முதல் வாசகம்

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் தானி (இ) 2: 1-9,15-17,19-30,33-62

அந்நாள்களில் பாபிலோனில் யோவாக்கிம் என்னும் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சூசன்னாவை மணந்தார். சூசன்னா கில்கியாவின் மகள்; அவர் பேரழகி; ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர். அவர் பெற்றோர் நேர்மையாளராய் இருந்ததால், தங்கள் மகளை மோசே சட்டத்தின் வழியில் பயிற்றுவித்தனர். யோவாக்கிம் பெரும் செல்வர். அவரது வீட்டுக்கு அருகிலேயே அவருக்கு ஒரு தோட்டம் இருந்தது. யூதர்கள் அவரிடம் வருவது வழக்கம்; ஏனெனில் மற்ற எல்லாரையும்விட அவர் மிகவும் மதிக்கப் பெற்றார். அக்காலத்தில் மக்களுள் முதியோர் இருவர் நடுவராய் நியமிக்கப் பெற்றனர். இவர்களைப் பற்றியே ஆண்டவர், ``நடுவர்களாய் இருந்து மக்களை வழிநடத்தவேண்டிய மூப்பர்கள் வாயிலாகப் பாபிலோனினின்று ஒழுக்கக்கேடு வந்துற்றது'' என்று சொல்லியிருந்தார். இவர்கள் யோவாக்கிம் வீட்டில் நெடுநேரம் இருப்பது வழக்கம். வழக்குடையோர் அனைவரும் இவர்களை அணுகுவதுண்டு. நண்பகல் வேளையில் மக்கள் சென்றபின், சூசன்னா தம் கணவரின் தோட்டத்திற்குள் சென்று உலாவு வார். அவர் நாள்தோறும் அங்குச் சென்று உலாவுவதைப் பார்த்து வந்த அந்த முதியோர் இருவரும் அவரைக் காமுறத் தொடங்கினர். இதனால் அவர்கள் தங்கள் மனத்தைத் தகாத வழியில் செலவிட்டார்கள். விண்ணக இறைவனை நினையாதவாறும் நீதித் தீர்ப்புகளைக் கருதாதவாறும் அவர்கள் நெறி மாறிச் சென்றார்கள். அதற்கு ஏற்றதொரு நாளை அவர்கள் எதிர்நோக்கியிருந்தார்கள். ஒரு நாள் சூசன்னா வழக்கம்போல் இரண்டு பணிப்பெண்களோடு மட்டும் தோட்டத்தினுள் நுழைந்து, குளிக்க விரும்பினார்; ஏனெனில், அன்று வெயில் கடுமையாக இருந்தது. அந்த முதியோர் இருவரைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை. அவர்களோ ஒளிந்திருந்து சூசன்னாவைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சூசன்னா பணிப் பெண்களிடம், ``நான் குளிக்க எண்ணெயும் நறுமணப் பொருள்களும் கொண்டு வாருங்கள்; பிறகு தோட்டத்தின் வாயில்களை மூடிவிடுங்கள்'' என்று சொன்னார். பணிப்பெண்கள் வெளியேறியதும் முதியோர் இருவரும் எழுந்து சூசன்னாவிடம் ஓடோடிச் சென்றனர். அவரை நோக்கி, ``இதோ! தோட்டத்தின் வாயில்கள் மூடப்பட்டுள்ளன. யாரும் நம்மைப் பார்க்க முடியாது. நாங்கள் உன்மேல் வேட்கை கொண்டுள்ளோம். எனவே நீ எங்களுக்கு இணங்கி எங்களோடு படு. இல்லாவிடில், ஓர் இளைஞன் உன்னோடு இருந்தான் என்றும், அதற்காகவே நீ பணிப்பெண்களை வெளியே அனுப்பிவிட்டாய் என்றும் உனக்கு எதிராக நாங்கள் சான்று கூறுவோம்'' என்றார்கள். சூசன்னா பெருமூச்சு விட்டு, ``நான் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டேன். நான் உங்களுக்கு இணங்கினால், எனக்குக் கிடைப்பது சாவு; இணங்காவிட்டால் நான் உங்களிடமிருந்து தப்ப முடியாது. ஆனால் ஆண்டவர் முன்னிலையில் பாவம் செய்வதை விட, அதைச் செய்யாமல் உங்களிடம் மாட்டிக்கொள்வதே மேல்'' என்றார். பின் சூசன்னா உரத்த குரலில் கத்தினார். உடனே முதியோர் இருவரும் அவருக்கு எதிராக கூச்சலிட்டனர். அவர்களுள் ஒருவர் ஓடிப்போய்த் தோட்டத்துக் கதவுகளைத் திறந்தார். தோட்டத்தில் கூச்சல் கேட்டதும், சூசன்னாவுக்கு என்ன நிகழ்ந்ததோ என்று அறிய அவர் வீட்டில் இருந்தோர் ஓரக் கதவு வழியே ஓடிவந்தனர். ஆனால் முதியோர் தங்கள் கட்டுக் கதையைச் சொன்னபொழுது, பணியாளர் பெரிதும் நாணங்கொண்டனர்; ஏனெனில் சூசன்னாவைப் பற்றி இது போன்ற எதையும் அவர்கள் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை. மறுநாள் சூசன்னாவுடைய கணவர் யோவாக்கிம் வீட்டில் மக்கள் திரண்டு வந்தார்கள். சூசன்னாவைக் கொல்லும் தீய நோக்குடன் அந்த முதியோர் இருவரும் சேர்ந்து வந்திருந்தனர். அவர்கள் மக்கள் முன்னிலையில், ``கில்கியா மகளும் யோவாக்கிம் மனைவியுமான சூசன்னாவை இங்கு அழைத்து வருமாறு ஆள் அனுப்புங்கள்'' என்று கட்டளையிட்டார்கள். உடனே அவரை அழைத்து வர ஆள் அனுப்பினர். சூசன்னா வந்தார். அவரோடு அவருடைய பெற்றோர், பிள்ளைகள், உறவினர் எல்லாரும் வந்தனர். அவருடைய உற்றார் உறவினரும், அவரைப் பார்த்தவர் அனைவருமே அழுதுகொண்டிருந்தார்கள். முதியோர் இருவரும் மக்கள் நடுவே எழுந்து நின்று, சூசன்னா தலைமீது தங்கள் கைகளை வைத்தனர். அவரோ அழுதுகொண்டே விண்ணக இறைவனை நோக்கினார்; ஏனெனில் அவர் உள்ளம் ஆண்டவரை நம்பியிருந்தது. அப்பொழுது முதியோர் பின்வருமாறு கூறினர்: ``நாங்கள் தோட்டத்தில் தனியாக உலாவிக் கொண்டிருந்த பொழுது, இவள் இரு பணிப்பெண்களோடு உள்ளே வந்தாள்; தோட்டத்து வாயில்களை மூடியபின், பணிப் பெண்களை வெளியே அனுப்பி விட்டாள். பின்னர் அங்கே ஒளிந்துகொண்டிருந்த ஓர் இளைஞன் இவளிடம் வந்து இவளோடு படுத்தான். நாங்களோ தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்தோம்; இந்த நெறிகெட்ட செயலைக் கண்டதும் அவர்களிடம் ஓடிச் சென்றோம். அவர்கள் சேர்ந்திருந்ததைப் பார்த்தோம். ஆனால் அந்த இளைஞனை எங்களால் பிடிக்க முடியவில்லை; ஏனெனில் அவன் எங்களை விட வலிமை மிக்கவன். எனவே அவன் கதவைத் திறந்து வெளியே ஓடிவிட்டான். நாங்கள் இவளைப் பிடித்து, அந்த இளைஞன் யார் என்று கேட்டோம். இவளோ எங்களுக்கு மறுமொழி கூற மறுத்துவிட்டாள். இவற்றுக்கு நாங்களே சாட்சி''. அவர்கள் மக்களுள் மூப்பர்களாகவும் நடுவர்களாகவும் இருந்ததால், மக்கள் கூட்டம் அவர்கள் சொன்னதை நம்பி சூசன்னாவுக்குச் சாவுத் தீர்ப்பிட்டது. அப்பொழுது சூசன்னா உரத்த குரலில் கதறி, ``என்றுமுள்ள இறைவா, மறைவானவற்றை நீர் அறிகிறீர். நிகழுமுன்பே எல்லாம் உமக்குத் தெரியும். இவர்கள் எனக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லியுள்ளனர் என்பதும் உமக்குத் தெரியும். இவர்கள் என்மீது சாட்டிய குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே!'' என்று சொன்னார். ஆண்டவர் சூசன்னாவுடைய கூக்குரலுக்குச் செவிசாய்த்தார். கொல்லப்படுமாறு அவர் நடத்திச் செல்லப்பட்டபொழுது, தானியேல் என்னும் பெயருடைய இளைஞரிடம் தூய ஆவியைக் கடவுள் தூண்டி விட்டார். தானியேல் உரத்த குரலில், ``இவருடைய இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை'' என்று கத்தினார். மக்கள் அனைவரும் அவர்பால் திரும்பி, ``நீர் என்ன சொல்கிறீர்?'' என்று வினவினர். அவரோ அவர்கள் நடுவே நின்றுகொண்டு பின்வருமாறு சொன்னார்: ``இஸ்ரயேல் மக்களே, வழக்கை ஆராயாமலும், உண்மையை அறிந்துகொள்ளாமலும் இஸ்ரயேல் மகள் ஒருத்தியைத் தீர்ப்பிடத் துணிந்துவிட்டீர்களே! அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா? நீதி வழங்கும் இடத்திற்குத் திரும்பிப் போங்கள்; இம்மனிதர்கள் இவருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லியிருக்கிறார்கள்'' என்றார். எனவே மக்கள் எல்லாரும் விரைவாகத் திரும்பி வந்தார்கள். மற்ற மூப்பர்கள் தானியேலிடம், ``நீர் வந்து, எங்கள் நடுவே அமர்ந்து, எங்களுக்கு விரிவாய் விளக்கிக் காட்டும்; ஏனெனில் மூப்பருக்குரிய சிறப்பை கடவுள் உமக்கு அளித்துள்ளார்'' என்று வேண்டிக்கொண்டார்கள். அப்பொழுது தானியேல், ``இவர்களைத் தனித்தனியே பிரித்துத் தொலையில் வையுங்கள். நான் இவர்களை வினவுவேன்'' என்றார். எனவே அவர்கள் இருவரையும் தனித்தனியே பிரித்து வைத்தார்கள். அப்பொழுது தானியேல் அவர்களுள் ஒருவரை அழைத்து, ``தீச்செயலில் விளைந்தவனே! நீ முன்பு செய்த பாவங்கள் இப்பொழுது வெளியாகிவிட்டன. ``மாசற்றவர்களையும் நீதிமான்களையும் சாவுக்கு உள்ளாக்காதே'' என்று ஆண்டவர் சொல்லியிருந்தும் நீ முறைகேடாகத் தீர்ப்புகள் வழங்கி, மாசற்றவர்களைத் தண்டித்து, குற்றவாளிகளை விடுவித்துள்ளாய். இதோ! நீ உண்மையிலேயே சூசன்னாவைப் பார்த்திருந்தால், எந்த மரத்தடியில் அவர்கள் கூடியிருக்கக் கண்டாய், சொல்'' என்று கேட்டார். அதற்கு அவர், ``விளா மரத்தடியில்'' என்றார். அதற்குத் தானியேல், ``நீ நன்றாகப் பொய் சொல்கிறாய். அது உன் தலைமேலேயே விழும். ஏனெனில் கடவுளின் தூதர் ஏற்கெனவே இறைவனிடமிருந்து தீர்ப்பைப் பெற்றுவிட்டார். அவர் உன்னை இரண்டாக வெட்டிப் பிளப்பார்'' என்றார். பின் அவரை அனுப்பிவிட்டு மற்றவரைத் தம்மிடம் அழைத்து வருமாறு பணித்தார். அவரை நோக்கி, ``நீ யூதாவுக்கல்ல, கானானுக்குப் பிறந்தவன். அழகு உன்னை மயக்கிவிட்டது; காமம் உன்னை நெறிதவறச் செய்து விட்டது. நீங்கள் இருவரும் இஸ்ரயேல் மகளிரை இவ்வாறே நடத்தி வந்திருக் கிறீர்கள். அவர்களும் அச்சத்தால் உங்களுக்கு இணங்கிவந்திருக்கிறார்கள். ஆனால் யூதாவின் மகளாகிய இவரால் உங்கள் தீச்செயலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதோ! எந்த மரத்தடியில் சேர்ந்திருக்கும்பொழுது நீ இவர்களைப் பிடித்தாய்? சொல்'' என்றார். அவரோ, ``கருவாலி மரத்தடியில்'' என்றார். தானியேல் அவரிடம், ``நீயும் நன்றாகப் பொய் சொல்கிறாய். அது உன் தலைமேலேயே விழும். ஏனெனில் உன்னை இரு கூறாக வெட்டவும், இவ்வாறு உங்கள் இருவரையும் அழித்தொழிக்கவும் கடவுளின் தூதர் வாளுடன் காத்துக்கொண்டிருக்கிறார்'' என்றார். உடனே மக்கள் கூட்டம் முழுவதும் உரத்த குரல் எழுப்பி, தம்மில் நம்பிக்கை வைப்போருக்கு மீட்பளிக்கும் கடவுளைப் போற்றியது. அவர்கள் அந்த முதியோர் இருவருக்கும் எதிராக எழுந்தார்கள்; ஏனெனில் அவர்கள் பொய்ச் சான்று சொன்னதை அவர்கள் வாய்மொழியாகவே தானியேல் மெய்ப்பித்திருந்தார். அம்முதியோர் பிறருக்குச் செய்ய இருந்த தீங்கை அவர்களுக்கே மக்கள் செய்தார்கள். மோசே சட்டப்படி அவர்களைக் கொன்றார்கள். இவ்வாறு மாசற்ற சூசன்னா அன்று காப்பாற்றப்பட்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்

திபா 23:1-3. 3-4. 5-6

பல்லவி: இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நான் எதற்கும் அஞ்சிடேன்;

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்;
அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; -பல்லவி

3 தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;
உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்;
என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்;
நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம் :
”தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பமன்று; ஆனால் அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி, வாழவேண்டும் என்பதே என் விருப்பம்” என்கிறார் ஆண்டவர்.

யோவான் 8:12-20

தவக்காலம் -ஐந்தாம் வாரம் திங்கள்

 

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 12-20

அக்காலத்தில் இயேசு மக்களைப் பார்த்து, "உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" என்றார். பரிசேயர் அவரிடம், "உம்மைப்பற்றி நீரே சான்று பகர்கிறீர்; உம் சான்று செல்லாது" என்றனர். அதற்கு இயேசு, "என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தாலும் என் சான்று செல்லும். ஏனெனில் நான் எங்கிருந்து வந்தேன், எங்குச் செல்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் எங்கிருந்து வருகிறேன், எங்குச் செல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. ஆனால் நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்புச் செல்லும். ஏனெனில் நான் தனியாகத் தீர்ப்பு வழங்குவதில்லை; என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார். இருவருடைய சான்று செல்லும் என்று உங்கள் சட்டத்தில் எழுதியுள்ளது அல்லவா? என்னைப் பற்றி நானும் சான்று பகர்கிறேன்; என்னை அனுப்பிய தந்தையும் சான்று பகர்கிறார்" என்றார். அப்போது அவர்கள், "உம் தந்தை எங்கே இருக்கிறார்?" என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, "உங்களுக்கு என்னையும் தெரியாது; என் தந்தையையும் தெரியாது. என்னை உங்களுக்குத் தெரிந்திருந்தால் ஒருவேளை என் தந்தையையும் தெரிந்திருக்கும்" என்றார். கோவிலில் காணிக்கைப் பெட்டி அருகிலிருந்து இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது இவ்வாறு சொன்னார். அவரது நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைப் பிடிக்கவில்லை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

ஒளியினின்று ஒளியாக
யோவான் 8:12-20

யோவான் நற்செய்தியாளரின் தனிச்சிறப்பு இந்த “நானே” என்ற வார்த்தைகளில் அடங்கியிருக்கின்றது. “நானே” என்ற வார்த்தையை ஏழு முறை யோவான் பயன்படுத்துகிறார். இவை மிக ஆழமான இறையியலையும், யூத வரலாற்றையும், இயேசுவைப் பற்றிய புரிதலையும் நமக்கு எண்பிக்கிறது.
1. நானே வாழ்வு தரும் உணவு (6:35-48)
2. நானே உலகின் ஒளி (8:12, 9:5)
3. நானே வாயில் (10:7)
4. நானே நல்லாயன் (10:11-14)
5. நானே உயிர்ப்பும் வாழ்வும் (11:25)
6. நானே வழியும் உண்மையும் வாழ்வும் ( 14:6)
7. நானே திராட்சைக் கொடி (15:1-5)

இவ்வுலகினைப் படைக்கும்போது இவ்வுலகம் வெறுமையாய் இருள் பரவியிருந்தது. (தொ.நூ 1:2) அப்பொழுது இவ்விருளினை அகற்ற கடவுள் முதன் முறையாகப் படைத்தது இவ்வொளியைNயு. அவ்வொளியே அனைத்திற்கும் முதல் புள்ளியாக இருந்தது. அவ்வொளியே மற்ற அனைத்தும் உருவாக, உயிர்பெறக் காரணமாக இருந்தது. பின்னர் இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டிற்கு நடந்து செல்லும் போது ஆண்டவர் அவர்களை வழிநடத்த பகலில் மேகத்தூணிலும் இரவில் ஒளிகாட்ட நெருப்புத் தூணிலும் இருந்தார். (வி.ப 13:21) இதனைப் போலவே நம் பாவ அடிமைத்தனத்திலிருந்து நமக்கு வாக்களிக்கப்பட்ட நிலைவாழ்விற்கு அழைத்துச் செல்வதே இவரின் ஒளி. ஆம் இயேசுவின் ஒளி.

நம்மை வழிநடத்துவதோடு மட்டும் இவ்வொளி நின்று விடாது. இவ்வொளியின் (இயேசு) நோக்கம் என்னவென்றால் நாமும் அவரைப் போன்ற ஒளியாக வேண்டும். நம்பிக்கை அறிக்கையில் இவ்வாறு கூறுகிறோம், “கடவுளினின்றுக் கடவுளாக ஒளியினின்று ஒளியாக…” ஆம் கடவுளின் ஒளி எவ்வாறு இயேசுவின் ஒளியாக மாறியதோ, அதுபோல நாமும் இயேசுவைப் போன்ற ஒளியாக மாற வேண்டும். இதையே மத்தேயு 5:14 ல் “நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்” என்று வாசிக்கின்றோம்;.

இயேசுவின் ஒளியை நாம் ஒவ்வொருவரும் ஏந்துவது இச்சமூகத்தில் இருக்கும் அனைத்துத் தீய சக்திகளையும் சுட்டெரிக்க இருளாமை என்னும் அறியாமையை நீக்க, வறுமையை ஒழிக்க…..

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

இயேசுவைப் பின்தொடர்வோம்

இயேசு தன்னைப் பின்தொடர்வதைப் பற்றி இன்றைய நற்செய்தியிலே பேசுகிறார். “பின் தொடர்தல்“ என்கிற வார்த்தைக்கான கிரேக்க வார்த்தை “அகோலேதின்“ (Akoluthein). இந்த கிரேக்க வார்த்தைக்கு ஐந்து அர்த்தங்கள் தரப்படுகிறது. 1. ஒரு போர்வீரன் தனது தளபதியைப் பின்தொடர்வது. தளபதி எங்கே சென்றாலும், என்ன செய்யச் சொன்னாலும் அவரையும், அவரது கட்டளையையும் பின்தொடர்வது. 2. ஓர் அடிமை தனது தலைவனைப் பின்தொடர்வது. அடிமைக்கு உரிமையில்லை. தலைவனைப் பின்தொடர வேண்டும். அதுதான் அவனது கடமை. 3. ஒரு ஞானியின் அறிவுரையைப் பின்பற்றுவது. நமது வாழ்வில் பல பிரச்சனைகள் வருகிறபோது, மூத்தவர்களிடத்தில் ஆலோசனைக்காகச் செல்கிறோம். அவர்களது அனுபவத்தில் கொடுக்கும் ஆலோசனைகளை ஏற்று நடந்து, அதனை பின்பற்றுகிறோம்.

4. நாட்டின் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கக்கூடிய நிலை. ஒவ்வொரு நாட்டிலும் கொடுக்கப்பட்டிருக்கிற சட்டங்களை, மதித்து அதற்கேற்ப, அதனை அடியொற்றி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுதல். 5. ஆசிரியரின் அறிவுரையை ஏற்று நடப்பது. நமக்கு அறிவுபுகட்டுபவர் ஆசான். அவர் நம்மை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்பவர். அவருடைய அறிவுரையை நாம் பின்பற்றுகிறோம். இயேசுவைப் பின்பற்றுவது என்பது, நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவருக்கே கொடுத்து பின்பற்றுவதுதான் என்பதை, மேலே குறிப்பிட்டிருக்கிற ஐந்து அர்த்தங்களும் நமக்கு எடுத்துரைக்கின்றன. இத்தகைய பின்தொடர்தலைத்தான் இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

இயேசு நமக்கு ஆசிரியராக, ஞானியாக. தளபதியாக, தலைவராக, நல்வழியில் நடத்திச்செல்பவராக இருக்கிறார். அவரைப்பின்பற்றினால் நமக்கு நிச்சயம் நிறைவாழ்வு கிடைக்கும். சீடர்கள் இயேசுவை முழுமையாகப் பின்பற்றினார்கள். அதற்காக அனைத்தையும் தியாகம் செய்தார்கள். அதேபோல நாமும் இயேசுவை முழுமையாகப் பின்பற்றுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நிலையான பேரின்ப வாழ்வு

இயேசுவுக்கும், யூதச்சங்கத்தினருக்கும் நடைபெறும் இந்த வாக்குவாதம் யெருசலேம் ஆலயத்தின் கருவூலப்பகுதியில் நடைபெறுகிறது. ஆலயக்கருவூலப்பகுதி ஆலயத்தின் பெண்கள் முற்றத்தில் அமைந்திருந்தது. யெருசலேம் ஆலயத்தின் முதல் முற்றம் புறவினத்தார்க்கு உள்ள முற்றம். இரண்டாம் முற்றம் பெண்களுக்கானது. பெண்கள் முற்றத்தைச்சுற்றி அமைந்த சுவற்றில் 13 இடங்களில் காணிக்கை செலுத்துவதற்கு ஏதுவான வகையில் ‘எக்காளம்’ போன்ற ஒரு அமைப்பை வடிவமைத்திருந்தனர். ஒவ்வொரு காணிக்கைப்பெட்டியிலும் போடும் பணமும், குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. முதல் இரண்டு காணிக்கைப்பெட்டிகளில் ஒவ்வொரு யூதரும் செலுத்த வேண்டிய ஆலய வரிக்கான பணமாகும். 3 வது மற்றும் 4வது பெட்டிகளில், தூய்மைப்படுத்தும் சடங்கிற்காக காணிக்கை செலுத்தப்படும் இரண்டு மாடப்புறாக்கள் வாங்குகிற பணம் செலுத்தப்பட்டது. 5வது பெட்டியில், பலிசெலுத்துவதற்கு வாங்கப்படும் விறகுகளை வாங்குவதற்குப் பயன்பட்டது. 6வது பெட்டியில் சாம்பிராணி வாங்குவதற்கான காணிக்கை போடப்பட்டது. ஏழாவது பெட்டியில், பலிசெலுத்தப்பயன்படும் தங்கப்பாத்திரங்களை பராமரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. ஏனைய 6 காணிக்கைப்பெட்டிகளில், தங்களுடைய விருப்பக்காணிக்கைகளை மக்கள் போடுவது வழக்கமாக இருந்தது. எனவே, இந்த ஆலயக்கருவூலப்பகுதி எப்போதுமே மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாக இருந்தது. இத்தகைய ஆலயத்தின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் வாக்குவாதம் நடைபெறுகிறது.

கூடாரத்திருவிழாவின் முதல் நாளில் மாலை வேளையில், ஒளியின் திருவிழா ஆலயத்தின் பெண்கள் முற்றத்தில் உள்ள வளாகத்தில் கொண்டாடப்பட்டது. வளாகத்தின் நடுவில் நான்கு மிகப்பெரிய தீபங்கள் ஏற்றப்பட்டன. இந்த தீபங்கள் யெருசலேம் முழுவதற்கும் ஒளி தருமாறு, ஏற்றப்பட்டது. மாலையில் ஏற்றப்படும் இந்த தீபம் அடுத்தநாள் காலை வரை எரிந்து ஒளிதரும். இந்த ஒளியின் முன்னால் இஸ்ரயேலின் பெரியவர்கள் ஆடிப்பாடி மகிழ்வார்கள். இயேசு இந்தப்பிண்ணனியில் தான், நானே உலகின் ஒளி என்கிறார். அதாவது, இங்கே இந்த முற்றத்தில் எரியவிடப்படும் தீபம் மாலை எரிந்து காலையில் அணைந்து விடும். யெருசலேம் நகர் மட்டும் ஒளி கொடுக்கும். ஆனால், நானோ வாழ்வு முழுவதும், இந்த உலகத்திற்கே ஒளி கொடுக்கும் விளக்கு என்று இயேசு சொல்கிறார். கிரேக்கத்தில் ஒளி என்பதை வாழ்வு தரக்கூடியதாக ஒப்பிடுகிறார்கள். எவ்வாறு ஒளி இல்லாமல், பூக்கள் மலராதோ, அதேபோல் இயேசு என்னும் ஒளி இல்லாமல் நமது வாழ்வு மலர முடியாது. இங்கே நமக்குத் தரப்படும் பதில்: இயேசு இல்லாமல் நமக்கு வாழ்வு இல்லை. இயேசுவை பின்பற்றிச்சென்றால் மட்டுமே நமக்கு வாழ்வு உண்டு என்பதுதான்.

வாழ்வு என்பது இந்தப்பூமியில் வாழ்கிற வாழ்வு மட்டுமல்ல, இறப்பிற்கு பின்னாலும் வாழப்படுகிற வாழ்வு. அந்த நிலையான வாழ்வைப்பெற நாம் இயேசுவைப் பின்பற்ற வேண்டும். அதாவது, இயேசு நமக்கு கற்றுத்தந்திருக்கிற வாழ்வின் மதிப்பீடுகளை நாம் வாழ்வில் பின்பற்ற வேண்டும். அத்தகைய வாழ்வு நமக்கு நிலையான பேரின்ப வாழ்வைப்பெற்றுத்தரும்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

”உலகின் ஒளி நானே !”

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

#8220;உலகின் ஒளி நானே. என்னைப் பின் தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார். வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார் என்னும் ஆண்டவர் இயேசுவின் அருள்மொழிகளை இன்று தியானிப்போம்.

யோவானின் இறையியல் மொழியில் ‘இருள்’ என்பது பாவத்தைக் குறிக்கிறது. இறைவனை விட்டுப் பிரிந்த நிலையைச் சுட்டுகிறது. எடுத்துக்காட்டாக, இறுதி இராவுணவின்போது யூதாஸ் இயேசுவைவிட்டுப் பிரிந்துசென்றபோது, யோவான் சொல்லும் வார்த்தை: #8220;அது இரவு நேரம்” (யோவா 13:30). #8220;பவுலடியாரும் இரவு முடியப்போகிறது. பகல் நெருங்கி உள்ளது. ஆகவே, இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்துகொள்வோமாக. பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்துகொள்வோமாக. களியாட்டம், குடிவெறி, கூடாஒழுக்கம், காமவெறி, சண்டை சச்சரவு ஆகியவற்றைத் தவிர்ப்போமாக” (உரோ 13:12-13) என்று கூறுகிறார். எனவே, நாம் இருளில் நடவாமல், ஒளியில் நடக்க நமக்கு ஒளியாக இருக்கிறார் ஆண்டவர் இயேசு. அவரைப் பின்தொடர்வோமாக. நமது வாழ்வு ஒளி நிறைந்த வாழ்வாக அமையட்டும்.

மன்றாடுவோம்: உலகின் ஒளியான இயேசுவே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். எங்களை இருளின் செயல்களிலிருந்து விடுவித்து, ஒளியின் மக்களாக வாழச் செய்வீராக. வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியை நாமக் கொண்டிருப்போமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருட்தந்தை குமார்ராஜா

----------------

''மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, 'உலகின் ஒளி நானே;
என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்;
வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்' என்றார்'' (யோவான் 8:12)

சிந்தனை
-- ஒளியும் இருளும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஒளி என்பது கடவுளின் உடனிருப்பு என்றால் இருள் என்பது கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதையும் இயேசு வழியாகக் கடவுள் தம்மை வெளிப்படுத்துகிறார் என்பதையும் ஏற்க மறுப்பதைக் குறிக்கும். இயேசுவை எதிர்த்தவர்கள் ஒருவிதத்தில் இருளில் இருந்தார்கள். கடவுள் பற்றிய உண்மையை இயேசு வெளிப்படுத்தியதை அவர்கள் ஏற்க மறுத்தார்கள். எனவே அவர்கள் இயேசு உண்மையைக் கூறுகிறாரா இல்லையா என்பதுபற்றி என்ன சான்று உள்ளது எனக் கேட்கிறார்கள். யூத வழக்கப்படி, ஒருவர் உண்மை பேசுகிறார் என்பதை நிலைநாட்ட இரு சாட்சிகள் தேவைப்பட்டனர். இங்கேயோ இயேசு அத்தகைய இரு சாட்சிகள் பற்றிப் பேசுகிறார். ''என்னைப் பற்றி நானும் சான்று பகர்கிறேன்; என்னை அனுப்பிய தந்தையும் சான்று பகர்கிறார்'' (யோவா 8:18) என இயேசு கூறுகிறார்.

-- ஆனால் இயேசுவின் எதிரிகள் இயேசுவுக்கும் அவரை அனுப்பிய தந்தையாம் கடவுளுக்கும் இடையே நிலவுகின்ற நெருங்கிய உறவைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். இயேசு கடவுளைப் பற்றிய உண்மையை நமக்கு அறிவிக்கிறார் எனவும், கடவுளைக் காண வேண்டும் என்றால் நாம் இயேசுவில் அவரைக் காண வேண்டும் எனவும் நாம் நம்பாவிட்டால் நாமும் ''இருளில் நடப்போருக்கு'' ஒப்பாவோம். இயேசு காட்டுகின்ற ஒளியில் நடப்போர் பிறருக்கும் ஒளியாக மாறுவார்கள். ஏனென்றால் ''உலகின் ஒளி நானே'' (யோவா 8:12) என்று கூறிய இயேசு ''நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்'' எனவும் தம் சீடர்களை நோக்கிக் கூறுகிறார் (காண்க: மத் 5:14). இன்றைய உலகில் நாம் ஒளியாய் விளங்க வேண்டும் என்றால் இருள்நிறைந்த மனித உள்ளங்களில் இயேசுவின் ஒளியை நாம் பாய்ச்ச வேண்டும்; இருள்நிறைந்த உலகப் போக்குகளையும் மன நிலைகளையும் மாற்றியமைக்க நாம் செயல்பட வேண்டும்; கடவுள் பற்றிய உண்மையைக் கண்டுகொள்ள மறுத்து, தீக்கோழி போல மண்ணுக்குள் தலையைப் புதைக்கும் போக்கு மறைந்திட நாம் உழைக்க வேண்டும். இருளில் நடப்போருக்கு ஒளி துணையாவதுபோல நாமும் கிறிஸ்து என்னும் ஒளியை நம்மில் கொண்டிருந்தால் பிறருக்கும் ஒளியாக மாறுவோம்.

மன்றாட்டு
இறைவா, உலகின் ஒளியாய் வந்த உம் திருமகனில் உம் ஒளியைக் காண எங்களுக்கு அருள்தாரும்.

-- அருட் தந்தை பவுல் லியோன்