முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3:11-26

கால் ஊனமுற்றிருந்தவர் நலமடைந்தபின் பேதுருவையும் யோவானையும் விடாமல் பற்றிக்கொண்டிருக்க, எல்லா மக்களும் திகிலுற்றுச் சாலமோன் மண்டபம் என்னும் இடத்திற்கு ஒருசேர ஓடிவந்தனர். பேதுரு இதைக் கண்டு மக்களைப் பார்த்துக் கூறியது: ``எருசலேம் மக்களே, நீங்கள் ஏன் இதைப் பார்த்து வியப்படைகிறீர்கள்? நாங்கள் எங்கள் சொந்த வல்லமையாலோ இறைப்பற்றாலோ இவரை நடக்கச் செய்துவிட்டதுபோல் ஏன் எங்களையே உற்றுப் பார்க்கிறீர்கள்? ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர் இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்து விட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள். நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக் கொண்டீர்கள். வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள். இதோ உங்கள் கண்முன் நிற்கிற இவர் உங்களுக்குத் தெரிந்தவர். இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது. அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது. இந்த நம்பிக்கையே உங்கள் அனைவர் முன்பாகவும் இவருக்கு முழுமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது. அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படிச் செய்துவிட்டீர்கள் என எனக்குத் தெரியும். ஆனால் கடவுள், தம் மெசியா துன்புற வேண்டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார். எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள். அப்பொழுது ஆண்டவர் புத்துயிர் அளிக்கும் காலத்தை அருளி உங்களுக்காக ஏற்படுத்திய மெசியாவாகிய இயேசுவை அனுப்புவார். விண்ணேற்றமடைந்த இயேசு யாவும் சீர்படுத்தப்படும் காலம்வரை விண்ணுலகில் இருக்கவேண்டும். பழங்காலத் தூய இறைவாக்கினர் வாயிலாகக் கடவுள் இந்தக் காலத்தைக் குறித்துக் கூறியிருந்தார். மோசேயும், `உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் சகோதரரிட மிருந்து என்னைப்போல் ஓர் இறைவாக்கினரைத் தோன்றச் செய்வார். அவர் உங்களுக்குக் கூறும் எல்லாவற்றிற்கும் நீங்கள் செவிசாயுங்கள். அந்த இறைவாக்கினருக்குச் செவிசாய்த்துக் கீழ்ப்படியாத எவரும் மக்களினின்று அடியோடு அழிக்கப்படுவர்' என்று கூறியுள்ளார். சாமுவேல் தொடங்கி இறைவாக்குரைத்த அனைவரும் இந்தக் காலத்தைப்பற்றி அறிவித்து வந்தனர். அந்த இறைவாக்கினர் உரைத்தவற்றை உரிமையாக்கிக்கொள்பவர்கள் நீங்கள். கடவுள் ஆபிரகாமிடம், `உன் மரபினர் வழியாக மண்ணின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்' என்று கூறி உடன்படிக்கை செய்தார். கடவுள் உங்கள் மூதாதையரோடு செய்த அந்த உடன்படிக்கையையும் உரிமையாக்கிக்கொள்பவர்கள் நீங்களே. ஆகையால், நீங்கள் அனைவரும் உங்கள் தீய செயல்களை விட்டு விலகி ஆசி பெற்றுக்கொள்வதற்காகவே, கடவுள் தம் ஊழியரைத் தோன்றச் செய்து முதன்முதல் உங்களிடம் அனுப்பினார்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 8:1 மற்றும் 4, 5-6, 7-8

பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!

1ய ஆண்டவரே! எங்கள் தலைவரே!
உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்?
மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? -பல்லவி

5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
6 உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படிச் செய்துள்ளீர்;
எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

7 ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள்,
8 வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும்
உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

லூக்கா 24:35-48

பாஸ்கா காலம்-முதல் வாரம் வியாழன்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 35-48

அக்காலத்தில் சீடர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும், இயேசு அப்பத்தை பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கு இருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், ``நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே'' என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்கு உள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், ``உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?'' என்று கேட்டார். அவர்கள் வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார். பின்பு அவர் அவர்களைப் பார்த்து, ``மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப்பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே'' என்றார்; அப்போது மறைநூலைப் புரிந்துகொள்ளுமாறு அவர்களுடைய மனக் கண்களைத் திறந்தார். அவர் அவர்களிடம், ``மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

லூக்கா 24: 35 - 48
உடனிருப்பு

ஒரு மனிதனின் உடலில் மருத்துவம் இருக்கிறது என்பதற்காக அந்த மனித உடலை இறக்க செய்து விட்டு தங்கள் மண்ணில் அடக்கம் செய்வதன் வழியாக (நோயில்லாத நாடாக) ஏற்படுத்தியிருக்கின்றார்கள் சீனா தேசத்தினர். தமிழ் மறையை இலக்கியமாக வடிவமைத்து கொடுத்த திருவள்ளுவரின் உருவத்தை சிலையாக அமைத்திருக்கின்றார்கள் இந்தியாவில். கருப்பு இன மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி மக்களின் மாண்பைக் காத்த நெல்சன் மண்டேலாவின் உடலை (உருவத்தை) தங்கள் நாட்டில் வைத்து கடவுளாக வணங்குகின்றார்கள் ஆப்பிரிக்க நாட்டு மக்கள். இவையெல்லாம் அவர்களுடைய உடனிருப்பு இருக்க வேண்டும் என்பதற்காக இந்த சமுதாயம் செய்த நன்றி கடன்.

அது போல தான் உயிர்த்த ஆண்டவர், தான் தொடர்ந்து சீடர்களோடு இருப்பதனை எண்பித்துக் காட்டத்தான் மீண்டும் மீண்டும் காட்சியளிக்கின்றார். ஆனால் இயேசுவோடு பயணித்தவர்கள் பயந்து ஒதுங்குகின்றார்கள். காரணம் இயேசு இறந்து விட்டார், இனி வர மாட்டார். ஆனால் இயேசு எப்படியாவது, தான் பயிற்சி கொடுத்தவர்கள் உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்த தான் மீண்டும் மீண்டும் காட்சியளிக்கின்றார்.

நம்முடைய உடனிருப்பு நம்முடைய குடும்பங்களில் மகிழ்ச்சியைத் தருகிறதா? நம்முடைய சமுதாயத்தில் மாற்றத்தைத் தருகிறதா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

=====================

கலக்கத்தைக் கலகலப்பாக்க! (லூக்கா 24 : 35-48)

அகக்கண்கள் திறந்திருந்தாலும் அவர்களின் மனக்கண்கள் மூடியே இருந்தன. இதுவரை ஒருவருக்கும் இருவருக்குமாய் தோன்றி தன்னை வெளிப்படுத்திய ஆண்டவர் இன்றைய நற்செய்தியில் சீடர்கள் அனைவரும் குழுமியிருக்க அங்கே தன் உயிர்ப்பின் மாட்சியை வெளிப்படுத்துகிறார். அவர் இறப்பினைப் பற்றி முன்னறிவிக்கும் போது புரியாதவை இப்பொழுது மட்டும் என்ன புரியவா போகின்றது? இது இயேசுவுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் இயேசு உயிர்ப்பினைப் பற்றி அவர்கள் உணர கடும் பாடுபடுகிறார். இந்த சிரமத்தை அவர் இறப்பதற்கு முன்பாக எடுக்கவில்லையே! காரணம்,

இயேசு இறந்துவிட்டதால் சீடர்கள் அனைவரும் கலக்கமும், பீதியும் அடைந்திருந்தார்கள். வாழ வேண்டுமா அல்லது யூதாசினைப் போன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா அல்லது பேதுருவைப் போல அதிகார வர்க்கத்தினருக்குப் பயந்து இயேசுவை மறுதலிக்க வேண்டுமா என்றெண்ணி கூனிக்குருகி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசு உயிர்த்துவிட்டார் என ஆங்காங்கே கேள்விப்படுவதைக் கேட்டு இவர்களின் கலக்கம் குழப்பமாக மாறியது. இது இவர்களுக்கு இன்னும் வேதனையைக் கொடுக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு தனது சீடர்களை விட்டுவிட விரும்பவில்லை. அவர் தனது மந்தையில் தொலைந்த ஓர் ஆட்டினைக் கூட தேடி வருபவர் இல்லையா? ஆனால் இங்கு நூறு ஆடுகளுமே தொலைந்து, துவண்டு போயல்லவா கிடக்கின்றது. அவர்களைத் தேற்ற, உற்சாகப்படுத்த, கலக்கங்களை, குழப்பங்களை தெளிவுபடுத்த மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார். ஆண்டவர் பலவீனங்களை ‘பலமாக’ மாற்றுகிறார். அவர்களின் கலக்கத்தைக் கலகலப்பாக மாற்றுகிறார். அவர்களின் அச்சத்தை அஞ்சாமையாக்குகின்றார். மகிழ்ச்சியால் அவர்கள் நிரம்புகிறார்கள்.

நம் ஆண்டவரின் உயிர்ப்பு இத்தகைய மாற்றத்தை நம்மில் உருவாக்கட்டும், நம் உரு மாறட்டும்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 8: 1a, 4, 5 – 6, 7 – 8
”ஆண்டவரே உமது பெயர் எவ்வளவு பெயர் மேன்மையாய் விளங்குகின்றது”

கடவுளைப்பற்றியும், அவரது படைப்பின் மேன்மையைப் பற்றியும் உள்ளத்தில் ஆழமாக சிந்தித்த ஒரு மனிதரின் கூக்குரல் தான், இந்த திருப்பாடல். கடவுள் எந்த அளவுக்கு மாட்சிமையும், வல்லமையும் உடையவராய் இருக்கிறார் என்பதை, நாம் அவரைப்பற்றி சிந்தித்தால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். வெறுமனே படைப்புக்களை மேலோட்டமாக பார்த்தால், கடவுளின் மாட்சிமையை நாம் புரிந்து கொள்ள முடியாது. நேர்த்தியாகப் படைக்கப்பட்ட பறவையினங்கள், விலங்குகள், மரங்கள், அவைகளுக்கு உணவு வழங்கும் விதம், என்று ஒவ்வொன்றையும் நாம் இரசிக்கிறபோது, அதன் அழகைப் பருகுகிறபோது, கடவுளின் மேன்மையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

கடவுளின் ஞானம் மனிதர்களோடு ஒப்பிடப்பட முடியாத ஒன்று. ஒவ்வொன்றையும் அவர் செதுக்கி வைத்திருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் ஒரு வடிவம் தந்திருக்கிறார். அது இயல்பாகவே இயங்குவதற்கு ஆற்றல் வழங்கியிருக்கிறார். படைப்புக்களையும், அவற்றின் மேன்மையையும் பேசுகின்ற திருப்பாடல் ஆசிரியர், படைப்பின் சிகரமாக இருக்கக்கூடிய மனிதர்களின் பெருமைகளையும் எடுத்துரைக்கின்றார். மனிதர்கள் கடவுளின் படைப்பாக இருந்தாலும், மற்ற படைப்புகளுக்கெல்லாம் மேலானவர்களாக அவர்களைப் படைத்துள்ளார். கடவுளுக்கு சற்றே சிறியவர்களாக படைக்கும் அளவுக்கு, அவர்கள் மேல் கடவுள் மிகுதியாக அன்பு கொண்டுள்ளார். அவர்களுக்கு பல அதிகாரங்களையும், பொறுப்புக்களையும் கொடுத்து, அவர்களை உயர்த்தியிருக்கிறார். இவ்வளவுக்கு கடவுளின் அன்பிற்கு பாத்திரமாக இருக்கிற நாம், கடவுளுக்கு பிரமாணிக்கமாக இருக்க வேண்டும்.

கடவுள் நமக்கு தந்திருக்கிற இவ்வளவு பெருமைகளையும், நாம் உணர்ந்து அதற்கேற்ப நாம் எப்போதும், கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக வாழ முயற்சி எடுக்க வேண்டும். கடவுளுக்கு கீழ்ப்படிந்து பிரமாணிக்கமுள்ளவர்களாக நாம் வாழ, எந்நாளும் உறுதி எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

இயேசுவின் பொறுமை

இயேசு தன்னுடைய சீடர்களுக்கு தோன்றக்கூடிய நிகழ்வு, இன்றைய நற்செய்தியாக நமக்குத் தரப்பட்டிருக்கிறது. இயேசு அவர்களுக்குத் தோன்றி, அவர்களுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தக்கூடியதை நாம் பார்க்கிறோம். இயேசு தான் வாழ்ந்தபோதே தனது மரணத்தைப் பற்றி சீடர்களுக்கு பலமுறை கூறியிருக்கிறார். மானிட மகன் எப்படிப்பட்ட சாவை எதிர்கொள்ள வேண்டும் என்று விவரித்திருக்கிறார்.

இயேசு சொன்னதுபோலவே நடந்தது, என்று இயேசு உயிர்த்த பிறகு பலர் வாயிலாக சீடர்களுக்கு அறிவித்திருக்கிறார். அப்படியிருந்தாலும் சீடர்கள் பயந்தவர்களாய், அஞ்சியவர்களாய் இருப்பதைப்பார்க்கிற நமக்கு, நிச்சயம் சீடர்கள் மீது கோபம் வரத்தான் செய்யும். ஆனால், இயேசு மிகப்பொறுமையாக இருக்கிறார். அவர்களை பயப்பட வேண்டாம் என்கிறார். அவர்களை வாழ்த்துகிறார். அவர்களின் உள்ளங்களில் எழுந்த கேள்விகளுக்கு பொறுமையோடு பதில் கொடுக்கிறார். தான் ஆவியல்ல என்பதை நிரூபிக்கிறார். அவரது வார்த்தை ஒவ்வொன்றுமே, சீடர்களின் கலக்கத்தைப்போக்கி, விசுவாசத்தை திரும்ப வரச்செய்வதாக இருக்கிறது. மூன்றாண்டு காலம் இயேசுவோடு வாழ்ந்தவர்களிடம், இன்னும் அதிகபட்ச விசுவாசம் இருந்திருக்க வேண்டும். அப்படி ஒரு நிலை இல்லையென்றாலும், இயேசு பொறுமையைக் கையாள்கிறார். அவர்களைப் பக்குவப்படுத்துவதிலும், அவர்களின் விசுவாசத்தை வளர்த்தெடுப்பதிலும் அவர் அக்கறை கொள்கிறார்.

நமது வாழ்வில், இந்த விசுவாசத்தை வளர்த்தெடுப்பது முதன்மையான காரியமாக இருக்க வேண்டும். அந்த விசுவாசத்தை வளர்த்தெடுக்க நாம் பலவித முயற்சிகளை எடுக்கிறபோது, சோர்ந்து போகாமல் உறுதியான உள்ளத்தோடு, தொடர்ந்து விடாமுயற்சியோடு, நமது பணியில் ஈடுபட உறுதி எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கடவுளின் அருளை நம்புவோம்

பொறுமையோடு காத்திருத்தல் என்பது கிறிஸ்தவ வாழ்வின் முக்கிய விழுமியங்களில் ஒன்று. இந்த சிந்தனை நமது செப வாழ்வுக்கும் பொருந்தும். சீடர்கள் அதைத்தான் தங்களின் வாழ்வில் செய்கிறார்கள். இயேசு இறந்தபிறகு அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்கள் இயேசுவின் உடனடி இறப்பை எதிர்பார்க்கவும் இல்லை. இயேசு பல வேளைகளில் அதைச்சொல்லியிருந்தாலும், இவ்வளவு சீக்கிரம் இயேசு இறப்பார் என்பது அவர்கள் எதிர்பாராத ஒன்று.

இயேசுவின் இறப்பிலிருந்து வெளிவருவதற்கு முன்னதாக அவர்களைப் பயம் ஆட்டிப்படைக்கிறது. இயேசுவிற்கு பிறகு தங்களின் வாழ்வு என்ன ஆகும்? என்கிற கேள்வி மனதை குடைகிறது. போக்கிடம் இல்லாமல் ஒரே .இடத்தில் அவர்கள் கூடியிருக்கிறார்கள். ஒரேநாளில் தங்களின் வாழ்வு இப்படியாகிவிடும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இயேசுவின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனாலும், இனிமேல் நடந்தவைகளைப்பற்றி சிந்தித்து பயன் இல்லை. இனி நடப்பது நல்லவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் இயேசு அவர்களுக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வருகிறது. கடவுள் மீது நம்பிக்கை வைத்து, நிச்சயம் கடவுள் நமக்கு ஒரு வழியைக்காட்டுவார். அதுவரை பொறுமையாக இருப்போம் என, அவர்கள் அந்த அறையில் தங்கியிருக்கிறார்கள்.

பலவேளைகளில் நமது வாழ்வில நடக்கும் நிகழ்வுகளுக்கு பதில் தெரியாதபோது, நாம் எதிர்பார்க்காதவை நடக்கிறபோது, கடவுளின் அருளில் நம்பிக்கை வைக்க அழைக்கப்படுகிறோம். அந்த நம்பிக்கை நமக்கு பதில் கொடுக்கும். அந்த நம்பிக்கை நம்மை வழிநடத்தும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

உயிர்த்த இயேசுவின் சாட்சியமாய் மாறுவோம்

இயேசுவின் உயிர்ப்பு நிகழ்விற்கு பல சான்றுகள் இருந்தாலும், இயேசுவோடு மூன்றாண்டுகள் வாழ்ந்த சீடர்கள் தான் மிகப்பெரிய சாட்சிகள். இயேசு அவர்களோடு இருந்தபோது வாழ்ந்த வாழ்க்கைக்கும், உயிர்த்த இயேசுவைக்கண்டபிறகு அவர்கள் வாழ்ந்த வாழ்விற்கும் இடையேயான வேறுபாடு மிகப்பெரியது. இயேசுவோடு வாழ்ந்தபோது, தங்களுக்குள் யார் பெரியவர்? என்று சண்டையிட்டுக்கொண்டனர். கடலில் பயணம் செய்தபோது, சீறிஎழுகிற அலைகளைப்பார்த்து, கூச்சல்போட்டு மரணபயத்தில் கத்தினர். தீய ஆவிகளை ஓட்டுவதற்கு இயேசுவால் வல்லமை கொடுக்கப்பட்டிருந்தும், விசுவாசமின்மையினால் அந்த ஆற்றலைப்பயன்படுத்த திறனற்றிருந்தனர். இயேசுவுக்கு ஆபத்து என்று வந்தபோது, அவரைவிட்டுவிட்டு ஓடினர். இயேசு இறந்தபிறகு அறைகளில் தங்கள் உயிரைப்பாதுகாத்துக்கொள்ள பதுங்கியிருந்தனர். இந்த அளவுக்கு பயந்த, கோழைத்தனமான வாழ்வு வாழ்ந்த சீடர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் வந்தது என்றால், அதற்கு காரணம் இயேசுவின் உயிர்ப்புதான் என்பதை ஆணித்தரமாக நம்மால் கூறமுடியும்.

இன்றைய நற்செய்தியில் சீடர்களின் வாழ்வு மாற்றம் பெறக்காரணமான உயிர்த்த இயேசுவின் காட்சியை நாம் பார்க்கிறோம். இந்த உயிர்ப்பு அனுபவம் தான் சீடர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. சாவைப்பார்த்து நடுங்கிக்கொண்டிருந்த அவர்களுக்கு வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. இயேசுவோடு அவர்கள் தங்கியிருந்தபோது கற்றுக்கொண்ட பாடங்கள் இப்போது அவர்களுக்கு அனுபவமாக மாறியது. ஆண்டவரின் வார்த்தை அவர்களின் உள்ளத்தை ஊடுருவியிருந்தது. அவர்களின் வாழ்வு மாற்றம் பெற்றது. தங்களின் உயிரைப் பெரிதாக மதித்துக்கொண்டிருந்து அவர்களுக்கு, மற்றவர்களின் ஆன்மாவை மீட்கும் பொறுப்பின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டது. இயேசுவுக்காக எதையும் இழப்பதற்கு தயாராக இருக்கக்கூடிய மாற்றத்தை இந்த உயிர்ப்பு அனுபவம் அவர்களுக்கு கொடுத்தது.

உயிர்த்த இயேசுவின் அனுபவத்தை நாம் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும். அது ஓர் ஆழமான நம்பிக்கை. நம் வாழ்வையே புரட்டிப்போடக்கூடிய வாழ்க்கை அனுபவம். அத்தகைய உயிர்ப்பு அனுபவத்தைப்பெறுவதற்கு நமக்குத்தேவை ஆழமான விசுவாசம். அந்த ஆழமான விசுவாசம்தான் இயேசுவினுடைய சீடர்களின் வாழ்வை அப்படியே புரட்டிப்போட்டது. இன்று உலகெங்கும் ஆண்டவர் இயேசுவைப்பற்றிய் விசுவாசம் தழைத்தோங்கியதற்கு இந்த ஆழமான விசுவாசம்தான் காரணம். அத்தகைய ஆழமான விசுவாசத்தை, உயிர்த்த இயேசுவிடம் கேட்டு மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

இயேசுவின் உயிர்ப்பு அவநம்பிக்கையைப் போக்குகிறது !

இயேசுவின் உயிர்ப்பு நம்பிக்கையின்மையை மாற்றி, நம்பிக்கையைத் தருகிறது என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம்.

இயேசுவின் சீடர்கள் உயிர்ப்பின் சாட்சியத்தை அனுபவித்தவர்களின் மூலம் கேட்டறிந்தாலும், அவர்கள் உயிர்ப்பின் செய்தியை முழு நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ளவில்லை. எனவேதான், உயிர்த்த இயேசு அவர்கள் நடுவே நின்று அவர்களை வாழ்த்தியபோதும், "அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்". இயேசுவும் அவர்களிடம் "நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்?" என்று கேட்கிறார்.

இருப்பினும், அவர்களின் நம்பிக்கையின்மையைப் போக்குவதற்காக இயேசு மூன்று செயல்களைச் செய்கிறார்.
1. தமது கைகளையும், கால்களையும் அவர்களுக்குக் காண்பிக்கிறார்.
2. அவர்களிடமிருந்து மீன் துண்டு ஒன்றை வாங்கி அவர்களோடு அமர்ந்து உண்கிறார்.
3. மறைநூலை அவர்களுக்கு விளக்கி, அவர்களது மனக்கண்களைத் திறக்கிறார்.

இவ்வாறு அவர்களது உள்ளத்திலிருந்த நம்பிக்கையின்மையை அகற்றி, இறை நம்பிக்கையை ஊட்டுகிறார்.

நாமும் இயேசுவின் உயிர்ப்பில், ஆற்றலில், புதுவாழ்வில் நம்பிக்கை குறைந்திருந்தால், இயேசுவின் உயிர்ப்பு அவற்றை நீக்கும். அவரிடம் நம்மை ஒப்புக்கொடுப்போம்.

மன்றாடுவோம்: சாவை வென்று உயிர்த்த மாட்சி மிகுந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது சீடர்களைப் போலவே நாங்களும் நம்பிக்கையின்மையினால் வாடுகிறோம், கலங்குகிறோம். உமது இரக்கத்தில், ஆற்றலில், உயிர்ப்பில் நம்பிக்கை குன்றுகிறோம். எங்களைச் சந்தித்து, உமது தூய ஆவியினால் எங்களைத் திடப்படுத்தியருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

மூன்று சான்றுகள் !

யூதர்களின் சட்டப்படி ஒருவர் தமக்குத் தாமே சாட்சியாக இருக்க முடியாது. அவருக்குப் பிற சாட்சிகள் தேவை. எனவே, இயேசுவும் யூதர்களின் சட்டத்தை மதித்து, தம்முடைய சான்றுகளை முன்வைக்கிறார்.

1. இயேசுவின் முதல் சான்று திருமுழுக்கு யோவான். அவரைப் பற்றியே இயேசு "என்னைப் பற்றி சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப் பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும். யோவானிடம் ஆள் அனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார்" என்கிறார் இயேசு. திருமுழுக்கு யோவான் ஒரு நேர்மையாளர், இறைவாக்கினர். அவருடைய சான்று ஏற்றுக்கொள்ளத்தக்கது.

2. இயேசுவின் இரண்டாவது சான்று அவரது பணிகள். " நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்". கனிகளைக் கொண்டே மரத்தை எடைபோடலாம் என்னும் இயேசுவின் வாக்கிற்கு, அவரது பணிகளே உரைகல். இயேசுவின் பணிகள் நேர்மையான, உள்நோக்கமற்ற, தந்தைக்குப் பணிந்து அவர் ஆற்றிய பணிகள்.

3. இயேசுவின் மூன்றாவது சான்று மறைநூல். " மறைநூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என அதனைத் துருவி துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே. அமமறைநூலும் எனக்குச் சான்று பகர்கிறது". இறைவார்த்தையின்படியே இயேசு வாழ்ந்தார், இறைவார்த்தை முன்மொழிந்த அனைத்து வாக்குகளையும் அவரது வாழ்வும், பணிகளும் நிறைவேற்றின.

இயேசுவைப் போலவே நமக்கும் மறைநூலும், நமது நேர்மையான பணிகளும், யோவானைப் போன்ற நேர்மையான மனிதர்களும் சான்றுகளாய் இருந்தால், நாம் பேறுபெற்றவர்கள்.

மன்றாடுவோம்: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது சீடர்கள் அனைவருக்கும் நீர் வழங்கிய தூய ஆவி என்னும் கொடையை எங்களுக்கும் தந்து, நாங்கள் விடுதலை அனுபவம் பெற அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

''இயேசு சீடர்களைப் பார்த்து, 'நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்?
ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும்
கால்களையும் பாருங்கள், நானே தான்' என்றார்'' (லூக்கா 24:38-39)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு உயிர்த்தெழுந்த நிகழ்ச்சி இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டது. இறந்த ஒருவர் மீண்டும் உயிர்பெற்று வந்தாலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் இறப்பார். இயேசுவின் வல்லமையால் சாவிலிருந்து விடுவிக்கப்பட்ட இலாசர் இவ்வாறே மீண்டும் இறந்தார். ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதல் அவ்வகையைச் சார்ந்ததல்ல. இயேசு சாவின்மீது வெற்றிகொண்டார். இறந்து உயிர்பெற்ற அவர் மீண்டும் இறக்கமாட்டார். மனித அறிவு இந்த உண்மையை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது. எனவேதான் நாம் இயேசுவின் உயிர்த்தெழுதல் வரலாறு கடந்த நிகழ்வு எனவும், நம் நம்பிக்கையின் மையம் எனவும் கூறுகிறோம். இறந்த இயேசு மீண்டும் தம் நடுவே தோன்றியதைக் கண்ட சீடர்கள் அச்சத்தால் நடுங்கினார்கள். இயேசு ஓர் ''ஆவி'' போல அவர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். எனவே அவர்கள் ''கலங்கினார்கள்''. அவர்களது உள்ளத்தில் ஐயம் மேலோங்கியது. அதைக் கண்ட இயேசு தாம் உண்மையிலேயே அவர்கள் நடுவே இருப்பதை எடுத்துக்காட்டுவதற்காக அவர்களைப் பார்த்து, ''என் கைகளையும் கால்களையும் பாருங்கள், நாம் தான்'' எனக் கூறினார். மேலும், அவர்களோடு அமர்ந்து உணவு உண்டார் (காண்க: லூக் 24:43).

-- இயேசு உடலற்ற ஆவியல்ல; அவர் உடலோடு உயிர்பெற்றெழுந்தார். ஆனால் உயிர்பெற்றெழுந்த இயேசுவின் உடல் பருப்பொருளாகிய நம் உடல் போலல்லாமல் ''மாட்சிமை பெற்ற உடலாக'' மாறியது என நாம் நம்புகிறோம். இதையே தூய பவுல் ''ஆவிக்குரிய உடல்'' என விளக்குகிறார் (காண்க: 1 கொரி 15:44). நாமும் சாவுக்குப் பின் கடவுளின் வல்லமையால் உடலோடு உயிர்பெற்றெழுவோம் என நம்புகிறோம். அதுபோலவே, அன்னை மரியா உடலோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பது கத்தோலிக்க கிறிஸ்தவ நம்பிக்கை. இயேசு உண்மையிலேயே கடவுளும் மனிதருமாக இருந்தார். அவருடைய மனிதத் தன்மை அவருடைய சாவோடு மறைந்துவிடவில்லை, மாறாக, அவர் மாட்சிமைபெற்ற உடலோடு கடவுளின் இணைப்பில் உள்ளார் என நாம் நம்புகிறோம். அவர் நமக்காகப் பரிந்துபேசுகிறார் என்பதும் நம் நம்பிக்கை. ஆக, ''என் கைகளையும் கால்களையும் பாருங்கள்'' என இயேசு நம்மைப் பார்த்துக் கூறுவது நாம் அவருடைய கடவுள் தன்மையையும் மனிதத் தன்மையையும் இணைத்துப் பார்க்க நமக்கு விடுக்கப்படுகின்ற அழைப்பாக உள்ளது. நமக்காக மனிதரான இயேசு நாம் கடவுள் தன்மையில் பங்கேற்க வழிவகுத்தார். இயேசுவை நம் வழியாகக் கொண்டு நாம் பயணம் செய்தால் கடவுளின் வாழ்வில் பங்கேற்று, எந்நாளும் மகிழ்ந்திருப்போம்.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் கலக்கமின்றி உம்மைப் பற்றிக்கொள்ள அருள்தாரும்.

 

 

திருப்பலியி;ல் உயிர்த்த இயேசு !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

லுhக்கா நற்செய்தியின் இனிய பகுதிகளில் ஒன்றை இன்றைய நற்செய்தி வாசகமாகக் காண்கிறோம். இயேசுவின் உயிர்ப்பை மிகவும் உணர்வுபூர்வமாக விளக்கியுள்ளார் புனித லுhக்கா. இந்த நிகழ்ச்சியின் நேரடியாகக் காண்பது போன்ற தன்மையும், இரு சீடர்களில் கிளேயோப்பாவின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதையும் காணும் விவிலிய அறிஞர்கள் சிலர் பெயர் குறிப்பிடப்படாத அந்த இரண்டாவது சீடர் லுhக்காவாக இருக்கலாம் என்றுகூட நினைக்கிறார்கள். எப்படி இருப்பினும், இந்த நிகழ்வு ஓர் இனிய, மகிழ்வு தரும் நிகழ்வு என்பதில் ஐயமில்லை.

ஒவ்வொரு முறையும் நாம் திருப்பலி கொண்டாடும்போது, எம்மாவு அனுபவத்ததை நாம் மீண்டும் பெறலாம் என்பதே இன்றைய நற்செய்தி. திருப்பலியில் இறைவார்த்தை நமக்குப் பகிரப்படுகிறது. மறையுரையில் அது நமக்கு விளக்கப்படும்போது, நமது உள்ளம் பற்றி எரிய வேண்டும். பின்னர், அப்பம் பிட்கப்பட்டு, நாம் நற்கருணை அருந்தும்போது, நமது கண்கள் திறக்கப்பட வேண்டும். ஆண்டவர் இயேசுவை நாம் தரிசிக்க வேண்டும். இதுவே நமது திருப்பலி அனுபவமாக நாள்தோறும் நிகழ்வதாக!

மன்றாடுவோம்: உயிர்த்த மகிமையின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நாள்தோறும் திருப்பலியில் இறைவார்த்தை வழியாகவும், நற்கருணை வழியாகவும் உம்மைச் சந்திக்கும் பேற்றினைத் தருவதற்காக நன்றி கூறுகிறோம். எங்கள் அகவிருள் அகற்றி அருளொளி தருவீராக. உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருட்தந்தை குமார்ராஜா

-----------------------

 

''சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவே நின்று,
'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்னு அவர்களை வாழ்த்தினார்.
அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்'' (லூக்கா 24:36-37)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- சாவிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றியபோது சீடர்கள் அவரை எளிதில் கண்டுகொள்ளவில்லை என்பதை நற்செய்தி நூல்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றன. அவர்கள் ''ஓர் ஆவியைக் காண்பதாக நினைத்தார்கள்'' (லூக் 24:37), அவர்களை அச்சம் மேற்கொண்டிருந்தது என்றும் லூக்கா குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. உயிர்த்தெழுந்த இயேசு சாதாரண மனித உருவில் சீடர்களுக்குத் தோன்றவில்லை என்பதையே இது காட்டுகிறது. சீடர்கள் இயேசுவை அடையாளம் காண்பதற்கு நேரம் பிடித்தது. இயேசு அவர்களுக்குத் தம் கைகளையும் கால்களையும் தொட்டுப்பார்க்கச் சொல்கிறார். மேலும் இயேசு சீடர்களை வாழ்த்திய முறையும் நம் கவனத்தை ஈர்க்கிறது. சீடர்களை சந்திக்கும்போதெல்லாம் இயேசு, ''உங்களுக்கு அமைதி!'' என வாழ்த்துகிறார். அமைதி என்னும் சொல் விவிலியத்தில் ஆழ்ந்த பொருள்கொண்டது. கடவுளின் அருள், ஆசி, அன்பு, இரக்கம் அனைத்தையும் உள்ளடக்கிய கொடை தான் அமைதி. இதை எபிரேய மொழியில் ''ஷலோம்'' என்பர். இச்சொல்லே இஸ்லாமியரிடையே ''சலாம்'' என வழங்குகிறது. ஆக, இயேசு தம் சீடர்களுக்கு வழங்குகின்ற அமைதி வெறும் வாழ்த்துரை மட்டுமல்ல; கடவுள் தம் அன்பையும் அருளையும் தம் மக்களோடு இயேசுவின் வழியாகப் பகிர்ந்துகொள்கிறார்.

-- இயேசுவைக் கண்ட பிறகும் சீடர்கள் அவரை அடையாளம் காண நேரம் பிடித்தது. நம் வாழ்விலும் சில வேளைகளில் நாம் இயேசுவின் பிரசன்னத்தைக் கண்டுகொள்ளத் தவறிவிடுகிறோம். ஏதோ ஓர் ஆவிபோலத் தான் அவர் நம்மிடையே உலவுவதாகக் கூட நாம் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவன்று. இயேசு தம் சீடர்களோடு உலகம் முடியும் வரை இருப்பதாக வாக்களித்திருக்கிறார். ''இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்'' (மத் 28:20) என இயேசு கூறிய வாக்குறுதி நமக்கு மன உறுதி தரவேண்டும். நம்மோடு வாழ்கின்ற இயேசு நமக்குக் கடவுளின் அமைதியை அளிக்கின்றார். அப்பம் பிட்கின்ற வேளையிலும் அதைப் பகிர்ந்துகொள்கின்ற தருணத்திலும் அவருடைய உடனிருப்பு சிறப்பான விதத்தில் துலங்குகிறது. நாமும் ஒருவருக்கொருவர் அமைதி வழங்குவோராக, ஒருவரோடொருவர் அப்பம் பகிர்வோராக வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு
இறைவா, உம் அமைதியை எங்களுக்கும் உலகுக்கும் அளித்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இயேசுவின் உயிர்ப்பு பலருக்கும் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. பலவித உணர்வுகளுக்கு மத்தியில் அத்தனை திருத்தூதர்களும் பரிதவித்துள்ளர். இன்றைய வாசகப் பகுதியில அவர்களின் பல்வேறு உணர்வுகளும் வெளி ப்படுத்தப்படுகின்றன. திகில், அச்சம், கலக்கம், ஐயம், அமைதி, மகிழ்ச்சி ஆகிய உணர்வை வெளிப்படுத்தும் சொற்றொடர்களும், பாருங்கள், தொடுங்கள், உண்ணுங்கள்,என்னும் சொற்றொடர்கள் வெளிப்படுத்தும் உணர்வுச் செயல்களும் இயேசுவின் உயிர்ப்புக்கு வழங்கும் நிஜ வடிவின் உணர்வுப்பூர்வமரன சான்றுகள்.

இயேசுவின் உயிர்ப்பு அவரது உயிர்புபற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. அவரது உயிர்ப்பு என்பது ஆவி உலக வாழ்வு அல்ல; இவ்வுலகில் வாழும் முழு மனித வாழ்வு; உடலும் ஆவியும் உள்ள வாழ்வு. ஆகவேதான் தொட்டுப் பாருங்கள்என்றார். அவர்களோடு உண்டார். மனிதனின் எல்லா உணர்வுப்பூர்வ சந்தேகங்களுக்கும் தீர்வை வழங்குகிறார் இயேசு.

நம்; இறைவன் இயேசு நம் வாழ்வின் சந்தேகங்கள் சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு வழங்குபவர். நம் வாழ்வின் பயம், அச்சம், கலக்கம் இவை அனைத்தையும் அகற்றுவார். நம்மோடு உண்டு உறையாடி நம்மை மகிழ்விப்பவர் நம் இறைவன். அந்த அன்பு தெய்வம் நம்மோடு உண்டு உறையாடிட இடம் கொடுப்போம். நம் கவலை எல்லாம் நீங்கும். அச்சம் அகலும். அமைதி அதிகரிக்கும். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்