டிசம்பர் 8

தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா

முதல் வாசகம்

தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15,20

ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, ``நீ எங்கே இருக்கின்றாய்?'' என்று கேட்டார். ``உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்'' என்றான் மனிதன். ``நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?'' என்று கேட்டார். அப்பொழுது அவன், ``என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்'' என்றான். ஆண்டவராகிய கடவுள், ``நீ ஏன் இவ்வாறு செய்தாய்?'' என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், ``பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்'' என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், ``நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்'' என்றார். மனிதன் தன் மனைவிக்கு `ஏவாள்' என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3. 3-4

பல்லவி: ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.
அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. -பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;
பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3யb இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும்
உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். -பல்லவி

3உ உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-6, 11-12

சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார். இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப்பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்; பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். அல்லேலூயா.

லூக்கா 1:26-38

கன்னிமரியாளின் அமலஉற்பவம் பெருவிழா


நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, ``அருள்நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, ``மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், ``இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!'' என்றார். வானதூதர் அவரிடம், ``தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என்றார். பின்னர் மரியா, ``நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

டிசம்பர் – 08
தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா
அன்னையைப் போன்று அவதாரம் எடு!
லூக்கா 1:26-38

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் தூய அமலோற்பவ மாதா பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

1858 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் பெர்னதெத் என்ற ஆடு மேய்க்கும் சிறுமி லூர்து நகரில் உள்ள மசபேல் குகைக்கருகில் நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது திடிரென்று வெண்மையான ஆடை அணிந்த பெண் ஒருவர் அவருக்கு முன்பாகத் தோன்றினார். அவரைப் பார்த்த பெர்னதெத், "அம்மா உங்களுடைய பெயர் என்ன? என்று கேட்டார். அதற்கு அவர், "நாமே அமல உற்பவம்" என்று பதிலளித்தார்.

இன்று அன்னையாம் திருச்சபை மரியாளின் அமலோற்பவப் பெருவிழாவை மகிழ்வோடு கொண்டாடுகின்றது. இந்த நல்ல நாளில் முதலில் இவ்விழாவின் வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்துகொண்ட பின்பு, அது உணர்த்தும் செய்தியை நாம் தெரிந்துகொள்வோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கீழைத் திருச்சபையில் 'மரியாளின் உற்பவம்' (The Conception of Mary) என்றதொரு விழா கொண்டாடப்பட்டு வந்தது. இவ்விழா மரியாளின் பிறப்பையும், அவரிடம் விளங்கிய நல்ல பண்புகளையும் பறைசாற்றுதாய் இருந்தது. படிப்படியாக இவ்விழா மேலைநாட்டு திருச்சபைக்கும் பரவியது.

கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டில் இவ்விழா மரியாளின் மாசற்ற தன்மையும், தூய்மையையும் பறைசாற்றுவதாய் இருந்தது. அப்போதுதான் திருச்சபைத் தந்தையர்களிடையே மரியாளின் மாசற்ற தன்மையைப் பற்றிய விவாதம் எழுந்தது. மரியாள் கருவிலே பாவக்கறையின்றி பிறந்தால், அவர் கடவுளின் மீட்புத் திட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? என்பதுபற்றி பல்வேறு விவாதங்கள் எழுந்தன. இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாற்போல் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித டன்ஸ் ஸ்கோடஸ் என்பரின் வார்த்தைகள் அமைந்தன.

"மரியாள் கருவிலே ஜென்மப் பாவமின்றி பிறக்கக் காரணம் அவர் மாசு மருவற்ற இயேசுவைப் பெற்றெடுப்பதற்காக. அதலால், மரியாளின் அமலோற்பவம் இயேசுவின் பிறப்பை முன்னிட்டு, கடவுள் மரியாளுக்குக் கொடுத்த மிகப்பெரிய கொடை எனச் சொல்லலாம்" என்றார் அவர். அதன்பிறகு மரியாளைப் பற்றிய இத்தகைய சிந்தனை திருச்சபை எங்கும் பரவியது. மரியாள் லூர்து நகரில் தன்னை வெளிப்படுத்துவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 1854 ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் "மரியாள் கருவிலே பாவக்கறை இன்றி தோன்றியவள்' என்ற விசுவாசப் பிரகடனத்தை அறிக்கையிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை அவ்வாறே வழங்கப்பட்டு வருகின்றது.

அமலோற்ப அன்னை நமக்கெல்லாம் மிகச் சிறந்த உதாரணமாக திகழ்கிறாள். அந்த அன்னையைப் போன்று நாம் மாற வேண்டும். அதற்காக இரண்டு அவதாரங்களை நாம் எடுப்பது மிகவும் சிறப்பாக அமையும்.

1. தூய்மையின் அவதாரம்
இறந்த இயேசுவைத் தன் மடியில் ஏந்திய மரியாவைச் சிலையாக வடித்தவர் உலகப் பெரும் சிற்பி மைக்கேல் ஆஞ்சலோ. சிலைக்கு பியத்தா என்று பெயர். அவரது வேலைப்பாட்டினைப் பாராட்டிய ஒருவர் ஒரு குறையாகச் சுட்டிக்காட்ட விரும்பி, "ஐயா, அன்னை மரியாவின் முகத்தை நீர் செதுக்கிய விதத்தைக் காணும் போது, அது 33 வயது மகனுக்குத் தாயாக இருக்கக்கூடிய முதிய தோற்றம் இல்லாது, மிகவும் இளமையாக, சிறுபெண்ணின் முகம் போல் உள்ளதே" என்றாராம். அதற்கு மைக்கேல் ஆஞ்சலோ சொன்ன பதில் என்ன தெரியுமா? ''பாவமும் பாவச் சிந்தனையும் உள்ளவர்களுக்குத்தான் மூப்பின் தன்மை வெளிப்படும், அன்னை மரியாவோ பாவமாசற்றவள். பாவச் சிந்தனையற்று அதன் நிழல்கூட தன்னை தீண்டாமல் வாழ்ந்தவள். எனவே அவள் எப்பொழுதும் இளமையாகத்தான் இருப்பாள்".

உலகில் அனைவரும் தூய்மையை விரும்புவதில்லை. பாவம் செய்வதற்கு பயப்படுவதில்லை. பாவம் செய்வது தவறு என்பது மனதில் அதிக அழுத்தம் பெறுவதில்லை. அப்படி வாழும் நம்மை இன்றைய விழா கண்டனம் செய்கிறது. அது தவறு என்கிறது. உடனே மாறச்சொல்கிறது. துருப்பிடித்து இருக்கும் தூய்மையை தட்டச் சொல்கிறது. பரிசுத்த வாழ்க்கைக்கு அழைக்கிறது. அன்னையைப் போன்று மாறச் சொல்கிறது. அவர்களைப் போல அவதாரம் எடுக்கச் சொல்கிறது.

2. வாய்மையின் அவதாரம்
உண்மையைப் பேசுபவர்கள் குறைவு. மிகவும் குறைவு. பொய்களின் கூட்டணி கூடிக்கொண்டே வருகிறது. இது உலகம் ஆபத்தான நிலையில் போய்க்கொண்டிருப்பதைக் காட்டுகிறது. இந்த அவலநிலையைப் போக்க இந்த நாள் நல்லநாள் அழைக்கிறது. அன்னை மரியாள் நம் தாய் வாய்மையின் வாசலாகத் திகழ்ந்தார்கள். அவர்களைப் போன்று நாம் வாய்மையை வாழ்வாக்க வேண்டும். அதற்காக அவதாரம் எடுக்க வேண்டும். வாய்மையின் அவதாரம் எடுக்க வேண்டும்.

மனதில் கேட்க…
1. அன்னை மரியைப் போன்று வாழ எனக்கு ஆசை உள்ளதா?
2. இரண்டு அவதாரங்கள் நான் எடுப்பது மிக அவசரமான தேவை அல்லவா?

மனதில் பதிக்க…
இதோ ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக் 1:38)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

தொடக்கநூல் 3: 9 – 15, 20
தவறுகளுக்கான தீர்வு

மனிதர்களின் மனநிலை செய்த தவறை ஏற்றுக்கொள்ளாதது ஆகும். எனவே தான் பொதுவாகச் சொல்வார்கள்: மற்றவர்களை நாம் தீர்ப்பிடும்போது நீதிபதியாகவும், நம்மையே நாம் தீர்ப்பிடுகிறபோது வக்கீலாகவும் மாறிவிடுகிறோம். இது உண்மை தான். மனிதர்கள் யாரும் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொள்வதில்லை. அது மட்டுமல்ல. அதனை எப்படியும் நியாயப்படுத்தவும் செய்கிறார்கள். செய்த தவறை ஒப்புக்கொள்கிறபோது, அங்கே மனமாற்றத்திற்கான வழி ஏற்படுகிறது. மீண்டும் அதே தவறைச் செய்யாமலிருப்பதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது. இது நாம் வாழும் இந்த சூழ்நிலைக்கு மட்டுமல்ல. நம்முடைய முதல் பெற்றோரின் காலத்திலிருந்தே இது தான் நடந்து கொண்டு இருக்கிறது.

தொடக்கநூலில் நம்முடைய முதல் பெற்றோர் கடவுள் கொடுத்த கட்டளைக்கு எதிராக தவறு செய்துவிட்டார்கள். அந்த தவறில் இரண்டு பேருக்குமே பங்கிருக்கிறது. தாங்கள் செய்தது தவறு தான், என்று அவர்கள் கடவுளிடம் ஏற்றுக்கொண்டிருந்தால், அதற்கு மன்னிப்பு கோரியிருந்தால், அது உடனடியாக மன்னிக்கப்பட்டிருக்கும். இந்த உலக நடைமுறையே மாறியிருக்கும். ஆனால், அவர்களுக்கு அந்த மனநிலை இல்லை. ஒருவர் அடுத்தவரைப் பழிக்கு உள்ளாக்குகிறார்கள். இறுதியில், தங்களுடைய தவறான அணுகுமுறையினால், தண்டிக்கப்படுகிறார்கள். அருள்வாழ்வை இழந்துவிடுகிறார்கள்.

நாம் செய்கிற தவறுகளை மன்னிப்பதற்கு கடவுள் எப்போதுமே காத்திருக்கிறார். ஆனால், நம்முடைய தவறுகளுக்காக மனம் வருந்த வேண்டும். தவறுக்காக மனம் வருந்துதல் என்பது, இனிமேல் அந்த தவறை செய்ய மாட்டேன் என்று உறுதி கூறி, அதற்கான முயற்சி எடுப்பது. அதற்காக முழுமையாக நம்மையே அர்ப்பணிப்பது. அந்த வாழ்க்கைமுறையை நாம் கற்றுக்கொள்ள, உறுதி எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

திருப்பாடல் 98: 1, 2 – 3ஆ, 3இ – 4
”மகிழ்ச்சியுடன் ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்”

ஆண்டவரை நாம் வாழ்த்துகின்றபோது, மகிழ்ச்சியோடு வாழ்த்த வேண்டும். உள்ளப்பூரிப்போடு வாழ்த்த வேண்டும். உள்ளத்தின் நிறைவோடு வாழ்த்த வேண்டும். இறைவனை வாழ்த்துவது என்பது நம்முடைய வாழ்வின் முக்கியமான ஒன்று. அது கடமை என்று சொல்வதை விட, அது நம்முடைய வாழ்வின் அங்கம். இன்றைக்கு கடவுளைப் போற்றுவதற்கும், வாழ்த்துவதற்கும் மக்களைக் கேட்கிறபோது, ”எங்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கிறது. இந்த வேலைப்பளுவுக்கு நடுவில், எப்படி நேரம் பார்ப்பது?” என்று கேட்கிறார்கள்.

கடவுளைப் போற்றுவதுதான் நம்முடைய வாழ்வின் முதன்மையான இலக்காக இருக்க வேண்டும். அதற்கு நேரம் என்று சொல்வதை ஏற்க முடியாது. ஏனென்றால், அதற்குத்தான் முதன்மையான நேரத்தைக் கொடுக்க வேண்டும். நமக்கு வேலை இருக்கிறது என்பதற்காக நாம் சுவாசிக்காமல் இருக்கிறோமா? சுவாசம் இல்லையென்றால், வாழ்வு இல்லை. அது நம்முடைய வாழ்க்கையின் அடிநாதம். அது போலத்தான், கடவுளும் நம்முடைய வாழ்வின் அடிநாதம். கடவுள் இல்லையென்றால், இந்த வாழ்க்கை இல்லை. கடவுள் இல்லையென்றால், இந்த உலகம் இல்லை. கடவுள் இல்லையென்றால் இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை. கடவுள் தான் நமக்கு எல்லாமே. எனவே, எப்போதும் நாம் கடவுளுக்கு நேரம் ஒதுக்குவதை வேலையாகக் கருதாமல், அது நம்முடைய வாழ்வின் அங்கமாக மாற்ற, நாம் முன்வர வேண்டும்.

இந்த மனநிலை நம்மோடு இருக்கிறபோது, நம்மால் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஆண்டவரைப் போற்ற முடியும். உள்ளத்தின் நிறைவை அனுபவிக்க முடியும். அந்த நிறைவின் மகிழ்ச்சியில் ஆண்டவரை ஆர்ப்பரிப்போடு வாழ்த்த முடியும். அதனை இந்த திருப்பாடலிலிருந்து கற்றுக்கொள்வோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

அமல உற்பவ அன்னை விழா

நமது கத்தோலிக்க மறைக்கல்வி பாவத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறது. பிறப்பு வழிப் பாவம், செயல் வழிப் பாவம். கடவுள் இந்த உலகத்தைப் படைத்து அனைத்தும் நல்லதென இருப்பதாகக் கண்டார். படைப்பின் சிகரமாக மனிதர்களைப் படைக்கிறார். ஆனால், நமது முதல் பெற்றோர் கடவுளின் கட்டளையை மீறி, பாவம் செய்து, தாங்கள் பெற்றுக்கொண்ட அருள்வாழ்வை இழந்து விடுகிறார்கள். இதுதான் உலகத்தில் துன்பத்தைக் கொண்டு வந்ததாக, நாம் நம்புகிறோம்.

பிறக்கக்கூடிய குழந்தைகள் அனைத்துமே பிறப்புவழிப்பாவத்தோடு தான் பிறக்கிறார்கள். இதுதான் பிறப்பு வழிப் பாவம். தந்தையாகிய கடவுள், தனது மகன் பிறப்பதற்கு அன்னை மரியாளைத் தேர்ந்து கொண்டார். எனவே, மரியாளுக்கு மிகுதியான அருளைப்பொழிந்து மாசற்ற நிலையில், பிறப்பு வழிப்பாவம் அவரைத் தீண்டாத வகையில் காத்துக்கொண்டார். மீட்பரின் தாயாக கடவுள் அவரைத் தேர்ந்து கொண்டதால், மீட்பரின் பேறுபலன்கள் அவருக்கு முன்பே வழங்கப்பட்டது. இதனை நாம் விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

அன்னை மரியாள் எவ்வாறு தனது உடலால், உள்ளத்தால், ஆன்மாவால் தன்னை புனிதமானவராகக் காத்துக்கொண்டாரோ, அதேபோல நமது வாழ்வும் புனிதத்தன்மை மிகுந்த வாழ்வாக அமைய ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

அமல உற்பவ பெருவிழா

மரியாள் தன் தாய் அன்னம்மாளின் வயிற்றில் இருக்கிறபோதே, கடவுளின் அருளால் பாவ மாசின்றி பாதுகாக்கப்பட்டிருந்தாள் என்பதுதான், இந்த விழாவின் மையப்பொருளாகும். இது மரியாளின் மாசற்ற உற்பவத்தின் உன்னதமான நிகழ்வை கூருகின்றது. இதற்கு விவிலிய ஆதாரம் ஏதும் இல்லை. இது ஒரு மறையுண்மை. இதை கி.பி 1854 ம் ஆண்டு, டிசம்பர் 08 ம் நாள் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் ”மரியாள் அமல உற்பவ” என்ற அப்போஸ்தலிக்க மடலிலே பிரகடனப்படுத்தியுள்ளார். இது பெரும்பாலும் பாரம்பரியத்தையும், இறையியல் மற்றும் திருவழிபாட்டு மரபு அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது ஆகும்.

மரியாள் கடவுளின் மகனைக் கருத்தாங்கியதால், மரியாளின் பிறப்புநிலையைப்பற்றி பல விவாதங்கள் எழுந்தன. இந்த கருத்து பரவத்தொடங்கியபோது, பல இறையியலாலர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். இறுதியில் இச்சிக்கலுக்கு கீழ்க்காணும் விளக்கம் மூலமாக தீர்வு காணப்பட்டது. டன்ஸ் ஸ்காட்டஸ் என்பவர் 1300 ம் ஆண்டு, கடவுளின் அருள் இரண்டுவிதங்களில் செயல்படுகிறது என ஒரு விளக்கம் கொடுத்தார். கடவுளின் காக்கும் அருள் மற்றும் கடவுளின் குணமாக்கும் அருள். அதன்படி, இறைவனின் மீட்புத்திட்டத்தை நிறைவேற்ற, பாவ மாசுகளில் இருந்து மரியாளை கடவுள் தனது காக்கும் அருளினால், மீட்டார். கிறிஸ்துவின் பொருட்டு மரியாளுக்கும் இது வழங்கப்பட்டிருக்கிறது. இது ஒரு சிறப்பு நிலையே என்று விளக்கமளிக்கப்பட்டது.

திருமுழுக்கு அருட்சாதனம் வழியாக நாமும் கடவுளின் அருளால், ஜென்மப்பாவத்திலிருந்து கழுவப்படுகிறோம். இழந்த அருளைப் பெற்றுக்கொள்கிறோம். மீண்டும் கடவுள் நம்மை தன் பிள்ளைகளாகச் சேர்க்கிறார். பெற்றுக்கொண்ட கொடைக்கு ஏற்ப, நமது வாழ்வை நாம் மாற்றி வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

அன்னை மரியாளின் இறைப்பற்று

இறைவனின் முன் தன்னையே ஓர் அடிமைநிலைக்குக் கையளித்த அன்னை மரியாளின் தாழ்ச்சி நமக்கெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டு. கடவுள் எதைச்சொன்னாலும், அதை செய்வதற்கு தயாராக இருக்கிறேன் என்பதுதான் அன்னைமரியாளின் வார்த்தைகளின் பொருள். கடவுள் தான் அவளது வாழ்வில் எல்லாம் என்பதனை இந்த வார்த்தைகளில் வெகு எளிதாக வெளிப்படுத்திவிடுகிறார். அது ஏதோ, சாதாரண வார்த்தைகள் அல்ல, மாறாக, வாழ்வின் அனுபவம் தந்த பாடம். சிறு வயதிலிருந்தே, அன்னை மரியாள் கடவுளோடு நெருங்கியிருக்கிறாள். கடவுளின் பிரசன்னத்தை தன்னுள்ளே அதிகமாக உணர்ந்தவன் அன்னை கன்னிமரியாள். அந்த அனுபவம்தான், கபிரியேல் தூதுவரின் செய்தியினை, சந்தேகமில்லாமல் ஏற்றுக்கொள்ள துணைபுரிந்தது.

தனது வாழ்வில் தனக்கென்று எதற்குமே அன்னை கன்னிமரியாள் ஆசைப்பட்டது கிடையாது. அவளது எண்ணமெல்லாம் கடவுள்தான். அவள் சிந்தனையெல்லாம் கடவுளைத்தழுவியதாக இருந்தது. இந்த உலகத்திலே அவளுக்கென்று இருந்த உறவாக கடவுளைப்பார்த்தாள். கடவுள் தான் அவளுக்கு உலகம். கடவுள் இல்லாத ஒரு வாழ்வை அவளால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அத்தகைய ஒரு இறைப்பற்று தான், அவளது விசுவாசத்தை இறுதிவரை உறுதியுள்ளதாக வைத்திருந்தது. வாழ்வில் என்ன நடந்தாலும் பொறுமையாக, நிதானமாக இருக்கச்செய்தது. யார் “உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்” என்று முன்மொழியப்பட்டவரே இறந்தபோதிலும், அவளது நம்பிக்கை இறக்கவில்லை. நிதானம் இழக்கவில்லை. கடவுளது அற்புதத்திற்காக, அதிசயத்திற்காக பொறுமையாக இருக்கிறார்.

கடவுளோடு நெருங்கி இருக்கும் பண்பை அன்னை மரியாள் நமக்குக்கற்றுத்தருகிறார். அன்னை மரியாளின் பார்வையில் நாம் கடவுளைப்பார்த்தோமென்றால், வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் நாம் நிதானம் இழக்க மாட்டோம். கடவுளைப்பற்றிய சந்தேகம் கொள்ள மாட்டோம். அதற்காக இறைவனை மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

நேர்மையுற்றோரின் வாழ்வு

கடவுளின் தூதர் மரியாளை வாழ்த்துகிறபோது, மரியாள் கலங்குகிறாள். “இந்த வாழ்த்து எத்தகையதோ” என்ற அச்சம் கொள்கிறாள். மரியாள் எதற்காக கலங்க வேண்டும்? கடவுளின் தூதரே அவரை வாழ்த்துகிறபோது, அவள் மகிழ்ச்சி தானே கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து, அவள் கலங்குவது எதற்காக? என்ற கேள்வி நிச்சயம் நமது உள்ளத்திலே எழும்.

யார் நம்மைப் புகழ்ந்தாலும், அதிலே மகிழ்ச்சி அடைவதை விட, அதில் நாம் எச்சரிக்கை உணர்வு கொண்டிருப்பது மிக முக்கியமானதாகிறது. யார் நம்மைப் புகழ்கிறார்களோ அவர்கள் மட்டில் கொண்டிருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வல்ல, நமது வாழ்வை இதே போன்று வாழ வேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வு நமக்குத் தேவைப்படுகிறது. இதுவரை சிறப்பாக வாழ்ந்திருக்கிறோம். இனியும், மற்றவர்களின் நல்ல வார்த்தைகளுக்கு ஏற்ப, புகழ்ச்சிக்கு ஏற்ப, நமது வாழ்வை வாழ வேண்டிய பொறுப்புணர்வு இங்கே நமக்கு தேவைப்படுகிறது. அந்த பொறுப்புணர்வு, இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்வை, இனிவரக்கூடிய நாட்களிலும் சிறப்பாக வாழ வேண்டிய, அந்த கடமையுணர்வுதான், மரியாளை கலங்கச் செய்கிறது. ஆனால், கபிரியேல் தூதர் ”அஞ்ச வேண்டாம், கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்” என்று சொல்கிறார். அதாவது, நல்ல எண்ணங்களோடு வாழ்கிறபோது, அந்த வாழ்வை சிறப்பாக வாழ, கடவுளே நமக்கு துணைசெய்வார் என்பது, மரியாளின் வாழ்வில் வெளிப்படுகிறது.

நாம் நேர்மையோடு வாழ்கிறபோது, அந்த வாழ்வை மற்றவர்கள் அங்கீகரித்து பாராட்டுகிறபோது, நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. இதுநாள் வரை நம்மைக் காத்து வந்த தேவன், இனி வரக்கூடிய நாட்களிலும் கைவிட மாட்டார் என்கிற எண்ணத்தோடு நமது வாழ்வை நாம் வாழ்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

ஆழமான விசுவாசத்திற்காக மன்றாடுவோம்

இயேசுவின் பிறப்பைப்பற்றிய பல கேள்விகள் இன்று நம் முன்னால் வைக்கப்படுகிறது. இயேசு மனிதராகப்பிறந்தாரா? கடவுளாகப்பிறந்தாரா? இயேசுவின் தந்தை யார்? இயேசு எப்படி மாதாவிடமிருந்து பிறந்தார்? அன்னை மரியாள் எப்படி கன்னியாகக் கருவுற முடியும்? எப்படி குழந்தையைப் பெற்றெடுத்த பிறகும் கன்னியாக இருக்க முடியும்? அப்படியென்றால், இந்த மண்ணகத்தில் பிறக்கிற குழந்தைகள் பாவத்தின் விளைவாகத்தான் தோன்ற முடியுமா? கணவன், மனைவிக்கு இடையேயான உறவு புனிதம் இல்லையா? இதில் நாம் எந்தக் கேள்விக்கும் மற்றவர்கள் நிறைவு கொள்கிற பதிலைக் கொடுத்துவிட முடியாது.

இந்தக்கேள்விகள் கேட்கப்பட்ட தொடக்கமுதல் இன்று வரை இந்தக்கேள்விகளுக்கான பதிலை நாம் யாரும் சொல்ல முடியாது. ஆனால், விசுவாசம் என்கிற அளவுகோலை வைத்துக்கொண்டு, அனைத்துக்கேள்விகளுக்கும் ஒரு வினாடியில், ஒரு வரியில் பதில் சொல்லி விடலாம். அந்த விசுவாச அளவுகோல்: கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை”. ஒரு சிலவற்றை நம்மால், நமது மனித அறிவு கொண்டு புரிந்து கொள்ள முடியாது. அல்லது, அதைப்புரிந்து கொள்வதற்கு இன்னும் நமது அறிவு, வளர்ச்சி பெற வேண்டும். தொடக்க காலத்தில் விடைகாண முடியாத பலவற்றிற்கு நாம் இன்று விடை கண்டிருக்கிறோம். இன்னும் பலவற்றிற்கு முயன்று கொண்டிருக்கிறோம். இதற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், இந்த விசுவாச அளவுகோல் தான் நமக்குத்துணை. இதன் வழியாகத்தான், நமது மூதாதையர் வாழ்வு பெற்றனர்.

நமது விசுவாசம் எப்படி இருக்கிறது? அறிவுப்பூர்வமாக இருக்கிறதா? ஆழமானதாக இருக்கிறதா? பொறுமையாக இருக்கக்கூடியதாக இருக்கிறதா? அல்லது மறுக்கக்கூடியதாக இருக்கிறதா? சிந்திப்போம். ஆண்டவரில் நமது முழுநம்பிக்கையை வைப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

மரியாளின் வழியில் நமது விசுவாசம்

அன்னை மரியாவை விசுவாசத்தின் தாய் என்று சொன்னால் அது முழுக்க, முழுக்க பொருந்தும். அவளது விசுவாசம் ஒவ்வொரு வார்த்தையிலும், வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் வெளிப்படுகிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு ”உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்” என்ற செய்தி வானதூதரால் முன்னறிவிக்கப்படுகிறது. ஆனால், நடந்தது என்ன? இயேசுவை அன்னை மரியாள் காதுபடவே இழிவாகவும், குறையாகவும் பேசினர். ஆனால், அன்னை மரியாள் தனது விசுவாசத்தை சிறிதும் இழக்கவில்லை.

யாரிலே தான் நம்பிக்கை வைத்திருந்தோமோ அவரே சிலுவையில் அறையப்பட்டு தனது உயிருக்காக துடித்துக்கொண்டிருந்தபோதிலும், இறுதியாக இறந்தபோதிலும் அன்னை மரியாள் தனது விசுவாசத்தை இழக்கவில்லை. கடவுளின் வார்த்தை நிறைவேறும் என்று உறுதியாக நம்புகிறாள். ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த உலகத்தைப் படைத்த கடவுளால், இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடிந்த கடவுளின் ஆற்றலால் அனைத்துமே நடக்கும் என்று அன்னை மரியாள் நம்பினாள். அதனால் தான் விசுவாசத்தின் தாயாக இன்று உயர்ந்து நிற்கிறாள். தனது பிறப்பு முதல் வாழ்வின் கடைசி மூச்சு வரை, கடவுள் மட்டில் அன்னை மரியாள் வைத்திருந்த விசுவாசம் அளப்பரியது.

அன்னையிடத்தில் இருந்த அந்த விசுவாசம் நமதாக வேண்டும். அவளது விசுவாசப்பண்பை நாமும் நமது வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட வேண்டும். வாழ்வில் நம்பிக்கை இழந்த சூழ்நிலையையும் கடவுள் மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர் என்று கடவுள் மட்டில் நமக்குள்ள விசுவாசத்தை இன்னும் ஆழப்படுத்துவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

அருள் நிறைந்த மரியே, வாழ்க!

பங்குமக்கள் அடிக்கடி இந்தப்பகுதியைப் படிக்கின்றபோதெல்லாம், ஒரு கேள்வியை அடிக்கடி கேட்பதுண்டு. கன்னிமரியாளுக்கு வானதூதர் மங்களவார்த்தை சொல்கிறபோது கேட்கும் அதே கேள்வியைத்தான், செக்கரியாவும் கேட்கிறார். கன்னிமரியாளுக்குப்பதில் சொல்லப்படுகிறது. செக்கரியாவுக்கு தண்டனை கொடுக்கப்படுகிறதே? இருவரும் ஒரே கேள்வியைத்தானே கேட்கிறார்கள்? என்று. ஏனெனில் கன்னிமரியாள், ‘இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே?’ என்று கேட்கிறாள். செக்கரியாவும் வானதூதரிடம், ‘இது நடைபெறும் என எனக்கு எப்படித்தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே?’ என்றார். இதற்கு பல பதில்களை நாம் சொன்னாலும், ஒரே ஒரு பதில் நம் கேள்விக்கு நிறைவானப்பதிலைத்தரும். கணவனை அறியாத கன்னி கருவுறுதல் என்பது நடைபெறவே முடியாத ஒன்று. ஆனால், வயதானவர்கள் பிள்ளை பெறுவது மீட்பின் வரலாற்றில் நடந்திருக்கிறது. ஆபிரகாம் வயதுமுதிர்ந்த வயதில் பிள்ளை பெற்றார். குருத்துவப்பணி ஆற்றக்கூடிய செக்கரியாவுக்கு இது நன்றாகத்தெரிந்திருக்க வேண்டும். அப்படித்தெரிந்திருந்தும் கேட்பதால்தான், வானதூதரால் அவருக்கு ஓர் அடையாளம் தரப்படுகிறது. அது தண்டனை அல்ல. அடையாளம்.

இன்றைக்கு பிரிவினைச்சபைகள் கன்னிமரியாளுக்கு சிறப்பு வணக்கம் செலுத்துவதை குறைகூறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இன்றைய நற்செய்திப்பகுதியில் தந்தையாகிய கடவுளே அன்னைக்கு புகழ்மாலை சாற்றுவதை நாம் ஆதாரத்தோடு நிரூபிக்கலாம். கபிரியேல் அதிதூதர் இறைவனின் திருமுன் பணிபுரியும் ஏழு வானதூதர்களில் ஒருவர். அவருடைய பணி தூதுரைக்கும் பணி. ஒரு தூதுவனின் பணி என்ன? பண்டையக்காலங்களில் அரசர் சொல்கிற செய்திகளை, எந்த நாட்டு அரசரிடம் சொல்கிறாரோ, அந்த அரசரிடம் எதைச்சொல்லச்சொன்னாரோ, அந்தச்செய்தியை ஒரு வார்த்தை கூட்டவோ, குறைக்கவோ மாட்டாமல், அப்படியேச்சொல்வது தான் தூதுவரின் பணி. இங்கே தூதுவராக அன்னைமரியாளைப்பார்த்து, கபிரியேல் வானதூதர் சொல்கிற, ‘அருள்மிகப்பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்’ என்கிற வார்த்தைகள் கபிரியேலின் வார்;த்தைகள் அல்ல, மாறாக, தந்தையாகிய கடவுளின் வார்த்தைகள். தந்தையாகிய கடவுளே, அன்னை மரியாளை வாழ்த்திப் போற்றுகிறார் என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்? கடவுள் மரியாளை ஏதோ வாழ்த்த வேண்டுமென்பதற்காக வாழ்த்தவில்லை. அந்த வாழ்த்துக்கு மரியாள் முற்றிலும் தகுதியானவள் என்பதால் வாழ்த்தினார்.

இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட உயர்ந்த கொடை அன்னைமரியாள். நமக்காக எந்நாளும் தந்தையாகிய இறைவனிடம் பரிந்துபேசிக்கொண்டேயிருக்கிறாள். அன்னையின் உதவியை மன்றாடியவர்கள் யாரும் கைவிடப்பட மாட்டார்கள். அந்த அன்னையிடம் நம் முழுமையான நம்பிக்கை வைப்போம். அவளிடத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

அன்னை மரியாவின் ஆன்மீக வாழ்வு

”உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று அன்னை மரியாள் கபிரியேல் தூதர் வழியாக, ஆண்டவருக்குச் சொன்ன அந்த வார்த்தைகள் சிந்திக்கக்கூடியவை. இந்த உலகத்திலே, வாழ்க்கை நடைமுறையிலே மக்கள் ஒவ்வொருவரும் செபிக்கிறார்கள். அவர்களின் செபம் எப்படி இருக்கிறது என்றால், ”எனது சொற்படி நிகழட்டும்” என்ற வகையில் அமைந்திருக்கிறது. ஆனால், அன்னை மரியா இறைவனுடைய திருவுளத்தை நிகழ்த்துவதற்கு தன்னையே அர்ப்பணிக்கிறாள்.

நமது செபிக்கும் மனநிலை மாற்றப்பட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. கடவுளிடத்தில் ஏராளமான விண்ணப்பங்களை எழுப்புகிறோம். நிச்சயம் இது மகிழ்ச்சியடையக்கூடிய ஒன்று. ஏனென்றால், ஒவ்வொரு விண்ணப்பங்களையும் ஆண்டவரிடத்தில் எழுப்புவது, நமது விசுவாசத்தின் வெளிப்பாடு. அந்த வகையில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அதே வேளையில் கவலை தரும் செய்தி என்னவென்றால், நாம் கேட்டது போல கடவுள் நடக்க வேண்டும் என்று நினைப்பது. இது அவிசுவாசத்தின் வெளிப்பாடு. நாம் எப்படிப்பட்ட மனநிலையோடு செபிக்க வேண்டும் என்பதை அன்னை மரியாள் கற்றுத்தருகிறாள்.

அன்னையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். அவளது வார்த்தைகளும், வாழ்வும் நமது ஆன்மீக வாழ்வின் ஊற்று. அன்னையைப் பற்றிக்கொண்டு நமது ஆன்மீக வாழ்வில் நடைபயின்றால், உண்மையில் நம்மால் மிகச்சிறந்த ஆன்மீக வாழ்வு வாழ முடியும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------

 

அன்னை மரியின் அமல உற்பவம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

லூர்து நகரில் பெர்னதத்துக்குக் காட்சி தந்தபோது, அன்னை மரியா தன்னைப் பற்றிச் சொன்னது: நாமே அமல உற்பவம். பெர்னதத் பங்குத் தந்தையிடம் சென்று தான் கண்ட காட்சிகளையெல்லாம் சொன்னபோது நம்பாத பங்குத் தந்தை, நாமே அமல உற்பவம் என்று அன்னை சொன்னதாக பெர்னதத் சொன்னபோதுதான் அந்தக் காட்சிகள் உண்மையானவை என்று நம்பினார். அன்னை மரியே தன்னைப் பற்றி வெளிப்படுத்திய இந்த இறையியல் உண்மையைத் திருச்சபையின் தொடக்க காலத்திலிருந்தே கிறித்தவர்கள் நம்பி ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கடவுளின் தாயாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மரியாவை இறைவன் தாயின் கருவிலேயே தூய்மை நிறைந்தவராக உருவாக்கினார் என்பதே இந்த விசுவாச சத்தியத்தின் பொருள். நாம் மாசற்றோராகவும், தூயோரகவும் அவர் திருமுன் நிற்க வேண்டுமென்று உலகம் தோன்றுமுன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்துவுக்குள் தேர்ந்துகொண்டார் (எபே 1:4) என்று இறைவார்த்தை கூறுகிறது. உலகம் உருவாகுமுன்பே கடவுள் நம் ஒவ்வொருவரையும் தேர்ந்துகொண்டாரென்பது உண்மையென்றால், நம் அனைவருக்கும் மாதிரியாக அன்னை மரியாவையும் உலகம் உருவாகும் முன்பே தூயவராக, சென்ம மாசற்றவராக, அமல உற்பவியாக இறைவன் தேர்ந்தெடுத்தார் என்பதில் எந்த வியப்பும், அதை நம்புவதில் எந்தத் தயக்கமும் இருக்க முடியாதல்லவா!

மன்றாடுவோம்: தூய்மையின் உறைவிடமே இறைவா, உமது திருமுன் தூயோராகவும், மாசற்றவராகவும் விளங்க எங்கள் அனைவரையும் நீர் தேர்ந்தகொண்டீரெ. உம்மைப் போற்றுகிறோம். அதற்கு முன்னோடியாக அன்னை மரியாவைத் தாயின் வயிற்றிலேயே மாசற்றவராகத் தேர்ந்துகொண்டீரெ. அதற்காக உம்மை வாழ்த்துகிறோம். நாங்கள் தூயவராக என்றும் வாழ எங்களுக்கு அருள் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

--------------------------

''வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப்பெற்றவரே வாழ்க!
ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார்'' (லூக்கா 1:28)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- அன்னை மரியாவை இயேசுவின் தாய் எனப் போற்றுகின்ற திருச்சபை அதே அன்னையைக் ''கடவுளின் தாய்'' எனவும் வாழ்த்திப் புகழ்கின்றது. கடவுளுக்கு நாம் அளிக்கின்ற ஆராதனையை நாம் மரியாவுக்கு வழங்குவதில்லை. ஏனென்றால் மரியா கடவுளின் படைப்பு. கடவுளுக்கு நிகரான நிலை அவருக்குக் கிடையாது. ஆனால் கடவுளின் திருமகனாகிய இயேசுவை அந்த அன்னை இந்த உலகிற்குப் பெற்றுத் தந்தார். எனவே, அவருக்குச் சிறப்பு மரியாதை செலுத்துவது பொருத்தமே என திருச்சபை கற்பிக்கிறது. வானதூதர் கபிரியேல் மரியாவுக்குத் தோன்றுகிறார். ''அருள்மிகப் பெற்றவரே'' என்று கூறி அவரை வாழ்த்துகிறார் (காண்க: லூக் 1:28). பழைய கத்தோலிக்க மொழிபெயர்ப்பில் ''அருள்நிறைந்தவளே, வாழ்க'' என்று இலத்தீன் பாடத்தின் நேர் தரவாக இருந்தது. புராட்டஸ்டாண்டு சபையினரின் பெயர்ப்பில் ''கிருபை பெற்றவளே, வாழ்க'' என்றுள்ளது. உண்மையிலேயே கடவுள் மரியாவுக்கு ஒரு சிறப்பான மாண்பை அளித்தார் என்பதில் ஐயமில்லை; அதற்கான விவிலிய ஆதாரமும் உள்ளது. ஆனால் கத்தோலிக்க திருச்சபை மரியாவைக் கடவுளின் நிலைக்கு உயர்த்தி வழிபடுகிறது என்று சிலர் குற்றம் காண்கிறார்கள். இவ்வாறு குற்றம் காண்பது சரியல்ல என்பதைச் சுட்டிக்காட்டியாக வேண்டும். அண்மையில் ஒரு வலைப்பதிவில் கண்டது இது: கேள்வி: ''மரியாளை வணங்கக் கூடாது (றழசளாippiபெ ஆயசல ளை ளin) என உரோமன் கத்தோலிக்கர்களுக்கு விளக்குவது எப்படி?'' இதற்கு தரப்படுகின்ற பதில்: ''இயேசு பூமிக்கு வர மரியாள் ஒரு பாத்திரமாக இருந்தாள். அவள் ஒரு பாக்கியமான பெண்தான். அதில் சந்தேகமில்லை. சோறு சமைக்க வேண்டுமென்றால் ஒரு பாத்திரம் (உழழமநச) தேவைப்படுகின்றது. சமைத்தப்பின்பு சோறுதான் சாப்பிட வேண்டும். பாத்திரத்தை (உழழமநச) அல்ல. மரியாள் பாத்திரம். இயேசு அந்த உணவு. மரியாளை வழிபடுவது பாத்திரத்தைக் கடித்துச் சாப்பிடுவது போன்று இருக்கிறது''.

-- மேலே தரப்பட்ட மேற்கோளிலிருந்து நாம் அறிவது என்ன? சிலர் கத்தோலிக்கர் பற்றி உண்மையிலேயே தவறான கருத்துக் கொண்டிருப்பது தெளிவாகவே தெரிகிறது. கத்தோலிக்கர் மரியாவைக் கடவுளாகக் கருதுவதும் இல்லை, நம் மீட்பரும் இடைநிலையாளருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கு நிகராக மரியாவைக் கொள்வதும் இல்லை. இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-1965) இந்த உண்மையை அழகாக எடுத்துரைக்கிறது. திருச்சபை வழக்கில் கடவுளுக்கு நாம் அளிக்கின்ற வழிபாடு ''ஆராதனை'' (யனழசயவழைn) எனவும் மரியாவுக்கு நாம் அளிக்கின்ற மரியாதை ''வணக்கம்'' (எநநெசயவழைn) எனவும் கலைச்சொற்களால் குறிக்கப்படுகின்றன. இதோ வத்திக்கான் சங்கம் தரும் போதனை: ''திருச்சபை மரியாவைத் தனிப்பட்டதொரு வணக்கத்தால் (எநநெசயவழைn) தக்க காரணத்துடன் பெருமைப்படுத்துகிறது. ஏனெனில்...இவர் கடவுளின் தூய்மைமிகு தாய் ஆவார். தூய கன்னியை தொடக்க முதலே, நம்பிக்கை கொண்டோர் 'கடவுளின் தாய்' என்றழைத்து வணங்கினர்... திருச்சபையில் என்றும் இருந்துள்ள இவ்வணக்கம் உண்மையிலேயே தனிப்பட்டது; மனிதரான வாக்குக்கும் தந்தைக்கும் தூய ஆவியார்க்கும் நம் அளிக்கும் ஆராதனையிலிருந்து (யனழசயவழைn) உள்ளியல்பிலேயே இது வேறுபட்டது; இந்த ஆராதனையை (யனழசயவழைn) இவ்வணக்கம் (எநநெசயவழைn) மிகச் சிறந்தவிதமாய் ஊக்குவிக்கும் எனலாம்'' (திருச்சபை, எண் 66).

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனின் தாயாக நீர் தேர்ந்தெடுத்த அன்னை மரியாவிடம் துலங்கிய ஆழ்ந்த நம்பிக்கை எங்கள் வாழ்விலும் விளங்கிட அருள்தாரும்.

 

 

''கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' (லூக்கா1:37)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கிறிஸ்து பிறந்த விழாவை டிசம்பர் மாதம் 25ஆம் நாம் கொண்டாடுகிறோம். அதற்கு சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன்னர், மார்ச் 25ஆம் நாள், இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியைத் திருச்சபை நினைவுகூர்கிறது. கடவுளின் தூதர் மரியாவிடம் சென்று, அவர் கருவுற்று ஒரு மகனைப் பெறுவார் என அறிவிக்கிறார் (லூக் 1:26-33). திருமண ஒப்பந்தம் ஆகியிருந்தும் கணவரோடு கூடி வாழாதிருந்த மரியா, ''இது எப்படி நிகழும்?'' என்று கேட்ட கேள்விக்கு வானதூதர் அளித்த பதில்: ''கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' (லூக் 1:37) என்பதாகும். மனிதர் பல திறமைகளைப் பெற்றிருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய திறமைக்கு ஒரு எல்லை உண்டு. எவ்வளவுதான் அறிவுத் திறன் கொண்டிருந்தாலும் மனிதரால் கூடுமான சாதனைகள் அளவுக்கு உட்பட்டவையே. ஆனால் ''கடவுளால் எல்லாம் கூடும்''. இவ்வாறு கடவுள் வல்லமை மிக்கவர் என நாம் கூறும்போது இரு அடிப்படையான உண்மைகளை வலியுறுத்துகின்றோம். முதலில், கடவுள்தாம் நம்மை உருவாக்கியவர். எனவே, நாம் கடவுளின் படைப்புகள் என்பதாலும் கடவுள் நம்மைப் படைத்தவர் என்பதாலும் மனிதர் ஒருபோதுமே கடவுளைப் போல வல்லமை மிக்கவர்களாக மாறிட இயலாது. இரண்டாவது, கடவுள் விரும்பினால் நம்மை மனித நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்ல இயலும். இதையே நாம் மீட்பு என்கிறோம். அதாவது, கடவுள் நம்மீது இரக்கம் கொண்டு, தம் ஒரே மகனை நம் மீட்பராக அனுப்பி, நம்மைத் தம் வாழ்வில் நிறைவாகப் பங்குபெற அழைத்துள்ளார். இது கடவுள் ஆற்றிய அரும்செயலாகும்.

-- எனவே, மனிதரால் இயலாதது ஒன்றுமில்லை என நாம் கூறலாமா? கடவுளின் அருளை நாம் பெறும்போது நாம் கடவுளின் நிலைவாழ்வில் பங்கேற்பதால் நாம் ஒருவிதத்தில் கடவுள் தன்மையைப் பெறுகிறோம். இதனால் மனித நிலை தன் நிறைவைப் பெறுகிறது. நாமும் கடவுளின் வல்லமையால் திடம் பெறுகிறோம். எனவே நாமும் தூய பவுலோடு சேர்ந்து, ''எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு'' எனக் கூறலாம் (பிலி 4:13). நம்மை உறுதிப்படுத்துகின்ற கடவுளோடு நாம் எப்போதும் இணைந்திருந்தால் நம் வாழ்விலும் அதிசய செயல்கள் நிகழும்.

மன்றாட்டு
இறைவா, உம் திருவுளத்தை நிறைவேற்ற எங்களுக்கு அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நம் அன்னை மரியாவின் விசுவாச அறிக்கை இது. இன்று தான் அறிக்கையிட்டதை தன் வாழ்வின் இறுதிவரையிலும் வாழ்ந்து காட்டினாள். இந்த விசுவாச அறிக்கையின் அடிப்படையில் தன் வாழ்க்கை முழுவதும் கட்டி எழுப்பினாள். அவர் வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் வலுவூட்டி, வழிநடத்திச் சென்றது இந்த விசுவாச அறிக்கை.

தன் விசுவாச அறிக்கை குருட்டு நம்பிக்கை அல்ல; மாறாக ஆழ்ந்த அறிவுப்பூர்வமானது என்பதை மரியா தன் பலவேறு கேள்விகளில் உறுதிப்படுத்துகிறார். வானதூதரின் வாழ்த்தில் மயங்கிவிடவில்லை. மிகப்பெரிய பதவியிலும் அசந்துவிடவில்லை. தன் கேள்விகளைக் கேட்கிறார். சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறார். வானதூதரால் சொல்லப்பட்ட செய்தியின் சான்றுகளை உறுதிசெய்கிறார். அறிவுப்பூர்வமாகச் சில உண்மைகளைக் கண்ட பின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஆண்டவனின் ஆற்றலுக்கு தன்னை அர்ப்பணிக்கிறாள். இவ்வாறு விசுவாசத்தற்கு விளக்கம் தருகிறார் அன்னை மரியா.

ஆகவே விசுவாசம், கடவுள் நம்பிக்கை இவை மூட நம்பிக்கை அல்ல. அறிவில் ஆரம்பமாகி ஆண்டவனின் அருளில் நிறைவடைவது.முழுமையாக அதன் காரண காரியங்களை அறிவுப்பூரவமாகத் தெறிந்துகொண்ட காரணத்தால்,தன் வாழ்வின் எல்லாச் சூழலிலும் குறிப்பாக நிரபராதியான தன்அன்பு மகனை இளம் வயதில் குற்றவாளியாகச் சிலுவையில் அறைந்து கொன்றதை அமைந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்ள முடிந்தது.இது விசுவாசம். 'நான் ஆண்டவரின் அடிமை' என்றதன் வாழ்க்கை வடிவம். இந்த விசுவாச அறிக்கையும் வாழ்வும் நம் அன்னையை உலகம் போற்றும் பெண்ணாக, விண்ணக அரசியாக உயர்த்தியுள்ளது. அந்த அன்னையை வேண்டுவோம். அருள் நிறைந்த மரியே வாழ்க.. .. ..இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்