முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 8-12

அந்நாள்களில் பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு கூறியது: ``மக்கள் தலைவர்களே, மூப்பர்களே, உடல்நலமற்றிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம். நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். இந்த இயேசுவே, `கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார்.' இவராலே அன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 118: 1,8-9. 21-23. 26,28,29 (பல்லவி: 22)
பல்லவி: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
8 மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!
9 உயர்குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! -பல்லவி

21 என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.
22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! -பல்லவி

26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.
28 என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.
29 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. -பல்லவி

இரண்டாம் வாசகம்

யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிலிருந்து இரண்டாம் வாசகம் (1யோவான் 3:1-2)

அன்பிற்குரியவர்களே, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக் கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

 

யோவான் 10:11-18

பாஸ்கா காலம் 4 வாரம் ஞாயிறு

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18

அக்காலத்தில் இயேசு கூறியது: "நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல. ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக் கொண்டுபோய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றிக் கவலை இல்லை. நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக்கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருத்தூதர் பணி 4: 8 – 12
இயேசு தரும் மீட்பு

ஒரு கட்டிடத்தின் தொடக்க கல்லாக இருப்பது மூலைக்கல். எனவே, ஒரு கட்டடம் கட்ட விரும்புகிறவர், மூலைக்கல்லை தேடி எடுத்து வைப்பார். அது பழுதில்லாத, அவர் எதிர்பார்க்கிற கல்லாக நிச்சயம் இருக்கும். இவ்வாறு கட்டிடத்தின் அடிக்கல்லாக, இந்த மூலைக்கல் அமைகிறது. அப்படிப்பட்ட மூலைக்கல்லாக, யாரும் புறக்கணிக்கப்பட்ட கல்லை வைக்க மாட்டார்கள். உடைந்து, ஒதுக்கப்பட்ட கல்லை யாரும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். ஆனால், பேதுரு இயேசுவை புறக்கணிக்கப்பட்ட கல்லாக ஒப்பிட்டுப் பேசுகிறார்.

பேதுருவின் இந்த வார்த்தைகளுக்கு காரணம் இல்லாமல் இல்லை. இயேசு மக்கள் நடுவில் சிறப்பாக பணியாற்றினார். புதுமைகளைச் செய்தார். இவரைப்போல அதிகாரம் கொண்ட போதனையாளர் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு, மிகச்சிறப்பாக செயல்பட்டார். ஆனால், அவரை சிலுவையில் அறைந்து கொன்றார்கள். அவர் செல்லாக்காசு என்று அவர்கள் நினைத்தனர். தாங்கள் நினைத்ததை சாதித்து விட்டோம் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். ஆனால், நடந்தது வேறுவிதமாக இருந்தது. யாரை அவர்கள் ஒதுக்கினார்களோ, அவர் உயிர்த்தெழுந்தார். இந்த உலகத்தின் முதன்மையான மகன் என்று, தன்னுடைய உயிர்ப்பின் மூலமாக ஆணித்தரமாக எடுத்துரைத்தார். ஆக, கிறிஸ்து ஒருவரை நீங்கள் நம்பினால் தான், உங்களுக்கான மீட்பு இருக்கிறது என்று பேதுரு சொல்கிறார்.

இயேசு தான் நம் மீட்பர். அவரே நம்மை பாவத்திலிருந்து மீட்க வல்லவர். நம்முடைய மனித இயல்பினால், அலகையின் சோதனைகளை வெல்ல முடியாது. ஆனால், அதற்கான பலத்தை இயேசு, தன்னுடைய இறப்பு மூலமாக நமக்கு தந்திருக்கிறார். இயேசு தன்னுடைய சாவின் வழியாக நமக்கு கொடுத்திருக்கிற இந்த மீட்பை, முழுமையாகப் பயன்படுத்தி சிறப்பான வாழ்வை நாம் வாழ, உறுதி எடுப்போம்.

- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இறைவன் அனைவருக்கும் தந்தை

இஸ்ரயேல் மக்கள் தாங்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களின் இந்த எண்ணம் மற்றவர்களை ஏளனமாகப்பார்க்கக் காரணமாகியது. தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்கிற எண்ணம் பரந்துபட்ட பார்வையில் நல்லதுதான். ஆனால், அத்தகைய எண்ணம் தான், இஸ்ரயேல் மக்களின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது. தங்கள் வழியாக மற்றவர்களும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற பரந்துபட்ட எண்ணத்தைக்கொண்டிராமல், தங்கள் மூலம் இறைவன் மற்றவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

தொடக்கத்திலிருந்தே இறைவாக்கினர்கள் இந்த கருத்தை மெதுவாக மக்கள் மனதில் விதைத்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் மக்கள்தான் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாத அளவுக்கு, அதனை மூடிவைத்திருந்தனர். நற்செய்தியாளர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் நற்செய்தியை எழுதினாலும், ஒட்டுமொத்தத்தில், இந்த உலகம் முழுவதிற்கும் ஆண்டவர்தான் அரசர் என்ற கருத்தை ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர். ஆண்டவர் அனைவருக்கும் பொதுவானவர். அனைவரையும் அன்பு செய்யக்கூடியவர். ஆண்டவரின் பார்வையில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லை. வேற்றுமையை அகற்றி, அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒற்றுமை உள்ளத்தை இன்றைய நற்செய்தி நமக்குக்கற்றுத்தருகிறது.

கடவுளை உள்ளத்தில் ஏந்துகிறவர்களுக்கு, எந்த வேற்றுமையும் இல்லை. அவர்கள் எப்போதும் அனைவரையும் சமமாக மதிப்பர். அவர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்வர். அவர்களுக்கு ஒவ்வொரு மனிதருமே கடவுளைத் தாங்கிக்கொண்டிருக்கக்கூடியவர்கள். அப்படிப்பட்டவர்களாக நாம் மாறுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நல்ல ஆயன் நம் இயேசு!

இன்றைய நாள் நல்லாயன் ஞாயிறு என்றும், இறை அழைத்தல் ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. இயேசுவைப் போல, திருச்சபையை வழிநடத்த நல்ல ஆயர்கள் உருவாக உழைக்கவும், செபிக்கவும் இன்று நாம் அழைக்கப்படுகிறோம்.

இயேசு தம்மை ஒரு நல்ல ஆயராக முன்னிலைப்படுத்துகிறார். மந்தையை நன்கு அறிந்த, ஆடுகளுக்காக உயிரைக் கொடுக்கிற, ஆடுகளை முன்னின்று வழிநடத்துகிற பண்புகளையெல்லாம் இயேசு கொண்டிருந்தார். இன்று அத்தகைய பண்புகளைக் கொண்ட குருக்கள், துறவிகள், ஆயர்களுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆனால், நமது “ஆயர்கள்” இயேசு கொண்டிருந்த தலைமைப் பண்புகளைக் கொண்டிராமல், உலகியல் பண்புகளைக் கொண்டிருப்பதால், இயேசுவையும், இறைமக்களையும் ஏமாற்றத்துக்குள்ளாக்குகின்றனர். இறையழைத்தல், குருமாணவர் உருவாக்கம், குருக்களின் பணியும் வாழ்வும்... போன்றவை பற்றி திருத்தந்தையர் பல போதனைகளை, அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அவையெல்லாம் செயலாக்கம் பெற்றால், நல்ல ஆயர்கள் நம்மை வழிநடத்துவர்.

இன்றைய நாளில் நமது மேய்ப்பர்களுக்காக மன்றாடுவோம். “நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்வது” என்னும் திருச்சபைக் கட்டளையைக் கடைப்பிடிக்க கடமைப்பட்டுள்ள அனைவரும் செய்யக்கூடிய மிக எளிதான உதவி செப உதவிதான். பணியாற்றும் குருக்களுக்காகவும், வருங்கால குருக்களுக்காகவும் தவறாமல் மன்றாடுவோம்.

மன்றாடுவோமாக: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போன்ற நல்ல மேய்ப்பர்களை எங்களுக்குத் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

''இயேசு, 'நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் ஆடுகளுக்காகத்
தம் உயிரைக் கொடுப்பார்' என்றார்'' (யோவான் 10:11)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இஸ்ரயேல் மக்களை அன்போடும் பரிவோடும் வழிநடத்திய கடவுள் தம்மை அவர்களுக்கு ஒரு நல்ல ஆயராக வெளிப்படுத்தினார். மக்களும் கடவுள் தங்களைப் பராமரிக்கின்ற நல்ல ஆயர் என்பதை அனுபவித்து உணர்ந்தார்கள். ஆயராக இருந்து தம் மக்களை வழிநடத்திய கடவுள் அவர்களுக்கு உணவு அளித்தார்; அவர்களை எதிரிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாத்தார்; அவர்களை ஒரு மக்களினமாக உருவாக்கினார். இவ்வாறு கடவுளின் அன்பினைத் துய்த்துணர்ந்த மக்கள் கடவுள் தங்களோடு உடனிருந்து தங்கள் இன்பதுன்பங்களில் பங்கேற்றதை அனுபவத்தில் உணர்ந்தார்கள். நல்ல ஆயராகத் தம் மக்களை வழிநடத்திய கடவுள் அம்மக்களுக்காகத் தம் உயிரையும் கொடுப்பார் என்பதை இயேசு மக்களுக்கு அறிவிக்கிறார். இயேசுவின் வாழ்வில் துலங்கிய அன்பு பல விதங்களில் வெளிப்பட்டது. இயேசு மக்களுக்குக் கடவுளின் சட்டத்தைக் கற்பித்தார்; அவர் மக்களின் பிணிகளைப் போக்கி அவர்களுக்கு நலமளித்தார்; முறிந்த மனித உறவுகளை அவர் சீர்ப்படுத்தினார். இவ்வாறு மக்களுக்காக வாழ்ந்த இயேசு அவர்களுக்காக இறக்கவும் தயங்கவில்லை.

-- ஆடுகளை மேய்க்கின்ற ஆயர் அந்த ஆடுகளுக்காகத் தம் உயிரைப் பலியாக்குவது ஓர் அதிசயமான செய்தியாகத்தான் நமக்குத் தென்படும். ஆனால் இயேசுவோ தம் உயிரை நமக்காகக் கல்வாரியில் பலியாக்குகிறார். நம்மேல் கொண்ட எல்லையற்ற அன்பின் வெளிப்பாடாக அமைகிறது அவருடைய சிலுவைச் சாவு. இயேசு என்னும் நல்ல ஆயர் மற்ற ஆயர்களைப் போல் அல்லாமல் தம் உயிரையே தம் ஆடுகளுக்காகக் கையளிக்கத் தயங்காதவர். இத்தகைய பேரன்பு கொண்ட ஆயர் நம் மீட்பராகிய இயேசு. இந்த இயேசுவையே நாம் நம் மீட்பராகவும் நமக்கு விடுதலை அளிக்கும் வீரராகவும் ஏற்றுள்ளோம். இதுவே நாம் இயேசுவின்மீதும் அவரை நம்மிடையே அனுப்பிய தந்தையாம் கடவுள்மீதும் கொள்கின்ற நம்பிக்கை ஆகும். இந்த நம்பிக்கை உறுதியாக இருந்தால் நாம் இயேசுவின் அன்பை ஒவ்வொரு நாளும் ஆழமாக உணர்ந்து அனுபவிக்கும் பேறு பெறுவோம். நமக்காகத் தம்மைக் கையளிக்கின்ற இயேசு நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகிறார். அதே நேரத்தில் அவரே நமக்குப் புது வாழ்வு அளித்து அந்த வாழ்வில் நாம் இடையறாது நிலைத்து நிற்கின்ற அருளையும் நமக்கு அளிக்கிறார். இவ்வாறு நம்மை எல்லையற்ற விதத்தில் அன்புசெய்கின்ற ''நல்ல ஆயர்'' நம்மோடு இருப்பதால் நமக்குக் குறையேதும் இல்லை (காண்க: திபா 23). அவரே நம்மை பசும்புல் வெளிக்கு அழைத்துச் செல்வார்; நம் தாகத்தைத் தணிப்பார்; நம்மை ஆபத்திலிருந்து பாதுகாத்து நமக்குப் புத்துயிர் அளிப்பார். அவர் அளிக்கின்ற உயிர் நம்மைக் கடவுளோடு நிலைவாழ்வில் இணைக்கும் சக்தி கொண்டது. எனவே நம் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பிட வேண்டும்; நம் உள்ளம் உவகை கொண்டு களித்திட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, எங்களை அன்போடு வழிநடத்துகின்ற உம்மை நம்பி வாழந்திட எங்களுக்கு அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"நல்ல ஆயன் நானே."

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

அரசனையும் ஆண்டவனையும் ஒரு ஆயனாக இஸ்ரயேல் மக்கள் பார்த்தது அவர்களது வாழ்க்கை அனுபவம். ஆடுகளைப் பாதுகாத்து பராமரிக்கும் ஆயனாக வாழ்ந்த தங்கள் வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில் அரசனையும் ஆண்டவனையும் பார்த்தனர்.(வாசிக்க திருப்பாடல் 23; ஏசா 40:11) இயேசுவும் தன்னை ஒரு நல்ல ஆயனாக இங்கு சித்தரிக்கிறார்.

இயேசுவின் தன் ஆயர்தன்மையின் சிறப்புக்குக்கான காரணங்களை இங்கு குறிப்பிடுகிறார். ஆடுகளைப்பற்றிய அறிவு முதன்மையானது. ஆடுகளோடு தனக்குள்ள நெருக்கத்தை இங்கு உறுதிப்படுத்துகிறார். யாருக்கு என்ன தேவை என்பதை அவர் அறிவார்.நீ போவதையும் வருவதையும் அவர் அறிவார். "நீ இருப்பதும் போவதும் வருவதும் எனக்குத் தெரியும். எனக்கு எதிராக நீ பொங்கி எழுவதையும் நான் அறிவேன்".( 2 அரசர்கள் 19 :27 )

இரண்டாவதாக, ஆடுகளுக்குள் ஆயன் தலைமையில் உருவாகும் ஒற்றுமையைக் குறிப்பிடுகிறார். பிளவுகள் பிரிவினைகள் நீங்கி, ஒரே தலைமையின் கீழ் இயங்க வேண்டும் என்பதும் அவரது அவா. ஆகவே இந்த ஒற்றுமைக்காக நற்கருணையை ஏற்படுத்திய பின் செபிக்கிறார். இணைந்திருப்பதை வலியுறுத்துகிறார்.சுயநலங்களுக்காக பிழைப்புக்காக இயேசுவின் பெயரால் பல்வேறு பிரிவினைச் சபைகளைத் தொடங்கும் அவல நிலையை, இயேசு விரும்பவில்லை.நல்ல ஆயன் தலைமையில் எல்லோரும் ஒன்று சேர செபிப்போம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்