முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 15: 14-21

என் சகோதரர் சகோதரிகளே, நீங்கள் நன்னயம் நிறைந்தவர்களாயும், எல்லா அறிவும் நிரம்பப் பெற்றவர்களாயும், ஒருவர் மற்றவரை அறிவுறுத்தக் கூடியவர்களாயும் இருக்கிறீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். ஆயினும் உங்களுக்கு நினைவூட்டும் வகையில் சிலவற்றை இக்கடிதத்தில் மிகத் துணிவோடு எழுதியுள்ளேன். நான் கடவுளின் அருளைப் பெற்றவன் என்பதால்தான் அவ்வாறு எழுதினேன். அந்த அருள்தான் என்னைப் பிற இனத்தாருக்குப் பணி செய்யக் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாக்கிற்று. பிற இனத்தார் தூய ஆவியால் அர்ப்பணிக்கப்பட்ட, கடவுளுக்கு உகந்த காணிக்கையாகும்படி அவர்களுக்குக் கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி. ஆகையால், கடவுளுக்காகச் செய்யும் இந்தப் பணியை முன்னிட்டு, கிறிஸ்து இயேசுவுக்குரியவனாகிய நான் பெருமை பாராட்டிக்கொள்ள இடமுண்டு. பிற இனத்தார் தமக்குக் கீழ்ப்படியும் பொருட்டுக் கிறிஸ்து என் வழியாய்ச் சொல்லாலும் செயலாலும், அரும் அடையாளங்கள், அருஞ் செயல்களின் வல்லமையாலும், கடவுளின் ஆவியின் வல்லமையாலும் செய்து முடித்தவற்றைத் தவிர வேறெதைப் பற்றியும் பேச நான் துணியமாட்டேன். இவ்வாறு, எருசலேம் தொடங்கி இல்லிரிக்கம் மாநிலம் வரை எங்கும் சுற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் பணியை முடித்துவிட்டேன். கிறிஸ்துவின் பெயரைக் கேள்விப்படாத இடங்களில் மட்டும் நற்செய்தி அறிவிப்பதே என் நோக்கமாய் இருந்தது. ஏனெனில் வேறொருவர் இட்ட அடித்தளத்தின்மேல் கட்டி எழுப்ப நான் விரும்பவில்லை. ஆனால், ``தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப் படாததை அவர்கள் புரிந்துகொள்வர்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 98: 1. 2-3. 3-4
பல்லவி: பிற இனத்தார் கண் முன்னே ஆண்டவர் மீட்பை வெளிப்படுத்தினார்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.
அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. -பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். -பல்லவி

3 உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே!
அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் வார்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் என அதனால் அறிந்து கொள்ளலாம். அல்லேலூயா.

லூக்கா 16:1-8

பொதுக்காலம், வாரம் 31 வெள்ளி

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-8

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: ``செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு, `உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது' என்று அவரிடம் கூறினார். அந்த வீட்டுப் பொறுப்பாளர், `நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப்போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், `நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், `நூறு குடம் எண்ணெய்' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், `இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்' என்றார். பின்பு அடுத்தவரிடம், `நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், `நூறு மூடை கோதுமை' என்றார். அவர், `இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார். நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 98: 1, 2 – 3ஆ, 3இ – 4
”உலகெங்கிலும் உள்ளவர்கள் ஆண்டவரின் விடுதலையைக் கண்டனர்”

இந்த உலகம் மிகப்பெரியது. எண்ணற்ற மக்களைக் கொண்டது. மக்கள் அனைவருமே தங்களுக்கென்று குடும்பம், நாடு, மதம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள். ஒவ்வொருவரிலும் வேற்றுமை இருந்தாலும், இந்த உலகத்தின் பிள்ளைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஒரு சில பொதுவான காரியங்கள் அவர்களுக்குள்ளாக பாசத்தையும், நெருக்கத்தையும். வேறு சில காரியங்கள் அவர்களுக்குள்ளாக பிளவையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. ஆண்டவர் எல்லாருக்கும் பொதுவானவர் என்பது தான் இன்றைய திருப்பாடலின் மையச்செய்தியாகும்.

இந்த உலகத்தில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், கடவுள் அனைவருக்கும் மீட்பையும், விடுதலையையும் தர வேண்டுமென்று திருவுளம் கொண்டிருக்கிறார். இது இஸ்ரயேலின் கடவுள் தான் உயர்ந்தவர் என்கிற எண்ணத்தை அல்ல, மாறாக, இறைவனை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளாக சுருக்கிவிடாமல், அவர் எல்லாரையும் அன்பு செய்யக்கூடியவர் என்கிற உயர்ந்த நோக்கத்தை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. இறைவன் வழங்கும் விடுதலை எல்லாருக்குமானது, அனைவரும் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்பதை இது நமக்கு தெளிவுபடுத்துகிறது. இறைவனின் விடுதலை எல்லாருக்கும் பொதுவானது என்பதால், நாம் அனைவரும் இறைவனைப் போற்றிப் புகழ அழைக்கப்படுகிறோம். இந்த அழைப்பை ஏற்று நாம் இறைவனைப் புகழ, அவருடைய வல்ல செயல்களை பாடலாக எழுத, முனைப்பு கொள்வோம்.

இறைவனின் அன்பும் அருளும் அனைவருக்கும் உரித்தானது. அந்த இறைவனை நமக்கு மட்டுமே சொந்தமாக்கிக்கொள்ளாமல், அனைவருக்கும் உரியவராக நாம் அறிவிக்க, நாம் முயற்சி எடுப்போம். இறைவனின் பிள்ளைகளாக வாழ்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

செல்வத்தின் பயன்பாடு

செல்வத்தை எப்படி சரியான முறையில் கையாள வேண்டும் என்பதை, லூக்கா நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தியில் எழுதுகிறார். செல்வம் என்பது ஆசீர்வாதமாகவும் இருக்கலாம். அதேவேளையில் நமக்கு சாபமாகவும் மாறலாம். செல்வத்தை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதைப் பொறுத்துதான், நமது செல்வம் நமக்கு ஆசீர்வாதமா? அல்லது சாபமா? என்பதை நாம் முடிவு செய்யலாம். செல்வத்தை நமது சுயநலத்திற்காக, நம்மை பலப்படுத்துவதற்காக பயன்படுத்தினால், அது நமக்கு சாபம். மாறாக, செல்வத்தை மற்றவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் பயன்படுத்தினால், அது மிகப்பெரிய ஆசீர்வாதம்.

செல்வத்தை எப்படி பயன்படுத்தக்கூடாது என்பதை, அறிவற்ற செல்வந்தன் உவமை 12 வது அதிகாரத்திலும், ஏழை இலாசர் உவமை 16 வது அதிகாரத்திலும் நாம் பார்க்கலாம். செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நல்ல சமாரியன் உவமை 10 வது அதிகாரத்திலும், சக்கேயு நிகழ்ச்சி 19 வது அதிகாரத்திலும் நாம் பார்க்கலாம். இந்த இரண்டு வெவ்வேறான தலைப்புகளுக்கு நடுவில் சற்று புரிந்து கொள்ள கடினமான பகுதிதான், நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம். எப்படி ஊதாரித்தமாக ஊதாரி மைந்தன், தன்னுடைய தந்தையின் சொத்துக்களை அழித்தானோ, அதேபோல இந்த பணியாளரும் தன்னுடைய தலைவருடைய சொத்துக்களை ஊதாரித்தனமாக, தவறாகப் பயன்படுத்தி அழிக்கிறான். அது தலைவருக்குத் தெரிய வருகிறபோது, அதனை அவன் ஈடுகட்டுகிறான். எப்படி ஈடுகட்டுகிறான் என்பதில் தான் விவிலிய அறிஞர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு வருகிறது. அந்த பணியாள், தனக்கு வரக்கூடிய வருமானத்தை(Commission) தள்ளுபடி செய்ததாகவும், அதனால் தலைவர் அவருடைய விவேகத்தைப் பாராட்டியதாகவும் பொதுவாகச் சொல்லப்படுகிறது.

செல்வத்தைப் பயன்படுத்தி நமது வாழ்வை மேம்படுத்தாமல், மற்றவர்களின் வாழ்க்கைத்தரத்தை நாம் உயர்த்த முயற்சி எடுப்போம். செல்வம் என்பது கடவுள் நமக்குத்தரக்கூடிய மிகப்பெரிய ஆசீர்வாதம். அதனை நல்ல முறையில் பயன்படுத்த முயற்சி எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

செல்வம் என்னும் பொறுப்பு

லூக்கா நற்செய்தியாளரின் பல நல்ல சிந்தனைகளுள், முக்கியமானது செல்வத்தைப் பற்றிய அவரது கருத்தாக இருக்கிறது. செல்வத்தைப்பற்றியும், செல்வந்தர்களைப் பற்றியும், அதிகமாகச் சொல்கிறவர் லூக்கா நற்செய்தியாளர் என்றால், அது மிகையாகாது. லூக்கா நற்செய்தியை அனைவரையும் அனைத்துச் செல்கின்ற நற்செய்தி. ஏழைகளுக்கு ஆதரவு சொல்லும் அவர், செல்வந்தர்களையும் விட்டுவிடுவதில்லை. அவர்களின் குற்றங்களை, அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறார். அதே வேளையில், அவர்களின் வாழ்வுக்கான வழியையும் காட்டுகிறார். அதன் ஒரு பகுதிதான் நாம், இன்று வாசிக்கக்கேட்ட நற்செய்திப் பகுதி.

செல்வத்தைப் பல வழிகளில் நாம் பயன்படுத்தலாம். நமக்கும் பயன்படுத்தலாம். மற்றவர்கள் பயன்பெறக்கூடிய வகையிலும் பயன்படுத்தலாம். எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான், நமது மீட்பு அடங்கியிருக்கிறது என்பதை, நற்செய்தியாளர் சுட்டிக்காட்டுகிறார். செல்வம் என்பது கடவுளால் கொடுக்கப்படுகிற வெறும் ஆசீர்வாதம் மட்டுமல்ல, மாறாக, அது மிகப்பெரிய பொறுப்பு. செல்வந்தர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கு அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அவர்களிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது, என்பது நம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள். அது வெறும் வார்த்தையல்ல. வாழ்வியல் தத்துவம். அந்த தத்துவத்தைப் புரிந்து கொண்டால், நமது வாழ்வு நிச்சயம் மகிழ்ச்சியானதாக இருக்கும்.

இன்றைக்கு செல்வம் வருகிறபோது, கடவுளின் ஆசீர்வாதம் தங்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று மேலோட்டமாகப் புரிந்து கொள்வது தவறு. அது ஆசீர்வாதம் மட்டுமல்ல, அது மிகப்பெரிய பொறுப்பு என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது, நாம் கடவுளுக்குரிய வாழ்வை வாழ முடியும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

ஒளியின் மக்களைவிட !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்கிறார்கள் என்கிறார் ஆண்டவர் இயேசு. அதற்கு எடுத்துக்காட்டாக இந்த உவமையைச் சொல்கிறார் இயேசு. வீட்டுப் பொறுப்பாளர் கடன் பட்டவர்களிடம் கணக்கை மாற்றி எழுதச் சொல்கிறார். இதன்மூலம், கடனாளிகளின் நல்மதிப்பைப் பெற்று வருங்காலத்தை ஓட்டிவிடலாம் என்பது அவரது எண்ணம். கடனாளிகளும் நேர்மையாளர்கள் அல்லர். அவர்களும் இந்த நேர்மையற்ற செயலுக்கு உடன்பட்டு, கடன் தந்த செல்வரை ஏமாற்ற முன் வருகிறார்கள். இறுதியாக, செல்வரும் நேர்மையான மனிதர் அல்ல. பொறுப்பாளரின் நேர்மையற்ற தன்மையைக் குறித்து அதிர்ச்சி வெளியிடாமல், அவரது முன்மதியைப் பாராட்டுகிறார். இவர்கள் மூவருமே இவ்வுலகின் மக்கள்தாம். ஒளியின் மக்கள் அல்லர்.

ஒளியின் மக்கள் இவர்களைப் போன்று முன் மதியோடு செயல்பட வேண்டும் என்று அழைக்கிறார் இயேசு. இருளின் மக்கள் நேர்மையற்ற விதத்தில் தங்கள் முன்மதியைப் பயன்படுத்துகிறார்கள். ஒளியின் மக்களோ நேர்மையான விதத்தில் தங்கள் முன்மதியைப் பயன்படுத்த வேண்டும். தீமையின் சக்திகளைவிட நன்மையின் சக்திகள் அதிக முன்மதியோடு, படைப்பாற்றலோடு செயல்பட்டால், உலகம் இறையாட்சித் தளமாக மாறிவிடாதா? தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் தங்கள் நிகழ்ச்சிகளைக் கவர்ச்சியோடு, மக்களை ஈர்க்கும் வண்ணம் தயாரிப்பதைப் போல அருள்பணியாளர்கள் தங்கள் மறையுரைகளை, தியானங்களை மக்களை ஈர்க்கும் விதத்தில் தயாரித்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்! அப்படி இல்லை என்பதைத்தான் இன்றைய உவமை வழியாகச் சொல்கிறார் இயேசு.

மன்றாடுவோம்: உலகின் ஒளியாம் இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உலகின் மக்கள் தங்கள் வணிகத்தை, புகழை, வெற்றிகளைப் பெருக்கிக் கொள்ள முன்மதியொடும், படைப்பாற்றலோடும் செயல்படுவதுபோல, நாங்கள் உமது சாட்சிகளாக வாழ அதிக முன்மதியோடும், படைப்புத் திறனோடும் செயல்பட எங்களுக்குத் தூய ஆவி என்னும் கொடையைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

--------------------------------

''நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால்,
தலைவர் அவரைப் பாராட்டினார்'' (லூக்கா 16:8)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- ''முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர்'' என்னும் தலைப்பில் வழங்கப்படுகின்ற இயேசுவின் உவமையில் திடீர் திருப்பங்கள் உண்டு. உவமையில் வருகின்ற முக்கிய கதாபாத்திரங்கள் ''தலைவர்'' என்பவரும் ''வீட்டுப் பொறுப்பாளர்'' என்பவரும் ஆவர். தலைவர் ஒரு பெரிய நிலக்கிழாராக இருந்திருக்க வேண்டும். அவர் நேரடியாகத் தம் சொத்தைப் பராமரிக்காமல் அதன் பொறுப்பை 'வீட்டுப் பொறுப்பாரிடம் ஒப்படைக்கிறார். பணப் பரிமாற்றத்தையும், வரவு செலவுகளையும் ஒழுங்காகப் பதிவுசெய்து, உரிய காலத்தில் நிலக்கிழாரிடம் கணக்கு ஒப்படைக்கின்ற பொறுப்பு வீட்டுப் பொறுப்பாளரைச் சாரும். ஆனால் தலைவரின் உடைமைகளை அந்த வீட்டுப் பொறுப்பாளர் ''பாழாக்கிவிட்டார்'' (லூக் 16:1). அவர் என்ன தவறு செய்தார் என்பது உவமையில் தரப்படவில்லை. ஆனால் நிலக்கிழாருக்கு அந்த வீட்டுப் பொறுப்பாளரிடம் அதிருப்தி ஏற்பட்டது. தன் வேலை பறிபோய்விடும் என்று அஞ்சுகிறார் வீட்டுப் பொறுப்பாளர். உடனே தன் வருங்காலம் பாழாகிவிடக் கூடாதே என்று கருதிய அவர் ''முன்மதியோடு'' செயல்படுகிறார். மண்வெட்டிப் பிழைக்க அவருக்கு உடல் திறமை இல்லை; பிறரிடம் கையேந்தி நிற்க அவருக்கு வெட்கம். எனவே தலைவருக்குக் கடன் திருப்பிக் கொடுக்க வேண்டிய ஆள்களை அணுகி, அவர்களுடைய கடனைக் குறைப்பதாகக் கூறுகிறார் வீட்டுப் பொறுப்பாளர். இது உண்மையிலேயே ஏமாற்று வேலைதான். ஆனாலும் ''நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார்'' என்று கூறி இயேசு உவமையை முடிக்கின்றார் (லூக் 16:8).

-- நேர்மையற்ற மனிதனின் நடத்தையைப் பாராட்டுவது சரியா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால் இந்த உவமையில் இயேசு ''நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர்'' செய்தது சரி என்று கூறவில்லை. மாறாக, அவர் ''முன்தியோடு செயல்பட்டார்'' என்று தலைவரால் பாரட்டப்பட்டதை இயேசு குறிப்பிடுகிறார். இயேசுவைப் பின்செல்வோரும் ''முன்மதியோடு'' நடக்க வேண்டும். இவ்வுலக செல்வத்தைக் கையாளுவதில் கவனமாகச் செயல்படுவது எப்படி என்று தெரிந்துள்ள மனிதர்கள் விண்ணக செல்வத்தை நாம் பெற வேண்டும் என்பதில் எவ்வளவு கருத்தோடு செயல்பட வேண்டும் என்பதை இயேசு இங்கே வலியுறுத்துகிறார் (காண்க: லூக் 16:9). ''முன்மதி'' என்பது கால இட சூழ்நிலைகளை நன்கு அறிந்து, உணர்ந்து, நாம் செய்கின்ற செயல்களின் பொருளையும் அவற்றின் விளைவுகளையும் சீர்தூக்கிப் பார்த்துச் செயல்படுகின்ற முறையைக் குறிக்கும். முன்மதி கொண்ட மனிதர் கடவுளின் விருப்பம் யாதென அறிந்து அதற்கேற்பச் செயல்படுவார்கள். கடவுள் தம்மிடம் ஒப்படைத்த பொறுப்பினைக் கரிசனையோடு நிறைவேற்றுவார்கள். அதுவே கடவுள் வழங்கும் நிலையான மகிழ்ச்சியில் நாம் பங்கேற்க வழியாகவும் அமையும்.

மன்றாட்டு
இறைவா, உம் திருவுளத்தை அறிந்து நாங்கள் முன்மதியோடு செயல்பட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன?
உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும்'' (லூக்கா 16:2)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசு கூறிய உவமைகளில் பல வகைகள் உண்டு. சில உவமைகளில் இயற்கை சார்ந்த உருவகங்கள் உள்ளன. மழை, காற்று, புயல், மண், பாறை, கோதுமை, திராட்சைத் தோட்டம், பறவைகள் போன்ற உருவகங்களை இவண் குறிப்பிடலாம். வேறு சில உவமைகள் மனித உறவுகளையும் தொடர்புகளையும் பற்றியவை. நல்ல சமாரியர், காணாமற்போன மகன், ஏழை இலாசர் போன்ற உவமைகள் இவ்வகையைச் சார்ந்தவை. இவ்வாறு மனித செயல்பாடுகள் பற்றிய உவமைகளில் ''வீட்டுப் பொறுப்பாளர்'' பற்றி இயேசு கூறிய உவமைகள் சிறப்பு வாய்ந்தவை. கடவுள் மனிதரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார். பொறுப்புகளைப் பெற்ற மனிதர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பினை ஆற்றுவதில் பொறுப்போடு செயல்பட வேண்டும். ''உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவதென்ன?'' என்று கேட்ட வீட்டுத் தலைவர், ''உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும்'' (காண்க: லூக்கா 16:2) என்று வீட்டுப் பொறுப்பாளரிடம் கூறுவது கடவுளுக்கும் நமக்கும் இடையே நிலவுகின்ற உறவைப் பிரதிபலிக்கிறது. கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற பொறுப்பு பிற மனிதர் நமக்குத் தருகின்ற பொறுப்பு மட்டுமல்ல, மாறாக, நம்மைத் தம் சாயலில் உருவாக்கி நம்மைத் தம் பிள்ளைகளாக ஏற்கின்ற கடவுள் நாம் இவ்வுலகில் அவருடைய பதிலாள்களாக இருந்து அவருடைய பெயரால் நம் பொறுப்பைச் செவ்வனே ஆற்ற வேண்டும் என்றுதான் விரும்புகிறார். எனவே, கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற பொறுப்பு ஒரு கொடை ஆகும். நன்றியோடு அக்கொடையைப் பெறுகின்ற நாம் அதை நன்முறையில் பயன்படுத்த அழைக்கப்படுகிறோம்.

-- பொறுப்போடு செயல்படுகின்ற மனிதர் தாம் புரிகின்ற செயல்களின் விளைவுகளை எண்ணிப் பார்ப்பர். நல் விளைவிகளைக் கொணரும் செயல்களுக்கும் தீய விளைவுகளைக் கொணரும் செயல்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினையும் தெளிவாக உணர்வர். இவ்வாறு முன்மதியோடு செயல்பட்டால் நாம் கடவுளிடம் கணக்கு ஒப்படைக்கும் நேரம் வரும்போது அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், பொறுப்பற்ற விதத்தில் செயல்படுவோர் தாம் புரிகின்ற தவற்றிற்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று கூற முடியாது. ஏனென்றால், கடவுள் நாம் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான சக்தியை நமக்கு அளித்து, நாம் அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப, முன்மதியோடு செயல்பட வேண்டும் என நம்மை அழைக்கிறார். இச்வாலை ஏற்க நாம் தயாரா?

மன்றாட்டு
இறைவா, நாங்கள் பொறுப்புணர்வோடும் முன்மதியோடும் செயல்பட அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

_________________________________

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

 

--அருட்திரு ஜோசப் லீயோன்