முதல் வாசகம்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள். அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லாரும் மலைத்துப்போய், ``இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?'' என வியந்தனர். ``பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும் பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!'' என்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 104: 1,24 29-30. 31,34
பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!
24 ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. -பல்லவி

29 நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.
30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். -பல்லவி

31 ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக!
34 என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 3b-7. 12-13

சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவரன்றி வேறு எவரும் `இயேசுவே ஆண்டவர்' எனச் சொல்ல முடியாது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அருள் கொடைகள் பலவகை உண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத்தொண்டுகளும் பலவகை உண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகை உண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது. உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

தொடர் பாடல்
தூய ஆவியே, எழுந்தருள்வீர், வானினின்றுமது பேரொளியின் அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.
எளியவர் தந்தாய், வந்தருள்வீர், நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர், இதய ஒளியே, வந்தருள்வீர்.
உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தண்மையும் தருபவரே.
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதலானவரே.
உன்னத பேரின்ப ஒளியே, உம்மை விசுவசிப்போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமதருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை, நல்லது அவனில் ஏதுமில்லை.
மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர், காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்காதிருப்பதை வளைத்திடுவீர், குளிரானதைக் குளிர் போக்கிடுவீர், தவறிப்போனதை ஆண்டருள்வீர்.
இறைவா உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.
புண்ணிய பலன்களை வழங்கிடுவீர், இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர், அழிவிலா இன்பம் அருள்வீரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா.
்செய்தி

யோவான் 20:19-23

பெந்தேகோஸ்துப் பெருவிழா (பாஸ்கா காலம் கடைசி நாள்)

19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார்.

20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.

21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன்" என்றார்.

22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார்.

-------------------------

 

''இயேசு சீடர்கள்மேல் ஊதி, 'தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ,
அவை மன்னிக்கப்படும்...' என்றார்'' (யோவான் 20:22-23)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- சாவிலிருந்து விடுதலையடைந்து உயிர்த்தெழுந்த இயேசு சீடர்களுக்குத் தோன்றுகிறார்; அவர்கள்மேல் ''ஊதுகிறார்'' (யோவா 20:22). இயேசு புரிந்த இச்செயல் நமக்கு வழக்கத்துக்கு மாறாகத் தோன்றலாம். ஆனால் அங்கே ஓர் ஆழ்ந்த இறையியல் கருத்து உள்ளது. அதாவது, உலகைப் படைத்த கடவுள் ''நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊதினார்; மனிதனும் உயிர் உள்ளவன் ஆனான்'' (காண்க: தொநூ 2:7). எனவே, இயேசு சீடர்கள்மேல் ஊதி அவர்களுக்குத் தூய ஆவியை வழங்குவது ஒரு ''புதிய படைப்பாக'' அர்த்தம் பெறுகிறது. இயேசு திருமுழுக்குப் பெற்றபோது அவர்மேல் தூய ஆவி இறங்கிவந்தார். இயேசு தூய ஆவியால் திருமுழுக்கு வழங்குவார் என யோவான் சான்று பகர்ந்தார் (யோவா 1:32-34). சிலுவையின் அடியில் மரியாவும் இயேசு அன்புசெய்த சீடரும் நின்றுகொண்டிருந்தபோது புதிதாகப் பிறந்த திருச்சபைக்குத் தூய ஆவி வழங்கப்பட்டார் (யோவா 19:26-27,30). இப்போதோ, உலகம் அனைத்திற்கும் பணிசெய்ய அனுப்பப்படுகின்ற சீடர்களுக்குத் தூய ஆவி வழங்கப்படுகிறது (யோவா 20:22). இயேசு உலகின் பாவங்களைப் போக்குகின்ற ஆட்டுக் குட்டியாக வந்து தூய ஆவியால் திருமுழுக்கு அளித்ததை யோவான் அறிவித்ததுபோல (யோவா 1:35-36), இங்கே சீடர்களுக்குத் தூய ஆவி வழங்கப்பட்டு, அவர்களது பணி ''பாவங்களை மன்னிக்கும்'' பணியாக விளக்கப்படுகிறது.

-- இயேசு உலகத்தின் பாவங்களைப் போக்கிவிட்டார்; உலகத்தின் மீது வெற்றிகொண்டுவிட்டார். அந்த வெற்றியில் சீடர்களுக்கும் பங்களிக்கப்படுகிறது; அவர்களும் இயேசுவின் அதிகாரத்தில் பங்கேற்கின்றனர். அவர்கள் இயேசுவின் பணியை ஆற்றும்போது சிலர் அவர்களை ஏற்பர், வேறு சிலர் அவர்களை ஏற்காமல் இருப்பர். இயேசுவின் வாழ்விலும் அப்படியே நிகழ்ந்தது. பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக நாம் இயேசுவை நம்பி ஏற்க வேண்டும் என சீடர்கள் அறிவிக்க அனுப்பப்படுகிறார்கள்; அந்த அறிவிப்பை ஏற்போர் பாவ மன்னிப்பைப் பெற்று, கடவுளோடு அன்புறவில் இணைவார்கள்; கடவுள் வழங்குகின்ற மன்னிப்புச் செய்தியை ஏற்க மனமில்லாமல் தங்கள் மனம்போல வாழ்வோர் மன்னிப்புப் பெற மாட்டார்கள் (யோவா 20:23). இயேசு நமக்கு வழங்கிய தூய ஆவியால் திருமுழுக்குப் பெற்ற நாம் பாவ மன்னிப்பு அடைந்துள்ளோம். அந்த மகிழ்ச்சி நம் உள்ளத்தை நிரப்ப வேண்டும். நாம் பெற்ற மன்னிப்பு அனுபவத்தை நாம் பிறரோடு பகிர்ந்திட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் ஆவியால் நாங்கள் புதுப்பிறப்புகளாக மாறி, புது வாழ்வு வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

"தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்".

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

படைப்பதும் புதுப்படைப்பாக்குவதும் தூய ஆவியின் செயல். ஒன்றுமில்லாமையிலிருந்து உண்டாக்குவது படைப்பு. இறைவன் உலகைப் படைத்தபோது, ஒன்றுமில்லாமையிலிருந்து, வெறுமையிலிருந்து (தொடக்க நூல் 1:1) அசைந்தாடிய ஆவியின் ஆற்றலால் அனைத்தையும் படைத்தார். அவ்வாரே தம் உயிர் மூச்சை ஊதி மனிதனைப் படைக்கிறார். இவ்வாறு தூய ஆவியை ஊதுவதால், தூய ஆவியின் செயல்பாட்டால் படைப்புகள் ஊண்டாகிள.

மனிதன் பாவம் செய்த பின் அதே தூய ஆவி, அவன் மீது செயல்படும்போதும், அவன் மீது ஊதப்படும்போதும் அவன் புதிதாகப் படைக்கப்படுகிறான். பேயை விரட்டும்போதும், நோயைப் போக்கும்போதும், பாவத்தை மன்னிக்கும்போதும், அர்ச்சிக்கும் போதும், அருள் வாழ்வுக்கு அழைக்கும்போதும், தூய ஆவி செயல்படுவதால், மனிதன்,தன் உடலிலும் உள்ளத்திலும் மாற்றம் பெறுகிறான். தூய ஆவி அவனைப் புது படைப்பாக்குகிறார்.

இவ்வாறு புதுப்படைப்பாக்கப்படும்போதெல்லாம் மனிதனின் பாவங்கள் கழுவப்படுகின்றன. பாவ மன்னிப்பு கொடுத்து புதுப்படைப்பாக்கும் அருளை, திருத்தூதர்களுக்கும் அவர்கள் வழியாகத் திருச்சபைக்கும் தூய ஆவியார் வழங்குகிறார். திருட்சபை வழங்கும் ஒவ்வொரு திருவருட்சாதனத்திலும் தூய ஆவி நம் மீது பொழியப்படுவதால், நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன; நாம் புதுப் படைப்பாகிறோம். புதுப்படைப்பாகும் நம்மில் "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்னும் வாழ்த்து முழுமையாகக் கிடைக்கிறது. தூய ஆவி தரும் இக்கொடைகளைப் பெற்று மகிழ்ந்து இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்