முதல் வாசகம்:

தூய யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5:5-13

5 இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?
6 நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை.
7 எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன.
8 தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை.
9 மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதை விட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார்.
10 இறைமகன்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர். ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர். ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை.
11 கடவுள் நமக்கு நிலை வாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று.
12 இறைமகனைக் கொண்டிருப்போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்; அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார்.
13 இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்து கொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்.

இது ஆண்டவரின் அருள்வாக்கு

பதிலுரைப் பாடல் திருப்பாடல் 147:12-13, 14-15, 19-20

பல்லவி: எருசலேமே உன் ஆண்டவரைப் போற்றுவாயாக

12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்;
உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். -பல்லவி

14 அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்;
உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.
15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்;
அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. -பல்லவி

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.
20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை;
அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது; அல்லேலூயா! -பல்லவி

நற்செய்திக்குமுன் வாழ்த்தொலி :
அல்லேலுயா அல்லேலுயா "இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்." அல்லேலுயா

 

 

லூக்கா 5:12-16

வெள்ளி


நற்செய்தி வாசகம்�

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 12-16


அக்காலத்தில் இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து, �ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்'' என மன்றாடினார். இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, �நான் விரும்புகிறேன்; உமது நோய் நீங்குக!'' என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று. இயேசு அவரிடம், �இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்'' என்று கட்டளையிட்டார். ஆயினும் இயேசுவைப் பற்றிய செய்தி இன்னும் மிகுதியாகப் பரவிற்று. அவரது சொல்லைக் கேட்கவும் தங்கள் நோய்கள் நீங்கி நலம் பெறவும் பெருந்திரளான மக்கள் அவரிடம் கூடிவந்துகொண்டிருந்தார்கள். அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டிவந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

இயேசுவின் பரந்த மனம்

இன்றைய நற்செய்தியில் இயேசுவைப் பார்த்து, தொழுநோயாளி, நீர் விரும்பினால் குணமாவேன் என்று சொல்கிறான். இயேசு தாமதிக்கவில்லை. உடனடியாக, “விரும்புகிறேன், குணமாகு“ என்று சொல்கிறார். இயேசு நாம் நோயிலும், துன்பத்திலும் அவதியுற வேண்டும் என்று ஒருநாளும் நினைத்தது இல்லை. நாம் நன்றாக  இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார். அவரே இந்த உலகத்திற்கு நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மனிதனாக வந்தார்.

நாம் குணம்பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறபோதெல்லாம், அவர் குணம் கொடுத்தார். ஓய்வுநாள் என்று கூட பார்க்கவில்லை. அதனால், தான் பலரது எதிர்ப்புக்களையும், ஏளனங்களையும் சந்திக்க வேண்டியது வரும், என்பது பற்றி அவர் கவலை கொள்ளவும் இல்லை. நன்மை என்றால் நினைத்தமாத்திரத்தில் அதை செய்து முடித்தார். பலவேளைகளில் நாம் கடவுள் எனக்கு துன்பத்தைக் கொடுக்கிறார். நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் கடவுள் தான் காரணம், என்று பதில் தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறபோது, கடவுளை பதிலாக நினைக்க ஆரம்பிக்கிறோம். ஆனால், அது உண்மையல்ல. கடவுள் நாம் அனைவரும் மகிழ்ச்சியாக, நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார். நமது வாழ்விலும் மற்றவர் நன்றாக இருக்க வேண்டும் என்கிற பரந்த மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொள்ள  அழைக்கப்படுகிறோம்.

இன்றைக்கு உலகம் சுருங்கிவிட்டது. உலகத்தோடு மனித மனங்களும் சுருங்கிவிட்டது. அடுத்த வீட்டில் என்ன நடந்தாலும், அடுத்த அறையில் கொலையே நடந்தாலும், நாம் பாதுகாப்பாக இருந்தால் மட்டும் போதும், என்கிற மோசமான மனநிலை இன்றைய சமுதாயத்தில் மலிந்துபோய்விட்டது. அந்த மனநிலை மாற்றம் பெற வேண்டும். நாம் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகளின் என்கிற பரந்த உணர்வை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இணையதள உறவுகளே

காலில் விழுவது பெரிய சாதனையோ சாமர்தியமோ அல்ல. விழுந்துகிடப்பவனை அள்ளி அணைத்து ஆளாக்கிவிடுவதுதான் சாதனையும் சாமர்தியமும்.அந்த தொழுநோயாளி காலில் விழுந்தான். அவன் நோயாளி. விழுவது அவன் இயல்பு. இன்று காலில் விழுவதும், விழுந்தவனை கண்டு கொள்ளாமல் இருப்பதும் கௌரவமாக மேடைகளில் அரங்கேறுகின்றன.

நீ அவர் காலில் விழ காத்திருப்பவர் அல்ல உன் தெய்வம். யாருடைய காலில் விழவும், கை நீட்டி காத்திருக்கும் நிலையைக் காணவும் கணமும் விரும்பாதவர். உடனே தன் கையை நீட்டி, தாங்கி, நல் வாழ்வுக்கு வழிநடத்துவார்.

அவரைக் காணும் முயற்சியல் உடனே இறங்குவோம். நம் கஷ்டங்கள் தலைக்குமேல் போகும்வரை காத்திருக்க வேண்டாம். உடல் முழுவதும் தொழுநோய் பரவிய பின் இயேசுவின் காலில் விழ காத்திருக்க வேண்டாம். என்றும் எப்பொழுதும் இயேசுவைக் காண்போம். அன்றே அப்பொழுதே அவர் நம்மைக் குணமாக்குவார்.

-ஜோசப் லீயோன்

 

விரும்புகிறேன் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மனிதன் இயேசுவைக் கண்டு “ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” எனக் கூற, இயேசு, “நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக” என்று சொல்லி அவரைக் குணமாக்கும் நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். நான் விரும்புகிறேன் என்று சொற்களின் மூலம் இயேசு ஒரு செய்தியை நம் அனைவருக்கும் தருகிறார். நாம் நலமுடன் வாழவேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பம். நாம் துன்புறவேண்டும் என்பதோ, நலமின்றி வாழவேண்டும் என்பதோ இறைவனின் திருவுளம் அல்ல. ஒரு தந்தையைப் போல, ஒரு தாயைப் போல இறைவன் நம்மை அன்பு செய்கிறார். எனவே, பிள்ளைகள் நலமோடு, மகிழ்வோடு வாழவேண்டும் என்று பெற்றோர் விரும்புவதுபோல, இறைவனும் விரும்புகிறார். திருப்பாடல் 103 ல் “தந்தை தம் பிள்ளைகள்மேல் இரக்கம் காட்டுவதுபோல், அவர் நம்மீது இரங்குகிறார்” என்று நாம் வாசிக்கிறோம். எனவே, இறைவனின் திருவுளத்தை நாம் புரிந்துகொள்வோம். அவரது அன்புக்காக நன்றி சொல்வோம்.

மன்றாடுவோம்: அன்பின்; உறைவிடமே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் நலமோடு, மகிழ்வோடு வாழ வேண்டும் என்பதே உமது விருப்பம் என்று அறிந்து உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் நலம் குறைந்த நாள்களில், துன்ப வேளைகளில் நம்பிக்கையுடன் உம்மை நாடி வரும் அருளை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

-----------------

 

''ஆண்டவரே, நீர் விரும்பினால் என் நோயை நீக்க உம்மால் முடியும்'' (லூக்கா 5:12)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- விவிலியத்தைப் புரட்டும்போது நம்பிக்கை என்னும் ஆழ்ந்த சக்தியோடு செயல்பட்ட பல ஆண்களையும் பெண்களையும் நாம் சந்திக்கிறோம். ஆபிரகாம் ''நம்பிக்கையின் தந்தை'' என அழைக்கப்படுகிறார். கடவுள் தம் வாக்கில் தவறாதவர் என்றும் தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறமாட்டார் என்றும் ஆபிரகாம் முழுமையாக நம்பினார். அதுபோல, இயேசுவைச் சந்தித்த மனிதருள் பலர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்ததை நாம் காண்கிறோம். அதிசய செயல்களைப் புரிந்த போதெல்லாம் இயேசு மக்களிடமிருந்த நம்பிக்கையே அச்செயல்கள் நிகழக் காரணம் என்று கூறினார். மக்கள் நம்பிக்கை இல்லாதிருந்தபோது அவர்கள் நடுவே இயேசு அதிசய செயல்களை ஆற்ற இயலாமல் போயிற்று. தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இயேசுவை நோக்கி, ''ஆண்டவரே, நீர் விரும்பினால் என் நோயை நீக்க உம்மால் முடியும்'' (லூக் 5:12) என்று மன்றாடினார். இந்த மனிதரின் வார்த்தையில் நம்பிக்கை துலங்குவதை நாம் எளிதில் காணலாம். அவர் தம் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று கேட்கவில்லை. மாறாக, இயேசுவின் விருப்பம் எதுவோ அதுவே நடக்கட்டும் என்றுதான் அந்த நோயாளர் கருத்துத் தெரிவிக்கிறார்.

-- இயேசு விரும்பியபடியே நடக்கட்டும் என்று கூறிய நோயாளர் இயேசுவிடம் தம் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். இயேசுவிடம் கடவுளின் சக்தி உண்டு; இயேசு ஆற்றுகின்ற வல்ல செயல்கள் கடவுளிடமிருந்தே புறப்படுகின்ற ஆற்றல் மிக்க அடையாளங்கள் என அந்நோயாளர் நம்பியதால்தான் அவர் இயேசுவை மனதார அணுகிச் செல்கின்றார். அம்மனிதரின் நம்பிக்கை வீண்போகவில்லை. இயேசு அவரைப் பார்த்து, ''நான் விரும்புகிறேன்; உமது நோய் நீங்குக!'' (லூக் 5:13) என்றதும் அம்மனிதரின் உள்ளத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. தம் மன்றாட்டு கேட்கப்பட்டதை உணர்ந்த அவர் நன்றியுணர்வோடு இயேசுவை நோக்குகின்றார். நம் வாழ்வில் நம்பிக்கை இருந்தால் அதிசய செயல்கள் நிகழும் என இயேசு உணர்த்துகிறார்.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் நம்பிக்கையோடு உம்மை அணுகிவர அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-----------------------

-"நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக"-

இயேசுவின் அன்புக்குரியவரே!

நம் இயேசு விரும்புவதெல்லாம் நாம் அனைவரும் நோய் நீங்கி நலமுடன் வாழ வேண்டும் என்பதே. இதற்காக அவர் எதையும் செய்யவும் எதையும் இழக்கவும் தயாராக உள்ளார். "கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்." (பிலி 2'6-8)

யாரும் அண்டாத தொழுநோயாளியைத் தொடுகிறார். வெறுத்து ஒதுக்கிய மக்களோடு விருந்துண்கிறார். பாவி, விபச்சாரி என்று பழிக்கப்பட்டவர்களோடு பாசத்தைப் பகிர்ந்து கொண்டார். யாருடைய பசியையும் தாகத்தையும் சகிக்க முடியாதவர். விதவையின் வேதனை, பெண்களின் கண்ணீர் தாங்க முடியாதவர். தன்னை நோக்கி குரல் எழுப்பும் எவருக்கும் மறுக்காதவர். எப்பொழுதுமே "நான் விரும்புகிறேன், நலமாயிருங்கள்" என்பதைத் தவிர வேறெதுவும் அவரால் எண்ண முடியாது.

இயேசுவிடம் வாருங்கள். உங்கள் குறைகள், குடும்ப பாரங்கள், உடல் உள்ள நோய்கள், பலவீனங்கள் அனைத்தோடும் இயேசுவிடம் வாருங்;கள். வந்து நம்பிக்கையுடன் கேளுங்கள். அவர் மறுக்க மாட்டார். விரும்புகிறேன். நீங்கள் இனிது வாழ வேண்டும் என ஆசைப்படுகிறேன் என தன் அருளை அள்ளி வழங்குவார். வாழ்த்துக்கள். ஆசீர்;.

-: ஜோசப் லியோன்