முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-5, 9-11

ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்'' என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்: "அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்."
குரலொலி ஒன்று முழங்குகின்றது: "பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்;
ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்." சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! `இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 85: 8-9. 10-11. 12-13
பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பைக் காட்டி எங்களை மீட்டருளும்.

8 ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு,
தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். -பல்லவி

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். -பல்லவி

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். -பல்லவி


இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-14

அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிட வேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் போலவும் இருக்கின்றன. ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால் அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிருக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார். ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப்போல வரும். வானங்கள் பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும்; பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும். இவை யாவும் அழிந்து போகுமாதலால் நீங்கள் தூய, இறைப்பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும்! கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

டிசம்பர் 7, 2008 மாற்கு 1:1-8

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் ஞாயிறு

நற்செய்தி வாசகம்

+ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-8

கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: �இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்'' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.
இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலைநிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார். யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.
யோவான் ஒட்டக முடி ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் உண்டு வந்தார்.
அவர் தொடர்ந்து, �என்னைவிட வலிமைமிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதி இல்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்'' எனப் பறைசாற்றினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 85: 8அஆ – 9, 10 – 11, 12 – 13
”ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்”

இன்றைக்கு எத்தனை பேர் இறைவன் பேசுவதைக் கேட்கிறோம்? இது மிகப்பெரிய கேள்விக்குறி. இன்றைக்கு நாம் ஒவ்வொருவருமே நம்முடைய குரலை இறைவன் கேட்க வேண்டும் என்று விரும்புகிறோம். நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கிற சிக்கல்கள், சவால்கள், துன்பங்கள் ஆகியவற்றை இறைவன் கேட்க வேண்டும், நம்முடைய குறைகளுக்கு பதில்மொழி தர வேண்டும் என்று மன்றாடுகிறோம். இறைவன் பேசுவதை கேட்பதற்கு முயற்சி செய்வதும் கிடையாது. அதில் நமக்கு ஆர்வமும் கிடையாது.

வாழ்க்கையில் துன்பங்கள் வருகிறபோது, நாம் கடவுளிடம் வருகிறோம். நம்முடைய எண்ணங்களை முறையிடுகிறோம். ஆனால், இந்த துன்பங்கள் நம்மை நெருங்காமல் இருப்பதற்கு, நாம் முயற்சி செய்வதே கிடையாது. அதனை ஒரு பொருட்டாக எண்ணுவதும் கிடையாது. நாம் பேசுவதைத்தான் கடவுள் கேட்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறோம். இன்றைக்கு யாரெல்லாம், கடவுளுடைய குரலுக்கு செவிகொடுத்தார்களோ, அவர்களைத்தான் நாம் புனிதர்கள் என்று போற்றுகிறோம். இறைவாக்கினர்களாக மதிக்கிறோம். இதுதான் நம்முடைய வாழ்விற்கும், புனிதர்களின் வாழ்விற்குமான நீண்ட இடைவெளியாக இருக்கிறது. இந்த இடைவெளியைக் குறைக்க கடவுளின் குரலுக்குச் செவிமடுக்க வேண்டும்.

நம்முடைய வாழ்வில் செபிக்கிறபோது, பேசுவதைக் குறைத்துவிட்டு, கடவுள் நம்மிடமிருந்து என்ன விரும்புகிறார்? கடவுளின் எதிர்பார்ப்பு என்ன? கடவுள் நம்மை எப்படி வாழ வேண்டும்? என்று அழைப்புவிடுக்கிறார் என்று தியானித்துப்பார்ப்போம். நல்ல எண்ணத்தோடு, நல்ல சிந்தனையோடு கடவுளைத் தேடுகிறபோது, நிச்சயம் இறைவனின் அருளும், ஆசீரும் நமக்கு நிறைவாகக் கிடைக்கும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இயேசுவின் வருகைக்காக தயாரிப்போம்

மாற்கு நற்செய்தியாளர் தனது நற்செய்தியை இயேசுவின் பணிவாழ்விலிருந்து தொடங்குகிறார். அவரது குழந்தைப்பருவ நிகழ்ச்சிகள் தரப்படவில்லை. திருமுழுக்கு யோவான் பாலைவனத்தில் இருந்த நிகழ்விலிருந்தும் தொடங்கவில்லை. மாறாக, இறைவாக்கினர்களின் கனவு வார்த்தைகளோடு தனது நற்செய்தியைத்தொடங்குகிறார். மாற்கு நற்செய்தியாளர் இறைவாக்கினரின் வார்த்தையோடு தொடங்குவதின் பொருள் என்ன? என்று பார்ப்போம்.

”இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது. ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்” என்கிற இந்த இறைவார்த்தை மலாக்கி 3: 1 ல் காணப்படுகிற வார்த்தைகள். மலாக்கி இறைவாக்கினர் காலத்தில், குருக்கள் தங்கள் கடமையில் தவறினார்கள். பலிப்பொருட்கள் இரண்டாம் தரமானதாகவும், குறைபாடுள்ளதாகவும் இருந்தது.ஆலயப்பணி அவர்களுக்கு களைப்பை தருவதாகவும், சுமையாகவும் இருந்தது. எனவே, தூதர் வந்து, இந்த வழிபாட்டு முறைகளின் குறைபாடுகளை அகற்றி, மீட்பர் வருவதற்காக வழியை ஆயத்தம் செய்வார் என்று, இறைவாக்குரைக்கப்பட்டது. அதாவது, மீட்பரின் வருகை தகுந்த தயாரிப்போடு இருக்க வேண்டும் என்ற செய்தியை நாம் இதிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

திருவருகைக்காலம் என்பது, கடவுளின் வருகைக்காக நம்மையே தயாரிக்கின்ற காலம். கடவுளை எதிர்கொள்ள, கடவுளை நம்முள் வரவேற்க ஆயத்தமாக இருக்கக்கூடிய காலம். அத்தகைய காலத்தில் நாம் நம்மையே ஆண்டவரிடம் ஒப்புக்கொடுத்து, அவரை வரவேற்க ஆயத்தமாவோம்..

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

''யோவான் தொடர்ந்து, 'என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார்...'
எனப் பறைசாற்றினார்'' (மாற்கு 1:7)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- மாற்கு நற்செய்தியின் தொடக்கத்தில் நாம் சந்திக்கின்ற முதல் ஆள் திருமுழுக்கு யோவான். இவர் தம்மைப் பற்றி அறிவிக்கவில்லை; மாறாகத் தமக்குப் பின் வரவிருக்கின்ற ஒருவரைப் பற்றி அறிவிக்கிறார். யோவான் பாலை நிலத்தில் தோன்றி மக்களை நோக்கி, ''பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்'' என்று அறிவித்தபோது மக்கள் அவரை ஓர் இறைவாக்கினராகப் பார்த்திருப்பர். பண்டை நாள்களில் இஸ்ரயேலிலும் யூதாவிலும் தோன்றிய இறைவாக்கினர் இவ்வாறே மக்களின் பாவங்களைச் சுட்டிக்காட்டி, அவர்கள் கடவுளை நோக்கித் திரும்ப வேண்டும் என்று கேட்டனர். யோவான் கூறிய சொற்களைக் கேட்டு பல மக்கள் யோர்தான் ஆற்றில் இறங்கித் திருமுழுக்குப் பெற்றனர். ஏன், இயேசு கூட யோவானின் சொற்களுக்கு இணங்கி, திருமுழுக்குப் பெற்றார். இயேசுவைவிட யோவான் பெரியவரா என்னும் கேள்வி மக்களிடையே எழுந்திருக்க வேண்டும். அக்கேள்வி அர்த்தமற்றது என்று பதில்கூறுவதுபோல அமைந்துள்ளது யோவானின் கூற்று: ''என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார்'' (மாற்கு 1:7). யோவான் கடவுளின் பெயரால் பேசினார். ஆனால் இயேசுவோ கடவுளின் மகனாக நம்மிடையே வந்தார். இந்த உண்மையை யோவானின் சொற்கள் நமக்கு உணர்த்துகின்றன.

-- மனிதர் நடுவே யார் பெரியவர் என்னும் கேள்வி இயல்பாகவே எழுவதுண்டு. சிறுவர்கள் விளையாடும்போது யார் அதிகத் திறமையாக ஆடுகிறார்கள் என்று பார்க்க போட்டியில் ஈடுபடுவதை நாம் காணலாம். அதுபோலவே வளர்ந்தவர்கள் நடுவிலும் போட்டி என்பது சில வேளைகளில் மிகக் கடுமையாக இருப்பதும் உண்டு. யோவான் இவ்வாறு போட்டியில் ஈடுபடவில்லை. அவருக்கென்று கடவுள் அளித்த பணி என்னவென்பதை அவர் உணர்ந்தார். அப்பணியை நிறைவேற்றுவதிலேயே அவர் முனைந்திருந்தார். எனவே, இயேசுவைப் பற்றி யோவான் கூறிய சொற்களும், இயேசுவின் வருகைக்குப் பிறகு யோவான் இயேசுவைப் பற்றிச் சான்று கூறியதும் அவருடைய பணிவான, பண்பட்ட மன நிலையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. போட்டி மனப்பான்மை என்பது சில வேளைகளில் கசப்பான விளைவுகளை உண்டாக்கிவிடுவதுண்டு. எப்படியாவது பிறரைத் தோற்கடிக்க வேண்டும் என முனைந்து செயல்படுவோர் தங்கள் முயற்சியில் தோற்றுப்போனால் ஏதோ வாழ்க்கையே ஒரு தோல்வியாக மாறிவிட்டதாக நினைத்துச் சோர்ந்துபோவதும் உண்டு. கடவுள் நமக்குத் தருகின்ற பணியை நன்முறையில் ஆற்றுவதே நம் பொறுப்பு என நாம் உணர்ந்தால் வீண் போட்டிகள் நம் எண்ணத்திலிருந்தே மறைந்து போகும்.

மன்றாட்டு
இறைவா, வீண் பெருமைக்கு இடம் கொடாமல் வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்