புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு - திருத்தூதர்கள் விழா

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-8

சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே. நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 19: 1-2. 3-4
பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. -பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில்படுவதுமில்லை.
4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது,
இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. பிலிப்பே, என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

யோவான் 14:6-14

அப்போஸ்தலர்களான புனித பிலிப்பு, யாக்கோபு


+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 6-14

அக்காலத்தில் இயேசு, தோமாவை நோக்கி: ``வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்'' என்றார்.
அப்போது பிலிப்பு அவரிடம், ``ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்'' என்றார். இயேசு அவரிடம் கூறியது: ``பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, `தந்தையை எங்களுக்குக் காட்டும்' என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றை விடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.ம் செய்வேன்.

-------------------------

யோவான் 14: 6 – 14
மீட்கப்படுவோமா?

ஒரு சிலர் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்விலிருந்து மீட்கப்பட வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஒரு சிலர் மக்களிடையே பொருளாதார சீர்கேட்டை உருவாக்கும் வாகன உரிமை வழி வழங்கப்படும் அபராதங்களிலிருந்து மீட்கப்பட வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஒரு சிலர் அரசின் தொழிற்சாலைகளில் பணி நேர நீட்டிப்பு திட்டத்திலிருந்து மீட்கப்படு வேண்டும் என்று எண்ணுகின்றனர். 100 நாள் திட்டத்தை அரசு எப்போது கைவிட்டு நாம் மீட்படைய போகிறோம் என்று விவசாயப் பெருமக்கள் இன்னொருபுறம் கதறுகின்றார்கள். இவ்வாறு எல்லோருமே ஏதாவது ஒரு வழியில் மீட்படைய விரும்புகிறோம்.

ஆனால் இந்த உலகில் நாம் பெற்றுள்ள பாவ வாழ்விலிருந்து மீட்படைய வேண்டும் என்று விரும்பியவர் தான் நமதாண்டவர் இயேசு கிறிஸ்து. ஏனென்றால் கடவுள் இந்த உலகினை படைக்கின்றார் அதில் சிறந்த படைப்பாக மனிதர்களை படைக்கின்றார். ஆனால் மனிதனின் கீழ்ப்படியாமையினால் இந்த உலகத்தில் பாவம் நுழைய காரணமாக மாறுகிறான் என்பது நாம் அறிந்ததே. அத்தகைய பாவக்கறை எடுப்பதற்காகத் தான் இறைவாக்கினர்களை அனுப்புகின்றார். அவர்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் தான் கடவுள் தன் ஒரே மகனை அனுப்புகின்றார் வார்த்தை வழியாக. வார்த்தை மனுவுருவாகி அவர் நம்மிடையே குடி கொண்டார். அவர் தான் இயேசு கிறிஸ்து. ஒரு வார்த்தை வழியாக உலகத்தை படைத்து, ஒரு வார்த்தை வழியாக உலகத்தை பாவத்திலிருந்து மீட்டார் கடவுள். அதே வார்த்தையை நாம் வாழ்வில் படிகட்டுகளாக வைத்து செயல்பட வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம். ஆனால் யூதர்கள், பரிசேயர்கள் இதனை ஏற்க மறுக்கின்றார்கள். ஏனென்றால் மோசேயின் சட்டம் என்ற கிணற்றுக்குள் மூழ்கி கிடக்கின்றார்கள். அதனால் தான் இயேசு உங்களுக்கு அளித்த வார்த்தை வழி நற்செய்தியை ஏற்றால் மீட்பு அடைவீர்கள் என கூறுகின்றார்.

நாம் நற்செய்தி வழி மீட்பு விரும்புகிறோமா? அதிகார வழி மீட்பு விரும்புகிறோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

1கொரிந்தியர் 15: 1 – 8
இறைமகன் இயேசுவின் உயிர்ப்பு

கிறிஸ்துவை பிற இனத்து மக்கள் எல்லாருக்கும் அறிவிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தோடு, தன்னுடைய உடல் நலத்தையும் பார்க்காது, இறைப்பணி செய்தவர் பவுலடியார். கிறிஸ்துவை அறிவிப்பதில் மட்டுமல்ல, அவர்களை உறுதிப்படுத்துவதிலும் அவர் முன்னோடியாக திகழ்ந்தார். மக்கள் மனதில் எப்போதெல்லாம் சந்தேகங்கள் வருகிறதோ அப்போதெல்லாம், அவர்களுக்கு விளக்கங்கள் கொடுப்பதற்காகவும் கடிதம் எழுதினார். உயிர் பெற்றெழுதலைப் பற்றி கொரிந்தியரின் தவறான கண்ணோட்டத்தைப் பவுல் களையப் பார்க்கிறார். உயிர்ப்பு பற்றிய அவர்களின் சந்தேகங்களுக்கு, தன்னுடைய அறிவைக் கொண்டு விளக்கம் கொடுக்க முற்படுகிறார்.

கிறிஸ்தவத்தின் அடிப்படையே இயேசு உயிர் பெற்றெழுந்தார் என்பதுதான். ஒருவேளை கிறிஸ்து உயிர் பெற்றெழவில்லை என்றால், அவர்கள் கொண்டிருக்கிற விசுவாசம் கேள்விக்குறியதாகிவிடும். இயேசுவின் உயிர்ப்பு ஏதோ தற்செயலாக நிகழ்ந்தது கிடையாது. அது ஏற்கெனவே முன்னறிவித்தபடி நடைபெற்றிருக்கிறது. இயேசு வாழ்ந்தபோதே, தான் எப்படி இறக்கப்போகிறேன் என்பதை அவர் முன்னறிவித்திருக்கிறார். அவர் அறிவித்தது போலவே, அனைத்தும் நடைபெற்றது. அவர் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்தார். சொன்னபடியே அவர் உயித்தெழுந்தார். அவருடைய சீடர்களுக்கு அவர் தோன்றினார். அவர் எனக்கும் தோன்றினார் என்று, உயிர்ப்பு உண்மையென்கிற செய்தியை அறிவிக்கிறார்.

கிறிஸ்தவத்தின் அடிப்படைய உயிர்ப்பு தான். உயிர்ப்பு என்கிற கண்ணாடி மூலமாக நாம் இயேசுவின் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறபோது, அதிலிருக்கிற உண்மையை நாம் அறிந்து கொள்ள முடியும். கிறிஸ்துவின் நற்செய்தியின் ஆழமான உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------

திருப்பாடல் 19: 2 – 3, 4 – 5
”படைப்புக்களின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகிறது”

கடவுள் இருக்கிறாரா? எங்கே இருக்கிறார்? கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் என்ன? இவை போன்ற கேள்விகள், மனித உள்ளத்தில் அடிக்கடி எழக்கூடியவை. ஏனெனில், மனிதர்களாகிய நாம் எப்போதுமே, காரணங்களை, விளக்கங்களைத் தேடுகிறவர்களாக இருக்கிறோம். இன்றைய திருப்பாடல் கடவுளின் இருப்பை, அவருடைய மாட்சிமையை, மகிமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

இந்த திருப்பாடலில் வரக்கூடிய முதல் நான்கு இறைவார்த்தைகளுமே, கடவுளின் வல்லமையை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. நாம் காலை விழித்தெழுவதிலிருந்து பார்க்கக்கூடிய எல்லாவற்றிலும், கடவுளின் மகிமையைக் கண்டுனரலாம். காலையில் எழக்கூடிய சூரியன், எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிற மேகக்கூட்டங்கள், இரவு, பகல் மாற்றம் – இவையனைத்துமே தங்களைப் படைத்தவர் ஒருவர் இருக்கின்றார் என்பதை, வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. நாளை  சூரியன் தோன்றுமா? தோன்றும் என்கிற நம்பிக்கையை, இயற்கை நமக்கு தந்துகொண்டே இருக்கிறது. அவையனைத்துமே கடவுளின் வேலைப்பாடுகள் தான். கடவுளை நாம் வேறு எங்கேயும் தேட வேண்டாம்? சுற்றி இருக்கிற இயற்கையைப் பார்த்தாலே போதும். கடவுளின் இருப்பை அறிந்து கொள்ளலாம்.

இறைவனின் இருப்பு நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழ்வதற்கான ஓர் அழைப்பு. அது நாம் எப்போதும் இயற்கையின்பால் அன்ப கொண்டிருக்க வேண்டும் என்பதை நமக்கு வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. கடவுளின் அன்பையும், அவரது இனிமையையும், இயற்கையிலிருந்து நாம் சுவைத்துணர்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

இயேசு காட்டும் அன்பு

அன்பு காயத்தை ஏற்படுத்தும் என்று பொதுவாகச் சொல்வார்கள். அன்பு எப்படி காயத்தை ஏற்படுத்தும்? அன்பு காயத்திற்கு குணமளிக்கும் அருமருந்துதானே? என்று நாம் கேள்வி எழுப்பலாம். ஆனால், உணர்வுப்பூர்வமாகவும், அனுபவப்பூர்வமாகவும் இதனை அனைவருமே சரி என்று தான் சொல்வார்கள். அன்பில்லாதவன், அன்பை உணராதவன் மரக்கட்டைக்குச் சமமானவனாகக் கருதப்படுகிறான். எப்போது அவனிடத்தில் அன்பு நுழைகிறதோ, அங்கு மகிழ்ச்சியும் வருகிறது, அதேபோல கவலையும் தொற்றிக்கொள்ள தொடங்குகிறது. இது சரியா? தவறாக? என்பதில் கவனம் செலுத்துவதை விட, அது எப்படி என்பதைப்பற்றி சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

இந்த உலகத்தில் இருக்கிற அனைவருமே அன்பு செய்யப்பட வேண்டுமென்று விரும்புகிறார்கள். கணவன், மனைவி உறவு இந்த அன்பை அடிப்படையாகக் கொண்டதுதான். தன்னை அன்பு செய்ய ஒருவர் இருக்கிறார், தன்னுடை துன்பத்தில் பங்கெடுக்க ஒருவர் இருக்கிறார் என்கிற எண்ணம் நிச்சயம், மனித வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், அதே வேளையில் அங்கே சுயநலமும் குடிகொள்ள தொடங்குகிறது. எனது மனைவி அல்லது கணவன் தனக்கு மட்டும் தான், தன்னை மட்டும் தான் அன்பு செய்ய வேண்டும் என்று, குறுகிய வட்டத்தில் சிந்திக்கப்படுகிறபோது, அது காயத்தையும், அளவுகடந்த மனஉளைச்சலையும் ஏற்படுத்துகிறது. ஆக, அன்பு என்பது சுயநலத்தைக் கடந்து ஒன்றாக இருக்க வேண்டும். அதுதான் தூய்மையான அன்பு. அந்த அன்பு தான், காயத்திற்கு அருமருந்தாக அமைந்திடும் அன்பாக இருக்க முடியும்.

இறைமகன் இயேசு நமக்குத்தரும் அன்பு இத்தகைய அன்பு தான். அவர் கடவுளிடத்தில் வைத்திருக்கிற அன்பு சுயநல அன்பல்ல. அனைவரும் அள்ளிப்பருக வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் அன்பு. தன்னுடைய அன்பையும் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்க அவர் விரும்பவில்லை. மாறாக, அனைவருக்கும் கொடுக்கக்கூடிய அன்பாக வைத்திருந்தார். அத்தகைய அன்பை நாமும் வெளிக்காட்டுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

இயேசுவின் வல்லமை

“நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்: ஏன் அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்” என்று இயேசு சொல்கிறார். இயேசு சொல்வதன் பொருள் என்ன? இயேசுவை விட வல்ல செயல்களை ஒருவர் செய்து விட முடியுமா? இயேசுவை விட வல்ல செயல்கள் செய்தால், அவர் இயேசுவை விட மேலானவர் ஆகிவிடமாட்டாரா? உண்மையிலே இயேசு இங்கே என்ன சொல்ல விரும்புகிறார்? இந்த கேள்விகள் அனைத்துமே, இந்தப்பகுதியை வாசிக்கின்றபோது நமக்கு ஏற்படும் எண்ணங்கள்.

தொடக்க காலத்திருச்சபை உண்மையிலே குணப்படுத்துகின்ற வல்லமையைப்பெற்ற ஒன்றாகத்திகழ்ந்தது. 1 கொரிந்தியர் 12 வது அதிகாரத்தில் தூய ஆவியார் அருளும் கொடைகளைப்பற்றிப் பார்க்கிறோம். 9 வது இறைவார்த்தைச்சொல்கிறது: “அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணிதீர்க்கும் அருள் கொடையை அளிக்கிறார்”. அதேபோல் யாக்கோபு தனது திருமுகத்தில் 5: 14 ல் சொல்கிறார்: “உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால் திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள்”. ஆக, தொடக்கத்திருச்சபை வல்ல செயல்கள் செய்தாலும், இயேசுவை விட வல்ல செயல்கள் செய்யப்பட்டதா? என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி. பின் இந்தப் பகுதியை எப்படிப்புரிந்து கொள்வது? மருத்துவ உலகத்தின் வளர்ச்சியைப்பார்த்தோமென்றால், ஒரு நிலையிலிருந்து ஆரம்பித்த வளர்ச்சி இன்றைக்கு விஸ்வரூப வளர்ச்சியாக மாறியிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ள வளர்ச்சிக்கும், இப்போதைய வளர்ச்சிக்கும் அதிக வேறுபாடு இருப்பதை நாம் பார்க்கலாம். இயேசு வாழ்ந்த காலத்தில் இயேசுவின் போதனை பாலஸ்தீனப்பகுதிகளுக்குள் முடங்கிக்கிடந்தது. ஆனால், இயேசு இறந்தபிறகு அசுர வளர்ச்சியாக, இந்த உலகமெங்கிலும் இறையரசு பரவியது. இயேசு கொடுத்த தொடக்கம் இன்றைக்கு மிகப்பெரிய ஆலமரமாக, இந்த உலகமெங்கிலும் வளர்ந்திருக்கிறது. ஒருவர் இயேசு மீது நம்பிக்கை வைத்தால், அவருடைய துணைகொண்டு எதையும் செய்ய முடியும் என்பதுதான் இயேசு நமக்குக் கற்றுத்தரும் செய்தி. அனைத்திலும் இயேசுவின் வல்லமை இருக்கும். இயேசுவை விட வல்ல செயலாக இருந்தாலும், இயேசுவின் வல்லமை இல்லாமல் எதையும் செய்ய முடியாது. இயேசுவின் வல்லமையோடு நம்மால் அனைத்தையும் செய்து முடிக்க முடியும்;.

இயேசுவின் வல்லமை மீது நாம் முழுமையான நம்பிக்கை வைப்பதற்கு அழைக்கப்படுகிறோம். இயேசுவின் வல்லமை இயேசுவின் வாழ்நாட்களோடு முடங்கிப்போய்விடவில்லை. அவரின் ஆற்றல் கொண்டு, அதைவிட அதிக வல்லமையுள்ள செயல்களை நம்மால் செய்ய முடியும். அத்தகைய ஆற்றலை நாம் நிரம்பப்பெறுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு - திருத்தூதர்கள்

1 கொரி 15: 1-8
யோவா 14: 6-14

“தந்தையை எங்களுக்குக் காட்டும், அதுவே போதும்”

இன்று திருத்தூதர்களான புனித பிலிப்பு மற்றும் யாக்கோபு இருவரின் விழாக்களைக் கொண்டாடுகிறோம். அவர்களின் மாதிரியைப் பின்பற்றி நாமும் வாழ முயல்வோம்.

இன்றைய நற்செய்தி வாசகம் பிலிப்புவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடத்தை நமக்கு அடையாளப்படுத்துகிறது. “ என் வழியாய் அன்றி எவரும்       தந்தையிடம் வருவதில்லை” என்று இயேசு சொன்னபோது, பிலிப்பு ஆர்வத்துடன் சொல்கிறார்: “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும், அதுவே போதும்”.

ஆம், அன்புக்குரியவர்களே, தந்தை இறைவன்மீது பிலிப்பு கொண்ட ஆர்வத்தையும், இறையனுபவத்தைத் தவிர்த்த மற்ற அனைத்தையும் தேவையற்றவை எனக் கருதும் மனநிலையையும் அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

“அனைத்திற்கும் மேலாக இறையாட்சியைத் தேடுங்கள், மற்ற அனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” என்று மொழிந்த இயேசுவின் சொற்களை நினைவுபடுத்துகிறார் பிலிப்பு. “இறைவனே நமக்குப் போதும்” என்ற மனநிலையின் முதல் அடியை இன்று எடுத்து வைப்போமா?

மன்றாடுவோம்: தந்தையின் திருமுகத்தை வெளிப்படுத்தும் இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இறைவன்மீது என் உள்ளம் தாகம் கொள்ளும் பேற்றினை எனக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

அதுவே போதும்!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

புதிய ஏற்பாட்டின் அருமையான அருள்மொழிகளுள் ஒன்றாகப் புனித பிலிப்புவின் இந்த வரிகளை நான் கருதுகிறேன்: #8220;ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும். அதுவே போதும்”. மனிதர்களுக்குப் பல்வேறு விதமான தேவைகள், ஆசைகள் இருக்கின்றன. அந்த ஆகைள் நிறைவேறினால்தான், மனம் நிறைவடைகிறது. ஆனால், மனித இதயங்கள் அனைத்தின் உண்மையான ஆவலும், ஆர்வமும் இறைவன்தான். #8220;கலைமான்கள் நீரோடைகளை ஆர்வமாய் நாடுவதுபோல என் ஆன்மா இறைவனைத் தேடுகிறது” என்றார் திருப்பாடலாசிரியர் (திபா 42). #8220;உம்மில் ஓயும்வரை எங்கள் இதயங்கள் ஓயா” என்றார் புனித அகுஸ்தினார்.

இத்தகையை உணர்வுகளைத்தான் தோமாவும் பிரதிபலிக்கிறார். #8220;தந்தையை எங்களுக்குக் காட்டும். அதுவே போதும்” என்னும் அவரது  சொற்கள் நம் அனைவரின் சொற்களாக, மனநிலையாக மாறட்டும். #8220;அனைத்திற்கும் மேலாக இறைவனையும், இறையாட்சியையும் தேடுங்கள். மற்ற அனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” என்னும் இறைமொழிக்கேற்ப, இறைத் தந்தைமீது நாம் ஆர்வம் கொள்வோம். இறையன்பை அனுபவிப்பதே போதும் என்று சொல்வோம்.

மன்றாடுவோம்: எங்களின் ஆர்வமும், ஆற்றலுமான இறைவா, உம்மைப் போற்றுகிறோம்.  தந்தை இறைவனை எங்களுக்கு வெளிப்படுத்தியதற்காக நன்றி சொல்கிறோம். இறைவன்மீது ஆர்வம்கொண்டு வாழும் வரத்தைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

-----------------------

''பிலிப்பு இயேசுவிடம், 'ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்' என்றார். இயேசு அவரிடம் கூறியது:
''பிலிப்பே,... நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா?...'' (யோவான் 14:8,10)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு மக்களுக்குப் போதனை வழங்கினார்; அரும் செயல்கள் பல புரிந்தார். அவருடைய சொற்களும் செயல்களும் கடவுளின் வல்லமையை மக்களுக்கு எடுத்துக்காட்டின. குறிப்பாக, இயேசுவோடு கூட இருந்து அவரைப் பின்தொடர்ந்து சென்ற சீடர்கள் இயேசுவின் சொற்களை நேரடியாகக் கேட்டார்கள், அவர் புரிந்த அரும் செயல்களை அருகிருந்து கண்டார்கள். எனவே அவர்கள் இயேசு யார் என்பதை அறிந்திருப்பார்கள் என நாம் எதிர்பார்க்கலாம். இருந்தாலும், சீடர்கள் இயேசுவை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே பிலிப்புவின் கூற்று வெளிப்படுத்துகிறது. பிலிப்பு இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவைப் புரிந்துகொள்ளவில்லை. தந்தை வேறு இயேசு வேறு என்றுதான் அவர் நினைக்கின்றார். ஆனால் இயேசு பிலிப்புவின் தவறான பார்வையைத் திருத்துகின்றார். இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நெருங்கிய உறவு உண்டு. இயேசு தந்தையால் அனுப்பப்பட்டு இவ்வுலகிற்கு வந்தவர்; தந்தையே இயேசுவுக்குத் ''தோற்றுவாய்'' எனலாம். எனவே தந்தை இயேசுவிடம் உறைகின்றார்; இயேசு தந்தையிடம் உறைகின்றார். இந்த உண்மை மனித அறிவுக்கு எட்டாததாகத் தெரியலாம். ஆனால் இயேசுவின் சொற்களைக் கேட்டு, அவரிடத்தில் நம்பிக்கை கொள்வோர் இயேசு அறிவிக்கின்ற இந்த உண்மையை ஏற்றுக்கொள்வார்கள்.

-- இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவு எந்த அளவு நெருக்கமானது என்றால் இயேசு, ''என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்'' எனக் கூறுகிறார் (யோவா 14:9). இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொண்டால் இயேசு நமக்குக் காட்டுகின்ற வழியே கடவுள் நமக்கு அளிக்கின்ற வாழ்வுமுறை எனவும் ஏற்போம். அப்போது இயேசுவின் தந்தையும் நம் தந்தையுமாகிய கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மைத் தம்மோடு எந்நாளும் நிலைவாழ்வில் பங்குபெறச் செய்வார் என்னும் நம்பிக்கையோடு வாழ்வோம். இந்த நம்பிக்கை நமக்கு இருப்பதால் நாம் இயேசுவின் பெயரால் கேட்பதை அவர் செய்வார் என்னும் உறுதி நமக்கு உண்டு. இத்தகைய உறுதியை நமக்கு அளிப்பவர் இயேசு நமக்குக் கொடையாகத் தருகின்ற தூய ஆவி (காண்க: யோவா 14:16,17அ).

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனில் உம்மைக் கண்டு நாங்கள் நல்லுறவில் வளர்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

------------------------------

எதை கேட்டாலும் செய்வேன்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நம் வாழ்க்கையில் மிகப் பெரிய ஆசீர்வாதம் நாம் கேட்டவை அனைத்ததையும் பெற்றுக்கொண்டோம் என்பதுதான். "நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்" (யோவான் 14:13, 14:14) இரண்டு முறை இயேசு இதைச் சொல்லுகிறார்.அவ்வாரே நம்பிக்கையோடு கேட்ட யாவரும், கேட்ட அனைத்தையும் பெற்றுள்ளனர் என்பதையும் விவிலியத்தின் பல சான்றுகளில் அறிய வருகிறோம்.

இவ்வாறு கேட்ட அனைத்தையும் நாம் பெற வேண்டுமானால், அந்த ஆளைப்பற்றிய அனுபவம், அறிவு இருக்கவேண்டும். இந்த ஆளிடம் இதைக்கேட்டால் கிடைக்கும் என்ற அனுபவமும் அறிவும் அவசியம் தேவை.இயேசுவைப்பற்றிய அனுபவமும் அறிவும் நாம் கேட்ட அனைத்தையும் நமக்குத் தர வல்லது. இதைத்தான் கடவுள் நம்பிக்கை அல்லது விசுவாசம் என்று சொல்லலாம்.

இன்று வரையிலும் அந்த அன்பு தெய்வம் நமக்குச் செய்துவருகிற நன்மைகளை நாம் ஆழ்ந்து சிந்தித்தாலே இந்த இறை அனுபவத்தைப் பெற்றுவிடுவோம்.பெரும்பாலும் கடவுள் நமக்குச் செய்து வரும் நன்மைகளை நாம் சிந்திப்பதே இல்லை. ஏதோ நமது திறமையால் பணத்தால் நாம் சாதித்ததாக நினைத்துவிடுகிறோம். கடவுளை மறந்து விடுகிறோம். இது கடவுளிடம் நாம் கேட்காததற்குச் சமம். எனவே அடுத்த முறை நாம் நினைப்பது நடப்பதில்லை. கேட்பது கிடைப்பதில்லை. ஆகவே, இந்த நம்பிக்கையோடு கேட்ப்போம். கேட்டவை யாவும் கிடைக்கும்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்