முதல் வாசகம்
திருவருகை காலம்-நான்காம் வாரம், டிசம்பர் 23
நற்செய்தி வாசகம் ------------------------- திருப்பாடல் 25: 4 – 5ஆ, 8 – 9, 10 & 14 யார் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்? யாருக்கு மீட்பு நெருங்கி வருகிறது? உலகம் எப்படி இருந்தாலும், இந்த உலகப்போக்கிலே வாழாமல், கடவுள் பயத்தோடு ஒரு சில மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த உலகம் பரிகாசம் செய்கிறது. இப்படி விழுமியங்களோடு வாழக்கூடிய இவர்கள், வாழ்க்கையில் என்ன சாதித்துவிட்டார்கள்? என்கிற ஏளனம் அவர்களது பேச்சில் தெரிகிறது. இப்படி மற்றவர்கள், இந்த உலகப்போக்கின்படி வாழ்கிறவர்கள் பரிகசிக்கிறவர்களை, தலைநிமிர்ந்து நிற்கும்படியும், அவர்களுக்கு மீட்பு அண்மையில் இருக்கிறது என்றும், திருப்பாடல் ஆசிரியர் தெரிவிக்கிறார். ஆண்டவருடைய எல்லா நலன்களையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் இந்த திருப்பாடலின் வரிகளில் வெளிப்படுகிறது. இன்றைக்கு பலர் நம்பிக்கையைப் பெறுகின்றனர். ஆனால், அந்த நம்பிக்கையில் நிலைத்திருக்கிறார்களா? என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் ஒரு சில துன்பங்கள் வருகிறபோது, துவண்டு போகிறார்கள். வாழ்வின் வேதனையான தருணங்களில் பெற்றிருக்கிற நம்பிக்கையை வெகு எளிதாக இழந்துவிடுகிறார்கள். இது குற்றப்படுத்துவதற்காக அல்ல, மாறாக, யதார்த்தமான உண்மை. இப்படிப்பட்ட துன்பமான தருணங்களில் இறைவனின் அருளுக்காக மன்றாடுவோம். இறைவனின் ஆசீரை வேண்டிநிற்போம் என்று ஆசிரியர் அழைப்புவிடுக்கின்றார். இறைவனில் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையில் உறுதியாக இருக்க நாம் முயற்சி எடுக்க வேண்டும் என்பது, இந்த திருப்பாடல் வழியாக நாம் அறிந்து கொள்கிற செய்தி. எத்தகைய இடுக்கண் நம்மை வருத்தினாலும், அவையும் கடந்து போகும் என்கிற நம்பிக்கையை, இறைவன் மீது வைப்போம். வாழ்வில் நல்லது நடக்கும்.
----------------------------------------------- குழந்தை பிறப்பு ஒரு குழுந்தையின் பிறப்பு சுற்றி வாழக்கூடிய அனைவருக்கும் மகிழ்ச்சியைத்தரக்கூடியதாக இருக்கிறது. இன்றைய நற்செய்தியில் இந்த மகிழ்ச்சியின் செய்திதான் நமக்கு அறிவிக்கப்படுகிறது. எலிசபெத்து ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்தார். வயது முதிர்ந்த தருணத்திலும் கடவுளின் இரக்கத்தால் ஒரு குழந்தைக்கு தாயாகக்கூடிய பாக்கியத்தைப் பெறுகிறாள் எலிசபெத்து. அவள் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, அவரோடு சேர்ந்து அவருடைய உறவினர்களும் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த மகிழ்ச்சிக்கு பல காரணங்களை நாம் சொல்லலாம். முதலாவதாக, கடவுளின் வாக்குறுதி நிறைவேறியுள்ளது. எலிசபெத்து முதிர்ந்த வயதில் கருவுற்றிருந்தாலும், அவரைச்சுற்றி வாழ்ந்தோர் அதனை அதிசயமாக எண்ணியிருந்தாலும், குழந்தை பிறக்கக்கூடிய வரையில், நிச்சயம் எலிசபெத்துக்கு மிகப்பெரிய போராட்டம் தான், வாழ்க்கையாக இருந்திருக்கும். முதிர்ந்த வயதில் பெற்றெடுக்கக்கூடிய குழந்தை, தாய்க்கும் சேய்க்கும் எந்தவித ஆபத்துமில்லாமல் இருக்க வேண்டும். கடவுளின் வார்த்தையின்படி அனைத்தும் நடக்க வேண்டும். அதனை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கக்கூடிய அனைவருக்கும், அது விசுவாச அனுபவமாக இருக்க வேண்டும் என்ற போராட்டம் இருந்திருக்கும். இரண்டாவதாக, ஒரு குழந்தையின் பிறப்பு எப்போதுமே இந்த சமுதாயத்திற்கு மகிழ்ச்சிதான். ஓர் உயிர் தோன்றியிருக்கிறது என்கிற உற்சாகம், நிச்சயம் அனைவருக்கும் மகிழ்ச்சியைத்தான் கொடுத்திருக்கும். இன்றைக்கு குழந்தைகளை கருவிலேயே அழிக்கக்கூடிய போக்கு, இன்றைய இளைய தலைமுறையினரிடத்தில் அதிகமாக பரவிக்கொண்டிருப்பது வேதனைக்குரியது. ஒரு குழந்தையின் அழுகை பிறக்கிறபோதே கேட்க வேண்டுமே தவிர, கருவிலேயே கேட்பதாக இருக்கக்கூடாது. குழந்தை பிறப்பு, நமக்கு மகிழ்ச்சியின் அனுபவமாக இருக்கட்டும்.
---------------------------------------------------- நன்றியுணர்வு நன்றி மறப்பது நல்லதன்று என்று வள்ளுவர் கூறுகிறார். நமது வாழ்வில் நாம் பல மனிதர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால், நன்றியுணர்வு என்கிற வார்த்தையும், அதற்கான பொருளும் இன்றைய சமூகத்தில் ஒரு பொருட்டாக நினைக்கப்படுவதில்லை. செய்த நன்றியை மறப்பது, நாம் தற்கொலை செய்துகொள்வதற்கு சமம். நன்றி என்ற வார்த்தைக்கு, இன்றைய நற்செய்தி வாசகத்தல் எடுத்துக்காட்டுக்களாக செக்கரியாவும், எலிசபெத்தும் சித்தரிக்கப்படுகிறார்கள். எலிசபெத்தம்மாளுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லை. குழந்தை பெறக்கூடிய வயதையும் கடந்துவிட்டாள். அந்த தருணத்தில் கடவுளின் அருள் அவளுக்கு கிடைக்கிறது. குழந்தை பாக்கியத்தைப் பெற்றுக்கொள்கிறாள். தான் பெற்றெடுக்கப்போகும் குழந்தைக்கு, யோவான் என்று பெயரிட பணிக்கப்படுகிறார்கள். பொதுவாக, குழந்தைக்கான பெயரை தாயோ, தந்தையோ தேர்ந்தெடுப்பார்கள். அந்த பெயர்களில் தங்களின் நெருக்கமான உறவுகளின் பெயரையோ அல்லது தந்தை, தாயின் பெயரையோ வைப்பது இன்றைக்கும் நம் மத்தியில் காணப்படுகிறது. அதேபோல செக்கரியாவின் உறவினர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், செக்கரியாவும், எலிசபெத்தம்மாளும் கடவுள் செய்த நன்மைகளுக்கு, நன்றியுணர்வோடு இருக்கிறார்கள். அதே பெயரைச் சூடுகிறார்கள். தேவை என்றால், கடவுளை நாடுவதும், தங்களது தேவை தீர்ந்தவுடன் கடவுளை மறந்துவிடுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. எல்லா தருணத்திலும் நாம் கடவுளுக்கும், நமக்கு நன்மை செய்தவர்களுக்கும் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும். ஒருபோதும் மற்றவர் செய்த நன்மைகளை மறந்துவிடக்கூடாது.
---------------------------------------------------------- கடவுளுக்கு நமது நன்றி பாலஸ்தீனத்தில் குழந்தையின் பிறப்பு மகிழ்ச்சியின் கொண்டாட்டமாகக் கருதப்பட்டது. குழந்தை பிறக்க இருக்கிற நேரத்தில், ஏராளமான நண்பர்களும், உறவினர்களும் இல்லத்தில் கூடியிருப்பர். குழந்தை பிறப்பு செய்தி அறிவிக்கப்பட்டதும், அனைவரும் மகிழச்சியாய் ஆர்ப்பரிப்பர். ஆனால், அதில் ஒரு வேறுபாடும் காணப்பட்டது. ஆண் குழந்தை என்றால், வீட்டு வாயிலில் நிற்கக்கூடிய இசை மீட்டுகிறவர்கள் உட்பட அனைவரும், ஆடிப்பாடி மகிழ்வர். பெண் குழந்தை என்றால், துக்கம் கொண்டாடுவது போல, அமைதியாக அனைவரும் கலைந்து செல்வர். எனவே தான், பாலஸ்தீனத்திலே ஒரு சொல் வழக்கு இருந்தது, ”ஆண் குழந்தையின் பிறப்பு மட்டில்லா மகிழ்ச்சியையும், பெண் குழந்தையின் பிறப்பு மட்டில்லா வருத்தத்தையும் கொண்டுவரும்”. எலிசபெத் ஆண் குழந்தையைப்பெற்றெடுத்ததால், உண்டான மகிழ்ச்சியின் அளவை நாம் நிச்சயமாக உணர முடியும். ஆண் குழந்தை பிறந்தால் எட்டாவது நாளில், குழந்தைக்கு விருத்தசேதனம் சடங்கு நிறைவேற்றப்படும். பெண் குழந்தை என்றால், குழந்தை பிறந்த முப்பது நாட்களில் பெயர் சூட்டப்படும். குழந்தையின் பெயரை தெரிவு செய்வது சாதாரணமானது அல்ல. அதற்கு அளவுகடந்த முக்கியத்துவம் தரப்பட்டது. குழந்தை பிறப்பு நிகழ்வின் அடிப்படையிலோ, குழந்தையின் தோற்றத்தை வைத்தோ, பெற்றோரின் பெயரை அடிப்படையாக வைத்தோ, குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது. ஆனால், செக்கரியாவும், எலிசபெத்தும் முற்றிலும் மாறுபட்ட “யோவான்“ என்ற பெயரை வைத்தது, மற்றவர்களுக்கு ஆச்சரியத்தைத்தந்தது. “யோவான்” என்றால், கடவுளின் பரிசு என்பது பொருள். இந்தப்பெயர் கடவுளால் தரப்பட்ட பெயர். கடவுள் தங்களுக்கு கொடுத்த கொடைக்கு, நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற விதம்தான், செக்கரியாவையும், எலிசபெத்தையும் இந்த பெயரைச்சூட்டச்செய்தது. கடவுளுக்கு நாமும் நன்றியுணர்வு உள்ளவர்களாக இருப்போம். அவர் செய்து வருகின்ற அளப்பரிய செயல்களுக்கும், வல்லமைக்கும் நாம் என்றென்றும் கடன்பட்டவர்களாக இருப்போம்.
-------------------------------------------------------- குழந்தையின் பெயர் ! இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே, ஒரு பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை என்ன பெயர் சொல்லி அழைத்தாலும், அதன் இயல்பு மாறாதே என்று வாதிடுபவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும், விவிலியப் பார்வையில் பெயர் என்பது பொருள் வாய்ந்தது. ஒரு மனிதனின் ஆளுமையையும், பணியையும், அவரது வாழ்வின் இலக்கையும் குறித்து நிற்பது. எனவேதான், விவிலிய மாந்தர் பலருக்கும் கடவுளே பெயர் சூட்டுவதைப் பார்க்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் அவ்வாறே செக்கரியா-எலிசபெத் தம்பதியரின் குழந்தைக்கும் இறைத் திருவுளத்தின்படியே பெயர் சூட்டப்படுகிறது. தாயின் வயிற்றிலேயே இறையருளைப் பெற்றதாய் இருந்தது அக்குழந்தை. இறைமகன் இயேசுவைத் தன் திருவயிற்றில் சுமந்த மரியாவின் வாழ்த்தொலி கேட்டு, துள்ளி மகிழ்ந்தது அக்குழந்தை. பின் வரும் நாள்களில் ஆண்டவர் இயேசுவின் முன்னோடியாய் பணி செய்து, இறையருளை அறிவிக்கும் குரலொலியாய் இருக்கப் போவது அக்குழந்தை. எனவே, அக்குழந்தை யோவான் என அழைக்கப்பட வேண்டும் என்பதே இறைத் திருவுளம். அதன்படியே, அதன் தாய், தந்தை இருவருமே யோவான் என்னும் பெயரையே முன்மொழிகின்றனர். நமது குழந்தைகளுக்கும் நாம் நல்ல பெயர்களைச் சூட்ட வேண்டும். கவர்ச்சியான, உச்சரிக்க இனிமையான பெயர்கள் என்று தெரிவுசெய்யாமல், வாழ்வின் இலக்கைச் சுட்டும், ஆளுமையை அறிவிக்கும் பொருளுள்ள நல்ல பெயர்களைக் கொண்டு அவர்களை அழைப்போம். நாமும் நமது பெயருக்கேற்ப வாழ்ந்து பெற்றோருக்கும், இறைவனுக்கும் பெருமை சேர்ப்போம். மன்றாடுவோம்: தாயின் வயிற்றிலேயே எங்களைப் பெயர் சொல்லி அழைத்த தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறேன். நீர் எனக்குத் தந்த அழைத்தலுக்கேற்ப வாழ்ந்து நான் உம்மையும், என் பெற்றோரையும் பெருமைப்படுத்த எனக்கு அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். -- அருள்தந்தை குமார்ராஜா --------------------
''செக்கரியா என்ற அதன் பெயரையே குழந்தைக்குச் சூட்ட இருந்தார்கள். அன்பார்ந்த இணைதள நண்பர்களே! -- திருச்சபை வழக்கில் புனிதர்கள் நினைவாகத் திருவிழாக்கள் கொண்டாடுகிறோம். பொதுவாக இயேசு பிறந்த நாள் தவிர வேறு யாருக்கும் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவதில்லை; கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தி உயிர் துறந்த புனிதர்களின் இறந்த நாளே அவர்களுடைய ''விண்ணகப்'' பிறந்த நாளாகக் கொண்டாடப்படும். ஆனால் அன்னை மரியாவும் திருமுழுக்கு யோவானும் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் இருவருக்குமே பிறந்த நாள் கொண்டாட்டம் திருச்சபையில் உண்டு. மரியா பிறந்த நாள் செப்டம்பர் 8ஆம் நாளும், திருமுழுக்கு யோவான் பிறந்த நாள் ஜூன் 24ஆம் நாளும் கொண்டாடப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் மரியாவின் பிறப்பிலும் யோவானின் பிறப்பிலும் கடவுளின் வல்லமை தனிப்பட்ட முறையில் வெளிப்பட்டதுதான். பிள்ளைகளுக்குப் பெயரிடும்போது அவர்களுடைய முன்னோரின் பெயரைத் தேர்ந்தெடுக்கும் பழக்கம் நிலவியது. முதுவயதில் பிறந்த குழந்தை ஆதலால் செக்கரியா என்று தந்தையின் பெயரையே குழந்தைக்கும் சூட்டலாம் என எல்லாரும் எண்ணிய வேளையில் அதன் தாய் மட்டும் ''குழந்தைக்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்'' (லூக் 1:60) எனக் கூறுகிறார். வானதூதரும் அவ்வாறே ''யோவான்'' என்னும் பெயரைக் குழந்தைக்குச் சூட்ட வேண்டும் எனக் கேட்டிருந்தார் (லூக் 1:13). ஆனால், வானதூதர் அறிவித்த செய்தியை நம்ப மறுத்ததால் ''பேச்சற்றவராய்'' இருந்த செக்கரியா எழுது பலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, ''இக்குழந்தையின் பெயர் யோவான்'' என எழுதுகிறார் (லூக் 1:63). இவ்வாறு, வானதூதர் வழியாக அறிவிக்கப்பட்டு, எலிசபெத்தால் ஏற்கப்பட்ட பெயரை செக்கரியாவும் ஏற்ற பிறகுதான் ''செக்கரியாவின் வாய்திறந்து நா கட்டவிழ்ந்தது'' (லூக் 1:64). மன்றாட்டு
''அப்பொழுதே செக்கரியாவின் வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அன்பார்ந்த இணைதள நண்பர்களே! -- திருமுழுக்கு யோவான் பிறந்த நிகழ்ச்சியும் இயேசு பிறந்த நிகழ்ச்சியும் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. இருவரும் தம் பெற்றோருக்குக் கடவுளின் கொடையாகப் பிறந்தவர்களே. யோவான் எனத் தம் மகனுக்குப் பெயர் சூட்டவேண்டும் என்று செக்கரியா தெரிவித்தார். அந்த நேரத்தில் அவருடைய உள்ளத்திலிருந்த சுமை நீங்கியது; அவருடைய உள்ளம் முழுமையாகக் கடவுளுக்குப் பணிந்தது. எனவே, லூக்கா ''செக்கரியாவின் வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்'' என விரித்துக் கூறுகிறார். மரியாவும் அதிசயமான விதத்தில் கருத்தரித்து ஒரு குழந்தையைப் பெறுவார் எனவும் அவருக்கு இயேசு என்னும் பெயர் பெயரிடப்பட வேண்டும் எனவும் வானதூதரிடமிருந்து செய்தி வந்தது. மரியா அச்செய்தியைப் பணிவோடு ஏற்றார். ஆனால் செக்கரியா முழுமையான நம்பிக்கை கொள்ளவில்லை; அவருடைய உள்ளத்தில் ஐயம் முற்றிலுமாக மாறிடவில்லை. அதனால் செக்கரியா வாய் பேசும் திறன் இழந்தார். எப்போது அவர் கடவுளைத் தம் உள்ளத்தில் வரவேற்று, அவருடைய திருவுளத்திற்குத் தம்மை முற்றிலுமாகக் கையளித்தாரோ அந்த நேரத்தில் அவருடைய வாய் கடவுளைப் போற்றும் திறன் பெற்றது. -- நம் நாவும் சில வேளைகளில் கட்டுண்டுப் போய்விடுகிறது. நாம் கடவுளை முழுமையாக ஏற்று, அவருடைய வல்லமையில் நம்பிக்கை கொள்ளத் தயங்குகின்ற போது நாம் முழுமையான சுதந்திரத்தைப் பெறுவதில்லை. நம்மில் சில அடிமைத்தனங்கள் மேலோங்கிவிடுகின்றன. அந்த அடிமைத் தளைகளைத் தகர்த்தெறிந்துவிட்டு, நாம் விடுதலை பெற்று, கடவுளுக்குப் புகழ் செலுத்தும்போத நம் வாழ்க்கையின் குறிக்கோளை நாம் நிறைவேற்றுகிறோம்எனலாம். அடிமைத் தளைகளிலிருந்து நாம் விடுதலை பெற்றதும் அதன் முதல் விளைவாக நாம் பெறுகின்ற கனி ''கடவுளைப் புகழ்தல்'' என்பது கருதத்தக்கது. கடவுளிடமிருந்து நாம் இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்பவர்களாக மட்டுமல்லாமல் கடவுள் ஏற்கெனவே நமக்குச் செய்த, ஒவ்வொரு நாளும் செய்துவருகின்ற நன்மைகளை நாம் நினைவுகூர்ந்து அவரைப் போற்றிப் பரவ வேண்டும். மன்றாட்டு --அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
|