முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-8

சகோதரர் சகோதரிகளே, இதுகாறும் கூறியவை நம் இனத்தின் தந்தையாகிய ஆபிரகாமுக்கு எப்படிப் பொருந்தும்? தாம் செய்த செயல்களினால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராகியிருந்தால், பெருமை பாராட்ட அவருக்கு இடமுண்டு; ஆனால் கடவுள் முன்னிலையில் அவர் அப்படிப் பெருமை பாராட்ட இடமே இல்லை. ஏனெனில், மறைநூல் கூறுவதென்ன? ``ஆபிரகாம் கடவுள் மீது நம்பிக்கை கொண்டார்; அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்.'' வேலை செய்தவர் பெறும் கூலி, நன்கொடையாகக் கருதப்படுவது இல்லை; அது அவர்கள் உரிமை. தம் செயல்கள் மீது நம்பிக்கை வையாது, இறைப்பற்று இல்லாதோரையும் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுள்மீது நம்பிக்கை வைப்போரை, அவரது நம்பிக்கையின் பொருட்டுக் கடவுள் தமக்கு ஏற்புடையோர் எனக் கருதுகிறார். அவ்வாறே, கடவுள் ஒருவருடைய செயல்களைக் கணிக்காமலே, அவரைத் தமக்கு ஏற்புடையவர் எனக் கருதுவதால் அம்மனிதர் பேறுபெற்றவர் என்று தாவீது கூறியிருக்கிறார்: ``எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப் பட்டதோ அவர் பேறுபெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலைக் கருத்தில் கொள்ளவில்லையோ அவர் பேறுபெற்றவர்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 32: 1-2. 5. 11
பல்லவி: என் புகலிடமான ஆண்டவரே, உம் மீட்பின் ஆரவாரம் ஒலிக்கின்றது.

1 எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம்
மறைக்கப் பட்டதோ, அவர் பேறுபெற்றவர்.
2 ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ,
எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். -பல்லவி

5 `என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்;
என் தீச்செயலை நான் மறைத்ததில்லை;
ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்' என்று சொன்னேன்.
நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். -பல்லவி

11 நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்;
நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! அல்லேலூயா.

லூக்கா 12:1-7

பொதுக்காலம், வாரம் 28 வெள்ளி

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-7

அக்காலத்தில் ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது இயேசு முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார். அவர் அவர்களிடம் கூறியது: ``பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. ஆகவே நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில் காதோடு காதாய்ப் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும். என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்: உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம். நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரம் உள்ளவருக்கே அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே. உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 32: 1 – 2, 5, 11, (7)
”எவரது மனதில் வஞ்சம் இல்லையோ அவர் பேறுபெற்றவர்”

குற்றங்கள் மன்னிக்கப்படுவதற்கு எதை கடவுள் அளவுகோலாக வைத்திருக்கிறார்? ஒருவன் வாழ்நாள் முழுவதும் தவறு செய்திருக்கிறான். தன்னுடைய கடைசி தருணத்தில் அவன் தன்னுடைய பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கிறான். அப்படியென்றால், இவ்வளவு நாட்கள் அவன் செய்த பாவத்திற்கு என்ன தண்டனை? அவற்றையெல்லாம் கடவுள் பொருட்படுத்த மாட்டாரா? என்கிற எண்ணங்கள் நமக்குள்ளாக எழலாம். இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட கள்வன் வாழ்நாள் முழுவதும் திருடுவதிலும், கொலைக் குற்றத்திலும் ஈடுபட்டவன். அவன் செய்த பாவங்களை ஒரு நொடியில் இயேசு மன்னித்தார் என்றால், அவன் செய்த தவறுக்கான தண்டனை தான் என்ன?

இன்றைய திருப்பாடல் அதற்கான பதிலைத் தருகிறது. குற்றமுள்ள நெஞ்சத்தோடு ஒருவனால் கடவுளிடத்தில் மன்னிப்பு கேட்க முடியாது. ஒருவேளை அவன் மனிதர்களிடத்தில் நடித்துவிடலாம். ஆனால், கடவுளிடத்தில் ஒரேநாளில் ஒருவனால் நிச்சயம் திருந்திவிட முடியாது. திருப்பாடல் சொல்கிறது: எவரது மனத்தில் வஞ்சம் இல்லையே அவன் பேறுபெற்றவன். வஞ்சத்தோடு கடவுளிடத்தில் எவரும் மன்னிப்பு கேட்க முடியாது. மனமாற்றமும் ஒரேநேரத்தில் நிகழ்ந்து விடாது. சவுல் பவுலாக மாறிய நிகழ்ச்சி ஒரேநாளில் நடைபெற்றதாக இருக்கலாம். ஆனால், நிச்சயம் சவுலாக இருந்தபோதே, பலவிதமான கேள்விகள் அவரை ஆட்கொண்டிருக்கும். தான் செய்வது சரியா? தான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேனா? என்கிற கேள்விகள் வஞ்சம் இல்லாத உள்ளத்தில் எழுந்து கொண்டே இருக்கும். குற்ற உணர்ச்சி அவரைத் தூங்கவிடாது துரத்திக்கொண்டேயிருக்கும். அதுதான் ஒருநாளில் இறையனுபவமாக வெடிக்கிறது.

மனிதர்களாகிய நாம் ஒரு மனிதனின் மேலோட்டமான செயல்பாடுகளை வைத்து தீர்ப்பிடுகிறோம். கடவுள் உள்ளத்தையும் ஊடுருவிப்பார்க்கிற வல்லமை படைத்தவர். அவரை யாராலும் ஏமாற்ற முடியாது. மன்னிப்பிற்கு தகுதியானவன் மட்டும் தான், மன்னிப்பு பெற முடியுமே தவிர, வேறு எவராலும் கடவுளின் மன்னிப்பைப் பெற முடியாது.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

மக்களின் தலைவர் இயேசு

இயேசுவைத் தேடி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர். ஒருவரையொருவர் மிதிக்கக்கூடிய அளவுக்கு வந்திருந்தனர். இயேசுவுக்கு அதிகாரவர்க்கத்தினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது. சாதாரண, ஏழை, எளிய மக்களை அவர்கள் மிரட்டி வைத்திருந்தனர். இயேசுவோடு அவர்கள் பழகுவதற்கு நிச்சயம் அவர்கள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தியிருப்பார்கள். ஆனாலும், மக்கள் ஏராளமான எண்ணிக்கையில் அவரைப் பின்தொடர்ந்தனர். எது இயேசுவை, இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களைக் கூட்டமாகத் தேட வைத்தது?

இயேசுவின் வாழ்க்கை மக்களுக்குப் பிடித்திருந்தது. எளிமையான வாழ்க்கை, எதையும் எதிர்கொள்ளத் தேவையான துணிவு, யாரையும் பார்த்துப் பயப்படாத நெஞ்சுறுதி, புதுமை செய்ய ஆற்றல் இருந்தும், கர்வப்படாத அவரது பாங்கு – இவையனைத்துமே மக்கள் உள்ளத்தில் இயேசுவைப்பற்றி மிக உயரமான எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்திருந்தது. யார் என்ன பேசினாலும், உண்மையாக வாழ்ந்தால், மக்கள் எப்படியும் அங்கீகரிப்பார்கள், நம்மைத் தேடிவருவார்கள் என்பதற்கு இயேசு சிறந்த எடுத்துக்காட்டு. இயேசு மக்கள் தலைவராக வாழ்வதற்கு, மக்கள் உள்ளத்தில் குடிகொள்வதற்கு இதுதான் சிறந்த காரணமாக இருந்தது.

இன்றைக்கு நாம் உண்மையாக வாழ்ந்தாலே போதும். நமக்கான இடத்தை வேறு எவராலும் பெற முடியாது. இன்றைய மனிதன், இத்தகைய பெயரை, பணத்தால், அதிகாரத்தால் பெறமுடியும் என்று நம்பி, அதற்காக தனது வாழ்வைச் செலவழிக்கிறான். நமது எளிமையான, உண்மையான எண்ணத்தால் மட்டும் தான், மக்கள் மனதில் குடிகொள்ள முடியும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

கடவுளின் உடனிருப்பு

கடவுளின் பராமரிப்பு இங்கே நமக்கு உணர்த்தப்படுகிறது. ஒரு மனிதனின் தலையில், இலட்சக்கணக்கான முடிகள் காணப்படுகிறது. ஆனால், அதில் விழுகிற முடிகள் கூட, கடவுளின் கண்களில் இருந்து தப்பமுடியாது என்றால், கடவுள் நம் மட்டில், எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறார், எவ்வளவுக்கு நம்மை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுகிறார், என்பது இங்கே தெளிவாகிறது. நம் அனைவருக்குமே ஒரு காவல் தூதர் தரப்பட்டிருக்கிறார். அந்த காவல் தூதுவரின் பிரசன்னம், கடவுள் நம் மட்டில் வைத்திருக்கிற, பராமரிப்பின் அளவைக் காட்டுவதாக இருக்கிறது.

இந்த உலகத்தில் வாழக்கூடிய எல்லா மனிதர்களின் வாழ்க்கையிலும், ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த பிரச்சனைகளுக்கு நாமும் காரணமாக இருக்கலாம், மற்றவர்களும் காரணமாக இருக்கலாம். சில வேளைகளில், பிரச்சனைக்கான காரணத்தையும் நாம் அறிய முடியாமல் இருக்கலாம். எல்லாச் சூழ்நிலைகளிலும் கடவுளின் பராமரிப்பை மட்டும் நாம் மறந்து விடக்கூடாது. அந்த பராமரிப்பின் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கை தான், நமது பிரச்சனைகளிலிருந்து, நாம் விடுதலை பெற நமக்கு உதவியாக இருக்கும்.

மனிதர்கள் பலர், தாங்கள் தான், தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறோம், தங்களது முயற்சியினால் தான், தாங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுதலையடைந்தோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. நாம் கேட்காவிட்டாலும், நமது பிரச்சனைகளுக்கு தீர்வு காண, நமக்கு உதவி செய்யக்கூடியவர், நமது அன்பு ஆண்டவர். அவரது பராமரிப்பில் முழுமையான நம்பிக்கை வைப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

கடவுளன்பு

சிட்டுக்குருவிகள் ஏழைகளால் கடவுளுக்கு செலுத்தப்படுகிற காணிக்கை. சிட்டுக்குருவிகள் ஜோடிகளாக விற்கப்படுகிறது. இங்கே ஐந்து சிட்டுக்குருவிகள் என்று சொல்லப்படுவது, ஒரு சிட்டுக்குருவி இலவசமாகக் கொடுக்கப்படுவதைக் குறிக்கிறது. இரண்டு சிட்டுக்குருவிகள் வாங்கினால், ஒரு சிட்டுக்குருவி இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. அப்படி இலவசமாகக் கொடுக்கப்படுகிற சிட்டுக்குருவியைக்கூட கடவுள் மறப்பதில்லை. ஒருவருடைய தலைமுடியைத் தோராயமாகக் கணக்கிடும்போது 1,45,000 க்கும் மேற்பட்ட முடிகளை எண்ணியிருக்கிறார்கள். அவற்றிலும் ஒன்றைக்கூட கடவுள் மறப்பதில்லை.

கடவுள் இந்த உலகத்தில் இருக்கிற பிள்ளைகள் மீது வைத்திருக்கிற அன்பை இது வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொருவரையும் கடவுள் தனது பார்வையில் வைத்திருககிறார். அவர்களை அன்பு செய்கிறார். அவர்களுக்குத் தேவையானதைச் செய்கிறார். யாரையும் அவர் அறியாமல் இல்லை. யூதச்சமூகத்தில் பெண்களையும், குழந்தைகளையும் ஒரு பொருட்டாக எண்ணுவது கிடையாது, பொருளாகத்தான் எண்ணுவர். அவர்களையும் கடவுள் விலைமதிப்பில்லாதவர்களாக நடத்துகிறார். அதுதான் கடவுளின் அன்பு. எனவே, அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். கடவுளின் பார்வையில் நாம் அனைவருமே விலைமதிப்பில்லாதவர்கள்.

தாயின் கருவறையில் உருவாவதற்கு முன்பே நம்மைத் தேர்ந்தெடுத்த இறைவன் நம்மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறவர். இந்த உலகம் நம்மை பணத்தால், பதவியால், பட்டத்தால் ஒதுக்குவது போல, நம்மை உதாசீனப்படுத்துவது கிடையாது. அந்த அன்பிற்கு நம்மையே தகுதியாக்கிக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

மறைந்திருப்பது ஒன்றுமில்லை !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை. அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றுமில்லை என்னும் ஆண்டவரின் அமுத மொழிகள் இன்று நம் சிந்தையைக் கவர்கின்றன. நமது மிகவும் மறைவான செயல்கள்கூட இறைவனின் பார்வைக்கு உட்பட்டே இருக்கின்றன. பூமியின் ஆழத்திற்கு நான் சென்றாலும், அங்கேயும் நீர் இருக்கின்றீர் என்று திருப்பாடல் 139ல் வாசிக்கிறோம். இறைவனிடமிருந்து நாம் எதையும் மறைக்க முடியாது. அதுபோல, மனிதரிடமிருந்தும் நாம் நீண்ட நாள் மறைக்க முடியாது. பிறரிடமிருந்து நாம் எவ்வளவுதான் மறைத்தாலும், ஒருநாள் அனைத்தும் வெளிப்படத்தான் போகின்றன. இது வாழ்வின் நியதி. நம் அனுபவ உண்மையும்கூட. எனவே, நமக்கு தேவையானது வெளிப்படையான எண்ணங்கள், சொற்கள், செயல்பாடுகள். ஒளிவு மறைவற்ற நேர்மையே புனிதம் என்றுகூட ஜி. கிருஷ்ணமூர்த்தி என்னும் சிந்தனையாளர்; பகர்ந்துள்ளார். நமது வாழ்வு ஒரு திறந்த புத்தகமாக இருக்கும்போது, நமது உறவுகளும் மேம்படும். நமது ஆன்மீக வாழ்வின் தரமும் உயரும். எனவே, சொல்லிலும், செயலிலும் ஒளிவுமறைவற்ற தன்மையைக் கடைப்பிடிப்போம். நமது இல்லத்திலும், பணியிடத்திலும் இதை ஒரு கொள்கையாகக் கடைப்பிடிப்போம். இந்த நேர்மையே ஒரு நற்செய்தி அறிவிப்பு என்பதை நினைவில் கொள்வோம்.

மன்றாடுவோம்: புனிதத்தின் ஊற்றே இறைவா, நாங்கள் உம்மிடமிருந்தும், பிறரிடமிருந்தும் எதையும் மறைக்காமல், திறந்த மனதுடன், திறந்த மேலாண்மையுடன் வாழ வரம் தாரும். யாரிடமும், எதையும் மறைக்கத் தேவையில்லாத, நேர்மையான வாழ்வை எங்களுக்கு அருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்'' (லூக்கா 12:7)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- விவிலியத்தில் பல இடங்களில் ''அஞ்சாதீர்கள்'' என்னும் சொல் ஆளப்படுவதை நாம் காணலாம். இதோ ஒருசில எடுத்துக்காட்டுகள்: எசாயா 43:1-2; நீதிமொழிகள் 3:25-26; லூக்கா 1:30; மத்தேயு 10:29-30. மனிதரின் வாழ்க்கையில் அச்சம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நமக்கு ஏதோ ஆபத்து நிகழப்போகிறதோ என்னும் எண்ணம் மேலோங்குகின்ற வேளையில் நாம் அச்சமடைகிறோம். நமக்கு ஏற்படுகின்ற பயம் பிற மனிதர் நமக்குத் தீங்கிழைக்கப் போகிறார்களோ என நாம் நினைப்பதால் ஏற்படலாம். அல்லது இயற்கை நிகழ்வுகள் நம் உள்ளத்தில் பயத்தை எழுப்பலாம். அன்றாட உணவும், வாழ்வதற்குத் தேவையான பொருளாதாரமும் நமக்கு இல்லையே என்னும் உணர்வினால் பயம் தோன்றலாம். நோய்நொடிகள் ஏற்படும்போதும், நம்மைச் சார்ந்திருப்போருக்குத் தீங்கு ஏற்பட்டுவிடுமோ என நாம் நினைப்பதாலும் அச்சம் தோன்றலாம். மனித வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் அச்சம் ஏற்படக் கூடும். ஆனால் விவிலியம் நமக்குத் தருகின்ற செய்தி, ''எதைக் கண்டும் நீங்கள் அஞ்சவேண்டாம்'' என்பதே. நாம் உண்மையிலேயே அஞ்சவேண்டிய ஒருவர் உண்டு. அவர்தான் நம்மை அன்புசெய்கின்ற கடவுள்.

-- கடவுளுக்கு அஞ்சி நாம் நடக்கவேண்டும் என்றதும் கடவுள் நம்மைத் தண்டிக்கப்போகிறார் என்னும் எண்ணத்தால் நாம் பயந்து நடுங்க வேண்டும் என்று சிலர் தவறாகப் பொருள்புரிந்துகொள்வது உண்டு. கடவுள் நம்மைத் தண்டிக்கக் காத்திருக்கும் ''நீதிபதி'' அல்ல; மாறாக, அவர் நம் அன்புத் தந்தை. எனவேதான், சிட்டுக் குருவிகளைக் காக்கின்ற கடவுள் நம்மைக் காக்காமல் கைவிடமாட்டார் என இயேசு அறிவுறுத்துகிறார். கடவுளின் பராமரிப்பும் காவலும் நமக்கு என்றுமே உண்டு என்னும் உணர்வு நம்மில் வளர்ந்து வேரூயஅp;ன்ற வேண்டும். அப்போது நமக்கு ஏற்படுகின்ற அல்லது ஏற்படக்கூடும் என நாம் நினைக்கின்ற தீமைகள் குறித்து நாம் அஞ்சமாட்டோம். ஏனென்றால் கடவுளை முழுமையாக நம்பி நாம் வாழ்ந்தால் நமக்குத் தீமைகள் ஏற்பட்டாலும் அவை நம்மைக் கடவுளின் அன்பிலிருந்து பிரித்துவிட முடியாது. அப்போது தீமையை எதிர்த்து நாம் போராடவும், நன்மை செய்வதன் வழியாகத் தீமையை வென்றிடவும் கடவுள் நமக்கு வல்லமை தருவார். எதைக் கண்டும் அஞ்சாத உள்ளம் நம்மில் உருவானால் நாமும் பிறருக்குத் துணிவூட்டுகின்ற மனிதராக மாறுவோம். சாதாரண சிட்டுக்குருவியைப் பாதுகாக்கின்ற கடவுளின் பார்வையில் மண்வாழ் மனிதார் மாபெரும் மாண்புமிக்கவர் என்னும் உண்மையை நம் வாழ்வின் வழியாகப் பறைசாற்றுவோம்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்திலிருந்து அச்ச உணர்வை அகற்றி உம்மையே நாங்கள் பற்றுக்கோடாகக் கொள்ள அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்'' (லூக்கா 11:52)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு பரிசேயரையும் மறைநூல் அறிஞரையும் மிகக் கடுமையாகக் கண்டித்துப் பேசிய பகுதி (காண்க: லூக்கா 11:37-54) பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ''ஐயோ! உங்களுக்குக் கேடு!'' என்று இயேசு கூறுவது இயேசுவின் சாந்தமான குணத்திற்கு நேர்மாறாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், இயேசு கண்டிப்பது அக்கால சமய, மற்றும் சமூகத் தலைவர்களிடம் காணப்பட்ட குறைகளை மட்டுமல்ல, மாறாக அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட நேரிய நடத்தை என்னவென்பதையும் இயேசு உணர்த்துகிறார். அதே நேரத்தில், இயேசு கண்டித்த குறைகளும் அவர் போற்றியுரைத்த நடத்தையும் இன்று வாழ்கின்ற நமக்கும் பொருந்தும். தாமும் நுழையாமல் பிறரையும் நுழையவிடால் செயல்படுவது எதைக் குறிக்கிறது? வீட்டு வாசலில் ஒருவர் நிற்கிறார் என வைத்துக்கொள்வோம். ஒன்றில் அவர் வீட்டுக்குள் நுழைய வேண்டும் அல்லது வாயிலை அடைத்துக்கொண்டு நிற்காமல் அங்கிருந்து வெளியேறிட வேண்டும். அப்போது வீட்டுக்குள் பிறர் நுழைய முடியும். இதையே இயேசு ஓர் உருவகமாகக் கொண்டு இறையாட்சி பற்றிய ஆழ்ந்த உண்மையை விளக்குகிறார்.

-- நுழைதலும் நுழையவிடுதலும் நம் வாழ்வில் அன்றாடம் நிகழ்கின்ற அனுபவங்கள். கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் நடக்கும்போது, அவரிடத்தில் முழுமையாக நம்மைக் கையளிக்கும்போது நாம் அவருடைய ஆட்சியில் நுழைகிறோம் எனலாம். அதுபோல, பிறர் நம்மைக் காணும்போது நம் வாழ்வில் கடவுளின் பண்புகள் துலங்குகின்றன என உணர்ந்து, அதே பண்புகளைத் தம் வாழ்விலும் கடைப்பிடிக்க முன்வரும்போது நாம் அவர்கள் இறையாட்சியில் நுழைவதற்கு வழியாகின்றோம் (காண்க: லூக்கா 11:42).. இதுவே தூயவர்களின் வாழ்க்கையில் நாம் காண்கின்ற உயர்ந்த நெறி. அன்னை தெரசாவின் வாழ்க்கையைப் பார்த்தால் இவ்வுண்மை தெளிவாகத் துலங்கும். சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களை அவர் கடவுளின் பிள்ளைகள் என்றுதான் பார்த்தாரே தவிர மனித மாண்பு இல்லாத பொருள்களாகக் கருதவில்லை. கடவுளிடம் துலங்குகின்ற அன்பும் இரக்கமும் நம் வாழ்விலும் துலங்கும்போது இறையாட்சியில் நாமும் நுழைவோம், பிறரும் அந்த ஆட்சியில் பங்கேற்று அதில் நுழைவதற்கு நாம் கருவிகளாகச் செயல்படுவோம். அப்போது ''நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்'' என்று இயேசு கூறிய சொற்கள் நமக்குப் பொருந்தாது எனலாம். அந்த அளவுக்கு நம் வாழ்க்கை விளங்குகிறதா?

மன்றாட்டு
இறைவா, இறையாட்சியில் நாங்கள் நுழைந்திட இயேசுவை வாயிலாகத் தந்ததற்கு உமக்கு நன்றி!

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

இதுவும் புளிப்பு மாவுதானா

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

விண்ணரசை புளிப்பு மாவுக்கு ஒப்பிட்டு பெருமை சேர்த்த இயேசு, இங்கே அதே புளிப்பு மாவைக் குறித்து எச்சரிக்கை கொடுக்கிறார். நல்லதைச் செய்ய பயன்படும் புளிப்பு மாவு, விபரீதமானதைச் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. மத் 13'33 ல் சொல்லப்படும் புளிப்பு மாவு, நற்பணிக்குப் பயன்படும் பாக்டீரியா. இங்கு குறிப்பிடும் புளிப்பு மாவு கேடு விளைவிக்கும் வைரஸ். இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிவேடம் என்னும் விஷக்கிருமி மனிதனில் கலப்படமாகும்போது மனித வாழ்க்கையே மரணத்தோடு போராட வேண்டியுள்ளது.

இத்தகைய சூழல்களில் அடங்கி அமிழ்ந்து போய்விடக்கூடாது,பொங்கி எழுங்கள் என்கிறார். வாய் பொத்தி, மௌனம் சாதித்து,அஞ்சி நடுங்கி அடிமையாகி விட வேண்டாம். முக மூடியைக் கிழித்தெறிந்து, வெளி வேடத்தை வீதிக்கு கொண்டு வர வீறு கொண்டு புறப்படு. கூரை மேலிருந்து அறிவி. "உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம்."

மலிவு விலையில் உள்ள சிட்டுக்குருவி கூட அவ்வளவு எளிதாக கீழே விழாதவாறு கடவுள் பாதுகாப்பார். உதவாத தலை முடியின் எண்ணிக்கையைக் கூட அவர் அறிவார். தன் உள்ளங்கையில் நம் பெயரைப் பொறித்து வைத்துள்ள இறைவன், அவ்வளவு எளிதாக நம்மைக் கை விடுவாரோ!

உண்மை புளிப்பு மாவை உலகுக்கு அடையாளம் காட்ட, தீய புளிப்பு மாவின் வெளிவேடம் கலைத்திட,உயிருக்கும் உடலுக்கும் ஆசைப்படாமல் ஆன்மாவைக் காக்கும் செயல்களில் அச்சமின்றி ஈடுபடுவோம்.

--அருட்திரு ஜோசப் லீயோன்