முதல் வாசகம்

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28

ஆண்டவர் கூறியது: நான் இஸ்ரயேலுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: என் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும். அவர்களோ செவிசாய்க்கவும் இல்லை; கவனிக்கவும் இல்லை. பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்; முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள். உங்கள் மூதாதையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து என் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன். அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை; கவனிக்கவில்லை; முரட்டுப் பிடிவாதம் கொண்டு தங்கள் மூதாதையரைவிட அதிகத் தீச்செயல் செய்தனர். நீ அவர்களிடம் இச்சொற்களை எல்லாம் கூறுவாய்; அவர்களோ உனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். நீ அவர்களை அழைப்பாய்; அவர்களோ உனக்குப் பதில் தரமாட்டார்கள். தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 95: 1-2. 6-7. 7-9

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்.

1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;
புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். -பல்லவி
6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்;
நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;
நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். -பல்லவி

7b இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!
8 அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல்,
உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்;
என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். -பல்லவி



நற்செய்திக்கு முன் வசனம்

`இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்,' என்கிறார் ஆண்டவர்.

 

லூக்கா 11:14-23

தவக்காலம், வாரம் 3 வியாழன்

 

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 14-23

ஒரு நாள் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டினார். பேய் வெளியேறவே, பேச்சற்ற அவர் பேசினார். கூட்டத்தினர் வியந்து நின்றனர். அவர்களுள் சிலர், ``பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்'' என்றனர். வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர். இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது: தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே. நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள். நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா! வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக்கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார். என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

லூக்கா 11: 14 – 23
நான் நானாகவே

இந்த சமுதாயத்தில் வாழும் நாம் ஏதாவது ஒரு வழியில் அவரைப் போன்று வாழ வேண்டும் என ஆவல் கொள்கின்றோம். அது சினிமா துறை நடிகர்கள் போன்று இருக்கலாம், சமுதாய தலைவர்கள் போன்று இருக்கலாம், பண்டைய கால மன்னர்கள் போன்று கூட இருக்கலாம். ஆனால் யாருமே அவர்களாக வாழ முயற்சி எடுக்கவில்லை. அதனால் தான் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டான்ஸ்லி கூறுவார். மனிதர்களின் கண்கள் படைப்பில் மட்டுமல்ல, அன்றாட நடைமுறையில் மட்டுமல்ல, அனுதினமும் அடுத்தவனை நோக்கியே இருக்கிறது. இது தான் அவனின் வளர்ச்சிக்கு தடையாகவும் உறவுக்கு விரிசலாகவும் அமைகிறது என்பார். இது முற்றிலும் உண்மை.

ஆனால் இறைமகன் இயேசு தானாக, தன் தந்தை தனக்கு அருளிய தூய ஆவியின் துணையோடு வாழ முயற்சி எடுக்கின்றார். அந்த முயற்சியின் வெளிப்பாடு தான் இன்றைய குணமளிக்கும் நிகழ்வு. இயேசு – பேய் பிடித்தவர் சந்திப்பு, சிறிது நேரம் இயேசு – பேய் சந்திப்பாக மாறுகிறது. யூத மரபுப்படி பேய் ஓட்டியவர்கள், பிடித்திருந்த பேயின் பெயர் கேட்டு அறியும்போது அதனுடைய சக்தி குறைந்து விடும் என கருதினர். இதே முறையைப் பேய் பிடித்தவரும் கையாண்டு பேய் ஓட்டுபவரின் வல்லமையைக் குறைக்க முயற்சி செய்வதும் அன்றைய வழக்கில் இருந்தது. அதனால் தான் இயேசுவை பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே பேயை ஓட்டுகிறான் என்றார்கள். காரணம், பெலிஸ்தியர்கள் அரசரை கடவுளாக வணங்கினார்கள். அவர்களின் பெயர் ‘பால்சபல்’ என்று கூறுவார்கள். அவரை இவர்கள் தீய ஆவி பிடித்தவனாக கருதினார்கள். அதனால் தான் ‘பெயல்செபூல்’ என்று அழைத்தார்கள். ஆனால் இயேசு கடவுளின் துணையைால் புதுமைகள் செய்கின்றார். அதனை இவர்கள் தட்டிக் கழிக்கவும், மறைக்கவும் முடிவு செய்தார்கள். அதனால் தான் இயேசு கோபம் கொள்கின்றார்.

நாம் யாரைப் போல செயல்பட விரும்புகிறோம். கடவுள் நமக்கு வழங்கிய தூய ஆவியின் தூண்டுதலாகவா அல்லது சமுதாயத்தில் காணப்படுகின்ற போலி மனிதர்களைப் போலவா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

========================

லூக் 11 : 14-23
இரட்டை நிலைப்பாட்டைக் களைய

இன்றைய நற்செய்தியை வாசித்தவுடன் ஒரு நகைச்சுவைதான் நினைவுக்கு வந்தது. “உனக்கு வந்தா இரத்தம் எனக்கு வந்தா தக்காளிச் சட்னியா” என்ற நகைச்சுவை. இது சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் நம்மை அழைக்கிறது. இதில் சிந்திக்க என்ன இருக்கிறதென்றால் நம்முடைய இரட்டை வேடம். இந்த வேடத்தை தேவைக்கு ஏற்றவாறு போட்டுக் கொள்கிறோம். தேவையில்லை என்றால் நாம் கழற்றி எறிந்து விடுகிறோம். இதனையே இன்றைய நற்செய்தியில் நம்மால் காணமுடிகிறது. பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து, ‘நீர் பேய்களின் தலைவரைக் கொண்டே பேய் ஓட்டுகிறீர்’ என்கிறார்கள். ஆனால் அவர்களைச் சார்ந்தவர்கள் செய்கின்ற வல்ல செயல்கள் அனைத்தும் கடவுளின் வல்லமையால் நடக்கிறது என்கிறார்கள். இதைத்தான் பலநேரங்களில் பரிசேயத்தனம் என்போம். இந்த இரட்டை நிலைப்பாட்டைக் களையவே இன்றைய நற்செய்தியும் தவக்காலமும் நம்மை அழைக்கிறது.

சில இரட்டை நிலைகள் :
• நான் எதையாவது சாதித்தால் அது என்னுடைய திறமையினால் என்கிறேன். அதையே மற்றவர்கள் சாதித்தால் ஏதோ அதிர்ஷ்டத்தால் செய்து முடித்தான் என்கிறேன்.
• எனது பிரச்சனைகளைப் பற்றிப் பேசும்போது நான் வழக்கறிஞர் ஆகிறேன். அடுத்தவர் பிரச்சனையிலோ உடனடியாக நான் நீதிபதியாகி விடுகிறேன்.
• நான் திருப்பலிக்குச் செல்லாவிட்டால் உடல்நிலை சரியில்லை. அதுவே அடுத்தவர் திருப்பலிக்கு வரவில்லை என்றால் சோம்பேறித்தனம் என்கிறேன்.
• நான் எது செய்தாலும் சாமர்த்தியமாகச் செய்கிறேன். மற்றவர்கள் எது செய்தாலும் அறிவு கெட்டத் தனமாகச் செய்கிறார்கள் என்கிறேன்.
• நான் அலைபேசியை அர்த்தமுள்ள வகையில் எனது படிப்பிற்காகவே பயன்படுத்துகிறேன். மற்றவர்கள் அதைப் பொழுது போக்கிற்காகத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிறேன்.

இன்னும் நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ இரட்டை நிலைப்பாடுகளை, இரட்டை முகமூடிகளைக் கொண்டு வாழ்ந்து வருகிறோம் . இதனைக் களைய அவரோடு இருப்பவர்கள் அவரின் துணையை இன்னும் அதிகமாக பெற வேண்டுவோம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 95: 1 – 2, 6 – 7a, 7b – 9
”உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்”

விடுதலைப்பயணம் 17 வது அதிகாரத்தில் இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து திரும்பி வந்த பயணத்தைப் பார்க்கிறோம். இஸ்ரயேல் மக்கள் இரபிதீம் என்கிற இடத்தில் பாளையம் இறங்கினர். அங்கே அவர்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. எங்கும் வறண்ட பாலைநிலம். மக்கள் மோசேக்கு எதிராகவும், கடவுளுக்கு எதிராகவும் முணுமுணுக்கத் தொடங்கினர். ஆண்டவர் அந்த பாலைநிலத்திலும் அற்புதமாக அவர்கள் தண்ணீர் பருகச்செய்தார்.

இந்த நிகழ்ச்சியில், இஸ்ரயேல் மக்களைச் சோதனைக்குள்ளாக்கியதாக நாம் பார்க்கிறோம். அது என்ன சோதனை? கடவுள் இவ்வளவுக்கு இஸ்ரயேல் மக்களுக்கு நன்மைகளைச் செய்திருக்கிறார். ஆனால், இஸ்ரயேல் மக்கள் அதனை கருத்தில் கொள்ளாமல், அற்ப காரணங்களுக்காக கடவுளையே சோதித்தனர். கடலை அற்புதமாக இரண்டாகப் பிளக்கச்செய்த கடவுளுக்கு, எகிப்திய நாட்டையே கதிகலங்க வைத்த இறைவனுக்கு, அவர்களின் தாகத்தைத் தணிப்பது பெரிய காரியமா என்ன? அவர்கள் பொறுமையாக, கடவுளின் வல்லமையை உணர்ந்து தண்ணீர் கேட்டிருந்தாலே, அவர்கள் நிறைவாகப் பெற்றிருப்பார்கள். ஆனால், அவர்கள் கடவுளைச் சோதித்தனர். முணுமுணுத்தனர்.

கடவுளிடமிருந்து ஏராளமான வல்ல செயல்களை நாம் பெற்றிருந்தாலும், அவரின் வல்லமையை நாம் அறிந்திருந்தாலும், நாமும் கூட அற்பக்காரியங்களுக்காக, கடவுளைப் புறந்தள்ளுகிறோம். சோதிக்கிறோம். அதிலிருந்து விடுதலை பெற்றவர்களாக வாழ, முயற்சி எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------

முழுமையான குணம் தருகிறவர் இயேசு

இயேசு உடல் நோய்களை மட்டுமல்ல, உள்ளத்து நோய்களையும், ஆன்மாவின் நோய்களையும் குணப்படுத்த வந்தவர் என்பது இன்றைய நற்செய்தியில் தெளிவாகிறது. இயேசுவை பல நோயாளிகள் தேடி வந்தார்கள். அவர்கள் அனைவருடைய உடல்நோய்களை மட்டுமல்ல, அவர்கள் வழியாக மற்றவர்களுக்கு வாழ்வுக்கு வழிகாட்டும் நெறிகளைக் கற்பித்து, குணம் பெற்றவரும் மனஆறுதல் பெற்றுச்செல்ல இயேசு வழிவகுக்கிறார்.

உதாரணமாக, இயேசு தொழுநோயாளிகளைக் குணப்படுத்துகிற நிகழ்ச்சியை எடுத்துக்கொள்வோம். தொழுநோய் என்பது உடல் சார்ந்த நோய் மட்டுமல்ல, அது மனம் மற்றும் ஆன்மா சார்ந்த நோயும் கூட. ஏனென்றால், தொழுநோய் வந்தவுடனே அவர் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு ஓரங்கட்டப்படுகிறார். அதனால், அவர் மனம் சந்திக்கக்கூடிய பாரங்கள் ஏராளம். அது வெறும் உடல் சார்ந்தது மட்டுமல்ல. ஆன்மாவையே அழிக்கக்கூடியது. தற்கொலை எண்ணம் தோன்றுவது உடல் சம்பந்தப்பட்டது அல்ல. மனம் மற்றும் ஆன்மா சம்பந்தப்பட்டது. எனவேதான், அதனால் உடல்படும் வேதனைகளை அது கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. மனம் முடிவு செய்கிறது. எப்படியாவது அதை செயல்படுத்த வேண்டும் என்று, வலிமையோடு செயல்படுத்தியும் விடுகிறது. ஆக, இயேசுவின் குணப்படுத்துதல் உடல், உள்ளம் மற்றும் ஆன்மா சார்ந்த முழுமையான குணப்படுத்துதல்.

நமது உடலுக்குக் கொடுக்கும் அக்கறையை நமது மனம் மற்றும் ஆன்மாவிற்கும் நாம் கொடுக்க வேண்டும். ஏனென்றால், உடல், உள்ளம் மற்றும் ஆன்மா அனைத்தும் முழுமையான ஆரோக்யத்துடன் இருக்கும்போதுதான், நம்மால் மகிழ்ச்சியோடு வாழ முடியும். இல்லையென்றால், நிறைவில்லாத வாழ்வு தான் நாம் வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுவோடு இருப்போம்

நேர்மையான வழியில் இயேசுவை எதிர்கொள்ளமுடியாத, திராணியில்லாத இயேசுவின் எதிரிகள் அவர் மீது காழ்ப்புணர்ச்சிகொண்டு, ஆதாரமில்லாத பழியை அவர்மீது போடுகிறார்கள். இயேசு பழிச்சொற்களைக்கண்டு பயந்து நடுங்குகிற கோழையல்ல. அவர்களின் வார்த்தைகளைக்கொண்டே வாதத்தைத் தொடங்குகிறார். அவர்களின் தீய எண்ணத்தை முறியடிக்கிறார். இயேசுவின் வல்லமை கடவுளிடமிருந்து அல்ல, பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலிடமிருந்து வருகிறது என்பது அவருடைய எதிரிகளின் குற்றச்சாட்டு. இயேசு அவர்களுக்குத் தருகிற பதில்: ‘நான் பெயல்செபூலைக்கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால், உங்களைச்சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? என்பது. பாலஸ்தீனத்திலே பேயை ஓட்டுகிறவர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் சாலமோன் பேய் ஓட்டுவதற்கு கண்டுபிடித்த ஒருசில முறைகளை கையாண்டு பேய்களை ஓட்டிவந்தனர். அதை மக்கள் ஏற்றுக்கொண்டனர். எனவேதான், இயேசு அவர்களிடம் இப்படியொரு கேள்வியைக்கேட்கிறார். இயேசுவை அவர்கள் குற்றம் சாட்டுவது அவர்கள் மீதே அவர்கள் குற்றம்சாட்டுவதற்கு சமம்.

இயேசுவோடு இராதவர்கள் கடவுளோடு இல்லை என்பதாக இயேசு சொல்கிறார். “என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்”. இயேசுவோடு இணைந்திருக்க வேண்டும் என்ற அழைப்பு நமக்கு விடுக்கப்படுகிறது. நாம் இயேசுவோடு இணைந்திருக்கவில்லை என்றால், அதனுடைய பொருள் நாம் இயேசுவுக்கு எதிரானவர்களாக மாறிவிடுகிறோம். நாம் நடுநிலையானவர்களாக இருக்க முடியாது. ஒன்று இயேசுவோடு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், நாம் இயேசுவுக்கு எதிரானவர்களாகவே கருதப்படுவோம். மதிப்பீடுகள் எவற்றோடும் நாம் எந்தச்சூழ்நிலையிலும் சமரசம் செய்துகொள்ள முடியாது என்பதுதான் இயேசு நமக்கு கற்றுத்தரும் பாடம். நீதிக்காக நாம் குரல் கொடுக்காமல் ஒதுங்கி இருந்தால், அநீதியோடு இருக்கிறோம் என்பதுதான் அர்த்தமே ஒழிய, நான் அநீதிக்கு துணைபோகவில்லை என்று நம்மால் சொல்ல முடியாது.

பலவேளைகளில் இந்த சமூகத்திலே வாழ்ந்தாலும், அதிலிருந்து விலகியே வாழ்ந்துவருகிறோம். உண்மை சிதைக்கப்படும்போது, நமக்கென்ன? இதற்கும் நமக்கும் தொடர்பு இல்லை என்பதுபோல, பாராமுகமாய் இருக்கிறோம். அதுவும் உண்மையை குழிதோண்டிப் புதைப்பதற்கு சமம்தான். இந்த சமூகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுகம் என்னை ஏதாவது ஒருவகையில் உந்தித்தள்ள வேண்டும். அதுதான் இந்த சமூகத்தோடு மட்டுமல்ல, இயேசுவோடும் இணைந்திருப்பதற்கான வழி.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

உடைமைகள் பாதுகாப்பாக இருக்கின்றனவா?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறைவல்லமையினாலேதான் தாம் பேய்களை ஓட்டுவதாக இயேசு வாதாடுகிறார். அவ்வாறு அவர் முன்வைக்கும் வாதங்களுள் ஒன்று: "வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக்கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்".

இந்த வரிகளை இன்றைய தியானப் பொருளாக எடுத்துக்கொள்வோம். நமது ஆன்மீக வாழ்வும், ஆன்மீக உடைமைகளும் பாதுகாப்பாக இருக்கவேண்டுமென்றால், வலியவர் ஒருவர் ஆயுதம் தாங்கி நம்மைக் காக்க வேண்டும். நமது சொந்த வலிமையில் நம்பிக்கை கொண்டு, நம்மையே நாம் காத்துக்கொள்ள முயன்றால், நம்மைவிட வலிமைமிக்க அலகை வந்து, நமது படைக்கலங்களையும் பறித்துக்கொண்டு நம்மை வென்றுவிடுவான். ஆனால், நாம் தூய ஆவியினால் பாதுகாக்கப்பட்டால், அலகை நம்மை வெற்றி பெற முடியாது.

செபம், இறைநம்பிக்கை, இறைவார்த்தை... இவையே நமது படைக்கலங்கள். இவற்றோடு, தூய ஆவியின் துணையும், ஆற்றலும் நமக்குத் தேவை. எனவே, நம்மைப் பாதுகாக்கும் நம் ஆண்டவரிடம் நம்மை ஒப்புக்கொடுத்து, அவர் துணை வேண்டுவோம். இல்லாவிட்டால், நம்மைவிட வலிமைமிக்க அலகை நம்மைத் தாக்கி வெல்வான்.

மன்றாடுவோம்: உலகின் ஒளியான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் எங்கள் சொந்த வலிமையில் நம்பிக்கை கொள்ளாமல், உமது அருள்துணைக்காக, அருள்காவலுக்காக மன்றாடுகிறோம். உமது தூய ஆவியின் துணையை எங்களுக்குத் தந்தருளும். எங்கள் ஆன்மீக உடைமைகளைக் காத்துக்கொள்ள அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

இணையதள உறவுகளே

பிளவுபடும் எதுவும் அழிந்துவிடுவது உறுதி. அது கட்டடமாக இருக்கலாம். நிறுவனமாக இருக்கலாம். குடும்பமாக இருக்கலாம். தனி மனிதனாகக்கூட இருக்கலாம். நல்லவர்கள் இரண்டு பிரிவாக செயல்பட்டாலும் கதை அதுதான். கெட்டவர்கள் இரண்டு குழுவாக செயல்பட்டாலும் நிலவரம் அதுதான். பிளவு, பிரிவினை என்று வந்தான் இரண்டு பேருமே சிதறி அழிவது மறுக்கமுடியாத உண்மை.

ஆன்மீக வாழ்விலும் இது உண்மை. மனிதனில் நல்லது செய்வது, கெட்டதும் செய்வது என்னும் இருநிலை இருக்குமாயின் அவனது வீழ்ச்சி பின்னால் மறைந்திருக்கிறது என அர்த்தம்.கடவுளும் வேண்டும் சாத்தானும் வேண்டும் என்ற இருமனம் இருந்தால் குழப்பத்திற்கு குறை இருக்காது.நியாயத்தை செய்யவேண்டும், அநீதிக்கும் ஆமாம் போட வேண்டும்.கெடுவது உறுதி. உண்மையைச் சொல்ல வேண்டும், பொய்மைக்கும் தலையாட்டுவது இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைதான்.

நல்லதை. உண்மையை. நீதியை, இயேசுவை பற்றிக்கொண்டு நமக்குள் பிரிவினை உண்டாக்காது வாழ்வோமாயின் வாழ்வில் நிம்மதியும் வெற்றியும் நம்மோடு இருக்கும். நம்மோடு இணைந்து செயல்படாத ஒன்று, நமக்கு எதிராக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.நமக்குள் இருக்கும் எதிரி நம்மை சிதறடிப்பான். "என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்" இயேசுவின் வார்த்தை உண்மையானது.

-ஜோசப் லீயோன்

 

வலியவர் ஆயுதம் தாங்கி.. !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

“வலியவர் ஆயுதம் தாங்கி தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக்கொண்டு கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்” என்னும் இயேசுவின் எச்சரிக்கை மொழிகளை இன்று சிந்திப்போமா?

நமது ஆன்மீக வாழ்வு என்பது ஒரு போராட்டம் நிறைந்த வாழ்க்கை. அதில் நாம் எந்த நிமிடமும் விழிப்பாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் கர்ச்சிக்கும் சிங்கம் போன்ற அலகை நம்மைத் தாக்கி, நமது படைக்கலங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டு, நம் வாழ்வையும் பங்கிட்டுக்கொள்வான். எனவே, நாம் “ஆயதம்” தாங்கி நம் வாழ்வைக் காத்துக்கொள்ள வேண்டும். எந்த “ஆயுதம்”  தாங்கி? இறைவார்த்தை ஓர் ஆயுதம். அன்புச் செயல் என்பது இன்னொரு ஆயுதம். செபம் என்பது இன்னொரு ஆயுதம். இந்த ஆன்மீக ஆயுதங்கள் தாங்கி, நம்மைக் காத்துக்கொள்வோமாக.

மன்றாடுவோம்: வலிமையின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. சோதனைகளில் வீழ்ந்துவிடாதபடி நாங்கள் விழித்திருந்து செபிக்கவும், இறைவார்த்தை என்னும் ஆயுதம் தாங்கி எங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளவும், அன்புச் செயல்களால் எங்களை வலிமைப்படுத்திக்கொள்ளவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------

பின்னைய நிலை !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இதோ நம் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை. ஒருவரைவி;ட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், திரும்ப வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் கண்டு மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத ஏழு ஆவிகளை அழைத்துவந்து அவருள் குடியிருக்கும் என்று ஆண்டவர் எச்சரிக்கிறார். அவரது பின்னைய நிலை முன்னைய நிலையைவிடக் கேடுள்ளதாகும் என்று கூறுகிறார்.

நமது அருள்வாழ்வின் தரம் முன்னேறிக்கொண்டேயிருக்க வேண்டிய ஒன்று. நாம் ஒன்றில் முன்னேற வேண்டும். அல்லது பின்னேற வேண்டும். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை ஒன்றில்லை. வாழ்வின் தரம் உயராவிட்டால், தீமைகள் அதிகரித்துவிடும். நமது வாழ்வின் நல்ல பழக்கங்களை நாம் அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால், கொஞ்சம் கொஞ்சமாக தீய பழக்கங்கள் நம்மை ஆட்கொண்டு, நமது பின்னைய நிலை முன்னைய நிலையைவிடக் கேடுள்ளதாக மாறிவிடும். ஆண்டவரி;ன் இந்த எச்சரிக்கையை மனதில் கொண்டு ஒவ்வொரு நாளும் நம் சொற்கள், செயல்பாடுகள், பழக்கங்கள் பற்றிக் கவனமாயிருப்போம்.

மன்றாடுவோம்: தூய்மையின் இருப்பிடமே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்களிடமுள்ள தீய பழக்கங்களைக் கைவிட்டு, நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிக்க  எங்களுக்கு அருள் தாரும். எங்களது அருள்வாழ்வில் இன்றைய நிலை நேற்றைய நிலையைவிடக் கேடுறாதபடி எங்களைக் காத்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''அவர்களுள் சிலர், 'பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்' என்றனர்.
வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்'' (லூக்கா 11:15-16)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு புரிந்த புதுமைகள் அதிசயமான செயல்களாக மக்களுக்குத் தெரிந்தன. அவ்வாறு மக்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சிய விதத்தில் இயேசு செயல்பட்டதால் ஒருசிலர் அவரைத் தவறாகப் புரிந்துகொண்டனர். அவர்கள் எனவே ''பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இயேசு பேய்களை ஓட்டுகிறார்'' என முடிவுசெய்தனர் (காண்க: லூக் 11:15). கடவுளின் வல்லமை இயேசு வழியாக வெளிப்பட்டது என ஏற்றுக்கொண்டால் இயேசு அறிவித்த செய்தியையும் ஏற்கவேண்டியிருக்கும். ஆனால் கடவுளின் வல்லமைக்கு எதிராகச் செயல்படுகின்ற தீய ஆவிகளின் உதவியோடு இயேசு செயல்பட்டார் என முடிவுசெய்துவிட்டால் கடவுளாட்சி பற்றி இயேசு அறிவித்த செய்தியையும் ஏற்கவேண்டியதில்லை.

-- இவ்வாறு நினைத்தவர்கள் இயேசுவிடமிருந்து ''வேறு அடையாளம்'' எதிர்பார்த்ததாகக் கூறினார்கள். அந்த அடையாளம் ''வானத்திலிருந்து'' வரவேண்டும் எனவும் கேட்டார்கள் (காண்க: லூக் 11:6). இயேசுவின் போதனையை ஏற்கமுடியாது என்று முடிவுசெய்துவிட்ட பிறகு அவர் எவ்வளவு பெரிய அடையாளத்தைக் காட்டினாலும் அவருடைய எதிரிகள் நிறைவடைய மாட்டார்கள். இயேசுவை ஏற்க வேண்டும் என்றால் நம் உள்ளம் அடைபட்டிராமல் திறந்த நிலையில் இருக்கவேண்டும். நம் பார்வையில் நேர்மை வேண்டும். நம் இதயக் கதவுகளை மூடிவிட்ட பிறகு அங்கே கடவுளின் செயல் தோன்றட்டும் என நாம் எதிர்பார்த்தால் அந்த எதிர்பார்ப்பு கானல்நீர் போல மறைந்துபோகும். மாறாக, நம் உள்ளத்தில் கடவுளின் அருள் துலங்கிச் செயல்படும் வண்ணம் நம்மையே அவரிடத்தில் கையளித்துவிட்டால் நம் வாழ்விலும் அதிசயங்கள் நிகழும். கடவுளின் வல்லமை நம் வழியாகவும் வெளிப்படும். ஏனென்றால் கடவுள் மனிதரின் துணையோடுதான் தம் திட்டத்தைச் செயல்படுத்துகின்றார். கடவுளின் செயலை நம் வாழ்விலும் பிறர் வாழ்விலும் கண்டுகொள்ளவும், அதன் ஒளியில் புது மனிதர்களாக உருமாற்றம் அடையவும் வேண்டுமென்றால் கடவுளின் கைகளில் நம்மை முழுமையாகக் கையளித்திட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் வல்லமை எங்கள் வாழ்வில் துலங்குவதைக் கண்டுகொள்ள எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்'' (லூக்கா 10:23)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கடவுளின் ஆட்சியை அறிவித்த இயேசு நாம் அந்த ஆட்சியில் நுழையவிடாமல் தடுக்கின்ற சக்திகளைப் பற்றியும் நம்மை எச்சரிக்கிறார். கடவுளின் சக்தியை எதிர்க்கின்ற சக்திகள் தோல்வியுறுவது உறுதி. ஆனால், நன்மைக்கும் தீமைக்கும் இடையே ஒரு நெடிய போராட்டம் நிகழ்கிறது என்பதை நாம் மறுக்கவியலாது. ஆகவேதான், இயேசுவின் பணியைத் தொடர்ந்து செய்ய நாம் முன்வராவிட்டால் படிப்படியாக நாம் அவருடைய எதிரிகளாக மாறிவிடுகின்ற ஆபத்து உண்டு. இதையே இயேசு சுட்டிக்காட்டுகிறார். நம்மைவிட்டு வெளியேறிய தீய ஆவி மீண்டும் நம்மைத் தேடி வந்துவிட்டால் அதை எதிர்த்துப் போராட நமக்கு இன்னும் அதிக சக்தி தேவைப்டக்கூடும். எனவே, இயேசுவோடு நாம் எப்போதும் இணைந்திருந்து செயல்படவும் தீய ஆவிக்கு நம் உள்ளத்தில் இடம் கொடாமலிருக்கவும் அழைக்கப்படுகிறோம்.

-- நற்செய்தி நூலில் ''நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்'' என்ற சொற்றொடரும் இயேசு வழங்கிய போதனையாக வருகிறது (லூக் 9:50). இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், வெளிப்படையாக இயேசுவின் சீடராகத் தம்மை அடையாளம் காட்டாதவர்களும் மறைமுகமாக இயேசுவைச் சார்ந்திருக்கலாம் என்பதே உண்மை. எனவே, யார்யார் கடவுளின் வழிகளைப் பின்பற்றுகின்றனர் என்பது குறித்துத் தீர்ப்பு வழங்குவதில் நாம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். என்றாலும் இயேசுவைப் பின்செல்ல முடிவெடுத்த பிறகு அவரோடு என்றும் இணைந்திருக்க நாம் இடையறாது முயல வேண்டும். அவ்வாறு ஒரு தொடர்முயற்சியை நாம் மேற்கொள்ளாவிட்டால் நாம் அவருடைய ஆட்சியிலிருந்து பிரிந்துபோய்விடக் கூடும். எனவேதான் இயேசுவை நாம் எந்நாளும் சார்ந்து இருக்கவேண்டும். அப்போது இயேசுவின் பணியைத் தொடர நாம் மகிழ்ச்சியோடு முன்வருவோம். அனைத்து மக்களோடும் இணைந்து செய்யப்பட வேண்டிய இப்பணி முறையாக நிகழுமென்றால், கடவுளின் ஆட்சியில் பங்கேற்க நாம் தயங்கமாட்டோம்; பிறரையும் இறையாட்சிக்குள் கொண்டுவர நாம் துணிந்து செயல்படுவோம்.

மன்றாட்டு
இறைவா, வாழ்க்கைப் போராட்டத்தில் நாங்கள் உம்மோடு சேர்ந்து நின்று செயல்பட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

வேண்டாம் இந்த விபரீதம்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

பலருடைய நிலைப்பாடு மதில்மேல் பூனை, அல்லது கூட இருந்து குழி பறிக்கும் குள்ள நரி. இது நாயா? நரியா? என்று தெறியாத வெளிவேடம். ஒண்ணுல கூட்டணி என்று சொல்லு அல்லது எதிரணி என்று சொல்லு. மூன்றாம் அணி என்று சொல்லும்போதே விவகாரம் விஷ்வ ரூயஅp;பம் எடுக்கத் தொடங்கிவிடுமல்லவா.

"என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்" உண்மை. ஆன்மீகத்தில் மூன்றாவது அணிக்கு இடமே இல்லை. அருள் வாழ்வில் இடைப்பட்ட நிலைக்கு வாய்ப்பே இல்லை. ஒன்றில் ஆண்டவனோடு அல்லது அலகையோடு, அருளோடு அல்லது இருளோடு. நீதி அல்லது அநீதி, உண்மை அல்லது பொய்மை இதுதான் நியதி.

பெயல்சபூலுடன் பேச்சுவார்த்தை வைத்து இறையரசு அமைக்க இயேசு ஒருபோதும் விரும்பியதில்லை. அலகையுடன்; சமரசம் செய்து இறையரசை தக்க வைக்க இயேசுவின் அரசுக்கு அவசியமில்லை. இரட்டை வேடம், இரட்டை வாழ்க்கை இயேசுவுக்கு ஏற்புடையது அல்ல. "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது"

இத்தகைய இரட்டை நிலை, எப்பொழுதும் எதிரிக்கு பின் வாசலை திறந்தே வைத்திருக்கும். எந்த நேரத்திலும் வெளியே அனுப்பியவர்கள் தோரணையோடு உள்ளே வருவார்கள். அப்புறம் "பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்."

கடவுளின் சார்பில், அவரோடு மட்டும் இருப்போம். நமக்கு குறை இருக்காது.

--அருட்திரு ஜோசப் லீயோன்