அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்துக்கள் !!!!

கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தங்கி
உங்களை நிறைவாழ்வை நோக்கி வழிநடத்துவாராக!

பணி. மரியதாஸ்

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9: 2-4,6-7


காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர். ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ `வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்' என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலைபெயராது உறுதிப்படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்�

திபா 96: 1-2. 2-3. 11-12. 13

பல்லவி: இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே,
ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். -பல்லவி

2 அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.
3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;
அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி

11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக;
கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்;
அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். -பல்லவி

13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;
நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். -பல்லவி



இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 11-14


மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்து, கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப் பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.





நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 2:10-11 அல்லேலூயா, அல்லேலூயா! பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் நமக்காகப் பிறந்திருக்கிறார். அல்லேலூயா.

டிசம்பர் 24 இரவுத் திருப்பலி - லூக்கா 2:1-14

கிறிஸ்து பிறப்பு பெருவிழா

நற்செய்தி வாசகம்

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-14

அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான யோசேப்பும் தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. மரியா தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்'' என்றார். உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!'' என்று கடவுளைப் புகழ்ந்தது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

25.12.2017 – லூக்கா 2: 1 – 14
திருப்பாடல் 96: 1 – 2, 2 – 3, 11 – 12, 13
”ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்”

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுவதற்கு திருப்பாடல் ஆசிரியர் நமக்கு அழைப்புவிடுக்கிறார். கடவுளுக்கு ஏன் புதிய பாடலை பாட வேண்டும்? பாடல்கள் என்பது இறைவனின் மகிமையையும், வல்ல செயல்களையும், நம்முடைய நன்றியுணர்வையும் வெளிப்படுத்தக்கூடியவை. அவை ஏற்கெனவே பெற்ற இறையனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பெற்றவை. இப்போது, புதிய இறையனுபவத்தைப் பெற இருக்கிறோம். எனவே, இந்த புதிய இறையனுபவத்தின் அடிப்படையில் எழுத, ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார்.

இப்போது பெறுகிற புதிய இறையனுபவம் என்ன? அது தான், கடவுள் மீட்பரை, மெசியாவை நமக்கு அனுப்புகிற அனுபவம். கடவுளே தன் மக்களை மீட்பதற்காக மண்ணுலகிற்கு இறங்கி வருகிற அனுபவம். எப்போதெல்லாம் மக்கள் அடிமைத்தனத்தின் கட்டுக்களில் இருந்தார்களோ, அப்போதெல்லாம் அவர்களை மீட்பதற்கு அரசர்களையும், இறைவாக்கினர்களையும் ஆண்டவர் பயன்படுத்தினார். அவர்கள் வழியாக தன்னுடைய வல்ல செயல்களை நிறைவேற்றினார். ஆனால், இப்போது இறைவனே வர இருக்கிறார். அவரது வல்ல செயல்களை நாம் கண்கூடாக பார்க்க இருக்கிறோம். அது ஒரு புதிய இறையனுபவம். அந்த இறையனுபவத்தைப் பெறுவதற்கு நாம் கொடுத்துவைத்தவர்கள். எனவே, ஆண்டவரிடமிருந்து பெறுகிற இறையனுபவத்தை, மற்றவர்கள் பெறும் வண்ணம் நாம் சிறப்பாக பாடல்களை எழுதி, இறைவனைப் போற்ற வேண்டும்.

இறைவனின் அனுபவம் ஓர் இனிமையான அனுபவம். அந்த அனுபவத்தை நாம் பெற்றிருந்தால், அதை நம்மோடு வைத்துக் கொள்ளக்கூடாது. மற்றவர்களும் பெறும் வண்ணம், அதனை பாடல்களாக, இறைவனின் மகிமையை வெளிப்படுத்தும் வடிவங்களில் நாம் வெளிப்படுத்த வேண்டும். அந்த பணியை நாம் நம்பிக்கையோடு செய்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கிறிஸ்துமஸ் பிறப்பு விழா

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றோம். இந்த கொண்டாட்டங்கள் நமக்கு தேவையா? அதற்காக நாம் செலவழிக்கக்கூடிய பணம் வீணாக விரயமாகிறதா? இந்த கொண்டாட்டங்களும் வெறும் சடங்கு தானா? கிறிஸ்து பிறப்பு விழா நம்மில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது? இது போன்ற கேள்விகளை எழுப்பி, கிறிஸ்து பிறப்பு விழாவைப்பற்றிய செய்தியை, சிந்திக்கலாம் என்று நினைக்கிறேன்.

கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி, ஏராளமான பணத்தை நாம் தேவையில்லாமல் வாரி இறைத்தாலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தோடு பல நல்ல செயல்பாடுகளும் நல்ல உள்ளங்களால் முன்னெடுக்கப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. குறிப்பாக, ஆதரவற்ற இல்லங்களுக்கு பல நல்ல மக்கள் சிறப்பான உதவிகளைச் செய்து, இந்த திருவிழாக்களின் நோக்கத்தை இன்னும் உரக்க, இந்த உலகத்திற்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆக, ஒருபுறம் கொண்டாட்டம் என்கிற பெயரில் தேவையில்லாமல் பணத்தை வீண், ஆடம்பர செலவு செய்துகொண்டிருந்தாலும், மறுபுறம் உதவிகளும் பெருகிக்கொண்டிருக்கின்றன. நாம் கொண்டாடக்கூடிய கிறிஸ்து பிறப்பு விழா எப்படி இருக்கப்போகிறது? என்பதுதான், நம் முன்னால் இருக்கக்கூடிய கேள்வி.

கிறிஸ்துமஸ் பெருவிழாவை வெறும் சடங்கோடு, ஆடம்பரங்களோடு கொண்டாடிவிட்டுச் செல்லாமல், ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்யக்கூடிய விழாவாக இதைக் கொண்டாடினால், அது தான் இந்த விழாவின் சிறப்பு. அதுதான், அதுதான் பாலன் இயேசுவுக்கு நாம் கொடுக்கும் உண்மையான கிறிஸ்துமஸ் பரிசு.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

கிறிஸ்துமஸ் பெருவிழா

கிறிஸ்துமஸ் பிறப்பு விழா ஏன் டிசம்பர் 25 ம் நாள் கொண்டாடப்பட வேண்டும்? ஆங்கில வருடத்தை “கிறிஸ்து பிறப்பிற்கு முன்” மற்றும் ”கிறிஸ்து பிறப்பிற்கு பின்” என்றுபிரித்திருக்கிறோம். அப்படிப்பார்த்தால், இயேசு பிறந்தது ஜனவரி முதல் தேதி தானே. பின் ஏன் கிறிஸ்துமஸ் பிறப்புவிழாவை டிசம்பர் 25 ம் நாள் கொண்டாடுகிறோம்?

கிறிஸ்து பிறப்பு விழாவைப்பற்றி இரண்டு வாதங்களை, திருவழிபாட்டு அறிஞர்கள் முன்வைக்கின்றனர். 1. சமய வரலாறு. 2. கணக்கீடு.  முதல் கூற்றுப்படி, உரோமைப் பேரரசன் அவ்ரேலியுஸ் கி.பி.274 ம் ஆண்டு, சூரிய கடவுளுக்கு தனது ஆட்சி பொறுப்பில் உள்ள அனைத்து இடங்களிலும் ஒரு விழா கொண்டாடப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். அதனை டிசம்பர் 25 ம் நாள் கொண்டாட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். ஆனால், அவனுடைய உள்நோக்கம் விழா கொண்டாடுவது கிடையாது. மாறாக, இந்த விழா மூலம், மக்கள் அனைவரையும் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் ஒரே கலாச்சாரத்தின் கீழ், தனது ஆட்சியை பலப்படுத்தவே ஆகும். கிறிஸ்தவர்களை உரோமை கிரேக்க விழா மோகத்திலிருந்து, காக்கும் முயற்சியாக உரோமைத் திருச்சபையானது கிறிஸ்து பிறப்பு விழாவையும் இதே நாளில் கொண்டாட ஆணை பிறப்பித்தது. இதுதான் சமய வரலாறு பற்றிய கூற்று.

இரண்டாவது கூற்றுப்படி, பழைய திருத்தந்தையர்கள் மற்றும் புனிதர்களின் மறையுரைகளிலிருந்து மார்ச் 12 ம் தேதி இயேசுவின் பாடுகள் கொண்டாடப்பட்டது, என்பதை நாம் அறியலாம். இதன்படி, மார்ச் 25 ம் நாள் தான் மரியாளுக்கு, கபிரியேல் அதிதூதர் மங்கள வார்த்தை சொல்லியிருக்க வேண்டும். பழங்கால முறைப்படி மனித வாழ்வின் தொடக்கத்தையும், முடிவையும் ஒரேநாளில் முழு எண்ணிக்கை வருமாறு கணக்கிட்டனர். இந்த வாதத்தின்படி, மார்ச் 25 ல் இயேசு கருவில் உருவானார். அதிலிருந்து சரியாக, ஒரு குழந்தை முழுவளர்ச்சி பெறும் காலத்தைக் கணக்கிட்டால், டிசம்பர் 25 ல் இயேசு பிறந்திருக்க வேண்டும். இரண்டு சிந்தனைகளுமே வேறு வேறாக இருந்தாலும், அடிப்படையில் அவைகள் சொல்ல வருவது, டிசம்பர் 25 ம் தேதி, தொடக்கத்தில் இயேசு பிறப்பு விழாவாகக் கொண்டாடப்பட்டது என்பதுதான். இயேசு பிறப்பு விழா நமது வாழ்வில் என்றும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் நிறைவாகத் தரட்டும். அனைவருக்கும் இயேசு பிறப்பு நல்வாழ்த்துகள்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

எளிமையான இறைவன்

உரோமைப் பேரரசு காலத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு அரசின் பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. முதலாவதாக, எத்தனை வரிகள் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளவும், இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்கும் இது பயன்படுத்தப்பட்டது. யூதர்களுக்கு இராணுவத்தில் சேர விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. எனவே, வரிமுறைக்காக அவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பதினான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட்டது.

நாசரேத்துக்கும், பெத்லகேமுக்கும் இடையேயான தூரம் ஏறக்குறைய 8 மைல்கள். வழக்கமாக பயணம் செய்வோர் தங்குவதற்கென ஆங்காங்கே சத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சத்திரத்தில் தங்குவதற்கு இடமும், பயணம் செய்கின்ற விலங்குக்கான தீவனமும், சமைப்பதற்கு சிறிது வைக்கோலும் மட்டும்தான் கொடுக்கப்படும். உணவு பயணியரைச் சார்ந்தது. மரியாவும், யோசேப்பும் சத்திரத்தில் தங்க வந்திருந்தபோது, அது பயணியர்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. எனவே, அவர்கள் தங்குவதற்கு கிடைத்த இடம் மாட்டுக்கொட்டகை. அந்த இடத்தில்தான் கடவுளின் குழந்தை பிறக்கிறது. இந்த உலகத்தையே படைத்துப் பராமரிக்கிற இறைவனின் மகனுக்கு கிடைத்த இடம் எளிய இடம்தான். சற்று ஆழமாக சிந்தித்தால், இதுவும் கூட நமக்கு சிறந்த பொருள் தருவதாக அமைகிறது. நமது இறைவன் எளிமையை விரும்புகிற இறைவன். பகட்டையோ, ஆடம்பத்தையோ அல்ல என்பதையே இது காட்டுகிறது.

இறைவனை ஆடம்பரத்திலோ, பெரும் கொண்டாட்டங்களிலோ அல்ல, மாறாக, எளிமையிலும், எளியவர்களிடத்திலும் தான் பார்க்க முடியும். ஏழைகளிலும், எளியவர்களிலும் இறைவனைக்காண முற்படுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இம்மானுவேல் இறைவன் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

கிறிஸ்து பிறப்பு விழா மகிழ்ச்சியி;ன் விழா! இந்த நாளில் உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
இந்த விழாவின் இனிமையில் ஏராளமான சிந்தனைகள் நம் இதயத்தில் எழுகின்றன.
ஆனாலும், ஒரே ஒரு சிந்தனையை மனதில் இருத்தி இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

பிறக்கவிருக்கும் குழந்தை இம்மானுவேல் என்று அழைக்கப்படும் என்று வானதூதர் அறிவிக்கின்றார். இம்மானுவேல் என்றால் இறைவன் நம்மோடு என்று நற்செய்தியாளர் விளக்கமும் தருகின்றார். ஆம், இதுதான் இன்றைய நற்செய்தி. நற்செய்தி நூலின் சுருக்கமும் இதுதான். இறைவன் நம்மோடு என்றும் வாழ்கிறார் என்பதன் ;அடையாளமாகவே ஒரு குழந்தையின் வடிவில் இன்று நம் முன் தோன்றுகிறார். எனவே, விரக்தி அடையவேண்டாம். நம்பிக்கை இழக்க வேண்டாம். எத்தனை சோதனைகள், துன்பங்கள், வேதனைகள் வந்தாலும், காப்பாற்றவே முடியாத சூழலாக இருந்தாலும்கூட, நாம் தனியாக இல்லை. இறைவன் நம்மோடு இருக்கிறார் என்னும் உண்மை நம்பி;க்கையும், ஆறுதலும் தருகின்றது. கோபன்Nஉறகனில் நடக்கும் சுற்றுச்சூழல் மாநாடு உலகின் எதிர்காலம் பற்றிய பல அச்சங்களை எழுப்பியுள்ளது. யாருமே இந்த உலகைக் காப்பாற்ற முடியாது போன்ற பெரும் அவநம்பிக்கை அலைகள் அங்கே எழுகின்றன. இருப்பினும்கூட, மனித முயற்சிகளோடு இறைவனின் அருளும் இணையும்போது இந்த உலகைச் சுற்றுச்சூழல் மாசுகளிலிருந்து மட்டுமல்ல, பாவ மாசுகள், தன்னல மாசுகள், அடிமைத்தனங்கள், பிளவுகள், அமைதியின்மை அனைத்திலுமிருந்தும் நாம் காக்கப்பட முடியும். காரணம், இறைவன் நம்மோடு இருக்கின்றார். இந்த நம்பிக்கையோடு இந்த கிறிஸ்து பிறப்பு விழாவை மகிழ்வுடன் கொண்டாடுவோம்.

மன்றாடுவோம்: எங்களுக்காக மனுவுருவெடுத்த அன்பின் குழந்தையே, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் தனியாக இல்லை. இறைவன் எங்களோடு இருக்கிறார் என நம்பிக்கை தரப் பிறந்த தெய்வீக பாலனே, உமக்கு நன்றி கூறுகிறோம். உமது பிறப்பால் உலகின் அவநம்பிக்கை அகன்று, நம்பிக்கையின் ஒளி தோன்றுவதாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்;.

-- அருள்தந்தை குமார்ராஜா

------------------------

 

''உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து,
'உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக!
உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!'
என்று கடவுளைப் புகழ்ந்தது'' (லூக்கா 2:13-14)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசு இவ்வுலகில் ஒரு சிறு குழந்தையாகப் பிறந்தார் என்பது கிறிஸ்து பிறப்பு விழாவின் மையாமாக உள்ளது. அக்குழந்தை மனித இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தெய்வக் குழந்தை. அதே நேரத்தில் மனித இனத்தோடு தம்மை ஒன்றித்துக்கொண்ட கடவுளின் வெளிப்பாடு. மரியாவின் மகனாகப் பிறந்த குழந்தையைக் கண்டு வணங்கிட இடையர்கள் செல்கிறார்கள். இடையர்கள் அக்காலத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் இருந்த வகுப்பினர். உலகத்தை மீட்க வந்த கடவுளுக்கு வணக்கம் செலுத்திட இவ்வுலகப் பெருமக்கள் வரவில்லை, மாறாக, இவ்வுலகம் கடையர் என யாரைக் கருதுகிறதோ அவர்களே கடையராக வந்து பிறந்து குழந்தையை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அவர்கள் இயேசுவுக்கு வணக்கம் செலுத்தியபோது விண்ணகமும் அவர்களோடு சேர்ந்துகொண்டது என லூக்கா விளக்குகிறார். விண்ணகத்தில் கடவுளின் பணியாளர்களாக விளங்குவோர் அவருடைய தூதர்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்த இசைத்த பண்புயர் கீதம் ''உன்னதத்தில்...'' எனத் தொடங்குகின்ற புகழ்ப்பாடல் ஆகும். அதில் கடவுளின் மாட்சி போற்றப்படுகிறது. அதே நேரத்தில் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்கின்ற மனிதருக்குக் கடவுளின் அமைதியும் வாக்களிக்கப்படுகிறது,

-- கடவுளின் மாட்சியும் மனிதரின் வாழ்வில் நிலவுகின்ற அமைதியும் தொடர்புடையனவா? கடவுளே மனிதராக மாறிவிட்டதால் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே நெருங்கிய பிணைப்பு உருவாகிவிட்டது. அப்பிணைப்பின் விளைவுதான் மனித வாழ்வில் கடவுள் வழங்குகின்ற அமைதி. இந்த அமைதி வெறும் உளவியல் சார்ந்த சலனமற்ற நிலையைக் குறிப்பதில்லை. இந்த அமைதி கடவுளிடமிருந்து நமக்கு வருகின்ற ஒரு கொடை. கடவுளே தம்மை நம்மோடு பகிர்ந்துகொள்வதின் அடையாளம் இந்த அமைதி. இதை நம் வாழ்வில் ஒரு கொடையாக நாம் ஏற்கும்போது கடவுளின் மாட்சி ஆங்கே துலங்கி மிளிரும். மனிதரின் நிறை வாழ்வுதான் கடவுளின் மாட்சி என்றொரு கூற்று உண்டு. உண்மையிலேயே நாம் மனிதத்தை மதித்து வாழ்ந்தால் கடவுளின் உடனிருப்பு அங்கே ஒளிவீசும். அந்த ஒளியே கடவுளின் மாட்சியாக நம்மிடையே துலங்கி மிளிரும்.

மன்றாட்டு
இறைவா, எங்களுக்கு உம் அமைதியைத் தந்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------------------

உணவாய் வந்த தெய்வம்

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

பசி வந்திட பற்றும் (பத்தும்) பறந்துவிடும். அவன் பற்றியிருப்பதும் அவனைப் பற்றியிருப்பதும் ஓடிவிடும். பட்ட மரத்துப் பறவை போல ஒட்டி உறவாடிய உற்றமும் சுற்றமும் நட்பும் நங்கையும் பறந்துவிடுவார்கள். மனிதனின் எந்த பசியாயினும் நிலை இதுதான். உடல் பசி, உள்ளத்து வேட்கை, ஆன்மீக வரட்சி எதுவாயினும் எல்லாம் பறந்துவிடும், எல்லோரும் பறந்துவிடுவர்.

பசி வந்தவுடன் இதுகாறும் காத்த வந்த பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்கம் எல்லாம் காற்றில் பறந்துவிடுகிறது. அவன் களவு செய்யவும் கொலை செய்யவும் தயாராகிறான். தன் மானத்தையும் பறக்கவிடும் அவல நிலைக்கு ஆளாகிறான். ஆகவே பசி, மனிதனின் புனித நிலையை இழக்கச் செய்கிறது, மனிதனை பாவியாக்குகிறது, மனிதனை மிருகமாக்குகிறது.

மனிதன் முழு மனிதனாக வாழ விரும்பிய இறைவன் தன் ஒரே மகனை மக்களின் எல்லா வித பசியையும் போக்கும் உணவாக இவ்வுலகுக்கு அனுப்பினார். நற்கருணையை ஏற்படுத்தி, "இது என் உடல். இதைப் பெற்று உண்ணுங்கள்' என்றபோதும், 'இது என் இரத்தம். இதை வாங்கிப் பருகுங்கள்' என்றபோதும் மனிதனின் எல்லாப் பசியையும் போக்க, தான் வந்துள்ளேன் என்பதை உறுதிப்படுத்துகிறார். "கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது" (யோவா 6'33)."வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது"(யோவா 6'35)

தன் வாழ்வின் இறுதி நாளில் மானிடர் அனைவருக்கும் வாழ்வு தர, தன்னுடலைக் கல்வாரியில் உடைத்து (சமைத்து) இனிய முடிவில்லா வாழ்வு தரும் உணவாகக் கொடுக்க மானிட உடல்தாங்கி மனிதனாக இன்று பிறந்துள்ளார். அவர் பிறந்தது பெத்லகேம். "கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார்" (லூக்2'5). பெத்லகேம் என்;றால் "அப்பத்தின் வீடு' என்று பொருள்.ஆக இயேசு பிறந்த ஊரின் பெயர் "அப்பத்தின் வீடு'. பிறந்த பாலன் இயேசுவை உணவு உண்ணும் பாத்திரத்தில் வைத்துள்ளனர். "பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்" (லூக் 2'7) இப்பாலன் ஒருநாள் உணவாவான் என்பதை உணர்த்தும் விதமாக இந்நிகழ்ச்சியும் அமைந்துள்ளதை அறிய வருகிறோம்.

இந்த குழந்தையும் இந்த உணவும்தான் மனிதனுக்கு அமைதி தரவல்லது. இந்த குழந்தையும் நற்கருணை உணவும்தான் மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியது. நிலை வாழ்வை வழங்கவல்லது. மீண்டும் பற்றையும் பத்தையும் கொடுத்து, மனிதனாக, முழு மனிதனாக, புனிதனாக வாழ வைப்பது. வாருங்கள் பெத்லகேமுக்குப் போவோம். நிறைவோடு வாழ்வோம.

--: அருட்திரு ஜோசப் லியோன்