முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-23


சகோதரர் சகோதரிகளே, ஆண்டவராகிய இயேசுவின் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை பற்றியும் இறைமக்கள் அனைவரிடமும் நீங்கள் செலுத்தும் அன்பு பற்றியும் கேள்வியுற்று, நான் இறைவனிடம் வேண்டும்போது உங்களை நினைவு கூர்ந்து உங்களுக்காக நன்றி செலுத்தத் தவறுவதில்லை. நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர், அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு, ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு, உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமைமிக்க தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்; இவ்வுலகில் மட்டும் அல்ல; வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 8: 1-2. 3-4. 5-6

பல்லவி: உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்.

1 ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது.
2 பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தினீர். -பல்லவி

3 உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள
நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது,
4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்?
மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? -பல்லவி

5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
6 உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்;
எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். அல்லேலூயா.

லூக்கா 12:8-12

பொதுக்காலம், வாரம் 28 சனி

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ``நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார். மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார். தொழுகைக்கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதில் அளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

==================

நன்றாக பேசத் தெரியாதவரா நீங்கள்?
லூக்கா 12:8-12

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

மனிதர்களாகிய நாம் பிறந்ததும் அம்மா என்ற அழகான வார்த்தையை பேசுகிறோம். அந்த வார்த்தையைப் பேசிய பிறகு வளர வளர வாயிலிருந்து வரும் வார்த்தைகளை கேட்கவே சகிக்க முடியவில்லை. எப்படி பேச வேண்டும் என்பது தெரியவில்லை. பேசத் தெரியாமல் பிறரை காயப்படுத்தும், களங்கப்படுத்தும் நபர்களுக்கான நல்லாலோசனையாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். என்ன நல்லாலோசனை?

அது தூய ஆவியார் தரும் நல்லாலோசனை. தூய ஆவியார் துணையை தினமும் நாடும் போடு அவர் கற்றுக்கொடுக்கிறார். அவர் வழிநடத்துகிறார். எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதெல்லாம் நமக்கு இயல்பாகவே தெரிகிறது. எப்படி தூய ஆவியாரை நாட வேண்டும். இரண்டு வழிகளில் நாம் நாடலாம்.

1. முழந்தாளிட்டு
தூய ஆவியாரை தேட வேண்டும் அதற்கான சரியான முறை முழந்தாளிடுவது. முழந்தாளிட்டு அவரிடம் மன்றாட வேண்டும். ஓ பரிசுத்த ஆவியே! என் ஆன்மாவின் ஆவியே! என் நாவை சுத்தப்படுத்தும். ஆவியின் அக்கினியால் சுட்டெரியும். பரிசுத்தமாக்கும்! என இந்த மந்திரத்தை தினமும் மனதிற்குள் மெளனமாக சொல்ல வேண்டும்.

2. மூச்சியிலித்து
நாம் சுவாசிக்கும் போது மூச்சுக்காற்று உள்ளே செல்லும்போதெல்லாம் தூய ஆவியே எனக்குள்ளே வாரும். எனக்கு துணையாக வாரும் என தூய ஆவியை நம் உடலுக்குள் கொண்டு வர வேண்டும். இதை செய்ய செய்ய தூய ஆவியின் மூச்சாக நாம் மாறுகிறோம். இதை தொடாந்து செய்யும் போது நம் பேச்சு சுவையாக, இனிமையாக, வளமையாக மாறுகிறது.

மனதில் கேட்க…
1. உன் பேச்சு சரியில்லை என்று யாராவது என்னைப் பார்த்து சொல்லியிருக்கிறார்களா?
2. தூய ஆவியே என் நாவை சுத்திகரியும், பேச கற்றுத் தாரும் என்று ஜெபித்த பிறகு பேசியதுண்டா?

மனதில் பதிக்க…
நீங்கள் பேச வேண்டியவற்றைத தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.(லூக் 12:12)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

எபேசியர் 1: 15 – 23
கீழ்ப்படிதல்

இறைவன் முன்னிலையில் அவருடைய திருவுளத்திற்கு பணிந்து நடக்கிறவர்களை, இறைவன் அற்புதமாக உயர்த்துவார் என்று, பவுலடியார் கூறுகிறார். தன்னுடைய இறைவார்த்தைப் பகிர்விற்கு உதாரணமாக, இயேசு கிறிஸ்துவின் வாழ்வை மையப்படுத்தி எடுத்துக்காட்டுகிறார். இயேசு கடவுளின் ஒரே மைந்தர். இறைவனிடத்திலிருக்கிற எல்லா ஆற்றல்களையும் பெற்றவர். அப்படிப்பட்டவர், இறைவனின் மீட்புத்திட்டத்திற்கு பணிந்து நடக்கிறார். தன்னையே தாழ்த்துகிறார்.

தன்னை மனித நிலைக்குத் தாழ்த்துகிறார். கடவுளின் வல்லமையைப் பயன்படுத்தியிருந்தால், உடனடியாக இந்த உலகத்தை ஒரு நொடிப்பொழுதில் பாவத்தின் பிடியிலிருந்து விடுவித்திருக்க முடியும். ஆனால், அவர் தந்தையின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிகிறார். அடிமையின் தன்மை கொண்டு, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச்சாவையே ஏற்கும் அளவுக்கு, இறைவனின் திட்டத்திற்காக கீழ்ப்படிகிறார். இந்த இயேசுவின் கீழ்ப்படிதலுக்கு கடவுள் கொடுத்த பதில், அவரை எப்பெயருக்கும் மேலான பெயருக்கு உயர்த்துகிறார். இந்த உலகத்தில் பிறந்த எவரும் பெற முடியாத, உயரத்தை, அதிகாரத்தை, தன்னுடை வலப்புறத்தில் அமர்ந்திருக்கும் பாக்கியத்தை இறைவன் அவருக்கு அருள்கிறார்.

நம்முடைய வாழ்வில் நாம் இறைத்திட்டத்திற்கு நம்மை முழுமையாக கையளிக்க வேண்டும். அப்படி கையளிக்கிறபோது இறைவன் நம்மை தன்னுடைய அருள்வரங்களால் நிரப்புவார். நம்மை எப்போதும் காத்தருள்வார். எந்நாளும் அவருடைய திருவுளத்திற்கு கீழ்ப்படிந்து வாழ அருள் வேண்டி இறைவனிடம் மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

மனவுறுதியுடன் வாழ்வோம்

நமது உள்ளத்தில் எப்போதுமே இரண்டுவிதமான எண்ணங்கள் வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கும். ஏற்றுக்கொள்வதா? புறக்கணிப்பதா? என்பது தான், இந்த இரண்டுவிதமான எண்ணங்கள். ஒருவர் நல்ல சிந்தனைகளை வழங்கிக்கொண்டிருக்கிறார். அந்த சிந்தனைகள் நல்ல சிந்தனைகளாக இருந்தாலும், நமது உள்ளம் அதனை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற, மிகப்பெரிய பட்டிமன்றத்தையே நடத்திக்கொண்டிருக்கும். ஒருபுறம் நல்ல சிந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும், மறுபுறம் இந்த சிந்தனைகளை யார் கொடுப்பது? எதற்காக கொடுக்கப்படுகிறது? போன்ற சிந்தனைகள், அதனை ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் எப்போதுமே உண்மையான கருத்துக்களுக்கு செவிமடுத்து அதனை ஏற்றுக்கொள்வதற்கு, இந்த வாசகம் நமக்கு அழைப்புவிடுக்கிறது.

இயேசு தன்னை ஏற்றுக்கொள்பவரை, தான் ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார். தன்னை ஏற்றுக்கொள்வது என்று சொல்வது தன்னுடைய விழுமியங்களை ஏற்றுக்கொள்வதாகும். தன்னைப்புறக்கணிப்பது என்று சொல்வது, தன்னுடைய விழுமியங்களைப் புறக்கணிப்பதாகும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இந்த விழுமியங்கள் விதைக்கப்பட்டிருக்கிறது. அந்த விழுமியங்களை தேர்வு செய்து, அதன்படி வாழ்வதுதான் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற சவால். இதில் வெற்றிபெறுவதும், தோல்வியடைவதும், ஒரு மனிதனின் மனவுறுதியில் இருக்கிறது. அந்த மனவுறுதியோடு வாழ, இந்த வாசகம் நமக்கு அழைப்புவிடுக்கிறது.

இயேசு எப்போதும் நமக்கு பலம் தருகிறவர். நம்மை நேர்வழியில் வாழ அழைப்புவிடுக்கிறவர். அவரை நம்பி, விழுமியங்களின்படி நாம் வாழும்போது, நிச்சயமாக நம்மால் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும். அந்த வாழ்வை வாழ, நாம் முயற்சி எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

உண்மை உரைக்கும் தூய ஆவி

இன்றைய நற்செய்தி, தூய ஆவிக்கு எதிரான, மன்னிக்க முடியாத குற்றத்தை நமக்கு உறுதிபடுத்துகிறது. மத்தேயு 12: 31 – 32 மற்றும் மாற்கு 3: 28 – 29 ல், இயேசுவின் குணப்படுத்துகின்ற வல்லமையை, தீய ஆவிகளின் சக்திக்கு ஒப்பிடுகிறபோது, இயேசு இதைச் சொல்கிறார். இந்த திருச்சட்ட அறிஞர்கள், கடவுளுடைய அருளையும், ஆசீரையும் தீய ஆவிகளுக்கு ஒப்பிடுகிறார்கள். யூதர்களைப் பொறுத்தவரையில், தூய ஆவியானவரைப்பற்றிய புரிதல் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இயேசு இங்கே தூய ஆவியானவரைப் பற்றிப் பேசுகிறபோது, அவர் சொல்கிற அர்த்தமும் நமக்கு விளங்க வேண்டும். அப்போதுதான், நம்மால், சரியான விளக்கத்தைப் பெற முடியும்.

தூய ஆவியின் செயல்களாக இரண்டு குறிப்பிடப்படுகின்றது. 1. கடவுள் மனிதர்களுக்கு, தூய ஆவியானவர் வழியாக, உண்மையை உரைத்தார். உண்மையை உரைப்பது தூய ஆவியானவரின் பணி. 2. தூய ஆவியனவரின் தூண்டுதலினால் தான், மனித உள்ளம், கடவுள் அறிவிக்கும் உண்மையை, புரிந்து கொள்ள முடிந்தது. அவருடைய தூண்டுதல் இல்லாமல், கடவுள் வெளிப்படுத்தும் உண்மையை புரிந்து கொள்ள முடியாது. இதுதான், தூய ஆவியானவர் பற்றிய, யூதர்களின் புரிதல். பொதுவாக, ஏதாவது ஒன்றின் மீது நமக்கு அதிக ஈர்ப்பு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உதாரணமாக, இசையின் மீது நமக்கு அதிக ஈர்ப்பு இருக்கிறது. அடிக்கடி, இசையைக் கேட்டு, இசை மீதான ஆர்வத்திற்கு நாம் தீனி போடுகிறோம். ஆனால், நமது பணியின் காரணமாக, அதைக்கேட்பதை தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறோம், என்று வைத்துக்கொள்வோம். ஒரு கட்டத்தில், இசையின் மீதான நமது ஆர்வமும், அதைக்கேட்க வேண்டும் என்கிற ஈடுபாடும், சுத்தமாக இல்லாமல் போய்விடும். அதே போல, உண்மையை அறிந்து கொள்ள உதவுகிற தூய ஆவியின் தூண்டுதலை, நாம் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டால், ஒரு கட்டத்தில், தூய ஆவியானவர் எப்படி வெளிப்படுத்தினாலும், அதைப் புரிந்து கொள்ளக்கூடிய சக்தியை, நாம் இழந்துவிடுவோம். திருச்சட்ட அறிஞர்களுக்கு அதுதான் நடந்து கொண்டிருந்தது. அவர்கள், தூய ஆவியின் தூண்டுதலை அறிந்து கொள்ளக்கூடிய, உணரக்கூடிய அந்த கொடையை, தொடர்ந்து தூய ஆவியானவரைப் புறக்கணித்ததன் மூலமாக இழந்து விட்டார்கள். இனி அவர்கள், திருந்துவதற்கான வாய்ப்பும், அவரை அறிந்து கொள்வதற்கான சூழலும், நிச்சயம் வராது. இனி அவர்களிடமிருந்து, நல்லது வருவதற்கும் வாய்ப்பில்லை. உண்மை வருவதற்கும் வாய்ப்பில்லை. எனவே தான், இயேசு தூய ஆவிக்கெதிரான பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது என்கிறார். அதாவது, இனி திருச்சட்ட அறிஞர்கள், உண்மையை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பே கிடையாது என்பதால் தான்.

கடவுள் நமக்கு பல வகைகளில், தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். நாம் செய்கிற தவறுகளை, நல்ல காரியங்களை, அவர் தூய ஆவியானவரின் தூண்டுதலால், நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறார். நாம் கடவுளோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறபோது, நிச்சயம் அதை, உணர்ந்து கொள்ள முடியும். எப்போது, நாம் கடவுளைவிட்டு, வெகுதொலைவில் செல்கிறோமோ, அப்போது, நம்மால், அதை உணரவே முடியாது.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

தூய ஆவியார் கற்றுத் தருவார் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய வாசகத்தில் மூன்று முத்தான கருத்துகளை இயேசு மொழிகின்றார். அவற்றில் இறுதியானதை மட்டும் நமது சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம். ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னால் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதில் அளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில், நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார் என இயேசு மொழிந்துள்ளார்.

நாம் பேசும்பொழுதெல்லாம், நம்மிலிருந்து பேச வேண்டியவா தூய ஆவியே. குறிப்பாக, ஆட்சியாளர்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் போன்றோரிடம் பணி காரணமாகப் பேச வேண்டியபோதெல்லாம், நாம் கவனத்துடன் பேச வேண்டும். குறிப்பாக, இறைமொழிக்கு சாட்சியாக வாழவேண்டியவர்கள், வாழ விரும்புகிறவர்கள் பேச்சில் ஞானம் துலங்க வேண்டும். அந்த ஞானத்தைத் தூய ஆவியார் வழியாக அருள்வதாக இயேசு வாக்களிக்கின்றார். எனவே, என்ன பேசுவது, அல்லது எப்படிப் பேசுவது எனக் கவலைப்பட வேண்டாம். நாம் செய்யவேண்டியதெல்லாம். தூய ஆவியாரை நோக்கி மன்றாடி, நமது நாவையும், மனதையும் அவரிடம் ஒப்படைக்க வேண்டியதுதான். அவரே மற்ற அனைத்தையும் பார்த்துக்கொள்வார்.

மன்றாடுவோம்: தூய ஆவியே இறiவா, உம்மைப் போற்றுகிறேன். எனக்க உமது ஞானத்தையும், நல்லறிவையும் தந்தருளும். என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்பதையெல்லாம் நீரே கற்றுத் தருவீராக. மேலும், நீரே எங்களில் இருந்து பேசுவீராக, செயல்படுவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''இயேசு, 'மானிடமகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார்.
ஆனால் தூய ஆவியைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்' என்றார்'' (லூக்கா 12:10)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் மன்னிப்புப் பெற மாட்டார்கள் என்னும் போதனை மத்தேயு நற்செய்தியிலும் மாற்கு நற்செய்தியிலும் உண்டு (காண்க: மத் 12:32; மாற் 3:28-29). தீய ஆவிகளின் பிடியிலிருந்து மக்களை விடுவித்த இயேசு பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலின் சக்தியைக் கொண்டே அவ்வாறு செயல்பட்டார் என யூத மறைநூல் அறிஞர் குற்றம் சாட்டினர். இயேசுவிடம் கடவுளின் சக்தி துலங்குகிறது என்பதை அவர்கள் ஏற்க மறுத்தனர். இத்தகைய மனப்பான்மைதான் ''தூய ஆவிக்கு எதிரான பாவம்'' என மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் உள்ளது. ஆனால் லூக்கா நற்செய்தியிலோ இப்போதனை இன்னொரு சூழலில் வழங்கப்படுகிறது. அதாவது, இயேசுவைப் பின்செல்கின்ற சீடர்கள் அவரைப் பற்றியும் அவர் அறிவித்த இறையாட்சி பற்றியும் எல்லா மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு எதிர்ப்புகள் எழக் கூடும். அந்த நேரங்களிலும் சீடர்கள் மன உறுதி தளர்ந்துவிடக் கூடாது.

-- துணிந்து நற்செய்தியை அறிவிப்போருக்குத் தூய ஆவியின் துணை எப்போதுமே இருக்கும். இந்தத் தூய ஆவி நம் உள்ளத்தில் கடவுள் பற்றிய சிந்தனைகளைத் தூண்டி எழுப்புகிறார்; நாம் நற்செய்தி வழியில் நடந்திட நமக்கு மன உறுதி தருகிறார்; நம் வாழ்க்கைச் சூழலில் நாம் தடைகளைக் கண்டு துவண்டுவிடாமல் இருக்க நமக்கு சக்தி வழங்குகின்றார். இந்தத் தூய ஆவியைப் பழித்துப் பேசுவோர் கடவுளின் செயல்பாட்டையே எதிர்ப்போர் ஆவர். எனவே, அவர்கள் உளமார மனம் வருந்தி, கடவுளின் பக்கம் திரும்பாவிட்டால் அவர்கள் கடவுளின் துணை தங்களுக்குத் தேவை இல்லை என முடிவுசெய்துவிட்டார்கள் எனவே நாம் கருத வேண்டும். எனவேதான் இயேசு ''தூய ஆவியைப் பழித்துரைப்போர் மன்னிப்புப் பெற மாட்டார்'' (லூக் 12:10) என்றுரைத்தார். நம் வாழ்விலும் தூய ஆவி வல்லமையோடு செயலாற்றுகின்றார். அவருடைய தூண்டுதல்களுக்குச் செவிமடுத்து, அவரால் வழிநடத்தப்பட நாம் திறந்த உளம் கொண்டவர்களாக மாறிட வேண்டும். ''தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்கவேண்டாம்'' (1 தெச 5:19) என்று பவுல் கூறுவது இவண் கருதத் தக்கது.

மன்றாட்டு
இறைவா, உம் தூய ஆவியால் வழிநடத்தப்பட எங்களையே காணிக்கையாக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''இயேசு, 'மானிடமகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார்.
ஆனால் தூய ஆவியைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்' என்றார்'' (லூக்கா 12:10)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் மன்னிப்புப் பெற மாட்டார்கள் என்னும் போதனை மத்தேயு நற்செய்தியிலும் மாற்கு நற்செய்தியிலும் உண்டு (காண்க: மத் 12:32; மாற் 3:28-29). தீய ஆவிகளின் பிடியிலிருந்து மக்களை விடுவித்த இயேசு பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலின் சக்தியைக் கொண்டே அவ்வாறு செயல்பட்டார் என யூத மறைநூல் அறிஞர் குற்றம் சாட்டினர். இயேசுவிடம் கடவுளின் சக்தி துலங்குகிறது என்பதை அவர்கள் ஏற்க மறுத்தனர். இத்தகைய மனப்பான்மைதான் ''தூய ஆவிக்கு எதிரான பாவம்'' என மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் உள்ளது. ஆனால் லூக்கா நற்செய்தியிலோ இப்போதனை இன்னொரு சூழலில் வழங்கப்படுகிறது. அதாவது, இயேசுவைப் பின்செல்கின்ற சீடர்கள் அவரைப் பற்றியும் அவர் அறிவித்த இறையாட்சி பற்றியும் எல்லா மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு எதிர்ப்புகள் எழக் கூடும். அந்த நேரங்களிலும் சீடர்கள் மன உறுதி தளர்ந்துவிடக் கூடாது.

-- துணிந்து நற்செய்தியை அறிவிப்போருக்குத் தூய ஆவியின் துணை எப்போதுமே இருக்கும். இந்தத் தூய ஆவி நம் உள்ளத்தில் கடவுள் பற்றிய சிந்தனைகளைத் தூண்டி எழுப்புகிறார்; நாம் நற்செய்தி வழியில் நடந்திட நமக்கு மன உறுதி தருகிறார்; நம் வாழ்க்கைச் சூழலில் நாம் தடைகளைக் கண்டு துவண்டுவிடாமல் இருக்க நமக்கு சக்தி வழங்குகின்றார். இந்தத் தூய ஆவியைப் பழித்துப் பேசுவோர் கடவுளின் செயல்பாட்டையே எதிர்ப்போர் ஆவர். எனவே, அவர்கள் உளமார மனம் வருந்தி, கடவுளின் பக்கம் திரும்பாவிட்டால் அவர்கள் கடவுளின் துணை தங்களுக்குத் தேவை இல்லை என முடிவுசெய்துவிட்டார்கள் எனவே நாம் கருத வேண்டும். எனவேதான் இயேசு ''தூய ஆவியைப் பழித்துரைப்போர் மன்னிப்புப் பெற மாட்டார்'' (லூக் 12:10) என்றுரைத்தார். நம் வாழ்விலும் தூய ஆவி வல்லமையோடு செயலாற்றுகின்றார். அவருடைய தூண்டுதல்களுக்குச் செவிமடுத்து, அவரால் வழிநடத்தப்பட நாம் திறந்த உளம் கொண்டவர்களாக மாறிட வேண்டும். ''தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்கவேண்டாம்'' (1 தெச 5:19) என்று பவுல் கூறுவது இவண் கருதத் தக்கது.

மன்றாட்டு
இறைவா, உம் தூய ஆவியால் வழிநடத்தப்பட எங்களையே காணிக்கையாக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

கவலை வேண்டாம் .. விசுவாசம் போதும்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நம் இறைவன் மனிதனுக்குக் கொடுத்துள்ள மிகப்பெரிய கொடை "தூய ஆவி". அதாவது இறைவன் தனது ஞானம், படைப்பாற்றல், அருள், சுருங்கச் சொன்னால் தன்னுடைய அனைத்திலும் மனிதனுக்குப் பங்கு கொடுத்துள்ளார். படைப்பில் தொடங்கிய இப் பங்களிப்பு மீட்பில் முழுமையடைகிறது. இவ்வுண்மையை ஏற்று மனிதன் முன்னிலையில் இக்கொடையைப் பகிர்ந்து, சான்று பகர்ந்து வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இந்த பகிர்தலுக்கும் சாட்சியத்துக்கும் முன்வராது தயங்கினால் அல்லது பின்வாங்கினால் அதைவிட கேவலம் மறுதலித்தால் மிகப் பெரிய பாவத்தைச் செய்கிறோம். இந்த பாவத்தைச் செய்யும்போது தூய ஆவிக்கு எதிராக குற்றம் செய்கிறோம். இறை ஆற்றலை, அருளை, இறைவனோடு உள்ள மிகச் சிறிய உறவையும் அறுத்து அடியோடு அள்ளி வெளியே வீசுகிறோம். "தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்" என்று கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு சிறிய துன்பம் வந்ததும் இறை உறவாம் விசுவாசம் என்னும் தூய ஆவியை உதறிவிடும் இழிநிலை பெரிய பாவமாகும். இங்கே மீண்டும் அதே இறைவன் சொல்லுதை மனதில் ஆழப்பதிப்போம். துன்பம், ஆபத்து, இழப்பு,கவலை, கஷ்டம் வரும்போது, அரண்டு அங்கும், இங்கும் ஓட வேண்டாம். என்ன செய்வது, எதைச்செய்வது என்று மிரண்டுவிட வேண்டாம். என்ன பேசுவது, எப்படி பேசுவது, எப்படி சமாளிப்பது என்று கவலை வேண்டாம்.

கடவுளை நம்புங்கள். விசுவாசத்தில் உறுதியாக இருங்கள். இறை உதவியை தொடர்ந்து மன்றாடுங்கள். தேவையானதை தேவையான அளவு, தேவையான நேரத்தில் நமக்கு தருவார்.

--அருட்திரு ஜோசப் லீயோன்