முதல் வாசகம்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 23-28

பவுல் சிறிது காலம் அந்தியோக்கியாவில் செலவிட்டபின் அங்கிருந்து புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாகக் கலாத்தியா, பிரிகியாப் பகுதிகள் வழியாகச் சென்று சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார். அலக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் ஒருவர் எபேசு வந்தடைந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர்; மறைநூல்களில் புலமை வாய்ந்தவர். ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவர்; ஆர்வம்மிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். ஆனால் அவர் யோவான் கொடுத்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார். அவர் தொழுகைக்கூடத்தில் துணிவுடன் பேசத் தொடங்கினார். அவர் பேசியதைக் கேட்ட பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அவரை அழைத்துக் கொண்டுபோய், கடவுளின் நெறியைத் திட்டவட்டமாக விளக்கினர். அவர் அக்காயாவுக்குப் போக விரும்பியபோது சகோதரர் சகோதரிகள் அவரை ஊக்கப்படுத்தி, அவரை ஏற்றுக்கொள்ளுமாறு சீடருக்குக் கடிதம் எழுதினார்கள். அவர் அங்கே சென்றபோது இறையருளால் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்குப் பெரிதும் துணையாய் இருந்தார். ஏனெனில் அவர் வெளிப்படையாகவும் சிறப்பாகவும் யூதர்களிடம் வாதாடி, `இயேசுவே மெசியா' என மறைநூல்களின்மூலம் எடுத்துக் காட்டினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 47: 1-2. 7-8. 9 (பல்லவி: 7ய)
பல்லவி: கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே.

1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்;
ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்;
உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. -பல்லவி

7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்;
அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள்.
8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்;
அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். -பல்லவி

9 மக்களினங்களின் தலைவர்கள்
ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்;
ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்;
கடவுளே அனைத்திற்கும் மேலானவர். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 16: 28
அல்லேலூயா, அல்லேலூயா! நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகை விட்டுத் தந்தையிடம் செல்கிறேன். அல்லேலூயா.

யோவான் 16:23-28

பாஸ்கா காலம்-ஆறாம் வாரம் சனி

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 23b-28

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக்கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும். நான் உங்களிடம் உருவகமாகவே பேசிவந்துள்ளேன். ஆனால் காலம் வருகிறது. அப்போது உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தையைப் பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன். அந்நாளில் நீங்கள் என் பெயரால் வேண்டுவீர்கள். அப்போது `உங்களுக்காகத் தந்தையிடம் கேட்கிறேன்' என நான் சொல்லமாட்டேன். ஏனெனில் தந்தையே உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்பு கொண்டு, நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 16: 23 - 28
உருவகங்கள் உருவாக்கப்பட

நாம் காண்கின்ற பல உருவகங்கள் பண்டைய கால மரபினை நமக்கு எடுத்துக் கூறுகின்றன. மகாபலிபுரம், தஞ்சை பெரிய கோவில். இவையெல்லாம் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை சித்திகரிப்பதாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது நம் சமுதாயத்தில் நாம் காணும் அனைத்து உருவகங்களுமே மக்கள் மத்தியில் பிளவைத் தான் உருவாக்குகின்றன. அது அரசியல் தலைவர்களின் கட்சிக் கொடியாக இருக்கலாம், தலைவர்களின் சிலை உருவகங்களாக இருக்கலாம். ஒரு சில உருவகங்கள் நம்மை உருவாக்குகின்றன. ஒரு சில உருவகங்கள் நம்மைப் பிரிக்கின்றன.

இயேசு தன் சீடர்களுக்கு கூறக்கூடிய உருவகங்கள் மாறுபட்ட சிந்தனையைத் தருவது போன்று அமைகிறது. எவ்வாறெனில் மக்கள் புரிந்து கொள்வதற்காகத் தான் உருவகங்களைப் பயன்படுத்தினாரே தவிர மக்கள் மத்தியில் பிளவை கொணர அல்ல. ஏனென்றால் சாதாரண மக்கள், விவசாயம் செய்கின்ற மக்கள். அதனால் தான் தன்னுடைய உருவகங்களுக்கு அவர் பயன்படுத்தியது பெரும்பாலும் விவசாயம், மீன்பிடித்தொழில் இவற்றைச் சார்ந்ததாகவே இருக்கும். எல்லோருமே இயேசு தான் மெசியா என்று நம்பினார்கள். ஏனென்றால் அவர் செய்த புதுமைகள், இறைவார்த்தையை எடுத்துரைக்கும் விதம் உரோமை பேரரசை எதிர்க்கும் விதம். எனவே தான் அவர்கள் நேரடியாக இயேசுவிடம் எல்லாவற்றையும் கேட்கின்றார்கள். தந்தையை மறக்கவில்லை மாறாக இயேசு தந்தை தந்தை அனுப்பிய துணையாளர் என்று எண்ணினார்கள். ஆனால் இயேசு இறந்து உயித்தெழ வேண்டும் என்பதனை எண்ணி, சீடர்களிடம் நீங்கள் நேரடியாக இனி தந்தையிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள் என்ற வார்த்தையை முன்வைக்கின்றார். காரணம், இனி தான் இந்த உலகில் மனித நிலை வாழ்வை முடித்து விட தீர்மானிக்கின்றார். ஏனென்றால் சீடர்களை இயேசு தன் பணிக்காக பிரித்து அனுப்பியிருந்தார்.

நம் வாழ்வில் உருவகங்கள் எவற்றைக் கொடுக்கின்றன? மாற்றமா? பிளவா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

உள்ளம் உடைந்தவர்களாய்...

“நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உஙளுக்குத் தருவார்” என்று இயேசு சொல்வதன் மூலம் தந்தை எந்த அளவிற்கு மகனை மாட்சிபடுத்தியிருக்கிறார், உயர்த்திருக்கிறார் என்பது புலப்படும். இந்த மாட்சி மனிதர் முன்னிலையில் வலிமையற்றவராகவும், இறைவன் முன்னிலையில் தாழ்ச்சி உடையவராகவும் இயேசு நடந்து கொண்டதால் கிடைத்தது. இதற்காக இயேசுவின் பல எலும்புகள் உடைக்கப்பட்டதாக விவிலியம் பதிவு செய்கிறது.

இன்று நாம் எலும்புகளை உடைக்க வேண்டியது அல்ல; ஏனெனில் இறைவன் விரும்புவது, “பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது;நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை (திருப் 51: 15-17). நம் குற்றங்களை உணர்ந்தவர்களாய், மனதுறுகி இறைவனிடம் தஞ்சம் அடையும் போது இறைவன் நம்மை உயர்த்துவார்.

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ

................................................................................

திருத்தூதர் பணி 18: 23 – 28
நம்முடைய நற்செய்திப்பணி

அப்போல்லா என்ற பெயருடைய யூதர் ஒருவரைப் பற்றிய செய்தி இன்றைய முதல் வாசகத்தில் நமக்குத் தரப்படுகிறது. அவர் சொல்வன்மை மிக்கவர் என்றும், மறைநூல்களில் புலமை வாய்ந்தவர் என்றும், அவருக்கு அடைமொழிகள் தரப்படுகிறது. இவற்றிற்கும் மேலான ஒரு பண்பும் அவருக்குத் தரப்படுகிறது. அதுதான் அவருடைய பணிவாழ்க்கையில், மிகச்சிறந்த பண்பாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அவர் ஆர்வமிக்க உள்ளம் கொண்டிருந்தார். ”ஆர்வமிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப்பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். இறைவனுடைய பணியைச் செய்வதற்கு நமக்கு முதலாவதாக ஆர்வம் இருக்க வேண்டும்.

எந்த ஒரு செயலையும் இரண்டு விதத்தில் நாம் செய்ய முடியும். ஏனோதானோவென்று வெறும் கடமைக்காக செய்வது முதல் வகை. செய்வதில் நிறைவோடு, ஆர்வத்தோடு செய்வது இரண்டாவது வகை. அப்போல்லோ இரண்டாவது வகையான மனிதராக இருக்கிறார். அந்த ஆர்வம் பல உதவி செய்யக்கூடிய நண்பர்களையும், கேட்கிறவர்களை கிறிஸ்துவின்பால் ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கிறது. திருப்பாடல் 69: 9 ல் நாம் பார்க்கிறோம், ”உம் இல்லத்தின் மீதான ஆர்வம் என்னை எரித்துவிட்டது”. நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து இந்த இறைவார்த்தையை, இறைவன் மீது தான் கொண்டிருக்கிற அன்பிற்கு எடுத்துக்காட்டாக சொல்கிறார். இறைவார்த்தையை அறிவிப்பதற்கான ஆர்வம், திருமுழுக்குப் பெற்றிருக்கிற ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

இறைவார்த்தையை அறிவிப்பது என்பது என் மீது சுமத்தப்பட்ட கடமை, என்று பவுலடியார் சொல்கிறார். இது அனைவருக்குமே பொருந்தக்கூடிய இறைவார்த்தையாக இருக்கிறது. நாம் வாழ்கிற வாழ்க்கைச்சூழலில் எப்படியெல்லாம் நம்மால் இறைவார்த்தையை அறிவிக்க முடியுமோ, அப்படியெல்லாம் அறிவிப்பதற்கு, நாம் முயற்சி எடுப்போம். நற்செய்திப்பணியில் நாமும் ஈடுபடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

திருப்பாடல் 47: 1 – 2, 7 – 8, 9
”மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்”

கடவுளைப் புகழ்வதில் இன்றைக்கு பலதரப்பட்ட முரண்பாடான கருத்துக்கள் மக்களிடையே நிலவி வருகிறது. கடவுளை அமைதியாக போற்ற வேண்டுமா? ஆர்ப்பரித்து போற்ற வேண்டுமா? நடனமாடி போற்றி வேண்டுமா? முடிகிறவரை, கத்தி பேச வேண்டுமா? இப்படியெல்லாம் நம்முடைய உள்ளத்தில் கேள்வி கேட்கிறோம். இந்த கேள்விகளுக்கு பொதுவான பதில் நமக்கு இல்லையென்றாலும், இன்றைய திருப்பாடல் நமக்கு அதற்கான பதிலைத் தருகிறது.

கடவுளைப் போற்றுகிறபோது மகிழ்ச்சி என்பது முக்கியமான ஒரு பண்பாக இருக்கிறது. கவலையுடன் அல்ல, வருத்தத்தில் அல்ல, சோகம் படர்ந்த ரேகைகளோடு அல்ல, மாறாக, மகிழ்ச்சியோடு போற்ற வேண்டும். இந்த மகிழ்ச்சி எப்போதும் உள்ளத்தில் இருக்க வேண்டும். அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாட்டில் நமது உடல் இயல்பாகவே அசைவு பெறுகிறது. ஓர் இசையைக் கேட்டால், எப்படி நமது உடல் இயல்பாகவே ஆட வேண்டும் என்கிற உறுதியைப் பெறுகிறதோ, அதேபோல நமது உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கிறபோது, நாம் கைதட்ட வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படுகிறது. ஒருவரைப் பார்க்கிறபோது, பாராட்ட நினைக்கிறபோது, நமது கைகள் இணைந்து அவருக்காக நமது மகிழ்ச்சியை பரிமாற நினைக்கிறது. ஆக, கைதட்டுதல் என்பது, நமது உள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய ஓர் உணர்வு.

கடவுளைப் போற்றுவதற்கு இப்படித்தான் என்கிற வரைமுறை கிடையாது. கடவுளைப் போற்ற வேண்டும் என்கிற எண்ணமே, நமக்கு பலவிதமான உணர்வுகளைக் கொடுத்து, நம்முடைய உடல், உள்ள, ஆன்ம அளவில், கடவுளைப் போற்றுவதற்கு ஊக்கம் தருகிறது. நாமும் கடவுளை சுதந்திரமாகப் போற்றுவோம். நம்முடைய உடல் மொழிகளுக்கு மதிப்பு கொடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

கடவுளின் அன்பு

இந்த உலகம் எதற்காக படைக்கப்பட்டது? இந்த உலகத்தில் நாம் எதற்காக வாழ்கிறோம்? இந்த உலகத்தில் நாம் வாழ்வதன் பயன் என்ன? இதுபோன்ற கேள்விகள் நிச்சயம், இந்த வாழ்வைப் பற்றி, நம்மைப்பற்றி சிந்திக்கிற அனைவருடைய மனதிலும் எழக்கூடிய சிந்தனைகளாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்த உலக முடிவில் நாம் எங்கு செல்கிறோம்? வாழ்க்கை இருக்கிறதா? ஆன்மா எங்கே செல்கிறது? போன்ற கேள்விகளுக்கு பல பதில்களை, மதங்கள் நமக்கு சொல்கிறது. இன்றைய நற்செய்தியில், நாம் எங்கிருந்து வருகிறோம்? எங்கு திரும்பிச்செல்கிறோம்? என்பதை, இயேசுவின் வார்த்தைகள் நமக்குக்கற்றுத்தருகிறது.

நாம் அனைவருமே தந்தையிடமிருந்து வந்தவர்கள். எனவே, நாம் திரும்பி தந்தையிடத்தில் திரும்பிச்செல்ல வேண்டும் என்று இயேசு சொல்கிறார். இயேசு தந்தையிடமிருந்து வந்திருக்கிறார். அவர் இந்த உலகத்திற்கு வந்தது, கடவுளின் வெறுப்பை நமக்குச் சொல்வதற்கு அல்ல. மாறாக, கடவுள் நம்மை எந்த அளவுக்கு அன்பு செய்கிறார் என்பதை நமக்கு அறிவிப்பதற்கு. இயேசுவும் தந்தையின் அன்பை மக்களுக்கு காட்டுகிறார். அதன்பிறகு, அவர் தந்தையிடத்தில் செல்கிறார். நாம் அனைவரும் இந்த உலகத்தில், தந்தையின் அன்பைப் பெற்றவர்களாக வந்திருக்கிறோம். அந்த அன்பை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும். அப்போதுதான் நாம் தந்தையிடம் திரும்பிச்செல்ல முடியும். அதற்கான தகுதி பெற முடியும். எனவே, நமது வாழ்வின் நோக்கத்தை அறிந்துகொண்டவர்களாக, தந்தையின் அன்பை உணர்ந்து கொண்டவர்களாக வாழ, நாம் அன்பை வெளிக்காட்டுவோம்.

இயேசு தந்தையின் அன்பை நாம் நிறைவோடு, முழுமையாக வாழ நமக்குக் கற்றுக்கொடுத்தார். அந்த அன்பை நாம் சுவைப்பதற்கு எல்லா வழிகளிலும் உதவியாக இருந்தார். அதேபோல, கடவுளின் அன்பை மற்றவர்களும் சுவைப்பதற்கு நாம் முயற்சி செய்வோம். நாமும் சுவைத்து, மற்றவர்களும் அந்த அன்பில் மகிழ்ந்திருக்கச் செய்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------

உவமை வாயிலாகப்பேசும் இயேசு

இயேசு இதுவரை மக்களிடம் பேசுகிறபோது உவமைகள் வாயிலாக, உருவகங்கள் வாயிலாகப் பேசுகிறார். உவமை என்பது புதிர் போன்றது. விடைக்கான செய்தி தரப்படுகிறது. அதை கேட்கிறவர் தனது அறிவைப்பயன்படுத்தி கண்டுபிடிக்க வேண்டும். சற்று ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தால், நிச்சயம் அவர்களால், உவமை வாயிலாக இறையாட்சித்தத்துவத்தை அறிந்து கொள்ள முடியும். அதுதான் உவமை. அதைத்தான் இயேசு தனது போதனையில் மக்களுக்கு அறிவிக்கிறார். மக்களாகவே உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்று, அவர் உவமை வாயிலாகப் பேசுகிறார்.

இயேசு இவ்வளவுகாலம் மறைமுகமாக, உவமை வாயிலாகப்பேசியவர், தனது கருத்துக்களை மறைமுகமாகப் பேசியவர் இன்றைய நற்செய்தியில், இதுநாள் வரை தான், மறைமுகமாக சொல்லி வந்த கருத்துக்களை நேரடியாக, வெளிப்படையாகச்சொல்கிறார். ”தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன்” என்பதுதான் அந்த செய்தி. இந்த செய்தியைத்தான், போதனைகள் வாயிலாக, தனது வாழ்வு மூலமாக மக்களுக்கு மறைமுகமாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தது, தந்தையின் அன்பை எடுத்துரைப்பதற்காக. தந்தையின் இரக்கக்குணத்தை வெளிப்படுத்துவதற்காக. தந்தையைப்பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக.

இயேசுவின் வருகை, கடவுளைப்பற்றிய உண்மையானப் பார்வையை நமக்குத்தந்துள்ளது. கடவுள் எந்த அளவிற்கு இந்த உலகத்தின் மீது அன்பு வைத்திருக்கிறார், அவர் மக்களை அதிகமாக அன்பு செய்கிறார் என்பது நமக்கு இதிலிருந்து தெரிகிறது.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------------

திப 18: 23-28
யோவா 16: 23-28

“என் பெயரால் கேட்பதையெல்லாம்”

“நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்னும் இயேசுவின் வாக்குறுதியை இன்று சிந்திப்போம்.

இயேசுவின் திருப்பெயர் தனிச் சிறப்பு மிக்கது என்பதை அறிவோம். அந்தப் பெயர் பேய்களை ஓட்டுகிறது. நோய்களைக் குணமாக்குகிறது. இயேசுவின் பெயரால் வியத்தகு செயல்கள் நிகழ்கின்றன என விவிலியத்தின் வழி அறிகின்றோம்.

அந்தச் சிறப்புகளுள் ஒன்றைச் சேர்க்கிறார் இயேசு. “நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார்” என்கிறார் இயேசு. இயேசுவின் பெயர் இறைத் தந்தையின் ஆசி பெற்றது என்பதை இது காட்டுகிறது. இயேசு எந்த அளவுக்குத் தந்தையின் பாசத்தையும், மதிப்பையும் பெற்றிருந்தார் எனில், இயேசுவின் பெயரைச் சொல்லிக் கேட்கின்ற அனைத்துக் கொடைகளையும் வான் தந்தை அருள்வார் என இயேசு உறுதியாகச் சொல்கிறார்.

இந்த வாக்குறுதியை ஏற்று,  இயேசுவின் திருப்பெயரைப் பயன்படுத்தி தந்தையிடம் அருள் வரங்கள் கோருவோம். இயேசுவைப் போல வான் தந்தையின் பாசத்துக்குரியவர்களாகப் பணிந்து வாழ்வோம்.

மன்றாடுவோம்: வானகத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இயேசுவின் பெயரால் கேட்பதையெல்லாம் எங்களுக்குத் தருவதற்காக உம்க்கு ந்னறி கூறுகிறோம். இயேசுவைப் போல நாங்களும் உமக்கு உகந்தவர்களாக வாழ அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

இயேசுவின் பெயரால்ரூhநடடip;!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவின் திருப்பெயருக்கு உள்ள ஆற்றலையும், பெருமையையும் இன்றைய நற்செய்தி வாசகத்தின் மூலம் அறிகிறோம். அதிலும், இயேசுவின் வாய்மொழி வழியே அறியவருகிறோம். #8220;நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று வாக்களிக்கிறார் இயேசு. #8220;அந்நாளில் நீங்கள் என் பெயரால் வேண்டுவீர்கள்” என்றும் இயேசு முன்  அறிவித்துள்ளார்.

உலகில் உள்ள அனைத்துப் பெயர்களிலும் மேலான பெயர் இயேசுவின் திருப்பெயர்தான் (காண்க: பிலி 2:6-11). அந்தப் பெயருக்குத்தான் விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். அந்தப் பெயரைக் கேட்டுத்தான் அலகைகள் அலறி அடித்துக்கொண்டு ஓடுகின்றன. அந்தப் பெயரால்தான் நோயாளர்கள் நலம் பெறுகின்றனர்;. அந்தப் பெயரில்தான் தந்தை இறைவன் பெருமை அடைகின்றார். ஆம், இத்தனை பெருமைகள் நிறைந்த இயேசுவின் திருப்பெயரை நாம் நாள்தோறும் அறிக்கையிட்டு, அவரது பெயரால் இறைத் தந்தையிடம் வேண்டுதல் செய்வோமாக!

மன்றாடுவோம்: உயிர்த்த மகிமையின் ஆண்டவரே, இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். வல்லமை மிக்க உமது திருப்பெயரை அறிக்கையிடுகிறோம். உமக்கு நன்றி கூறுகிறோம். உமது பெயரை நாள்தோறும் கூப்பிட அருள் தாரும். இயேசுவே உமக்கே நன்றி, இயேசுவே உமக்கே மாட்சி, இயேசுவே உமக்குப் புகழ், ஆமென்.;

--அருட்தந்தை குமார்ராஜா

-----------------------

 

''இயேசு சீடர்களை நோக்கி, 'நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன்.
இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்' என்றார்'' (யோவான் 16:28)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவு தனித்தன்மை வாய்ந்தது. இயேசு தம்மைப் பற்றி நமக்கு அறிவித்ததிலிருந்து நாம் அவருக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவை ஓரளவு புரிந்துகொள்கிறோம். ஆனால் அந்த உறவின் முழுப் பொருளும் நமக்குத் தெரிவதில்லை. எனவேதான் கடவுள் என்றால் ''மறைபொருள்'' என நாம் ஏற்கிறோம். அவர் நம் கண்களுக்குத் தெரிவதில்லை; நம் அகக் கண்களும் கடவுளை மங்கலாகத்தான் அறிய முடிகிறது. ஆக, இயேசு தம்மைக் கடவுளின் மகன் என அறிமுகம் செய்யும்போது அந்த தந்தை-மகன் உறவை அவர் நமக்கு எவ்வாறு விளக்கிக் கூறுகிறாரோ அவ்வாறே நாமும் புரிந்திட வேண்டும். இவ்வுலக அனுபவத்தின்படி, மகன் பிறப்பதற்குத் தந்தையின் ஒத்துழைப்பு வேண்டும். உயிரியல் தத்துவங்களின் அடிப்படையில் அந்த ஒத்துழைப்பை நாம் விளக்க முடியும். ஆனால் இயேசு தந்தையிடமிருந்து புறப்பட்டு வருவதை நாம் அறிவியல் பாணியில் புரிந்திட இயலாது. மாறாக, இயேசு தமக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவை விளக்கும்போது அதை நாம் இறையியல் பார்வையில் காண வேண்டும். அதாவது, விவிலியம் நமக்கு உணர்த்துவதையும், அந்த விவிலிய உண்மையைக் கிறிஸ்தவ சமூகம் வரலாற்றில் புரிந்துவந்துள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

-- இவ்வாறு பார்க்கும்போது, இயேசு தாம் கடவுளிடமிருந்து புறப்பட்டு வருவதாகக் கூறியதோடு தாம் கடவுளோடு இணைபிரியாவிதத்தில் ஒன்றித்திருப்பதையும் குறிப்பிடுகிறார். எனவே, இயேசுவைக் காண்போர் கடவுளையே காண்கின்றனர். உலகில் தாம் ஆற்ற வேண்டிய பணியைச் செய்து முடிக்கிறார் இயேசு. தந்தையின் விருப்பப்படி இயேசு தம் உயிரையே மக்களின் மீட்புக்காகப் பலியாக்குகிறார். தம் பணி நிறைவுற்றதும் அவர் தந்தையிடம் மீண்டும் செல்கிறார். இதிலிருந்து இயேசு நம்மைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாக நாம் கருதலாகாது. நம்மோடு தங்கியிருந்து நம்மை வழிநடத்த தூய ஆவியை இயேசு அனுப்புவதாக வாக்களித்தார். மேலும் உயிர்பெற்றெழுந்த ஆண்டவராக இயேசு எக்காலத்திற்கும் நம்மோடு இருப்பதாக உறுதி தந்துள்ளார். எனவே, இயேசு தந்தையோடு இணைந்திருப்பதுபோல நம்மோடும் கூட இருந்து நமக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறார் என உணர்ந்து நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் மகன் காட்டுகின்ற வழியில் நாங்கள் நடந்து சென்றிட எங்களுக்கு அருள்தாரும்

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்