முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 17: 15,22 - 18: 1

அந்நாள்களில் பவுலுடன் சென்றவர்கள் அவரை ஏதென்சு வரை அழைத்துச் சென்றார்கள். சீலாவும் திமொத்தேயுவும் விரைவில் வந்து சேரவேண்டும் என்னும் கட்டளையைப் பவுலிடமிருந்து பெற்றுக்கொண்டு அவர்கள் திரும்பிச் சென்றார்கள். அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல் எழுந்து நின்று கூறியது: ``ஏதென்சு நகர மக்களே, நீங்கள் மிகுந்த சமயப் பற்றுள்ளவர்கள் என்பதை நான் காண்கிறேன். நான் உங்களுடைய தொழுகையிடங்களை உற்றுப் பார்த்துக்கொண்டு வந்தபோது `அறியாத தெய்வத்துக்கு' என்று எழுதப்பட்டிருந்த பலிபீடம் ஒன்றைக் கண்டேன். நீங்கள் அறியாமல் வழிபட்டுக்கொண்டிருக்கும் அந்தத் தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். உலகையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்த கடவுள் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர். மனிதர் கையால் கட்டிய திருக்கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை. அனைவருக்கும் உயிரையும் மூச்சையும் மற்றனைத்தையும் கொடுப்பவர் அவரே. எனவே மனிதர் கையால் செய்யும் ஊழியம் எதுவும் அவருக்குத் தேவையில்லை. ஒரே ஆளிலிருந்து அவர் மக்களினம் அனைத்தையும் படைத்து அவர்களை மண்ணுலகின்மீது குடியிருக்கச் செய்தார்; அவர்களுக்குக் குறிப்பிட்ட காலங்களையும் குடியிருக்கும் எல்லைகளையும் வரையறுத்துக் கொடுத்தார். கடவுள் தம்மை அவர்கள் தேடவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்; தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார். ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார். அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம். உங்கள் கவிஞர் சிலர் கூறுவதுபோல, `நாம் அவருடைய பிள்ளைகளே.' நாம் கடவுளுடைய பிள்ளைகளாய் இருப்பதால், மனிதக் கற்பனையாலும் சிற்ப வேலைத் திறமையாலும் உருவாக்கப்பட்ட பொன், வெள்ளி, கல் உருவங்களைப்போலக் கடவுள் இருப்பார் என நாம் எண்ணுவது முறையாகாது. ஏனெனில் மக்கள் அறியாமையில் வாழ்ந்த காலத்தில் கடவுள் இதனைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் இப்போது எங்குமுள்ள மக்கள் யாவரும் மனம் மாற வேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார். ஏனென்றால் ஒரு நாள் வரும். அப்போது தாம் நியமித்த ஒருவரைக் கொண்டு அவர் உலகத்துக்கு நேர்மையான தீர்ப்பு அளிப்பார். இறந்த அவரை உயிர்த்தெழச் செய்ததன் வாயிலாக இந்நம்பிக்கை உறுதியானது என எல்லாருக்கும் தெளிவுபடுத்தினார்.'' `இறந்தவர் உயிர்த்தெழுதல்' என்பது பற்றிக் கேட்டதும் சிலர் அவரைக் கிண்டல் செய்தனர். மற்றவர்கள், ``இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து பேசும்; கேட்போம்'' என்றார்கள். அதன்பின் பவுல் அவர்கள் நடுவிலிருந்து வெளியே சென்றார். சிலர் நம்பிக்கை கொண்டு அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அவர்களுள் அரயோபாகு மன்றத்தின் உறுப்பினரான தியோனிசியுவும் தாமரி என்னும் பெண் ஒருவரும் வேறு சிலரும் அடங்குவர். இவற்றுக்குப் பின்பு பவுல் ஏதென்சை விட்டுக் கொரிந்துக்குப் போய்ச் சேர்ந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 148: 1-2. 11-12. 13. 14
பல்லவி: ஆண்டவரே, விண்ணும் மண்ணும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.

1 விண்ணுலகில் உள்ளவையே, ஆண்டவரைப் போற்றுங்கள்;
உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள்.
2 அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்;
அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள். -பல்லவி

11 உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே, தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,
12 இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே,
நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள். -பல்லவி

13 அவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக;
அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது;
அவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது. -பல்லவி

14 அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார்;
அவருடைய அனைத்து அடியாரும் அவருக்கு நெருங்கிய
அன்பார்ந்த மக்களாகிய இஸ்ரயேல் மக்களும் அவரைப் போற்றுவார்கள். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அல்லேலூயா.

யோவான் 16:12-15

பாஸ்கா காலம்-6 வாரம் புதன்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 12-15

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் `அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்' என்றேன்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=======================

யோவான் 16: 12 - 15
உண்மையா அது என்ன?

வாய்மை, உண்மை, மெய்மை மூன்றும் அற்புதமான சொற்கள் தமிழில். வேறு எந்த மொழியிலும் இது போன்ற மை அமைவதில்லை. இந்த மூன்று ‘மை’ வைத்து செயல்படுகிறவனின் வாழ்வு, செழித்துள்ளதாக தமிழ் பண்பாடுகளில் நாம் பார்க்கின்றோம். இந்த மூன்றும் செயல்படக்கூடிய இடம் என்றால் அது நீதிமன்றங்கள் தான். ஆனால் அங்கு உண்மையாகவே உண்மை செயல்படுகிறதா என்றால் அது ஒரு பெரிய கேள்விக்குறி. காரணம் இன்று உண்மை உள்வாங்கி சென்று கொண்டிருக்கின்றது.

ஆனால் இயேசு தன் பணிவாழ்வின் மூலம் சீடர்களுக்கும், மக்களுக்கும் கற்றுக்கொடுக்க முயன்றார். ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தருணத்தில் இல்லை. ஏனென்றால் அவர்கள் மத்தியில் தான் மட்டும் செயல்பட்டால் போதும் என்ற சுயநலம் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அதனால் தான் அந்த பெத்சாய்தா குளம் அருகில் அதிகமான நோயாளிகள் குளத்திற்குள் இறக்கிவிட முடியாமல் தவித்தார்கள். மக்கள் பேயை ஓட்ட சீடர்களிடம் கேட்டபோது எங்களால் இயலாது என்று கூறி இயேசுவிடம் முறையிட்டார்கள். காரணம் அவர்கள் மத்தியில் விளங்கிய சுயநலம். இது தான் அவர்களை நோிய பாதையில் வழிநடத்த தடையாக இருந்தது. நம் ஆதி பெற்றோர்களின் சுயநலத்தால் தான் அவர்கள் உண்மையை ஒளித்தார்கள். ஆனால் கடவுள் வெளிச்சப்படுத்தினார். அதனால் தான் இயேசு தூய ஆவியானவர் வந்து உண்மையை உங்களுக்கு கற்றுத்தருவார் என கூறுகின்றார்.

நாம் உண்மையோடு செயல்படுகிறோமா? உண்மையைப் பற்றி அறிந்திருக்கிறோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

புரிந்து கொள்வோம்!

இயேசு பலமுறை பல செயல்களின் வழியாக, வார்த்தைகளின் வழியாக சீடர்களின் மத்தியில் சிந்தனைகளை விதைக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் சீடர்கள் இயேசுவை புரிந்து கொள்ளவில்லை. மாறாக இயேசு அவர்களை புரிந்து கொள்கிறார். காலம் வரும்போது, தாம் அனுப்பும் தூய ஆவியார் அவர்களுக்கு அனைத்தையும் எடுத்து சொல்வார் என்கிற எண்ணமும், அப்போது அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்கிற ஆழமான நம்பிக்கையும் இயேசுவிடம் இருந்தது. பிற்காலத்தில் இயேசுவைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டதால்தான், தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட திருத்தூதர்கள் இயேசுவுக்காக தங்கள் உயிரையும் துட்சமெனக் கருதி மறை சாட்சிகளாய் மடிந்தார்கள்.

நாமும் பல நேரங்களில் நம்முடைய பெற்றோர்களை, கணவரை, மனைவியரை, பிள்ளைகளை, சக நண்பர்களை புரிந்து கொள்வது இல்லை. தந்தையை புரிந்து கொள்ளாத மகன்கள் நம்மில் அதிகம். அவர் ஏன் சொல்கிறார், எதற்கு சொல்கிறார் என்பதை ஆராயாமல் ‘உங்களுக்கு வேறு வேலை இல்லை’ என்று சொல்லும் மகன்கள்தான் அப்பாவாக மாறிய பிறகு தன் தந்தையை புரிந்துகொள்கிறார்கள். அந்நேரம் அவர் தந்தை இறந்திருப்பார். இருக்கும் போதே பிறரை புரிந்துகொள்வோம்.

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

திருத்தூதர் பணி 17: 15, 22 – 18: 1
அர்ப்பண வாழ்வு

திருத்தூதர் பவுல் முதன்முறையாக ஏதேன்ஸ் நகருக்குள் நுழைகிறார். கிறிஸ்தவ மறைப்பரப்பு பணியாளர்களிலேயே இவர் தான், முதலாவதாக இந்த நகரத்திற்குள் நுழைகிறார் என்று கூட சொல்லலாம். இந்த முதல் பயணம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது என்று நாம் சொல்லிவிட முடியாது. ஆனால், ஒரு சிலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதை நாம்பார்க்கிறோம். ”சிலர் நம்பிக்கை கொண்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்” (17: 34). ஏதேன்ஸ் மிகப் பிரபலமான நகரம் என்பது நாம் அறிந்ததே. பலத்திற்கும், அறிவாற்றலுக்கும் பெயர் போனது. மிகப்பெரிய அறிவாளிகளும், அரசர்களும் இங்கிருந்து வந்திருக்க வேண்டும். அல்லது ஏதேன்ஸ் தொடர்புடையவர்களாக இருந்திருக்க வேண்டும். கிறிஸ்து பிறப்பிற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர், எகிப்திய காலனியாக இருந்து வந்தது. “மினர்வா“ என்கிற கிரேக்க கடவுளின் பெயரால், இது ஏதேன்ஸ் என்கிற பெயர் பெற்றது.

பவுல் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர்களுக்கு, அவர்களுடைய பிண்ணனியிலே அறிவிக்கிறார். அவருடைய நற்செய்தி ஒரு சிலரால் கிண்டல் செய்யப்படுகிறது. ஒரு சிலரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு சிலர் மீண்டும் அவருடைய பேச்சைக் கேட்ட பிறகு முடிவெடுக்கலாம் என்பது போல, பதில் தருகிறார்கள். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் பவுலோடு சேர்ந்து கொள்கிறார். அதன்பிறகு பவுல் அடுத்த நகரத்துக்கு செல்கிறார். கிறிஸ்துவால் தான் நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். அதில் நான் முழுமையாக ஈடுபட வேண்டும் என்பதுதான், பவுலின் ஆன்மீகமாக இருந்தது என்பதற்கு, இந்த பகுதி அருமையான எடுத்துக்காட்டு. தன்னுடைய கடமையை அவர் நிறைவாகச் செய்கிறார். எங்கெல்லாம் கிறிஸ்துவை அறிவிக்க முடியுமோ அங்கெல்லாம் அறிவிக்கிறார். அதற்கான பலனை அவர் எதிர்பார்க்கவோ, அதில் புகழ் பெற வேண்டும் என்பதோ, அதனால் மனமுடைந்து போக வேண்டும் என்பதோ அவருடைய எண்ணமல்ல. தன்னுடைய கடமையை அவர் அர்ப்பண உள்ளத்தோடு செய்கிறார்.

நம்முடைய வாழ்வில் நாமும் எதையும் நிறைவோடு செய்வதற்கு அழைக்கப்படுகிறோம். கடவுள் நமக்கான வாழ்வைத் தந்திருக்கிறார். இந்த வாழ்வை நாம் மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நம்முடைய கடமையை அர்ப்பண உள்ளத்தோடு செய்வதுதான், நாம் கடவுளுக்கு கொடுக்கிற காணிக்கையாக இருக்க முடியும். அத்தகைய வாழ்வு வாழ, நாம் உறுதிகொள்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

திருப்பாடல் 148: 1 – 2, 11 – 12, 13, 14
”நீங்கள் எல்லாரும் கடவுளைப் போற்றுங்கள்”

மனிதன் யார்? என்கிற கேள்விக்கு பலவிதமான பதில்களை நாம் கேட்டிருக்கலாம். இன்றைய திருப்பாடல் மனிதன் யார்? மனிதன் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறான்? என்பதற்கான பதிலை, மிகத்தெளிவாக நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன் என்பதையும், மனிதனை கடவுள் படைத்தது அவரைப்போற்றுவதற்கும், புகழ்வதற்குமே என்பதையும் இது நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இயற்கையோடு இணைந்து கடவுளை மனிதன் போற்ற வேண்டும் என்பதுதான், மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கமாக இருக்கிறது.

கடவுளை மனிதர்கள் அனைவருமே போற்ற வேண்டும். மனிதர்களில் பல வேறுபாடுகளை இந்த சமுதாயம் ஏற்படுத்தியிருக்கிறது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், பணக்காரர், ஏழை என்று பலவிதமான வேறுபாடுகளை இந்த உலகம் நமக்குக் கற்பித்திருக்கிறது. சாதாரண மக்கள் தான் கடவுளைப் போற்ற வேண்டும் என்றும், மற்றவர்கள் எல்லாமே பெற்றிருப்பதனால், அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், மனிதர்களில் ஒரு சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எல்லாருமே கடவுளைப் போற்ற வேண்டும். எல்லாருமே கடவுளை தங்களது முழுமுதல் தெய்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லாருமே கடவுள் தங்களுக்கு செய்திருக்கிற நன்மைகளை மறக்காமல் நினைவில் வைத்து, நன்றிக்குரியவர்களாக இறைவனைப் போற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு, கடவுள் மனிதனைப் படைத்த நோக்கத்தை நாம் நிறைவேற்ற வேண்டும்.

கடவுளின் படைப்புக்களாக இருக்கிற நாம், படைப்பின் உயர்ந்த சிகரமாக இருக்கிற நாம், எப்போதும் கடவுள்பால் நமது உள்ளத்தை வைத்திருக்க வேண்டும். கடவுளைவிட்டு விலகாமல், கடவுளைப் போற்றிப்புகழ்வதை நம்முடைய வாழ்வின் இலட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

புதிய பார்வை

இன்றைய சமுதாயத்தில் முன்சார்பு எண்ணங்கள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஒருவரை நேரடியாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னதாகவே அவரைப்பற்றி நாம் கேள்விப்பட்ட செய்திகளை வைத்து, அவர் இப்படித்தான் என்று முடிவுகட்டி விடுகிறோம். அவரைப்பற்றி நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். இது அடிப்படை உறவுச்சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால், இன்றைய நற்செய்தி நாம் திறந்த உள்ளத்தோடு மற்றவர்களுக்கு செவிமடுக்க அழைப்புவிடுக்கிறது.

தொடக்கத்தில் இயேசு தன்னுடைய பணிவாழ்வை ஆரம்பித்தபோது, மக்களில் ஒருசிலர் தான் அவருடைய போதனையைக் கேட்டிருப்பார்கள். கேட்டதில் ஒவ்வொருவரும் அவரவர் அறிவுக்கேற்ப, இயேசுவைப்புரிந்திருப்பார்கள். சிலர் சரியாகப் புரிந்திருக்கலாம். சிலர் தவறாகப் புரிந்திருக்கலாம். அந்த கருத்து தான், மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கும். அவரைச் சந்தித்தவர்கள் அனைவருமே இந்த ஒரு கண்ணோட்டத்தோடு தான் அணுகியிருப்பார்கள். இந்த பார்வை நிச்சயம் சரியான பார்வையாக இருக்க முடியாது. நாம் ஒருவரை அணுகுகிறபோது, திறந்த உள்ளத்தோடு அணுக வேண்டும். அவர் எப்படி இருக்கிறார் என்பது நமக்கு முக்கியமல்ல. நாம் எப்படி இருக்கிறோம்? நமது பார்வை, சிந்தனை எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியமானதாக இருக்கிறது.

இன்றைய உலகில், முன்சார்பு எண்ணங்கள் பல பிரச்சனைகளுக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கிறது. என்ன? ஏது? என்று தெரியாமலேயே நாம் பலவேளைகளில் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறோம். அந்த முன்சார்பு எண்ணங்களை நமது உள்ளத்திலிருந்து உடைத்தெறிவோம். புதிய பார்வையில் நிகழ்வுகளை அணுகுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

தூய ஆவியாரின் வழிநடத்துதல்

”நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால், அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது”. இந்தவார்த்தைகளின் பொருளை அறிந்து கொள்ள பழைய ஏற்பாட்டு வரலாற்றுப்பிண்ணனியை நாம் அறிந்திருக்க வேண்டும். இஸ்ரயேல் மக்கள் எப்போதெல்லாம் எதிரி நாட்டிற்கெதிராகப் போரிட்டு, அவர்களை வெற்றிகொண்டார்களோ, அப்போதெல்லாம், அவர்களில் ஒருவரையும் உயிரோடு விட்டு வைக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் தங்களைக்கறைபடுத்தி விடுவார்கள் என்பதும், தங்களது விசுவாசத்திற்கு எதிரான, தங்களது தூய்மைச்சடங்குக்கு எதிரான அனைவருமே அழிக்கப்பட வேண்டும் என்பதுதான். இது சரியா? தவறா? என்பதைவிட, அந்தச்சூழ்நிலையில் அவர்கள் அறிந்த உண்மை இதுதான். அவர்களுடைய மனநிலையும், இத்தகைய உண்மையை அறிந்துகொள்ளத்தான் பக்குவப்பட்டிருந்தது.

இயேசு தனது போதனையில், அவர்களை அடுத்த தளத்திற்கு அழைத்துச்செல்கிறார். பகைவர்களுக்கு அன்பு என்பதைப்போதிக்கிறார். மனமாற்றம் தான் உண்மையான தூய்மைச்சடங்கு என்பதையும், மனமாற்றம் தான் நம்மை கடவுளிடத்தில் அழைத்துச்செல்லும் என்று சொல்கிறார். ஆக, இறைவாக்கினர்கள் இந்த காலகட்டத்தில் மக்களைப் பக்குவப்படுத்தியிருக்கிறார்கள். மக்களுடைய மனங்களை மாற்றுவதற்கு பலவழிகளில் முயற்சியினை எடுத்திருக்கிறார்கள். இயேசு கற்றுக்கொடுக்கும் உண்மைய அறந்து கொள்வதற்கு அவர்களை தயாரித்திருக்கிறார்கள். உண்மையை நாம் ஏற்றுக்கொள்வதற்கு நம்மை பக்குவப்படுத்தும் ஒவ்வொருவரும் இயேசுவின் சீடர்கள்தான்.

நாம் அனைவரும் உள்மைக்குச் சான்று பகர வேண்டும். உண்மையை நோக்கி வழிநடத்துகிறவர் தூய ஆவியானவர். மனிதர்கள் உண்மைக்காக போராடுகிறபோது, அவர்களோடு தூய ஆவியானவர் இருக்கிறார் என்கிற உண்மை நமக்குத்தெரிய வேண்டும். தூய ஆவியானவர் தாமே நம்மை, நிறைஉண்மையை நோக்கி வழிநடத்துவாராக.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------------

இயேசுவின் பொறுமை

இயேசு தனக்கு தெரிந்தது அனைத்தையுமே சீடர்களுக்கு உடனடியாகக் கற்றுத்தர முடியவில்லை. காரணம், இயேசுவின் சில போதனைகளை புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர்களின் புரிதல் வளர்ந்திருக்கவில்லை. அவற்றைப்புரிந்து கொள்வதற்கு அவர்கள் எடுத்த இடைப்பட்ட காலத்தில் இயேசு அவர்களுக்காக பொறுமையோடு காத்திருக்க வேண்டியிருந்தது. மெதுவாக, படிப்படியாக அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு குழந்தைக்கு நாம் கற்றுக்கொடுக்கின்றபோது, அதன் வளர்ச்சிக்கேற்ற வார்த்தைகளைத்தான் படிப்படியாகக் கற்றுக்கொடுப்போம். அதன் அறிவு வளர்ச்சிக்கு மீறிய வார்த்தைகளைக் கற்றுக்கொடுக்க மாட்டோம். ஒரு புதிய மொழியைக்கற்றக்கொள்கின்றபோது, தொடக்கப்பாடங்களிலிருந்துதான், கடினமான பாடங்களுக்கு நாம் செல்வோம். அதேபோலத்தான் இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.

இயேசுவின் இந்த கற்றுக்கொடு;த்தல் வாழ்வைப்பற்றிய மிகப்பெரிய பாடத்தை நமக்குக் கற்றுத்தருகிறது. வாழ்வில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும், நம்மால் புரிந்துகொள்ள முடியாது, ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தவேளையில் விசுவாசத்தளர்ச்சி நம்மைத்தாக்காமல் பார்த்துக்கொண்டு, பொறுமையை கையாண்டு கற்றுக்கொள்வதற்கான ஆர்வத்தோடு இருக்க வேண்டும். நம்முடைய வாழ்வின் நாம் காட்டும் பொறுமை விடைகாண முடியாத நிகழ்வுகளை படிப்படியாக புரிந்துகொண்டு, அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை மெதுவாக நமக்குக்கற்றுத்தருகிறது. வாழ்வின் பல்வேறு பண்புகளை, நெளிவு, சுளிவுகளைக் கற்றுத்தருகிறது.

வாழ்வை முதிர்ச்சியோடு அணுக, இறைவனால் கொடுக்கப்படும் கொடை தான் பொறுமை. அத்தகைய பொறுமையை நாம் பெற்றுக்கொள்ள, இறைவனிடம் மன்றாடுவோம். வாழ்வை வெற்றியாக வாழ, சீடர்களுக்கு இத்தகைய பொறுமையை இயேசு கற்றுக்கொடுத்தார். அதையே நமது வாழ்வாக ஏற்று நாம் வாழ்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

திப 17: 15, 22-18:1
யோவா 16: 12-15

“முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார்”

தூய ஆவியாரின் வருகையைப் பற்றிப் பேசும்போது, இயேசு குறிப்பிடும் ஒரு செய்தி: “உண்மையை வெளிப்படுத்தும்  தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்”.

“உண்மையா அது என்ன?” என்று கேட்டான் பிலாத்து. பிலாத்துவைப் போல உண்மையை அறியாது வாழ்பவர் பலர். உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தியவர் இயேசு. அவரே உண்மை. உண்மையான வழியும், வாழ்வும் அவரே.

ஆனால், இயேசுவே தூய ஆவியார் நிறை உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார் என்று அறிவிக்கிறார். அதாவது, இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு என்னும் மறையுண்மைகளைத் தூய ஆவியின் வருகைக்குப் பிறகுதான் சீடர்கள் புரிந்துகொள்வர் என முன்னறிவிக்கிறார் இயேசு. இது முதலாவது பொருள்.

இதனையே இன்னொரு வகையிலும் பொருள் கொள்ளலாம். இறைவார்த்தையை, இயேசுவின் சொற்களை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் தூய ஆவியின் துணை தேவை. அவரே நமக்கு இறைவார்த்தையை விளக்குவார்.

தூய ஆவி தரும் ஞானம், நல்லறிவு என்னும் கொடைகள் இன்றி நான் யார்? இந்த வாழ்வின் பொருள் என்ன? என் வாழ்வின் குறிக்கோள் என்ன? இறைவன் யார்? என்னும் வாழ்வியல் உண்மைகளைப் புரிந்துகொள்ளமுடியாது என்னும் வகையிலும் இதனை நாம் பொருள்கொள்ளலாம்.

தூய ஆவி என்னும் கொடைக்காக இயேசுவை மன்றாடுவோம்.

மன்றாடுவோம்: கொடைகளின் ஊற்றே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். தூய ஆவி என்னும் கொடையால் எங்களை நிரப்பி, நிறை உண்மையை நோக்கி எங்களை வழிநடத்துவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

துhய ஆவியார் 4

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

துhய ஆவியானவர் பற்றி இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தருகிற செய்தி: ‘அவர் நிறை உண்மையை நோக்கி வழிநடத்துவார். வரப்போகிறவற்றை அறிவிப்பார்;. இவ்வாறு, இயேசுவை மாட்சிப்படுத்துவார்’. இயேசுவும், துhய ஆவியும் இணைபிரியாதவர்கள். இயேசுவிடம் குடிகொண்டிருந்த ஆற்றல்தான் துhய ஆவியார். அந்த ஆற்றலை நமக்குக் கொடையாகத் தருகிறார் இயேசு. இயேசுவின் ஆற்றல் நம்மை நிறை உண்மையை நோக்கி வழிநடத்துகிறது. பல உண்மைகள் உலகில் இருக்கின்றன. ஆனால், நிறை உண்மை என்பது இயேசுவிடம் மட்டுமே உள்ளது. #8220;நானே உண்மை” என்றார் அவர். எனவே, துhய ஆவியார் நம்மை இயேசுவை நோக்கி இட்டுச் செல்கிறார். அதுமட்டுமல்ல, வரப்போகிறவற்றை அறிவிப்பார். அதுதான் ‘இறைவாக்கு’ என்னும் கொடை. இறைவாக்கினர்கள் அனைவரும் துhய ஆவியால் இயக்கப்பட்டவர்கள்தான். நாமும் இறைவாக்கினர்களாக செயல்பட நாம் துhய ஆவியால் நிரப்பப்பட வேண்டும். மூன்றாவதாக, துhய ஆவியாரால் இயக்கப்படும் அனைவரும் இயேசுவை மாட்சிப்படுத்த வேண்டும். துhய ஆவியால் இயக்கப்படுவதாக சொல்கின்ற அனைவருடைய வாழ்வும் இயேசுவுக்கு மாட்சி அளிப்பதாக, சான்றாக அமைய வேண்டும்.

மன்றாடுவோம்: எங்களை முடிவில்லாத வகையில் அன்பு செய்யும் இயேசுவே, உம்மைப் Nபுhற்றுகிறோம். நீர் தருகின்ற துhய ஆவி என்னும் கொடைக்காக நன்றி கூறுகிறோம். அந்த ஆவியால் நாங்கள் நிரப்பப்பட்டு, உம்மை மாட்சிப்படுத்தும் அருளை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.;

--அருட்தந்தை குமார்ராஜா

-----------------------

 

''இயேசு சீடர்களை நோக்கி, ''உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது
அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்' என்றார்'' (யோவான் 16:12)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- யோவான் நற்செய்தியில் இயேசு தம்மை ''உண்மை'' என அறிமுகப்படுத்துகிறார். இயேசுவைப் பற்றிய உண்மையை நமக்குத் தூய ஆவி வெளிப்படுத்துவதோடு, அந்த உண்மையை நம் வாழ்வில் இணைத்துப் பொருள் புரிந்திட அதே தூய ஆவி நமக்கு வழிகாட்டவும் செய்வார். இங்கே இயேசு தம்மை ''வழி'' என்று கூறியதையும் நாம் நினைவுகூரலாம். ஆக, ஒருவிதத்தில் தூய ஆவி இயேசுவைப் போல நம்மிடையே இருந்து செயலாற்றுகிறார் எனலாம். எனினும் தூய ஆவி இயேசுவின் இடத்தில், இயேசுவுக்குப் பதிலாக நம்மிடையே உள்ளார் என நாம் முடிவுகட்டுதல் சரியல்ல. தூய ஆவியின் செயல் இயேசுவைப் பற்றிய உண்மையை நாம் அறிந்துகொள்ள துணையாக வரும். இயேசுவின் உடனிருப்பு நம் வாழ்வில் துலங்கிட தூய ஆவி துணையாவார். கடவுளைச் சென்றடைகின்ற வழியை இயேசு நமக்குக் காட்டியதுபோல, தூய ஆவி இயேசு பற்றிய ''உண்மையை நோக்கி நம்மை வழிநடத்துவார்''.

-- கடவுளின் அன்பை நமக்கு இயேசு வெறும் சொல்லால் வெளிப்படுத்தவில்லை. இயேசுவின் வாழ்வும், சாவும், உயிர்த்தெழுதலும் கடவுளின் அன்பை நமக்கு வெளிப்படுத்துகின்றன. அந்த வெளிப்பாடு தொடர்ந்து நம் வாழ்விலும் உலக வரலாற்றிலும் நிகழ்ந்திட தூய ஆவி துணையாக நிற்கிறார். எனவே, கடவுளைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் நாமும் ஆழமாக அறிந்திட, அந்த அறிவின் அடிப்படையில் நடந்திட நமக்கு வழிகாட்டியாக தூய ஆவி இருக்கிறார். எனவே, தூய ஆவியின் செயல்பாட்டை நாம் வரலாற்றில் காணலாம்; திருச்சபையின் வாழ்வில் காணலாம்; நம்பிக்கை கொண்டோர், நல் மனது கொண்டோர் அனைவரின் அனுபவத்திலும் காணலாம். தூய ஆவியின் செயல்பாட்டைக் கண்டுகொள்வதும், அவர் காட்டுகின்ற வழியில் நடப்பதும் நம் பொறுப்பு.

மன்றாட்டு
இறைவா, உண்மையின் ஊற்று நீர் ஒருவரே என நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.

.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

உண்மையை முழுமையாகத் தெறிந்தவன் எதையும் சரியாகச் செய்வான். இன்னும் உண்மையைத் தெறிந்து கொள்ளவேண்டும் என்று ஆசையும் ஆர்வமும் உடையவனாக இருப்பான். உண்மையின் அடிப்படையில் செய்வதால் மிகுந்த மனத்துணிவோடு, திறந்த மனதோடு, எதார்த்த உணர்வோடு செயல்படுவான். அவன் செய்வதனைத்திலும் வெற்றி அவனைத் தேடிவரும்.

அரை குறையாக உண்மையைத் தெறிந்துகொண்டு செயல்படும் இன்னொரு கூட்டத்தினர் உண்டு. சரியா தவறா, நிஜமா போலியா, உண்மையா பொய்யா குழப்பத்தில் செயல்படும் குழுவினர் இவர்கள் எதையும் பயந்து பயந்தே செய்வர். பெரும்பாலும் வெற்றியும் தோல்வியும் சம பங்கு இவர்களுக்கு உண்டு.

உண்மைக்கும் இவர்களுக்கும் உறவே இல்லாதவர்கள். உண்மையா, அது என்ன? என்று கேட்கும் பிலாத்துவின் வாரிசு இவர்கள். செய்வதெல்லாம் தவறாகவே இருக்கும். தவறான நோக்கம், ஆகவே தவறான செய்முறையைக் கையாளுவர். முற்றிலும் அசட்டுத் துணிச்சலுடன் செயல்படுவர். மூடத்தனம் செயலில் வெளிப்படும். இறுதியில் தோல்வியில் முடிவடையும்.

முழு உண்மையை நோக்கி வழி நடத்தும் தூய ஆவியின் துணையை எப்போதும் தேடுவோம். உண்மையைக் காண்போம். ; கடைபிடிப்போம். வாழ்வில் வெற்றிக்குக் குறையே இருக்காது. நிறைவோடு இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்