புனித வாரம் - செவ்வாய்

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 1-6

தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்; கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்; தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் தூணியில் என்னை மறைத்துக்கொண்டார். அவர் என்னிடம், `நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்' என்றார். நானோ, `வீணாக நான் உழைத்தேன்; வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்; ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது; என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது' என்றேன். யாக்கோபைத் தம்மிடம் கொண்டுவரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்றுதிரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்; ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல் ; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 71: 1-2, 3-4, 5-6, 15 மற்றும் 17

பல்லவி: என் வாய் நாள்தோறும் உமது மீட்பை எடுத்துரைக்கும்.

1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்;
ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும்.
2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்;
எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக்கொள்ளும். -பல்லவி

3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்;
கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்;
ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.
4 என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும்;
நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர் பிடியினின்று என்னைக் காத்தருளும். -பல்லவி

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை;
ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை.
6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்;
தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்;
உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன். -பல்லவி

15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும்
நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்;
உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது.
17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்;
இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். -பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்
பரம தந்தைக்குக் கீழ்ப்படிகின்ற எங்கள் அரசரே, போற்றப் பெறுக; அடிக்கக் கொண்டுபோகப்படும் சாந்தமான செம்மறிபோல நீர் சிலுவையில் அறையப்படக் கொண்டு செல்லப்படுகிறீர்.

யோவான் 13:21-33,36-38

தவக்காலம் -புனித வாரம் செவ்வாய்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 21-33, 36-38

அக்காலத்தில் தம் சீடர்களுடன் பந்தியமர்ந்த இயேசு உள்ளம் கலங்கியவராய், ``உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று திட்டவட்டமாகக் கூறினார். யாரைப்பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார். சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, ``யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக் கேள்'' என்றார். இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர், ``ஆண்டவரே அவன் யார்?'' என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ``நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்'' எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார். அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். இயேசு அவனிடம், ``நீ செய்ய இருப்பதை விரைவில் செய்'' என்றார். இயேசு ஏன் அவனிடம் இப்படிக் கூறினார் என்பதைப் பந்தியில் அமர்ந்திருந்தோர் யாரும் புரிந்துகொள்ளவில்லை. பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக்கொண்டனர். யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான். அது இரவு நேரம். அவன் வெளியே போனபின் இயேசு, ``இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்'' என்றார். சீமோன் பேதுரு இயேசுவிடம், ``ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?'' என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ``நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்'' என்றார். பேதுரு அவரிடம், ``ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்'' என்றார். இயேசு அவரைப் பார்த்து, ``எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 13: 21 – 33, 36 - 38
காட்டிக் கொடுத்தல்

குற்றம் செய்தவனை விட குற்றம் செய்தவனை காட்டிக் கொடுப்பவனுக்குத் தான் அதிக பாதுகாப்பு நம்முடைய சமுதாயத்திலே கொடுக்கப்படும். காரணம் என்னவென்றால் சாட்சியம் அழிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக. இதனை நாம் இரண்டு வழிகளில் புரிந்து கொள்ளலாம். ஒன்று காட்டிக் கொடுப்பதனால் தவறு செய்தவன் திருந்தி புதுவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக கூட இருக்கலாம். இன்னொரு வழியில் அவன் மீது பொறாமை கொண்ட குணத்தினால் கூட காட்டிக் கொடுக்கலாம். இரண்டு வகையான காட்டிக் கொடுத்தலை நம்முடைய சமுதாயத்தில் பார்க்கின்றோம்.

அது போல தான் யூதாசின் காட்டிக் கொடுக்கும் செயலில் இரண்டு கருத்துக்களை நாம் கவனிக்க வேண்டும். கலிலேயாவில் மக்களிடையே பழகிப் பிரபலமாயிருந்த இயேசு, எருசலேமில் அந்த அளவிற்கு வெளிப்படையாக மக்களிடையே பழகவில்லை. யூதப் படைவீரர்கள் அவரைக் கைது செய்ய வேண்டுமென்றால் அவர் யார் என்பதனை முதலில் தெரிய வேண்டும். எதற்காக காட்டிக் கொடுக்க முயல்கிறான் என்றால் யூதாசு எதிர்பார்த்த அளவிற்கு இயேசு இல்லை. மற்றொன்று தான் காசு. ஆனால் இன்னொரு மரபின் பின்புலத்தில் யூதாசு காசுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுக்க நினைத்தது சரியான புரிதல் இல்லை என்பார்கள். ஏனென்றால் யூதாசு செலாத்தியரின் தீவிரவாத இயக்கத்தில் இருந்தவன் என்றும், ஒரு தேசிய உணர்வுடன் வாழ்ந்தவன் என்றும் கூறப்படுகிறது. யூதாசு இயேசுவைப் பின்பற்றிய நோக்கம் அவருடைய வல்லமையைப் பயன்படுத்தி உரோமை அரசை அழிக்கும் போராட்டத்தில் அவரும் ஈடுபட வேண்டும் என்பது தான். ஆனால் இயேசுவின் செயல்பாடுகள் முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததால் யூதாசு காட்டிக் கொடுக்க முன்வந்திருக்கலாம் என்று விவிலிய அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

நாம் மற்றவர்களின் தவறினை காட்டிக் கொடுக்கின்றோம். எப்போது நமது தவற்றினை இயேசுவிடம் காட்டிக் கொடுக்க போகிறோம்? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

======================

(யோவான் 13 : 21-33,36-38)
உங்களில் ஒருவன்…!

‘உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்’ இந்த இறைவார்த்தை இன்றுவரை நமது திரு அவையில், பங்குதளத்தில் ஒலித்துக் கொண்டிருப்பதை நம்மால் கேட்க முடிகிறது. காட்டிக்கொடுப்பதும், முதுகில் குத்துவதும் இன்று நமது வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டது. பொதுவாழ்விலும் தனிவாழ்விலும் யூதாசுகள் இன்று பெருகிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நாம் அனைவரும் இன்றுவரை யூதாசைப் பழித்துரைத்துக் கொண்டிருக்கிறோம்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு அன்பு செய்யப்பட்ட இருவரின் உண்மை முகமானது கிழிக்கப்படுகிறது. ஒருவர் யூதாசு, மற்றொருவர் பேதுரு. வயதில் முதிர்ந்தவர் பேதுரு, இளையவர் யூதாசு. அனைத்து நிகழ்வுகளிலும் இயேசுவோடு இருந்தவர் பேதுரு. அப்பப்பம் வந்து செல்பவர் யூதாசு. இவற்றை ஏன் இங்கு கூறுகிறேன் என்றால் இன்றைய நற்செய்திக்கும், லூக்கா நற்செய்தியாளரின் ஊதாரி மகன் உவமைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகப் பார்க்கிறேன். எவ்வாறு இளையமகன் சொத்துக்களை (இறைவனின் அருள்) பெற்றுக் கொண்டு நெடுந்தொலைவு சென்றானோ (இறைவனை விட்டு வெகு தொலைவு) அதைப்போலவே இன்றைய நற்செய்தியில் யூதாசு இயேசுவின் அப்பத்தைப் பெற்றுக் கொண்டவுடன் ‘வெளியே’ செல்கிறான். மிகவும் முக்கியமாகக் கவனிக்கக் கூடியது யோவான் நற்செய்தியாளரின் அடுத்த வார்த்தைதான், “அது இரவு நேரம்”. இந்த இரவு நேரம் என்பது யோவானைப் பொறுத்தவரையில், ‘பாவத்தை’, ‘அறியாமையை’, ‘இருளின் ஆதிக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அவரின் அருளினைப் பெற்றவர்கள் அவரோடு இல்லாவிட்டால் இருளின் ஆதிக்கத்திற்கு அடிபணிவார்கள் என்பதையே இது காட்டுகின்றது. ஆனால் ஊதாரிமகன் உவமையில் இளையவன் திரும்பி வந்தான். இங்கு நாண்டு கொண்டு செத்தான். மூத்தவன் வெளியே நின்று கொண்டு தந்தைக்கு எதிராகப் புலம்பினான். இங்கு பேதுரு தனது தவற்றை உணர்ந்து ஆண்டவரை அண்டி வந்தார், ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

நாமும் பலநேரம் ஆண்டவரின் அருனைப் பெற்றுக் கொண்டு அவரை விட்டு ‘வெளியே’ சென்று விடுகிறோம். இருளில் சிக்கிக் கொள்கிறோம். சிக்கினாலும் தவித்தாலும் ஆண்டவருக்கும் அவரின் மதிப்பீடுகளுக்கும் எதிராகச் சென்று அவரைக் காட்டிக் கொடுக்க மாட்டோம் என்று உறுதி கொள்வோம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 71: 1 – 2, 3 – 4, 5 – 6, 17
”பொல்லார் கையினின்று என்னை விடுவித்தருளும்”

பொல்லார் யார்? தீங்கு செய்யக்கூடியவர்களே பொல்லார். தீங்கு செய்யக்கூடிய மனிதர்களிடமிருந்து விடுவித்தருள வேண்டும் என, திருப்பாடல் ஆசிரியர் வேண்டுகிறார். யாரெல்லாம் சுயநலத்தோடு சிந்திக்கிறார்களோ அவர்களே தீங்கு செய்யக்கூடியவர்கள். அவர்கள் வெறுமனே உடலுக்கு மட்டும் தீங்கு செய்யக்கூடியவர்கள் அல்ல. மாறாக, அவர்கள் ஆன்மாவிற்கும் ஊறு விளைவிக்கக்கூடியவர்கள். அவர்களின் சுயநலத்திலிருந்தும், தீங்கு செய்யக்கூடிய எண்ணத்திலுமிருந்து தன்னைக் காத்தருள கோரிக்கை வைக்கிறார்.

ஏன் கடவுளிடம் கோரிக்கை வைக்கிறார்? கடவுள் மட்டும் தான், அரணாகவும், கோட்டையாகவும் இருந்து தன்னை காக்க முடியும் என்று, ஆசிரியர் நம்புகிறார். மனிதன் பலவீனன். அவன் நல்லவனாக வாழ வேண்டும் என்று விரும்பினாலும், நினைத்தாலும் இந்த உலகம் அவனை சும்மா விட்டுவிடாது. ஒருவன் நல்லவனாக வாழ விரும்பினால், அவன் சந்திக்கக்கூடிய சவால்கள் இந்த உலகத்தில் நம்ப முடியாதவையாக இருக்கும். அந்த அளவுக்கு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த சவால்களையும் தனியொரு மனிதனாகச் சந்திப்பது இயலாத காரியம். கடவுளின் ஆற்றலும், வல்லமையும் ஒருவருக்கு தேவைப்படுகிறது. அதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் இறைவனிடம் கேட்கிறார். பிறப்பிலிருந்து இன்றைய நாள் வரை கடவுள் தான், ஒரு மனிதரை எந்த தீங்கும் நேராமல் காத்து வந்திருக்கிறார். ஒவ்வொரு நிமிடமும் உயிர் வாழ்வதே, கடவுளின் இரக்கத்தால் மட்டும் தான். அவரின் இரக்கம் இல்லையென்றால், நாமும் மண்ணோடு மண்ணாக வேண்டியதுதான். எனவே, கடவுள் தான், தனக்கு எல்லாமே என்கிற ஆழமான செய்தியை இந்த திருப்பாடல் வழியாக ஆசிரியர் நமக்கு கற்றுத்தருகிறார்.

இந்த உலகத்தில் ஒவ்வொருநாளும் நடக்கும் விபத்துக்களையும், அனுபவிக்கும் நோய்களையும் பார்க்கிறபோது, நாம் உயிர் வாழ்வதே  ஏதோ புதுமை போல இருக்கிறது. அந்த அளவுக்கு, வாழ்க்கை பயங்கரமானதாக, ஆபத்துக்கள் நிறைந்ததாக இருக்கிறது. கடவுள் மீது நம்பிக்கை வைத்து வாழ்கிறபோதுதான், நம்மால் நிம்மதியாக வாழ முடியும். அந்த நம்பிக்கையை நமது வாழ்வாக்க, இந்த திருப்பாடல் வழியாக ஆண்டவரிடம் தியானிப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

நேர்மையாளர்கள்

நாடக நடிகர்கள், திரைப்பட நடிகர்களை நாம் தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். அவர்கள் வாழக்கைக்காக நடிக்கிறார்கள். பிழைப்புக்காக நடிக்கிறவர்களைத்தாண்டி, வாழ்க்கையில் நடிக்கக்கூடியவர்களும் நம்மோடு பலர் இருக்கிறார்கள். இத்தகைய மனிதர்களை நாம் எல்லா இடங்களிலும் பார்க்கலாம். நாம் படிக்கும் பள்ளிகளில், கல்லூரிகளில், குடும்பத்தில், சமுதாயத்தில் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. யார் இவர்கள்? எதற்காக நடிக்க வேண்டும்? நடிப்பின் மூலம் இவர்கள் சாதிப்பது என்ன? இந்த கேள்விகளுக்கு ஒரே ஒரு பதில்தான்: சுயநலம். தங்களது சுயதேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, தங்களை நேர்மையாளர்கள் போலும், மற்றவர்களிடத்தில் நல்லவர்கள் போலும் நடித்து, தங்களது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடியவர்கள் தான் இவர்கள்.

இன்றைக்கு நற்செய்தியிலும் இப்படிப்பட்ட மனிதனான, யூதாசை நாம் பார்க்கிறோம். யூதாஸ் இயேசுவின் சீடர்களுள் ஒருவனாக இருக்கிறான். அவனுக்கு முக்கியமான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் பணத்தைக் கையாள்வது. நிச்சயமாக, இயேசுவின் சீடர்கள் ஆளுக்கொரு பணியை தங்களுக்குள் பகிர்ந்திருப்பார்கள். அதில் யூதாசுக்கு, பணத்தைக் கையாள்வதற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால், நிச்சயம் சீடர்கள் மத்தியில் அவனைப்பற்றி நல்ல அபிப்ராயம் இருந்திருக்க வேண்டும். அதாவது, யூதாஸ் சீடர்களுக்கு மத்தியில் நல்லவன் போல் நடித்திருக்க வேண்டும். அதனால் தான், மிகப்பெரிய பொறுப்பு அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் யூதாஸ் ஒரு மிகப்பெரிய சுயநலவாதி. தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக, தான் வாழ்வில் நினைத்திருந்த சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே, இயேசுவைத் தேடி வந்திருந்தான்.

இன்றைய சமுதாயம் நேர்மையானவர்களுக்கு கொடுக்கிற மரியாதையைக் காட்டிலும், இப்படிப்பட்ட வாழ்க்கையில் நடிக்கிறவர்களுக்கு கொடுக்கும் மரியாதைதான் அதிகமாக இருக்கிறது. ஆனால், நேர்மைத்தனம் என்பது மற்றவர்கள் புகழ வேண்டும், பாராட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. வாழ்வின் விழுமியமாக பார்க்கப்பட வேண்டும். வாழப்பட வேண்டும். அப்படி வாழ்கிறபோது, நமக்குள்ளாக ஏற்படுகிற அந்த நிறைவு, உண்மையிலே நமக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

இறைவனின் அளவற்ற அன்பு

யூதாசின் சதித்திட்டம் மிகவும் கொடூரமான ஒன்று. நடிப்பதில் அவன் கைதோந்தவனாக இருந்திருக்க வேண்டும். வெளிவேடத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. மற்ற சீடர்கள் மட்டும், யூதாஸ் செய்யப்போகிற காரியத்தைத் தெரிந்திருந்தால், அவனை உண்டு, இல்லையென்று ஆக்கியிருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு யூதாஸ் செய்யப்போகிற காரியம் தெரியவில்லை. மற்றவர்கள் அறியாதவண்ணம், உணராத வண்ணம் யூதாஸ் திறமையாக மூன்று ஆண்டுகளாக நடித்திருக்கிறான்.  அத்தனைபேரை ஏமாற்ற முடிந்த யூதாசால், இயேசுவை ஏமாற்றமுடியவில்லை.

யூதாஸ் செய்யவிருப்பது தவறு என்பதை உணரும் வண்ணம், அவனது தவறிலிருந்து திருந்துவதற்கு இயேசு உண்மையில் பல கட்ட முயற்சி செய்கிறார். எப்படியாவது தனது சீடன், இந்த தவறிலிருந்து தப்பித்துவிட வேண்டும் என்று நிச்சயம் ஆசைப்பட்டிருப்பார். ஆனால், யூதாஸ் தனது நோக்கத்தை நிறைவேற்றுவதில் தெளிவாக இருந்தான். அவனுடைய மனம், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பதற்கு தயாராக இல்லை. இறுதியாக, தனது அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், இயேசு யூதாசிடம் செய்ய வேண்டியதை விரைவாகச் செய்ய வேண்டிக்கொள்கிறார். அந்த வார்த்தைகள் நிச்சயம் இயேசுவைக் காயப்படுத்தியிருக்க வேண்டும்.

நாம் தவறான காரியங்களில் ஈடுபடுகிறபோது, நாம் செய்கிற காரியங்கள் தவறு என்பதையும், அந்த தவறிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும் என்பதையும், கடவுள் பல மனிதர்கள் வாயிலாக நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார். அதனை அறிந்து நமது வாழ்வை மாற்றிக்கொள்ள முன்வருமோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

இறைவனுக்கு அஞ்சி நடப்போம்

யூதாசின் கயமைத்தனம் இன்றைய நற்செய்தியில் வெளிப்படுகிறது. யூதாசின் உள்நோக்கம் இயேசுவைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஒருவேளை மற்ற சீடர்களுக்கு, யூதாஸ் செய்யவிருந்த காரியம் தெரியவந்திருந்தால், அவனை அந்த அறையைவிட்டு, உயிரோடு வெளியே அனுப்பி இருக்கமாட்டார்கள். ஆனால் வெளிவேடக்காரனான யூதாசை சீடர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இயேசு கண்டுபிடித்தார். எவ்வளவுதான் நயவஞ்சகமாகப் பேசினாலும், வெளிவேடக்காரப்போர்வையில் இயேசுவோடு மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தாலும், இயேசுவின் பார்வையிலிருந்து அவனால் தப்பமுடியவில்லை. நல்லவர்களையும், கெட்டவர்களையும் அடையாளம் கண்டுகொள்வது இயேசுவுக்குப் புதிதல்ல. அவருடைய பணிவாழ்வின் தொடக்கத்தில் நாற்பது நாட்கள் நோன்பிருந்து செபித்த வேளையில், உடல் சோர்வுற்றிருக்கிற நேரத்தில், அலகை அவரை சோதிக்கிறது. நல்லது செய்வதுபோல் பாசாங்கு செய்து, பசப்புவார்த்தைகளைச் சொல்லி, இயேசுவிடத்தில் பேசினாலும், இயேசு அலகையை அடையாளம் கண்டுகொண்டார்.

கடவுளின் பார்வையிலிருந்து, நாம் செய்கிற பாவங்கள் எதையும் மறைக்க இயலாது என்பதுதான் இந்த வாசகம் நமக்குத்தருகிற செய்தியாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டில், தாவீது அரசர் உரியாவின் மனைவியை அடைவதற்காக தவறு மேல் தவறு செய்கிறார். உரியா போர்க்களத்தில் உயிர்விட காரணமாக இருக்கிறார். தான் செய்தது யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறார். ஆனால், கடவுள் இறைவாக்கினர் நாத்தான் மூலமாக அவர் பாவத்தை வெளிப்படுத்துகிறார். இறைவன் இந்த உலகத்தை படைத்தவர் மட்டுமல்ல, பராமரிக்கிறவரும் கூட. அவர் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார். அவரின்றி இந்த உலகம் அணு அளவும் அசையாது. அவருடைய கண்பார்வையில் இருந்து யாரும் தப்பிவிட முடியாது. அவர் நீதியுள்ள தேவன், உண்மையுள்ளவர். கடவுளை ஏமாற்ற நினைக்கிறவர்களுக்கு யூதாசின் தண்டனைதான் முடிவு. கடவுளை ஏமாற்ற நினைக்கிறவர்கள் அழிந்துபோவார்கள் என்பதற்கும் யூதாஸ் சிறந்த உதாரணம்.

கடவுள் பயம் நம் அனைவருக்கும் இருக்க வேண்டும். கடவுள் பயம் வெறுமனே, பயந்து, பயந்து வாழ்வதற்காக அல்ல, மாறாக, உண்மையாக வாழ்வதற்காக. நேர்மையோடு நடப்பதற்காக. உண்மைவழியில் இருப்பதற்காக. அத்தகைய கடவுள் பயத்தோடு வாழ்கிறவர்களுக்கு கடவுள் இரங்குகிறவராக, அவர்களை தன் அன்புப்பிள்ளைகளெனத் தேர்ந்துகொண்டு, நேரிய வழியில் வழிநடத்துகிறவராக இருக்கிறார். கடவுள் பயத்தோடு வாழ்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

உள்ளம் கலங்கிய இயேசு !

புனித வாரத்தின் செவ்வாய் ஆகிய இன்றும் நாம் இயேசுவின் பாடுகள்-இறப்பு பற்றிச் சிந்திக்க இருக்கிறோம். தமக்கு இறப்பு எந்த வேளையிலும் நேரிடலாம் என்ற எதிர்நோக்குடன் இருந்த இயேசு, தம் சீடர்களுடன் பந்தியமர்ந்தபோது "உள்ளம் கலங்கியவராய், "உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று திட்டவட்டமாகக் கூறினார்" என இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம்.

மனிதர் என்ற வகையில் இயேசு இறப்பை வரவேற்கவில்லை, இறக்கவேண்டும் என்னும் எண்ணம் நிச்சயமாக அவருக்கு மனக் கலக்கத்தைத் தந்திருக்க வேண்டும். ஆனால், அதைவிட மேலாகத் தம்மோடு மூன்று ஆண்டுகள் வாழ்ந்து, தமது போதனைகளைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்று, நற்செய்திப் பணிக்குரிய அதிகாரத்தையும் பெற்றுக்கொண்ட ஒரு சீடனே தம்மைக் காட்டிக்கொடுக்க இருக்கிறான் என்னும் எண்ணம் இயேசுவுக்குக் கூடுதல் உள்ளக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எனவேதான், தமது வேதனையை வெளிப்படையாகவே அவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.

தாம் அன்பு செய்பவரே தமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதை அனுபவிக்கும் அனைவருக்கும் மன உளைச்சலும், ஆறாத உள்ளக் கலக்கமும் ஏற்படுவது இயல்பே. இது இயேசுவின் சாவின் வேதனையை அதிகரித்தது எனலாம்.

நாம் இதனை இரண்டு கோணங்களில் பார்க்கலாம்:

1. என் வாழ்விலும், பணிகளிலும் நான் இயேசுவுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதுபோல, அவரைக் காட்டிக்கொடுப்பதுபோல நடந்திருக்கிறேனா? ஆம், என்றால் மனம் கசிந்து மன்னிப்புக் கேட்போம்.

2. நமது குடும்ப வாழ்வில் கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளைகள், நண்பர்-நண்பர், ஆசிரியர்-மாணவர்... உறவுகளில் நம்பிக்கைத் துரோகம் இழைத்திருக்கிறேனா? என்மீது நம்பிக்கையும், அன்பும் கொண்டிருப்போரை நான் தன்னலத்தோடு காட்டிக்கொடுத்திருக்கிறேனா? இனிமேலாவது, உறவுகளை மேம்படுத்திக்கொள்வோம்.

மன்றாடுவோம்: எங்களுக்காகச் சிலுவைச் சாவை ஏற்ற நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது அன்புக்குப் பிரமாணிக்கமாயிருக்கவும், எங்களை அன்பு செய்வோருக்கு நம்பிக்கைக்குரியவராய் வாழவும்; அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

புனித வார செவ்வாய் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு தன் முழு ஆளுமையிலும் இறைவனுக்கு உகந்தவராக வாழ்ந்தார், இறந்தார் என்னும் நமது சிந்தனையின் மூன்றாவது நாளாக இன்று இந்தக் கருத்தை சிந்திப்போம்:

  1. இயேசு தன் ஆன்மாவை ஒப்புக்கொடுத்தார்:

மனித ஆளுமையின் மூன்றாவது தளம் ஆன்மா. உடல் மனிதரை இறைவனிடமிருந்து பெரிதும் வேறுபடுத்துகிறது. காரணம், இறைவன் உடலற்றவர். மனித மனமும் இறைவனிடவிருந்து பெரிதும் மாறுபடுகிறது. காரணம், இறைவனின் எண்ணங்கள் வேறு, மனிதரின் எண்ணங்கள் வேறு. “ ஆண்டவரே உம் எண்ணங்கள் எத்துணை ஆழமானவை” (திபா 92:5) என்று வியக்கிறார் திருப்பாடலாசிரியர். எனவே, மனிதரை இறைவனுடன் ஒப்பிடச் செய்வது உடலோ, மனமோ அல்ல, மாறாக ஆன்மாதான். காரணம், மாந்தரின் ஆன்மா இறைச்சாயலில் படைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆன்மாவை இருள்சூழாமல் காக்க வேண்டியது நம் கடமை.

இயேசு தன் ஆன்மாவை எப்போதும் தந்தை இறைவனின் வசம் ஒப்புவித்திருந்தார். எப்போது ஆன்மாவில் பாவக் கறை படிகிறதோ, அப்போது ஆன்மா இறைவனிடமிருந்து விலகிச் செல்கிறது. இயேசுவோ தம் வாழ்நாள் முழுதும் பாவ மாசின்றி வாழ்ந்தார். எபிரேயர் திருமடல் அவரைப் பற்றி இவ்வாறு சொல்கிறது: “எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர். எனினும், பாவம் செய்யாதவர்” (எபி 4:15).

அவரது வாழ்வின் இறுதி நேரங்களில் அந்த ஆன்மா இருளின் ஆதிக்கத்திற்கு உட்படாதபடி அவர் பெரிதும் போராட வேண்டியதிருந்தது. தந்தையின் திருவுளத்துக்கு மாறாக, உயிர் வாழவேண்டும், துன்பக் கலத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்னும் சோதனை அவருக்கு எழுந்தது. அச்சோதனையிலிருந்து தம் ஆன்மாவைக் காத்துக்கொள்ள இயேசு விரும்பினார். எனவேதான், தம் சீடர்கள் தம்மோடு விழித்திருந்து செபிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர்கள் உறங்குவதைப் பார்த்ததும், “உங்கள் மனம் ஆர்வமுடையதுதான். ஆனால், உடல் வலுவற்றது, எனவே, சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” (மாற் 14:38) என்று கூறினார். இறுதியாக, சிலுவையில் தொங்கியபொழுது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” (மாற் 14:34) என்று கதறினார். அது அவரது சோதனையின் இறுதிக் கட்டம். இருப்பினும், இறுதிவரையில் தன் ஆன்மாவைக் காத்து, “தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” (லூக் 23:46) என்று தன் ஆன்மாவை ஒப்படைத்தார்.

மன்றாடுவோம்: உமது உடல், மனம், ஆன்மா மூன்றையும் தந்தையிடம் ஒப்புக்கொடுத்த இயேசு ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நீர் உமது ஆன்மாவை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து, பாவ மாசின்றி வாழந்து, இறந்ததுபோல, நாங்களும் எங்கள் ஆன்மாவால் உம்மை மாட்சிமைப்படுத்துவோமாக ! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருட்தந்தை குமார்ராஜா

---------------------

 

''இயேசு பேதுருவைப் பார்த்து, 'எனக்காக உயிரையும் கொடுப்பாயோ?
நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது
என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்' என்றார்'' (யோவான் 13:38)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- பேதுரு நற்செய்தி நூல்களில் சிறப்பான இடம் பெறுகிறார். இயேசு தேர்ந்துகொண்ட பன்னிரு திருத்தூதர் குழுவுக்குப் பேதுரு தலைவராக இருந்தார். பிற திருத்தூதர்களின் பெயரால் பல வேளைகளில் அவர் இயேசுவிடம் பேசியதை நற்செய்தி நூல்கள் குறிப்பிடுகின்றன. இயேசு ஏதாவது கேள்வி கேட்டால் அதற்குப் பதில் சொல்ல முந்திக்கொள்பவர் பேதுரு தான். இயேசுவும் பேதுருவைத் தனிப்பட்ட விதத்தில் அன்புசெய்தார். இயேசுவைக் காப்பதற்குத் தம் உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக பேதுரு கூறினார். ஏதோ உணர்ச்சிவசப்பட்டு மட்டுமே அவர் இவ்வாறு சொன்னார் என நாம் நினைக்கத் தேவையில்லை. ஏனென்றால், பேதுரு உண்மையிலேயே இயேசுவை அன்புசெய்தார். தம் தலைவரும் ஆசிரியருமாகிய இயேசுவுக்கு தீங்கு ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் அவர் உண்மையிலேயே கவனமாகத்தான் இருந்தார். என்றாலும், இயேசு பேதுருவின் உண்மையான நிலையை அறிந்தவர். ஆகவேதான் இயேசு பேதுருவைப் பார்த்து, ''நீ என்னை மறுதலிப்பாய்'' என்றார் (யோவா 13:38).

-- இயேசு கூறியதுபோல, பேதுரு இயேசுவைத் தமக்குத் தெரியவே தெரியாது என்றும், அவரோடு தமக்கு எந்த உறவும் கிடையாது என்றும் மறுதலித்தார். இது குருவுக்கு எதிராகச் செய்யப்பட்ட துரோகம் என நாம் கருதலாம். ஆயினும் பேதுரு தாம் செய்த தவற்றினை உணர்ந்து, அதற்காக மனம் வருந்தி, உளம் நொந்து கண்ணீர் விட்டார் (மாற் 14:72). தவறுவது மனித இயல்பு, ஆனால் தவற்றை உணர்ந்து திருந்துவது மனிதருக்கு அழகு. இதையே நாம் பேதுருவிடம் காண்கிறோம். அவர் கோழையாக நடந்துகொண்டார். துன்புறுத்தப்பட்ட தம் குருவாகிய இயேசுவோடு தமக்கு உறவு உண்டு என ஏற்றால் தம் உயிருக்கும் ஆபத்து ஏற்படுமோ என்னும் அச்சத்தால்தான் அவர் இயேசுவைத் தமக்குத் தெரியவே தெரியாது என மறுதலித்தார். இன்று வாழ்கின்ற நாமும் இயேசுவை முழுமனத்தோடு நம்பிட அழைக்கப்படுகிறோம். இயேசுவோடு நமக்குள்ள உறவை வெளிப்படையாக அறிக்கையிட நாம் தயங்கலாகாது. உறுதியான உள்ளத்தோடு நாம் இயேசுவுக்குச் சான்று பகர்வது கிறிஸ்தவ வாழ்வுக்கு அழகு.

மன்றாட்டு
இறைவா, தவறு செய்தாலும் மனம் திரும்பி வாழ எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

உண்மையிலே இந்த இயேசு ஒரு வித்தியாசமான ஆள். மனிதன் வாழ வேண்டும். அதிலும் நலிந்தோர், நலமற்றோர், நசுக்கப்பட்டோர், வாழவேண்டும் என்பதில் தணியாத தாகம். பாவிகள் மனமாற்றம் பெற்று வாழவேண்டும் என்பதில் அப்படி ஒரு வெறி. அதற்கான வாய்ப்புக்கள் வழங்குவதில் வள்ளல். அப்படியொரு அடுக்கடுக்கான வாய்ப்பினைத் தன்னைக் காட்டிக்கொடுக்க இருக்கும் யூதாஸ{க்கு வழங்கவும் இயேசு தயங்கவில்லை.

"நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை" (யோவா12:8) என்று மறைமுகமாக யூதாஸ{க்கு உணர்த்துகிறார். மீண்டும் யோவான்13:21 "உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று சூசகமாக யூதாஸின் மனமாற்றத்திற்கு அழைப்பு கொடுக்கிறார். அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்து, அடுத்தகட்ட முயற்சியில் இறங்குகிறார். சாத்தான் அவனுக்குள் நுழைந்த பின்னரும் கூட யூதாஸைக் கைநெகிழ இயேசு விரும்பவில்லை. மீண்டும் அவனைக் காக்கும் முயற்சியில் இறங்குகிறார்."நீ செய்யவிருப்பதை விரைவில் செய்" என்று யூதாஸின் கடின மனதைக் கரைக்கும் கடைசிகட்ட முயற்சியைத் தொடங்குகிறார்.யூதாஸிலும் அவனைச் சுற்றிலும் இருளின் ஆதிக்கமே மேலோங்கி நிற்பதை உணர்ந்த இயேசு தன் முயற்சியைக் கைவிடுகிறார்.அது இரவு நேரம்.

தன்னைக் காட்டிக்கொடுக்க இருக்கும் யூதாஸின் மீதும் இவ்வளவு அன்பும் இரக்கமும் கொண்டுள்ளாராயின் உன்னை இழக்கச் சம்மதிப்பாரோ?! ஒருபோதும் சம்மதியார். உனக்காகச் சிலுவையில் விரித்த கரங்களோடு காத்திருக்கின்றார். எத்தனைமுறை காட்டிக்கொடுத்தாலும் மறுதலித்தாலும் உன் நல் வாழ்வுக்காகக் காத்திருக்கிறார். ஒளியாம் அவருள் வருவோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்