அனைவருக்கும் இயேசு உயிர்ப்பின் வாழ்த்துக்கள்


முதல் வாசகம்

இறைவாக்கினர் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10:34, 37-43

அப்போது பேதுரு பேசத் தொடங்கி, திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றியபின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக்குறித்துச் சான்று பகர்கின்றனர்" என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திருப்பாடல் 118:1-2, 16-17, 22-23

பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே;
இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
2 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என்று
இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! -பல்லவி

16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது;
ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
17 நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்;
ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்; -பல்லவி

22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது!
நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 3:1-4

நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவாகளானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சாhந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா ! ”நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகவே நாம் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக” அல்லேலூயா

 

யோவான் 20:1-9

பாஸ்கா காலம்-உயிர்ப்பு ஞாயிறு

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-9

வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, ``ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!'' என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 20: 1 - 9
வெற்றிடம் வெற்றியின் அடையாளம்

படிப்பில் வெற்றிடமாக கல்வியறிவில்லாத மனிதனால் தான் பல்வேறு அணைக்கட்டுகள், பள்ளிகளுக்கும் பல நலத்திட்டங்களை ஏற்படுத்த முடிந்தது. பொருளாதாரம், படை வலிமையில் வெற்றிடமாக இருந்த சுஜித் என்ற வாலிபனால் தான் ஆந்திராவில் பெட்ரோல் பங்கிற்கு எதிராக நடந்த ஊழலை எதிர்த்து, ஊழலில்லாத மாநிலமாக மாற்ற முடிந்தது. இப்படி பல உதாரணங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். வெற்றிடத்தின் வழியாக வெற்றி கண்டவர்கள்.

அது போன்று தான் இறைமகன் இயேசுவின் வாழ்விலும் வெற்று கல்லறை தான் அவர் இறந்து வெற்றி கண்டார் (உயிர்த்தெழுந்தார்) என்பதற்கு சான்றாக அமைகிறது. தமிழ் வார்த்தையில் கூற வேண்டுமென்றால் இயேசு தன் யூத உடல் கொண்டு உயிர்த்தாரா? அல்லது அவரது உயிர்ப்பு என்பது அவர் மேற்கொண்ட ஒரு புகழ் உடலா? அவர் புகழ் உடலில் அல்லது ஆன்மீக உடலில் உயிர் பெற்று விட்டார் என்றால், அவர் தம் சீடர்கள் அல்லது தம்மைச் சார்ந்தவர்கள் உள்ளத்திலே உயிர்த்து விட்டார் அல்லது நிலைகொண்டு விட்டார் என பொருள்படும். உதாரணமாக சிலுவையில் உயிர் நீத்த இயேசுவை நூற்றுவர் தலைவன் கடவுள் மகனாக ஏற்றது இயேசு அவருடைய உள்ளத்தில் நீங்கா இடம் பெற்று விட்டார் என்று பொருள்படும். இது ஓர் புகழ் உடல் அல்லது ஆன்மீக அளவில் இயேசு உயிர்த்தது ஆகும். ஆனால் இயேசு தம் உடல் கொண்டு உயிர்த்து விட்டார். அவருடைய உயிர்ப்பு பூத உடலைச் சார்ந்ததே என்பது தான் புதிய ஏற்பாடு கூறும் பாடம். இயேசுவின் உடல் மாண்பு பெற்ற அவருடைய பூத உடலே என்றாலும், அது போற்றுதற்குரிய புகழ் உடலே என ஏற்றுக்கொண்டாலும் அவர் வல்லமையுடன் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார். காலியான கல்லறை தான் அவர் உயிர்ப்புக்கு சான்றாக அமைகிறது.

நம் வாழ்வில் வெற்றிடமாக எதை கருதுகிறோம்? பணமா அல்லது பாசமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

================================

யோவான் 20 : 1-9
செய், சொல்

இயேசுவின் உயிர்ப்பு நமது நம்பிக்கையின் மூலைக்கல், ஆதாரம். அதை நம்புவதும், அடுத்தவருக்கு அறிவிக்க பெண்களைப்போல நற்செய்தியாளர்களாய், திருத்தூதர்களாய் செயல்படுவதும் நமது கடமை. இயேசுவின் உயிர்ப்பே இன்று நம் அனைவரையும் ஒன்று கூட்டி வைத்திருக்கின்றது. மரணத்தை வென்றவர்கள் தான் நாம். காரணம் சாவின் கொடுக்குகளை வெட்டியெறிந்து விட்டார் நம் இயேசு. இதனை நாம் கொண்டாட கூடியுள்ளோம். மனித இனத்தின் மிகவும் மோசமான எதிரி சாவு. இச்சாவினை இயேசுதன் சாவினைக் கொண்டு வீழ்த்தி விட்டார். நற்செய்தி கிறிஸ்துவின் உயிர்ப்பை விளக்குகிறது என்பதைவிடக் கிறிஸ்துவின் உயிப்ப்பே நற்செய்தியை விளக்குகிறது.ள ஏனெனில் கிறிஸ்து உயிர்க்கவி;ல்லையென்றால் நமது நம்பிக்கைப் பொருளற்றது. ( 1 கொரி 15:14)

ஆண்டவரின் உயிர்ப்பு செய்தி முதன்முறையாகப் பெண்களுக்குத் தான் அறிவிக்கப்பட்டது. அவர்கள் மூலமாகவே உண்மையானது உலகிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. யூத சமுதாயத்தில் பெண்களின் சாட்சிசெல்லவே செல்லாது. ஆனால் தொடக்க முதல் இறுதிவரை ஒடுக்கப்பட்டவர்களையும், ஒதுக்கப்பட்டவர்களையும் தேர்ந்தெடுக்கின்ற இயேசு, இங்கும் அவர்களையே தேர்ந்தெடுக்கின்றார். பெண்ணிடமிருந்து பிறந்தவர் தாம் உயர்த்தெழுந்த செய்தியைப் பெண்களுக்கு அறிவிக்கின்றார். இயேசுவின் பிறப்பும் பெண்ணை மையப்படுத்தியே தொடங்குகிறது. உயிர்ப்பும் பெண்ணை மையப்படுத்தியே தொடங்குகிறது. சனிக்கிழமையானது கடவுளின் நாளாக கருதப்பட்டது யூதர்களின் கலாச்சாரத்தில். ஆனால் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையே கடவுளிக் நாளாக மாறியது. காரணம் இயேசு இந்த ஞாயிற்றுக்கிழமையில்தான் மரணத்தை வென்றார். படைப்பின் தொடக்கத்தை பழைய ஏற்பாட்டில் முதல் நாள் வெளிப்படுத்தியது. ஆனால் அழிவுக்குள்ளான அப்படைப்பு இயேவுலின் உயிர்ப்பின் மூலம் புதுப்படைப்பாகின்றது. இதையே இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம். “ வாரத்தின் முதல் நாள் விடியற்காலை” என்று. பழையன கழிந்து புதியன புலரும் இப்புதிய நாளில்தான் நமதாண்டவர் உயிர்த்தார். பாவ வாழ்வு அனைத்தும் கல்லறையில் புதைக்கப்பட்டு, “புதிய வானம்” புதிய பூமி” ஆரம்பமாகும் அரிய நாளே ஆண்டவர் உயிர்த்த நாள். என்னைப் பொறுத்தவரையில் இயேசுவின் உடலானது கல்லறையில் வைக்கப்படவில்லை, அது ஒரு கருவறை. காரணம் அது ஒரு புதிய கல்லறை. இங்கு இருந்து தான் இவ்வுலகத்தின் இரட்சகர் பிறக்கிறார்.

இவ்வாறு இயேசுவின் இறப்போடு நம் பழைய பாவவாழ்வு அனைத்தும் அழிக்கப்படுகிறது. நாம் அனைவரும் புதுப்படைப்பாக, விடுதலைப் பெற்றவர்களாக,சாவை வென்றவர்களாக, இறையாட்சியை நோக்கி நடைபோடுவோம். இதன் அடிப்படையில் தான் நாம் நம் திருமுழுக்கினைப் புதுப்பிக்கிறோம். இந்த உயிர்ப்பின் நாளில் இதனையே பிறரிடம் எடுத்து செசல்வோம். எடுத்துச் சொல்வோம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

====================================

திருப்பாடல் 118: 1 – 2, 16 – 17, 22 – 23 (24)
”என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு”

கடவுளது பேரன்பு என்றென்றும் உள்ளது என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். ”என்றென்றும்” என்பதின் பொருள் என்ன? “எல்லாக்காலத்திலும்” என்று நாம் பொருள் கொடுக்கலாம். அதாவது, வறுமையோ, துன்பமோ, வாழ்வோ, தாழ்வோ எல்லா நேரத்திலும் ஆண்டவரின் அன்பு, நம்மிடத்தில் உள்ளது. குறிப்பாக, நாம் தவறு செய்தாலும், ஆண்டவர் நம்மை முழுமையாக அன்பு செய்கிறார். நாம் செய்த தவறை நினைத்து, வருந்துவாரே அன்றி, நம்மை மீட்பதற்கு முயற்சிகள் எடுப்பாரேயன்றி, அவர் நம்மை தண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறவர் கிடையாது. அதுதான் கடவுளின் பேரன்பு என்று, திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.

 

கடவுளின் அன்பிற்கு ஈடு இணையே இல்லை. எனவே தான், அவருக்கு நன்றி செலுத்துங்கள் என்று ஆசிரியர் கூறுகிறார். நாம் செய்த தவறுகளுக்கு ஏற்ப, கடவுள் நமக்கு தண்டனை கொடுப்பவர் என்றால், நாம் அவர் முன் நிற்பதற்குக் கூட தகுதியற்றவர்களாக இருக்கிறோம். கடவுள் நம் பாவங்களைப் பார்த்து, நம்மை தீர்ப்பிட்டிருந்தால், நிச்சயம் தன்னுடைய ஒரே மகனை நமக்காக இந்த உலகத்திற்கு அனுப்பியிருக்க மாட்டார். இயேசுவின் உயிர்ப்புப்பெருவிழா, கடவுள் இந்த உலகத்தின் மீது வைத்திருக்கிற முழுமையான அன்பை நமக்கு எடுத்துரைப்பதாக இருக்கிறது. இந்த உலகம் கடவுளின் அன்பிற்கு தகுதியில்லாத நிலையில் இருந்தாலும், கடவுள் அந்த தகுதியைக் கொடுத்து, இந்த உலகத்தை மீட்டிருக்கிறார்.

 

நமது வாழ்வில், கடவுள் நம்மீது காட்டி வருகிற அன்பிற்கே, நாம் எப்போதும் நன்றியுணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும். நம் அனைவர் மீதும் அவர் காட்டி வருகிற அளவற்ற இரக்கத்திற்கே நாம் முழுமையாக அவருக்கு ஊழியம் செய்கிறவர்களாக மாற வேண்டும். ஆண்டவர் மீது உண்மையான அன்பு கொண்டிருப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------

இறைவார்த்தையின் மீது நம்பிக்கை

இயேசு தனது போதனையிலே எவ்வளவோ வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார். அவரது போதனையில் நிலைத்திருக்கிறவர்கள் அரும்பெரும் செயல்களைச் செய்வார்கள் என்று சொல்லியிருக்கிறார். தனது மழைப்பொழிவிலே, நீதியின்நிமித்தம் துன்பங்களைச் சந்திக்கிறவர்கள் விண்ணரசில் இடம்பெறுவார்கள் எனப்போதித்து இருக்கிறார். நம்பிக்கையோடு கடவுளிடம் கேட்கும்போது நிச்சயம் நாம் பெற்றுக்கொள்வோம் என்று நம்பிக்கையூட்டியிருக்கிறார். தாழ்ச்சியோடு வாழ்கிறவர்களை கடவுள் உயர்த்துவார் என்று, தாழ்ச்சியுள்ளவர்களை மேன்மைப்படுத்தியிருக்கிறார். இந்த போதனைகள் அனைத்துமே நடக்குமா? நிறைவேறுமா? என்று கேட்டால், நம்மில் பலபேருக்கு அது சந்தேகம் தான். கடவுளை நம்புகிற நம்மில் பலபேர், அவர் சொன்னதெல்லாம் நடக்கும், இறைவார்த்தையில் சொல்லப்பட்டதெல்லாம் நடந்தேறும் என்று நம்பிக்கை கொள்வதில்லை. ஆனால், இன்றைய நற்செய்தி கடவுளின் வார்த்தை உண்மையானது, அது நிச்சயம் நடந்தேறும் என்பதை தெளிவாக்குகிறது.

இயேசு உயிர்த்தார் என்கிற செய்தி நிச்சயம் பலபேருக்கு நம்பக்கூடிய செய்தியாக இருந்திருக்காது. ஏனென்றால், இதுவரை எத்தனையோ மனிதர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் திரும்பி வந்தது கிடையாது. இப்போது இயேசு தான் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதனை வெறுமனே வார்த்தைகளாகத்தான் எடுத்திருப்பார்களேயொழிய, அதனை உண்மையான வார்த்தைகளாக யாரும் எடுத்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்றைக்கு இயேசு உயிர்த்திருக்கிறார். ஆக, கடவுளின் வார்த்தை உண்மையாயிருக்கிறது. நடக்காது, நடக்கவே முடியாது என்று நினைத்திருந்த வாக்குறுதி நடந்தேறியிருக்கிறது. எனவே, இயேசுவின் வார்த்தைகள் உண்மையானவை என்கிற, ஆழமான செய்தியை இது நமக்குத் தருகிறது.

இன்றைக்கு நாமும் கூட திருப்பலியிலே வாசகங்கள் வாசிக்கப்படுகிறபோது அதனை கருத்தூன்றிக் கேட்காததற்கு காரணம், நமது நம்பிக்கையின்மையும் ஒரு காரணம். கடவுளை நாம் நம்பினாலும், இறைவார்தையை, கடவுளின் வார்த்தையை நாம் நம்புவதற்கு தயாராக இல்லை. அந்த நம்பிக்கையின்மையிலிருந்து, நம்பிக்கை வாழ்விற்கு, இந்த உயிர்ப்பு நம்மை அழைத்துவரட்டும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

தூய்மையான அன்பு

பேதுருவின் மீது மற்ற சீடர்கள் எந்த அளவுக்கு மதிப்பும், மரியாதையும் அவர்களுக்குத் தலைவராகவும் இருந்ததை இந்த நற்செய்திப்பகுதி நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறது. பேதுரு பலவீனமான திருத்தூதர் தான். தெளிவான, உறுதியான மனநிலையோடு இல்லாதவர் தான். ஆனால், தான் பெரிய தவறு செய்திருந்தாலும், தவறை ஏற்றுக்கொண்டு, மற்றவர்களை எதிர்கொள்கிற அளவுக்கு, வழிநடத்துகிற அளவுக்கு வலிமையானவர் என்பதைத்தான் இந்தப் பகுதி நமக்கு தெரிவிக்கிறது. ஏனென்றால், இயேசு கல்லறையில் இல்லையென்று அறிந்தவுடன், பெண்கள், முதலில் பேதுருவிடம் தான் சொல்கிறார்கள். இதிலிருந்து, பேதுருவுக்கு திருத்தூதர்கள் மற்றும் சீடர்கள் மத்தியில் இருந்த மதிப்பு, மரியாதை நமக்குத் தெளிவாக்கப்படுகிறது.

பேதுரு பலவீனமான மனிதராக இருந்தாலும், நேரம் அவரை அழைக்கிறபோது, அதற்கு செவிமடுக்கிறார். அதற்காக, தனது உயிரையே தியாகம் செய்யத்தயாராக இருக்கிறார். சீடர்கள் அனைவரும் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். பேதுருவும் அவர்களோடு பயந்து கொண்டிருக்கிறார். இயேசுவைக் கொன்ற அவர்கள், அடுத்து தங்களைக் கொல்வதற்குத் தயாராக இருப்பார்கள் என்பது, சீடர்களுக்குத் தெரியாததல்ல. இப்படி பயம் நிறைந்த சூழலில், இயேசுவின் உடலைக்காணவில்லை என்றதும், தனது நிலையைப்பற்றி பேதுரு பயப்படவில்லை. எங்கே வெளியே சென்றால், தங்களைக்கொன்று விடுவார்களோ? என்று பேதுரு யோசிக்கவில்லை. எதைப்பற்றியும் அவர் யோசிக்கவில்லை. செய்தி அறிவிக்கப்பட்டவுடன் ஓடிச்செல்கிறார்.

பேதுரு கடவுள் மீது வைத்திருந்த உண்மையான அன்பு இங்கே வெளிப்படுகிறது. கடவுளை எந்த அளவுக்கு அவர் தேடினார் என்பதும் நாம் கண்கூடாக இங்கே காண்கிற உண்மை. அந்த உண்மையான, தூய்மையான, தன்னலமில்லாத அன்பை இயேசு, பேதுருவில் உணர்ந்ததால் தான், அவரை திருச்சபையின் தலைவராக ஏற்படுத்தியிருக்கிறார். நாமும் கடவுளைத் தூய்மையான அன்பினால் நாடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசு மீண்டும் வருவார்

பாலஸ்தீன நாட்டின் பாரம்பரியப்படி, ஒருவர் இறந்த மூன்றுநாளுக்குப்பிறகு, கல்லறைக்கு அவருடைய உறவினர்கள் சென்று வருவது வழக்கம். ஏனென்றால், முதல் மூன்று நாட்கள் இறந்தவரின் ஆவி கல்லறையைச்சுற்றி வந்து, தன்னுடைய உடலுக்குள் மீண்டும் செல்ல முயற்சி செய்யும் என்பது யூதர்களின் நம்பிக்கை. ஆனால், மூன்று நாட்களுக்குப்பின் உடல் அழுகிவிடுவதால், ஆவிக்கு தன்னுடைய உடலை அடையாளம் காணமுடியாமல், தனது உலகத்திற்கு திரும்பிவிடும். வாரத்தின் முதல் நாள் என்பது ஞாயிற்றுக்கிழமை. யூதர்களுக்கு ஓய்வுநாள் சனிக்கிழமை. ஓய்வுநாள் முடிந்தவுடன் விடியற்காலையிலேயே, மகதலா மரியா கல்லறைக்குச்செல்கிறாள். இயேசுவின் உடலைக்காணவில்லை என்றவுடன், அவள் திரும்பிவந்து பேதுருவிடமும், யோவானிடமும் சொல்கிறாள்.

இன்றைய நற்செய்தியில், யோவான் அங்குத்துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டதாகவும், அத்துண்டு மற்றத்துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச்சுருட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும் பார்க்கிறோம். விவிலியத்திலே இதற்கு பொருள் இருக்கிறது. பாலஸ்தீனப்பகுதியில், தலைவர் வீட்டிலே சாப்பிடும்போது, கைதுடைப்பதற்கான துணி மேசையின் மீது வைக்கப்பட்டிருக்கும். அவர் சாப்பிட்டவுடன் கைத்துணியைத் துடைத்தால், அதை மீண்டும் மடித்து வைத்துவிட்டுச்சென்றுவிடுவார். ஒருவேளை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, யாராவது வந்தால், அந்தத்துணியை அப்படியே மடிக்காமல், சுருட்டிப்போட்டுவிட்டுச்சென்றுவிடுவார். இதனுடைய பொருள், அவர் மீண்டும் வருவார் என்பது. இங்கே நற்செய்தியில், துணி சுருட்டிவைக்கப்பட்டிருந்தது என்றால், அதனுடைய பொருள் இயேசு மீண்டும் வருவார் என்பதை உணர்த்துகிறது. இதைத்தான் திருத்தூதர்பணி 1: 11 ல் பார்க்கிறோம்: “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லாவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்”. ஆக, இயேசு மீண்டும் வருவார் என்கிற செய்தி நமக்கு உறுதியாகத்தரப்படுகிறது.

கிறிஸ்து மரித்தார், கிறிஸ்து உயிர்த்தார், கிறிஸ்து மீண்டும் வருவார் என்பது நம் விசுவாசத்தின் மறைபொருள். தளர்ந்து போயிருக்கிற, துன்பங்களால் வாழ்வே வெறுத்துப்போயிருக்கிற உள்ளங்களுக்கு இது மிகப்பெரிய ஆறுதல் செய்தி. கிறிஸ்து மீண்டும் வருவார் என்கிற செய்தியே நமக்கு மகிழ்வைத்தர வேண்டும். துன்பங்களைப்பற்றி கவலைப்படாமல், இயேசு வருவார் என்கிற புத்துணர்ச்சியோடு வாழ்வை எதிர்கொள்ளுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

அன்பு அச்சத்தை வெல்லும் !

"சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது, இயேசு உயிர்த்தார், அல்லேலூயா" என்னும் வெற்றிப் பாடல் நம் உள்ளங்களில் இன்று ஒலிக்கின்றது.

இயேசுவின் உயிர்ப்பின் செய்தியை முதலில் அறியும் பேறு மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகிய பெண்களுக்குத்தான் கிடைத்தது. ஆண்களே பெண்களைவிட வீரமும், துணிவும் நிறைந்தவர்கள் என்னும் போலிப் பரப்புரையை வரலாற்றில் பல பெண்கள் உடைத்தெறிந்திருக்கிறார்கள். இந்தப் பெண்களும் அவ்வாறே!

ஆண் சீடர்கள் அஞ்சி நடுங்கி, ஒளிந்துகொண்டபோது, இந்தப் பெண்கள் துணிவுடன் "காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் கல்லறைக்குச் சென்றார்கள்". எங்கே அன்பு உள்ளதோ, அங்கே அச்சம் இல்லை என்னும் யோவானின் (1 யோவா 4: 18)சொற்களை இவர்கள் எண்பித்துள்ளனர். இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார் என்னும் நற்செய்தியை வானதூதர் வழியாக இவர்கள் பெற்றுக்கொண்டனர்.

அன்பு அச்சத்தை வெல்கிறது, அன்பு சாவையும் வெல்கிறது. இயேசு தந்தையின்மீது கொண்ட அன்பினால் சாவின்மீதிருந்த அச்சத்தை வென்றார். சாவையும் வென்றார். மகதலா மரியா இயேசுவின்மீது கொண்ட அன்பினால் சாவு, இருள், கல்லறை, பிலாத்துவின் வீரர்கள் என்னும் அனைத்து அச்சங்களையும் வென்றார். இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை முதன்முதல் அறிந்துகொண்டார்.

இதுவே உயிர்ப்பு விழா இன்று நமக்குத் தரும் செய்தி. இறைவனையும், மனிதரையும் அன்பு செய்வோம். அச்சமின்றி வாழ்வோம், சாவை வெல்வோம்.

மன்றாடுவோம்: அன்பினால் சாவை வென்ற வெற்றி நாயகனான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் இதயங்களை உமது அன்பினால் நிரப்பியருளம், அச்சத்தை அகற்றியருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

''கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்;
கண்டார்; நம்பினார்'' (யோவான் 20:8)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு உயிர்த்தெழுந்த நிகழ்ச்சியை யோவான் நற்செய்தியாளர் விவரிப்பதில் ஒரு சில சிறப்பு அம்சங்கள் உண்டு. அவற்றில் ஒன்று ''இயேசு அன்புசெய்த சீடர்'' பற்றியதாகும். இவரே இயேசு வைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு முதலில் வந்துசேர்ந்தார். ''கல்லறை;குள் சென்றார்; கண்டார்; நம்பினார்'' (யோவா 20:8). இயேசு இரா உணவு அருந்தியபோது இந்த ''அன்புச் சீடர்'' இயேசுவின் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார் (யோவா 13:21-23). இயேசு சிலுவையில் தொங்கியபோது இயேசுவின் தாய் மரியாவோடு இந்த அன்புச் சீடரும் அங்கே நின்றுகொண்டிருந்தார் (யோவா 19:26-27). இவ்வாறு இயேசுவின் தனிப்பட்ட அன்புக்குச் சொந்தக்காரரான சீடர் யார் என்னும் கேள்விக்கு வரலாற்றில் பல பதில்கள் தரப்பட்டதுண்டு. இந்த அன்புச் சீடர் ஒரு தனிப்பட்ட ஆள் எனக் கருதாமல் இயேசுவிடம் நம்பிக்கை கொள்கின்ற அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக அவரை நாம் கருதலாம் என்று ஓர் இறையியல் விளக்கம் உண்டு. இதைப் பெரும்பாலான அறிஞர் ஏற்கின்றனர். இவ்வாறு நாம் அன்புச் சீடரைப் புரிந்துகொண்டால் அவர் இயேசுவின் கல்லறைக்குள் ''சென்றார்''; ''கண்டார்''; ''நம்பினார்'' (யோவா 20:8) என்று தரப்படுகின்ற கூற்று இயேசுவில் நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் பொருந்தும். இயேசுவை மீட்பராக ஏற்கின்ற நாம் இயேசு வைக்கப்பட்டிருந்த கல்லறை வெறுமையானதைக் கண்டு அங்கே நுழைகின்றோம். அங்கே இயேசுவின் உடல் இல்லை என்பதையும் கல்லறை வெறுமையாய் உள்ளது என்பதையும் காண்கின்றோம். இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்தார் என நம்புகிறோம்.

-- இவ்வாறு இயேசு உயிர்பெற்ற நிகழ்ச்சியை நாம் ஏற்பது எதைக் குறிக்கிறது? முதலில், இயேசுவின் வாழ்வும் பணியும் செயல்பாடுகளும் கடவுளுக்கு உகந்தவையாய் இருந்தன என்பதை இயேசுவின் உயிர்த்தெழுதல் உறுதிப்படுத்துகிறது. அவருடைய வாழ்வும் சாவும் தோல்வியில் முடியவில்லை, மாறாக, அவர் வெற்றிவாகை சூடினார். கடவுள் உரைத்த சொல்லே அறுதியானதாக மாறிற்று. மேலும், இயேசுவின் உயிர்த்தெழுதல் நம் மீட்புக்கு வழிவகுத்தது. இயேசு உயிர்த்தெழாவிடின் நாம் இன்னும் பாவத்திலேயே இருப்போம் என தூய பவுல் கற்பிக்கிறார். இயேசுவின் உயிர்த்தெழுதல் நாம் புத்துயிர் பெறுவதற்கு ஒரு முன்னோடியாக அமைகிறது. இறுதியாக, உயிர்பெற்றெழுந்த இயேசுவே நம் நம்பிக்கையின் அடித்தளமாக இருக்கின்றார். அவர் உயிர்த்தெழுந்த ஆண்டவர் என்னும் உண்மையின் அடிப்படையில் அவருடைய இளமைப் பருவம், பணி வாழ்வு ஆகியவற்றை நாம் ஒரு புது ஒளியில் காண்கின்றோம். நற்செய்தி நூல்கள் இப்பார்வையைப் பிரதிபலிக்கின்றன. கிறிஸ்துவின் வழியாகப் புத்துயிர் பெற்ற நாம் அதை நம் அன்றாட வாழ்வில் வெளிப்படுத்த அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவை நமக்கு மீட்பராக அளித்த கடவுளை அன்புசெய்து, நம்மை அடுத்திருப்போரையும் அதே அன்போடு நாம் அரவணைக்கும்போது உண்மையிலேயே புது வாழ்வை நடைமுறையில் வெளிப்படுத்துவோம்.

மன்றாட்டு
இறைவா, உம்மிடமிருந்து கிறிஸ்துவின் வழியாகப் புத்துயிர் பெற்ற நாங்கள் தூய ஆவியின் வல்லமையால் வழிநடத்தப்பட அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்


இயேசுவின் உயிர்தார்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

உயிர்த்த இயேசுவின் வல்லமையும் இறை ஆற்றலும் பெற்று இணையதள நண்பர்கள், குடும்பங்கள் இனிது வாழ உங்களுக்காகச் செபிக்கிறேன். வாழ்த்துக்கள். வாழுங்கள்.
உயிர்த்த இயேசு ஒரு மாபெரும் சக்தி. யாரும் எதிர் கொள்ள முடியா வல்லமை. உயிர்ப்பு நிகழ்ச்சி இதை உறுதிசெய்கிறது. திருத்தூதர் யோவான் 19:41-42 இயேசுவை ஒரு தோட்டத்தில் அடக்கம் செய்ததாகச் சொல்லுகிறது. தோட்டம் என்பது பலன் கொடுக்கும் இடம். "சிலுவையில் அறையப்படடிருந்த இடத்தில் ஒருதோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்ததுஇயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள்." (யோவா 19:41-42) இயேசு பிணமாக புதைக்கப்படவில்லை, விதையாக விதைக்கப்பட்டார். ஆகவே விருட்சமாக வளர்ந்துள்ளார். அதுபோல நாமும் விதையாக விழுந்து விருட்சமாக வளர்ந்து பலன்கொடுக்கும் வாழ்க்கையை, உலகில் வாழும்போது வாழ வேண்டும்.

இயேசுவின் உயிர்ப்பு கல்லைப் புரட்டியது. காவலையும் தாண்டிக் கடந்து சென்றது. காவலும் கல்லும் கல்லறையும் உயிர்த்த இயேசுவை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. அவ்வாறே உயிர்ப்பின் வல்லமையால் உரமூட்டப்பட்ட கிறிஸ்தவனையும் யாரும் எதுவும் அடக்கிவிட முடியாது. அவன் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறான்.

உங்கள் உள்ளே இருக்கும் பலவீனமோ, நோயோ, உங்கள் வாழ்க்கைச் சிக்கல்களோ, உங்கள் எதிரிகளோ, யாரும் உங்களைக் கட்டி அடக்கி ஆள முடியாது. ஆவியின் வல்லமையால் உங்களை நிறைத்துக்கொண்டால், நீங்கள் வாழ்வில் வீழ்ந்தாலும், தாழ்ந்து போக மாட்டீர்கள். மண்ணில் புதைந்தாலும் மக்கிப் போகமாட்டீர்கள். விதையாக மீண்டும் முளைப்பீ;ர்கள். மிகுந்த பலன்பெறுவீர்கள். பலன் கொடுப்பீர்கள். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்