முதல் வாசகம்

இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 13 - 4: 2

``எனக்கு எதிராக நீங்கள் கடுஞ்சொற்களை உதிர்த்து வந்தீர்கள்,'' என்கிறார் ஆண்டவர். ஆயினும், ``உமக்கு எதிராக என்ன பேசினோம்?'' என்று கேட்கிறீர்கள். கடவுளுக்கு ஊழியம் செய்வது வீண்; அவரது திருமுறைகளைக் கடைபிடித்து ஒழுகுவதாலும் படைகளின் ஆண்டவர் திருமுன் மனம் வருந்தி நடந்து கொள்வதாலும் நமக்கு என்ன பயன்? இனிமேல் நாங்கள், `ஆணவக்காரரே பேறுபெற்றோர்' என்போம். கொடியோர் தழைத்தோங்குவது மட்டுமல்ல, கடவுளை அவர்கள் சோதித்துப் பார்த்தாலும், தப்பித்துக் கொள்ளுகிறார்கள் என்றெல்லாம் நீங்கள் கூறவில்லையா?'' அப்போது, ஆண்டவருக்கு அஞ்சி நடந்தோர் ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டனர். ஆண்டவரும் உன்னிப்பாகக் கேட்டார். ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவரது பெயரை நினைந்து வாழ்வோருக்கென நினைவு நூல் ஒன்று அவர் திருமுன் எழுதப்பட்டது. ``நான் செயலாற்றும் அந்நாளில் அவர்கள் எனது தனிப்பெரும் சொத்தாக இருப்பார்கள்'' என்கிறார் படைகளின் ஆண்டவர். ஒரு தந்தை தமக்குப் பணிவிடை செய்யும் மகன்மீது கருணை காட்டுவது போல் நான் அவர்கள் மீது கருணை காட்டுவேன். அப்போது நீங்கள் நேர்மையாளர்க்கும் கொடியோர்க்கும், கடவுளுக்கு ஊழியம் செய்வோர்க்கும் அவருக்கு ஊழியம் செய்யாதோர்க்கும் உள்ள வேற்றுமையை மீண்டும் கண்டுகொள்வீர்கள். ``இதோ! சூளையைப் போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும்அதனுள் போடப்பட்ட சருகாவர்; வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது; முற்றிலும் சுட்டெரித்துவிடும்,'' என்கிறார் படைகளின் ஆண்டவர். ``ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 1: 1-2. 3. 4,6
பல்லவி: ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;
பாவிகளின் தீயவழி நில்லாதவர்;
இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;
அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். -பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்;
பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்;
தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். -பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை;
அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்.
6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்;
பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.

லூக்கா 11:5-13

பொதுக்காலம், வாரம் 27 வியாழன்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 5-13

அக்காலத்தில் இயேசு சீடர்களை நோக்கிக் கூறியது: ``உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, `நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், `எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது' என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 1: 1 – 2, 3, 4, 6
”பொல்லாரின் வழியோ அழிவைத்தரும்”

கடவுளின் முன்னிலையில் நிற்கக்கூடிய தகுதி யாருக்கு கிடைக்கும்? கடவுளின் பார்வையில் பேறுபெற்றவர்களாக இருக்கிறவர் யார்? என்கிற கேள்விகளை எழுப்பி, கடவுளின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்கிற சிந்தனையை விதைக்கிறது இன்றைய திருப்பாடல். இறைவனுடைய நிறைவான ஆசீர்வாதத்தைப் பெற்று, அவருடைய பிள்ளையாக வாழ வேண்டும் என்பதே, நம்முடைய வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பது ஆசிரியரின் அறிவுரையாக இருக்கிறது.

இன்றைய சமுதாயத்தில் தவறான வழிகள் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும், கவர்ந்திழுக்கிறதன்மை உடையதாகவும் இருக்கின்றன. நல்ல சிந்தனைகள், விழுமியங்கள் அவர்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை. தவறான வழியில் செல்கிறவர்கள் அழிவைத்தான் சந்திக்க வேண்டி வரும் என்கிற எச்சரிக்கை உணர்வை இந்த திருப்பாடல் அழுத்தமாக பதிவு செய்கிறது. நல்ல விதைகளும், பதரும் இருக்கிற இடத்தில் காற்று வீசுகிறபோது, பதர்கள் வெகு எளிதாக காற்றினால் அடித்துச் செல்லப்படும். நல்ல விதைகளைப் போல, பதரினால் நிலைத்து நிற்க முடியாது. அதேபோல பொல்லார் அதாவது தவறான வழியில் செல்கின்றவர்கள், அழிவைத்தான் தேடுவர் என்று ஆசிரியர் சாடுகிறார். தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறவர்களை நல்வழிக்கு அழைக்கிறார்.

ஆண்டவருக்குரியதை நாம் அனைவரும் நாட வேண்டும். ஆண்டவருக்குரியதை நாடுகிறபோது, அவரது வழியில் நடக்கிறபோது, நம்முடைய வாழ்க்கை எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்றதாக அமைகிறது. அது வாழ்வதற்கு கடினமானதாக இருந்தாலும், மகிழ்வையும் நிறைவையும் தரக்கூடியதாக இருக்கிறது. இறைவன் முன்னிலையில் மாசற்றவர்களாக வாழ்வோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

கடவுளின் திருவுளம்

கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்று சொல்வார்கள். ”நாங்கள் பயனற்ற ஊழியர்கள், எங்கள் கடமையைத்தான் செய்தோம்” என்று இறைவார்த்தை நமக்குச் சொல்கிறது. நமது செப வாழ்வு இப்படிப்பட்ட வாழ்வாகத்தான் இருக்க வேண்டும் என்பதை, இயேசு நமக்குக் கற்றுத்தருகிறார். கடவுளிடத்தில் நாம் நம்பிக்கையோடு கேட்பது நிச்சயமாக நமக்குக் கிடைக்கும். அந்த நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? என்பதுதான், அடிப்படை கேள்வி.

பொதுவாக நமது நம்பிக்கை எதிர்பார்ப்பு நிறைந்த நம்பிக்கையாக இருக்கிறது. அந்த எதிர்பார்ப்புகள் நடைபெறுகிறபோது, நமது நம்பிக்கை மிகுதியாகிறது. அந்த எதிர்பார்ப்பு நடைபெறாதாபோது, நம்பிக்கை குறையத்தொடங்குகிறது. இதுதான் நமது விசுவாச வாழ்வாக இருக்கிறது. இது விசுவாசத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டம். ஏனென்றால், நாம் கேட்டது கிடைக்காதபோது, கடவுளை கேள்வி கேட்பதற்கு நமக்கு உரிமையில்லை. பணியாளர் என்றைக்கும் தலைவருக்கு கட்டுப்பட்டவர் தான். ஆனால், நாம் செய்ய வேண்டிய கடமையை நாம் செய்ய வேண்டும். கடவுளிடத்தில் நமது தேவைக்காக செபிப்பது நமது உரிமை என்றும் சொல்லலாம், கடமை என்றும் சொல்லலாம். எதிர்பார்ப்பு இல்லாமல், கடவுளுக்கு திருவுளமானால் நடக்கட்டும் என்பதுதான், நமது செபமாக இருக்க வேண்டும். நாம் கேட்பதை, கடவுளிடத்தில் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

இன்றைக்கு நாம் செபிக்கிறபோது, நாம் கேட்பது அப்படியே நடந்து விட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதுதான், நமது விசுவாச வாழ்வின் சறுக்கலாகவும் அமைகிறது. அதனை நாம் மாற்றியமைக்க முயற்சி எடுக்க வேண்டும். கடவுளின் திருவுளத்திற்கு பணிந்து நடக்கக்கூடிய சிறந்த ஆன்மீகத்தை நாம் கற்றுக்கொள்ள, முயற்சி எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

தேவையும், நிறைவும்

இயேசு எத்தனையோ முறை செபித்திருப்பார். கடவுளிடத்தில் செபம் வழியாக இணைந்திருப்பார். சீடர்களும் நிச்சயமாகக் கவனித்திருப்பார்கள். யூதர்களைப் பொறுத்தவரையில் செபம் என்பது அவர்களது வாழ்க்கையின் அங்கம். எனவே நிச்சயம் சீடர்களுக்கு செபிக்கத் தெரியாது என்பது கிடையாது. அப்படியென்றால் ஏன் சீடர்கள், இயேசுவைக் கேட்க வேண்டும்? எதற்காக செபிக்கக் கற்றுத்தர வேண்டும் என்று, ஆசைப்பட வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லாமல் இல்லை.

சீடர்களுடைய இந்த நடவடிக்கை கிட்டத்தட்ட ஒரு குழந்தையின் மனநிலையைப் போலத்தான் இருக்கிறது. ஒரு குழந்தை ஏதாவது வைத்திருந்தால், அதையே மற்றொரு குழந்தையும் கேட்கும். தன்னுடைய வீட்டில் எத்தனையோ, அதைவிட சிறப்பான விளையாட்டுப் பொருட்கள் இருந்தாலும், அதைத்தான் கேட்கும். சீடர்கள் செபிக்க வேண்டும் என்பதற்காகக் கேட்கவில்லை. மாறாக, யோவான் தம் சீடர்களுக்கு செபிக்கக் கற்றுக்கொடுத்தது போல, தங்களுக்கு கற்றுக்கொடுக்க அழைப்பு விடுக்கிறார்கள். தேவை என்பதை விட, பகட்டிற்காக, பார்வைக்காக நம்மில் பல செயல்பாடுகளில் இறங்குகிறோம்.

இந்த சமுதாயம் நுகர்வுக்கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனக்கு எது தேவையோ அதை வாங்க வேண்டும் என்பதை விட, எதுவெல்லாம் இருக்கிறதோ, அதையெல்லாம் வாங்க வேண்டும் என்கிற அந்த நுகர்வுக்கலாச்சாரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி வாழ்வது, தேவையில் இருக்கிறவனுடைய உடைமைகளை நாம் பறித்துக் கொள்வதற்குச் சமம். நிறைவோடு வாழ பழகிக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

இறைநம்பிக்கையும் செப வாழ்வும்

பாலஸ்தீனப்பகுதியில் பயணம் செல்கிறவர்கள் மாலையில் பயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஏனென்றால், பகல் நேரத்தில் சூரியனுடைய தாக்கம் அதிகமாக இருக்கும். மத்திய கிழக்குப்பகுதியில் விருந்தோம்பல் ஒரு புனிதமான கடமையாகக் கருதப்பட்டது. எல்லா வீடுகளிலும் ரொட்டியை சமைத்து உண்பதை வழக்கமாகக்கொண்டிருந்தனர். ஆனால், தேவைக்கேற்ப மட்டுமே சமைத்தனர். பகல் முழுவதும் வீடுகள் திறந்திருக்கும். எல்லாநேரமும் விருந்தினர்களை வரவேற்க தயார் நிலையில் இருப்பதைக் குறிக்கிறது. வீடுகள் ஒரு அறையையும், ஒரு சன்னலையும் கொண்ட சிறிய வீடுகளாகத்தான் இருந்தன. குடும்பத்தினர் அனைவரும் ஒரே இடத்தில் தான் இரவில் தூங்குவர். எனவே ஒருவர் எழுந்தாலும், மற்றவருக்கு அது இடறலாகத்தான் இருக்கும்.

இயேசு சொல்கிற உவமையிலே வருகிற நபரின் வீட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிற விருந்தினர் ஒருவர் வந்திருக்க வேண்டும். இல்லையென்றால், வீட்டு உரிமையாளர் முன்பே அவர் வருகையை எதிர்பார்த்து விருந்தினை ஏற்பாடு செய்திருப்பார். இரவு நேரத்தில் வந்தாலும், விருந்தினரை கவனிப்பது அவரது கடமை. உணவு கொடுப்பதற்கு ஒன்றுமில்லாமல் அவருடைய நிலை ஏறக்குறைய தர்மசங்கடமான நிலை. வேறு வழியில்லாமல்தான் தனது நண்பரை தொந்தரவு செய்ய வேண்டிய நிலை. இரவில் ஒருவரைத்தொந்தரவு செய்வது சரியில்லை எனினும் வேறு வழியில்லாமல் அவர் தனது நண்பரை எழுப்புகிறார். இந்த நிகழ்வை இடைவிடாத செபத்தின் பலனுக்கு இயேசு ஒப்பிடுகிறார். இந்த உவமையைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையென்றால், கடவுளையும் தவறாகப்புரிந்து கொள்வோம். நாம் தொடர்ந்து கேட்டால்தான் கடவுள் தருவர் என்று நினைக்கக்கூடாது. நமக்கு கடவுள் தராதது கூட, அவருடைய பதில்தான். நமக்குத் தேவையென்றால் கடவுள் நிச்சயம் தருவார். சில வேளைகளில் பொறுத்துத் தருவார். எது எப்படியெனினும், எந்த பதிலும் கடவுளின் அன்பின் ஆழத்தைக்குறிக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

நாம் கடவுளிடம் கேட்டது கிடைத்தால் தான் கடவுள் நம்மீது அன்பு வைத்திருக்கிறார் என்று எண்ணுவது கடவுளைப்பற்றிய தவறான பார்வையைக்கொடுக்கும். மாறாக, நாம் கேட்காமலே கடவுள் தருவார் என்ற நம்பிக்கை வைத்திருப்பது, கடவுளோடு இன்னும் நெருங்கி வர உதவி செய்யும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

விடாப்பிடியான செபம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று செபத்தின் வலிமையைப் பற்றி ஆண்டவர் இயேசு கூறும் உவமைக்கு செவிமடுக்கிறோம். அருமையான உவமை. நண்பரிடம்கூட உதவி கேட்க முடியாத இக்கட்டான நேரம் நள்ளிரவு நேரம். அந்த நேரத்தில் கதவைத் தட்டி உதவி கேட்பரிடம் மறுத்துப் பேசியபின்னும், நண்பர் என்பதற்காக அல்லாது, தொல்லையின் பொருட்டாவது கேட்ட உதவியைக் கொடுத்துவிடுவது மனித இயல்பாக இருக்கிறது என்று உளவியல் வழி பாடம் சொல்கிறார் இயேசு. மனித இயல்பே தொந்தரவுக்குப் பணிகிறதே, இறை இயல்பு நிச்சயம் பரிவு கொள்ளும் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் இயேசு. விடாப்பிடியாய் என்று சொல்லாடல் நண்பரின் முயற்சிக்கு அணி சேர்க்கிறது.

நாமும் விடாமுயற்சியுடன், தளரா நம்பிக்கையுடன் இறைவனை நோக்கி மன்றாட வேண்டும் என்று அழைக்கிறார் இயேசு. எனவே, நமது நம்பிக்கையைக் கொஞ்சம் ஆழப்படுத்திக் கொள்வோம். அத்துடன், விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி என்றும் இயேசு கூறி, எதற்காக விடாப்பிடியாய் மன்றாட வேண்டும் என்பதையும் தெளிவு படுத்துகிறார். சொந்த வீடு, பதவி உயர்வு, நல்ல மாப்பிள்ளை போன்ற தேவைகளுக்காக விடாப்பிடியாய் மன்றாடுவதைவிட தூய ஆவியின் ஞானத்திற்காக இடைவிடாமல் மன்றாடுவது சிறப்பானது.

மன்றாடுவோம்: கொடைகளின் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நன்றி கூறுகிறோம். எங்களுடைய தேவைகளில் சலிக்காமல் உம்மை நோக்கி மன்றாட அழைப்பு விடுப்பதற்காக நன்றி. தந்தையே, அனைத்திற்கும் மேலாக தூய ஆவி என்னும் கொடைக்காக உம்மை வேண்டுகிறோம். ஞானத்தின் ஆவியை எங்களுக்குத் தந்து எங்களை நிறைவு செய்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்க நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள்.
அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!' என்றார்'' (லூக்கா 11:13)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இறைவேண்டல் கிறிஸ்தவ வாழ்வில் முக்கிய இடம் வகிக்கிறது. இயேசு இறைவேண்டல் பற்றி அளித்த போதனைகளையும், தாமே இறைவேண்டலில் பல முறை நேரம் செலவிட்டதையும் லூக்கா பதிவுசெய்துள்ளார். பிள்ளைகள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தம் பெற்றோரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்கிறார்கள். பிள்ளைகளுக்கு நல்லது செய்யவே பெற்றோர் விரும்புவர். அதுபோல, கடவுளை நாம் அண்டிச் சென்று நமக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என இயேசு கற்பிக்கிறார். கடவுளிடம் நாம் கேட்பவை எல்லாம் எப்போதும் நாம் கேட்டபடியே கிடைத்துவிடும் என்று கூற முடியாது. ஆனால் கடவுள் நமக்குத் தம் நற்கொடைகளையே தருவார் என்பது மட்டும் உறுதி.

-- நாம் கடவுளிடம் கேட்பது நமக்குக் கைகூடாவிட்டாலும் ஒன்று மட்டும் உறுதியாக நமக்கு அளிக்கப்படும். அந்த நற்கொடையின் பெயர் ''தூய ஆவி''. இயேசுவே இதைத் தெளிவாகப் போதித்துள்ளார்: ''விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பார்'' (காண்க: லூக் 11:13). இது நமக்குச் சிறிது வியப்பாக இருக்கலாம். நாம் கேட்கும் மன்றாட்டு எதுவாக இருந்தாலும் கடவுள் நமக்குத் ''தூய ஆவியை''க் கொடுப்பார் என்பதன் பொருள் என்ன? தூய ஆவி என்பது கடவுளிடமிருந்து நமக்கு வழங்கப்படுகின்ற கொடை. கடவுள் நம்மோடு தங்கியிருந்து நம்மை அன்போடு வழிநடத்துகிறார் என்பதற்கு அவர் நமக்கு வழங்குகின்ற தூய ஆவியே சான்று. கடவுளிடமிருந்து வருபவர் தூய ஆவி; அவரே கடவுளாகவும் இருக்கிறார். எனவே, நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்வோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உறுதியாகத் தூய ஆவி வழங்கப்படும். கடவுள் வழங்கும் தூய ஆவி நம்மில் ''வல்லமையோடு'' செயலாற்றுபவர். நம்மை உண்மை வழியில் இட்டுச் செல்பவர். நன்மை தீமையை வேறுபடுத்தி உணர நமக்குச் சக்தி தருபவர். எனவே, நாம் நம்பிக்கையோடு கடவுளிடம் வேண்டுதல் செய்யும்போது கடவுளின் துணை நமக்கு உண்டு.

மன்றாட்டு
இறைவா, எங்கள் மன்றாட்டுகளுக்குச் செவிமடுத்து எங்களை வழிநடத்தும் உம்மை எந்நாளும் நம்பி வாழ்ந்திட அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்;
தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்;
தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்'' (லூக்கா 11:9)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கேட்டல், தேடல், தட்டுதல் ஆகிய செயல்களில் மனித ஈடுபாடு துலங்குவதைக் காணலாம். அந்த ஈடுபாடு தீவிரமாகும்போது அதன் விளைவாக மனிதர் கேட்டதைப் பெறுவார்கள்; தேடியதைக் கண்டடைவார்கள்; தட்டிய கதவு திறப்பதை உணர்வார்கள். கடவுளை நோக்கி நாம் வேண்டுதல் செய்யும்போது நமக்குத் தேவையானவற்றைக் கேட்கிறோம். எனவேதான் இறைவேண்டலுக்கு ''மன்றாட்டு'' என்னும் பெயரும் உண்டு. என்றாலும் இறைவேண்டலை இக்குறுகிய கண்ணோட்டத்தில் நாம் புரிதல் சரியல்ல. இங்கே நாம் இயேசுவின் முன்மாதிரியைக் கடைப்பிடிக்கலாம். அவர் தம் தந்தையாம் கடவுளை நோக்கி வேண்டினார். பல மணி நேரம் இறைவேண்டலில் செலவிட்டார். தந்தையின் விருப்பம் யாதென உணர்ந்து அதைக் கடைப்பிடித்தலே இயேசுவின் வாழ்க்கைத் திட்டமாக இருந்தது. தம்மைப் போலத் தம் சீடரும் இறைவேண்டலில் ஈடுபட வேண்டும் என இயேசு கேட்டார்.

-- நாம் கேட்டது கிடைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது இறைவேண்டலின் பண்பாக இருத்தலாகாது. நம் உள்ளத்தைக் கடவுளை நோக்கி எழுப்புதலே இறைவேண்டல். கடவுளின் முன்னிலையில் தாழ்ச்சியோடு நம்மை நிறுத்தும்போது அங்கே இறைவேண்டல் நிகழ்கிறது. நம் கவலைகளையும் கலக்கங்களையும் களைந்துவிட்டு, இறைப்பிரசன்னத்தின் அமைதியில் நாம் புகும்போது நம் இறைவேண்டல் அர்த்தமுள்ளதாகும். நம்மைக் கடவுளின் கைகளில் முழுமையாக ஒப்படைத்துவிட்டால் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதைச் செயலாக்க நாம் முன்வருவோம். தூய ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டு, அவருடைய உந்துதலுக்கு நம்மைப் பணிவுடன் கையளித்துச் செயல்பட நாம் அழைக்கப்படுகிறோம். நம் இதயத்தில் தூய ஆவியின் சக்தியை நாம் உணர்ந்து, கடவுளிடத்தில் முழுமையாக நம்பிக்கை வைத்து, அவருடைய பாதுகாப்பில் நம்மைக் கையளிப்பதே உண்மையான இறைவேண்டல், நிறைவான மன்றாட்டு. அப்போது நாம் கேட்பதும் தேடுவதும் கடவுளின் புகழாக இருக்கும்; நாம் கடவுளின் இதயக் கதவுகளைத் தட்டும்போது அவர் நம்மைத் தம் இல்லத்தில் ஏற்று நம்மை அன்பின் அரவணைப்பில் பிணைத்திடுவார்; நாமும் இறையன்பு என்னும் ஆழ்கடலில் மூழ்கித் திளைத்திடுவோம்.

மன்றாட்டு
இறைவா, உம்மை நோக்கி மன்றாடும்போது எங்களை முழுமையாக உம்மிடம் கையளிக்க அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

செபிப்போம் .. பெறுவோம்.

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நம் இறைவன் எப்போதுமே கேட்பதற்கு மேலாக கொடுப்பவர். கேட்ட யாருக்கும் மறுப்பவர் அல்ல. தட்டிய எவருக்கும் தம் இதய கதவைத் திறக்க மறுத்தவர் அல்ல. தேடிய எவருக்கும் கண்பட மறைந்தவரும் அல்ல. மறுத்தவரும் அல்ல.

"விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!" தந்தை இறைவன் ஒருவருக்கு கொடுக்கின்ற மிகப் பெரிய, சிறந்த கொடை, பொன் பொருள், சொத்து சுகம் அல்ல, தூய ஆவியே. தூய ஆவியே தந்தை இறைவனின் உன்னத கொடை. நசரேத்தூர் இயேசவை, கிறிஸ்துவாக, மெசியாவாக, மீட்பராக உயர்த்தியது இந்த ஆவியே. வெறுமையை நிறைவுறச் செய்யும் வல்லமையும் இழந்ததை மீட்கும் வல்லமையும் அனைத்தையும் புதுப்படைப்பாக்கும் ஆற்றலும் உடையது இந்த ஆவி. இதற்கு மேல் வேறு என்ன கொடுக்க வேண்டும்.

நம் இறைவன் தொல்லையின் பொருட்டு கொடுப்பவர் அல்ல. அன்பால் அள்ளி வழங்குபவர். நண்பனுக்கு மட்டும் கொடுப்பவர் அல்ல. எதிரிக்கும் ஏராளமாய் கொட்டிக் குவிப்பவர். மீன் கேட்பவர்களுக்கு பாம்பைக் கொடுத்து ஏமாற்றுபவர் அல்ல. முட்டை கேட்பவர்களுக்கு தேளைக் கொடுத்து சமாளிப்பவர் அல்ல. கொடுப்பவர்களுக்கு அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படி அழந்து மடியில் போடுபவர் (லூக்6'39).

கேட்போம், தேடுவோம், தட்டுவோம்,கொடுப்போம். அதிகமாக பெறுவோம்.

 

 

 

--அருட்திரு ஜோசப் லீயோன்