முதல் வாசகம்

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7: 22 - 8: 1

ஞானம் ஆற்றல் கொண்டது. அவ்வாற்றல் அறிவுடையது; தூய்மையானது; தனித்தன்மை வாய்ந்தது; பலவகைப்பட்டது; நுண்மையானது; உயிரோட்டம் உள்ளது; தெளிவுமிக்கது; மாசுபடாதது; வெளிப்படையானது; கேடுறாதது; நன்மையை விரும்புவது; கூர்மையானது. ஞானம் - எதிர்க்க முடியாதது; நன்மை செய்வது; மனித நேயம் கொண்டது; நிலைபெயராதது; உறுதியானது; வீண்கவலை கொள்ளாதது; எல்லாம் வல்லது; எல்லாவற்றையும் பார்வையிடுவது; அறிவும் தூய்மையும் நுண்மையும் கொண்ட எல்லா உள்ளங்களையும் ஊடுருவிச் செல்வது. ஞானம் - அசைவுகள் எல்லாவற்றையும் விட மிக விரைவானது. அதன் தூய்மையினால் எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது. எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது. ஞானம் - கடவுளின் ஆற்றலிலிருந்து புறப்படும் ஆவி; எல்லாம் வல்லவரின் மாட்சியிலிருந்து எழும் தூய வெளிப்பாடு. எனவே மாசுபட்டது எதுவும் அதனுள் நுழைய முடியாது. ஞானம் - என்றுமுள ஒளியின் சுடர்; கடவுளது செயல்திறனின் கறைபடியாக் கண்ணாடி; அவருடைய நன்மையின் சாயல். ஞானம் - ஒன்றே என்றாலும், எல்லாம் செய்ய வல்லது; தான் மாறாது, அனைத்தையும் புதுப்பிக்கிறது; தலைமுறைதோறும் தூய ஆன்மாக்களில் நுழைகிறது; அவர்களைக் கடவுளின் நண்பர்கள் எனவும் இறைவாக்கினர்கள் எனவும் ஆக்குகிறது. ஞானத்தோடு வாழ்கின்றவர்கள் மீது அன்பு செலுத்துவது போல வேறு எதன்மீதும் கடவுள் அன்பு செலுத்துவதில்லை. ஞானம் - கதிரவனை விட அழகானது; விண்மீன் கூட்டத்தினும் சிறந்தது; ஒளியைக் காட்டிலும் மேலானது. இரவுக்குப் பகல் இடம் கொடுக்கிறது. ஆனால், ஞானத்தைத் தீமை மேற்கொள்ளாது. ஞானம் - ஒரு கோடி முதல் மறு கோடிவரை ஆற்றலோடு செல்கிறது; எல்லாவற்றையும் முறையாக ஒழுங்குபடுத்துகிறது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 119: 89,90. 91,130. 135,175
பல்லவி: ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு.

89 ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு;
விண்ணுலகைப் போல் அது நிலைத்துள்ளது.
90 தலைமுறை தலைமுறையாய் உள்ளது உமது வாக்குப் பிறழாமை;
நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர், அது நிலைபெற்றுள்ளது. -பல்லவி

91 உம் ஒழுங்குமுறைகளின்படியே அனைத்தும் இன்றுவரை நிலைத்துள்ளன;
ஏனெனில், அவை உமக்கு ஊழியம் செய்கின்றன.
130 உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது;
அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. -பல்லவி

135 உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்!
உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும்.
175 உயிர் பிழைத்து நான் உம்மைப் புகழ்வேனாக!
உம் நீதி நெறிகள் எனக்குத் துணைபுரிவனவாக! -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

லூக்கா 17:20-25

ஆண்டின் பொதுக்காலம் 32 வியாழன்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-25

அக்காலத்தில் இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர். அவர் மறுமொழியாக, இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்ல முடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது என்றார். பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது: ஒரு காலம் வரும்@ அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள். அவர்கள் உங்களிடம், இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! என்பார்கள். ஆனால் நீங்கள் போக வேண்டாம் அவர்களைப் பின்தொடரவும் வேண்டாம். வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிட மகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார். ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 119: 89 – 90, 91 & 130, 135 & 175
”கடவுளே என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு”

கடவுளின் வாக்கு என்றென்றும் இந்த உலகத்தில் உள்ளது என்று இந்த திருப்படல் நமக்கு சொல்கிறது. வாக்கு என்பதை நாம் எப்படி புரிந்து கொள்ளலாம்? வாக்கு என்பதை நாம் வார்த்தை என்கிற பொருளில் அர்த்தப்படுத்தலாம். தொடக்கத்தில் கடவுள் இந்த உலகத்தைப் படைத்தபோது, ”ஒளி உண்டாகுக” என்று சொல்கிறார். உடனே அங்கு ஒளி தோன்றிற்று. ஆக, ஆண்டவரது வார்த்தை புதிய உலகத்தைத் தோற்றுவித்தது. இந்த உலகமே கடவுளின் வார்த்தையால் உருவானது.

இயேசுவின் பிறப்பைப்பற்றி யோவான் சொல்கிறபோது, “வாக்கு மனுவுருவானார்” என்று சொல்கிறார். கடவுளின் வார்த்தை இயேசுவில் மனித உருவம் எடுக்கிறது. ஆக, கடவுளின் வாக்கு என்பது, இறைவனோடு ஒப்பிடப்படுகிற வார்த்தையாக இருக்கிறது. ”என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு” என்பது, இறைவன் நம்மில் ஒருவராக, நம்மோடு இயற்கையின் வடிவத்திலும், இறைவார்த்தையின் வடிவத்திலும், கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட மனிதர்களின் வடிவத்திலும் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. இந்த உலகத்தில் வாழ்கிற அனைத்து படைப்புக்களுமே, கடவுள் அவற்றிற்கு காட்டிய ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. இவற்றைப்பின்பற்றி, மனிதனும் கடவுளின் உடனிருப்பை உணர்ந்து, அவரது ஒழுங்குமுறைகளின்படி வாழ, நாம் அழைக்கப்படுகிறோம்.

கடவுள் நம் அனைவர் மீதும் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடு தான், அவர் நம்மோடு இருக்கும் அந்த உடனிருப்பு. இறைவன் நம்மோடு இருக்கிறார் என்கிற அந்த உணர்வே, நமக்கு மகிழ்ச்சியையும், நாம் கடவுள் அமைத்துக்கொடுத்த வழிகாட்டுதலின்படி வாழ வேண்டும் என்கிற மதிப்பீட்டை உணர்த்த வேண்டும். அதற்கேற்றாற்போல, நம்முடைய வாழ்வை நாம் அமைத்துக்கொள்வோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இறையாட்சி மலரட்டும்

இறைவனின் அரசு பற்றி பல்வேறு விதமான நம்பிக்கை, யூத மக்கள் நடுவில் உலா வந்தன. யூத மக்கள் இந்த உலகத்தைப் படைத்தது கடவுள் என்று நம்பினாலும், இந்த உலகத்தின் மீது அவர்களுக்கு மதிப்பு இருக்கவில்லை. காரணம், இந்த உலகம் தீய ஆவிகளின் பிடியில் இருப்பதாக எண்ணினர். இந்த உலகத்தில் நடக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் இந்த ஆவிகள் தான் காரணம் என்று நினைத்தனர். என்றாவது ஒருநாள் இந்த தீய ஆவிகளின் தொல்லைகளுக்கு முடிவு வரும் என்று நம்பினர். அந்த நம்பிக்கையான நாளைத்தான் இறையாட்சி என்று அவர்கள் எண்ணினர். இந்த புரிதலோடு தான், அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

இந்த பிண்ணனியை மனதில் கொண்டு தான், பரிசேயர்கள் இயேசுவிடம் இறையாட்சி எப்போது வரும் என்று கேட்கிறார்கள். இயேசு இறையாட்சி கண்களுக்கு புலப்படும் முறையில் வராது என்கிறார். இதனுடைய பொருள் என்ன? இதனை எப்படி புரிந்து கொள்வது? இறையாட்சி என்பது ஒன்றை அழித்து, புது உலகை கட்டுவது அல்ல. மாறாக, ஒவ்வொருவருமே அதற்காக மாற்றத்தை தங்களுக்குள்ளாக ஏற்படுத்த வேண்டும். எனவே தான், இயேசு புளிப்பு மாவு உவமையைச் சொல்கிறார். அதாவது, ஒரு மனிதருடைய வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி, அது வாழ்விலும், இந்த உலகத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இன்றைக்கு சாதாரண மனிதர்கள் தங்களது நேர்மையான வாழ்வினால் மக்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அந்த தாக்கமானது மாற்றமாக மலர வேண்டும். அதைத்தான் இயேசு செய்தார். ஆக, நாம் இருப்பது போல இருந்துவிட்டு, மாயாஜாலம் போல இந்த உலகம் மாறும் என்றால், அது இறையாட்சி அல்ல. அப்படி மாற்றமும் ஏற்படாது. மாறாக, மாற்றம் என்பது நம்மிலிருந்து உருவாகி அது மலர வேண்டும். எல்லாவிடங்களிலும் பரவ வேண்டும். அந்த இறையாட்சியைத்தான் இயேசு போதிக்கிறார்.

இன்றைக்கு நாம் எல்லாரும், மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். யாராவது மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். நமக்கு ஏன் தேவையில்லாத வம்பு? என்று ஒதுங்கியே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் நாம் மாறுவோம். மாற்றத்தை நாமும் கொண்டு வருவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

இறையாட்சி அனுபவம்

ஒரு மருத்துவரிடம் நாம் உடல் நலம் சரியில்லை என்று போனால், அவர் நம்மிடம் சில கேள்விகளைக் கேட்பார். தாகம் அதிகமாக இருக்கிறதா? உடலில் வலி இருக்கிறதா? மயக்கமாக இருக்கிறதா? இப்படிக் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும், அறிகுறிகளைக் கண்டு கொள்வதற்கு எழுப்பப்படும் கேள்விகள். அதற்கேற்ப, அந்த மருத்துவர், ஒருவேளை இந்த நோயாக இருக்கலாம், என்று ஊகிப்பார். இன்றைய நற்செய்தியிலே, பரிசேயர்கள் இயேசுவிடம், இறையாட்சிக்கான காலத்தைக் கேட்கிறார்கள். இயேசு அதற்கு அறிகுறிகளை வைத்து, இறையாட்சி வரக்கூடிய காலத்தைச் சொல்ல முடியாது என்று சொல்கிறார்.

இறையாட்சியைப் பற்றி இயேசு கொடுத்த விளக்கத்தை வைத்து, ஒரு முடிவுக்கு வருவது, நமக்கு இயலாத காரியமாக இருக்கிறது. இறையாட்சி என்றால் என்ன? இயேசு இறையாட்சி பற்றி என்ன சொல்ல வருகிறார்? என்பது போன்ற கேள்விகள், நமக்கு, சரியான விளக்கதைக் கொடுக்க முடியாத கேள்விகள். இருந்தாலும், இயேசுவின் போதனையின் அடிப்படையில், இயேசுவின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையின் அடிப்படையில், நாம் இறையாட்சிக்கான பொருளை உணர்ந்து கொள்ள முயற்சி எடுக்கிறோம். இயேசு, இங்கே ”கண்களுக்குப் புலப்படும் முறையில் இறையாட்சி வராது” என்று சொல்கிறார். தன்னையே இறையாட்சிக்கு ஒப்பிடுகிறார். இயேசு வந்திருந்தாலும், மக்கள் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.இயேசு நற்செய்திப் போதிக்கிறார். புதுமைகள் செய்கிறார். ஆனாலும், மக்கள் இயேசுவை, இறையாட்சியை, உணர்ந்து கொள்ளவில்லை.

நமது வாழ்விலும் கடவுளின் பிரசன்னத்தை, பல வேளைகளில் சரியாக உணர்ந்து கொள்வதில்லை. கடவுளைச் சரியாக புரிந்து கொள்வதில்லை. ஏனென்றால், இன்னும் நாம் கடவுளைப்பற்றி சரியாக உணர்ந்து கொள்ளவில்லை. ஆக, நாம் ஒவ்வொருவருமே இறையனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான், இது நமக்கு வெளிக்காட்டுகிறது. நமது வாழ்வில், கடவுள் அனுபவம் பெற, நாம் முயற்சி எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

இயேசுவை வரவேற்க ஆயத்தமாயிருப்போம்

இயேசுவிடத்திலே பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் அவரை மெசியா என்று நம்புவதற்கு அடையாளங்களையும், அருங்குறிகளையும் கேட்டனர். ஒரு மருத்துவர் நோயைக்கண்டறிவதற்கு உடலின் அருங்குறிகளை வைத்து, முடிவெடுப்பார். அதேபோலத்தான், அருங்குறிகளை வைத்து யூதர்கள் முடிவெடுத்தனர். ஆனால், இயேசு அவர்கள் கேட்பதன் பொருட்டு என்றுமே அருங்குறிகளை செய்து காட்டியதில்லை. அதே முறையைத்தான் இரண்டாம் வருகைக்கும் கையாள்கிறார்.

அருங்குறிகளையும், அடையாளங்களையும் வைத்து ஏமாற்றுகிறவர்களைக் குறித்து, இயேசு எச்சரிக்கையாகவும் இருக்கச்சொல்கிறார். இயேசுவின் இரண்டாம் வருகை நிச்சயமாக இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அது எப்போது என்று யாராலும் அறுதியிட்டுக்கூற முடியாது. அதைப்பற்றி நாம் சிந்தித்துக்கொண்டு, நம்முடைய நேரத்தையும் வீணாகக்கொண்டிருக்கத் தேவையில்லை. மாறாக, இயேசுவின் வருகையை முன்னிட்டு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். விருந்தினர் நமது வீட்டிற்கு வருகிறபோது, நாம் எல்லாவித ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, புத்தாடைகள் அணிந்துகொண்டு, அவர்களின் வருகையை எதிர்பார்த்து, ஆவலோடு காத்திருக்கிறோம். அதேபோல இயேசுவின் வருகைக்காக நாம் எல்லாநேரத்திலும் காத்துக்கொண்டிருக்க வேண்டும்.

இயேசுவின் வருகையை பணத்திற்காக, புகழுக்காக, களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் திரித்துக்கூறிக்கொண்டிருக்கக்கூடிய போதகர்களிடத்தில் நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அவர்களிடம் நாம் ஏமாந்து போகாது, விழிப்பாயிருக்க வேண்டும். இரண்டாம் வருகையை பயத்தோடு அணுகாமல், நல்ல வாழ்வு வாழ்ந்துகொண்டு, விழிப்போடு வாழுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறையாட்சி உங்கள் நடுவேயே !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

மன மகிழ்ச்சியை வெளியே தேட முடியாது. அது அகத்தின் உள்ளேதான் இருக்கிறது. அதுபோல, இறையாட்சியும் மானிட வாழ்வுக்கு வெளியே இல்லை. நமது நடுவிலேயே இருக்கிறது என்னும் ஆண்டவரி;ன அமுத மொழிகள் இன்று நமக்கு வாழ்வு தரும் வார்த்தைகளாக வழங்கப்படுகின்றன. இன்று பலரும் தங்கள் தேடுதலை வெளியே வைத்திருக்கிறார்கள். சிலர் அற்புதங்களைத் தேடி நற்செய்திக் கூட்டங்களுக்குச் செல்கிறார்கள். சிலர் புதமைகளைத் தேடி திருத்தலங்களுக்குச் செல்கிறார்கள். சிலர் மகிழ்ச்சியைத் தேடித் திரையரங்குகளுக்குச் செல்கிறார்கள். ஆனால், தங்களுக்குள்ளேயே தேடினால், அமைதியும், நீதியும், மகிழ்ச்சியும் தங்களின் வாழ்விலும், பணியிலுமே அடங்கியிருக்கிறது என்பதைக் கண்டுகொள்ளலாம். இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது என்கிறார் ஆண்டவர். இறையாட்சியி;;ன் அடையாளங்களைக் கண்டுகொள்ளலாம். எங்கெல்லாம் சமத்துவம் இருக்கிறதோ, எங்கெல்லாம் மனிதர்கள் மன்னிப்பை அனுபவிக்கிறார்களோ, எங்கெல்லாம் பொருள்களைவிட மனிதர்கள் பெரிதாக மதிக்கப்படுகிறார்களோ, எங்கெல்லாம் இறைவனின் விழுமிங்கள் போற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகின்றனவோ, அங்கெல்லாம் இறையாட்சி புலர்ந்துவிட்டது என்றுதானே பொருள். எனவே, இறையாட்சியை நாம் வெளியே தேடவும் வேண்டாம். இறையாட்சிக்குரிய பண்புகளைப் பிறரிடமும் எதிர்பார்க்க வேண்டாம். நமது வாழ்விலேயே இறையாட்சிப் பண்புகளை நாம் கடைப்பிடித்து, நம்மைக் காண்பவர்கள் இறையாட்சி இங்கேயே இருக்கிறது என்று கண்டுகொள்ளும் வண்ணம் வாழ்வோமாக,

மன்றாடுவோம்: வானகத் தந்தையே இறைவா, உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம். உமது அரசு வருக என்று வேண்டுகிறோம். உமது அரசாட்சியி;ன் கூறுகளை எங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க அருள்தாரும். உமது ஆசிகளை நாங்கள் வெளியே தேடாமல், எங்கள் வாழ்விலும், பணியிலுமே கண்டுகொள்ள அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

 

-------------------------

''''இயேசு, 'வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரைக்கும் பளீரென
மின்னி ஒளிர்வதுபோல மானிட மகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்' என்றார்'' (லூக்கா 17:24)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- உலகில் வாழ்கின்ற எந்த மனிதரும் தம் வாழ்வு இந்த நாளில் இந்த மணி நேரத்தில் முடிவுக்கு வரும் என்று கூற இயலாது. நம் வாழ்வின் தொடக்கமும் முடிவும் நம் கைகளில் இல்லை. ஆனால் தொடங்கிய வாழ்வை எவ்வழியில் முன்னெடுத்துச் செல்வது என்பதைப் பொறுத்த மட்டில் நாம் பொறுப்போடு செயல்பட இயலும். இயேசு கடவுளாட்சியின் வருகை பற்றியும் இவ்வுலக முடிவு பற்றியும் எருசலேமின் அழிவு பற்றியும் கூறிய செய்திகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன (காண்க: லூக் 17:20-37). ஒன்றை மட்டும் நாம் உறுதியாகக் கொள்ளலாம். அதாவது, எதிர்காலம் பற்றி நமக்குத் தெரியாது; கடந்த கால நினைவு நம்மோடு உள்ளது. ஆனால் நிகழ்காலம் எவ்வாறு அமைய வேண்டும் எனத் தீர்மானிப்பது நம் கைகளில் உள்ளது. நாம் கடவுளைச் சார்ந்து வாழப்போகிறோமா, கடவுளின் வழியிலிருந்து விலகி நடக்கப் போகிறோமா என முடிவுசெய்ய அழைக்கப்படுகிறோம். இந்த முடிவை வேறு யாரும் நமக்கென்று தீர்மானிக்க முடியாது. நாமே நம் வாழ்வு பற்றி முடிவெடுக்க வேண்டும். இச்சுதந்திரத்தைக் கடவுள் நமக்குத் தந்துள்ளார். ஆனால் கடவுளின் நீதியை நம்மிடையே நிலைநாட்ட வருகின்ற மனுமகன் எப்போது மீண்டும் தோன்றுவார் என்பதை நாமறியோம். இதுவே இயேசுவின் ''இரண்டாம் வருகை'' என அழைக்கப்படுகின்ற ''நிறைவுக் காலம்''. அக்காலம் பற்றிய விவரங்கள் நமக்குத் தெரியாது. ஆனால் அக்காலத்தில் நாம் கடவுளுக்கு உகந்தவர்களாக இருப்போமா இல்லையா என்பதை நாம் இன்று, இங்கே தீர்மானிக்க வேண்டும்.

-- எதிர்பாராத நேரத்தில் முடிவு வரும் என்பதை நாம் இரு பொருள்களில் புரிந்துகொள்ளலாம். தனி மனிதர்களாகிய நமக்கு வருகின்ற முடிவு நம் சாவு எனலாம். அதை நாமே முன்கூட்டி நிர்ணயிக்க முடியாது. மற்றொரு பொருள் இந்த உலகம் நிறைவு பெறுகின்ற நேரம். இதுவும் வந்தே தீரும் என இயேசு கற்பிக்கிறார். ஆனால் எப்போது இந்த நேரம் வரும் என்பது பற்றி அவர் பதில் தர மறுத்துவிட்டார். கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோர் தங்கள் நம்பிக்கையில் தளராமல் நிலைத்து நிற்க அழைக்கப்படுகிறார்கள். அப்போது மானிட மகனின் வருகை பற்றி அவர்கள் அஞ்சி நடுங்க மாட்டார்கள். ஏனென்றால் நீதி மிகுந்த கடவுள் இரக்கம் நிறைந்தவர் கூட. அவருடைய நீதியே இரக்கத்தின் வெளிப்பாடுதான். கடவுளின் இரக்கத்தையும் அன்பையும் பரிவையும் நாம் வாழ்வில் உணர்ந்து அனுபவிக்க வேண்டும். அப்போது எதிர்காலம் நம்மை அச்சுறுத்துகின்ற ஒன்றாக இல்லாமல் நம்மை ஊக்கப்படுத்துகின்ற சக்தியாக மாறும்.

மன்றாட்டு
இறைவா, உம் வருகையை எதிர்நோக்கி என்றும் காத்திருக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

''இயேசு 'இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது' என்றார்'' (லூக்கா 17:21)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இறையாட்சி பற்றி இயேசு போதித்துக் கொண்டே எருசலேமை நோக்கிப் பயணம் செய்தார் என்பதை லூக்கா நற்செய்தி விளக்குகிறது. ஆனால் இறையாட்சி எப்போது வரும் என்று அறிய மக்கள் விரும்பினர். அவர்களுக்கு இயேசு அளித்த பதில் நமக்கு வியப்பாக இருக்கலாம். அதாவது, இறையாட்சி எப்போது வரும் என்று நாளும் நேரமும் குறித்துப் பதில்கூற இயேசு மறுத்துவிட்டார். கடவுள் இயேசுவின் வழியாகத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் என்பதை இயேசு மக்களுக்குப் பல அடையாளங்கள் வழி உணர்த்தினார். எனவே இயேசுவில், அவருடைய அதிசய செயல்களில், அவருடைய போதனையில் இறையாட்சி ஏற்கெனவே விடியத் தொடங்கிவிட்டது. இதைக் குறிக்கும் விதத்தில்தான் இயேசு ''இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது'' என்று பதிலிறுத்தார். இதிலிருந்து இறையாட்சி என்றால் மனிதரின் உள்ளத்தில் மட்டுமே தனித்தனியாகச் செயல்படும் என நாம் முடிவுகட்டிவிடலாகாது. இயேசுவின் வாழ்வில் கடவுளின் வல்லமை துலங்குகிறது என்பதை உணர்வோர் ஏற்கெனவே இறையாட்சி அனுபவத்தைப் பெற்றனர்.

-- கடவுளோடு நல்லுறவு கொள்வதும், பிற மனிதரை மதித்து அவர்களை அன்புசெய்வதும் இறையாட்சியின் அடையாளங்கள். எங்கே அன்புக் கட்டளை செயலாக்கம் பெறுகிறதோ அங்கே கடவுளின் ஆட்சி நிலவுகிறது என நாம் உறுதியாகக் கூறலாம். ஆயினும் இறையாட்சியின் முழுமை எப்போது வரும் என்பதை நாளும் நேரமும் குறித்துச் சொல்ல இயேசு மறுத்துவிட்டார். சில கிறிஸ்தவர்கள் ''கடைசிக் காலம்'' இன்று வரப்போகிறது, நாளை வரப்போகிறது என்று தவறாகக் கருதுவதுண்டு. இது இயேசுவின் போதனைக்கு முரணாக உள்ளது. கடவுளின் அரசு இவ்வுலகில் ஏற்கெனவே வரத் தொடங்கிவிட்டது என்பதை நாம் ஏற்க வேண்டும். ஏனெனில் இயேசுவின் வாழ்க்கையும் போதனையும் சாவும் உயிர்த்தெழுதலும் நமக்கு இந்த உறுதிப்பாட்டைத் தருகின்றன. ஆனால் உலக முடிவு என்று வருமோ என்னும் அச்சம் நம் உள்ளத்தை ஆட்கொள்ளாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த வேளையில் இறுதிக் காலம் வந்தாலும் சரி, நாம் கடவுளின் ஆட்சியில் முழுமையாகப் பங்கேற்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கவேண்டும். அப்போது இறையாட்சி எப்போது வரும் கேட்காமல் இறையாட்சியில் இப்போதே பங்கேற்கும் முறை என்னும் கேள்வியை நாம் எழுப்புவோம். அதற்கு இயேசு தருகின்ற பதில்தான் நாம் அன்புக் கட்டளையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது.

மன்றாட்டு
இறைவா, நாளை என்ன நிகழுமோ என்னும் கவலையில் நாங்கள் அழுந்திவிடாமல் இன்று எவ்வாறு வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு நடந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

---------------------------

எங்கும் அலையாதே .. உனக்குள் தேடு

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போல பல வித விதமான பெயரில் கிறிஸ்துவின் சபைகள் முளைக்கின்றன. இதோ இயேசு வருகிறார், அதோ அழைக்கிறார், கதவைத் தட்டுகிறார், குணப்படுத்துகிறார் என்ற பல பெயர்கள், இதோ இங்கே, அதோ அங்கே என்ற அழைப்புகள். "நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின் தொடரவும் வேண்டாம்."(லூக் 17'23)

இறையாட்சி உங்கள் நடுவே செயல்படுகிறது. வெளியே தேட வேண்டாம். அங்கு இங்கு என்று அலைய வேண்டாம். அது மின்னலென மாபெரும் சக்தியாக, உங்களிலும் சுற்றிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலாக உங்களுள் உள்ளது.

உங்களுள் இருக்கும் இச்சக்தியை அடையாளம் காண வேண்டும். இருக்கும் இடம் விட்டு எங்கெங்கோ தேடி அலைந்து, பல்வேறு சபைகளைத் தேடி அலைந்து நகை நட்டை இழந்து, பணத்தை கொடுத்து, நேரத்தை செலவிட்டு, வேலை விட்டுவிட்டு, குடும்பத்தை பரிதவிக்க விட்டு,இறுதியில் பைத்தியம் பிடித்து அலைய வேண்டாம்.

நீ இருக்கும் உன் கத்தோலிக்க சபையில் இறையாட்சி நிறைவாக உள்ளது. உன்னுள், உன் கத்தோலிக்க திருச்சபையில் இருக்கும் இந்த மாபெரும் வல்லமையாம் இறையாட்சியை அவரது சாட்சியாய் வாழும்போது கண்டுணர்வாய். எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை.

--அருட்திரு ஜோசப் லியோன்