முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 19-23

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் வலுவற்றவர்கள் என்பதை மனதிற்கொண்டு எளிய முறையில் பேசுகிறேன். முன்பு கட்டுப்பாடற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும் கெட்ட நடத்தைக்கும் நெறிகேட்டிற்கும் உங்கள் உறுப்புகளை நீங்கள் அடிமையாக்கியிருந்தீர்கள். அதுபோல இப்பொழுது தூய வாழ்வுக்கு வழிவகுக்கும் ஏற்புடைய செயல்களுக்கு உங்கள் உறுப்புகளை அடிமையாக்குங்கள். நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாய் இருந்தபோது கடவுளுக்கு ஏற்புடையவற்றைச் செய்யக் கடமைப்பட்டிருக்கவில்லை. அப்போது நீங்கள் செய்த செயல்களை எண்ணி இப்போது நீங்களே வெட்கப் படுகிறீர்கள். அவற்றால் நீங்கள் கண்ட பயன் யாது? அவற்றின் முடிவு சாவு அல்லவா? ஆனால் இப்பொழுது, நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள்; இதனால் நீங்கள் காணும் பயன் தூய வாழ்வு. இதன் முடிவு நிலைவாழ்வு. பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு; மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 1: 1-2. 3. 4,6
பல்லவி: ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;
பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;
அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். -பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்;
பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்;
தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். -பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை;
அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்.
6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்;
பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். அல்லேலூயா.

லூக்கா 12:49-53

பொதுக்காலம், வாரம் 29 வியாழன்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன். மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர் கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 1: 1 – 2, 3, 4 & 6
”ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்”

மகிழ்ச்சி என்கிற ஒற்றைச் சொல்லுக்காகத்தான் இந்த உலகத்தில் இருக்கிற அனைவரும் ஏங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் செய்கிற வேலை, நம்முடைய கடின உழைப்பு, நாம் ஈட்டுகிற செல்வம் அனைத்துமே இந்த மகிழ்ச்சிகாக மட்டும் தான். இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை நமக்கு அமைய வேண்டுமென்றால், நமது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பதில் தான் இன்றைய திருப்பாடல். எப்படி வாழ்ந்தால், நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதற்கான அழைப்பாக இந்த திருப்பாடல் அமைகிறது.

மகிழ்ச்சியாக வாழ விரும்பும் ஒரு மனிதர் ஆண்டவரின் திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து வாழ வேண்டும். இது தான் மகிழ்ச்சியான வாழ்விற்கான அடிப்படை. திருச்சட்டம் என்பது கடவுள் நமக்கு வழங்கிய சட்டம். நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு ஒழுங்குமுறைகளை விளக்கக்கூடிய வழிகாட்டி. அந்த திருச்சட்டத்தை மேலோட்டமாக அல்லாமல், அதனை தியானித்து, அந்த திருச்சட்டத்தின் உட்பொருளை ஆராய்ந்து அறிந்து, அந்த சட்டம் நமக்குக் காட்டுகிற பொருள் அறிந்து அதற்கேற்ப நம்முடைய வாழ்வை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த சட்டங்களைக் கடைப்பிடிக்கிறபோது நாம் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். ஆனால், நமக்கு நிச்சயம் மகிழ்ச்சி கிடைக்கும்.

நம்முடைய வாழ்வில் நாம் எப்போதும், கடவுளின் சட்டங்களைக் கடைப்பிடிக்கிறவர்களாக வாழ வேண்டும் என்பது தான், நம்முடைய தாய்த்திருச்சபையின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதற்கேற்ப தான், நமக்கு பக்திமுயற்சிகளையும், வழிபாட்டையும் தந்திருக்கிறது. இந்த வழிபாடுகளில் நம்மையே முழுமையாக ஒன்றிணைத்து, மகிழ்ச்சியோடு வாழ்வோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இயேசு மூட்டிய தீ

இயேசு இந்த உலகத்திற்கு வந்து, அவரது பணிவாழ்வை ஆரம்பித்தபோது, இலக்கில்லாமல் ஆரம்பிக்கவில்லை. தன்னுடைய பணிவாழ்வில், தனக்கென்று ஓர் இலக்கை வைத்திருந்தார். அந்த இலக்கை நிறைவேற்றுவதை, தனது வாழ்வின் உயிர்மூச்சாகக் கொண்டிருந்தார். அதைப்பற்றித்தான், இன்றைய நற்செய்தி வாயிலாக இயேசு பேசுகிறார்.

மண்ணுலகில் தீ மூட்டவே வந்தேன். அதுதான் தனது விருப்பம் என்று சொல்கிறார். அது என்ன தீ? நேர்மையாளர்கள் இன்னும் நேர்மையோடு வாழவும், அமைதியை ஏற்படுத்த விரும்புவோர் அவர்களோடு கடவுள் இருக்கிறார் என்பதை உணரவும், நல்லவர்கள் இன்னும் அதிக நன்மை செய்வதற்கான எரிபொருளாக இயேசு வந்திருக்கிறார். மனிதர்களுக்குள்ளாக நன்மை செய்ய வேண்டும் என்கிற எண்ணமிருந்தாலும், செய்வதா? வேண்டாமா? என்கிற விவாததத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிற விதமாய், அவருடைய வாதம் அமைந்திருக்கிறது. அவருடைய வாழ்க்கை அமைந்திருக்கிறது. அதுதான் இன்னும் பல நல்லவர்களை உருவாக்குவதற்கு துணையாக இருந்தது.

இயேசு என்கிற ஒரு மனிதன், இந்த உலகத்தையே தன் வசப்படுத்த முடிந்தது என்றால், தனியொரு ஆளாக அல்ல. அவர் மூட்டிய தீ பற்றி எரிந்ததால். அந்த தீயின் தாக்கம் தான், இன்றைக்கு நற்செய்தியானது உலகம் முழுவதும் எரிந்து கொண்டிருப்பதற்கு காரணமாய் அமைந்திருக்கிறது. அந்த தீ நம்முள்ளும் எரியட்டும். இந்த உலகம் மலரட்டும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

இயேசுவின் திருமுழுக்கு

இயேசு தான் பெற வேண்டிய திருமுழுக்குப் பற்றியும், அவரது மனம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது என்றும் கூறுகிறார். இயேசு சொல்கிற திருமுழுக்கின் பொருள் என்ன? இயேசுவின் மனம் எதற்காக நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது? திருமுழுக்கு என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனும் கடக்க வேண்டிய பயணம். இறப்பிலிருந்து, நிலையான வாழ்விற்கான பயணம். பாவ வாழ்வில் இறந்து, கிறிஸ்துவில் உயிர்ப்பிக்கப்படுகிறோம். அந்த பயணம், கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், எளிதான பயணம் அல்ல. அந்த பயணம் நமது வாழ்வு முழுவதும் தொடரும். திருமுழுக்கு என்பது, நடக்கஇருப்பவற்றின் வெறும் அடையாளம் தான்.

இயேசு அந்த திருமுழுக்கின் கடைசிப்பயணத்தை நிறைவாக முடிக்க இருக்கிறார். அதுதான் சிலுவைச்சாவு. இந்த உலகத்திற்கு வாழ்வு கொண்டுவர, அவர் தன்னையே தியாகம் செய்தாக வேண்டும். ஒரு திரைப்படத்தில், கிளைமாக்ஸ் காட்சி முக்கியமானது. ஒரு கதாநாயகன் படம் முழுவதும், எதிரிகளின் சதிகளை வெற்றிகரமாக முறியடித்து இருந்தாலும், இறுதியில் எதிரிகளை வீழ்த்துவது தான் உச்சகட்டம். அதுதான் அவரது வெற்றியைத் தீர்மானிக்கக்கூடியது. இயேசு இதுவரை எத்தனையோ சோதனைகளில் வெற்றி பெற்றிருந்தாலும், சாவு என்கிற இருளை வீழ்த்த, அவர் சிலுவைப்பயணத்திற்கு தயாராகக்கூடிய அந்த தருணத்தையும், நடக்கவிருப்பவற்றையும், திருமுழுக்கோடு ஒப்பிடுகிறார். அந்த இறுதிப்போர், இறுதி நிகழ்ச்சி, அவருக்கு கலக்கத்தைத் தருவதாகவும், இயேசு சொல்கிறார்.

திருமுழுக்கு என்பது, நாம் நமது வாழ்வில் வாழ இருப்பவற்றை, அடையாளமாகக் காட்டுவது. அதை வாழ்வதுதான், உண்மையான திருமுழுக்காக இருக்கும். நடக்கப்போகிறவற்றை முன்குறித்துக்காட்டுவது திருமுழுக்குச் சடங்கு. அதை வாழ்வது, நம் முன்னால் இருக்கிற சவால். அந்த சவாலை நாம் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோமா? சிந்திப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

இறைவனின் இரக்கம்

இயேசுவை மெசியாவாக பார்த்தவர்களுக்கு இயேசுவின் வார்த்தைகள் நிச்சயம் அதிர்ச்சியையும், வியப்பையும் கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால், மெசியாவின் காலம் பொற்காலமாகக் கருதப்படும் என்றும், மெசியா மக்களை அடிமைத்தளையிலிருந்து மீட்பார் என்றும் மக்கள் நம்பினர். ஆனால், இயேசுவின் வார்த்தைகள் இந்த இரண்டு எதிர்பார்ப்புகளையுமே நிறைவேற்றுவதாக தெரியவில்லை.

தீ என்பது தீர்ப்பைக்குறிக்கக்கூடிய உருவகம். இயேசு மனுமகன் மீண்டும் வரும்நாளை தீர்ப்பு நாளாகக்கருதுகிறார். மெசியா வரும்போது இஸ்ரயேல் மக்களைத்தவிர அனைத்து மக்களையும் தீர்ப்புக்குள்ளாக்குவார் என்று யூதர்கள் நினைத்தனர். யூத குலத்திலே பிறந்தாலே மீட்பு உறுதியாகிவிட்டதாக அவர்கள் நம்பினர். யூத குலத்தில் பிறந்தாலே தங்களுக்கு கடவுளின் மன்னிப்பு கிடைத்துவிடும் என்ற எண்ணம் அவர்களிடையே ஆழமானதாக இருந்தது. எனவே தான் அவர்கள் தங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகவும், கடவுளின் உரிமைச்சொத்தாகவும் தங்களைக்கருதினர். ஆனால், இயேசுவின் போதனை அவர்களுக்கு மிகப்பெரிய கலக்கத்தைக்கொடுத்தது.

”நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு உகந்தவர்களாக முடியும்” என்று யாக்கோபு (2: 24) தன்னுடைய திருமுகத்திலே குறிப்பிடுகிறார். நமது வாழ்வு கிறிஸ்தவ மதிப்பீடுகளின்படி அமைக்கப்படுகிறபோதுதான், நம்மால் கடவுளின் இரக்கத்தைப் பெற முடியும். இல்லையென்றால், எத்தனை வழிபாடுகளில் பங்கெடுத்தாலும், இறைஇரக்கத்தை நாம் பெறமுடியாது.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுவின் போதனை

இயேசுவின் வருகை எதனை அடிப்படையாகக் கொண்டு இருந்தது என்பதற்கு விளக்கம் தரும் விதமாக, இன்றை நற்செய்தி வாசகம் அமைந்திருக்கிறது. இயேசு இந்த உலகத்தில் இருப்பதை, இருப்பதுபோல வைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காக வரவில்லை. அப்படி ஒரு எண்ணம் இருந்திருந்தால், அவர் இந்த மண்ணகத்திற்கு வந்திருக்கவே மாட்டார். இந்த மண்ணகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று வருகிறார்.

இந்த மண்ணத்தில் என்ன மாற்றம் தேவை? எதனை கொண்டு வருவதற்கு இயேசு முயற்சி எடுக்கிறார்? இந்த உலகத்தில் விழுமியங்களும், மதிப்பீடுகளும் மறக்கடிக்கப்பட்டு, அதிகாரமும், ஆணவமும், தான்தோன்றித்தனமும் நிறைந்திருந்தது. பதவி இருந்தால் எப்படியும் ஆளலாம், எப்படியும் வாழலாம் என்றிருந்தது. ஏழைகள், எளியவர்களை அடக்கி ஆளும் மனநிலை நிறைந்திருந்தது. இத்தகைய தீய மதிப்பீடுகள் களையப்பட வேண்டும், உண்மையான, இறையாட்சியின் மதிப்பீடுகள் இந்த உலகத்திற்கு எடுத்துரைக்கப்பட வேண்டும். அதற்கு மிகப்பெரிய மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று இயேசு விரும்பினார். இயேசு கொண்டு வந்த மாற்றத்தை, நாமும் அவரோடு இணைந்தால் தான் செயல்படுத்த முடியும். நாம் அவரோடு இணைய வேண்டும் என்று இயேசு நம்மை எதிர்பார்க்கிறார்.

இயேசுவின் மதிப்பீடுகளையும், விழுமியங்களையும் வாழ்வாக்க, நாம் தயாராக இருக்கிறோமா? எப்படி அதனை செயல்படுத்த போகிறோம்? என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம். இயேசுவின் வாழ்க்கை, அவரது போதனை நம்மில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவரப்போகிறது? என்று சிந்தித்து செயல்படுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

பெறவேண்டிய திருமுழுக்கு !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன் என்னும் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அவரது சீடர்கள் வியப்படைந்திருப்பர். ஏனென்றால், யோர்தான் ஆற்றில் பலரும் பார்க்கும் வண்ணமே இயேசு திருமுழுக்கு யோவானால் திருமுழுக்கு வழங்கப்பட்டார். எனவே, இயேசு பெற வேண்டிய திருமுழுக்கை ஏற்கனவே பெற்றுவிட்டார். ஆனால், நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு என்று இயேசு கூறுகிறார். இந்த இரண்டாவது திருமுழுக்கு அவரது பாடுகளையும், இறப்பையும் குறிக்கிறது என்பதை அவரது பாடுகளின்போது அவரது சீடர்கள் உணர்ந்திருப்பர். முதலில் இயேசு பெற்ற திருமுழுக்கு யோவானின் திருமுழுக்கு நியமங்களை நிறைவேற்றுவதற்காகவே, அல்லது பிறருக்கு எடுத்துக்காட்டாய் இருப்பதற்காகவே. ஆனால், இரண்டாவது திருமுழுக்குதான் பிறர் மீட்படைய, அவரது பிறருக்கு வாழ்வு வழங்க. அந்தத் திருமுழுக்கு, அதாவது பாடுகளும் இறப்பும் நிறைவேறுமளவும் அவர் பெரும் மன நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தார். குறிப்பாக, முழு மனதுடன் இறப்பைச் சந்திப்பது உளவியல் நெருக்கடியை அவருக்குத் தந்தது. ஆனாலும், இறுதியில் அந்த இரண்டாவது திருமுழுக்கை இயேசு பெற்றார். அனைவருக்கும் புது வாழ்வு தந்தார்.

நமது வாழ்விலும் இரண்டு திருமுழுக்குகள் இருக்கின்றன. நாம் பிறந்தபோது நாம் பெற்ற திருமுழுக்கு முதலாவது. அத்திருமுழுக்கின் வழியாக இறைவனின் பிள்ளைகளானோம், திருச்சபையின் உறுப்பினர்களானோம், ஞானத்தைப் பெற்றுக்கொண்டோம். ஆனால், இன்னொரு திருமுழுக்கும் நாம் பெறவேண்டும். அதுதான், தூய ஆவியின் வல்லமை. அந்த வல்லமையால் நாம் இறைவனுக்கு, இயேசுவுக்கு சான்றுகளாய் வாழ வேண்டும். ஒருவேளை துன்பங்களை, தோல்விகளை சந்திப்பதும் அந்த சான்று பகர்வதில் அடங்கலாம். இந்தத் திருமுழுக்கு நமக்கு மன நெருக்கடி தரலாம். ஆனால், இயேசுவைப் போல நாமும் உறுதியாய் நிலைத்து நின்று சான்று பகர்வோமா!

மன்றாடுவோம்: உமது பாடுகளாலும், சிலுவைச் சாவாலும் எங்களுக்கு மீட்பு வழங்கிய இயேசுவே, நீர் பெற்றுக்கொண்ட இரண்டாவது திருமுழுக்குக்காக உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்விலும் நாங்கள் எங்கள் முதல் திருமுழுக்கில் வழங்கிய வார்த்தைப்பாடுகளைத் தொடர்ந்து வாழ்ந்து, இரண்டாவது திருமுழுக்கு என்னும் சான்று பகர்வோமாக.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''இயேசு, 'மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்?
இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்'' (லூக்கா 12:51)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசுவை அமைதியின் அரசர் என்றும் சமாதானத் தூதுவர் என்றும் நாம் போற்றுகிறோம். அவர் பிறந்தபோது விண்ணகத் தூதர்கள் ஒருங்கிணைந்து, ''உலகில் கடவுளுக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!'' எனப் பாடி வாழ்த்தினார்கள் (காண்க: லூக் 2:14). இயேசு இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு முன்னால் தம் சீடரை நோக்கி, ''அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்'' என வாக்களித்தார் (காண்க: யோவா 14:27). மேலும், தாம் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த பிறகு இயேசு தம் சீடர்களை நோக்கி, ''உங்களுக்கு அமைதி உண்டாகுக!'' என வாழ்த்தினார் (காண்க: லூக் 24:36). இவ்வாறு அமைதியைப் போற்றிய இயேசுவா ''பிளவு உண்டாக்க வந்தேன்'' எனக் கூறுவார் என நாம் கேள்வி எழுப்பினால் அது தவறு எனக் கூற முடியாது. ஆக, இயேசு கொணர்ந்த அமைதி யாது, அவர் கொணர்ந்த பிளவு யாது என்னும் கேள்வி எழுகிறது. இயேசு தம் சீடர்களுக்கு அமைதியை வாக்களித்தார் என்பதில் ஐயமில்லை. அந்த அமைதி கடவுளுக்கும் நமக்கும் இடையே உருவாகின்ற நல்லுறவையும் பிறரோடு நாம் கொள்கின்ற நல்லுறவையும் குறிப்பதாகும். பாவத்தை முறியடித்து நம்மைக் கடவுளோடும் எல்லா மனிதரோடும் ஒப்புரவாக்குகின்ற பணியை இயேசு தம் சிலுவைச் சாவு வழியாக நிறைவேற்றினார். எனவே அவர் உலகுக்கு அமைதி கொணர்ந்தார் எனலாம்.

-- ஆனால் அதே இயேசு நாம் வாழும் உலகில் ''பிளவையும் உண்டாக்குகிறார்'' (லூக் 12:51). இயேசு கொணர்கின்ற பிளவு பற்றி இயேசுவின் குழந்தைப் பருவத்தின்போதே அறிவிக்கப்பட்டது. குழந்தை இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிப்பதற்காக மரியாவும் யோசேப்பும் செல்கிறார்கள். அங்கே சிமியோன் என்னும் இறைவாக்கினர் இயேசு மக்களிடையே பிளவு கொணர்வார் என முன்னறிவிக்கிறார்: ''இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்...'' (லூக் 2:34). ஒருசிலர் இயேசுவை ஏற்பர், வேறு சிலர் அவரை எதிர்ப்பர். இவ்வாறு மனிதரிடையே பிளவு உண்டாகும். இயேசு வாழ்ந்த சமுதாயத்தில் குடும்ப உணர்வு மிக ஆழமாக வேரூயஅp;ன்றியிருந்தது. துன்ப துயரங்கள் ஏற்பட்ட வேளைகளிலும் மக்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாமல் நெருங்கிய குடும்ப உணர்வோடு வாழ்ந்தார்கள். அவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்த குடும்பங்களிலும் இயேசுவின் பொருட்டு பிளவு எற்பட்டது. ஏனென்றால் அக்குடும்பங்களில் சிலர் இயேசுவை ஏற்றார்கள், பிறர் அவரை எதிர்த்தார்கள். இவ்வாறு இயேசுவின் வருகையால் மனிதரிடையே பிளவு ஏற்பட்டது தொடக்க காலத் திருச்சபையில் தெளிவாகத் தெரிந்தது. அதையே லூக்கா பதிவுசெய்துள்ளார். இன்றைய உலகிலும் இயேசுவை ஏற்போரும் அவரை எதிர்ப்போரும் உள்ளனர். இயேசுவின் மதிப்பீடுகளின்படி நடப்போரும் அவருடைய போதனைகளைப் புறக்கணிப்போரும் உள்ளனர். ஏன், இயேசுவின் சீடர்களாகத் தம்மை அடையாளம் காட்டுவோர் கூட சிலவேளைகளில் அவருடைய போதனையை மறந்து விடுகிறார்கள். ஆக, இயேசு ''முரண்பாட்டு அறிகுறியாக'' இன்றும் உள்ளார் என்பதில் ஐயமில்லை. இயேசு கொணர்கின்ற அமைதி ஒருவிதமான மயான அமைதி அல்ல. கடவுளையும் மனிதரையும் ஒருங்கிணைக்கின்ற இயேசுவை நாம் ஏற்கிறோமா அல்லது எதிர்க்கிறோமா என்பதைப் பொறுத்தே நம் வாழ்விலும் நாம் வாழ்கின்ற உலக சமுதாயத்திலும் உண்மையான அமைதி நிலவும் என்பதே உண்மை.

மன்றாட்டு
இறைவா, உண்மையான அமைதியை உம்மில் கண்டுகொள்ள அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''மண்ணுலகில் தீமூட்ட வந்தேன்'' (லூக்கா 12:49)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- நெருப்பு பல விதங்களில் நமக்குப் பயன்படுகிறது. உணவு சமைப்பதற்கு நெருப்பு உதவுகிறது. குளிர் காலத்தில் நெருப்பின் அருகே அமர்ந்து குளிர்காய்வது இதமான அனுபவம். அழுக்குகளைச் சுட்டெரித்து அழிப்பதற்கும் நெருப்பு பயன்படுகிறது. அதே நேரத்தில் நெருப்பு அழிவுக்கும் காரணமாகலாம். கலவரங்கள் ஏற்படும்போது வீடுகளுக்கும் ஊர்களுக்கும் தீவைத்து அழிக்கின்ற செயல்கள் இப்போதும் நடந்துவருவது ஒரு கசப்பான அனுபவம். இயற்கையாகவோ மனிதரின் கவனக்குறைவாலோ காடுகளில் தீ எரிந்து பெரும் அழிவு ஏற்படுவதும் உண்டு. இவ்வாறு ஆக்கவும் அழிக்கவும் பயன்படுகின்ற தீயை மூட்டிவிட இயேசு வந்தார் என்றால் அதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? இயேசுவின் உள்ளத்தில் ஒரு தீ எரிந்துகொண்டிருந்தது. அதுதான் கடவுள் தம்மிடம் ஒப்படைத்த பணியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்னும் தணியாத ஆர்வம். இந்த ஆர்வத்தால் உந்தப்பட்ட இயேசு இவ்வுலகத்தில் மனித உள்ளங்களில் ஒரு தீயை மூட்டிட வந்தார். கடவுளின் ஆட்சியை இவ்வுலகில் கொணரவேண்டும் என்னும் ஆர்வம்தான் இயேசுவின் போதனைக்கும் செயல்பாட்டுக்கும் உந்துசக்தியாக அமைந்தது.

-- இயேசு இவ்வுலகில் மூட்டவந்த தீ ஆக்கவும் அழிக்கவும் வல்லது. நம்மிடமிருக்கின்ற சுயநலப் போக்கையும் தீய நாட்டங்களையும் அழிக்கின்ற சக்தி அதற்கு உண்டு; அதே நேரத்தில் நம்மைத் தூய்மைப்படுத்தி, நமக்குப் புத்துணர்வு அளித்து, நம்மைப் புடமிட்டுப் புத்தொளி வீசச் செய்கின்ற பண்பையும் இயேசு மூட்டுகின்ற தீயில் நாம் காணலாம். இயேசு கொணர்கின்ற தீ நம்மை மட்டும் மாற்றுவதோடு நின்றுவிடுவதில்லை. அவர் மூட்டுகின்ற தீ நம்மிடமிருந்து பிறருக்கும் பரவ வேண்டும். பிறரும் இறையாட்சியை விரிவடையச் செய்யவேண்டும் என்னும் தீயால் பற்றியெரிய வேண்டும். இதற்கு நாம் கருவிகளாக மாறினால் இந்த உலகமே மாற்றுருப் பெற்று இறையாட்சிக்குச் சாட்சியாக மாறும். இதுவே இயேசு கண்ட கனவு.

மன்றாட்டு
இறைவா, உம் அன்புத் தீ எங்கள் உள்ளங்களில் என்றுமே அணையா விளக்காக எரிந்திட அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

நெருப்பாக சுட்டெரி

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இன்றைய காலகட்டத்தில் வித விதமான நெருப்புகள் நம்மைச் சுற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. வீட்டைச் சுற்றி பொறாமை தீ, வீதியில் சாதீயத் தீ, நாட்டுக்குள் மத வெறி தீ, நாடுகளுக்குள் பொருளாதார போட்டி தீ, உலகில் தீவிரவாத தீ, வன்முறை தீ, அடக்குமுறை தீ, ஆணவத் தீ. இப்படி பலவித நெருப்புகள் சுவாலைவிட்டு எரிந்து உலனை உருக்குலைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த சூழலில் இயேசுவும் ஒரு தீ பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறார். எல்லா நெருப்பும்போல இதுவும் இழப்புகளை பிரிவினையை ஏற்படுத்தக்கூடியது. ஆனாலும் இந்த இழப்பும் பிரிவினையும் ஆக்கப்பூர்வமானது. தனி மனிதனையும் சமுதாயத்தையும் கட்டி எழுப்புவது. வாழ்வில் நிறைவையும் நிம்மதியையும் கொடுப்பது.

இயேசு குறிப்பிடுவது அவர் பெற்ற திருமுழுக்கு ஆகும். இறைவனுக்காக அவரது திருவுளத்தை மட்டுமே முதன்மைப்படுத்தி வாழ தீர்மானிப்பதே இத் திருமுழுக்கு.இத்தகைய தீர்மானம் சொந்தம் பந்தம் என்று பார்க்காது. உண்மை, நீதி, அன்பு, இரக்கம், பொது நலன் இவற்றையே முன்னிலைப்படுத்துவதால் உறவுக்குள் பிரிவினைகளுக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் வாய்ப்பு அதிகம்.

நாமும் அதே திருமுழுக்கினைப் பெற்றுள்ளோம். தீமைகளை அழிப்பதிலும் நன்மைகளைச் செய்வதிலும் நெருப்பாக நாம் செயல்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

 

 

--அருட்திரு ஜோசப் லீயோன்