14ஆம் வாரம் ஞாயிறு

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 10-14

எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள். அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள். ஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன். நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள். இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல் போல் வளரும்; ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 66: 1-3ய. 4-5. 6-7ய. 16,20
பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!

1 அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
2 அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்;
அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.
3 கடவுளை நோக்கி `உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை' என்று சொல்லுங்கள். -பல்லவி

4 `அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்;
அவர்கள் உம் புகழ் பாடிடுவர்;
உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்' என்று சொல்லுங்கள்.
5 வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்!
அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. -பல்லவி

6 கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்;
ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.
7ய அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! -பல்லவி

16 கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்!
அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்.
20 என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி!
தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 14-18

சகோதரர் சகோதரிகளே, நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்த வரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். விருத்தசேதனம் செய்துகொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது. இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக! இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம். ஏனெனில் என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம். சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அல்லேலூயா.

லூக்கா 10:1-12

பொதுக்காலம், வாரம் 14 ஞாயிற்றுக் கிழமை

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12, 17-20

அக்காலத்தில் இயேசு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: ``அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், `இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடு வீடாய்ச் செல்லவேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளா விட்டால் அதன் வீதிகளில் சென்று, `எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்' எனச் சொல்லுங்கள். அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.'' பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, ``ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன'' என்றனர். அதற்கு அவர், ``வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

எழுபத்திரண்டு சீடர்களை ஆண்டவர் இயேசு இருவர் இருவராக நற்செய்தி அறிவிக்க அனுப்புகின்ற நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். அவர்களுக்கு அறிவுரை பகர்கின்ற பொழுது இயேசு கூறிய வார்த்தைகள்:  புறப்பட்டுப் போங்கள். ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். இவை எச்சரிக்கை விடுக்கின்ற சொற்கள். இயேசுவின் சீடர்கள் ஆட்டுக்குட்டிகள் போன்றும், இந்த உலகின் மக்கள் ஓநாய்கள் போன்றும் இங்கே உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். உலகம் பல்வேறுவிதமான தீமைகளை, தந்திரங்களை, இருளின் படைக்கலங்களாகக் கொண்டிருக்கிறது. இயேசுவின் காலத்தில் இருந்தது போன்றுதான் இன்றைய உலகமும், இருளின் மக்களும் இருக்கின்றனர். ஆட்டுக்குட்டிகளைச் சுற்றி வளைத்துக் காயப்படுத்தும் ஓநாய்கள் போன்று இன்றைய ஊடகங்கள், வணிக மையங்கள், அநீத அமைப்புகள், ஏன் அரசுகளும்கூட அமைந்திருக்கின்றன. இவர்களின் மத்தியில்தான் சீடர்கள் நற்செய்தி அறிவிப்பவர்களாக, அமைதியை அருள்பவர்களாக, நோய்களைக் குணமாக்குபவர்களாகச் செயல்படவேண்டும். எனவே, விழிப்பாய் இருப்போம். இறையருள் வேண்டுவோம்.

மன்றாடுவோம்: அன்பே உருவான ஆண்டவரே, எங்களை நீர் உம் சீடர்களாக அழைத்து, அமைதியின் கருவிகளாகச் செயல்பட ஆணையிட்டுள்ளீர். உம்மைப் போற்றுகிறோம். ஓநாய்கள்போல் எங்களைக் காயப்படுத்தக் காத்திருக்கும் உலகின் தீமைகள் அனைத்தினின்றும் எங்களைக் காத்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

 

வழியில் வணக்கம் வேண்டாம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு எழுபத்திரண்டு சீடர்களை நற்செய்திப் பணிக்காக அனுப்பும்போது கொடுத்த அறிவுரைகளில் நம் கவனத்தை ஈர்ப்பது: வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம் என்பது. இயேசு வணக்கம் செலுத்துவதற்கும், மரியாதைப் பண்புகளுக்கும் எதிரானவர் அல்லர். பின் ஏன் இந்த அறிவுரையைத் தந்தார்? இக்கேள்விக்கான விடை அறிவுரையின் முதல் வாக்கியத்தில் உள்ளது. அறுவடை மிகுதி. வேலையாள்களோ குறைவு. ஆம், குறைவான எண்ணிக்கையில் உள்ள சீடர்கள் நிறைய மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணியைச் செய்ய வேண்டும். எனவே, நேரம், விரைவான பணி என்பது அவர்களுக்கு முகாமையான மதிப்பீடுகள். எனவேதான், வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்தி அதன் மூலம் நேரத்தை வீணடிக்க வேண்டாம். விரைந்து பல இடங்களுக்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்கிறார் ஆண்டவர்.

நமது பணிகளை விரைவாகவும், விவேகமுடனும் ஆற்ற வேண்டும் என்னும் பாடத்தை இன்றைய நற்செய்தி வாசகம் மூலமாகக் கற்றுக்கொள்வோம். பல நேரங்களில் நமது அலுவலகங்களில், பணியிடங்களில் பேசிப் பேசியே நேரத்தை செலவழித்து, அதனால் பணிகளை நேர்த்தியாகச் செய்யத் தவறும் பழக்கம் நம்மிடையே இருக்கிறது. அப்பழக்கத்தை மாற்றி, பேச்சைக் குறைத்து, உழைப்பைப் பெருக்கும் வரத்தை இறைவனிடம் வேண்டுவோம்.

 

மன்றாடுவோம்: நற்செய்தியின் நாயகனே இறைவா, என்னுடைய பணிகளை நேர்மையுடனும், கடமையுணர்வுடனும் ஆற்ற எனக்கு வரம் தாரும். பணியிடங்களில் தேவையின்றி பேச்சை வளர்க்கும் பழக்கத்தை மாற்ற உமது துhய ஆவியின் அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''இயேசு தாம் அனுப்பிய எழுபத்திரண்டு பேரை நோக்கி, 'நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும்,
'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள்.
அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்' என்றார்'' (லூக்கா 10:1-2,5-6)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசுவின் பணியை ஆற்றுவதற்குச் சீடர்கள் தேவைப்பட்டார்கள். அவர் எழுபத்திரண்டு பேரை அனுப்பி இறையாட்சி பற்றிய நற்செய்தியை அவர்கள் அறிவிக்க வேண்டும் எனப் பணிக்கின்றார். அப்பணியை ஆற்றச் செல்வோர் எளிமையான முறையில் தோற்றமளிக்க வேண்டும் எனவும், ஒரு மாற்றுக் கலாச்சாரப் பாணியில் மக்கள் முன் செயல்பட வேண்டும் எனவும் ( (லூக் 10:4) இயேசு அறிவுறுத்துகிறார். மேலும் இயேசுவால் அனுப்பப்பட்ட தூதர்கள் எதிர்ப்புகளையும் தடைகளையும் சந்திக்க வேண்டி வரும் என்பதையும் இயேசு அவர்களுக்குக் கூறுகிறார். ''ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப் போல'' (லூக் 10:3) அவர்கள் செல்வார்கள். இவ்வாறு பணியாற்றும் போது அவர்கள் ''ஊர்களுக்கும்'' ''வீடுகளுக்கும்'' சென்று இறையாட்சி பற்றி அறிவிக்க வேண்டும். குறிப்பாக வீடுகளில் நிகழ்கின்ற பணி லூக்கா நற்செய்தியில் முதன்மை பெறுகிறது. வழியில் சந்திக்கின்றவர்களிடம் பேச்சுக் கொடுத்து நேரத்தை வீணாக்க வேண்டாம் (லூக் 10:4) என்று கூறிய அதே இயேசு தாம் அனுப்பிய சீடர்கள் ''எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறும்படி'' கேட்கின்றார் (காண்க: லூக் 10:5). இங்கே குறிப்பிடப்படுகின்ற ''அமைதி'' என்னும் சொல் வழக்கமான வாழ்த்துச் சொல் மட்டுமல்ல. அமைதி என்பது சண்டை சச்சரவு இல்லாத நிலை என்பதும் அல்ல. மாறாக, இயேசு குறிப்பிடுகின்ற ''அமைதியும்'' அவர் வழங்குகின்ற ''மீட்பும்'' ஒன்றே. கடவுள் தம் மக்களைத் தேடி வந்து அவர்களுக்கு முழு நலன் வழங்கி, அவர்களைக் கடவுளோடு உறவாடச் செய்கின்ற நிலையே ''அமைதி'' ஆகும். இத்தகைய நல்ல செய்தியை மக்கள் ஒன்றில் ஏற்பார்கள் அல்லது அதை வேண்டாம் என்று ஒதுக்குவார்கள்.

-- இயேசு வழங்குகின்ற அமைதியும் நல வாழ்வும் மீட்பும் அவருடைய சீடர்கள் வழியாக மக்களுக்கு எப்போதும் பறைசாற்றப்படுகிறது. கடவுளின் கொடையை விரும்பி ஏற்போர் உள்ளத்தில் உண்மையான மாற்றம் நிகழும். அவர்களும் கடவுளோடு நல்லுறவில் இணைந்து மகிழ்ச்சியடைவார்கள். கடவுளின் கொடையை நன்மனத்தோடு ஏற்காத மனிதருக்கு எந்தவொரு பயனும் ஏற்படாது. ''இந்த வீட்டுக்கு அமைதி'' என்பது ''இந்தக் குடும்பத்திற்கு அமைதி'' என்றே பொருள்படும். லூக்கா எழுதிய நற்செய்தி நூலிலும் திருத்தூதர் பணிகள் நூலிலும் ''குடும்பத் திருச்சபை'' அல்லது ''வீட்டுத் திருச்சபை'' என்னும் கருத்து முக்கியமானது. அதாவது, தொடக்க காலத் திருச்சபை நற்செய்திப் பணி ஆற்றியது தொழுகைக் கூடங்களிலோ கோவில்களிலோ அல்ல, மாறாக, வீடுகளில் மக்கள் கூடி வந்து, ஒரு குடும்பமாக இணைந்து, இறைவேண்டலில் ஈடுபட்டார்கள்; கடவுளின் வார்த்தைக்குச் செவிமடுத்தார்கள்; நற்கருணை விருந்தைக் கொண்டாடினார்கள்; அன்புப் பணி ஆற்றினார்கள். இன்றைய திருச்சபையும் அடித்தள கிறிஸ்தவ சமூகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபடுவது போற்றற்குரியது. நற்செய்திப் பணியும் குடும்பச் சூழலில் நிகழும்போது அதிக பயன் நல்கும் என்பது அனுபவ உண்மை.

மன்றாட்டு
இறைவா, உம் குடும்பத்தில் எங்களை உறுப்பினராக ஏற்ற உம் அரும் செயலை வியந்து உமக்கு நன்றி கூறுகிறோம்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

ஆமா.. 72 பேர் வேணுமா..

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

ஆமா, இதைச் செய்வதற்கு 72 ஆள் தேவை என்று ஆயாசமாகச் சொல்லுவோம். ஆனால் உண்மையில் 72 பேர் காரணத்தோடுதான் தேவைப்பட்டிருக்கிறார்கள்.

இயேசு 72 பேரை அனுப்புகிறார். இது 70 என்ற குறிப்பும் உள்ளது.இந்த 72 பேரை அனுப்புவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தொடக்க நூல் 5 உலகம் முழுவதும் பரவிய மக்கள் 72(70) வழிமரபைச் சார்ந்தவர்கள் என்று குறிப்பிடுகிறது. "இவை நோவா புதல்வரின் வழிவந்த குடும்பங்களின் இனவாரியான தலைமுறைகள்.இவர்கள் வழிவந்த மக்களினங்களே வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகின் எல்லா நாடுகளிலும் பரவின".தொ.நூல் 10'32

பாலைவனப் பயணத்தில் எழுந்த குழப்பங்களைத் தீர்க்க மோசேக்கு கடவுள்அறிவுரை கூறியபோது, "இஸ்ரயேல் மூப்பரில் எழுபதுபேரை என்னிடம் கூட்டிவா" (தொநூல் 11'16) என்கிறார். தொடர்ந்து இப்பகுதியை வாசித்தால், 70 பேரோடு கடவுள் பேசி தம் அருளைப் பொழிந்தார் என்றும், ஆனால் 72 பேர் அருள் பெற்றனர் என்றும் அறிகிறோம். எல்தாதும் மேதாதும் பாளையத்திற்கு வெளியே இறை அருள் பெற்று இறை வாக்குறைத்ததாக வாசிக்கிறோம். ஆக, மொத்தம் 72 குடும்பங்கள் உலகை நிறப்பின. 72 மூப்பர்கள் இஸ்ரயேலில் மோசேக்கு துணையாக ஆண்டவரால் நியமிக்கப்பட்டனர். அவ்வாரே உலகம் முழுவதும் நற்செய்தி அறிவிக்கப்பட, இயேசு 72 பேரை அனுப்புகிறார்.

உலகம் முழுவதும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்னும் இயேசுவின் திட்டத்தை நிறைவேற்ற நாம் ஒவ்வொருவரும் ஒரு திருத்தூதராவோம்.

--அருட்திரு ஜோசப் லீயோன்