முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 26-33

அந்நாள்களில் பவுல் பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவுக்கு வந்தபோது, அவர் தொழுகைக்கூடத்தில் கூறியது: ``சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது. எருசலேமில் குடியிருக்கும் மக்களும் அவர்களுடைய தலைவர்களும் அம்மீட்பரை அறியவில்லை; ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைப் புரிந்துகொள்ளவில்லை; ஆயினும் அவருக்கு அவர்கள் தீர்ப்பளித்தபோது அவ்வார்த்தைகள் நிறைவேறின. சாவுக்குரிய காரணம் எதுவும் அவரிடம் இல்லாதிருந்தும், அவரைக் கொல்ல அவர்கள் பிலாத்திடம் கேட்டார்கள். மறைநூலில் அவரைப்பற்றி எழுதியுள்ள அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தார்கள். பின்பு அவரைச் சிலுவையிலிருந்து இறக்கிக் கல்லறையில் வைத்தார்கள். ஆனால் இறந்த அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார். அவர் கலிலேயாவிலிருந்து தம்முடன் எருசலேம் வந்தவர்களுக்குப் பல நாள்கள் தோன்றினார். அவர்கள் இப்போது அவர்தம் சாட்சிகளாக மக்கள் முன் விளங்குகின்றார்கள். இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக மூதாதையருக்கு அளித்த வாக்குறுதியை அவர்கள் பிள்ளை களாகிய நமக்கென நிறைவேற்றினார். இதுவே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி. இதுபற்றி இரண்டாம் திருப்பாடலில், `நீரே என் மகன், இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்' என்று எழுதப்பட்டுள்ளது.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 2: 6-7. 8-9. 10-11
பல்லவி: நீரே என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.

6 என் திருமலையாகிய சீயோனில் நானே
என் அரசரைத் திருநிலைப்படுத்தினேன்.
7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்;
`நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். -பல்லவி

8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்;
பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்;
பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்.
9 இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்;
குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்'. -பல்லவி

10 மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்;
பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள்.
11 அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்;
நடுநடுங்குங்கள்! அவர்முன் அகமகிழுங்கள்! -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை," என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

யோவான் 14:01-06

பாஸ்கா காலம்-4 வாரம் வெள்ளி

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6


அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், `உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்' என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்.'' தோமா அவரிடம், ``ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?'' என்றார். இயேசு அவரிடம், ``வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

--------------------------------------------

யோவான் 14: 1 – 6
இடம்

இந்த சமுதாயம் பேராசை கொண்ட சமுதாயம் என்பார் அண்ணல் அம்பேத்கார். எதற்காகென்றால் ஒரு சில மாமனிதர்கள் இறந்த பின்பு மெரினா கடற்கரையில் இடத்திற்காக திரிகின்றார்கள். ஒரு சில மத தலைவர்கள் மலையடிவாரங்களில் தியான மையங்கள் அமைக்க இடத்திற்காக திரிகின்றார்கள். ஒரு சில நடிகர்கள் தங்கள் சுகபோக வாழ்க்கைக்காக கடலுக்குள் இருக்க இடத்திற்காக திரிகின்றார்கள். அதனால் தான் என்னமோ இன்னும் மனிதனின் ஆசை பேராசையாக இருந்து வருகிறது. இவையனைத்து ஆசைகளும், இடங்களும் மனிதன் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கின்ற வரையில் தான் என்பதனை உணர்வதே கிடையாது.

மனிதன் என்ற அந்தஸ்தன் போன பின்பும் ஒருவனுக்கு நிலையான இடத்தினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தான் இயேசுவின் விருப்பம். அதற்காகத்தான் சிலுவை சாவு. ஆனால் இந்த நிலையான இடத்தினை பெறுவதற்கு இயேசு விதித்த தொகைத்தான் உண்மை, நம்பிக்கை. ஏனென்றால் இயேசு அற்புதங்களை செய்கின்றார். உணவு கொடுக்கின்றார். மக்களை நோயிலிருந்து குணமாக்கின்றார். எனவே மக்கள் அவரை பின்தொடர விரும்புகின்றார்கள். அதனால் தான் அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் மீண்டும் செல்ல முயற்சி எடுக்கின்றார்கள். ஆனால் அவர் இறந்த பிறகு ஆயனில்லா ஆடாக திரிவார்கள் என நினைக்கின்றார். இதனால் மந்தைக்குள் பிளவு ஏற்பட வாய்ப்பு அதிகம். ஏனென்றால் பரிசேயர்கள் தாங்கள் பெரியவர்கள் என்று காட்டிக் கொள்ள வாய்ப்பு தேடிக் கொண்டேயிருக்கின்றார்கள். எனவே மந்தை சிதறடையக் கூடாது என்பதற்காகத்தான் இயேசு வழியும் உண்மையும் நானே. கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள் என்ற தொகையினை புதிய இடத்திற்கு விதிக்கின்றார்.

நாம் எந்த இடத்திற்கான தொகையினை வைத்திருக்கின்றோம்? மண்ணகமா அல்லது விண்ணகமா? சிந்திப்போம்.

அருட்பணி. பிரதாப்

===========================

திருத்தூதர் பணி 13: 26 – 33
வாக்கு மாறாத இறைவன்

கடவுள் வாக்கு மாறாதவர், சொன்னதைச் செய்து முடிப்பவர் என்பது தான், தூய பவுலடியார் நமக்கு சொல்ல வருகிற செய்தியாகும். கடவுள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, இஸ்ரயேல் மக்களுக்கு வாக்களித்திருந்தார். அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க மீட்பரை அனுப்புவேன் என்று, இறைவாக்கினர்கள் வாயிலாக முன்னறிவித்திருந்தார். இஸ்ரயேல் மக்களும், இறைவன் தங்களுக்கு கொடுக்கவிருந்த மீட்பருக்காக காத்திருந்தனர். அந்த மீட்பர் தான் இயேசு என்று, பவுலடியார் சொல்கிறார்.

இயேசுவின் வருகை, இறைவனுடைய வாக்குறுதி முழுமையாக நிறைவேறியிருப்பதை உணர்த்துகிறது என்பதுதான், அவருடைய செய்தியாக இருக்கிறது. மனிதர்கள் கடவுளிடத்தில் பல உடன்படிக்கைகளை மேற்கொள்ளுகிறார்கள். ஆனால், வெகு எளிதாக கடவுளோடு செய்து கொண்ட உடன்படிக்கையை உடைத்துவிடுகிறார்கள். ஆனால், கடவுள் அப்படிப்பட்டவரல்ல. கடவுள் வல்லமையுள்ளவராக இருந்தாலும், வாக்குறுதி மாறாதவராக இருக்கிறார். பொதுவாக, வலிமை படைத்தவர்கள் தான், உடன்படிக்கையை மீறுகிறவர்களாக இருப்பார்கள். தங்களின் அதிகாரத்தை காட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். ஆனால், கடவுள் அப்படிப்பட்டவரல்ல. மனிதர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கைக்கு பிரமாணிக்கமாக இருந்தார். அதேவேளையில், அவர் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றினார்.

நாம் வாழக்கூடிய உலகம் விந்தையானது. இங்கே அரசியல் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பல வாக்குறுதிகளை கொடுக்கிறார். பாமர மக்களை ஏமாற்றி, அதிகாரத்தைப் பெற்றவுடன், அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காற்றிலே பறக்க விட்டு விடுகிறார்கள். மனிதர்கள் உண்மையாக, நேர்மையாக, வாக்குத்தவறாதவர்களாக வாழ வேண்டும். அத்தகைய வாழ்க்கையை வாழ்வதை நாம் இலக்காகக் கொண்டு வாழ்வோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

திருப்பாடல் 2: 6 – 7, 8 – 9, 10 – 11
”நீரே என் மைந்தர்”

தாவீது அரசர் இஸ்ரயேலின் மக்களின் அரசராக திருநிலைப்படுத்தப்பட்டபோது பலவிதமான எதிர்ப்புக்கள் எழுந்தன. கடவுள் இறைவாக்கினர் சாமுவேல் மூலமாக அவரை, இஸ்ரயேல் மக்களுக்கு தலைவனாக ஏற்படுத்தினார். தாவீது தொடக்கத்தில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், காலப்போக்கில் அவர் அரசராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். இந்த பிண்ணனியில், இஸ்ரயேல் மக்களின் மெசியாவைப் பற்றி இந்த திருப்பாடல் நமக்கு முன்னறிவிக்கிறது.

நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து, மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க தொடங்கியபோது, அதிகாரவர்க்கத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மக்களின் பேராதரவு அவருக்கு இருந்தாலும், அதிகாரவர்க்கம் தங்களின் அதிகாரத்தினால், அவரைச் சிலுவைச்சாவுக்கு கையளித்தது. ஆனாலும், தன்னுடைய உயிர்ப்பு மூலமாக, இயேசு தன்னை நிலைநிறுத்துகிறார். அரசர் என்பவர் மக்களால் அல்ல, கடவுளால் அங்கீகரிக்கப்பட்டவர். கடவுள் அவரை கைவிட மாட்டார். அவர் எந்நாளும் அவருக்கு துணையாய் இருப்பார் என்பதைத்தான் இந்த திருப்பாடல், நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

நமது வாழ்வில் கடவுளால் தேர்ந்தெடுக்க்ப்படுகிறபோது, நாம் அவரது கரங்களில் கருவியாக இருந்தால் போதும். கடவுள் நம்மை வழிநடத்துவார். அவர் நமது கரம்பற்றி நம்மைக் காப்பாற்றுவார். நமது வாழ்க்கையை மற்றவர்களுக்கு பயனுள்ளதாக மாற்றுவார்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

விண்ணக உறைவிடம்

”என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன” என்று இயேசு சொல்வதற்கு பல வகையான விளக்கங்கள் தரப்படுகிறது. ஆரிஜன்  என்பவரின் விளக்கத்தின்படி, மனிதன் இறக்கிறபோது, முதலில் அவர்களுடைய ஆன்மா, இந்த பூமியில் இருக்கிற ஓர் இடத்திற்குச் செல்கிறது அங்கு ஆன்மாக்களுக்கு பயிற்சியும், போதனையும் தரப்படுகிறது. அங்கு அவர்கள் தேர்ச்சிபெற்றவுடன், அந்த ஆன்மா விண்ணகத்திற்குச் செல்வதற்கு தகுதிபெறுகிறது. இப்படி ஒவ்வொருவரும் அவர்களின் அறிவுக்கு ஏற்றாற்போல, விண்ணகத்தைப்பற்றிய செய்திகளைத் தருகிறார்கள்.

ஆனால், சற்று இறையியல்பூர்வமாக இந்த இறைவார்த்தையைச் சிந்தித்தால், ”என் தந்தை வாழும் இடத்தில் பல உறைவிடங்கள் உள்ளன” என்பதற்கு, விண்ணகம் அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது என்றும் நாம் பொருள் கொள்ளலாம். இந்த பூமியில் இருக்கக்கூடிய, மனிதன் தங்கக்கூடிய இடங்களில், சில சமயங்களில் அனைவருக்கும் போதுமான இடங்கள் இல்லாமல் இருக்கலாம். சத்திரங்களில் கூட்ட நெருக்கடியால், மக்கள் வெளியே நிறுத்தப்படும் நிலை ஏற்படலாம். ஆனால், விண்ணகத்தில் அப்படி ஒரு நிலை ஏற்படாது. காரணம், அனைவரும் தங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை காணப்படுகிறது. அனைவருக்குமே அங்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

கடவுளின் அன்பு எல்லையில்லாதது. அந்த அன்பு தான் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. கடவுளின் அன்பை உணர்ந்து, அவரை ஏற்று வாழும் அனைவரும் நிலையான வாழ்வுக்கு தகுதிபெறுவார்கள். அந்த நம்பிக்கையோடு நமது வாழ்வை நாம் வாழ, இந்த நற்செய்தி நமக்கு அழைப்புவிடுக்கிறது.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

“உள்ளம் கலங்க வேண்டாம்”

இயேசு தன்னுடைய சீடர்களைப் பக்குவப்படுத்துகிற ஒரு அருமையான செய்தி இன்றைய நற்செய்தியில் நமக்குத் தரப்பட்டுள்ளது. மூன்றாண்டுகள் இயேசுவோடு தங்கியிருந்து, இயேசுவின் புதுமைகளையும், அருங்குறிகளையும் கண்டுமகிழ்ந்து, அப்பங்களை வயிறாற உண்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்றவர்களுக்கு இயேசுவின் செய்தி கலக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட கலக்கமான துன்பமான நேரத்தில், கடவுள் மீது முழுமையான நம்பிக்கையை வைப்பதற்கு இயேசு அழைப்புவிடுக்கிறார். எனவேதான், வேதனையான, வருத்தமான நேரத்தில் உள்ளம் கலங்க வேண்டாம் என்ற ஆறுதல் செய்தியைத்தருகிறார்.

திருப்பாடல்27: 13ல் பார்;க்கிறோம்: “வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்”. எவ்வளவு துயரங்கள், வருத்தங்கள் இருந்தாலும், இன்னும் கடவுள் மீது முழுமையான நம்பிக்கையை வைத்திருக்கிறேன் என்கிற செய்தி இங்கே நமக்குத்தரப்படுகிறது. திருப்பாடல் 141: 8 சொல்கிறது: “ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே! என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன: உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்: என் உயிரை அழியவிடாதேயும்”. கடவுள் மீது திருப்பாடல் ஆசிரியர் வைத்திருக்கிற நம்பிக்கை இங்கே வெளிப்படுகிறது. மேற்கண்ட இரண்டு திருப்பாடல் வார்த்தைகளும் கடவுள் மீது எத்தகையச்சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்காமல் இருக்கும் செய்தியைத்தருகிறது. வாழ்க்கையில் சிலவேளைகளில், நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், நிரூபிக்கமுடியவில்லை என்றாலும், நாம் நம்பித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். நமக்கு நம்புவதற்கு காரணங்கள் இல்லையென்றாலும், கடவுளை நம்புவதுதான் உண்மையான நம்பிக்கை.

நம்பிக்கையின் ஆணிவேராக இருப்பது கடவுளன்பு. கடவுள் என்னை அன்பு செய்கிறார் என்ற எண்ணமே, நமக்கு புதிய உணர்வைத்தர வேண்டும். கலக்கமில்லாமல், பயப்படாமல் வாழ்வதற்கு உந்துசக்தியாக இருக்க வேண்டும். அத்தகையதொரு படிப்பினையை இயேசு தனது சீடர்களுக்கு கற்றுத்தருகிறார். நம்மையும் கற்றுக்கொள்ள அழைக்கிறார்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

 


-------------------------

புனித புளோரியன்

திப 13: 26-33
யோவா 14: 1-6

இயேசுவே வழி...

“வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்னும் வாக்கை இன்று சிந்திப்போம்.

தந்தையின் முகம் இயேசுவே. தந்தையின் ஆசியும் இயேசுவே. தந்தையிடம் செல்லும் வழியும் இயேசுவே.

எனவேதான் நமது செபங்களில்கூட “எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்” என இயேசுவின் வழியாய் மன்றாடுகிறோம்.

நாம் இயேசுவின் வழியைப் பின்பற்றுவாம். இயேசுவின் சொற்களையும், செயல்களையும் நாம் பின்பற்றினால், தந்தை இறைவனை நாம் அடையலாம். இயேசு வழியாகவே நாம் நிறைவாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மன்றாடுவோம்: தந்தையின் திருமகனாம் இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீரே எமது வழியாக இருந்து, எங்களை இறைத் தந்தையை நோக்கி வழிநடத்துவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

உள்ளம் கலங்க வேண்டாம் !

உள்ளம் கலங்க வேண்டாம்” என்னும் ஆறுதல் தரும் வார்த்தைகளோடு இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகிறது. கடவுளிடமும், தன்னிடமும் நம்பிக்கை கொள்ளுமாறு அழைக்கிறார் இயேசு.  இயேசு எங்கே போகிறார் என்று சீடர்களுக்குத் தெரியவில்லை. இருப்பினும், இயேசுவிம் அவர்கள் நம்பிக்கை கொண்டனர். இயேசுவே வழி என்று ஏற்றுக்கொண்டனர். இயேசு வழியாகவே தந்தையிடமும், நிறைவாழ்விடமும் செல்ல முடியும் என்று நம்பினர்.

நமக்கும் இந்த அழைப்பு இன்று விடுக்கப்படுகிறது. இயேசு வழியாகவே நமக்கு நிறைவாழ்வு உண்டு என்று நம்பினால், நாம் உள்ளம் கலங்க வேண்டியதில்லை. பல நேரங்களில் தேவையற்ற கவலைகளிலும், கலக்கங்களிலும் நாம் மூழ்கிவிடுகிறோம். வழி தெரியாமல் தவிக்கிறோம். அந்த நேரங்களில் உள்ளம் கலங்க வேண்டாம் என்னும் இயேசுவின் வார்த்தைகளை நினைவில் கொள்வோம்.

மன்றாடுவோம்: ஆறுதல் தரும் வார்த்தைகளைக் கொண்ட இயேசு ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உள்ளம் கலங்க வேண்டாம் என்னும் உமது வார்த்தைகளுக்காக நன்றி ஆண்டவரே ! நீர் காட்டும் பாதையில் நடந்து, கலக்கமின்றி வாழும் வரம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

----------------------

 

'''மீண்டும் இயேசு, 'நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்.
என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்' என்றார்'' (யோவான் 14:1)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு ம் சீடர்களோடு இறுதி முறையாக உணவருந்துகிறார். யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுக்கப் போவதை இயேசு முன்னறிவிக்கிறார். அதுபோல, பேதுரு கூடத் தம்மை மறுதலிக்கப்போகிறார் என இயேசு கூறுகிறார். இதையெல்லாம் கேட்டதும் சீடர்களின் உள்ளத்தில் ஒரே கலக்கம். தங்கள் குருவும் தலைவருமாகிய இயேசு ஏன் இவ்வாறு பேசுகிறார் என அவர்கள் திகைக்கின்றனர். அப்போது இயேசு அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறுகிறார்: ''நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்'' (யோவா 14:1). சீடர்கள் கவலையை விட்டொழித்து, கடவுளிடத்தில் தங்கள் நம்பிக்கையை வைக்கவேண்டும். கடவுளால் அனுப்பப்பட்டு இவ்வுலகிற்கு வந்த இயேசுவிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும் - இதுவே இயேசு அவர்களிடமிருந்து எதிர்பார்த்த பதில். இவ்வாறு சீடர்கள் கடவுளையும் இயேசுவையும் நம்பி ஏற்பதாக இருந்தால் அவர்களுக்குக் கடவுளோடு எந்நாளும் நிலைத்து வாழ்கின்ற பேறு கிடைக்கும். இதைக் குறிப்பிட்டே இயேசு, ''என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன'' என்றும், ''நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்'' என்றும் கூறுகிறார் (காண்க: யோவா 14:2,3).

-- ''தந்தை வாழும் இடம் (இல்லம்)'' என இயேசு எருசலேம் கோவிலை முன்னொரு நாள் குறிப்பிட்டிருந்தார் (காண்க: யோவா 2:16). அந்த இல்லம் இடிபட்டு விழுந்தாலும் அதை மீண்டும் கட்டி எழுப்புவதாக இயேசு கூறியிருந்தார். ''இயேசு தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார்'' (யோவா 2:21) என யோவான் குறிப்பிடுகிறார். எனவே, இயேசுவே தந்தை வாழும் இடம் (கோவில்) என்பது தெளிவாகிறது. இவ்வாறு, கடவுளின் இல்லமாக இயேசுவே நம்மிடையே இருப்பதால் இயேசுவின் சீடர்கள் அவரிடத்தில் உறைவிடம் பெறுவார்கள். இயேசு தம்மை நம்புவோருக்குத் தம் வாழ்வில் பங்களிப்பார். அவர்கள் இயேசுவோடு இணைந்திருப்பர். இயேசுவே கடவுளின் இல்லமாக இருப்பதால் அவர்கள் தந்தையோடும் இயேசுவோடும் அன்புறவில் பிணைந்திருப்பர். இவ்வாறு கடவுளின் அன்பில் நிலைத்திருப்போருக்கு இயேசு நிலைவாழ்வை வாக்களிக்கிறார். அந்த வாழ்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நாம் இயேசுவிடத்தில் நம்பிக்கை கொள்ளவேண்டும். இயேசுவை வழியாகக் கொண்டு, அவர் அறிவிக்கின்ற உண்மையை நம் வாழ்வில் ஏற்றுச் செயல்பட்டால் நிலைவாழ்வைக் கண்டடைவோம். இயேசு கூறுகிறார்: ''வழியும் உண்மையும் வாழ்வும் நானே'' (யோவா 14:6)

மன்றாட்டு
இறைவா, நிலைவாழ்வுக்கு வழியான இயேசுவை நாங்கள் பின்சென்றிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

---------

"வழியும் உண்மையும் வாழ்வும் நானே."

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நாம் இந்த உலகில் இருப்பதே வாழ்வதற்குத்தான். வாழ வழி தெறியவில்லை என்று அங்கலாய்ப்பவர்களும் உண்டு. எதைச் செய்தாலும் முட்டிக்கொண்டே நிற்கிறதே என்று கண்ணீர் விடுபவர்கள் உண்டு.இத்தகையோரின் வாழ்க்கைப் போராட்டத்திற்கு முடிவாக இருப்பவர் இயேசு ஒருவரே.

புனித தோமா போல இயேசுவைப்பற்றியும், அவரது போதனைகள், வழிமுறைகள்பற்றியும், அவர்எங்கிருந்து வந்தவர், எங்கே செல்கிறார் என அறியாதிருந்தால், நமக்கும் வாழ்க்கைச் சிக்கலாகத்தான் இருக்கும். இயேசுவே நம் வாழ்வின் இலக்கு.நாம் உண்டாலும் உறங்கினாலும், உழைத்தாலும் ஓய்ந்திருந்தாலும் வாழ்வின், இந்த இலக்கை அடைவதற்கு வழியும் இயேசுவே. "ஆண்டவரே உனக்குமுன் செல்வார். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலக மாட்டார். அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார்" (இணைச் சட்டம்31:8). உண்மையை இடைக்கச்சையாக (எபேசி6:14) கட்டிக்கொண்டு அன்றாடம் வாழ்க்கையில் அவரோடு வாழ்ந்தால், அதில் கிடைக்கும் மகிழ்ச்சியான வாழ்வுதான் இயேசு தரும் வாழ்வு.

இவ்வாறு உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக்கொண்டு, இயேசுவின் பின்னால் அவர் வழியில் அடியொற்றித் தொடரும் வாழ்க்கை, ஒரு ஆசீர்வாதமான வாழ்வாக இருக்கும். முட்டி மோத வாய்ப்பில்லை.நீங்கள் மாவு விற்கச் சென்றால் காற்று அடிக்காது; நீங்கள் உப்பு விற்கச் சென்றால் மழை பெய்யாது. எல்லாம் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். இயேசு காட்டிய வாழ்க்கையை வாழுங்கள். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்