முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 22-34

அந்நாள்களில் பிலிப்பி நகர் மக்கள் திரண்டெழுந்து, பவுலையும் சீலாவையும் தாக்கினார்கள். நடுவர்கள் அவர்களுடைய மேலுடைகளைக் கிழித்து அவர்களைத் தடியால் அடிக்க ஆணையிட்டார்கள். அவர்களை நன்கு அடித்துச் சிறையில் தள்ளிக் கருத்தாய்க் காவல் செய்யுமாறு சிறைக் காவலர் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள். இவ்வாறு கட்டளை பெற்ற அவர் அவர்களை உட்சிறையில் தள்ளி, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் உறுதியாய் மாட்டிவைத்தார். நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினர். மற்றக் கைதிகளோ இதனைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறைக் கூடத்தின் அடித்தளமே அதிர்ந்தது. உடனே கதவுகள் அனைத்தும் திறந்தன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழுந்தன. சிறைக் காவலர் விழித்தெழுந்து, சிறைக் கூடத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு, கைதிகள் தப்பி ஓடியிருப்பார்கள் என எண்ணி, வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். பவுல் உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, ``நீர் உமக்குத் தீங்கு எதுவும் செய்துகொள்ளாதீர்; நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்'' என்றார். சிறைக் காவலர் உடனே ஒரு விளக்கைக் கொண்டுவரச் சொல்லி, விரைந்தோடி வந்து, நடுங்கியவாறே பவுல், சீலா ஆகியோரின் காலில் விழுந்தார். அவர்களை வெளியே அழைத்து வந்து, ``பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ``ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்'' என்றார்கள். பின்பு அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை அவருக்கும் அவர் வீட்டில் இருந்தோர் அனைவருக்கும் அறிவித்தார்கள். அவ்விரவு நேரத்திலேயே அவர் அவர்களைக் கூட்டிச் சென்று அவர்களின் காயங்களைக் கழுவினார். பின்பு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர் அவர்களைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறினார். கடவுள்மீது நம்பிக்கை கொண்டதால் தம் வீட்டார் அனைவரோடும் சேர்ந்து அவர் பேருவகை அடைந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 138: 1-2. 2-3. 7-8
பல்லவி: ஆண்டவரே, உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.

1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்;
தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
2ய உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன். பல்லவி

2 உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;
ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.
3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்;
என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி

7 உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.
8 நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்;
ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு;
உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! துணையாளரை உங்களிடம் அனுப்புவேன். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது, அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

யோவான் 16:05-11

பாஸ்கா காலம்-6 வாரம் செவ்வாய்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 5-11

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``இப்போது என்னை அனுப்பியவரிடம் போகிறேன்; ஆனால் உங்களுள் எவரும் `நீர் எங்கே போகிறீர்?' என்று என்னிடம் கேட்காமலேயே நான் சொன்னவற்றைக் குறித்துத் துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள். நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன். அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார். பாவம் பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் என்னிடம் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நீதி பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் நான் தந்தையிடம் செல்கிறேன்; நீங்களும் இனி என்னைக் காணமாட்டீர்கள். தீர்ப்பு பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றுவிட்டான்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 16: 5 - 11
மாற்றி யோசி

மாற்றி யோசி என்ற நூலின் ஆசிரியர் இவ்வாறு கூறுவார் “மனிதனுடைய மனநிலை தேக்கு மரம் போன்றது. ஏனென்றால் இந்த மரத்தின் இயல்பு வருடங்கள் ஆக ஆக பலன் அதிகம். அதுபோல எவன் சிந்தித்து சிந்தித்து முடிவு எடுக்கின்றானோ அவன் செயலில் பலம் வாய்ந்தவனாக காட்சியளிக்கின்றான்”. மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற நந்தினியின் பரிந்துரையும் இது தான்: “நான் படித்த பாடங்களை வீட்டில் சென்று சிந்தித்து எனது கருத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பேன்”. ஆனால் சிந்திக்கக்கூடிய தன்மை நமது சமுதாயத்தில் குறைவாகவே இருக்கிறது. அதனால் தான் கொலை, கற்பழிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் எப்போதுமே சிந்தித்து அதனை மாற்று வழியில் அமைத்துக் கொள்ள இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. முதல் வாசகத்தில் பிலிப்பு நகர மக்கள் கொலை, கொள்ளை போன்ற வாழ்விலிருந்து மாற்றி யோசித்து கடவுளுடைய வார்த்தையை உள்வாங்கி நிறைவாக ஆசி பெற்றதைப் பார்க்கிறோம். நற்செய்தி வாசகத்தில் இயேசு சீடர்களிடம் தன் சாவை எடுத்துரைத்து இனி தூய ஆவியின் துணையோடு பணி செய்ய போவதாக புதிய சிந்தனையை கற்றுக் கொடுக்கின்றார். எதற்காக இயேசு இந்த மாற்றி யோசிக்கக்கூடிய தன்மையை விதைக்கிறாரென்றால் சீடர்கள் மத்தியில் பல எண்ணங்கள் இருந்தன. யார் பெரியவர்? ஏன் புதுமைகள் செய்ய இயலவில்லை? அதிக ஓய்வு எடுப்பது, அடித்தள மக்கள் மீது கருணை காட்டாமை – இதனைக் கண்டு தான் இயேசு இன்னும் சிறிது காலம் தான் அவரின் உடனிருப்பு இருக்கும். பிறகு சீடர்கள் தாங்களாகவே முன்வந்து பணி செய்ய வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையைத் தான் மறைமுகமாக கொடுத்து மாற்றி யோசிக்க தூண்டுகின்றார்.

நாம் சமுதாயத்தில் நடக்கின்றவற்றை மாற்றி யோசிக்க முயல்கின்றோமா? கடவுள் நமக்கு அருளிய சோதனைகளை மாற்றி யோசிக்கின்றோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

நல்லதை பரவலாக்கம் செய்.

சீடர்கள், இயேசு தங்களை விட்டு செல்லப் போகிறார் என்பதை சிந்தித்து கவலையில் இருக்கிறார்கள். ஆனால், இயேசுவோ தந்தையிடம் செல்வதை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார். தந்தையிடம் செல்வது மட்டுமல்ல, இயேசு மனித உடலில் இருக்கும் வரை உலகின் பல இடங்களில் பரவி இருப்பது என்பது இயலாத செயல். உலகம் முழுவதும் சீடர்களை அனுப்புவதற்கும், ஒட்டு மொத்த மனிதர்களின் மத்தியில் இயேசு பரவி வாழ்வதற்கும், தூய ஆவியானவரின் வருகை அவசியம். நன்மை பரவலாக்கம் செய்யப்படப் போகிறது என்பதில் இயேசு பெரு மகிழ்ச்சி கொண்டிருக்கக் கூடும். இயேசு சென்ற இடமெல்லாம் மட்டுமல்ல; தன் மனித உடலை அழித்தும் கூட நல்லதையே செய்ய விரும்பினார்.

மனிதர்களாகிய நாம் நன்மையை விட, தீமையை பரவலாக்கம் செய்வதில் ஆர்வம் காட்டுகிறோம். பிறரைப் பற்றி அவதூறுகள் வரும் போது அதில் இருக்க கூடிய உண்மையைப் பற்றி ஆராயாமல் அதனைப் பரப்புவதில் ஆர்வம் செலுத்துகிறோம். வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக்கில் சுவாரஸ்யம் என்ற பெயரில் பொய்த் தகவல்களை பரப்புகிறோம். இயேசுவைப் போல நன்மையை பரவலாக்கம் செய்யலாமே!.

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

திருத்தூதர் பணிகள் 16: 22 – 34
இறைவனின் திருவுளம்

கடவுளுடைய வழிகள் அற்புதமானவை. நாம் நம்ப முடியாதவை. பல நேரங்களில், நம்முடைய மனித பார்வையில் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஆனால், காலம் கனிகிறபோது, நாம் கடவுளின் அன்பை உணர்ந்து மிகவும் வியப்படைகிறோம். கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருநாளும், நம்முடைய வாழ்வில் நடக்கிற நிகழ்வுகளை எண்ணிப்பார்த்து, ஏன்? ஏன்? என்று, பல ”ஏன்”களை கடவுளிடம் கேட்டு சளிப்படைந்திருக்கிறோம். பதில் அறியாது திணறியிருக்கிறோம். ஆனால், ஒரு கட்டத்தில், அதற்கான பதில் நமக்கு வழங்கப்படுகிறபோது, இறைவனின் அன்பை எண்ணிப்பார்த்து, நாம் நடந்து கொண்ட விதத்திற்கு வருத்தப்படுகிறோம்.

இன்றைய வாசகத்தில், கடவுளின் வழிகள், நாம் ஆச்சரியப்படக்கூடிய இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம். பவுலும் அவரோடு இருந்த சீடர்களும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிறையில் இருக்கிறவர்கள் வாய்ப்பு கிடைக்கிறபோது, நிச்சயம் தப்பிப்பதற்கு முயற்சி எடுக்கிறவர்களாகத்தான் இருப்பர். பவுலுக்கும், சீடர்களுக்கும் இயற்கையே அப்படிப்பட்ட வாய்ப்பைக் கொடுத்தும் அவர்கள் தப்ப நினைக்கவில்லை. அவர்களின் அந்த செயல், காவல் காத்துக் கொண்டிருந்த காவலரின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிற அனுபவமாக இருக்கிறது. ஒரு நிகழ்வை கடவுள் எப்படி அற்புதமாக, பயன்தரும் அனுபவமாக மாற்றுகிறார் பாருங்கள். பவுல் நினைத்திருந்தால் தப்பியிருக்கலாம். அவர் அப்படி நினைக்கவில்லை. கடவுளின் திருவுளம் எதுவோ, அதன் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கைக்கான பலனை அவர் பெற்றுக்கொண்டார். ஒரு புதிய குடும்பமே இயேசுவை ஏற்றுக்கொள்கிறது.

நம்முடைய வாழ்க்கையில் நடக்கிற நிகழ்வுகளை கடவுளின் திருவுளமாக ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தை இறைவனிடம் வேண்டுவோம். நம்முடைய கடமையை நாம் செய்ய வேண்டும். நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பணிகளை நாம் செய்ய வேண்டும். நேர்மையாக இருக்க வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மனநிலையோடு வாழ்கிறபோது, நம் வாழ்வில் நடக்கும் அனைத்தையும் கடவுள் நமக்கு நன்மையானதாக மாற்றித்தருவார்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

திருப்பாடல் 138: 1 – 2b, 2c – 3, 7 – 8
”ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்”

ஆண்டவருக்கு முழு மனத்துடன் நன்றி சொல்வது என்பது எது? நாம் எல்லாருமே கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். கடவுளுக்கு காணிக்கை செலுத்துகிறோம். ஆனால், எப்படிப்பட்ட மனநிலையோடு செலுத்துகிறோம்? நன்றி மனநிலையோடு கடவுளுக்கு காணிக்கை செலுத்துகிறவர்களும் குறைவு. கடவுளுக்கு நன்றி செலுத்துகிறவர்களும் குறைவு. இதற்கு அடிப்படை காரணம், எதிர்பார்ப்பு. இன்றைக்கு கடவுளைத் தேடுகிறவர்கள் எல்லாருமே எதிர்பார்ப்போடு தான் தேடுகிறார்கள். கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்கிற மனநிலையோடு கடவுளைத் தேடுகிறவர்கள் இல்லாத சூழ்நிலை தான் காணப்படுகிறது.

கடவுளுக்கு எதற்காக நன்றி செலுத்த வேண்டும்? ஏதாவது செய்தால் தானே நன்றி செலுத்த வேண்டும் என்பதான மனநிலை தான், மக்களிடத்தில் காணப்படுகிறது. ஆனால், கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட பலவற்றை நாம் பெற்றுக்கொண்டதாகவே நினைப்பது கிடையாது. அவற்றை வெகு சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். இந்த வாழ்க்கையும் சரி, நம்முடைய பெற்றோரும் சரி, நம்முடைய உடன்பிறந்தவர்களும் சரி. இவை அனைத்துமே கடவுள் நமக்கு தந்திருக்கிற கொடைகள். எவ்வளவோ அற்புதமான கொடைகளை கடவுளிடமிருந்து நாம் பெற்றிருக்கிறோம். அப்படியென்றால், எந்த அளவுக்கு நாம் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். இந்த நன்றி மனநிலை வேண்டுமென்று ஆசிரியர் அழைப்புவிடுக்கின்றார். எதிர்பார்ப்பு இல்லாமல் கடவுளிடம் செல்ல வேண்டும். எதிர்பார்த்தது கிடைக்கவில்லையென்றாலும் நாம் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். இது தான் நமது வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய செய்தி.

கடவுளை வெறும் வரங்கள் தருகிறவர்களாக மட்டும் நினைக்காமல், நம்மை அன்பு செய்கிறவராகவும் நினைக்கிற மனநிலை வேண்டுவோம். வரங்கள் தருகிறவராக மட்டும் நினைத்தால், நமக்கு தேவை ஏற்படுகிறபோது அவரை நாடுகிறவர்களாகவும், இல்லையென்றால் அவரை உதறித்தள்ளுகிறவர்களாகவும் மாறிவிடுவோம். கடவுளுக்கு எப்போதும் நன்றி செலுத்துவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------

தூய ஆவியின் ஆற்றல்

இயேசுவின் சீடர்கள் வருத்தமடைவதற்கு பல காரணங்கள் இருந்தது. அவற்றுள் முதன்மையான காரணம், இயேசு விரைவில் அவர்களை விட்டு பிரிய இருக்கிறார் என்பதுதான். தான் சீடர்களை விட்டுப்பிரிந்தாலும், அது சீடர்களுக்கு ஆதாயம் தான் என்பது இயேசுவின் எண்ணம். ஏனென்றால், இயேசுவின் பிரிவு அவர்களுக்குத் தூய ஆவியானவரின் துணையைத்தரும். உடல் என்பது வரையறைக்கு உட்பட்டது. உடலுக்கு என்று எல்லை இருக்கிறது. ஆனால், ஆவிக்கு எல்லை கிடையாது. எங்கும் செல்லலாம். உடலுக்கு இருப்பது போல, குறிப்பிட்ட காலம் தான் வாழ்வு என்பதெல்லாம் கிடையாது. எனவேதான் இயேசு இறந்து உயிர்த்த பிறகு தனது சீடர்களிடம் ”இதோ! உல முடிவுவரை எந்நாளுமு் நான் உங்களோடு இருக்கிறேன்” என்று மத்தேயு 20: 20 ல் சொல்கிறார்.

இந்த ஆவியின் ஆற்றல் தான் இயேசுவை நம்புகிற, இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்குகிற ஒவ்வொரு மனிதர்களையும் இயக்கிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு எத்தனையோ புத்தகங்கள் இருக்கிறது. அவற்றிலெல்லாம் தனித்தன்மை வாய்ந்தது விவிலியம் என்று நாம் சொல்கிறோம். ஏன்? அதுவும் வெறும் வரலாற்று நூல்தானே என்று ஒருவர் வாக்குவாதம் செய்யலாம். அது வெறும் இஸ்ரயேல் மக்களின் இறையனுபவம். அதனால், இன்று நமக்கு ஒன்றுமில்லை என்று கூட நாம் சொல்லலாம். ஆனால், அது தவறு. காரணம், இன்றளவும் தூய ஆவி இறைவார்த்தை வழியாக நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார். இறைவார்த்தை என்றோ வரலாற்றில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமல்ல, இன்றும் நமக்கு வாழ்வு தந்து கொண்டிருக்கிறது. அதுதான் தூய ஆவியானவர் தரும் வாழ்வு. அத்தகைய துணையாளரை, இயேசு நமக்குத்தருவதாக வாக்களிக்கிறார்.

நமது வாழ்வில் தூய ஆவியானவர் நம்மிலே இணைந்து செயலாற்ற நாம் முன்வர வேண்டும். அவரது இயக்கம் நம்மிலே இருக்க வேண்டும். அவரது துணை நம்மை வழிநடத்த வேண்டும். அப்போது நாமும் இயேசுவின் சாட்சிகளாய் மாறுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------------

இயேசுவின் பிரசன்னம்

இயேசுவின் சீடர்கள் கலங்கிப்போயிருக்கிறார்கள். காரணம், இயேசு இன்னும் சிறிது நாட்களில் தங்களை விட்டுவிட்டு சென்றுவிடப்போகிறார் என்பதுதான். நடப்பவை அனைத்தும் நல்ல காரணத்திற்காகத்தான், எனவே சீடர்கள் கவலை கொள்ள வேண்டாம் என்பது இயேசுவின் வாதம். ஆனால், சீடர்களின் கவலை தீர்ந்தபாடில்லை. எனவே, இயேசு அவர்களுக்குத் துணையாளரைத் தருவதாக வாக்குறுதிக் கொடுக்கிறார். அதற்கு இயேசு தரும் விளக்கம்: உடலோடு இயேசு எல்லாவிடத்திலும் இருக்க முடியாது. ஆனால், ஆவியாக தன்னுடைய பிரசன்னத்தை எங்கும் வைத்திருக்க முடியும் என்பதுதான். சீடர்கள் எங்கு சென்றாலும், இயேசுவின் பிரசன்னம் தூய ஆவி வழியாக எல்லாவிடத்திலும் இருக்க முடியும் என்கிற உறுதியான செய்தியை இயேசு தன் சீடர்களுக்குக் கற்றுத்தருகிறார்.

இயேசுவுக்கு துன்பம் என்றதும் பயந்து ஓடி, ஒளிந்த சீடர்களுக்கு உயிரை இழந்தாலும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற அளவுக்கு துணிவைத் தந்தது இயேசுவின் பிரசன்னம். இயேசுவோடு மூன்றாண்டுகள் தங்கியிருந்தாலும், அவரோடு உண்டு குடித்திருந்தாலும், பல புதுமைகளைப் பார்த்திருந்தாலும் உறுதி பெறாத விசுவாசத்தை உறுதிபெற வைத்தது இந்த பிரசன்னம் தான். இயேசுவின் பிரசன்னம் உறுதி தரும் பிரசன்னம். இயேசுவின் பிரசன்னம் நமக்கு துணிவைத்தரும் பிரசன்னம். இயேசுவின் பிரசன்னம் மலைபோன்ற காரியங்களைச் செய்யும் அளவுக்கு ஆற்றல் தரும் பிரசன்னம்.

அத்தகைய இறைப்பிரசன்னத்தின் மீது நமது விசுவாசத்தை வைப்போம். அந்த இறைப்பிரசன்னத்தின் துணைகொண்டு சாட்சிய வாழ்வு வாழ முயற்சி எடுப்போம். இயேசுவின் உண்மையான சீடர்களாய், சாட்சிகளாய் மாறுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

திப 16: 22-34
யோவா 16: 5-11

“நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள்”

தனது பிரிவு குறித்து, துயரத்தில் மூழ்கிவிட்ட தம் சீடர்களுக்கு, நட்பிலும், உறவிலும் கொள்ளவேண்டிய  மனநிலைகளுள் ஒன்று பற்றி இன்றைய நற்செய்தி வாசகத்தில் எடுத்துரைக்கிறார் ஆண்டவர் இயேசு.

நட்பிலும், நெருங்கிய உறவிலும் “ஒருபோதும் பிரியாமல்”“ வாழவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால், பிரிவிலும் நன்மை உண்டு, பிரிவை உயர்ந்த நன்மைக்காக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார் இயேசு.

இயேசுவோடு வாழ்ந்தவரை, சீடர்கள் பாதுகாப்புடன் இருந்தனர். எவ்வித அச்சமும், கலக்கமுமின்றி வாழ்ந்தனர். காரணம், அனைத்தையும் இயேசுவே பார்த்துக்கொண்டார். அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. ஆனால், இனிமேல் பெரும் பொறுப்பு அவர்கள் தலைமேல் விழும். பாதுகாப்பற்ற சூழலில் அவர்கள் வாழவேண்டும். இதுவே அவர்களின் கலக்கத்தின் காரணம்.

ஆனால், இயேசு சொல்கிறார்: “நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்“.

ஆம், ஒவ்வொரு இழப்பிலும், ஓர் ஆதாயம் உண்டு. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு புதிய துணை கிடைக்கும். ஒவ்வொரு பயணமும், புதிய ஆற்றல்களை வழங்கும். நம் வாழ்வுக்கும், உறவுக்கும் இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொள்வோம்.

மன்றாடுவோம்: உமது பிரிவாற்றாமையைத் தூய ஆவியின் துணையினால் நீக்கிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இழப்புகளை, பிரிவுகளை நேர்மறை மனநிலையோடும், நம்பிக்கை உணர்வோடும் ஏற்றுக்கொள்ளும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

துhய ஆவியார் 3

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

துhய ஆவியானவர் பற்றிய மூன்றாம் பாடத்தை இன்றைய நற்செய்தி வாசகம் வழியாக கற்கிறோம். #8220;அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார்”. துhய ஆவியானவர் உண்மையைக் கற்றுக்கொடுப்பவர் என்று ஏற்கனவே பார்த்தோம். தவறான எண்ணங்களை, போதனைகளை, நம்பிக்கைகளை சுட்டிக்காட்டுபவர் என்று இயேசு கூறுகிறார். பாவத்தைப் பற்றிய இன்றைய பொதுவான கருத்து என்ன? பாவத்தைப் பற்றிய உணர்வு மறைந்துவருகிறதைப் பார்க்கிறோம். ‘என்னிடத்தில் பாவம் இல்லை’ எனப் பெரும்பாலோனோர் நினைக்கின்றனர். முன் காலங்களில் பாவம் எனக் கருதப்பட்டவை, இன்று அனைவராலும் செய்யப்படுகின்ற நிலையைப் பார்க்கிறோம். ஞாயிறு திருப்பலிப் பங்கேற்பின்மை, கருத்தடை என்பன இரு எடுத்துக்காட்டுகள்.

ஆனால், துhய ஆவியார்தாம் இவை பற்றிய உண்மையை நமக்கு எடுத்துக்காட்ட வேண்டும். எது தவறு, எது சரி என்னும் ஞானத்தைத் துhய ஆவியார்தாம் தரவேண்டும். எனவே, நேர்மையாக, இறைவார்த்தையின்படி வாழவிரும்பும் அனைவரும், துhய ஆவியின் துணைகொண்டவர்களாகவே வாழவேண்டும்.

மன்றாடுவோம்: உயிர்த்த மகிமையின் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். பாவத்தைப் பற்றிய, இறைச்சாட்சிய வாழ்வு பற்றிய எங்கள் பார்வைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த, துhய ஆவி என்னும் கொடையை எங்களுக்கு நிறைவாகத் தருவீராக. உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.;

--அருட்தந்தை குமார்ராஜா

-----------------------

 

''இயேசு சீடர்களை நோக்கி, 'தந்தையிடமிருந்து நான் அனுப்பப் போகிற துணையாளர் வருவார்.
அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்...
அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்' என்றார்'' (யோவான் 15:26-27)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு இறந்ததும் சீடர்கள் நம்பிக்கை இழந்துபோயினர். இவ்வளவு காலம் தங்களோடு பேசிப் பழகி நடமாடிய தங்கள் தலைவர் தங்களைத் தவிக்க விட்டுச் சென்றுவிட்டாரே என அவர்கள் கலங்கினர். அப்போது இயேசு அவர்களுக்குத் தோன்றி தாம் உயிர்வாழ்வதாக எடுத்துரைத்து அவர்களைத் தேற்றினார். இயேசுவின் உயிர்த்தெழுதல் அவர்தம் சீடர்களுக்குப் புத்துயிர் வழங்கியது; புதிய தெம்பை ஊட்டியது. இயேசு தம்மை விட்டுப் பிரிந்தாலும் தம்மோடு ஒரு புதிய முறையில் தங்கியிருக்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். ஏனென்றால் இயேசு அவர்களுக்குத் தூய ஆவியை வாக்களித்தார்.

-- தூய ஆவி தந்தையிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் புறப்பட்டு வருபவர். அவர் இயேசுவின் சீடர்களுக்குத் துணையாக வருகிறார். அவரே நமக்கு உண்மையை வெளிப்படுத்துகிறார். ''நானே உண்மை'' என இயேசு அறிவித்திருந்தார். கடவுளைப் பற்றியும் கடவுள் நம் மீது கொண்டுள்ள அன்பு பற்றியும் அமைந்த உண்மையை இயேசு நமக்கு வெளிப்படுத்துவது தூய ஆவியின் வழியாகவே. இவ்வாறு உண்மையை நமக்குத் தொடர்ந்து வெளிப்படுத்துகின்ற ஆவி இயேசுவைக் குறித்து ''சான்று பகர்வார்''. அதாவது, தூய ஆவியின் செயல் வழியாக இயேசு நம்மிடையே தங்கி நம்மை வழிநடத்துவதை நாம் உணர்ந்துகொள்வோம். இயேசுவைப் பற்றி அறிவு பெறுகின்ற நாம் இயேசுவுக்குச் சான்று பகர்வோம். எனவே, தந்தையிடமிருந்து நம்மைத் தேடி வந்த இயேசு, தந்தையிடம் சென்றதோடு நின்றுவிடாமல் நம்மோடு என்றும் தங்கியிருந்து நமக்குக்; கடவுளைப் பற்றிய உண்மையைத் தொடர்ந்து அறிவிக்க தூய ஆவியை அளித்துள்ளதால் நாமும் சான்று பகர்வதற்கான தகுதியையும் பொறுப்பையும் பெறுகின்றோம். கடவுளின் அன்புக்கு நாம் சாட்சிகளாக வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு
இறைவா, உம் அன்புக்குச் சான்று பகர்ந்து இவ்வுலகில் வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள்.

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

அன்றிலிருந்து இன்று வரை,சமூக விரோதி எண்ணுகிறான்; இந்த காவல் அதிகாரி போய்விட்டால் நமக்கு இனி பிரச்சனையே இல்லை என்று. இந்த அதிகாரி மாறிப்போய்விட்டால் நமக்கு இனி நல்ல காலம்.வரி செலுத்த வேண்டிய தேவை இல்லை என்று வரி கொடுக்காது ஏய்ப்பவன் நினைக்கிறான். இந்தச் சுங்க அதிகாரி போய்விட்டால் நம் தொழிலைச் சுதந்திரமாகச் செய்யலாம் என்று கடத்தல்காரன் கற்பனைசெய்கிறான். இந்த சாமியார் மாறிவிட்டால்.. இந்த ஆட்சி கவிழ்ந்துவிட்டால் .. இயேசு இல்லாவிட்டால் .. ..

யார் வந்தாலும் யார் போனாலும், உண்மை ஒலித்துக்கொண்டே இருக்கும். எத்தனை பிலாத்துகள் கேட்டாலும் சுருதி மாறாது ஒலிக்கும். நீதியின் குரல்வளை நெரிக்கப்பட்டாலும் கூரை மீதேறி முழங்கிக்கொண்டே இருக்கும். பழியும் பாவமும் பாகுபாடின்றி பரையறிவிக்கப்படும். இயேசு போனால் துணையாளர் வருவார். இன்று துணையாளர் உண்மைக்குச் சான்று பகரும் இயேசுவின் பணியைப் பல்வேறு விதங்களில் பலரின் மூலம் தொடர்ந்து ஆற்றி வருகிறார்.

திருச்சபையில் இறைவனின் துணையாளரின் இப்பணி சிறப்பாகத் தொடர்வதைக் காண்கிறோம். திருத்தந்தையின் அமெரிக்கப் பயணத்தின் பல்வேறு கருத்துரைகளும் குறிப்பாக ஐக்கிய நாட்டு சபையில் அவர் வழங்கிய கருத்துரை, தூய ஆவியின் செயல்பாடுகளுக்கான அத்தாட்சியாகும்.ஒவ்வொரு நாட்டுக்கும், நகருக்கும், வீட்டுக்கும் வீதிக்கும் ஒரு சில நல்லவர்களை அவ்வப்போது எழுப்பி, உண்மைக்கும் நீதிக்கும் அன்புக்கும் சான்று பகர்ந்து வருகிறார் தூய ஆவியார். அவரது கருவியாக, பலர் வருவர் போவர். உண்மையும் நீதியும் ஒலித்துக்கொண்டே இருக்கும். நீயும் நானும் ஆவியாரின் இப்பணி தொடரும் கருவியாவோம்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்