சனவரி 6
முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-6, 8-13

அன்பார்ந்தவர்களே, இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை. எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை. மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார். இறைமகன்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர். ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர். ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை. கடவுள் நமக்கு நிலைவாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று. இறைமகனைக் கொண்டிருப்போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்; அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார். இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்துகொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 147: 12-13. 14-15. 19-20
பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!

12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். -பல்லவி

14 அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்;
உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.
15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. -பல்லவி

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.
20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மாற் 9: 7
அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது, தந்தையின் குரலொலி கேட்டது: �என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.'' அல்லேலூயா.


மாற்கு 1: 7-12

நற்செய்தி வாசகம்

+ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 7-11

அக்காலத்தில் யோவான், �என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்'' எனப் பறை சாற்றினார். அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார். அப்பொழுது, �என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்'' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

தண்ணீரும் தங்கமும்
06.01.2023 – மாற்கு 1: 7 - 12

ஒருவேளை மீண்டும் ஓர் உலகப்போர் வந்தால் அது தண்ணீருக்காகத்தான் வரும் என சொல்லப்படுகிறது. இது முற்றிலும் உண்மை. இதனை பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் அறிந்திருக்கின்றார்கள். எனவே தான் இப்போதே அதனை சுரண்ட ஆரம்பித்து விட்டார்கள். இன்னொருபுறம் நாம் அந்த தண்ணீரை வீணடிக்கின்றோம். இஸ்ரயேல் மக்கள் தங்களை வழிநடத்திய மோசேயிடம் முறையிட்டதும் தண்ணீருக்காகத் தான். ஏனென்றால், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரயேல் போன்றவர்களுக்கு தண்ணீர் என்பது ஏதோ புதையல் பார்ப்பது போல. தண்ணீர் இருக்கும் இடத்தை நாடி செல்வது அவர்களது இயல்பு. படைப்பு நிகழ்விலும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. ஏதேன் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக பீசோன், கிகோன், திக்ரீசு மற்றும் யூப்பிரத்தீசு (தொ.நூல் 2இ10-14) எனும் ஆறுகள் ஓடுகின்றன. ஆகார் தண்ணீர் தந்து தனக்கு வாழ்வு தரும் இறைவனைக் கண்டுகொள்கின்றார். ஆபிரகாம் தான் வாழ்வதற்கு கிணறு ஒன்று வெட்டுவதற்காக அபிமெலக்கோடு உடன்படிக்கை செய்து கொள்கின்றார். தண்ணீர் அந்த அளவிற்கு முக்கியத்துவத்தை பெறுகின்றது. அதனால் தான் மெசியாவுடைய வருகையின் போது பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும் என்று இறைவாக்கினர் எசாயா கூறுவார்.

இயேசுவும் தன் பணிவாழ்வை தண்ணீரிலிருந்து ஆரம்பிக்கின்றார். இதனைத் தான் முதல் வாசகமும் சுட்டிக் காட்டுகின்றது. நீரினாலும், இரத்தத்தாலும் வந்தவர், தண்ணீரில் ஆரம்பித்து இரத்தத்தை நமக்காக தந்து சென்றுள்ளார். தண்ணீரில் தான் அவர் திருமுழுக்கு பெற்று தூய ஆவியை உள்வாங்குகின்றார். நாம் அத்தகைய தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா? இல்லையென்றால் இனிவரும் காலத்தில் தண்ணீருக்கு தங்க விலை கொடுக்கும் நிலை ஏற்படும்.

அருட்பணி. பிரதாப்

=======================

 

தியானப் பாடல் சிந்தனை: திருப்பாடல் 147: 12 – 13, 14 – 15, 19 – 20

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக

இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் எருசலேம் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகக் கருதப்படுகிறது. அது தான் கடவுள் வாழும் இல்லமாகவும், இஸ்ரயேல் மக்களின் அடையாளமாகவும் காணப்படுகிறது. எருசலேம் என்று சொல்கிறபோதும், சீயோன் என்று சொல்கிறபோதும், அவை இஸ்ரயேல் மக்களைக்குறிக்கக்கூடிய வார்த்தைகளாகவே நாம் பார்க்க வேண்டும். சீயோன் என்பது மலைத்தொடர். இதன் அருகில் தான் எருசலேம் இருக்கிறது. எனவே, இரண்டு வார்த்தைகளும் ஒரே பொருளைத்தான் குறிப்பதாக இருக்கிறது.

2குறிப்பேடு 6: 6 சொல்கிறது: ”எனது பெயர் விளங்கும் இடமாக எருசலேமைத் தேர்ந்து கொண்டேன் என்று ஆண்டவர் கூறுகிறார்”. எருசலேம் என்பது கடவுளின் இல்லம். அது கடவுளால் ஆளப்படுகிற இடம். கடவுள் தன்னுடைய முழுமையான பிரசன்னத்தையும் வெளிப்படுத்துகிற இடம். அந்த இடம் எதிரிகளால் தாக்கப்படவோ, தகர்க்கப்படவோ முடியாத இடமாகக் கருதப்பட்டது. அது கடவுளால் நிர்வகிக்கப்படும் கோட்டை. எனவே, அங்கு வாழக்கூடிய மக்களால் தான், கடவுளின் வல்ல செயல்களை முழுமையாக அனுபவித்திருக்க முடியும். அவர்களால் தான், கடவுளின் மாபெரும் செயல்களை எடுத்துரைக்க முடியும். கடவுளைப்பற்றி அறிந்து, அனுபவித்திருக்கிற மக்களைப்பார்த்து, இந்த வேண்டுகோளானது விடுக்கப்படுகிறது.

கடவுளின் மாபெரும் செயல்களை நமது வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்திருக்கிற நாமும், அவரது மாட்சிமையை, மேன்மையை, பாதுகாப்பை புகழ்ந்து பாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

தந்தையைப் பூரிக்கச் செய்வோம் !

"மகன் தந்தைக்காற்றும் நன்றி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்" என்னும் அழகிய குறள்மொழியின் பொருள்: இப்படிப்பட்ட மகளை, மகனைப் பெறுவதற்கு, இவர் தந்தை என்ன தவம் செய்தாரோ எனப் பிறர் போற்றும் அளவுக்கு வாழ்வதே ஒவ்வொரு மகனும், மகளும் தமது பெற்றோருக்கு ஆற்றும் கடமை, நன்றி.

இயேசு அப்படிப்பட்ட ஒரு மகனாக இருந்தார் என நற்செய்தி நூல் சான்று பகர்கிறது. இயேசு தம் பெற்றோருக்குப் பணிந்து நடந்தார் என்றும், "கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்" எனவும் லூக்கா நற்செய்தியில் (2: 51,52) வாசிக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்திலோ, வானகத் தந்தையே விண்ணிலிருந்து "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" என்று விண்ணிலிருந்து பறைசாற்றினார் எனக் காண்கிறோம். தமது வளர்ப்புப் பெற்றோரையும், விண்ணகத் தந்தையையும் மதித்து, அவர்களை மகிழ்விக்கச் செய்வதே தமது கடமை, மகிழ்ச்சி என்னும் உணர்வோடு எப்போதும் சிந்தித்து, செயல்பட்டார் ஆண்டவர் இயேசு.

நாமும் நம்மை ஈன்றெடுத்த நம் பெற்றோரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் வாழ உறுதிபூணுவோம். நமக்கு உயிர் தந்து, நம்மை இருக்கவும், இயங்கவும், வாழவும் செய்யும் வானகத் தந்தை மகிழ்ச்சி அடையும்படியாக வாழவும் உறுதிகொள்வோம்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எம் வாழ்விலும், எம் பணியிலும் நீர் மாட்சிமை அடைவீராக. எம் சொல்லிலும், எம் நினைவிலும் நீர் பெருமை அடைவீராக, ஆமென்.

- அருட்பணி. குமார்ராஜா

 

''என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்''

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- இயேசு ஏன் திருமுழுக்குப் பெற்றார் என்னும் கேள்வி மக்களின் மனத்தில் குழப்பத்தை உருவாக்கக் கூடும். தொடக்க காலத் திருச்சபையிலும் இக்கேள்வி எழுந்ததுண்டு. நற்செய்தி நூல்கள் நான்கும் இயேசு திருமுழுக்குப் பெற்றதைக் குறிப்பிடுகின்றன (காண்க: மத் 3:13-17; மாற் 1:9-11; யோவா 1:32-34). என்றாலும், பாவ மன்னிப்புப் பெறுவதற்காக வழங்கப்பட்ட திருமுழுக்கை இயேசுவும் பெற்றுக்கொண்டதால் அவரிடத்தில் பாவம் குடிகொண்டிருந்ததா, அவர் கடவுளின் மகனாக நம்மிடையே வந்ததால் அவரிடம் பாவம் உண்டு என நாம் கருதுவது சரியல்லவே என்றெல்லாம் ஐயப்பாடு அந்நாளில் எழுந்ததுண்டு. இயேசு கடவுளோடு ஒன்றித்திருந்தார் என்பதால் அவரிடத்தில் பாவம் குடிகொண்டிருக்கவில்லை. கடவுளின் அன்பிலிருந்து அவர் ஒருநாளும் பிரிந்ததில்லை. என்றாலும், இயேசு நம்மைப் போல மனிதராகப் பிறந்தவர்; நம்மோடு தம்மை முழுமையாக ஒன்றித்துக்கொண்டவர். எனவே, பாவம் தவிர அனைத்திலும் அவர் நமக்குச் சமமானார். ஆக, அவர் திருமுழுக்குப் பெற்றது கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நடந்த ஒரு நிகழ்ச்சி என்பதை நற்செய்தி நூல்கள் தெளிவுபடுத்துகின்றன.

-- இயேசு திருமுழுக்குப் பெற்றபோது வானிலிருந்து வந்த குரல் ஒரு பேருண்மையை வெளிப்படுத்தியது. ''இயேசு கடவுளின் அன்புமிக்க மகன்; கடவுள் அவரைக் குறித்து மகிழ்ச்சியடைகிறார்'' (காண்க: மத் 3:17; மாற் 1:11; லூக் 3:22; யோவா 1:33-34). நாம் பெறுகின்ற திருமுழுக்கு நம்மைக் கடவுளின் பிள்ளைகளாக மாற்றுகிறது. இதனால், நீரினால் முறையாகத் திருமுழுக்குப் பெறாத ஆயிரக்கணக்கான மக்கள் கடவுளின் பிள்ளைகள் அல்ல என்று பொருளாகாது. மாறாக, திருமுழுக்கின் வழியாக நாம் கடவுளின் பிள்ளைகள் என்னும் உண்மை வெளிப்படையாக அறிக்கையிடப்படுகிறது; நாம் கிறிஸ்துவின் சீடர் என்னும் தகுதி வழங்கப்பட்டு, பறைசாற்றப்படுகிறது. அதன் அடிப்படையில் நாம் புதிய மனிதர்களாக, புதுப்பிறப்பு அடைந்தவர்களாக வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம். கிறிஸ்தவ வாழ்வு என்பது திருமுழுக்கின் நீட்சி என நாம் கூறலாம்.

மன்றாட்டு
இறைவா, நீரினாலும் ஆவியினாலும் புதுப்பிறப்புகளாக மாறிய நாங்கள் இயேசுவைப் புத்துணர்வோடு பின்செல்ல அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்