முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 1-18

அந்நாள்களில் பிற இனத்தவரும் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டதைப்பற்றித் திருத்தூதர்களும் யூதேயாவிலுள்ள சகோதரர் சகோதரிகளும் கேள்விப்பட்டார்கள். பேதுரு எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, விருத்தசேதனம் செய்துகொண்டவர்கள் அவரோடு வாதிட்டனர். ``நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?'' என்று குறை கூறினர். பேதுரு நடந்தவற்றை ஒன்றன்பின் ஒன்றாக விளக்கிக் கூறத் தொடங்கினார். ``நான் யோப்பா நகரில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது மெய்ம்மறந்த நிலையில் ஒரு காட்சி கண்டேன். பெரிய கப்பற்பாயைப் போன்ற ஒரு விரிப்பு நான்கு முனைகளிலும் கட்டப்பட்டு வானத்திலிருந்து இறக்கப்பட்டு என்னிடம் வந்தது. அதை நான் கவனமாக நோக்கியபோது, தரையில் நடப்பன, ஊர்வன, வானில் பறப்பன, காட்டு விலங்குகள் ஆகியவற்றைக் கண்டேன். `பேதுரு, எழுந்திடு! இவற்றைக் கொன்று சாப்பிடு' என்னும் ஒரு குரல் ஒலிப்பதையும் கேட்டேன். அதற்கு நான், `வேண்டவே வேண்டாம் ஆண்டவரே, தீட்டானதும் தூய்மையற்றதுமான எதுவும் ஒருபோதும் என் வாய்க்குள் சென்றதில்லையே' என்றேன். இரண்டாம் முறையும் வானிலிருந்து மறுமொழியாக, `தூய்மையானது எனக் கடவுள் கருதுவதைத் தீட்டாகக் கருதாதே' என்று அக்குரல் ஒலித்தது. இப்படி மும்முறை நடந்தபின்பு யாவும் வானத்துக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்நேரத்தில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூவர் நான் தங்கியிருந்த வீட்டின் முன் வந்து நின்றனர். தூய ஆவியார் என்னிடம், `தயக்கம் ஏதுமின்றி அவர்களோடு செல்' என்று கூறினார். உடனே நானும் இந்த ஆறு சகோதரர்களுமாக அந்த மனிதர் வீட்டுக்குச் சென்றோம். அவர் தம் வீட்டில் வானதூதர் வந்து நின்றதைக் கண்டதாகவும், அத்தூதர் பேதுரு என்னும் பெயர் கொண்ட சீமோனை வரவழையும்; நீரும் உம் வீட்டார் அனைவரும் மீட்புப் பெறுவதற்கான வார்த்தைகளை அவர் உம்மோடு பேசுவார் என்று தமக்குக் கூறியதாகவும் எங்களுக்கு அறிவித்தார். நான் பேசத்தொடங்கியதும் தூய ஆவி முதலில் நம்மீது இறங்கி வந்ததுபோல் அவர்கள் மீதும் இறங்கி வந்தது. அப்போது, `யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார்; ஆனால் நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்' என்ற ஆண்டவரின் வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன். இப்போதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டபோது நமக்கு அருளப்பட்ட அதே கொடையைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் கடவுளைத் தடுக்க நான் யார்?'' என்றார். இவற்றைக் கேட்டு அவர்கள் அமைதி அடைந்தனர்; வாழ்வுக்கு வழியான மனமாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார் என்று கூறி அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 42: 1-2; 43: 3. 4
பல்லவி: உயிருள்ள இறைவன்மீது என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது.

42:1 கலைமான் நீரேடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே!
என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.
2 என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது;
எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்? -பல்லவி

43:3 உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்.
அவை என்னை வழி நடத்தி,
உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். -பல்லவி

4 அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்;
என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்;
கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

யோவான் 10:1-10

பாஸ்கா காலம் 4ஆம் வாரம் திங்கள்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-10

அக்காலத்தில் இயேசு கூறியது: ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். அறியாத ஒருவரை அவை பின்தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது.'' இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. மீண்டும் இயேசு கூறியது: ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே. எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருத்தூதர் பணி 11: 1 – 18
இறைவனின் பார்வை

மனிதர்களின் பார்வையும், கடவுளின் எண்ணங்களும் எந்த அளவிற்கு வேறுபாடானதாக இருக்கிறது என்பதை, இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. பேதுரு ஒரு யூதர். அவருடைய பார்வை யூதப்பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கிறது. அந்த பாரம்பரியத்தின் பார்வையில் தான், எது தவறு? எது சரி? என்று அவர் முடிவெடுக்கிறார். யூதர்களுக்கு தங்களது இனம் தான் தூயது என்கிற எண்ணம் இயல்பாகவே இருந்தது. பேதுருவும் அந்த சிந்தனையில் தான் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் வேறு இனத்தவரோடு, அதாவது விருத்தசேதனம் செய்யாத இனத்தவரோடு உணவு உண்டது, மற்றவர்களுக்கு இடறலாக இருப்பதாக, அவரிடத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அதற்கான பதிலாக, தான் கண்ட காட்சியை பேதுரு வெளிப்படுத்துகிறார்.

ஒருவர் எந்த இனத்திலிருக்கிறார் என்பது முக்கியமல்ல. அவர் பெற்றிருக்கிற விசுவாசம் தான், அவரை கிறிஸ்துவுக்குள் இருக்கிறவராக காட்டுகிறது. உண்மையான கிறிஸ்தவர் என்பது, நாம் சார்ந்திருக்கிற இனத்தின் மூலமாக அல்ல, மாறாக, நாம் பெற்றிருக்கிற விசுவாசத்தின் மூலமாகத்தான் என்பது, இங்கு நமக்கு தரப்படுகிற செய்தியாக இருக்கிறது. நேர்மையான உள்ளத்தோடு, உண்மையான மனநிலையோடு நாம் கடவுளைத் தேடுகிறபோது, நிச்சயமாக நாம் கடவுளை அடைய முடியும். அது கடினமானது அல்ல. நாம் கொண்டிருக்கிற நம்பிக்கை நம்மை கடவுளிடம் கொண்டு போய் சேர்த்து விடும். அதற்கு இன்றைய பகுதி சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.

இன்றைய நாம் வாழும் நாட்டில், மதத்தின் பெயரால் கேவலமான காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறது. மதம் ஒருவனை முட்டாளாக்குகிறது. மதத்தின் பெயரால் அடாவடித்தனங்கள் நடந்து கொண்டிருக்கிறது. எந்த மதமாக இருந்தாலும், அது கண்டிக்கத்தக்கது. இறைவனுடைய பார்வையில் அருவருக்கத்தக்கது. அதற்கான கூலியை ஒருவர் நிச்சயம் பெற்றுக்கொள்வார் என்பதில் ஐயமில்லை.

- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இயேசுவே உண்மையான வாயில்

”ஆடுகளுக்கு வாயில் நானே” என்று இயேசு சொல்கிறார். முற்காலத்தில் கிராமங்களிலும், நகரங்களிலும் பொதுவான் ஆட்டுக் கொட்டில்கள் அமைக்கப்பட்டிருந்தன. பகலில் மேய்ந்தபிறகு மாலையில் ஒட்டு மொத்த ஆடுகளும் ஒரே கொட்டிலில் அடைக்கப்பட்டன. அந்த கொட்டில் பாதுகாப்பான கதவினால் அடைக்கப்பட்டிருந்தது. கொட்டிலைப் பாதுகாக்கக்கூடிய ஆயனிடம் மட்டும் தான், அதற்கான திறவுகோல் இருந்தது. அவர் மட்டும் தான் வாயில் வழியாக நுழைய முடியும். இதைத்தான் 2வது மற்றும் 3வது இறைவார்த்தை சொல்கிறது: ”வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும்”.

ஆடுகளை கோடைக்காலத்தில் மலைப்பகுதியில் மேய்க்கச் செல்கிறபோது, ஒவ்வொரு நாளும் திரும்பி வருவது கடினம். எனவே, மலைப்பகுதியில் கொட்டிலை அமைப்பர். இது ஊரில் அமைப்பது போல பாதுகாப்பானது அல்ல. திறந்தவெளியில் கொட்டிலை அடைத்திருப்பர். ஆடுகள் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் ஒரு சிறிய வழியை ஏற்படுத்தியிருப்பர். இரவு நேரங்களில் ஆயனே அந்த வழியில் படுத்திருப்பார். அவரைத்தாண்டி, ஆடுகள் வெளியே செல்லாது. இங்கு ஆயனே வழியாக இருக்கிறார், என்கிற இந்த உருவகத்தைத்தான் இயேசு இங்கே சொல்கிறார். அதாவது இயேசு காவலாகவும் இருக்கிறார், தந்தையை அடைவதற்கான வழியாகவும் இருக்கிறார் என்பது இதன் பொருள்

நாம் அனைவரும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிற மந்தைக்கு காவலாகவும் இருக்க வேண்டும். அதேவேளையில் அவர்களை கடவுளை நோக்கி வழிநடத்திச் செல்லக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். இயேசுவைப்போல மக்களின் மீட்பிற்கான வழியைக் காட்டுகிறவர்களாக வாழ வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------

நல்ல ஆயன் நானே

கடவுள் இஸ்ரயேல் மக்களை வழிநடத்த, மோசேயை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு அழகான கதை ஒன்று சொல்கிறார்கள்? ஒருமுறை மோசே தனது மாமனாரின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, ஓர் ஆட்டுக்குட்டி தப்பியோடியது. மோசே அந்த ஆட்டுக்குட்டியைத் தேடிச்செல்கிறார். இறுதியாக, அந்த ஆட்டுக்குட்டி கிணற்றருகே நின்று தண்ணீர் குடிப்பதைப்பார்க்கிறார். அந்த ஆட்டுக்குட்டியைப்பார்த்து மோசே சொல்கிறார்: ”உனக்கு அதிகமான தாகம் இருந்ததால், நீ தண்ணீருக்காகத்தான் இவ்வளவுதூரம் ஓடிவந்திருக்கிறாய் என்பதை அறியாமல் இருந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு. இப்போது நீ களைப்பாயிருப்பாய். எனவே, எனது தோளில் இளைப்பாறு” என்று சொல்லி நடக்க ஆரம்பித்தாராம்.

தனது மாமனாரின் ஆட்டுமந்தையாக இருந்தாலும்கூட, ஓர் ஆட்டுக்குட்டிதானே என்றும் பாராமல், கண்ணும் கருத்துமாக தனது மந்தையைப்பராமரித்ததால் தான், கடவுள் மோசேயை தனது பணிக்காகத் தேர்ந்தெடுத்தார் என்று அந்த கதை நமக்குச்சொல்கிறது. இது கதையாக இருந்தாலும், மோசே ஓர் ஆயனாக தனது பொறுப்பை எத்துணை அர்ப்பண உள்ளத்தோடு செய்தார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இயேசு நானே நல்ல ஆயன், என்று சொல்கிறபோது, ஓர் ஆயருடைய பரிவும், பாசமும், தனது மந்தையின்மீது அவர் வைத்திருக்கும் அளவுகடந்த பாசமும் இங்கே வெளிப்படுகிறது.

ஆயனாக கடவுள் நம்மேல் வைத்திருக்கும் அன்பை, மந்தையாக இருக்கக்கூடிய நாம் எவ்வாறு பார்க்கிறோம். அவரது பரிவு, பாசம், அன்பிற்கு நம்மையே நாம் தகுதிஉள்ளவர்களாக மாற்றுகிறோமா? அவருடைய பாசத்தை உணர்ந்து, ஆயனுடைய உணர்வுகளை புரிந்து நடந்துகொள்கிறோமா? சிந்திப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசு அருளும் நிறைவாழ்வு

“நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்” என்னும் இயேசுவின் மிகப் பிரபலமான இந்த சொற்களை இன்று நாம் சிந்திப்போம்.

நாம் அனைவரும் வாழவேண்டும் என்பதுதான் இறைவனின், இறைமகன் இயேசுவின் விருப்பம். நாம் துன்புறவேண்டும், மடியவேண்டும் என்பது இறைத் திருவுளமாக இருக்க முடியாது. இதனை நம் விசுவாசத்தின் அடிப்படைக் கோட்பாடாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, நாம் நிறைவாழ்வு பெறவேண்டும் என்பது இயேசுவின் விருப்பம். வாழ்வது ஒருமுறை, அந்த ஒரு வாழ்வும் நிறைவானதாக, முழுமை பெற்றதாக அமைய வேண்டும். மானிடர்களின் உளவியல் தேவைகள் பற்றி ஆய்வுசெய்த ஆபிரகாம் மாஸ்லோ என்னும் அறிஞர் “ஆளுமை நிறைவுத் தேவை” (Self Actualization) என்பதையே மானிட நிறைவுத் தேவையாகக் குறிப்பிட்டார்.

இயேசுவின் நிறைவாழ்வு என்பதுவும் அதுவே. எந்த நோக்கத்துக்காக இறைவன் நம்மைப் படைத்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறும்படி வாழ்வதுதான் நமது நிறைவாழ்வு. “தந்தை எனக்குக் கொடுத்த வேலையைச் செய்துமுடிப்பதே என் உணவு” (யோவா 4: 34) என்று மொழிந்த இயேசுவைப் போல, இறைவன் நம்மைப் படைத்த நோக்கத்தை நிறைவேற்றுவதே நிறைவாழ்வு. அதற்கான அருளை, ஆற்றலை உயிர்த்த இயேசுவிடமிருந்து பெற்றுக்கொள்வோமா!

மன்றாடுவோமாக: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நீர் வாக்களித்த நிறைவாழ்வை, உமது தூய ஆவியின் ஆற்றலால் எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

''தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார்.
ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றிற்குத் தெரியும்'' (யோவான் 10:4)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- ஆடுகள், ஆட்டு மந்தை, ஆயன் ஆகிய உருவகங்கள் கடவுளையும் கடவுள் அன்புசெய்கின்ற மக்களையும் குறிப்பதற்குப் பயன்பட்டன. பழைய ஏற்பாட்டில் இவ்வுருவகங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன (காண்க: திபா 23; எசா 40:41; எரே 32:1-3; எசே 34:11-15). அதுபோலவே, புதிய ஏற்பாட்டில் இயேசு தம்மை ''நல்ல ஆயனாக'' அறிவிக்கிறார் (காண்க: மத் 9:36; 18:12-13; மாற் 6:34; லூக் 15:3-7; யோவா 10:1-30; 1 பேது 2:25). இயேசு நம் நல்ல ஆயர் என்றால் நாம் அவருடைய மந்தை. ஆட்டு மந்தை என்றதும் சிலர் எதிர்மறையாகப் பார்ப்பதுண்டு. அதாவது, சுய சிந்தனை இல்லாமல் கூட்டத்தோடு கூட்டமாகச் செல்கின்ற போக்கு ''மந்தை மனப்பான்மை'' எனப்படுவதுண்டு. ஆனால் இயேசு குறிப்பிடுகின்ற மந்தை இத்தகைய சிந்தனையற்ற கும்பல் அல்ல. கடவுள் அன்போடும் பாசத்தோடும் பராமரிக்கின்ற மக்களே இங்கு ''மந்தை'' என்னும் உருவகத்தால் குறிக்கப்படுகின்றனர். பாலஸ்தீன நாட்டில் ஆடு மேய்க்கும் பணி சிறிது வித்தியாசமாக நடக்கும். அதாவது, ஆயர் தம் ஆடுகளை ஓட்டிச் செல்வதில்லை, மாறாக அவற்றிற்கு முன் தாம் நடந்துசென்று வழிகாட்டுவார். ஆடுகள் ஆயரைப் ''பின்தொடரும்''. அவ்வாறு வழிநடத்தும்போது ஆயர் தம் ஆடுகளைப் பெயர் சொல்லி அழைப்பதும் உண்டு. ஆயரின் குரலை ஆடுகள் அடையாளம் கண்டுகொள்வதால் அவை ஆயரின் அடிச்சுவட்டில் நடந்துசெல்லும்.

-- இந்த உருவகத்தை இயேசு தமக்குப் பொருத்தி உரைக்கிறார். இயேசுவின் அன்புக்கு உரிய நாம் அவருடைய குரலைக் கேட்கின்றோம். அவர் நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். எனவே கடவுளின் அழைத்தலுக்குச் செவிமடுக்கும் போது நாம் ஒவ்வொருவரும் கடவுளின் அன்பைத் தனிப்பட்ட விதத்தில் உணர்கிறோம். அதே நேரத்தில் கடவுள் தம் மந்தையை ஓர் அன்புச் சமுதாயமாக உருவாக்குகிறார். அச்சமுதாயம் அன்புப் பிணைப்பால் இணையும். இஸ்ரயேல் மக்களைக் கடவுள் முன்னின்று வழிநடத்திய போது மக்கள் பயமின்றி அவரைப் பின்தொடர்ந்தனர். எகிப்திய நாட்டில் அடிமைகளாக இருந்த நிலையைக் கடந்துசென்று கடவுள் வாக்களித்த நாட்டில் சுதந்திர மக்களாகக் குடியேறினார்கள். இயேசு நம் நல்ல ஆயராக இருப்பதால் அவர் முன்செல்ல நாம் அவரைப் பின்செல்ல அழைக்கப்படுகிறோம். அவர் வழிநடந்த பாதை சிலுவைப் பாதை. அவ்வழியில் செல்வோர் துன்பத்தையும் சாவையும் சந்திக்க நேரிடும். ஆனால் சாவின் வழியாக வாழ்வு பிறக்கும் என்னும் நம்பிக்கை நமக்கு உண்டு. நம் ஆயர் இயேசுவை நமக்கு இந்நம்பிக்கையைத் தருகின்றார். அவர் சென்ற வழியில் நாம் சென்றால் நிலைவாழ்வு நமக்குக் கடவுளின் கொடையாக வழங்கப்படும்.

மன்றாட்டு
இறைவா, உம் வழிநடத்தல் இருப்பதால் நாங்கள் தவறிச் செல்லாதிருக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------

"நானே வாயில்."

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

வீட்டுக்கு வீடு வாசல் எப்போதும் இருக்கிறது. அதோடு கதவு,இரும்பு கேட், பூட்டு, காவலாளி என்று இக்காலத்தில் கதவின் பரிமாணம் நீண்டுகொண்டே போகிறது. வீட்டுக்கு வாசல் அவசியம். கதவு தேவையில்லை. எங்கு திருட்டும் தீய வாழ்க்கையும் இருக்கிறதோ அங்கு அவசியம். கதவின் பரிமாணம் விரிந்துகொண்டு போவதன் அடையாளம், நாட்டில் திருட்டும் தீமையும் பயமும் பாதுகாப்பின்மையும் பெருகிவருகிறது என்று அர்த்தம்.

உன் வீட்டுக்கு வாயில் இயேசு. உன் இதயத்திற்கு கதவு இயேசு. என்ன நடக்கும்? அனைத்தும் வடிகட்டப்படும். தீயவர்கள் அனைவரும் வாசலிலே நிறுத்தப்படுவர். தீய எண்ணங்கள், தீய செயல்வடிவங்கள் இதயத்துள் நுழையாமல் வடிகட்கடப்படும். வெளியிலிருந்து தீயவன், திருடன் உள்ளே நுழையமுடியாது. உள்ளிருந்தும் தீய பாதிப்பபை வெளிறே ஏற்படுத்த முடியாது. இயேசு உங்கள் வீட்டின் வாயிலாக இருக்கட்டும். தீமை உங்களை அணுகாது.

எல்லாருடைய வீட்டிற்கும் இதயத்திற்கும் இயேசுதான் வாயில். அதுவும் தலை வாயில். ஆனால் நாமே அவ்வப்போது அமைக்கும் புற வாசல்களால்தானே விவகாரம், பிரச்சனை, பாதிப்பு, குடும்பத்தில் குழப்பம் எல்லாம் வருகிறது. தவரான நட்பு என்றொரு புறவாசல், குடி வெறி என்ற புறவாசல், தொலைக்காட்சி என்னும் தொல்லை வாசல், சந்தேகம், பொருளாசை, பேராசை, இன்னும் அவ்வப்போது திறக்கும் ஜன்னல்கள், வென்றிலேட்டர்கள், இப்படி பல புற வாசல்களை அமைத்து, வீட்டையும் இதயத்தையும் வீணடித்துவிடுகிறோம்.

"நானே வாயில்" என்ற இயேசுவின் பாதுகாப்பில் வீட்டையும் இதயத்தையும் வாழ்க்கையையும் அமையுங்கள். அவர் தம் உயர் கொடுத்தும் உனனைக் காக்கும் நல்ல ஆயன். அவர் பாதுகாப்பில் இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்