முதல் வாசகம்

இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 4: 5-12, 27-29

இஸ்ரயேலின் புகழை நிலைநாட்டும் என் மக்களே, வீறுகொள்வீர். நீங்கள் வேற்றினத்தாரிடம் விற்கப்பட்டது உங்கள் அழிவிற்காக அன்று; நீங்கள் கடவுளுக்குச் சினமூட்டியதால்தான் பகைவரிடம் ஒப்படைக்கப் பட்டீர்கள். கடவுளை விடுத்துப் பேய்களுக்குப் பலியிட்டதால் உங்களைப் படைத்தவருக்குச் சினமூட்டினீர்கள். உங்களைப் பேணிக் காத்துவந்த என்றுமுள கடவுளை மறந்தீர்கள். உங்களை ஊட்டி வளர்த்த எருசலேமை வருத்தினீர்கள். கடவுளின் சினம் உங்கள் மீது வரக் கண்டு எருசலேம் கூறியது: ``சீயோனின் அண்டை நாட்டவரே, கேளுங்கள். கடவுள் எனக்குப் பெருந்துயர் அனுப்பியுள்ளார். ஏனெனில் என்றுமுள்ளவர் என் புதல்வர், புதல்வியர் மீது சுமத்திய அடிமைத்தனத்தை நான் கண்டேன். மகிழ்ச்சியோடு நான் அவர்களைப் பேணி வளர்த்தேன்; ஆனால் அழுகையோடும் துயரத்தோடும் அனுப்பி வைத்தேன். நானோ கைம்பெண்; எல்லாராலும் கைவிடப்பட்டவள். என் பொருட்டு யாரும் மகிழ வேண்டாம்; என் மக்களின் பாவங்களை முன்னிட்டு நான் தனிமையில் விடப்பட்டுள்ளேன். ஏனெனில் அவர்கள் கடவுளின் சட்டத்தை விட்டு விலகிச் சென்றார்கள். என் மக்களே வீறு கொள்வீர்; கடவுளை நோக்கிக் கூக்குரலிடுவீர். இத்துயரங்களை உங்கள் மீது அனுப்பி வைத்தவர் உங்களை நினைவு கூர்வார். கடவுளை விட்டு அகன்று செல்வதில் முன்பு நீங்கள் முனைந்து நின்றீர்கள். அதை விடப் பன்மடங்கு ஆர்வத்துடன் அவரைத் தேடும் பொருட்டு இப்பொழுது அவரிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில், இக்கேடுகளை உங்கள் மீது வரச் செய்தவரே உங்களுக்கு முடிவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் அருள்வார்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 69: 32-34. 35-36
பல்லவி: ஏழைகளின் விண்ணப்பத்திற்கு ஆண்டவர் செவிசாய்க்கின்றார்.

32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.
33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை.
34 வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். -பல்லவி

35 கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்;
அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள்.
36 ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்;
அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

 

லூக்கா 10:17-24

பொதுக்காலம், வாரம் 26 சனி

 

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-24

அக்காலத்தில் அனுப்பப்பட்ட எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, ``ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன'' என்றனர். அதற்கு அவர், ``வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப் பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்'' என்றார். அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகை அடைந்து, ``தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்'' என்றார். ``என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்'' என்று கூறினார். பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, ``நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர். ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள்; ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 69: 32 – 34, 35 – 36
”ஏழைகளின் விண்ணப்பத்திற்கு ஆண்டவர் செவிசாய்க்கின்றார்”

திருப்பாடல் வார்த்தைகளை எண்ணி ஆராய்ந்து பார்க்கிறபோது, துன்பப்படுகிற மனிதனின் வேதனையும், இழப்பும், கடவுளை விட்டால் தனக்கு வேறு ஆதரவு யாரும் இல்லை என்பதையும் இங்கே நாம் புரிந்து கொள்ளலாம். இங்கே தன்னை ஏழையாக ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். விவிலியத்தைப் பொறுத்தவரையில் ஏழைகள் என்று சொல்லப்படுகிறவர்கள், பொருளாதாரத்தின் அடிப்படையில் பின்தங்கியவர்களை அல்ல. மாறாக, கடவுள் மீது தங்களுடைய முழுமையான நம்பிக்கை வைக்கிறவர்களை விவிலியம் ஏழை என்று சுட்டிக்காட்டுகிறது.

அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் எண்ணிக்கையில் பலராக மத்திய கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டது. அவர்களின் நியாயத்தை கேட்பார் யாருமில்லை. அடிமைத்தனம் என்பது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. அவர்களுக்கு பரிந்து பேசுகிறவர்கள் எவருமே இல்லை. இப்படிப்பட்ட நிலையில் இறைவன், தன்னை இவர்களுக்கானவராக அடையாளப்படுத்துகிறார், வெளிப்படுத்துகிறார். இது அடிமைநிலையில் இருந்த மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த ஆன்மீகத்தை அறிந்த கொண்ட மனிதரின் உள்ளக்கேவலாக இந்த திருப்பாடல் அமைகிறது.

நம்முடைய வாழ்விலும் நாம் இறைவனை முழுமையாகப் பற்றிக்கொள்ள வேண்டும். இறைவன் மீது முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும். இறைவன் ஒருவர் தான், நமக்கு எல்லாமுமாக இருக்கிறார் என்று முழுமையாக நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை உணர்வோடு, இந்த திருப்பாடலை நாம் தியானிப்போம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

சீடர்களின் பயிற்சிக்காலம்

சீடர்கள் தங்களது பயிற்சி பணிக்காலம் முடிந்து ஆண்டவரிடத்தில் மகிழ்ச்சியோடு திரும்பி வருகிறார்கள். அவர்கள் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. அவர்கள் தங்கள் பணிகளுக்குச் செல்கிறபோது, நம்பிக்கை இல்லாமல் சென்றார்கள். இயேசுவைப்போல தங்களாலும் புதுமைகள் செய்ய முடியுமா? மக்களின் எதிர்ப்புக்களை மீறி, நற்செய்தி அறிவிக்க முடியுமா? தங்களை மக்கள் மதிப்பார்களா? இயேசுவைப்போல ஞானத்தோடும், அறிவோடும் பேச முடியுமா? போன்ற பல கேள்விகள் சீடர்களின் உள்ளத்தில் எழுந்திருந்தது. ஆனால், வேறு வழியில்லை. இயேசு அனைத்து சீடர்களும் செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டதனால், அவர்கள் தங்களுக்கு குறிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றார்கள். திரும்பி வருகிறபோது, அவர்களது அனுபவம் மகிழ்ச்சியானதாக இருக்கிறதை, சீடர்களின் உற்சாகமான வார்த்தைகளில் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

ஒருவிதமான பதற்றத்தோடு, பதைபதைப்போடு பணிக்குச் சென்ற சீடர்கள், மகிழ்ச்சியாக திரும்பி வந்தார்கள். இவ்வளவு நாள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். கடவுளின் பராமரிப்பைப்பற்றியும், அவரது அளவுகடந்த இரக்கத்தைப்பற்றியும் இயேசு சொல்வதை வெறுமனே கேட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போதுதான் அவர்களே நேரடியாக உணர்ந்திருக்கிறார்கள். நிச்சயமாக இது அவர்களுக்கு ஒருவிதமான, புதுமையான அனுபவமாக இருந்திருக்கும். இயேசுவின் போதனைகளைக் கேட்டுக்கொண்டிருந்த தருணங்களில் இதெல்லாம் நடக்குமா? என்ற சந்தேகம் இருந்திருக்கும். ஆனால், சந்தேகித்தது அனைத்தும் அனுபவமாக, நேரடியாகப் பெற்றதை நினைத்து, அவர்கள் ஆச்சரியப்பட்டிருப்பார்கள்.

சீடர்கள் நம்பிக்கை இல்லாமல் தான் சென்றார்கள். ஆனால், நடக்கிற நிகழ்வுகள், அவர்களையும் அறியாமல் அவர்களது நாவிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் கடவுளின் ஆற்றலையும், அவரது இயக்கத்தையும் அவர்களுக்கு உணர்த்தியது. கடவுளுடைய பணியில் நாம் வெறும் கருவிகள் தான். நாம் திறந்த உள்ளத்தோடு இருப்பது ஒன்று தான், நம்மிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது. மற்றதை, கடவுள் பார்த்துக்கொள்வார், என்கிற நம்பிக்கைஉணர்வில் நாம் வாழ, உறுதி எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------

எளிய விசுவாசம்

எளிமையான விசுவாசத்தை இன்றைய நற்செய்தியில் நாம் பெற்றுக்கொள்கிறோம். அதிக எதிர்பார்ப்புகளோடு நாம் வாழ்கிறபோது, வாழ்க்கை பல வேளைகளில் துன்பமாக, சுமக்க முடியாத சுமையாக மாறிவிடுகிறது. எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாதவர்களின் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய நற்செய்தியில், சீடர்களின் எளிமையான விசுவாசத்தைப்பார்க்கிறோம். எழுபது பேரை, இயேசு நற்செய்திப்பணிக்காக அனுப்பியிருக்கிறார். அவர்கள் திரும்பி வருகிறார்கள். அவர்களிடத்தில், குழந்தையைப்போன்ற கள்ளம் கபடமில்லாத மகிழ்ச்சி காணப்படுகிறது. இயேசு அவர்களை அனுப்பியபோது, பல ஒழுங்குகளைச் சொல்லி அனுப்பியிருந்தார். நிச்சயம் அவர்களுள் ஒரு சிலர் முணுமுணுத்திருக்கலாம். ஆனால், இயேசுவின் மீது கொண்ட அன்பின் காரணமாக, இயேசுவிடத்தில் வைத்திருந்த ஆழமான விசுவாசத்தின் காரணமாக, அவர்கள் செல்கிறார்.

அவர்களுக்கென்று பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. இயேசு அனுப்புகிறார். நாம் போகிறோம். இயேசு செய்யச்சொன்னார். செய்கிறோம். அவ்வளவுதான். அது அனைத்துமே இயேசுவுக்குத்தான் சொந்தம் என்ற எளிமையான விசுவாசத்தோடு செல்கிறார்கள். அதில் முழுமையான வெற்றியும் பெறுகிறார்கள். இந்த எளிமையான விசுவாசத்தை அனுபவித்து, பல புதுமைகளைச்செய்த சீடர்கள் மட்டில், இயேசுவுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. அவர் அடைந்த மகிழ்ச்சியின் உச்சகட்டமாக, அவர்களுக்கு அந்த எளிய விசுவாசத்தைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார்.

சீடர்களிடத்தில் இருந்த அந்த எளிமையான விசுவாசம், இயேசுவை மட்டும் நம்பிச்சென்ற அந்த விசுவாசம் நம்மிடம் இருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்ப்போம். அந்த எளிய விசுவாசம் தான், பிற்காலத்தில் இயேசுவை துணிவோடு அறிவிக்கக்கூடிய தைரியத்தை சீடர்களுக்குத்தந்தது. அந்த எளிய விசுவாசம் தான், அதிசயங்களையும் அற்புதங்களையும் சீடர்கள் செய்வதற்கு உறுதுணையாக இருந்தது. அந்த எளிய விசுவாசத்தை நாமும், சீடர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

தற்பெருமை வேண்டாம்

இயேசு, ”வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப்போல விழக்கண்டேன்” என்கிறார். இதனுடைய பொருள் என்ன? இதனை எப்படிப்புரிந்து கொள்வது? இயேசு எதற்காக இதைச்சொல்கிறார்? இயேசு தனது பணியின் பயிற்சியாக, எழுபத்திரண்டு சீடர்களை அனுப்புகிறார். அவர்கள் தங்களது பணியை முடித்தபின் இயேசுவிடம் மகிழ்ச்சியோடு தங்கள் அனுபவத்தைப்பகிர்ந்து கொள்கிறார்கள். ”ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள்கூட எங்களுக்கு அடிபணிகின்றன” என்று பெருமை பொங்கச்சொல்கிறார்கள். இதனுடைய பிண்ணனியில்தான் இயேசு மேற்கண்ட வார்த்தைகளைச்சொல்கிறார்.

இதற்கு இரண்டுவிதத்திலே பொருள் கொடுக்கலாம். 1. இயேசு கொண்டு வர விரும்பிய இறையாட்சிக்கான அறிகுறிகள் தான் சாத்தான் தோற்கடிக்கப்படுவது. ஏனென்றால், இருளின் ஆட்சி முடிந்து, சாத்தான் தோற்கடிக்கப்பட்டு, கடவுளின் அரசு மலரத்தொடங்கிவிட்டதற்கான அருங்குறிகள் தான் சீடர்களின் வெற்றி. 2. இயேசு சீடர்களின் தற்பெருமைக்கு எதிராக கொடுக்கின்ற எச்சரிக்கையாகவும் இதை எடுக்கலாம். ஏனென்றால், சாத்தான்கள் தற்பெருமையினால் கடவுளுக்கெதிராக கிளர்ந்தெழுந்த வானதூதர்கள். அவர்கள் தற்பெருமையினால் கீழே விழுந்தார்கள். சீடர்களும் பெற்றிருக்கிற சிறிய வெற்றியை வைத்து தற்பெருமை அடைந்துவிடக்கூடாது, என்று இயேசு எச்சரிக்கிறார்.

தற்பெருமை நம்மை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும். சீடர்களிடம் பேய்களை ஓட்டக்கூடிய வல்லமை இருந்தது உண்மை. அவர்களின் தன்னம்பிக்கை அதிகமானதும் உண்மை. ஆனாலும், அத்தகைய நம்பிக்கை அவர்களுடைய தோல்விக்குக்காரணமாகிவிடக்கூடாது என இயேசு எச்சரிக்கிறார். தற்பெருமையை நம்மிடமிருந்து அகற்றுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

எதைப் பற்றி மகிழ ?

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவின் சீடர்கள் தம் நற்செய்திப் பணியை முடித்துவிட்டுத் திரும்பும்போது, மகிழ்ச்சியின் படிமுறை பற்றி அவர்களுக்குப் பாடம் எடுக்கிறார் இயேசு. இயேசுவின் பெயரைச் சொல்லி பேய்களை ஓட்டிய பெருமையைப் பறைசாற்றும் சீடர்கள் தீய ஆவிகளை அடிபணிய வைத்தது பற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கின்றனர். இயேசு அவர்களின் மகிழ்ச்சியை ஏற்பிசைவு செய்கிறார். இயேசு கொடுத்த அதிகாரம் அவர்களுடன் இருப்பதால் எதுவுமே அவர்களுக்குத் தீங்கு இழைக்காது என்று உறுதி அளிக்கிறார். ஆனாலும், தீய ஆவிகள் தங்களுக்கு அடிபணிகின்றன என்பதைவிட தங்களின் பெயர்களின் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழவேண்டும் என்று அறிவுறுத்துகிறார் இயேசு.

நாமும் மகிழ்ச்சியி;ன் இந்தப் படிமுறையை நம் வாழ்வாக்கிக் கொள்வோம். இரண்டு வகையான மகிழ்ச்சிகள் நம் வாழ்வில் ஏற்படலாம். உலகு சார்ந்த வெற்றிகள், பரிசுகள், பொருளாதார இலாபங்கள், நிறைவேறிய கனவுகள்... போன்றவை நமக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், இவை மேலோட்டமான மகிழ்ச்சிகளே. இவற்றைவிட மேலான, ஆழமான மகிழ்ச்சியை இறைவன் மட்டுமே தரமுடியும். நம் வாழ்வு இறைவனுக்கு ஏற்புடையதாக அமையும்போது, நாம் இறைவனின் வார்த்தைகளின்படி வாழும்போது, நமது பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்படுகின்றன. அந்த மகிழ்ச்சியே நிறைவான, நிலையான மகிழ்ச்சி. அத்தகைய மகிழ்ச்சிக்காக உழைப்போமாக!

மன்றாடுவோம்: மகிழ்ச்சியின் நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இந்த உலகம் சார்ந்த மகிழ்ச்சிகளுக்காக ஏங்காமலும், உழைக்காமலும், நீர் தருகின்ற நிலையான மகிழ்ச்சிக்காக உழைக்கவும் எங்களுக்கு அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

ஆவியால் பேருவகை !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

மற்ற மூன்று நற்செய்தியாளர்களையும்விட, புனித லுhக்காதான் இயேசுவை அடிக்கடி செபிப்பவராக, இறைவேண்டலில் ஆர்வம் மிகுந்தவராகக் காட்டுகிறார். இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இயேசு செபிப்பதைப் பார்க்கிறோம். இயேசுவின் செபம் நமக்கும் ஓர் எடுத்துக்காட்டாகவும், ஊக்க மருந்தாகவும் அமைகிறது. அவரது செபத்தைக் கொஞ்சம் அலசிப் பார்ப்போம்.

1. இயேசுவின் செபம் துhய ஆவியால் துhண்டப்பட்டதாக அமைந்தது, ஆவியின் துணையால்தான் நான் இறைவனை அப்பா, தந்தாய் என்று அழைக்கிறோம் என்று பவுலடியாரும் கூறியுள்ளார். ஆவியானவரே நாம் செபிப்பதற்குத் துhண்டுகோலாகவும், துணையாளராகவும் விளங்குகிறார். கோவிலில் நமது வழிபாடுகள் துhய ஆவியின் துணை வேண்டி தொடங்குவதை நினைவுகூர்வோம். எனவே, இயேசுவைப் போல நாமும் துhய ஆவியில் நிறைந்து செபத்தில் ஈடுபடுவோம்.

2. இயேசு பேருவகையுடன் செபித்தார். எங்கே துhய ஆவி இருக்கிறாரோ, அங்கே மகிழ்ச்சி உண்டு. மகிழ்ச்சி என்பது ஆவியின் ஏழு கனிகளுள் ஒன்று அல்லவா. எனவே, ஆவியால் நிறையும்போது அங்கே நிச்சயம் மகிழ்ச்சி உண்டு. மேலும், செபம் என்பதுவும் ஒரு மகிழ்ச்சியின் அனுபவமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நாம் செபிக்கும்போது, மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் அடையவேண்டும் என்று இயேசுவின் செபம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

3. இயேசு தம் செபத்தில் தந்தையைப் போற்றுகிறார். ஆம், செபங்களில் இனிமையானதும், சிறப்பிடம் பெறுவதுமானது இறைபுகழ்ச்சி செபம்தான். இயேசு தந்தையின் ஞானத்தை, அவரது திருவுளத்தைப் போற்றிப் புகழ்கிறார். நாமும் நம்முடைய செபத்தில் தந்தை இறைவனுக்குப் புகழும், மாட்சியும் செலுத்த இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது ஞானத்திற்காக, உம் அன்புத் திருமகன் இயேசுவுக்காக, அவர் எவ்வாறு செபிப்பது என்று எங்களுக்குக் கற்றுத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். தந்தையே, நாங்கள் எப்போதும் துhய ஆவியில் நிறைந்து, செபித்து, மகிழ்ச்சி அடைய எங்களுக்கு  அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

------------------------

 

''பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து,
'ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள்கூட எங்களுக்கு அடிபணிகின்றன' என்றனர்'' (லூக்கா 10:17)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசுவின் பணியைத் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பொறுப்பு அவருடைய சீடர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இயேசு அனுப்பிய எழுபத்திரண்டு சீடரும் நற்செய்தி அறிவித்து, மக்களுக்கு நலம் கொணரும் பணியைத் தொடர்ந்தனர் (லூக் 10:9). அவர்கள் ஆற்றிய பணி வெற்றி கொணர்ந்தது. எனவே அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். அந்த மகிழ்ச்சியோடு இயேசுவை அணுகி, அவரிடம் தாங்கள் புரிந்த சாதனைகள் பற்றி அவர்கள் பெருமை பாராட்டிக்கொண்டார்கள். ''உமது பெயரைச் சொன்னால் பேய்கள்கூட எங்களுக்கு அடிபணிகின்றன'' என்று அவர்கள் இயேசுவிடம் கூறினார்கள் (லூக் 10:17). மக்களுக்கு ஏற்படுகின்ற நோய்கள் பேய்களின் செயலே என மக்கள் நம்பிய காலம் அது. எனவே, சீடர்கள் மக்களின் நோய்களைப் போக்கியது பேய்களை முறியடித்ததற்குச் சமம். ஆகவேதான் அவர்கள் இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டி மக்களுக்கு நமலமளித்தார்கள். ஆனால் அவர்கள் பெருமை பாராட்ட ஒன்றுமில்லை என இயேசு அவர்களுக்குப் புரியவைக்கிறார். தீய ஆவிகள் சீடர்களுக்குக் கீழ்ப்படிந்தால் அது இயேசுவின் வல்லமையில் காரணமாகவே. அந்த வல்லமை விளங்குவதற்குச் சீடர்கள் கருவிகளாக மாறுகிறார்கள்.

-- இதை மறந்துவிட்டு, தங்கள் சொந்த சக்தியால் பேய்களைத் துரத்த முடியும் என சீடர்கள் நினைத்துவிடலாகாது என இயேசு அவர்களுக்குக் கற்பிக்கிறார். கடவுளின் செயல் அதிசயமான விதத்தில் சீடர்கள் வழியாகச் செயல்படுகிறது. தாங்கள் பெற்றுக்கொண்ட கொடையை நன்றியோடு அவர்கள் ஏற்கவேண்டும். அக்கொடையைப் பயன்படுத்திப் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும். கடவுள் அளிக்கும் கொடையை ஏற்றுச் செருக்குறாமல் தாழ்ச்சியோடு அதை ஏற்றிட வேண்டும். இவ்வாறு சீடர்கள் செயல்படும்போது உண்மையிலேயே கடவுளின் மகிழ்ச்சி அவர்கள் உள்ளத்தை நிரப்பும். தீய ஆவிகளை ஓட்டுவது பற்றி மகிழாமல் தங்கள் ''பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே அவர்கள் மகிழ வேண்டும்'' (காண்க: லூக் 10:20). அக்காலத்தில் நகரங்களில் வாழ்ந்த மக்களின் பெயர்களை ஒரு பட்டியலில் எழுதிவைப்பது வழக்கம். இயேசுவை நம்புவோர் விண்ணக நகரத்தின் மக்கள் என்பதால் அவர்களுடைய பெயர்களும் விண்ணகப் பட்டியலில் இடம்பெறும் என இயேசு கூறுகிறார். இயேசு நம்பி ஏற்கின்ற மக்கள் குழுவாகிய திருச்சபை இன்றைய உலகில் நிலவுகின்ற தீமைகளை முறியடித்திட உழைக்க வேண்டும். கடவுளின் அருளோடு அப்பணியை நாம் தொடர முடியும்; தொடரவும் வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் பணியை ஆற்றுவதில் மகிழ்ச்சியோடு செயல்பட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன
என்பது பற்றியே மகிழுங்கள்'' (லூக்கா 10:20)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மனிதராகிய நம் வழியாக, நமது ஒத்துழைப்போடு வியத்தகு காரியங்களைச் சாதிக்க விரும்புகிறார் கடவுள். ஆனால் கடவுளின் பணியை ஆற்றுகின்ற வேளையில் நாம் தவிர்க்க வேண்டிய சோதனை ஒன்று உண்டு. அதாவது. கடவுள் நம்மிடம் ஒப்படைத்த பணியைச் செய்யும்போது அது வெற்றியாக அமைந்துவிடும் வேளைகளில் ஏதோ நம்முடைய திறமையால் அந்த வெற்றி கிடைத்ததுபோல நாம் நினைத்துவிடக் கூடாது. கடவுள் நமக்குத் தந்த பணியை நன்முறையில் நாம் ஆற்றிவிட்டால் அந்த வெற்றிக்குக் காரணம் கடவுளே என உணரவேண்டும். மேலும், கடவுளின் பணியை ஆற்றும்போது தோல்விகள் கூட ஏற்படுவது இயல்பு. அந்த நேரங்களில் நாம் நம்பிக்கை இழந்துவிடுதலும் சரியல்ல.

-- கடவுளையும் அவரது ஆட்சியை அறிவிக்கின்ற இயேசுவையும் நம்புவோர் தாழ்ச்சி நிறைந்த மனநிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும். கடவுள் எல்லையற்ற இரக்கமும் பரிவும் கொண்டவர் என்பதை நாம் உணர்ந்து, மகிழ்ந்து, நன்றிகூற வேண்டும். ஏனென்றால் தகுதியற்ற கருவிகளாக நாம் இருந்தபோதிலும் கடவுள் நம் வழியாகத் தம் திட்டங்களை நிறைவேற்றுகிறார். இது கடவுளின் இரக்கப் பெருக்கின் வெளிப்பாடுதான். கடவுளிடமிருந்தே நாம் அனைத்தையும் பெறுகிறோம். கடவுளுக்கே நாம் முற்றிலும் உரித்தானவர்கள். கடவுளிடமிருந்து பெறுவதைத் தவிர நமக்கென்று நாமே ஈட்டிக்கொண்டது ஒன்றுமே இல்லை. இம்மன நிலை நம்மிடம் இருந்தால் நாம் கடவுளின் பணியை ஆற்றும்போது ஏற்படுகின்ற வெற்றியைக் கண்டு செருக்குறாமல் இருப்போம்; தோல்வியின்போது மனம் தளர்ந்து சோர்ந்துபோகவும் மாட்டோம். பரிவோடு நம்மைத் தேடி வந்து அரவணைக்கின்ற அன்புக் கடவுளின் அருளை வியந்து நாம் எந்நாளும் மகிழ்ச்சியடைவோம் (லூக் 10:20)

மன்றாட்டு
இறைவா, உம் அன்பையும் அமைதியையும் உலகிற்குக் கொணர்கின்ற கருவிகளாக நாங்கள் செயல்பட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

''இயேசு 'தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்;
மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும்' என்றார்'' (லூக்கா 10:22)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- கடவுள் என்றால் யார்? அவருடைய தன்மை என்ன? இக்கேள்விகளுக்கு மனிதர் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பதில் தேடி வந்திருக்கிறார்கள். இந்திய நாட்டில் இந்தத் தேடல் நடந்தது. கிரேக்க, உரோமைய கலாச்சாரங்கள் இத்தேடலில் ஈடுபட்டன. இஸ்ரயேல் மக்களும் அவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த மக்களும் இக்கேள்விகளுக்கு விடை தேடினார்கள். சுருங்கக் கூறின், உலகில் வாழ்கின்ற எல்லா மக்களுமே கடவுள் பற்றிய தேடலில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் கண்ட பதில்களை நாம் இன்று வெவ்வேறு சமய நம்பிக்கைகளாகக் காண்கின்றோம். சில நம்பிக்கைகள் எழுத்து வடிவம் பெற்றன; சமயச் சடங்குகளாக உருவெடுத்தன; மனித உள்ளத்தில் எழுகின்ற சமய உணர்வாக வெளிப்பட்டன. கடவுள் யார்? அவரை மனிதர் அறிய முடியுமா? யூத-கிறிஸ்தவ சமய நம்பிக்கைப்படி, கடவுளை நாம் ஒருபோதுமே முழுமையாக அறிந்துகொள்ள இயலாது. கடவுள் யார் என்று கூறுவதைவிட அவர் யார் அல்ல எனக் கூறுவது எளிது. இதை ''எதிர்மறை விளக்கம்'' (யிழிhயவiஉ ழச நெபயவiஎந வாநழடழபல) என அறிஞர் கூறுவர். இந்து மரபில் இது ''நேதி, நேதி'' (''இதுவுமல்ல, அதுவுமல்ல'') என்னும் அணுகுமுறையாக விவரிக்கப்படுகிறது (காண்க: பிரிகதாரண்யக உபநிடதம் 2.6). அதுபோலவே தமிழ் மரபிலும் கடவுளை ''அவன், அவள், அது'' என நாம் கூறவியலாது என்னும் கருத்து உண்டு. இவ்வாறு கடவுள் பற்றி நாம் முழுமையாக அறிதல் இயலாது என்றதும் அந்த அறிவு நமக்கு ஒருபோதுமே எட்டாது என்று பொருளாகாது. கிறிஸ்தவ மறைக் கருத்துப்படி, கடவுள் யார் என்பதை இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார். எனவேதான் ''தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்'' என்றும், ''மகன் தந்தையை நமக்கு வெளிப்படுத்துகிறார்'' என்றும் நாம் ஏற்கின்றோம்.

-- மகனாகிய இயேசு தந்தையாம் கடவுள் ''அன்பு'' வடிவாய் இருக்கிறார் என நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். கடவுள் அன்பாயிருக்கிறார் என்பதுகூட நம் அறிவுக்கு முற்றுமாக எட்டுவதில்லை. ஏனென்றால் அன்பு என்றால் என்னவென்பதை நாம் மனித அனுபவத்திலிருந்தே அறிகிறோம். ஆனால் கடவுளின் பண்புகள் மனிதப் பண்புகளைக் கடந்தவை என்பதால் நாம் அன்பு எனப் புரிந்துகொள்வது கடவுளைப் பொறுத்த மட்டில் இன்னும் மிகச் சிறந்த விதத்தில் அமையும் என நாம் உருவகிக்கிறோம். கிறிஸ்துவை நம்புவோர் அவர் நமக்கு வெளிப்படுத்துகின்ற கடவுளையும் நம்புவார்கள். அக்கடவுள் நம்மைத் தாயன்போடும் தந்தையன்போடும் ஏற்று அன்புசெய்கிறார் என நாம் அறிகிறோம். அந்த நம் அறிவு எந்த அளவு ஆழப்படுகிறதோ அந்த அளவு நாம் கடவுளோடு அன்புறவில் வளர்வோம்.

மன்றாட்டு
இறைவா, உம்மை அறிந்து அன்புசெய்ய எங்களுக்கு நீரே அருளுகிறீர் என உணர்ந்து வாழ்ந்திட எங்களை வழிநடத்தும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''தந்தையே,...ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து,
குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்'' (லூக்கா 10:21)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- கடவுளின் ஆட்சி நெருங்கி வருகிறது என இயேசு நற்செய்தி கூறுகிறார். அவர் கூறுவதைச் சிலர் ஏற்கின்றர்; பலர் ஏற்க மறுக்கின்றனர். இயேசுவின் சொல்லைக் கேட்டு அதில் உண்மையுள்ளது என உணர்ந்து ஏற்றவர்கள் யார்? திறந்த உள்ளமுடைய அம்மனிதர்களை இயேசு ''குழந்தைகள்'' என அழைக்கிறார். தம்மையே பெரியவர்களாகக் கருதுகின்ற மனிதர்கள் கடவுளாட்சி பற்றிய நற்செய்தியின் பொருள் என்னவென்று உணரத் தவறிவிடுகிறார்கள். அவர்கள் தங்களை ஞானிகளென்றும் அறிஞர்களென்றும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், யார் தங்களைக் குழந்தைகளாக ஆக்கிக் கொண்டு, கடவுளிடத்தில் தங்களையே முற்றிலுமாகக் கையளித்து, திறந்த உள்ளத்தோடு கடவுளை அணுகிச் செல்கின்றார்களோ அவர்களே இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் புரிந்துகொள்வார்கள்.

-- குழந்தைகள் பெற்றோரையும் பிறரையும் சார்ந்திருக்கும் பண்புகொண்டவர்கள். அவர்களுடைய சொந்த சக்தியால் யாதும் நடக்கவியலாது. தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் பெறுவதற்குக் குழந்தைகள் பிறரைத்தான் நம்பியிருக்க வேண்டும். இயேசு இதே உண்மையை உணர்த்துவதற்காகத்தான் ''கடவுளாட்சி குழந்தைகளுக்குரியது'' என அறிவித்தார். மனித ஞானம் எல்லைகளுக்கு உட்பட்டது; மனித அறிவும் எல்லை கடந்ததல்ல. ஞானமும் அறிவும் நமக்கு இருந்தாலும் நாம் கடவுளைக் கண்டுகொள்வோம் என்று சொல்லவியலாது. கடவுளாட்சியில் ஞானிகள் எனப்படுவோர் கடவுளின் கைகளில் தம்மை முழுமையாகக் கையளிப்போரே. அவர்கள் இவ்வுலக கணிப்புப்படி ஞானியராகவோ அறிஞராகவோ இல்லாமலிருக்கலாம். ஆனால் கடவுளின் கண்களுக்கு அவர்கள் உண்மையான அறிவாளிகள்; சிறந்த ஞானிகள். இவர்களுக்கு ''இறைவனின் வெளிப்பாடு'' அருளப்படும். அதாவது, கடவுள் தம் உண்மை இயல்பை எளியோராகிய இவர்களுக்கு வெளிப்படுத்துவார். இதனால் கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுகிறார் என நாம் முடிவுகட்டிவிடல் ஆகாது. திறந்த உள்ளத்தோடு நாம் கடவுளை அணுகிச் செல்ல வேண்டும் என்பதே அவருடைய விருப்பம்.

மன்றாட்டு
இறைவா, உமது ஞானத்தையும் அறிவையும் எங்களுக்குத் தந்து நாங்கள் உம் ஆட்சியில் புகுந்திட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

---------------------------

தாழ்ச்சியின் உயர்வு

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

இறுதி நாள் அல்லது ஆண்டவரின் நாள் இவைபற்றிய வெளிப்பாடுகள் யாருக்கும் புலப்படுவதில்லை. மூவொரு இறைவன் ஒருவரே அறிவார். ஆண்டவரின் நாளில் இம்மூவொரு இறைவனின் மாட்சியும் மகிமையும் வெளிப்படுவதை எல்லோராலும் காண முடியாது. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அருளில் நிறைந்தவர்கள் மட்டுமே அந்த காட்சியைக் காண முடியும்.

ஆகவே நம் இறுதி நாளில் இறை மாட்சியைக் காண தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும். அதன் அடையாளம் குழந்தையின் தாழ்ச்சி நிறைந்த உள்ளம். ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்துவதன் காரணம் இதுவே. எனவே தூய ஆவியால் நிறைந்து, குழந்தை உள்ளம் கொண்டு வாழ்ந்தால், எல்லா இறை வெளிப்பாடுகளுக்கும் உரியவராவோம்.

இதற்கு அருமையான சான்று நம் அன்னை மரியாள். அருளில் நிறைந்தவள். தாழ்நிலைநின்ற அடிமை. ஆகவே இறைவனின் தாயானாள். அடுத்து இயேசுவின் சீடர்கள் இவ்வுயவைப் பெறுகின்றனர் என்பதை இப்பகுதியில் அறிகிறோம். நாமும் தூய ஆவியால் நிறைந்து, குழந்தை உள்ளம் கொண்டு அன்றாட வாழ்வில் தாழ்த்தி எளிய வாழ்க்கை வாழ்ந்தால் இறை மாட்சியைக் காணும் பேறு பெறுவோம். இவ்உன்னத நிலைபெற செபிப்போம். மகிமையைக் காண்போம்.

--அருட்திரு ஜோசப் லியோன்

 

அயலான் வாழ .. ..

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

பல சமயங்களில் எதிரியைப்பற்றி,அடுத்தவனைப்பற்றி, அவனது வீழ்ச்சியைப்பற்றியே சிந்தித்து, நேரத்தையும் வாழ்க்கை முழுவதும் செலவிட்டு இழுந்துவிடுகிறோம். தன்வாழ்க்கையைப்பற்றி சிந்தித்து செயல்பட நேரம் இல்லாததால், வாழ்வில் ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறோம். அடுத்தவனின் அழிவுபற்றி சிந்திப்பவன், தன்னைப்பற்றி சிந்திக்க நேரம் ஒதுக்காததால் தன் வாழ்வில் முன்னேற்றம் காண முடியாது.

"ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன" திருத்தூதர்களின் வார்த்தைக்குத் திருத்தம் கொடுக்கிறார். "தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்"

இவ்வாறு எதிரியின் அழிவைக் கருத்தில் கொள்ளும்போது வீண் பெருமைகொள்ள வாய்ப்புகள் அதிகம். குழந்தை உள்ளம்கொண்டு இறைவனின் திருவுளம் காண இது பெருந்தடையாகிவிடும். ஆகவே இறைவனைக் காணவும் இறைவனின் திருவுளம் கண்டுகொள்ளவும் இதனால் நம் வாழ்வில் வளர்ச்சி காண குழந்தை உள்ளம்கொண்டு வாழ்வோம்.

--அருட்திரு ஜோசப் லீயோன்