முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 7: 51 - 8: 1

அந்நாள்களில் ஸ்தேவான் மக்களையும் மூப்பரையும் மறைநூல் அறிஞரையும் நோக்கிக் கூறியது: ``திமிர் பிடித்தவர்களே, இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும் ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே, உங்களுடைய மூதாதையரைப் போல நீங்களும் தூய ஆவியாரை எப்போதும் எதிர்க்கிறீர்கள். எந்த இறைவாக்கினரைத்தான் உங்கள் மூதாதையர் துன்புறுத்தாமல் இருந்தார்கள்? நேர்மையாளருடைய வருகையை முன்னறிவித்தோரையும் அவர்கள் கொலை செய்தார்கள். இப்போது நீங்கள் இயேசுவைக் காட்டிக் கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள். கடவுளின் தூதர்கள் வழியாய்த் தரப்பட்ட திருச்சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் அதனைக் கடைப்பிடிக்கவில்லை.'' இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள். அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்றுநோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, ``இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்'' என்று கூறினார். ஆனால் அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டு, பெருங் கூச்சலிட்டு, ஒருமிக்க அவர் மேல் பாய்ந்தார்கள். நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் ஸ்தேவான்மீது கல்லெறிந்தபோது அவர், ``ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்'' என்று வேண்டிக்கொண்டார். பின்பு முழந்தாள்படியிட்டு, உரத்த குரலில், ``ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதேயும்'' என்று சொல்லி உயிர்விட்டார். ஸ்தேவானைக் கொலை செய்வதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 31: 2-3. 5,6-7. 16,20
பல்லவி: உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.

2உன எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்;
என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும்.
3 ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே;
உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். -பல்லவி

5 உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்;
வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர்.
6 நானோ, பயனற்ற சிலைகளில் பற்றுடையோரை வெறுத்து, ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கின்றேன்.
7 உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன். -பல்லவி

16 உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்;
உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.
20 மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி,
உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்!
நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து
உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

யோவான் 6:30-35

பாஸ்கா காலம்-3 வாரம் செவ்வாய்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-35

அக்காலத்தில் மக்கள் இயேசுவிடம், ``நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! `அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!'' என்றனர். இயேசு அவர்களிடம், ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது'' என்றார். அவர்கள், ``ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்'' என்று கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், ``வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருத்தூதர் பணி 7: 51 – 8: 1
உண்மை – தூய ஆவியாரின் உறைவிடம்

ஸ்தேவான் கடுமையான வார்த்தைகளால் மக்களையும், மூப்பர்களையும், மறைநூல் அறிஞர்களையும் சாடுகிறார். அவருடைய கடுமையான வார்த்தைகளுக்கு காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் அனைவரும் மாசற்ற இயேசுவைக் கொலை செய்துவிட்டார்கள் என்பது தான். ஸ்தேவானின் பார்வையில், இயேசுவைக் கொலை செய்தது தற்செயலாக நடந்திருக்கவில்லை. இவர்கள் அனைவருமே குற்றப்பிண்ணனியோடு தான் இருந்திருக்கிறார்கள். ஏனென்றால், இயேசுவுக்கு முன்பிருந்த இறைவாக்கினர்களைக் கொன்றார்கள். இறைவாக்கினர்க்கெல்லாம் இறைவாக்கினராக இருந்த இயேசுவையும் கொன்றார்கள். ஆக, கொலை செய்வது என்பது அவர்களுக்கு புதிதானது அல்ல. அது மட்டுமல்ல, அத்தோடு அவர்கள் நிற்கப்போவதில்லை. இவற்றை எடுத்துரைக்கின்ற தன்னையும் கொலை செய்ய இருக்கிறார்கள், என்று தன்னுடைய சாவை ஸ்தேவான் முன்னறிவிக்கின்றார். ஸ்தேவானின் போதனையைக் கேட்டவர்களின் பதில்மொழி என்ன? ”அவரைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடித்தார்கள். இவ்வளவுக்கு வஞ்சக எண்ணமும், பகைமை உணர்வும் அவர்களது உள்ளத்தில் எழக்காரணம் என்ன?

தூய ஆவி இல்லாத நிலை தான், அவர்களின் பழிவாங்கும் எண்ணத்திற்கு அடிப்படை காரணம். மனிதன் இயல்பாகவே தூய ஆவியைப் பெற்றிருக்கிறான். ஆனால், அந்த தூய ஆவி இல்லாத நிலையை அவனே ஏற்படுத்திவிடுகிறான். இந்த வாசகத்தில், அனைவருமே தவறு செய்திருக்கிறார்கள். அந்த தவறு சுட்டிக்காட்டப்படுகிறபோது, அதனை ஏற்று, தங்களது வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற மனமாற்றம் அவர்களுக்குள்ளாக வரவில்லை. மாறாக, அவர்களுக்குள்ளாக இருக்கிற வெறுப்புணர்வு அதிகரிக்கிறது. அந்த வெறுப்புணர்வு தூய ஆவி இல்லாத நிலையை உருவாக்கிவிடுகிறது. ஸ்தேவான் கடவுளின் வார்த்தைகளை துணிவோடு அறிவிக்கின்றார். காரணம், அவர் தூய ஆவியின் வல்லமையை நிறைவாகப் பெற்றிருந்தார். உண்மை இருக்கிற இடத்தில் தூய ஆவி இருக்கின்றார்.

நம்மிடத்தில் உண்மை இருக்கிறபோது, இயல்பாகவே துணிவு வருகிறது. ஏனெனில் அங்கே தூய ஆவியானவர் இருக்கின்றார். உண்மையை ஏற்றுக்கொள்ளாதவர்களிடத்தில் பகைமையும், வெறுப்பும் நிறைந்திருக்கிறது. காரணம், அங்கு தூய ஆவியானவர் இல்லை. உண்மைக்கு சான்று பகர்கிறவர்களாக வாழ்கிறபோது, நம்மிடத்தில் தூய ஆவியானவர் இருப்பார். எனவே, நம்முடைய வாழ்வில் எல்லா தருணத்திலும், சூழ்நிலையிலும், உண்மைக்கு சான்று பகரக்கூடியவர்களாக வாழ்வோம்.

- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

திருப்பாடல் 31: 2 – 3, 5, 6 – 7, 16 & 20
“நானோ ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கின்றேன்”

இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்த உலகத்தில் கடவுள் நம்பிக்கை மக்கள் நடுவில் அதிகமாக இருந்தது. மத்திய கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த பல தரப்பட்ட மக்களுக்கு, இந்த கடவுள் நம்பிக்கை மிகுதியாய் இருந்தன. ஆனால், கடவுளைப்பற்றிய அவர்கள் பார்வை வித்தியாசமானதாகவும் இருந்தன. கடவுளை பலியின் மூலமும், பொருட்களைப் படைப்பதின் மூலமும் திருப்திபடுத்திவிடலாம் என்று நினைத்தனர். எவ்வளவு தவறுகள் செய்தாலும், கடவுளுக்கு பலி செலுத்தினால் வெகு எளிதாக அவரின் கோபத்தை தணித்து விடலாம் என்கிற எண்ணமும் அவர்களின் உள்ளத்தில் குடிகொண்டிருந்தது.

மத்திய கிழக்குப் பகுதியில் வாழ்ந்த மக்களின் மற்றொரு கடவுள் நம்பிக்கை, எல்கை தொடர்புடையது. ஒவ்வொரு நாட்டிற்கும் எல்கை இருந்தது போல, கடவுளுக்கும் எல்கை இருந்ததாக அவர்கள் நம்பினா். ஒரு நாட்டில் வணங்கக்கூடிய தெய்வத்திற்கு, அந்த நாட்டின் எல்கை வரை தான் அதிகாரமும், பலமும் இருந்ததாக அவர்கள் நினைத்தனர். தாங்கள் வழிபட்ட தெய்வங்களை சிலைகளாக வடித்து, அவற்றிற்கு பலி பொருட்களைப் படைத்தனர். இந்த வேற்றுத்தெய்வங்களுக்கு மற்றவர்கள் செய்கிற ஆராதனை, வழிபாடுகளைப் பார்த்து, இஸ்ரயேல் மக்களும் அவர்களுக்கு வழிபாடு நடத்த ஆரம்பித்தனர். சிலைகளுக்கு பலியிட்டனர். சிலைகளை வழிபட்டனர். இவர்களைத்தான் திருப்பாடல் ஆசிரியர் வெறுப்பதாகக் கூறுகிறார். உண்மையான நம்பிக்கையை அனைவரும் “யாவே“ இறைவன் மீது வைக்க வேண்டும் என்று அழைப்புவிடுக்கிறார்.

இன்றைக்கு நம்மில் பலரும் வேற்றுத்தெய்வ ஆராதனையில் ஈடுபாடு கொண்டு, உண்மையான தெய்வத்தை விட்டுச் செல்லக்கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக நாம் இருக்கக்கூடாது. இறைவனுக்கு எப்போதும் உண்மையாக, பிரமாணிக்கமாக இருப்பதற்கு ஆண்டவரிடம் மன்றாட வேண்டும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

விசுவாசக்கண் கொண்டு கடவுளைப் பார்க்க…

“கண்டு நம்புவது“ என்பது அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்று. கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய், என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், பொதுவாக, பார்த்தால் நம்புகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கேட்பதை வைத்து நம்புகிறவர்களை விட, பார்ப்பதை வைத்து நம்புகிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். உண்மை என்று தெரிய வேண்டுமென்றால், நானே நேரிடையாக சென்று பார்க்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் தான் அதிகம். இயேசுவின் சீடருள் ஒருவரான தோமாவும், நான் கண்டால் தான், இயேசு உயிர்த்திருக்கிறார் என்று நம்புவேன் என்று சொல்கிறார். இந்த வரிசையில் இன்றைய நற்செய்தியில் வரும் யூதர்களும், அடையாளங்களையும், அருங்குறிகளையும் கண்டு நம்புகிறோம், என்று சொல்கிறார்கள்.

நமது வாழ்க்கை வெறும் கண்களால் பார்ப்பதை அடிப்படையாக வைத்து மட்டும் வாழ்ந்தால், நாம் தாம் ஏமாளிகளாக இருப்போம். ஆனால், வாழ்வை, நடக்கும் நிகழ்வுகளை பார்க்க வேண்டிய விதத்தில் பார்த்தால் தான், சரியான வழியில் செல்ல முடியும். இதை இயேசு நமக்கு கற்றுத்தருகிறார். அவர்கள் மோசேயை நம்பினதாகச் சொல்கிறார்கள். ஆனால், மோசே அவர்களுக்கு மன்னா கொடுத்த உணவை, தவறான பார்வையில் பார்க்கிறார்கள். மோசே தான், தங்களுக்கு உணவு கொடுத்தார் என்று நினைக்கிறார்கள். ஆனால், இயேசு தெளிந்த பார்வையோடு கடவுள் தான் அவர்களுக்கு மன்னா கொடுத்தவர் என்று சொல்கிறார். ஆக, ஊனக்கண்களால் பார்ப்பதை விட, வாழ்வின் நிகழ்வுகளை விசுவாசக்கண் கொண்டு பார்ப்பதுதான், கடவுளை முழுமையாக அறிந்து கொள்ள உதவியாக இருக்கிறது.

நமது வாழ்வும், வாழக்கூடிய காலச்சூழலும் ஐம்புலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனைத்தாண்டியும் நாம் கடவுளை அறிந்து கொள்ள முடியும் என்பதை, இயேசு நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார். கடவுளை நாம் விசுவாசக்கண் கொண்டு பார்ப்பதற்கு முயற்சி எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

”வாழ்வுதரும் உணவு நானே”

வாழ்வுதரும் உணவு நானே” என்ற இயேசுவின் வார்த்தைகளின் பொருளை நாம் கண்டுபிடிப்போம். உயிரோடிருத்தல் என்பது வேறு. உயிர் வாழ்வது என்பது வேறு. சாதாரண உணவு என்பது உயிரோடு இருப்பதற்கு உதவி செய்கிறது. இயேசு தரும் உணவு உயிர் வாழ்வதற்கு உதவியாக இருக்கிறது. இங்கு வாழ்வு எனக்குறிப்பிடப்படுவது நமது உயிரோடு இருத்தல் அல்ல. மாறாக, உயிர்வாழ்வதைக்குறிக்கிறது.  அது ஆன்மீகம் சார்ந்த வாழ்வு. உயிரோடு வாழ்வது என்பது கடவுளோடு இணைந்த வாழ்வு. அந்த வாழ்வு இயேசுவால் நமக்கு எளிதாக்கப்பட்டிருக்கிறது. இயேசு இல்லாமல் அந்த வாழ்வை நாம் பெற முடியாது. இத்தகைய வாழ்வுக்கு இயேசுதான் அடிப்படை என்றால், இயேசுதான் அந்த வாழ்வுதரும் உணவு.

”அமைதி தேடி அலையும் நெஞ்சமே” – என்ற பாடல் வரிகள், மனிதன் அமைதிக்காக ஏங்கி அலைவதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அந்த நிலையான அமைதியை வழங்கக்கூடியவர் இயேசு. அந்த நிலையான அமைதியை நாம் பெறவேண்டுமென்றால் இயேசுவை நாம் பின்பற்ற வேண்டும். யூதர்கள் உணவு என்பதை வெறும் மண்ணக உணவாகப்பார்த்தனர். அதனால் தான் இயேசு சொன்ன அந்த சிந்தனையைப்புரிந்து கொள்ளவில்லை. அவர்களுடைய உள்ளமெல்லாம் இந்த மண்ணகத்தில் நிலைத்திருந்தது. அவர்கள் பின்பற்றிய சடங்குகள் மூடியிருந்த அவர்களின் கண்களை திறக்க உதவவில்லை. அவர்களுக்கு உண்மையான அமைதியைப்பெற வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. அதனால் அவர்கள் இயேசுவைப் புறக்கணித்தனர்.

நமது வாழ்வில் நமக்கு அமைதியைத்தர வல்லவர் இயேசு ஒருவரே. அவரை நாம் பற்றிக்கொண்டால், நமது வாழ்வில் கவலை,கண்ணீருக்கு இடமில்லை. அவர் தான் நம்மை உயிர் வாழவைக்கிறார். வாழ்வு என்பது வெறும் இருத்தல் அல்ல, அது வாழ்வை வாழ்வது. அத்தகைய வாழ்வை நமக்குத்தரக்கூடியவர் இயேசு மட்டும்தான்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

உயிருள்ள உணவு இயேசு

இயேசுவை மெசியா என்று ஏற்றுக்கொள்வதற்கு அரும்அடையாளங்களைச் செய்து காட்டுமாறு யூதர்கள் கேட்கின்றனர். “எங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டனரே! ‘அவர்கள் வானிலிருந்து உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்’ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! என்று அவர்கள் கேட்கின்றனர். மெசியா வரும்போது, பாலைநிலத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு மன்னாவை வழங்கியதுபோல அவரும் வழங்குவார் என்ற பொதுவான நம்பிக்கை இருந்தது. பாலைநிலத்தில் மன்னா கொடுத்ததுதான், மோசே செய்த மிகப்பெரிய அற்புதமாக இருந்தது. மெசியா அதைவிட சிறந்த அற்புதத்தைச்செய்வார் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியிருந்தது. எனவேதான், யூதர்கள் இந்தக்கேள்வியைக் கேட்கின்றனர்.

யூதர்களுக்கு மத்தியில் மன்னாவைப்பற்றிய பல சிந்தனைகளும், நம்பிக்கைகளும் இருந்தன. முதல் மீட்பர் மோசே மன்னாவை வானிலிருந்து பொழியச்செய்ததுபோல, இறுதி மீட்பரும் மன்னாவை வானிலிருந்து பொழியச்செய்வார். மோசே காலத்தில் நிறுத்தப்பட்ட மன்னாவை மீண்டும் வரஇருக்கிறவர் பொழியச்செய்வார். இந்த மன்னா நேர்மையாளர்களுக்கும், உண்மையுள்ளவர்களுக்கும் வழங்கப்படும் மன்னா. இதை நம்புகிறவர்கள் ஒவ்வொருவருமே பேறுபெற்றவர்கள். மேலும், உடன்படிக்கைப்பேழையில் ஒரு பானையில் இந்த மன்னா வைக்கப்பட்டிருந்தது. ஆலயம் இடிக்கப்பட்டபோது, இந்த மன்னாவை வேறு இடத்தில் ஒளித்து வைத்திருந்ததாகவும், மெசியா மீண்டும் வரும்போதும் இதை மீண்டும் எடுப்பார் என்ற நம்பிக்கையும் யூதர்களுக்கு மத்தியில் இருந்தது. இயேசு அவர்களின் பதிலைச் சரிபடுத்துகிறார். அதாவது, பாலைநிலத்தில் மக்களுக்கு மன்னா கொடுத்தது மோசே அல்ல: மாறாக, கடவுள். அதேபோல், மன்னா கடவுளின் அப்பமல்ல, அது கடவுளுடைய அப்பத்தின் உருவகம். அவ்வளவுதான். இயேசு தன்னை வானிலிருந்து இறங்கி வருகின்ற அப்பமாக உருவகப்படுத்துகிறார். மன்னாவைப்பற்றிச் சொன்னதெல்லாம், தன்னை நம்பினால் கிடைக்கும் என்பது இயேசு இங்கே வெளிப்படுத்தும் செய்தி.

இயேசுதான் வானிலிருந்து இறங்கி வந்த உணவு. அந்த உயிருள்ள உணவை நாம் உண்டால், நாம் நிலைவாழ்வைப்பெறுவோம். அதாவது இயேசுவை நம்பி, அவர் மீது முழுமையான நம்பிக்கை வைத்தால், அவர் அனைத்து நலன்களையும் பெற்றுக்கொள்வார்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

“இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்”

இயேசு நிறைவாழ்வின் உணவை அறிமுகப்படுத்திப் பேசியபோது, மக்கள் ஆர்வத்துடன் இயேசுவிடம் வைக்கும் கோரிக்கை” ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்பது. அதனையே நமது வேண்டுதலாகவும் மாற்றுவோமா!

விவிலியம் நான்கு விதமான உணவுகளைப் பற்றிப் பேசுகிறது.
1. அன்றாட உணவு
2. இறைவார்த்தை என்னும் உணவு
3. நற்கருணை என்னும் உணவு
4. தந்தையின் பணியைச் செய்யும் ஆர்வம் என்னும் உணவு (யோவா 4: 34)

இயேசு கற்றுத் தந்த இறைவேண்டலில், தந்தையை நோக்கி “எங்கள் அன்றாட உணவை எங்களுக்குத் தந்தருளும்” என்று செபிக்கக் கற்றுத் தந்தார். இந்த அன்றாட உணவு என்பது மேற்குறிப்பிட்ட நான்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.

குறிப்பாக, கடவுள் நமக்கெனக் குறித்திருக்கிற பணிகளை, வேலைகளை நாம் நன்றாகச் செய்யவேண்டும் என்னும் ஆர்வமும் தமது உணவே என்று இயேசு மொழிந்ததுபோல, நாமும் சொல்லவும், வேலை செய்யவும் முயல்வோம்.

மன்றாடுவோமாக: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். “இவ்வுணவை எங்களுக்குத் தாரும்” என்று நாங்களும் உம்மிடம் வேண்டுகிறோம். இறைமொழி, நற்கருணை, இறைபணி இவற்றின்மீது எங்களுக்கு ஆர்வத்தைத் தருவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

இவ்வுணவை எப்போதும் தாரும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

#8220;ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று கேட்ட மக்களின் வேண்டுதலே நமது அன்றாட செபமாக மாறட்டும். ஆண்டவர் இயேசு கற்றுத் தந்த செபத்தில், #8220;எங்கள் அன்றாட உணவை எங்களுக்குத் தாரும்” என்று மன்றாட நமக்குச் சொல்லித் தந்தார். ஆனால், எந்த உணவுக்காக?

கடவுள் தரும் உணவுக்காக நாம் மன்றாட வேண்டும். புதிய ஏற்பாடு நமக்கு நான்குவிதமான உணவுகளைச் சுட்டிக்காட்டுகிறது.

  1. உடல் வாழ்வுக்குத் தேவையான உணவு.
  2. இறைவார்த்தை என்னும் உணவு (மத் 4:4)
  3. நற்கருணை என்னும் உணவு (யோவா 6:35)
  4. இறைத் திருவுளத்தை நிறைவேற்றும் உணவு (யோவா 4:34)

நமது உடல் வாழ்வுக்குத் தேவையான உணவுக்காக மட்டுமல்லாது, நமது ஆன்ம வாழ்வுக்குத் தேவையான இதர மூன்று உணவுகளுக்காகவும் நாம் மன்றாட வேண்டும். #8220;ஆண்டவரே, இவ்வுணவை எப்போதும் எங்களுக்குத் தாரும்” என்று இன்று வேண்டுவோமா?

மன்றாடுவோம்: இறைவன் தந்த உணவான இயேசு ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். வாழ்வு தரும் உணவான உமது வார்த்தைகளையும், நிறைவு தரும் விருந்தான நற்கருணையையும், தந்தை இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றும் ஆர்வமாகிய உணவையும் எங்களுக்கு எப்போதும் தந்தருள்;வீராக! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருட்தந்தை குமார்ராஜா

-----------------------

 

''இயேசு மக்களிடம், 'வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது;
என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது' என்றார்'' (யோவான் 6:35)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசுவை அணுகிச் சென்ற மக்கள் தங்களுக்கு உணவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இஸ்ரயேல் மக்களுக்கு மோசே கடவுளிடமிருந்து ''மன்னா'' என்னும் உணவைப் பெற்று வழங்கினார். அதுபோலவே மக்களின் வாழ்வுக்கு நெறிகாட்டும் வகையில் ''தோரா'' என்னும் திருச்சட்டத்தை வழங்கினார். இயேசுவால் செய்யக்கூடுமான அதிசய செயல் உண்டா என மக்கள் கேட்கிறார்கள். அதிசயமான விதத்தில் மக்களுக்கு இயேசு உணவு வழங்கியதையும் இயேசுவைத் தங்கள் அரசராக ஏற்படுத்த அவர்கள் முயன்றதையும் மக்கள் மறந்துபோனது நமக்கு அதிசயமாகவே உள்ளது. இருப்பினும் இயேசு அவர்களுக்கு மன்னாவைவிடச் சிறந்த ஓர் உணவை வழங்குவார். இயேசுவே மக்களுக்கு உணவாகத் தம்மைக் கையளிக்கிறார். இந்த உணவை உண்போர் பசியால் வாட மாட்டார்கள். அவர்களுடைய தாகமும் தணியும். இது எவ்வாறு நிகழும் என்பதை இயேசு விளக்கிச் சொல்கிறார். முழுமையான நிறைவைத் தருகின்ற உணவை நாம் தேடினால் இயேசுவை அணுகிச் செல்ல வேண்டும். நம் வாழ்க்கையின் தாகம் தணிய வேண்டும் என நாம் விரும்பினால் இயேசுவிடம் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இவ்வாறு இயேசு நம்பிக்கையின் உயர்வை உணர்த்துகிறார். இயேசுவை நம்புவது என்றால் என்ன? வரலாற்றில் வாழ்ந்து, இறையாட்சி பற்றி மக்களுக்குப் போதித்து, சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு நமக்காகத் தம்மையே கையளித்ததால் நமக்கு உணவாக மாறினார். அந்த இயேசுவை நம் வாழ்வின் ஊற்றாக நாம் ஏற்றால் அவரே நமக்கு வாழ்வு வழங்குவார்; நம் பாவங்களைப் போக்கி, நம்மைக் கடவுளோடு இணைப்பார்.

-- இயேசுவை நம்புவோர் இயேசுவின் போதனையைத் தம் வாழ்க்கையில் கடைப்பிடிப்பர்; இயேசுவைத் தம் வாழ்வுக்கு முன்மாதிரியாகக் கொண்டு, அவருடைய கட்டளைகளை ஏற்று நடப்பர். இவ்வாறு நம் வாழ்வு இயேசுவின் போதனைப்படி அமையும்போது இயேசுவே நம் ஆன்ம வாழ்வுக்கு அடிப்படையும் ஊற்றாகவும் இருப்பார். தூய ஆவியை நமக்கு வழங்குவதாக இயேசுவே வாக்களித்துள்ளார். இவ்வாறு ஆவியின் வல்லமையால் திடம்பெறுகின்ற நாம் அவருடைய தூண்டுதலுக்கு அமைந்து நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். அப்போது நாம் பெறுகின்ற நிலைவாழ்வு என்பது இவ்வுலகிலேயே தொடங்கி மறுவுலகில் நிறைவுறும். இந்த நிலைவாழ்வு நாமாகவே உழைத்துப் பெறுகின்ற பேறு அல்ல, மாறாகக் கடவுளே நமக்கு வழங்குகின்ற அன்புக் கொடை. இதுவே கடவுளின் திருவுளம் (யோவா 6:40).

மன்றாட்டு
இறைவா, எங்கள் ஆன்ம தாகத்தைத் தணிக்கின்ற உம்மை நாடி வர எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"; உணவு நானே"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

'நானே' எனக் குறிப்பிடும் ஏழுள் இதுவும் ஒன்று. இயேசு தன்னை உணவு என்றும், இவ்வுணவு வானிலிருந்து இறங்கிவந்த உணவு என்றும், மீண்டும் பசி தராத உணவு என்றும் இங்கு வெளிப்படுத்துகிறார். அப்பம் பகிர்ந்த பின், அந்த சூழலைப் பயன்படுத்தி நிலையான வாழ்வு தரும் உணவை இங்கு இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

கிறிஸ்து இயேசுவே வாழ்வு தரும் உணவு. பிறந்தது முதல் இறந்தது வரை, ஏன் இறந்த பின்னும் மனிதனுக்கு வாழ்வு தரும் உணவாக இயேசு இருக்கிறார். இயேசு பிறந்தது பெத்லெகேம். பெத்லெகேம் என்பதன் பெயர் பொருள் ' அப்பத்தின் வீடு' என்பதாகும். மேலும் பிறந்த குழந்தை இயேசுவை பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்தார்கள்.(லூக் 2:12)

தான் வாழும் நாட்களில் 'நானே வாழ்வு தரும் உணவு' என்று அறிமுகம் செய்துகொள்கிறார். அந்த அறிமுகத்தை நிறைவுசெய்யும் விதமாகக் கடைசி இரவு உணவின்போது, "இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்" (மத் 26:26) இறுதியில் கல்வாரியில் தன் உடலையும் இரத்தத்தையும் சிந்திப் பலியாக்கி, அனைவருக்கும் முடிவில்லா வாழ்வின் வாசலைத் திறந்து வைத்தார்.

"இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத் 28:20) என்ற வாக்குகொடுத்து இன்றுவரையிலும் திருச்சபையில் நற்கருணையில் நம்மோடு தங்கி நம் ஆன்ம உணவாகி வாழ்வு தந்து கொண்டிருக்கிறார். இவ்வுணவை உண்போம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்