முதல் வாசகம் லூக்கா 1:39-45 திருவருகை காலம் நான்காம் வாரம் டிசம்பர் 21 ஆம் நாள் நற்செய்தி வாசகம்� ------------------------- டிசம்பர் – 21 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். பழைய காலம் நாம் சோ்ந்தே வாழ்ந்தோம். நம் உறவினர்களை தினமும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. இப்போது உள்ள காலக்கட்டத்தில் நாம் தனித்தீவுகளாக வாழ்கிறோம். நம் சொந்தக்காரர்கள் பெரும்பாரும் நம் அருகில் இருப்பதில்லை. தொழில், படிப்பு காரணமாக வேறு இடங்களில் வாழ்கிறார்கள். இப்படி வாழும் நாம் நம் சொந்தங்களின் சுகம் பற்றி விசாரிக்க நேரம் ஒதுக்குவதில்லை. இன்றைய வாசகத்தில் அன்னை மரியாள் நமக்கு மாதிரியாக திகழ்கிறாள். சொந்தங்களை நாடி தேடி போகச் சொல்கிறார். நலம் விசாரிக்க சொல்கிறார். செய்வோம் இரண்டு வழிகளில்: 1. பரிசோடு பார்ப்போம் 2. அலைபேசியில் ஆனந்தம் கொடுப்போம் மனதில் கேட்க… மனதில் பதிக்க… இனிமைமிகு பாடல் 2: 8 – 14 இறைவனுடைய அன்பிற்காக காத்திருக்கிறவருடைய ஏக்கத்தை, இந்த வாசகம் நமக்கு நினைவுபடுத்துகிறது. இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவை, அன்பை சிறப்பாக, மனித மொழியில் எடுத்துரைக்கிற உணர்வுப்பூர்வமான கவிதை வடிவத்தில் இந்த பகுதி இடம்பெற்றுள்ளது. மனிதன் உணர்வுப்பூர்வமானவன். இந்த உலகத்தில் எவ்வளவோ பொருட்கள் இருந்தாலும், அந்த பொருட்களில் மனிதன் நிறைவைக் காண முடியாது. ஏனென்றால், அதில் மனிதனுக்கு நிறைவு இல்லை. அப்படியென்றால், மனிதனுக்கு நிறைவைத் தருவது எது? மனிதனுக்கு நிறைவைத் தருவது இறையனுபவம். இறையனுபவம் தான் மனிதனுக்கு நிறைவைத் தரும். மனிதனுக்கு எவ்வளவு தான் செல்வங்கள் இருந்தாலும் அது அவனுக்கு நிறைவைத் தராது. மாறாக, கடவுளைத் தேடுவதும், இறையனுபவத்திற்காக முயற்சி எடுப்பதும் தான், அவனுக்கு நிறைவைத்தரும். அந்த அனுபவம் புதுமையான அனுபவம். அது எளிதானது அல்ல. அதே வேளையில் எட்ட முடியாததும் அல்ல. அதனை அடைவதற்கு நாம் முயற்சி எடுக்க வேண்டும். மனித உணர்விற்குள்ளாக மறைந்து கிடக்கும் அன்பு உணர்வுகள், நிச்சயம் இறைவனை அடைவதற்கான வழிகள் என்று சொன்னால் அது மிகையாகாது. நம்முடைய வாழ்வில் நாம் எப்போதும் இறையனுபவத்திற்காக முயற்சி எடுக்க வேண்டும். நம்முடைய முயற்சியில் நாம் எப்போதும் சோர்ந்து போய்விடக்கூடாது. அது நமக்கு கடினமான இருந்தாலும், நம்மால் நிச்சயம் முடியும் என்கிற எண்ணம் நமக்கு எப்போதும் வேண்டும். அப்படி இருந்தால் நாமும் இறையனுபவத்தைப் பெறலாம்.
----------------------------------------------------- திருப்பாடல் 33: 2 – 3, 11 – 12, 20 – 21 இறைவன் இந்த மனுக்குலம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறவர். எல்லாரும் எல்லாமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று விரும்புகிறவர். இந்த மனுக்குலம் தவறுகளைச் செய்தாலும், மன்னித்து, அவர்கள் மீட்பு பெற திட்டங்கள் தீட்டி, அதனை உறுதியாகச் செயல்படுத்துகிறவர். இறைவன் எப்படியெல்லாம் இந்த மானிட சமுதாயத்தின் மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதையும், அந்த அன்பு அவர் தீட்டுகிற திட்டங்களில் எப்படியெல்லாம் வெளிப்படுகிறது என்பதையும் இந்த திருப்பாடல் நமக்கு எடுத்துச் சொல்கிறது. ஆண்டவரைத் தன் கடவுளாக கொண்ட இனம் பேறுபெற்றது, என்று சொல்வது இஸ்ரயேல் மக்களைக் குறிப்பதாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்களை கடவுள் தேர்ந்தெடுத்தார். அவர்களை தன்னுடைய மக்களாக பேணிப்பாதுகாத்தார். இஸ்ரயேல் மக்களும் கடவுளின் அன்பை தங்களுடைய வாழ்வில் முழுமையாக உணர்ந்திருந்தனர். அவர்களும் இறைவன் தங்களை அவருடைய சொந்த இனமாக தேர்ந்தெடுத்ததை எண்ணிப்பார்த்து, மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்ததால், அவர்களுக்கு யாதொரு பொல்லாப்பும் நெருங்காதபடிக்கு, இறைவன் அவர்களைப் பாதுகாத்தார். அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொடுத்தார். ஆக, இஸ்ரயேல் மக்கள் தவறுகள் செய்தாலும், ஆண்டவர் அவர்களுக்காக மீட்பின் திட்டத்தைத் தீட்டி, எப்படியெல்லாம், நம்பிக்கையை வளர்த்தெடுத்தார் என்பது இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம். ஆண்டவர் மீது முழுமையான நம்பிக்கை வைக்கிறபோது, அவர் நம்மை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார். நமக்கு துணையும், கேடயமுமாக இருந்து அவரது வலக்கரம் கொண்டு பாதுகாப்பார். அவரது திருப்பெயரில் நம்பிக்கை வைக்கிறவர்களாக வாழ்வோம்.
------------------------------------------------- எலிசபெத்தம்மாளின் தாழ்ச்சி ”என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” என்று எலிசபெத்தம்மாள் அன்னை கன்னிமரியாளைப் பற்றி சொல்கிறார். இதே தொணியில் நாம் இயேசுவின் வாழ்வில் செய்த ஒரு புதுமையிலும் பார்க்கிறோம். நூற்றுவர் தலைவன் தன்னுடைய பிள்ளைக்காக மன்றாடுகிறபோது, ”நீர் என் இல்லத்திற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்” என்று சொல்கிறார். இந்த இரண்டு வார்த்தைகளும் கிட்டத்தட்ட ஒரே தொணியில் உதிர்க்கப்பட்ட வார்த்தைகள். இந்த இரண்டு வார்த்தைகளும் நமக்கு ஒரே செய்தியைத்தான் தருகின்றன. எலிசபெத்தம்மாள் அன்னை மரியாளை விட வயதில் மூத்தவர். குழந்தை இல்லாமல் இருந்து, இப்போது குழந்தை பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார். இதுநாள் வரை இந்த சமூகம் அவரை, “மலடி“ என்ற பட்டப்பெயர் வைத்து அழைத்து வந்திருக்கிறது. தாங்க முடியாத வேதனையை நிச்சயம் எலிசபெத்தம்மாள் அனுபவித்திருப்பார். இவ்வளவு கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், தான் மகிழ்வதற்கு எவ்வளவோ காரியங்கள். காரணங்கள் இருந்தாலும், தாழ்ச்சியோட தன்னை விட வயதில் சிறியவராக இருக்கக்கூடிய அன்னை கன்னிமரியாளை, உள்ளத்தில் கபடு இல்லாமல் போற்றகிறார். இது அவரது தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தைக் குறிப்பதாக இருக்கிறது. அந்த தாழ்ச்சி தான், எலிசபெத்தம்மாளின் அடையாளமாகவும் இருக்கிறது. நமது வாழ்விலும் நாம் எப்போதும், குறிப்பாக வாழ்விலும், தாழ்விலும் நம்பிக்கை உள்ளவர்களாக, கடவுளைப்போற்றக்கூடியவர்களாக, எலிசபெத்தம்மாளைப் போல சிறப்பான வாழ்க்கை வாழககூடியவர்களாக, தாழ்ச்சி நிறைந்தவர்களாக வாழ அருள் வேண்டுவோம்.
---------------------------------------- இறைவனின் அருள் இறைவனுடைய அருளைப்பெறுவது என்பது மிகப்பெரிய பேறு. அதற்கு ஈடுஇணை இந்த உலகத்திலே எதுவும் கிடையாது. அதற்கு மேல் பெறக்கூடிய சிறப்பு இந்த உலகத்திலே இல்லை. மரியாளுக்கு கடவுளுடைய வார்த்தை அறிவிக்கப்பட்டபோது, இத்தகைய மகிழ்ச்சி அவளுள் நிறைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால், வானதூதர் அவளைப்பார்த்து, ”அருள்மிகப்பெற்றவரே!வாழ்க!” என்று வாழ்த்துகிறார். கடவுளுடைய அருளை அன்னை மரியாள் பெற்றிருக்கிறாள் என்பதுதான் இதனுடைய பொருள். ஆக, அந்த வார்த்தைகள் அன்னை மரியாளுக்கு சொல்ல முடியாத அளவுக்கு ஆனந்தத்தைக் கொடுத்திருக்கும். அதே வேளையில், கடவுளின் அருள் மற்றொரு அனுபவத்தையும் தாங்கியதாக இருக்கும். அதுதான் மரியாளின் இதயத்தை வாளாக ஊடுருவ இருப்பதாகும். கடவுளின் அருள் கொடுக்கப்படுவது பெற்றுக்கொண்டு வைத்திருப்பதற்கு மட்டும் அல்ல. அது வாரி வழங்கப்படுவதற்காக கொடுக்கப்படுகிறது. அதில், நாம் நமது வாழ்வை, தியாகம் செய்ய வேண்டியது வரலாம். இழப்புகளைச் சந்திக்கலாம். ஆனால், கடவுளின் அருளைப்பெறுவதற்கு, எதையும் இழப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்பதுதான், அன்னை மரியாளின் வாழ்வாக இருந்தது. இன்றைக்கு நற்செய்தியிலே, எலிசபெத்தம்மாளின் வயிற்றில் இருந்த குழந்தை, மரியாளின் வருகையை கண்டுணர்ந்தது. வயிற்றில் இருக்கக்கூடிய குழந்தை உணர்கிறது என்றால், எந்த அளவுக்கு அன்னை மரியாள் அருளால் நிரப்பப்பட்டிருந்தாள் என்பதை, நாம் புரிந்து கொள்ளலாம். நாமும் பல வேளைகளில் கடவுளின் அருளால் நிரப்பப்படுகிறோம். பெற்றுக்கொள்கிற அருளை, மற்றவர்களுக்கும் கொடுப்பதுதான், கொடுக்கப்படுவதின் நோக்கம். மரியாள் அதைச்செய்து முடிக்கிறாள். அதனால் வரக்கூடிய இழப்பையும் தாங்க முன்வருகிறாள். நமக்குக் கொடுக்கப்படுகிற அருளை நாம் எப்படி பாதுகாக்கிறோம்? பகிர்ந்து கொள்கிறோம்? சிந்திப்போம்.
---------------------------------------------------------- மரியாளைக் கண்டதும் எலிசபெத்தம்மாள் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டதாகப் பார்க்கிறோம். யார் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட முடியும்? யாரிடத்தில் தூய ஆவி தங்குவார்? பழைய ஏற்பாட்டில் எத்தனையோ மனிதர்கள் வாழ்ந்தபோது, குறிப்பிட்ட மனிதர்களை மட்டும், தூய ஆவியானவர் ஏன் ஆட்கொள்கிறார்? கடவுளின் வார்த்தையை அறிவிக்க அவர்களை மட்டும் ஏன் பயன்படுத்துகிறார்? அவர்களுக்குரிய சிறப்பு குணங்கள் என்ன? இவற்றைப்பார்ப்போம். எலிசபெத்தம்மாளைப் பற்றி அதிகமான செய்திகள் நற்செய்தி நூலிலே இடம்பெறவில்லை. அவர் செக்கரியா என்கிற குருவின் மனைவி. மரியாளின் உறவினர். பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் வாழ்ந்து வந்தாள். ஆனால், எழுதப்படாத ஒன்று, அவளது உள்ளம் தூய்மையான உள்ளம். இறைவனுக்கு பிரமாணிக்கமுள்ள உள்ளம். பெண் என்கிறவள் யூத சமுதாயத்தில் பொருளாகப் பார்க்கப்பட்டவள். குழந்தை இல்லாத மலடிகள் கடவுளின் சாபத்தைப்பெற்றவர்களாகப் பார்க்கப்பட்டனர். அவள் கடவுள் மீது கோபம் கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கிறது. மரியாள் மீது பொறாமை கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் இருக்கிறது. இருந்தாலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, தூய்மையான எண்ணத்தோடு அவள் வாழ்ந்து வந்தாள். தூய ஆவியானவர் குடிகொள்ளும் இதயம் தூய்மையான உள்ளம். நமது உள்ளம் தூய்மையாக இருக்கிறபோது, அது கடவுள் தங்கும் இடமாக மாறுகிறது. அதிலிருந்து தூய்மையான வார்த்தைகளும், செயல்களும் பிறப்பெடுக்கின்றன. எண்ணங்களும் தூய்மைனதாக மாறுகின்றன. நமது உள்ளத்தைத் தூய்மையாக வைத்து, தூய ஆவியின் இல்லிடமாக மாற்றுவோம்.
---------------------------------------------------------- உறவின் நேரம் ! இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே, அன்னை மரியாவும், அவர் உறவினர் எலிசபெத்தும் சந்தித்துக்கொண்ட காட்சியை நற்செய்தியாளர் வர்ணிக்கும் விதமே அலாதிதான். அந்த உறவின் வேளையில் அங்கே நிகழ்ந்த நேர்நிலை நிகழ்வுகளை வரிசைப்படுத்தினால் நாம் வியப்படையத்தான் செய்வோம்: (1) விரைவு (2) வாழ்த்து. (3) மகிழ்ச்சியின் துள்ளல் (4) தூய ஆவியின் ஆட்கொள்தல் (5) ஆசி வழங்கல். ஆம், அன்னை மரி நமக்கெல்லாம் உறவின் மாதிரியாகத் திகழ்கிறார். உண்மையான, ஆழமான உறவில் விரைவான அன்பின் செயல்பாடு நிகழவேண்டும். உறவில் வாழ்த்தும், ஆசியும் பரிமாறிக்கொள்ளப்பட வேண்டும். உண்மையான மகிழ்ச்சி நிலவ வேண்டும். அனைத்துக்கும் மேலாக, அங்கே தூய ஆவியின் துணை வேண்டும். நம்முடைய உறவுகளில் இந்த ஐந்து அம்சங்களும் இருக்கின்றனவா என்று நம்மை ஆய்வு செய்வோம். அத்துடன், இந்த கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, இந்த ஐந்து அம்சத் திட்டத்தைக் கடைப்பிடித்து, நமது உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வோம். எடுத்துக்காட்டாக, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அனுப்பும்போது,வாழ்த்தும், ஆசியும், மகிழ்ச்சியும், தூய ஆவியின் செபமும் இணைத்து அனுப்புவோம். அந்த வாழ்த்து நம் உறவை ஆழப்படுத்தும். மன்றாடுவோம்: உறவுகளின் நாயகனே ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். இந்தக் கிறிஸ்து பிறப்புக் காலத்தில்;, எங்களுடைய உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ளவும், ஆழப்படுத்திக்கொள்ளவும் உமது அருளைத் தந்தருளும். நாங்கள் அன்பு செய்வோரை வாழ்த்தி, ஆசி கூற, உமது ஆவியின் அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். -- அருள்தந்தை குமார்ராஜா தாயால் குழந்தைக்கு ஆசி ! இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே, நேற்றைய வாசகத்தையே இன்றும் தியானிக்க இன்னொரு வாய்ப்பு. எலிசபெத்து அன்னை மரியாவை வாழ்த்தும்போது, நீர் ஆசி பெற்றவர். உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே என்று வாழ்த்துகிறார். இந்த வார்த்தைகளை அவர் தாமாகக் கூறவில்லை. தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டுக் கூறியதாகத் தெளிவாக எழுதியுள்ளார். எனவே, தூய ஆவியால் தூண்டப்பட்டே எலிசபெத்து இந்த வார்த்தைகளைச் சொல்லி மரியாவை வாழ்த்தினார் என்பதில் ஐயமில்லை. இங்கே முதலில் தாயும், அந்தத் தாயால் குழந்தையும் இறைவனின் ஆசி பெறுகின்றார்கள் என்று எலிசபெத்து அறிக்கை இடுவதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். இது ஓர் இயல்பான உண்மைதானே! ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் ஆசி. அந்த ஆசியை இறைவன் தாய்க்கு வழங்குகிறார். அந்தத் தாயை அதே இறைவன் அந்தக் குழந்தைக்கும் ஓர் ஆசியாக வழங்குகிறார். எனவே, இயேசுவால் மரியாவும், மரியாவால் இயேசுவும் இறைத் தந்தையின் ஆசியைப் பெறுகின்றனர் என்பதில் ஐயமேதுமில்லை. எனவே, ஒவ்வொரு குழந்தையும், தாய்க்காக நன்றி கூறவேண்டும். ஏனென்றால், நம் தாயே நமக்கொரு ஆசி. அந்தத் தாயால்தான் நாம் பெற்ற அனைத்து ஆசிகளும். தாயில்லாமல் நாமில்லை. தாயில்லாமல் நமக்கு இறைவனின் ஆசியுமில்லை. இது நமது மண்ணகத் தாய்க்கும் பொருந்தும். நமது மண்ணக, விண்ணகத் தாயாம் அன்னை மரியாவுக்கும் பொருந்தும். அன்னை மரியாவால் நம் அடைந்த எண்ணிலடங்கா ஆசிகளுக்காக நன்றி கூறுவோமா! மன்றாடுவோம்: தாயும் தந்தையுமான இறைவா, ஒவ்வொரு தாயின் வழியாகவே நீர் பிள்ளைகளை ஆசிர்வதிக்கின்றீர். வளப்படுத்துகின்றீர். என் மண்ணகத் தாய்க்காக நன்றி கூறுகிறேன். அந்தத் தாயின் வழியாக நீர் தந்த ஆசிகளுக்காக, கொடைகளுக்காக நன்றி கூறுகிறேன். அதுபோலவே, என் விண்ணகத் தாயான அன்னை மரியவாவுக்காகவும் நன்றி கூறுகிறேன். அந்தத் தாயின் பரிந்துரையால் நீர் என்மீது பொழிந்து எண்ணிலடங்கா ஆசிகளுக்காக, அருள்கொடைகளுக்காக நன்றி கூறுகிறேன். ஒரு தாயினும் மேலாக என்னை அன்பு செய்வதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். -- அருள்தந்தை குமார்ராஜா
----------------------- ''அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அன்பார்ந்த இணைதள நண்பர்களே! -- தான் கருத்தரித்த குழந்தையைப் பத்து மாதம் வயிற்றில் சுமந்து ஈன்றளிக்கின்ற பேறு பெண்களுக்கு மட்டுமே உரிய அனுபவம். பேறுகால வேதனையும் மகிழ்ச்சியும் என்னவென்பதை மரியாவும் எலிசபெத்தும் தங்கள் சொந்த அனுபவத்திலிருந்து அறிந்தார்கள். அந்த இரு பெண்களின் வாழ்விலும் கடவுளின் அருள்செயல் தெளிவாக வெளிப்பட்டது. என்றாலும் அவர்கள் குழந்தைப் பேறு அடைந்ததில் வேறுபாடுகளும் உண்டு. எலிசபெத்து வயதில் முதிர்ந்தவர்; குழந்தை பெற இயலாதவர். குழந்தைப் பேறு தனக்குக் கிடைக்கப் போவதில்லை என்றிருந்த அவருக்குக் குழந்தை பிறக்கிறது கடவுளின் அருள்செயலால். ஆனால் மரியாவோ இளம் வயதுக் கன்னிப் பெண். உரிய காலத்தில் தமக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும் என அவர் நினைத்திருப்பார். ஆனால் கணவனோடு கூடி வாழும் முன்னரே அவருக்குக் குழந்தைப் பேறு கிடைக்கிறது கடவுளின் அருள்செயலால். மரியாவின் வாழ்வில் கடவுள் வல்லமையோடு செயல்பட்டார் என்பதற்குச் சான்று முதிர்ந்த வயதில் எலிசபெத்து குழந்தைப் பேறு பெற்றதாகும் (காண்க: லூக் 1:36). எலிசபெத்து மரியாவின் வயிற்றில் கருவாக இருந்த குழந்தை ''ஆசி பெற்றது'' எனப் போற்றுகிறார்; மரியாவை ''என் ஆண்டவரின் தாய்'' என வாழ்த்துகிறார் (காண்க: லூக் 1:42-43). அதுபோலவே, எலிசபெத்துக்கு மகனாகப் பிறந்த திருமுழுக்கு யோவான் மரியாவுக்கு மகனாகப் பிறந்த இயேசுவைப் பார்த்து, ''என்னைவிட வலிமை மிக்க ஒருவர் வருகிறார்'' எனச் சான்று பகர்வார் (காண்க: லூக் 3:16). மன்றாட்டு --அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
''பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்'' (லூக்கா 1:42) அன்பார்ந்த இணைதள நண்பர்களே! -- இயேசுவை இவ்வுலகில் பெற்றுத் தந்த பெருமையுடைத்தவர் மரியா. அவரைத் திருச்சபை கன்னித் தாய் எனப் போற்றுகின்றது. கடவுளின் ஆவி வல்லமையோடு இறங்கிவந்ததால் மரியா கடவுளின் வார்த்தையைத் தம் வயிற்றில் தாங்கிக் குழந்தை இயேசுவாக ஈன்றளித்தார். எனவே, மரியாவை நாம் ''கடவுளின் தாய்'' எனவும் போற்றுகின்றோம். இத்தகைய உயர்ந்த பேற்றினை மரியா பெற்றதால் அவர் உண்மையிலேயே பெண்களுக்குள் ஆசிபெற்றவர்தாம் (காண்க: லூக் 1:42). மரியாவின் உறவினராகிய எலிசபெத்து உரைத்த வாழ்த்துரையை நாமும் மரியாவுக்கப் புகழாரமாகச் சூடுகின்றோம். மரியா ஆசிபெற்றவர் என்பதன் பொருள் என்ன? கடவுள் மரியாவைத் தம் மகனின் தாயாகத் தேர்ந்துகொண்டார் என்பதே இங்குக் குறிக்கப்படுகின்ற ஆழ்ந்த பொருள். இவ்வாறு தாய்மைப் பேறு எய்திய மரியா நம் தாயாகவும் இருக்கின்றார். நாம் மரியாவைப் போன்று கடவுளை முற்றும் நம்புகின்ற போது கடவுளின் செயல் நம்மிலும் வல்லமையோடு துலங்கும். கடவுளின் திருவுளத்தை நாம் ஏற்போம்; அதன்படி செயல்படுவோம். -- மரியா ஆசிபெற்றவர் என்பதன் இன்னொரு பொருள் அவர் தம் மகன் இயேசுவின் சீடராக மாறினார் என்பதாகும். சீடர்கள் எப்பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என இயேசு போதித்தார். அப்பண்புகளை மரியா தலைசிறந்த விதத்தில் கொண்டிருந்தார். அவர் தம்மை முழுவதும் கடவுளிடம் கையளித்தார். நாமும் அவ்வாறு செய்யும்போது உண்மையிலேயே பேறுபெற்றவர் ஆவோம். பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் மரியா சிறந்த முன்மாதிரியாக உள்ளார். அதாவது, மரியாவிடம் துலங்கிய நற்பண்புகள் மனிதர் அனைவருக்கும் பொருந்துவனவே. பெண்களோடு பெண்ணாக மரியா உள்ளார் என்பதால் அவருக்கும் பெண்களுக்கும் இடையே ஒரு சிறப்பு உறவு உள்ளது என்றாலும், மரியா மனித இனத்திற்கே ஒரு சிறந்த முன்னோடியாக இருக்கின்றார். மனிதர் எவ்வாறு கடவுளை முழுமையாக ஏற்று வாழ முடியும், வாழ வேண்டும் என்பதற்கு மரியா எடுத்துக்காட்டாக அமைகிறார். மன்றாட்டு --அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
|