரில் நாம் நம்பிக்கை கொள்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

ஆண்டவரைத்தேடுவோம்

இன்றைய நற்செய்தியில் மக்கள் கூட்டம் இயேசுவைத் தேடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். முந்தையநாளில் தான் இயேசு அப்பம் பலுகச்செய்து மக்களுக்குக்கொடுத்திருக்கிறார். இயேசு அப்பம் பலுகச்செய்த அந்த இடத்திற்கு மக்கள் கூட்டமாக வந்திருக்கின்றனர். இயேசு அங்கே இல்லை என்பது தெரிகிறது. இருந்தாலும், எப்படியாவது இயேசுவைப்பார்த்து விட வேண்டும் என்கிற ஆர்வம் அவர்களை இயேசுவுக்காகக் காத்திருக்கச்செய்கிறது. இயேசு அவர்களைப்பார்த்தவுடன், ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்கிறார். அவர்கள் தன்னைத்தேடி வந்திருப்பது இறைவார்த்தையின் மீதுள்ள தாகத்தின் பொருட்டு அன்று, மாறாக, வயிராற அப்பங்களை உண்டதால்தான் என்பதைப்புரிந்து கொள்கிறார். அவர்களை நல்வழிப்படுத்துவது தனது கடமை என்று நினைக்கிறார்.

மனிதனை உடல், உள்ளம், ஆன்மா என்று பொதுவாகப்பிரிக்கிறோம். உடலுக்கென்று தேவையிருக்கிறது. உள்ளத்திற்கு தேவையிருக்கிறது, ஆன்மாவிற்கும் தேவையிருக்கிறது. இந்த மூன்று தேவைகளையும் நிறைவேற்றித்தருவது ஒரு மனிதனுடைய கடமையாக இருக்கிறது. அதுவே, நிலையான மகிழ்ச்சியைப்பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கிறது. மனிதர்களாகிய நாம் நம் உடல், உள்ளத் தேவைகளை நிறைவேற்றுவதில் அதிக கவனம் மேற்கொள்கிறோம். அதிக அக்கறை எடுக்கிறோம். ஆனால், நம் ஆன்மாவின் தேவையை அதிகம் கண்டுகொள்வதில்லை. இந்த தவறைத்தான் இயேசுவைத் தேடி வந்த மக்கள் கூட்டம் செய்கிறது. புனித அகுஸ்தினார் சொல்கிறார்: கடவுளோடு என் ஆன்மா இளைப்பாறினாலன்றி, அது இளைப்பாறுதல் அடையாது. ஆன்மாவின் தேவையை நிறைவேற்றுவது என்பது கடவுளை நாடுவதாகும். கடவுளை நாடித்தேடுவதுதான் ஆன்மாவிற்கு மகிழ்ச்சியைத்தருகிறது. இதைப்பெரும்பாலும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. எனவேதான், வாழ்வில் நிறைவற்ற ஒரு தன்மையைப்பார்க்கிறோம்.

சுயநலம் ஒன்றையே தாரக மந்திரமாகக்கொண்டு, நேர்மையற்ற வழியில் சென்றுகொண்டிருக்கும் இந்த நவீன உலகத்தில் ஆன்மாவின் தேவையை அறிந்து, அதை நிறைவேற்றித்தருவது ஒவ்வொரு மனிதனின் கடமையாக இருக்கிறது. வாழ்வை வெறுப்போடும், கோபத்தோடும் அணுகுவதற்கு ஆன்மாவின் மீது அக்கறை கொள்ளாமையும் ஒரு காரணமாகும். எனவே நமது ஆன்மாவிற்கு மகிழ்வு தரும், ஆண்டவரைத்தேடும் உள்ளத்தைப் பெற்றுக்கொள்வதற்கு மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

நிலைவாழ்வு தரும் அழியாத உணவு!

இயேசு சாவுக்கு அஞ்சியவர் அல்லர், இருப்பினும் எப்படிச் சாகலாம் எனத் தற்கொலை உணர்வுடன் வாழ்ந்தவரும் அல்லர்.

எனவேதான், "யூதர்கள் அவரைக் கொல்ல வழி தேடிக்கொண்டிருந்ததால், அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை. அவரது சீடர்கள் எருசலேம் திருவிழாவுக்குச் சென்றபின் இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார் "வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்" என்கிறார் நற்செய்தியாளர்.

ஆனால், அதே வேளையில் எருசலேமில் அவர் ஒளிந்து திரியவுமில்லை. தேவைப்பட்ட நேரங்களில் அவர் பேசினார், போதித்தார். எனவேதான், "இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்? இதோ, இங்கே இவர் வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருக்கிறாரே? யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே!" என மக்கள் பேசிக்கொண்டனர்.

இயேசுவும் கோவிலில் உரத்த குரலில் போதித்தார். ஆனால்,"அவருடைய நேரம் இன்னும் வராததால், யாரும் அவரைத் தொடவில்லை" என்கிறார் நற்செய்தியாளர் யோவான்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இதுதான். இயேசுவைப் போல, நாமும் அச்சமற்றவர்களாய், அதேவேளையில் பாம்புகளைப்போல் முன்மதி கொண்டவர்களாய்ப் பணியாற்ற வேண்டும். தேவையின்றி ஆபத்தான பணிகளில் ஈடுபடவேண்டியதில்லை, அதே வேளையில் நமது உயிரும், வாழ்வும் இறைவன் கையில் இருப்பதனால், அச்சமின்றி பணியாற்றலாம்.

நமக்கென இறைவன் குறித்த நேரம் வரும்வரையில் யாரும் நம்மைத் தொடமுடியாது.

மன்றாடுவோம்: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது சீடர்கள் அனைவருக்கும் நீர் வழங்கிய தூய ஆவி என்னும் கொடையை எங்களுக்கும் தந்து, நாங்கள் விடுதலை அனுபவம் பெற அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 


வயிறார உண்டதால் தேடுகிறீர்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இறைத் தேடலில்கூட ஒரு தர வரிசை இருக்கிறது என இன்றைய வாசகத்தின் மூலம் நாம் தெளிவுபெறுகிறோம். இறைவனைத் தேடுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவை நேர்மையானவையாக, தரமானதாக இருக்கவேண்டும் என்பது இறைவாக்கின் எதிர்பார்ப்பு.

இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த நாளுக்கு மறுநாளும் திரளான மக்கள் அவரைத் தேடிவந்தார்கள். எனவே, இயேசு அவர்களது தேடலின் நோக்கத்தைக் கேள்விக்குட்படுத்துகிறார். #8220;அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார்” என்கிறார் இயேசு.

இன்றும் நற்செய்திக் கூட்டங்களுக்கும், திருவிழாக்களுக்கும் திரளான மக்கள் கூடுவது அற்புதங்கள் நிகழவேண்டும் என்பதற்காகத்தான். இத்தகைய தேடல்களை இறைவன் விரும்பவில்லை. இறைத் திருவுளப்படி வாழ்வதற்கான வழிகளை வேண்டி இறைவனைத் தேடுவதையே அவர் விரும்புகிறார்.

மன்றாடுவோம்: அன்பின் தெய்வமே இறைவா, எங்களது வழிபாடும், வாழ்வும் உமக்கு உகந்ததாக அமையச் செய்தருளும். நாங்கள் அருங்குறிகளையும், அற்புதங்களையும்  விரும்பி உம்மைத் தேடாமல், நிறைவாழ்வின் வழியைத் தேட அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருட்தந்தை குமார்ராஜா

-----------------------

''இயேசு மக்களிடம் , 'அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்.
நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.
அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்' என்றார்'' (யோவான் 6:27)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- யோவான் நற்செய்தி 6ஆம் அதிகாரத்தில் இயேசு தம்மை ''வாழ்வுதரும் உணவு'' (யோவா 6:51) என அறிமுகம் செய்கிறார். இயேசு பல புதுமைகள் செய்தார் என்பதை அறிந்து மக்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள். ஐயாயிரத்திற்கு மேலாகக் கூடிவந்த அந்த மக்கள் கூட்டத்திற்கு இயேசு அதிசயமான விதத்தில் உணவளிக்கிறார். வயிறார உண்ட மக்கள் மீண்டும் உணவை எதிர்பார்த்து இயேசுவைத் தேடிச் செல்கிறார்கள். ''ரபி, எப்போது இங்கு வந்தீர்?'' என்று அவரிடம் கேட்கிறார்கள். அப்போது இயேசு மக்களுக்குத் தாமே உண்மையான உணவு என்றும், அழிந்துபோகின்ற இவ்வுலக உணவைத் தேடாமல் அழியாத உணவை அவர்கள் தேட வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார் (யோவா 6:27). இயேசுவைத் தேடிச் சென்ற மக்கள் அவரைத் தங்கள் அரசராகவும் தலைவராகவும் ஏற்படுத்திவிட்டால் அவர் தங்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வார் என்னும் சுயநல எண்ணத்தோடுதான் அவரை அணுகினார்கள். ஆனால் இயேசுவோ அவர்களுடைய ஆன்ம பசியைப் போக்கும் சக்திவாய்ந்த ஓர் உணவை அவர்களுக்கு வாக்களிக்கின்றார். அந்த உணவு அழிந்துபோகாது; மாறாக மக்களுக்கு நிலைவாழ்வு அளிக்கும் திறன் அதற்கு உண்டு. இயேசு வாக்களித்த உணவு யாது? முதன்முதலில் இயேசுவின் போதனையும் அவர் மக்களுக்கு வழங்கிய வெளிப்பாடும் அவர் தருகின்ற உணவு எனலாம். ''செவிக்குணவில்லாத போழ்து வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்'' என்னும் வள்ளுவர் கூற்றுக்கு இணங்க, இயேசு மக்களுக்கு வழங்கிய உணவு அவர்களுடைய இதய வேட்கையைத் தணிக்கும் தன்மையது.

-- இயேசு வழங்கிய போதனை நமக்கு உணவு என்பது உண்மையென்றாலும் அவரே நமக்கு உணவாய் இருக்கிறார் என்பதையும் நாம் அறிகிறோம். இஸ்ரயேல் மக்கள் கடவுளை வழிபட்டபோது அவருக்குப் பலி செலுத்தினார்கள். தங்கள் அன்றாடத் தேவைக்குப் பயன்படுகின்ற ஆடு போன்ற உயிரினங்களைக் கடவுளுக்கு அளித்தபோது தங்களையே கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள். இயேசு கடவுளின் ஆட்டுக்குட்டியாக வந்தவர். கடவுளுக்குத் தம்மையே சிலுவையில் பலியாக்கினார். அவர் பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்ட அதே சமயத்தில் நமக்கும் உணவாக மாறினார். சிலுவையில் தொங்கிய அவருடைய உடல் நம் ஆன்ம பசியைப் போக்குகின்ற உணவாக மாறியது. இதையே நாம் நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது நினைவுகூர்கிறோம். தம்மையே உணவாகத் தருகின்ற இயேசு நமக்குத் தம் உயிரிலும் வாழ்விலும் பங்களிக்கிறார். அவர் கடவுளோடு என்றென்றும் வாழ்கின்றவர் ஆதலால் அவருடைய வாழ்வில் பங்கேற்கின்ற நாமும் நிலைவாழ்வு பெறுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் ஆன்ம பசியைப் போக்கியருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் போய், எண்சாண் உடம்புக்கு வயிரே பிரதானம் என்ற கேவலமான நிலைமை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. எல்லாம் இந்த வயிற்றுக்குத்தான் இந்த பாடு படவேண்டி இருக்கு என்று சர்வ சாதாரணமாக சொல்லுவதைக் கேட்டிருக்கிறோம். இந்த அளவுக்கு உணவுக்காக மட்டுமே இன்றைய மனிதன் உழைக்கிறான். உறவை வைத்துக்கொள்கிறான். வாழ்கையை அமைத்துக் கொள்கிறான். உண்பதற்காக வாழும் மனிதர் இவர்களால் யாருக்கு என்ன பயன்? இவர்கள் தம் வாழ்வில் சாதிப்பது என்ன? இவர்கள் நடை பிணங்கள். இவர்கள் வாழ்வதும் இறப்பதும் ஒன்றுதான்.

இதற்கு மாறாக, அழியாத உணவுக்காக உழைத்தால் நிலை வாழ்வு நமக்குக் கிடைக்கும். இதனால் பலருக்கும் பயன். நமக்கும் ஒரு நிறைவு. இது ஒரு சாதனை. அப்படியானால், அது என்ன அழியாத உணவு? லூக் 22:15 ல் குறிப்பிடும் பாஸ்கா விருந்தின் அப்பமும் கிண்ணமும், அவை உணர்த்தும் தியாகம்,பாடுகள், மரணம், உயர்ப்பு இவைகளே அந்த அழியாத உணவு. இது ஒரு துன்பக் கிண்ணம்.இந்த துன்பக் கிண்ணத்தில் பருக வேண்டும். இந்த உணவுக்காக உழைக்க வேண்டும். இந்த உணவை உண்ண வேண்டும். இதுவே வாழ்வில் ஒரு நிறைவையும் நிம்மதியையும் உங்களுக்கும் அனைவருக்கும் தரவல்லது.

இந்த உணவை முழுமையாக உண்டவர் உழைத்தவர் இயேசு ஒருவரே. உண்மைக்கும் நீதிக்கும் சான்று பகர்ந்து வாழும் நல்லவர்கள் யாவரும் இயேசுவைப்போல இந்த அழியாத உணவுக்காக உழைப்போர். அவர்கள் இறந்தாலும் வாழ்வர். இறந்தாலும் அவர்கள் பெயர் நிலைத்திருக்கும். ஒரு கப் டிPக்காக, கிடைக்கும் சில லட்சம் ரூயஅp;பாய்க்காக விலை போய்விடாமல், சில வருட பதவிக்காக மானமிழந்து போகாமல் நிலையான நிம்மதியான நிறைவான வாழ்வு தரும் வாழ்க்கை வாழ்வோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்