கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா


முதல் வாசகம்

இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14; 8: 10b


அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: ``உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்'' என்றார். அதற்கு ஆகாசு, ``நான் கேட்க மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்'' என்றார். அதற்கு எசாயா: ``தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் `இம்மானுவேல்' என்று பெயரிடுவார். ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார்'' என்று கூறினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.




பதிலுரைப் பாடல்

திபா 40: 6-7. 7-8. 9. 10

பல்லவி: இறைவா, இதோ உம் திருவுளம் நிறைவேற்ற நான் வருகின்றேன்.

6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை;
எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை;
ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.
7 எனவே, `இதோ வருகின்றேன்.' -பல்லவி

7 என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;
8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;
உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். -பல்லவி

9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்;
நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். -பல்லவி

10 உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை;
உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும் கூறியிருக்கின்றேன்;
உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை. -பல்லவி



இரண்டாம் வாசகம்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 4-10


சகோதரர் சகோதரிகளே, காளைகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தம் பாவங்களைப் போக்க முடியாது. அதனால்தான் கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, ``பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல. எனவே நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, `இதோ வருகின்றேன்.' என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது'' என்கிறார். திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், ``நீர் பலிகளையும் காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம்போக்கும் பலிகளையும் விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல'' என்று அவர் முதலில் கூறுகிறார். பின்னர் ``உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்'' என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கி விடுகிறார். இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதன் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அல்லேலூயா.

லூக்கா 1:26-38

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா
;



நற்செய்தி வாசகம்

இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38


ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, ``அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, ``மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், ``இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!'' என்றார். வானதூதர் அவரிடம், ``தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என்றார். பின்னர் மரியா, ``நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

25.03.2023 – லூக்கா 1: 26 - 38
அறிவிப்பு: ஏற்பா? நிராகரிப்பா?

அரசு ரீதியாக வருகின்ற அறிவிப்புகள் பல நேரங்களில் நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட முடியவில்லை. காரணம், ஏகாதிபத்திய அறிவிப்பாக இருக்கிறது. ஆனால் மத அடிப்படையாக வருகின்ற அறிவிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. காரணம், நாம் நம்முடைய வாழ்க்கையை நெறிப்படுத்த ஏதாவது ஒரு மதத்தினை சார்ந்து இருக்கின்றோம். எனவே அத்தகைய நெறிப்படுத்தலில் தீங்கு இருக்காது. ஓர் சார்பு தன்மை இருக்காது என்று நாம் நம்புகிறோம். எனவே தான் மத ரீதியாக வருகின்ற அறிவிப்பினை அனைவருமே ஏற்றுக் கொள்கின்றோம்.

அது போல தான் இன்றைய நாளிலே ஓர் அறிவிப்பு வந்திருக்கின்றது. இது நேரடியாக கடவுளிடமிருந்து வருகிறது, பிறப்பின் அறிவிப்பு. வரலாற்றிலே எந்தவொரு மனிதனும் பிறப்பதற்கு முன்பே அறிவிக்கப்படவில்லை. ஆனால் இயேசுவின் பிறப்பு மட்டும் முன்னறிவிக்கப்பட்டது. இயேசுவின் குழந்தை பருவ நிகழ்ச்சியிலும், பிறப்பு நிகழ்விலும் முக்கியத்துவம் பெறுவது மரியா. கபிரியேல் தூதர் வாழ்த்துரையில் ஒரு கலக்கம். பிறகு கன்னியாக இருந்து பிள்ளை பெறுவதைப் பற்றிய ஒரு நியாயமான கேள்வி. இறுதியில் இயேசு பற்றி வானதூதர் கூறிய நம்பத்தக்க பதிலின் விளைவாக அவருடைய தாழ்ச்சி மிக்க ஏற்பு ஆகியவை மரியாவின் தனிப்பட்ட இயல்பை காட்டுகின்றது. இயேசுவை பற்றிய வானதூதரின் அறிவிப்பு பழைய ஏற்பாட்டுப் பிண்ணனியில் வந்தவை. மக்கள் எதிர்பார்த்த மெசியா பற்றிய ஒரு தொடக்க அரங்கேற்றமே இது. அவர் கடவுளின் மகன், யூத மக்கள் போற்றிய தாவீதின் வாரிசு, முடிவில்லா ஆட்சிக்கு உரிமையாளர். இந்த அறிவிப்பால் கன்னிமை தாய்மைப் பேறு அடைகின்றது.

இயேசுவின் பிறப்பின் அறிவிப்பு நாம் ஏற்கிறோமா? நிராகரிக்கிறோமா? வசதி படைத்தவன் ஏற்கிறான், புத்தாடை வாங்கலாம். ஏழை நிராகரிக்கிறான் ஆடம்பரத்தைத் தவிர்க்க இயேசுவின் பிறப்பு அறிவிப்பு ஏழைகளுக்கே. சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

==============================

லூக் 1: 26 -38
அடிமைத்தனமே விடுதலை

பல அடிமைத்தனத்தை இந்த பூவுலகு கண்டுள்ளது. பல புரட்சிகளை இம்மானிடர்கள் கடந்து வந்துள்ளனர். எத்தனைப் புரட்சிகளும் வந்தாலும் மீண்டும் மீண்டும் மனிதகுலம் எதற்காகவாது அல்லது யாருக்காவது இன்றுவரை அடிமையாக இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் அடிமையாகத்தான் இருக்கிறோம் என்பதை மறக்க, மறைக்க இயலாது. அப்படியென்றால் அடிமைத்தனம் இவ்வுலகில் நிரந்தரமா? நம்மை நாம் விடுவிக்க இயலாதா? இத்தகைய கேள்விகளுக்கு விடையும், மாதிரியும் தான் இந்த பெருவிழா.

சாலையோரத்தில் நாயினைச் சங்கிலியில் பிடித்துக் கொண்டு செல்பவர்களைப் பார்த்து கேட்டால் அவர் நான் தான் என் நாயினை இழுத்துச் செல்கிறேன் என்றும், இந்த நாயினைத்தான் கழுத்தில் கட்டி என் கைக்குள் வைத்திருக்கிறேன் என்றும் கூறுவார். ஆனால், பல நேரங்களில் அவரைத்தான் அந்த நாய் தான் விருப்பட்ட இடத்திற்கெல்லாம் இழுத்து செல்கிறது. இதனைப் போலதான் நம் வாழ்வில் நாம் நினைக்கின்ற ஆசைகள், கனவுகள், திட்டங்கள், எல்லாம் நம் வாழ்வை அதனதன் வழிகள் இழுத்துச் செல்கின்றது. அவைகளுக்கு நாம் அடிமையாகவே வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவைகளுக்காக நம் தனிப்பட்ட விருப்புகளை விட வேண்டியுள்ளது, பெரிய வீடும், மகிழுந்து (ஊயச) வேண்டி வாழ்க்கை முழுவதும் நாம் கடனாளியாக, அடிமையாகத்தான் இருக்கிறோம். இந்த அடிமைத்தனத்தை நினைத்து ஏன், எதற்கு என்று கேள்விகளை கேட்க ஆரம்பிக்கும் முன்பு அந்த அடிமைத்தனத்தை நம் பிள்ளைகளின் தலையில் கட்டிவிட்டு நாம் இவ்வுகத்தை விட்டு கடந்து விடுகிறோம். அவ்வடிமைத்தனத்திலிருந்து விடுபட ஒரே வழி இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கின்ற மாதிரி அன்னை மரியாவினைப் போல, அவரில் நம்மை அடிமையாக்கிட வேண்டும். இவ்வுலக அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு அவரில் தஞ்சம் புரிவதே நலம். எளிதாக சொல்லவேண்டுமென்றால், அவரின் விருப்பத்தை தன் விருப்பமாக ஏற்றுக் கொள்ளவேண்டும். அவரில் நம் வாழ்வினை முழுமையாக ஒப்படைப்பதே உண்மையான விடுதலை. “இதோ ஆண்டவரின் அடிமை” என்ற அந்த வினாடியிலிருந்து அன்னை மரியா தன் வாழ்வின் முழுமையும், விடுதலையும் கண்டு கொண்டார்.

நாமும் இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட நம் வாழ்வின் பொருளை உணர, ஆண்டவரின் திருவுளத்திற்கு ‘ஆம்’ என்று கூறி நம்மை அடிமையாக்குவோம். விடுதலைப் பெறுவோம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

திருப்பாடல் 40: 6 – 7அ, 7ஆ – 8, 9 – 10
”இறைவா உம் திருவுளம் நிறைவேற்ற நான் வருகின்றேன்”

கடவுளுக்கு உகந்தது எது? கடவுளுக்கு பிரியமானது எது? எது கடவுளை மகிழ்ச்சிபடுத்தும்? இது போன்ற கேள்விகளெல்லாம் நாம் கேட்டுப்பார்த்து, நமது வழிபாட்டை அமைத்துக்கொண்டால், இன்று நாம் “வழிபாடு” என்ற பெயரில் செய்துகொண்டிருக்கிற பலவற்றை, நாம் நிறுத்த வேண்டியது வரும். மாதாவுக்கும், புனிதர்களுக்கும் தங்கநகைகள் போட்டு அழகு பார்க்கிற மக்களின் உள்ளம், ஓர் ஏழையின் வயிற்றுப்பசியைப் போக்கவோ, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவோ முயற்சிகள் எடுப்பது இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் நிலவும் காலக்கட்டத்தில், நாம் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதுதான் உண்மையான பலி என்பதை, இன்றைய திருப்பாடலின் பல்லவி நமக்கு உணர்த்துவதாக அமைகிறது.

கடவுளின் திருவுளம் எது? கடவுள் பலிபொருளை விரும்பவில்லை. எரிபலிகள் தனக்கு படைக்கப்படுவதை விரும்பவில்லை. மாறாக, உண்மையான அன்பு, நீதி, நேர்மை, வாய்மை போன்ற பண்புகளை நாம், வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறார். அதுதான் கடவுளுக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான பலியாக இருக்க முடியும் என்றும் சொல்கிறார். நாம் நேர்மையோடு வாழ்கிறபோது, அது மற்றவர்களுக்கும் தெரியக்கூடிய வகையில், அனைவரும் அறியக்கூடிய வகையில் வாழப்பட வேண்டும். அதை மறைத்து வாழ்வது, சரியான வாழ்வாக இருக்க முடியாது. அது நிச்சயம் சவாலான, கடினமான ஒன்று தான். ஆனால், அதுதான் கடவுளுக்கு உகந்த வாழ்வாக இருக்கிறது. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றக்கூடிய வாழ்வாக இருக்கிறது.

இன்றைக்கு நீதியோடு வாழ்கிறவர்கள் மிக மிக சொற்ப எண்ணிக்கையிலே உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், மறைமுக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அப்படி வாழ்வது உண்மையில் சவாலான வாழ்வு தான். அப்படி வாழ வேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருந்தால், நிச்சயம் கடவுள் தன்னுடைய ஆவியை நமக்குக் கொடுத்து நம்மை இயக்குவார் என்கிற நம்பிக்கையோடு, இந்த திருப்பாடலை நாம் தியானிப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு விழா

இந்த விழா ஐந்தாம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் இந்த விழா மார்ச் மாதம் 25 ம் தேதி கொண்டாடப்பட்டது. கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு 9 மாதங்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. இது தவக்காலம் அல்லது உயிர்ப்பு பெருவிழாவின் காலங்களில் வந்ததால், இவ்விழா குறித்துக்காட்டும் மகிழ்ச்சி பண்புகளை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, பிற்காலங்களில் டிசம்பர் 18 ம் தேதிக்கு, இந்த விழா மாற்றியமைக்கப்பட்டது.

இந்த விழாவானது, மரியாளின் முன்னறிவிப்பு, இயேசு கருவில் உருவான விழா, இறைமகன் மனிதரான விழா என, பல பெயர்களால் அழைக்கப்பட்டது. 1969 ம் ஆண்டிற்கு பிறகு நடந்த வழிபாட்டு மறுசீரமைப்பிற்கு பின், இந்த விழாவானது கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா என்று அழைக்கப்பட்டது. புதிய திருவழிபாட்டு ஒழுங்கின்படி, இந்த விழா மார்ச் மாதம் 25 ம் நாள் கொண்டாடப்பட வேண்டும். புனித வாரத்திலோ அல்லது உயிர்ப்பு விழாவின் வாரத்திலோ வந்தால், உயிர்ப்பு வாரத்திற்கு அடுத்து வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட வேண்டும். இது தவக்காலத்தில் கொண்டாடப்பட்டாலும் பெருவிழா தான்.

இந்த விழாவின் பெயர், மரியாளின் மீட்புப்பணியில் பங்கு குறைவதாகஅர்த்தம் கொள்வதற்காக கொடுக்கப்படவில்லை. மாறாக, இந்த விழா இயேசுவின் மீட்புப்பணியில் அவருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறிப்பதாக அமைகிறது.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நேர்மையுற்றோரின் வாழ்வு

கடவுளின் தூதர் மரியாளை வாழ்த்துகிறபோது, மரியாள் கலங்குகிறாள். “இந்த வாழ்த்து எத்தகையதோ” என்ற அச்சம் கொள்கிறாள். மரியாள் எதற்காக கலங்க வேண்டும்? கடவுளின் தூதரே அவரை வாழ்த்துகிறபோது, அவள் மகிழ்ச்சி தானே கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து, அவள் கலங்குவது எதற்காக? என்ற கேள்வி நிச்சயம் நமது உள்ளத்திலே எழும்.

யார் நம்மைப் புகழ்ந்தாலும், அதிலே மகிழ்ச்சி அடைவதை விட, அதில் நாம் எச்சரிக்கை உணர்வு கொண்டிருப்பது மிக முக்கியமானதாகிறது. யார் நம்மைப் புகழ்கிறார்களோ அவர்கள் மட்டில் கொண்டிருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வல்ல, நமது வாழ்வை இதே போன்று வாழ வேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வு நமக்குத் தேவைப்படுகிறது. இதுவரை சிறப்பாக வாழ்ந்திருக்கிறோம். இனியும், மற்றவர்களின் நல்ல வார்த்தைகளுக்கு ஏற்ப, புகழ்ச்சிக்கு ஏற்ப, நமது வாழ்வை வாழ வேண்டிய பொறுப்புணர்வு இங்கே நமக்கு தேவைப்படுகிறது. அந்த பொறுப்புணர்வு, இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்வை, இனிவரக்கூடிய நாட்களிலும் சிறப்பாக வாழ வேண்டிய, அந்த கடமையுணர்வுதான், மரியாளை கலங்கச் செய்கிறது. ஆனால், கபிரியேல் தூதர் ”அஞ்ச வேண்டாம், கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்” என்று சொல்கிறார். அதாவது, நல்ல எண்ணங்களோடு வாழ்கிறபோது, அந்த வாழ்வை சிறப்பாக வாழ, கடவுளே நமக்கு துணைசெய்வார் என்பது, மரியாளின் வாழ்வில் வெளிப்படுகிறது.

நாம் நேர்மையோடு வாழ்கிறபோது, அந்த வாழ்வை மற்றவர்கள் அங்கீகரித்து பாராட்டுகிறபோது, நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. இதுநாள் வரை நம்மைக் காத்து வந்த தேவன், இனி வரக்கூடிய நாட்களிலும் கைவிட மாட்டார் என்கிற எண்ணத்தோடு நமது வாழ்வை நாம் வாழ்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

ஆழமான விசுவாசத்திற்காக மன்றாடுவோம்

இயேசுவின் பிறப்பைப்பற்றிய பல கேள்விகள் இன்று நம் முன்னால் வைக்கப்படுகிறது. இயேசு மனிதராகப்பிறந்தாரா? கடவுளாகப்பிறந்தாரா? இயேசுவின் தந்தை யார்? இயேசு எப்படி மாதாவிடமிருந்து பிறந்தார்? அன்னை மரியாள் எப்படி கன்னியாகக் கருவுற முடியும்? எப்படி குழந்தையைப் பெற்றெடுத்த பிறகும் கன்னியாக இருக்க முடியும்? அப்படியென்றால், இந்த மண்ணகத்தில் பிறக்கிற குழந்தைகள் பாவத்தின் விளைவாகத்தான் தோன்ற முடியுமா? கணவன், மனைவிக்கு இடையேயான உறவு புனிதம் இல்லையா? இதில் நாம் எந்தக் கேள்விக்கும் மற்றவர்கள் நிறைவு கொள்கிற பதிலைக் கொடுத்துவிட முடியாது.

இந்தக்கேள்விகள் கேட்கப்பட்ட தொடக்கமுதல் இன்று வரை இந்தக்கேள்விகளுக்கான பதிலை நாம் யாரும் சொல்ல முடியாது. ஆனால், விசுவாசம் என்கிற அளவுகோலை வைத்துக்கொண்டு, அனைத்துக்கேள்விகளுக்கும் ஒரு வினாடியில், ஒரு வரியில் பதில் சொல்லி விடலாம். அந்த விசுவாச அளவுகோல்: கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை”. ஒரு சிலவற்றை நம்மால், நமது மனித அறிவு கொண்டு புரிந்து கொள்ள முடியாது. அல்லது, அதைப்புரிந்து கொள்வதற்கு இன்னும் நமது அறிவு, வளர்ச்சி பெற வேண்டும். தொடக்க காலத்தில் விடைகாண முடியாத பலவற்றிற்கு நாம் இன்று விடை கண்டிருக்கிறோம். இன்னும் பலவற்றிற்கு முயன்று கொண்டிருக்கிறோம். இதற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், இந்த விசுவாச அளவுகோல் தான் நமக்குத்துணை. இதன் வழியாகத்தான், நமது மூதாதையர் வாழ்வு பெற்றனர்.

நமது விசுவாசம் எப்படி இருக்கிறது? அறிவுப்பூர்வமாக இருக்கிறதா? ஆழமானதாக இருக்கிறதா? பொறுமையாக இருக்கக்கூடியதாக இருக்கிறதா? அல்லது மறுக்கக்கூடியதாக இருக்கிறதா? சிந்திப்போம். ஆண்டவரில் நமது முழுநம்பிக்கையை வைப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

மரியாளின் வழியில் நமது விசுவாசம்

அன்னை மரியாவை விசுவாசத்தின் தாய் என்று சொன்னால் அது முழுக்க, முழுக்க பொருந்தும். அவளது விசுவாசம் ஒவ்வொரு வார்த்தையிலும், வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் வெளிப்படுகிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு ”உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்” என்ற செய்தி வானதூதரால் முன்னறிவிக்கப்படுகிறது. ஆனால், நடந்தது என்ன? இயேசுவை அன்னை மரியாள் காதுபடவே இழிவாகவும், குறையாகவும் பேசினர். ஆனால், அன்னை மரியாள் தனது விசுவாசத்தை சிறிதும் இழக்கவில்லை.

யாரிலே தான் நம்பிக்கை வைத்திருந்தோமோ அவரே சிலுவையில் அறையப்பட்டு தனது உயிருக்காக துடித்துக்கொண்டிருந்தபோதிலும், இறுதியாக இறந்தபோதிலும் அன்னை மரியாள் தனது விசுவாசத்தை இழக்கவில்லை. கடவுளின் வார்த்தை நிறைவேறும் என்று உறுதியாக நம்புகிறாள். ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த உலகத்தைப் படைத்த கடவுளால், இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடிந்த கடவுளின் ஆற்றலால் அனைத்துமே நடக்கும் என்று அன்னை மரியாள் நம்பினாள். அதனால் தான் விசுவாசத்தின் தாயாக இன்று உயர்ந்து நிற்கிறாள். தனது பிறப்பு முதல் வாழ்வின் கடைசி மூச்சு வரை, கடவுள் மட்டில் அன்னை மரியாள் வைத்திருந்த விசுவாசம் அளப்பரியது.

அன்னையிடத்தில் இருந்த அந்த விசுவாசம் நமதாக வேண்டும். அவளது விசுவாசப்பண்பை நாமும் நமது வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட வேண்டும். வாழ்வில் நம்பிக்கை இழந்த சூழ்நிலையையும் கடவுள் மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர் என்று கடவுள் மட்டில் நமக்குள்ள விசுவாசத்தை இன்னும் ஆழப்படுத்துவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

அருள் நிறைந்த மரியே, வாழ்க!

பங்குமக்கள் அடிக்கடி இந்தப்பகுதியைப் படிக்கின்றபோதெல்லாம், ஒரு கேள்வியை அடிக்கடி கேட்பதுண்டு. கன்னிமரியாளுக்கு வானதூதர் மங்களவார்த்தை சொல்கிறபோது கேட்கும் அதே கேள்வியைத்தான், செக்கரியாவும் கேட்கிறார். கன்னிமரியாளுக்குப்பதில் சொல்லப்படுகிறது. செக்கரியாவுக்கு தண்டனை கொடுக்கப்படுகிறதே? இருவரும் ஒரே கேள்வியைத்தானே கேட்கிறார்கள்? என்று. ஏனெனில் கன்னிமரியாள், ‘இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே?’ என்று கேட்கிறாள். செக்கரியாவும் வானதூதரிடம், ‘இது நடைபெறும் என எனக்கு எப்படித்தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே?’ என்றார். இதற்கு பல பதில்களை நாம் சொன்னாலும், ஒரே ஒரு பதில் நம் கேள்விக்கு நிறைவானப்பதிலைத்தரும். கணவனை அறியாத கன்னி கருவுறுதல் என்பது நடைபெறவே முடியாத ஒன்று. ஆனால், வயதானவர்கள் பிள்ளை பெறுவது மீட்பின் வரலாற்றில் நடந்திருக்கிறது. ஆபிரகாம் வயதுமுதிர்ந்த வயதில் பிள்ளை பெற்றார். குருத்துவப்பணி ஆற்றக்கூடிய செக்கரியாவுக்கு இது நன்றாகத்தெரிந்திருக்க வேண்டும். அப்படித்தெரிந்திருந்தும் கேட்பதால்தான், வானதூதரால் அவருக்கு ஓர் அடையாளம் தரப்படுகிறது. அது தண்டனை அல்ல. அடையாளம்.

இன்றைக்கு பிரிவினைச்சபைகள் கன்னிமரியாளுக்கு சிறப்பு வணக்கம் செலுத்துவதை குறைகூறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இன்றைய நற்செய்திப்பகுதியில் தந்தையாகிய கடவுளே அன்னைக்கு புகழ்மாலை சாற்றுவதை நாம் ஆதாரத்தோடு நிரூபிக்கலாம். கபிரியேல் அதிதூதர் இறைவனின் திருமுன் பணிபுரியும் ஏழு வானதூதர்களில் ஒருவர். அவருடைய பணி தூதுரைக்கும் பணி. ஒரு தூதுவனின் பணி என்ன? பண்டையக்காலங்களில் அரசர் சொல்கிற செய்திகளை, எந்த நாட்டு அரசரிடம் சொல்கிறாரோ, அந்த அரசரிடம் எதைச்சொல்லச்சொன்னாரோ, அந்தச்செய்தியை ஒரு வார்த்தை கூட்டவோ, குறைக்கவோ மாட்டாமல், அப்படியேச்சொல்வது தான் தூதுவரின் பணி. இங்கே தூதுவராக அன்னைமரியாளைப்பார்த்து, கபிரியேல் வானதூதர் சொல்கிற, ‘அருள்மிகப்பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்’ என்கிற வார்த்தைகள் கபிரியேலின் வார்;த்தைகள் அல்ல, மாறாக, தந்தையாகிய கடவுளின் வார்த்தைகள். தந்தையாகிய கடவுளே, அன்னை மரியாளை வாழ்த்திப் போற்றுகிறார் என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்? கடவுள் மரியாளை ஏதோ வாழ்த்த வேண்டுமென்பதற்காக வாழ்த்தவில்லை. அந்த வாழ்த்துக்கு மரியாள் முற்றிலும் தகுதியானவள் என்பதால் வாழ்த்தினார்.

இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட உயர்ந்த கொடை அன்னைமரியாள். நமக்காக எந்நாளும் தந்தையாகிய இறைவனிடம் பரிந்துபேசிக்கொண்டேயிருக்கிறாள். அன்னையின் உதவியை மன்றாடியவர்கள் யாரும் கைவிடப்பட மாட்டார்கள். அந்த அன்னையிடம் நம் முழுமையான நம்பிக்கை வைப்போம். அவளிடத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

அன்னை மரியாவின் ஆன்மீக வாழ்வு

”உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று அன்னை மரியாள் கபிரியேல் தூதர் வழியாக, ஆண்டவருக்குச் சொன்ன அந்த வார்த்தைகள் சிந்திக்கக்கூடியவை. இந்த உலகத்திலே, வாழ்க்கை நடைமுறையிலே மக்கள் ஒவ்வொருவரும் செபிக்கிறார்கள். அவர்களின் செபம் எப்படி இருக்கிறது என்றால், ”எனது சொற்படி நிகழட்டும்” என்ற வகையில் அமைந்திருக்கிறது. ஆனால், அன்னை மரியா இறைவனுடைய திருவுளத்தை நிகழ்த்துவதற்கு தன்னையே அர்ப்பணிக்கிறாள்.

நமது செபிக்கும் மனநிலை மாற்றப்பட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. கடவுளிடத்தில் ஏராளமான விண்ணப்பங்களை எழுப்புகிறோம். நிச்சயம் இது மகிழ்ச்சியடையக்கூடிய ஒன்று. ஏனென்றால், ஒவ்வொரு விண்ணப்பங்களையும் ஆண்டவரிடத்தில் எழுப்புவது, நமது விசுவாசத்தின் வெளிப்பாடு. அந்த வகையில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அதே வேளையில் கவலை தரும் செய்தி என்னவென்றால், நாம் கேட்டது போல கடவுள் நடக்க வேண்டும் என்று நினைப்பது. இது அவிசுவாசத்தின் வெளிப்பாடு. நாம் எப்படிப்பட்ட மனநிலையோடு செபிக்க வேண்டும் என்பதை அன்னை மரியாள் கற்றுத்தருகிறாள்.

அன்னையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். அவளது வார்த்தைகளும், வாழ்வும் நமது ஆன்மீக வாழ்வின் ஊற்று. அன்னையைப் பற்றிக்கொண்டு நமது ஆன்மீக வாழ்வில் நடைபயின்றால், உண்மையில் நம்மால் மிகச்சிறந்த ஆன்மீக வாழ்வு வாழ முடியும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

அறிவிப்பும், அர்ப்பணமும் !

இன்று கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு விழாவைக் கொண்டாடுகிறோம்.

கபிரியேல் தூதர் அன்னை மரியாவுக்குத் தோன்றி, "கடவுளின் அருளைப் பெற்றுள்ளீர். கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்" என்று இயேசுவின் பிறப்பை முன் அறிவித்த நன்னாளே இந்நாள்.

இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்பட்ட அந்த நாளைப் போலவே, அறிவிக்கப்பட்ட அன்னை மரியாவும் நற்பேறு பெற்றவர். அவர் வழியாகத்தான் இந்த உலகின் மீட்பர் பிறக்க உள்ளார்.

இந்த அறிவிப்பைப் பெறும் பேற்றைப் பெற்ற மரியா, "நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று சொல்லித் தம்மை அர்ப்பணித்தார், இறைத் திருவுளத்துக்குத் தம்மைக் கையளித்தார்.

இன்றைய நாளில் நம்முடைய சிந்தனை இதுவாக இருக்கட்டும். "நான் பல வழிகளில் பேறுபெற்றவன்":
வாழ்வு என்னும் கொடை, நலம் என்னும் கொடை, இறைநம்பிக்கை என்னும் கொடை, ஆற்றல்கள், திறமைகள் என்னும் கொடைகள்... ஒவ்வொரு நாளும் பெற்று வரும் எண்ணிலடங்கா நன்மைகள்...

இவை அனைத்தையும் பெறும் நாம், அன்னை மரியாவைப் போலவே, "கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளோம்" என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி கூறுவோம். அந்த அன்னையைப் போலவே, நம் வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணித்து, அவர் விருப்பப்படியே நம் வாழ்வு அமைய நம்மைக் கையளிப்போம்.

மன்றாடுவோம்: வானதூதர் வழியாக இயேசுவின் பிறப்பை அன்னை மரியாவுக்கு அறிவித்த இறைவா, உம்மைப் போற்றுகிறோம். அந்த அறிவிப்பை ஏற்று, மகிழ்வுடன் தம்மை அர்ப்பணித்த அன்னையைப் போல நாங்களும் எங்களை உமக்கு அர்ப்பணிக்க விரும்புகிறோம். எங்களை ஏற்றுக்கொள்ளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு விழாவைக் கொண்டாடுகிறோம். ஒரு வகையில் பார்த்தால், இந்த விழாதான் திருச்சபையின் பிறப்பு விழா எனக் கருதப்படலாம். இறைவனின் திட்டத்துக்கு அன்னை மரியா ‘ஆம’; என்று சொன்னதால்தான், இயேசு பிறந்தார். திருச்சபையும் தொடங்கியது. ஆம், மீட்பின் வரலாறே ஒரு பெண்ணின் ‘ஆம்’ என்ற சொல்லில்தான் தொடங்கியது என்பது வியப்பு தரும் செய்திதான்.

பல நேரங்களில் வரலாற்றின் மாபெரும் திருப்பு முனைகள் சிறிய நிகழ்வுகளில்தான் தொடங்கின என்பதை வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும்போது அறிய வருகிறோம். அதுதான் இறையாற்றல்! அதுதான் இறைத் திருவுளம்! வல்லமை புனிதம் உடையவர் பெரியனவற்றைச் செய்கிறார். சிறியவற்றில் நம்பிக்கை உடையவராய் இருப்பவர்களை ஆண்டவர் பெரியன நிகழ்த்துவதற்காகப் பயன்படுத்துகிறார். இன்றைய நாளில் நாம் சிறியவற்றில் இறைவனுக்கு நம்பிக்கை உடையவர்களாக வாழ உறுதி எடுப்போம். ‘ஆம்’ என்பதே நம் விடையாகட்டும்.

மன்றாடுவோம்: அன்னை மரியாவின் சிறு மொழியில் பெரியன செய்த ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நாங்களும் சிறியவற்றில் உமக்கு நம்பிக்கைக்குரியவர்களாக வாழவும், அதன் வழியாக உமது திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்..

-- அருள்தந்தை குமார்ராஜா

--------------------------

''பின்னர் மரியா, 'நான் ஆண்டவரின் அடிமை:
உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்றார் (லூக்கா 1:38)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- மரியாவின் வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்தன. திருமண ஒப்பந்தம் ஆகி, இல்லறம் நடத்துவதற்கு முன் மரியா கடவுளின் திருமகனைத் தம் உதரத்தில் கருத்தாங்க அழைப்புப் பெறுகிறார். இது வியத்தகு நிகழ்ச்சி மட்டுமல்ல, மரியாவைப் பொறுத்தமட்டில் இது பெரும் அதிர்ச்சிதரும் செய்தியாக இருந்தது. இந்நிகழ்ச்சிக்குப் பின் யோசேப்பு மரியாவின் வாழ்வில் நிகழ்ந்ததைப் புரிந்துகொள்ள இயலாமல் திணறிக்கொண்டிருந்தார். இதுவும் மரியாவுக்கு ஒரு சோதனையாகவே அமைந்திருக்க வேண்டும். குழந்தைப் பேறு நெருங்கியதும் தம் குழந்தையை ஈன்றெடுத்து வசதியாகக் கிடத்துவதற்குக் கூட அவருக்குக் கிடைத்தது தீவனத்தொட்டியே. குழந்தை இயேசு எருசலேம் கோவிலில் காணாமற்போன நேரமும் மரியாவுக்குப் பெருவேதனை தந்தது. ஆனால் இத்துயரமான தருணங்களிலும் மகிழ்ச்சியான நேரங்களிலும் மரியா கடவுளின் வார்த்தையைத் ''தம் உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்'' (லூக்கா 2:50). கடவுளின் வார்த்தை மரியாவுக்கு ஆறுதல் தரும் ஊற்றாயிருந்தது.

-- மரியாவுக்கு ஏற்பட்ட மாபெரும் வேதனை அவர்தம் அருமைந்தன் எதிரிகளால் கொடுமைப்படுத்தப்பட்டதும், இயேசுவின் தோள்மேல் சிலுவை சுமத்தப்பட்டு இறுதியில் அச்சிலுவையில் ஒரு குற்றவாளிபோல அறையப்பட்டு உயிர்துறந்ததுமே. இத்துயரம் மரியாவின் இதயத்தை ஈட்டிபோல் துளைத்தது. இந்த நேரங்களிலெல்லாம் மரியா மன உறுதி இழக்கவில்லை; உள்ளதம் தளரவில்லை. மாறாக, கடவுளின் வல்லமையில் நம்பிக்கை கொண்டார். கடவுளால் எல்லாம் இயலும் என்பதை மரியா இத்தருணங்களில் மிக ஆழமாக உணர்ந்தார். மரியா கடவுளின் ''அடிமை'' என்றதும் கடவுள் அடிமைத்தனத்தை ஏற்கிறார் என்று பொருளாகாது. மாறாக, மரியா தம்மைப் படைத்து, பாவத்திலிருந்து காப்பாற்றிய கடவுளையே தம் வாழ்வின் மையாமாகக் கொண்டிருந்தார் என்பதே பொருள். இவ்வாறு செயல்பட்டதால் மரியா தம் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற முனையவில்லை. கடவுளின் திருவுளம் இவ்வுலகில் நிறைவேற வேண்டும் என்பது மட்டுமே மரியாவின் வாழ்க்கை நோக்கமாக இருந்தது.

மன்றாட்டு
இறைவா, உம் திருவுளத்தை அறிந்து அதன் கோரிக்கைகளை நாங்கள் ஏற்று வாழ அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

''வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப்பெற்றவரே வாழ்க!
ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார்'' (லூக்கா 1:28)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- அன்னை மரியாவை இயேசுவின் தாய் எனப் போற்றுகின்ற திருச்சபை அதே அன்னையைக் ''கடவுளின் தாய்'' எனவும் வாழ்த்திப் புகழ்கின்றது. கடவுளுக்கு நாம் அளிக்கின்ற ஆராதனையை நாம் மரியாவுக்கு வழங்குவதில்லை. ஏனென்றால் மரியா கடவுளின் படைப்பு. கடவுளுக்கு நிகரான நிலை அவருக்குக் கிடையாது. ஆனால் கடவுளின் திருமகனாகிய இயேசுவை அந்த அன்னை இந்த உலகிற்குப் பெற்றுத் தந்தார். எனவே, அவருக்குச் சிறப்பு மரியாதை செலுத்துவது பொருத்தமே என திருச்சபை கற்பிக்கிறது. வானதூதர் கபிரியேல் மரியாவுக்குத் தோன்றுகிறார். ''அருள்மிகப் பெற்றவரே'' என்று கூறி அவரை வாழ்த்துகிறார் (காண்க: லூக் 1:28). பழைய கத்தோலிக்க மொழிபெயர்ப்பில் ''அருள்நிறைந்தவளே, வாழ்க'' என்று இலத்தீன் பாடத்தின் நேர் தரவாக இருந்தது. புராட்டஸ்டாண்டு சபையினரின் பெயர்ப்பில் ''கிருபை பெற்றவளே, வாழ்க'' என்றுள்ளது. உண்மையிலேயே கடவுள் மரியாவுக்கு ஒரு சிறப்பான மாண்பை அளித்தார் என்பதில் ஐயமில்லை; அதற்கான விவிலிய ஆதாரமும் உள்ளது. ஆனால் கத்தோலிக்க திருச்சபை மரியாவைக் கடவுளின் நிலைக்கு உயர்த்தி வழிபடுகிறது என்று சிலர் குற்றம் காண்கிறார்கள். இவ்வாறு குற்றம் காண்பது சரியல்ல என்பதைச் சுட்டிக்காட்டியாக வேண்டும். அண்மையில் ஒரு வலைப்பதிவில் கண்டது இது: கேள்வி: ''மரியாளை வணங்கக் கூடாது (றழசளாippiபெ ஆயசல ளை ளin) என உரோமன் கத்தோலிக்கர்களுக்கு விளக்குவது எப்படி?'' இதற்கு தரப்படுகின்ற பதில்: ''இயேசு பூமிக்கு வர மரியாள் ஒரு பாத்திரமாக இருந்தாள். அவள் ஒரு பாக்கியமான பெண்தான். அதில் சந்தேகமில்லை. சோறு சமைக்க வேண்டுமென்றால் ஒரு பாத்திரம் (உழழமநச) தேவைப்படுகின்றது. சமைத்தப்பின்பு சோறுதான் சாப்பிட வேண்டும். பாத்திரத்தை (உழழமநச) அல்ல. மரியாள் பாத்திரம். இயேசு அந்த உணவு. மரியாளை வழிபடுவது பாத்திரத்தைக் கடித்துச் சாப்பிடுவது போன்று இருக்கிறது''.

-- மேலே தரப்பட்ட மேற்கோளிலிருந்து நாம் அறிவது என்ன? சிலர் கத்தோலிக்கர் பற்றி உண்மையிலேயே தவறான கருத்துக் கொண்டிருப்பது தெளிவாகவே தெரிகிறது. கத்தோலிக்கர் மரியாவைக் கடவுளாகக் கருதுவதும் இல்லை, நம் மீட்பரும் இடைநிலையாளருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கு நிகராக மரியாவைக் கொள்வதும் இல்லை. இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-1965) இந்த உண்மையை அழகாக எடுத்துரைக்கிறது. திருச்சபை வழக்கில் கடவுளுக்கு நாம் அளிக்கின்ற வழிபாடு ''ஆராதனை'' (யனழசயவழைn) எனவும் மரியாவுக்கு நாம் அளிக்கின்ற மரியாதை ''வணக்கம்'' (எநநெசயவழைn) எனவும் கலைச்சொற்களால் குறிக்கப்படுகின்றன. இதோ வத்திக்கான் சங்கம் தரும் போதனை: ''திருச்சபை மரியாவைத் தனிப்பட்டதொரு வணக்கத்தால் (எநநெசயவழைn) தக்க காரணத்துடன் பெருமைப்படுத்துகிறது. ஏனெனில்...இவர் கடவுளின் தூய்மைமிகு தாய் ஆவார். தூய கன்னியை தொடக்க முதலே, நம்பிக்கை கொண்டோர் 'கடவுளின் தாய்' என்றழைத்து வணங்கினர்... திருச்சபையில் என்றும் இருந்துள்ள இவ்வணக்கம் உண்மையிலேயே தனிப்பட்டது; மனிதரான வாக்குக்கும் தந்தைக்கும் தூய ஆவியார்க்கும் நம் அளிக்கும் ஆராதனையிலிருந்து (யனழசயவழைn) உள்ளியல்பிலேயே இது வேறுபட்டது; இந்த ஆராதனையை (யனழசயவழைn) இவ்வணக்கம் (எநநெசயவழைn) மிகச் சிறந்தவிதமாய் ஊக்குவிக்கும் எனலாம்'' (திருச்சபை, எண் 66).

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனின் தாயாக நீர் தேர்ந்தெடுத்த அன்னை மரியாவிடம் துலங்கிய ஆழ்ந்த நம்பிக்கை எங்கள் வாழ்விலும் விளங்கிட அருள்தாரும்.

 

''கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' (லூக்கா1:37)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கிறிஸ்து பிறந்த விழாவை டிசம்பர் மாதம் 25ஆம் நாம் கொண்டாடுகிறோம். அதற்கு சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன்னர், மார்ச் 25ஆம் நாள், இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியைத் திருச்சபை நினைவுகூர்கிறது. கடவுளின் தூதர் மரியாவிடம் சென்று, அவர் கருவுற்று ஒரு மகனைப் பெறுவார் என அறிவிக்கிறார் (லூக் 1:26-33). திருமண ஒப்பந்தம் ஆகியிருந்தும் கணவரோடு கூடி வாழாதிருந்த மரியா, ''இது எப்படி நிகழும்?'' என்று கேட்ட கேள்விக்கு வானதூதர் அளித்த பதில்: ''கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' (லூக் 1:37) என்பதாகும். மனிதர் பல திறமைகளைப் பெற்றிருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய திறமைக்கு ஒரு எல்லை உண்டு. எவ்வளவுதான் அறிவுத் திறன் கொண்டிருந்தாலும் மனிதரால் கூடுமான சாதனைகள் அளவுக்கு உட்பட்டவையே. ஆனால் ''கடவுளால் எல்லாம் கூடும்''. இவ்வாறு கடவுள் வல்லமை மிக்கவர் என நாம் கூறும்போது இரு அடிப்படையான உண்மைகளை வலியுறுத்துகின்றோம். முதலில், கடவுள்தாம் நம்மை உருவாக்கியவர். எனவே, நாம் கடவுளின் படைப்புகள் என்பதாலும் கடவுள் நம்மைப் படைத்தவர் என்பதாலும் மனிதர் ஒருபோதுமே கடவுளைப் போல வல்லமை மிக்கவர்களாக மாறிட இயலாது. இரண்டாவது, கடவுள் விரும்பினால் நம்மை மனித நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்ல இயலும். இதையே நாம் மீட்பு என்கிறோம். அதாவது, கடவுள் நம்மீது இரக்கம் கொண்டு, தம் ஒரே மகனை நம் மீட்பராக அனுப்பி, நம்மைத் தம் வாழ்வில் நிறைவாகப் பங்குபெற அழைத்துள்ளார். இது கடவுள் ஆற்றிய அரும்செயலாகும்.

-- எனவே, மனிதரால் இயலாதது ஒன்றுமில்லை என நாம் கூறலாமா? கடவுளின் அருளை நாம் பெறும்போது நாம் கடவுளின் நிலைவாழ்வில் பங்கேற்பதால் நாம் ஒருவிதத்தில் கடவுள் தன்மையைப் பெறுகிறோம். இதனால் மனித நிலை தன் நிறைவைப் பெறுகிறது. நாமும் கடவுளின் வல்லமையால் திடம் பெறுகிறோம். எனவே நாமும் தூய பவுலோடு சேர்ந்து, ''எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு'' எனக் கூறலாம் (பிலி 4:13). நம்மை உறுதிப்படுத்துகின்ற கடவுளோடு நாம் எப்போதும் இணைந்திருந்தால் நம் வாழ்விலும் அதிசய செயல்கள் நிகழும்.

மன்றாட்டு
இறைவா, உம் திருவுளத்தை நிறைவேற்ற எங்களுக்கு அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நம் அன்னை மரியாவின் விசுவாச அறிக்கை இது. இன்று தான் அறிக்கையிட்டதை தன் வாழ்வின் இறுதிவரையிலும் வாழ்ந்து காட்டினாள். இந்த விசுவாச அறிக்கையின் அடிப்படையில் தன் வாழ்க்கை முழுவதும் கட்டி எழுப்பினாள். அவர் வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் வலுவூட்டி, வழிநடத்திச் சென்றது இந்த விசுவாச அறிக்கை.

தன் விசுவாச அறிக்கை குருட்டு நம்பிக்கை அல்ல; மாறாக ஆழ்ந்த அறிவுப்பூர்வமானது என்பதை மரியா தன் பலவேறு கேள்விகளில் உறுதிப்படுத்துகிறார். வானதூதரின் வாழ்த்தில் மயங்கிவிடவில்லை. மிகப்பெரிய பதவியிலும் அசந்துவிடவில்லை. தன் கேள்விகளைக் கேட்கிறார். சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறார். வானதூதரால் சொல்லப்பட்ட செய்தியின் சான்றுகளை உறுதிசெய்கிறார். அறிவுப்பூர்வமாகச் சில உண்மைகளைக் கண்ட பின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஆண்டவனின் ஆற்றலுக்கு தன்னை அர்ப்பணிக்கிறாள். இவ்வாறு விசுவாசத்தற்கு விளக்கம் தருகிறார் அன்னை மரியா.

ஆகவே விசுவாசம், கடவுள் நம்பிக்கை இவை மூட நம்பிக்கை அல்ல. அறிவில் ஆரம்பமாகி ஆண்டவனின் அருளில் நிறைவடைவது.முழுமையாக அதன் காரண காரியங்களை அறிவுப்பூரவமாகத் தெறிந்துகொண்ட காரணத்தால்,தன் வாழ்வின் எல்லாச் சூழலிலும் குறிப்பாக நிரபராதியான தன்அன்பு மகனை இளம் வயதில் குற்றவாளியாகச் சிலுவையில் அறைந்து கொன்றதை அமைந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்ள முடிந்தது.இது விசுவாசம். 'நான் ஆண்டவரின் அடிமை' என்றதன் வாழ்க்கை வடிவம். இந்த விசுவாச அறிக்கையும் வாழ்வும் நம் அன்னையை உலகம் போற்றும் பெண்ணாக, விண்ணக அரசியாக உயர்த்தியுள்ளது. அந்த அன்னையை வேண்டுவோம். அருள் நிறைந்த மரியே வாழ்க.. .. ..இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்