முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 26-40

அந்நாள்களில் ஆண்டவரின் தூதர் பிலிப்பிடம், ``நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ'' என்றார். அது ஒரு பாலைநிலப் பாதை. பிலிப்பு அவ்வாறே புறப்பட்டுப் போனார். அப்போது எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று, கடவுளை வணங்கிவிட்டுத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தார். அவர் ஓர் அலி; எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர். அவர் தமது தேரில் அமர்ந்து எசாயாவின் இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டிருந்தார். தூய ஆவியார் பிலிப்பிடம், ``நீ அந்தத் தேரை நெருங்கிச் சென்று அதனோடு கூடவே போ'' என்றார். பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக் கேட்டு, ``நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?'' என்று கேட்டார். அதற்கு அவர், ``யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?'' என்று கூறித் தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார். அவர் வாசித்துக்கொண்டிருந்த மறைநூல் பகுதி பின்வருமாறு: ``அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக் குட்டிபோலும், உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை. அவருடைய தலைமுறையைப்பற்றி எடுத்துரைப்பவன் யார்? ஏனெனில் அவருடைய உயிர்தான் எடுக்கப்பட்டுவிட்டதே!'' அவர் பிலிப்பிடம், ``இறைவாக்கினர் யாரைக் குறித்து இதைக் கூறுகிறார்? தம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தா? தயவு செய்து கூறுவீரா?'' என்று கேட்டார். அப்போது பிலிப்பு, இந்த மறைநூல் பகுதியிலிருந்து தொடங்கி, இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவருக்கு அறிவித்தார். அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடத்துக்கு வந்தார்கள். அப்போது அவர், ``இதோ, தண்ணீர் உள்ளதே, நான் திருமுழுக்குப் பெற ஏதாவது தடை உண்டா?'' என்று கேட்டார். அதற்குப் பிலிப்பு, ``நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடையில்லை'' என்றார். உடனே அவர், ``இயேசு கிறிஸ்து இறைமகன் என்று நம்புகிறேன்'' என்றார். உடனே அமைச்சர் தேரை நிறுத்தக் கூறினார். பிலிப்பு, அமைச்சர் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்குத் திருமுழுக்கு கொடுத்தார். அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியேறினவுடனேயே ஆண்டவரின் ஆவியார் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அமைச்சர் அதன்பின் அவரைக் காணவில்லை; அவர் மகிழ்ச்சியோடு தம் வழியே சென்றார். பின்பு பிலிப்பு ஆசோத்து என்னும் இடத்தில் காணப்பட்டார். செசரியா போய்ச் சேரும்வரை அவர் சென்ற நகரங்களிலெல்லாம் நற்செய்தியை அறிவித்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 66: 8-9. 16-17. 20

பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!

8 மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்;
அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள்.
9 நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே;
அவர் நம் கால்களை இடற விடவில்லை. -பல்லவி

16 கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்!
அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்.
17 அவரிடம் மன்றாட என் வாய் திறந்தது;
அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது. -பல்லவி

20 என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி!
தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ``விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்,'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

யோவான் 6:44-51

பாஸ்கா காலம்-3 வாரம் வியாழன்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 44-51


அக்காலத்தில் இயேசு யூதர்களைப் பார்த்துக் கூறியது: ``என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். `கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்' என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 6: 44 - 51
உணவு

‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்றார் திருமூலர். இந்த உடல் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களால் ஆனது. இந்த உடல் உயிர் வாழ்வதற்கும், வளர்வதற்கும், இயங்குவதற்கும் உணவு அவசியம். இந்த உலகில் தோன்றிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் உணவின்றி வாழ இயலாது. தாவரங்கள் தமது உணவைத் தாமே தயாரித்துக் கொள்கின்றன. விலங்குகள் தமது உணவிற்காக பிற விலங்குகளையோ சார்ந்துள்ளன. மனிதன் தமது உணவிற்காக பிற விலங்குகளையோ சார்ந்துள்ளன. மனிதன் தமது உணவிற்காக இன்னொரு பொருளை சார்ந்திருக்கின்றான். ஆக மனிதன் உள்பட அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ்வதற்கு இந்த உணவு எந்த அளவிற்கு இன்றியமையானது என்பதனைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இவையெல்லாம் இந்த சமுதாயத்தில் நாம் வளமுடன் வழ அவசியமாக அமைகிறது.

ஆனால் நிலைவாழ்வு வாழ எந்த உணவு அவசியம், அது எங்கே தரப்படுகிறது என்பதனைத் தான் இன்றைய நற்செய்தி வாசகம் சுட்டிக் காட்டுகிறது. எதற்காகவென்றால் இயேசுவிடமிருந்து வயிராற உண்ட மக்கள், அதே உணவைத் தொடர்ந்து பெற இயேசுவை நாடிச் செல்வதும் அதை இயேசுவும் அவர்களுக்குச் சுட்டிக் காட்டி அவர் தந்த உணவு இன்னும் சிறப்பான ஆழந்த அர்த்தம் கொண்டுள்ள விண்ணகத்தைச் சார்ந்த உணவுக்கு ஓர் அடையாளம். அதனால் தான் விவிலிய பேராசிரியர்கள் இவ்வாறு கூறுவார்கள், ‘இயேசு தரும் அப்பம் வெறும் வயிற்றை நிரப்பும் உணவுக்காக மட்டுமல்ல, மாறாக நிலைவாழ்வு தரும் அழியா உணவாகவும் இருக்க வேண்டும் என இயேசு கூறுகிறார். இந்த உணவு பழைய ஏற்பாட்டில் மோசே வழியாக மக்கள் பாலைநிலைத்தில் பெற்ற ஒரு தற்காலிக உணவு போலன்றி, வானின்று வந்து கடவுளே உலகிற்கு வாழ்வளிக்கும் உணவாக இருக்க வேண்டும் என்றும் இயேசு உறுதிப்படுத்துகிறார். இந்த முறை நானே என்று கூறுவது பழைய ஏற்பாட்டில் மோசேக்கு தம்மை வெளிப்படுத்திய கடவுள் இருக்கிறவர் நானே என கூறினார். அதே பாணியில் நற்கருணை என்பது தன்னை வெளிப்படுத்தும் உணவு. அதாவது நற்கருணை உட்கொள்ளுதல் என்பது இந்த உலகில் வாழ்ந்த முழு மானிடத்தன்மை கொண்ட இயேசுவை நாம் மீண்டும் அன்றாட நம் வாழ்வில் வரவேற்க கூடியதற்கு அடையாளம்.

நாம் நிலைவாழ்வு உணவை பெற தகுதி பெற்றிருக்கிறோமா? எத்தனை வாய்ப்புகளை பயன்படுத்தினோம்? சிந்திப்போம்.

அருட்பணி. பிரதாப்

===========================

திருத்தூதர் பணி 8: 26 – 40
இறைவனைத் தேடும் உள்ளம்

பிலிப்பு தூய ஆவியாரால் வழிநடத்தப்படுகிறார். எங்கேயெல்லாம் தூய ஆவி அவரை அழைத்துச் செல்கிறாரோ, அங்கெல்லாம், அவர் மறுக்காமல் செல்கிறார். அப்படி செல்கிற வழியில், இறைவார்த்தையின் மீது தாகம் கொண்டிருக்கிற ஓர் அரச அலுவலரைப் பார்க்கிறார். அவர் தான் எத்தியோப்பிய நிதியமைச்சர். அவர் எசாயாவின் இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு தெளிவாக ஒன்றும் விளங்கவில்லை என்றாலும் கூட, ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருக்கிறார். தூய ஆவியாரால் வழிநடத்தப்பட்ட பிலிப்பு அவருக்கு விளக்கம் கொடுக்கிறார்.

இந்த பகுதி, இறைவார்த்தையின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இறைவன் எப்படியெல்லாம் உடனிருந்து கற்றுக்கொடுக்கிறார் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது. எத்தியோப்பிய அமைச்சருக்கும், பிலிப்புவிற்கும் பழக்கம் கிடையாது. இருவரும் வேறு வேறு இடங்களில் இருக்கிறவர்கள். ஆனால், இருவரும் ஒன்றிணைகிறார்கள். அது இயல்பாகவே அமைந்த நிகழ்ச்சி அல்ல. மாறாக, இறைவனால் உருவாக்கப்பட்ட திட்டம். எப்போது நாம் இறைவனை நோக்கிச் செல்ல வேண்டும், இறைவனை இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்போது, இறைவன் நமக்கு உதவி செய்வார் என்பதை, வெளிப்படுத்துகிற அற்புதமான பகுதியாக இது அமைகிறது. நாம் இறைவனைப் பற்றி அறிய வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டிருந்தால் போதும். இறைவன் சிறப்பாக தன்னை வெளிப்படுத்துவார்.

இறைவனை இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்கிற ஆர்வம் நமக்கு இருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்ப்போம். இன்றைக்கு இறைவனை அதிகமாக அறிவிக்க வேண்டும், இறைவார்த்தையைக் கேட்க வேண்டும் என்கிற எண்ணம், பிரிவினை சபையினரிடையே அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடத்தில் ஆடம்பரமும், தேவையற்ற சடங்குகளும் பெருகிக் கொண்டிருக்கிறதே தவிர, ஆண்டவரைப் பற்றி அறிய வேண்டும் என்கிற எண்ணம், குறைந்து கொண்டே இருக்கிறது. இறைவனை இன்னும் அதிகமாக நாடுகிறவர்களாக மாற, நாம் முயற்சி எடுப்போம்.

- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

திருப்பாடல் 66: 8 – 9, 16 – 17, 20
”நம்மை உயிர் வாழச்செய்தவரும் அவரே”

திருப்பாடல் 66 ஒரு நன்றிப்பாடல். இது குறிப்பிட்ட நிகழ்வை வைத்து எழுதப்பட்ட பாடல் அல்ல. மாறாக, கடவுள் செய்து வந்திருக்கிற நன்மைகளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று, நம்மை உந்தித்தள்ளுகிற ஒரு பாடல். எல்லா மக்களுமே கடவுளைப் போற்றிப் புகழ அழைக்கப்படுகிறார்கள். இந்த திருப்பாடலின் சிறப்பு, தனிப்பட்ட முறையில் இறைவன் தனக்கு செய்திருக்கிற நன்மைகளை நினைத்து, தாவீது அரசர் பாடுவதாக இது சொல்லப்படுகிறது. அவருடைய துன்ப வேளையில் இறைவன் எவ்வாறெல்லாம், அவரைப் பேணிப்பாதுகாத்தார் என்பதுதான் இந்த திருப்பாடலின் மையச்சிந்தனையாக இருக்கிறது.

மக்களினங்கள் அனைவரும் ஆண்டவரைப் புகழ வேண்டும் என்று ஆசிரியர் அழைப்பு விடுக்கின்றார். இந்த அழைப்பு எல்லா மக்களுக்கும் என்றாலும், குறிப்பாக இஸ்ரயேல் மக்களுக்கான அழைப்பாக இது பார்க்கப்படுகிறது. இரண்டு காரணங்களுக்காக, இந்த அழைப்புவிடுக்கப்படுகிறது. முதல் காரணம், கடவுள் இஸ்ரயேல் மக்களை பல்வேறு நெருக்கடிகளிலிருந்து பாதுகாத்திருக்கிறார். எதிரிகளின் கண்ணியிலிருந்து விடுவித்திருக்கிறார். இரண்டாவது காரணம், துன்பங்களுக்கு மத்தியில் சிக்குண்டு, நொறுங்கிப்போயிருந்த இஸ்ரயேல் மக்களின் ஆன்மாக்களுக்கு உயிர் கொடுத்தவர் கடவுள் தான். கடவுள் இல்லையென்றால், இஸ்ரயேல் மக்கள் உடைந்து போயிருப்பார்கள். வறண்டு போயிருப்பார்கள். இல்லாமல் போயிருப்பார்கள். ஆனால், கடவுள் அவர்களின் ஆன்மாக்களுக்கு புத்துயிர் கொடுத்து, அவர்களுக்கு வாழ்வளித்திருக்கிறார்.

நமது வாழ்க்கையில், நாமும் எப்போதும் கடவுளைப்போற்றக்கூடியவர்களாக வாழ்வோம். அவர் நமக்கு செய்திருக்கிற நன்மைகளை எந்நாளும் எண்ணிப்பார்ப்போம். அவர் நம்மை கைவிட மாட்டார். ஒருபோதும் நம்மை விட்டு, அகன்று போக மாட்டார். நம்மை அன்பு செய்யும் இறைவனை, நாம் எப்போதும் போற்றுகிறவர்களாக மாறுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------

உண்மையான மீட்பர் இயேசு

இயேசு தான் வாழ்வு தரக்கூடிய உணவு. அதனுடைய பொருள், வாழ்வின் முக்கியத்துவம் இயேசு தான், இயேசு மட்டும் தான். இயேசு இல்லையென்றால் நமக்கு வாழ்வு இல்லை. யூதப்போதகர்கள் மத்தியில் ஒரு சொற்றொடர் அடிக்கடி சொல்லப்படுவதுண்டு: பாலைவனத்தில் இறந்த யூதத்தலைமுறையினருக்கு வாழ்வு என்பதே இல்லை. இதனுடைய பொருள் எண்ணிக்கை நூலின் பிண்ணனியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து தப்பித்து, பாலைவனத்தில் தங்கியிருந்தனர். கடவுள் அவர்களை அற்புதமான முறையில் வழிநடத்தினார். ஆனால், அவர்களில் சிலர் கடவுளுக்கு எதிராக முணுமுணுத்தனர். எனவே, அந்த கூட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். பாலைவனத்தில் அலைந்து திரிந்தனர். அவர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்தை மட்டுமல்ல, மறுஉலக வாழ்வையும் இறந்தனர். அதுபோலத்தான் இயேசுவை நம்பாமல் இருப்பர்களின் நிலையும் கூட. இயேசு நமக்கு வாழ்வு தருவதற்காக வந்திருக்கிறார். அதை நிறைவாகத் தருவதற்காக வந்திருக்கிறார். அவரை ஏற்றுக்கொள்ளாததும், உதறித்தள்ளுவதும் இந்த உலக வாழ்வை மட்டுமல்ல, வரக்கூடிய வாழ்வையும் இழப்பதற்கு சமம். ஆனால், அவரை ஏற்றுக்கொண்டால் இந்த உலக வாழ்வில் நிறைவும், மறுஉலக வாழ்வில் மகிமையும் நமக்கு கிடைக்கும்.

இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு, அவரை நம்புவதற்கு பல வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அந்த வாய்ப்புகளெல்லாம் இந்த உலக வாழ்வின் நிறைவை அடைய மட்டுமல்ல, மறு உலகின் முடிவில்லா வாழ்வையும் அடைவதற்கும் உதவியாக இருக்கும். எனவே, உண்மையான மீட்பரென்று, இயேசுவை ஏற்றுக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

இயேசு தரும் வாழ்வு

இயேசுதான் வாழ்வு தரும் உணவு. நமது வாழ்வுக்கு அடிப்படையும் இதுதான். இயேசு தரும் அழைப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நாம் இந்த உலகவாழ்வில் மட்டுமல்ல, வரக்கூடிய மறுஉலக வாழ்வையும் இழந்துவிடுவோம். இயேசு நமக்கு தரக்கூடிய வாழ்வை, இயேசு நமக்காக ஏற்பாடு செய்திருக்கிற வாழ்வை, நாம் பெறுவதற்கு, இன்றைய வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

யூதப்போதகர்கள் இதுபற்றி அடிக்கடி ஒரு சொல்லாடல் கையாள்வதுண்டு. ”பாலைநிலத்தில் தங்கியவர்களுக்கு வாக்களிப்பட்ட தேசத்தில் இடமில்லையென்று”. அதனுடைய பொருள் இதுதான்: எகிப்திலிருந்து மக்கள் வாக்களிப்பட்ட தேசத்திற்கு கால்நடையாக வந்தனர். அப்போது பாலைநிலத்தில் அவர்கள் தங்கினர். ஆனால், அது அவர்கள் அடைய வேண்டிய இலக்கு அல்ல. இன்னும் பயணம் செல்ல வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் அந்த பாலைவனத்திலே தங்கியிருப்பதை விரும்பினார்கள். வாக்களிப்பட்ட தேசத்திற்குச் செல்கிறபோது எதிர்கொள்ளும் தடைகளைத்தாங்குவதற்கு அவா்கள் விரும்பவில்லை. எனவே, அவர்களுக்கு வாக்களிப்பட்ட தேசத்தில் இடமில்லை. அதற்கான தகுதியை அவர்கள் இழந்துவிட்டார்கள். அதேபோலத்தான், இயேசுவின் அழைப்பு நிலையான வாழ்வுக்கு அழைப்பு. அந்த அழைப்பை ஏற்று, அதனை இலக்காக வைத்து, நமது இப்போதைய வாழ்வை மாற்றி, அவர் காட்டுகிற வழியில் நாம் வாழ முற்பட வேண்டும். இல்லையென்றால், நிலையான வாழ்விற்கு நம்மால் தகுதி பெற முடியாது.

இயேசு நமக்கு நாம் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியிருக்கிறார். எப்படி வாழ வேண்டும் என்று சொல்லித் தந்திருக்கிறார். அவர் காட்டும் நெறியில் நடந்து, நாம் நமது வாழ்வைச் சீர்படுத்தி, இறையாட்சிக்கு நம்மையே தகுதிபடுத்துவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே”

“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே” என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள் என்று நற்செய்தியாளர் பதிவுசெய்கிறார். இயேசுவைப்பார்த்து யூதர்கள் எதற்காக முணுமுணுக்க வேண்டும்? தொடக்கத்திலிருந்தே, குறிப்பாக இயேசு தன்னுடைய பணிவாழ்வை ஆரம்பித்த காலத்திலிருந்தே, யூதர்களில் ஒரு பிரிவுக்கும், இயேசுவுக்கும் இடையே பல்வேறு வாக்குவாதங்களும், பிரச்சனைகளும் நடந்தேறியிருக்கிறது. இயேசுவை இவர்களுக்குப்பிடிக்காமல் போனதற்கு பலகாரங்களைச்சொல்லலாம். இயேசுவின் குடும்பப்பிண்ணனி எளிமையானது என்பதால் அவரை ஏற்றுக்கொள்ளத்தயங்கினார்கள். சட்டங்களுக்குள்ளாக வாழ்ந்து பழகிவிட்ட அவர்களுக்கு, சட்டத்தைவிட்டு வெளியே வரமுடியாமல் சட்டம் என்கிற சிறைக்குள் தங்களையே கைதிகளாக மாற்றியிருந்தனர். இதுவும் ஒரு காரணம். ஆனால், மிகமுக்கியமான காரணம், இயேசுவிடமிருந்து அவர்கள் எதையும் கற்றுக்கொள்ளத்தயாராக இல்லாமல் பிடிவாதமாக இருந்ததுதான்.

இயேசுவின் கருத்துக்களை, போதனைகளை அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அந்தப்போதனையின் தெளிவு, உண்மைநிலை, இயேசுவின் செயல்பாட்டை முழுமையாக அறிந்திருந்தார்கள். இயேசு சொல்வதில் உண்மையிருந்தும், இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு ஏராளமானவை இருந்தும், அவர்கள் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்பவில்லை. இந்த கற்றுக்கொள்ள விரும்பாமைதான் இயேசுவை வெறுக்கவும், அவருக்கு எதிராக முணுமுணுக்கவும் தூண்டியது. இது வாழ்வின் சரியான பார்வை அல்ல. இயேசுவுக்கும் எதிரிகள் இருந்தார்கள். ஆனால், இயேசு மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு தயங்கவில்லை. தான் கடவுளின் மகனாக இருந்தபோதிலும், கற்றுக்கொள்வதற்கு, புதியதைத் தெரிந்து கொள்வதற்கு ஆவலாக இருந்தார். அந்தப்பண்பு நம்மை அறிவாற்றலின் உச்சிக்கு கொண்டுசெல்லும் என்பதில் சந்தேகமில்லை.

கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்ற பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே. வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் நமக்கு வேண்டும். கற்றுக்கொள்வதற்கு நம்முடைய வெறுப்பும், நாம் மற்றவர் மீது வைத்திருக்கிற கோபமும் தடையாக இருக்கக்கூடாது. இந்தப் பண்பை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

“தந்தை ஈர்த்தாலொழிய...”

“என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது” “ என்னும் இறைமகன் இயேசுவின் அமுத சொற்களை இன்று சிந்திப்போம்.

இதனை இன்னொரு கோணத்தில் சொல்வதென்றால், விசுவாசம், இறைநம்பிக்கை என்பதே இறைவனின் ஒரு கொடைதான். சுமை சுமந்து சோர்ந்திருப்போர் அனைவரையும் இயேசு அழைக்கிறார் என்னும் செய்தி ஓர் உண்மையென்றால், அந்த அழைப்பை ஏற்று, இயேசுவிடம் செல்வதற்கும் இறையருள் தேவை என்பது இன்னொரு உண்மை.

எனவே, இறைத் தந்தையின் அருள் இன்றி, நாம் இயேசுவிடம் செல்ல முடியாது. தூய ஆவியின் துணையின்றி, நாம் இறைவனை அப்பா, தந்தை என அழைக்க முடியாது என பவுல் அடியாரின் கூற்றையும் இவண் நினைவுகூர்வோம்.

எனவே, இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுக்கும் அனைவரும் அந்த விசுவாசம், இயேசுவின்மீது பற்று ... என்னும் கொடைக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவோமா!

மன்றாடுவோமாக: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மை ஆண்டவராக அறிக்கையிட, எங்களுக்குத் தூயஆவி என்னும் கொடையைத் தருவதற்காகவும். தந்தையிடம் எங்களை இட்டுச்செல்வதற்காகவும் உமக்கு நன்றி கூறுகிறோம். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

கடவுள்தாமே கற்றுத் தருவார் !”

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

#8220;கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்” என்னும் இறைவாக்கை இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மேற்கோள் காட்டுகிறார். நாமும் இந்த வசனத்தையே இன்று தியானிப்போம்.

ஆபிரகாம் தன் ஒரே மகன் ஈசாக்கைப் பலியிட மலையுச்சிக்கு அழைத்துச் சென்றபோது, சிறுவன் ஈசாக் தன் தந்தையிடம் கேட்ட கேள்வி: #8220;பலிப்பொருள் எங்கே?”. அதற்கு ஆபிரகாம் அளித்த பதில்: #8220;கடவுள்தாமே தருவார்”. கடைசியில், கடவுளே ஒரு செம்மறி ஆட்டைப் பலிப்பொருளாக அளித்தார் என்பதை நாம் அறிவோம்.

நாம் நடக்க வேண்டிய பாதையைக் கடவுளே நமக்குக் காட்டுவார். நாம் பேச வேண்டிய சொற்களைக் கடவுளே நமக்குச் சொல்லித் தருவார். நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய மதிப்பீடுகளைக் கடவுளே நமக்குக் கற்றுத் தருவார். இதுவே நமது நம்பிக்கை. இதுவே நமது பட்டறிவு. எனவே, கடவுளைச் சார்ந்தே வாழ்வோம். அவரே நம்மை வழிநடத்துவார்.

மன்றாடுவோம்: வழியும், ஒளியும், உண்மையுமான இயேசுவே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை நீரே உமது வார்த்தையாலும், அருள் அடையாளங்களாலும் கற்றுத் தருவதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

----------------------

 

''இயேசு மக்களிடம், ''என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது.
என்னிடம் வருபரை நானும் இறுதிநாளில் உயிர்த்தெழச் செய்வேன்' என்றார்'' (யோவான் 6:44)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மனிதர் தம் சொந்த முயற்சியால் கடவுளை அடைய முடியாது என இயேசு நமக்குக் கற்பிக்கிறார். கடவுளைத் தேடிச் செல்கின்ற மனிதர் கடவுளைக் கண்டுபிடிப்பார்கள் என நாம் நம்புகிறோம். ஆனால் கடவுளைத் தேடுவதற்கான ஆவலை நம் உள்ளத்தில் பதித்தவரே கடவுள்தாம். தம்மை மக்கள் தேடி வர வேண்டும் என்பது கடவுளின் திருவுளம் என்றால் அத்தேடலை நிறைவு செய்பவரும் கடவுளே. எனவேதான் கடவுள் நம்மை முதலில் அன்புசெய்தார் (காண்க: 1 யோவா 4:19 - ''அவரே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம்''). இந்த அன்பு எல்லையற்றது; நிகரற்றது. ஆனால், மனிதர் கடவுள்மட்டில் காட்டுகின்ற அன்பு எப்போதுமே குறைவுள்ளதுதான். அந்த அன்பு நம்மிடமிருந்து எழவேண்டும் என்றால் அதற்கு முதல் படியாக அமைவது கடவுள் நம்மீது காட்டுகின்ற அன்புதான். எனவேதான் கடவுள் நம்மை ஈர்க்கிறார் என இயேசு கூறுகிறார் (காண்க: யோவா 6:44). காந்தம் இரும்பை ஈர்க்கும்போது இரும்பு காந்தத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். அதுபோல, கடவுள் நம்மை ஈர்ப்பதால் நாம் அவரில் இணைகிறோம்; அந்த அன்பில் மகிழ்ச்சியடைகிறோம். எனவே கடவுளை அன்புசெய்வதற்கு நம்மைத் தகுதியுள்ளவர் ஆக்குபவர் கடவுளே எனலாம்.

-- இவ்வாறு கடவுளால் ஈர்க்கப்பட்டு அவருடைய அன்புப் பிணைப்பில் மகிழ்ச்சியடைகின்ற நாம் கடவுளிடமிருந்து தலைசிறந்த ஒரு கொடையைப் பெற்றுக்கொள்கின்றோம். இதை நற்செய்தி நூல்கள் பல சொற்களைப் பயன்படுத்தி விளக்கிச் சொல்கின்றன. கடவுள் நமக்கு வழங்குகின்ற கொடை யாது? இறையாட்சியில் நாம் பங்குபெறக் கடவுள் நம்மை அழைக்கிறார்; கடவுள் நமக்குப் பாவ மன்னிப்பு வழங்குகின்றார்; நிலைவாழ்வைக் கடவுள் நமக்குத் தருகிறார். இவ்வாறு கடவுளின் கொடையை நாம் பெற்றுக்கொள்கின்றோம். இயேசு கடவுளிடமிருந்து வந்து நம்மைப் பாவத்திலிருந்து விடுவித்து, மீண்டும் கடவுளின் அரசில் மாட்சிமை பெற்றதுபோல நாமும் இயேசுவின் மீட்புச் செயல் வழியாகக் கடவுளின் ஆட்சியில் நிறைவாகப் பங்கேற்கும் பேற்றினைப் பெற்றுள்ளோம். இது கடவுள் நமக்கு வழங்கும் கொடையேயன்றி, நாமாக தேடிக்கொள்கின்ற செல்வம் அல்ல. கடவுள் வழங்குகின்ற கொடை நமக்கு நிலைவாழ்வாக அமையும்.

மன்றாட்டு
இறைவா, எங்களை ஈர்க்கின்ற உம்மை நாடி வந்து உம்மில் நிறைவுபெற எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"; வாழ்வுதரும் உணவு நானே."

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

மூவகை உணவுபற்றி கேள்விப்படுகிறோம். 1.அனுதின உணவு 2. பாலை நிலத்து மன்னா 3. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு. எல்லா உணவும் அந்த இறைவன் தருவதுதான். ஆயினும் மூன்று உணவிலும் சில வேறுபாடுகள், சில சிறப்பு செயல்பாடுகள் இருப்பதைக் காண்கிறோம்.

அனுதின உணவு நம் அன்றாட உடல் வளர்ச்சிக்காக நாம் உழைத்து சமைத்து உண்ணும் உணவு. நம் உழைப்பை ஆசீர்வதித்து பலன்கொடுக்கச் செய்து நமக்கு உணவாக்க உதவுகிறார் இறைவன். பாலை நிலத்து மன்னா உணவு, இஸ்ராயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலை பெற்ற பின் சீனாய் பாலை நிலத்தில் பயணம் செய்தபோது பசியால் வாடினர். மோசேயிடம் முறையிட்டனர். இறைவனையும் பழித்தனர். ஆயினும் இறைவன் அம்மக்களுக்கு பாலைவனப் பயணத்தில் வலுவ+ட்ட மன்னா உணவை வானிலிருந்து பொழியச் செய்தார். இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி "மன்னா" என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது மோசே அவர்களை நோக்கி, "ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே ( விப 16:15)

நம் வாழ்க்கைப் பயணத்தின் உடல், உள்ளம், ஆன்ம உணவாக இறைவன் தந்ததுதான் மூன்றாவதாகக் குறிப்பிடும் 'விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு'. இறைவனே அந்த உணவு. இயேசுவே அந்த உணவு. தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் அனைவருக்கும் உணவாகக் கொடுக்க வானிலிருந்து வந்து பலியாகி இறந்து உயிர்த்தெழுந்து மீண்டும் வானகம் சென்ற இயேசு கிறிஸ்துவே இவ்வுணவு. உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவை உண்போம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்