முதல் வாசகம்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 5-12

சகோதரர் சகோதரிகளே, வரவிருக்கும் உலகு பற்றிப் பேசுகிறோம். கடவுள் அதனை வானதூதரின் அதிகாரத்திற்குப் பணியச் செய்யவில்லை. இதற்குச் சான்றாக மறைநூலில் ஓரிடத்தில் சொல்லப்பட்டுள்ளது இதுவே: ``மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? ஆயினும் நீர் அவர்களை வானதூதரைவிடச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கை படைத்தவற்றுக்கு மேலாக அவர்களை நியமித்தீர். எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.'' அனைத்தையும் மனிதருக்கு அடிபணியச் செய்தார் என்பதால், எதையும் பணியாதிருக்க விட்டுவிடவில்லை எனலாம். எனினும், அனைத்தும் மனிதருக்கு இன்னும் அடிபணியக் காணோம். நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரை விடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம். இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்படவேண்டியிருந்தது. கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பிய போது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழிநடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே. தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை. ``உமது பெயரை என் சகோதரர் சகோதரிகளுக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்'' என்று கூறியுள்ளார் அன்றோ!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 8: 1,4. 5-6. 6-8

பல்லவி: உமது கை படைத்தவற்றை மனிதர் ஆளும்படி செய்துள்ளீர்.

1 ஆண்டவரே! எங்கள் தலைவரே!
உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்?
மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? பல்லவி

5 அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
6ய உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர். பல்லவி

6b எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.
7 ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள்,
8 வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள்
அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். அல்லேலூயா.

மாற்கு 1:21-28

பொதுக்காலம், வாரம் 1 செவ்வாய்


நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28

இயேசுவும் சீடர்களும் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, ``நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' என்று கத்தியது. ``வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ'' என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ``இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!'' என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

-------------------------

புதுமைகளின் பொக்கிஷமாவோம்

இன்றைய சமூகங்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் சாதியம், பாலியல் வன்கொடுமை, சமூக வன்முறைகள், படிப்பற்ற நிலை போன்ற அமைப்புகளுக்கு எதிராக திருச்சபை ஆற்றும் பணிகள்தான் இன்றைய நாகரிக உலகின் புதுமைகள் என்பார் புனித ஆஸ்கர் ரொமேரோ. மூலைமுடுக்குகளில் செப கட்டடங்களின் கட்டிடங்களை எழுப்புதல், மெழுகுவர்த்தி ஏற்றி புனிதர்களின் படங்களை வைத்து குறிசொல்லுவதுதான் புதுமைகள் என நவநாகரிகம் நினைத்துக் கொண்டிருக்கின்றது.

இயேசு ஆற்றிய புதுமைகள் அனைத்தும் அவர் இந்த உலகில் நிலைநாட்ட வந்த இறையாட்சியின் அடையாளங்கள் (அ) அத்தாட்சிகள் என்று நாம் கூறலாம். உலகம் மூன்று தட்டுகள் கொண்டதாகக் கருதப்பட்டது. வானங்களைக் கொண்ட மேல்தட்டு இறைவன் வாழும் இல்லிடமாகவும், கடலின் ஆழத்தில் விளங்கும் அடித்தட்டு அசுத்த ஆவிகளும் வேறுபல தீய சக்திகளும் வாழும் இல்லிடமாகவும், இடைத்தட்டு மக்கள் வாழும் தரைத்தளமாகவும் கருதப்பட்டது. தொடக்கநூல் தரும் படைப்பு நிகழ்வுகளின் அடிப்படையில் எழுந்த உலகப் பார்வை இது என்று விவிலிய பேராசிரியர்கள் (தொ.நூ. 1 : 2) கருதுகின்றனர். தரைத்தட்டில் வாழும் உலக மக்கள் மேல்தட்டிலிருந்து ஆட்சி செலுத்தும் கடவுளின் சக்திகளுக்கும், அடித்தட்டில் வாழும் தீய சக்திகளுக்கும் உட்பட்டுள்ளனர். கடவுளின் சக்திகள் மானிட நல்வாழ்வை முன்னிட்டு ஏற்படும் நன்மைகளுக்கு காரணமாகவும், அடிதட்டு சக்திகள் மானிட தீமைகளை உருவாக்குவதாகவும் அன்றைய மக்கள் நம்பினர். இவ்வாறு இயேசு ஆற்றிய பல புதுமைகள் கடவுளின் சக்தியாகவும், மக்கள் பேய்கள் பிடித்து துன்புற்றது, அடித்தட்டுத் தீய சக்திகளின் சதியே என்றும் கருதப்பட்டது. அப்படிப்பட்ட தீய சக்தியைத்தான் இன்றைய வாசகத்தில் இயேசு விரட்டுகின்றார். இது முழுவதும் அவருடைய வல்லமையினால்தான் நிகழ்கின்றது.

அதே வல்லமையை கடவுள் நமக்கு திருமுழுக்கின் வழியாக பொழிந்துள்ளார். நாம் உணர்ந்துள்ளோமா? சிந்திப்போம்.

-- அருட்பணி. பிரதாப்

==================

10.01.2023
அதிகாரம் ஆட்டிப் படைக்கவா? அழைத்துச் செல்லவா?

பெற்றோருக்கு பிள்ளைகள் மீது அதிகாரம். அரசியல் தலைவர்களுக்கு மக்கள் மீது அதிகாரம். ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மீது அதிகாரம். காவலர்களுக்கு குற்றவாளிகள் மீது அதிகாரம். இப்படி எல்லாருமே இன்னொருவர் மீது அதிகாரம் பெற்றுள்ளோம். இந்த அதிகாரம் நாமாகவே ஏற்படுத்திக் கொண்டது. அதனால் தான் பல நேரங்களில் வன்முறை நடக்கிறது. ஹிட்லர் ஆறு லட்சம் யூதர்களை கொன்று குவித்தது, தான் பெற்ற அதிகாரத்தினால் தான். இப்படிப்பட்ட அதிகாரங்களைக் கண்டு சில நேரங்களில் நாம் அஞ்சுகின்றோம், சில நேரங்களில் நமக்கு வெறுப்பு உண்டாகின்றது. ஒரு சில நேரங்களில் இப்படிப்பட்ட அதிகாரங்களை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.

அது போலத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் அதிகாரம் வெளிப்படுவதைக் காண முடிகிறது. இது கடவுள் அவருக்குக் கொடுத்தது. இஸ்ரயேல் மக்கள் இந்த அதிகாரத்தை இரண்டு நிலையில் பார்க்கின்றனர். ஒன்று தன் பிள்ளைகள் மீது, அரசன் மக்கள் மீது, சமுதாய தலைவர்கள் பொது மக்கள் மீது கொள்கின்ற அதிகாரம். மற்றொன்று கடவுள் மக்களுக்குக் கொடுக்கும் அதிகாரம். அதனால் தான் இயேசு கேட்பார்: திருமுழுக்கு யோவானுக்கு அதிகாரம் எங்கிருந்து அருளப்பட்டது? விண்ணிலிருந்தா அல்லது மண்ணிலிருந்தா? இது கடவுள் கொடுத்தது. அதனால் தான் பிலாத்துவின் கேள்விக்கு இயேசு, விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால் உனக்கு என் மீது எந்த அதிகாரமும் கிடையாது. அத்தகைய ஒரு அதிகாரத்தோடு தான் இயேசு இன்று போதிக்கின்றார். குணப்படுத்துகின்றார். இது கடவுள் அவருக்குக் கொடுத்த அதிகாரம். அதனால் தான் அத்தகைய அதிகாரத்தை வைத்து மக்களை ஆட்டிப் படைக்காமல் இறையாட்சியின் விழுமியங்களை நோக்கி அழைத்துச் செல்கின்றார்.

நாம் சிந்திப்போம். நான் எனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை வைத்து மக்களை ஆட்டி படைக்கிறேனா அல்லது கடவுளின் பாதைக்கு அழைத்துச் செல்கிறேனா?

- அருட்பணி. பிரதாப்

======================

 

இயேசுவின் வல்லமை

இயேசுவின் வார்த்தைகள் மட்டுமல்ல, அவருடைய செயல்பாடுகளும் மக்களை வியப்பில் ஆழ்த்தின. தொழுகைக்கூடத்தில் தீய ஆவியால் பிடிக்கப்பட்டிருந்த மனிதன், அங்கிருந்தவர்களுக்கு பெருத்த துன்பத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தான். அவனை இயேசு நலமாக்குகிறார். நற்செய்தி நூல்கள் அனைத்திலும் தீய ஆவிகளைப்பற்றியும், அவற்றிலிருந்து இயேசு மக்களுக்கு விடுதலை கொடுத்த நிகழ்வுகளையும் பல இடங்களில் பார்க்கிறோம். இதன் பிண்ணனி என்ன? என்பதை நாம் பார்ப்போம்.

யூத மக்கள் பேய்களையும், தீய ஆவிகளையும் இருப்பதாக நம்பினர். இந்த உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தீய ஆவிகள் ஆக்கிரமித்து இருப்பதாக நினைத்தனர். அரச அரியணையிலிருந்து, குழந்தைகளின் தொட்டில் வரை, இந்த தீய ஆவிகள் ஆக்கிரமித்திருந்தன. கல்லறைகளுக்கு நடுவில் ஏராளமான மண்டை ஓடுகள் காணப்பட்டன. இந்த மண்டை ஓடுகளின் நடுவில், சிறிய அளவிலான துவாரங்கள் இடப்பட்டிருந்தன. இது எதைக்குறிக்கிறது என்றால், அறுவைச்சிகிச்சை வளர்ச்சியடையாத அந்த காலக்கட்டத்திலேயே, இந்த சிறிய துவாரத்தை மருத்துவர்கள் செய்திருக்கிறார்கள். இதன் மூலமாக அவர்களின் நம்பிக்கை, தீய ஆவி அந்த துவாரத்தின் வழியாக, வெளியே சென்றுவிடும் என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த அளவுக்கு, தீய ஆவிகளைப்பற்றிய தாக்கம் மக்கள் மத்தியில் குடிகொண்டிருந்தது. ஆனால், மக்களின் மனதில் இவ்வளவு பயத்தை ஏற்படுத்தியிருந்த அந்த தீய ஆவிகளைத்தான், இயேசு சர்வசாதாரணமாகக் கையாண்டார். அவற்றை வெற்றிகொண்டார்.

தீய ஆவிகளை எதிர்த்து வெற்றிபெறுவதற்கு, நாம் இயேசுவின் நாமத்தை உச்சரிக்க வேண்டும். இயேசுவின் திருப்பெயருக்கு அவ்வளவு வல்லமை இருக்கிறது. நமது வாழ்வில், தீய ஆவிகளைப்பற்றிய தவறான பயங்களும், எண்ணங்களும் வருகிறபோதெல்லாம், இயேசுவின் பெயரை உச்சரிப்போம். அவர் பாதுகாப்பில் எந்நாளும் மகிழ்வோடு வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறை வல்லமையை நம்புவோம்

தீய ஆவிகளைப்பற்றி பலவிதமான நம்பிக்கைகளும், கதைகளும் யூத மக்களிடையே உலாவி வந்தது. யார் இந்த தீய ஆவிகள்? இவைகளின் பிறப்பிடம் என்ன? மூன்று வகையான கருத்துக்கள் தீய ஆவிகளைப்பற்றி உலாவி வந்தது. 1. மனிதர்களைப்போல அவைகளும் படைப்புக்கள் தான் என்கிற நம்பிக்கை மக்களிடத்தில் இருந்தது. 2. தீயவர்களாக வாழ்ந்தவர்கள் இறந்தபிறகும், அதே நோக்கத்தோடு அலைவதாகவும் நம்பிக்கை இருந்தது. 3. தொடக்க நூல் 6: 1 – 8 ல் சொல்லப்பட்ட நிகழ்வையும், தீய ஆவிகளோடுப் பொருத்திப்பார்த்தார்கள்.

இன்னும் பல கதைகள் தீய ஆவிகளைப்பற்றி மக்களிடையே இருந்து வந்தது. நாமும் இந்த தீய ஆவிகளைப்பற்றிய கதைகளை நம்பலாம், நம்பாமல் இருக்கலாம். நாம் நம்புகிறோமோ, இல்லையோ, இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் முழுமையாக நம்பினார்கள். இந்த நற்செய்திப்பகுதியின் மூலமாக நாம் கற்றுக்கொள்ளும் செய்தி, கடவுளின் வல்லமையின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். இன்றைய சமூகத்தில், சாத்தான் அனைவரையும் மிஞ்சியவன் என்கிற எண்ணம் இருக்கிறது. ஆலயத்திற்கு செல்கிறவர்களும், ஆண்டவரை நம்பிக்கையோடு வழிபடுகிறவர்களும் கூட, தீய ஆவிகள் மீது, அவற்றின் அதிகாரத்தின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். ஆனால், நமது ஆண்டவர் தீய ஆவிகளின் மீதும் தனது அதிகாரத்தை நிலைநாட்டுகிறார். கடவுளின் வல்லமை பெரியது. அளப்பரியது.

கடவுளின் வல்லமை மீது நாம் நம்பிக்கை வைப்போம். கடவுள் ஆற்றல் நிறைந்தவர், அதிசயங்கள் புரியக்கூடியவர் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். அந்த உறுதி தீய ஆவிகளுக்கு எதிரான நமது போராட்டத்தில் நமக்கு வெற்றி தேடித்தரும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறையாசீர் நமக்கு வேண்டும்

இயேசு திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்கு பெற்ற பிறகு, கடவுளின் பணிக்காக தான் அழைக்கப்படுவதை உணர்கிறார். அவரின் உணர்வு முற்றிலும் சரியானது என்பதையே, தந்தையாகிற இறைவனின் ”இவரே, என் அன்பார்ந்த மகன். இவரில் நான் பூரிப்படைகிறேன்” என்ற வார்த்தைகள் எடுத்துக்காட்டுகிறது. இப்போது, இயேசு தனது பணிவாழ்வைத் தொடங்க வேண்டும். எந்த இடத்திலிருந்து தொடங்குவது? இறைவனின் மக்கள் அதிகமாகக் கூடுகிற இடத்தில் தொடங்குவதுதான், பொதுவாக போதகர்கள் செய்வது. அதுதான், தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் சரியான இடமாக போதகர்கள் நினைத்தார்கள். இயேசுவும் அங்கேயே தனது முதல் போதனையைத் தொடங்குகிறார்.

தொழுகைக்கூடம் என்பது யூதர்களின் வாழ்வில் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. யூதர்களின் ஒரே ஆலயமான யெருசலேமுக்கு ஒவ்வொருநாளும் செல்வது முடியாத, இயலாத காரியம் என்பதால், தொழுகைக்கூடத்திற்கு, அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டது. தொழுகைக்கூடத்தில் பல அலுவலர்கள் இருந்தனர். தொழுகைக்கூடத்தலைவர் தான் அனைவரிலும் முதன்மையானவர். அவர்தான் வழிபாட்டிற்கான அனைத்து செயல்பாடுகளையும் பார்க்கிறவர். மக்களிடம் காணிக்கை வசூலித்து, அதை ஏழைகளுக்குக் கொடுப்பதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். சுருளேட்டை எடுப்பதற்கும், வைப்பதற்கும் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். எக்காளம் ஊதுவதற்கு என ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இவ்வாறு ஒவ்வொன்றிற்கும் அலுவலர்கள் இருந்தாலும், போதிப்பதற்கு நிரந்தரமான போதகர் யாரும் கிடையாது. அந்த பகுதியில் இருக்கிற போதகர்களில் சிறந்தவரை, தொழுகைக்கூடத்தலைவர் போதிப்பதற்கு அழைப்பது வழக்கம்.

இயேசு தனது பணிவாழ்வைத்தொடங்குகிறபோது, கடவுளின் ஆசீரோடு தொடங்குகிறார். எந்த ஒரு பணியை நாம் தொடங்குகின்றபோதும், கடவுளின் ஆசீர் நமக்கு வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. புதுமைகள், அற்புதங்கள் பலவற்றை இயேசு செய்தாலும், அவர் செபிப்பதற்கு எப்போதுமே, நேரம் ஒதுக்காமல் இருந்ததில்லை. எந்த ஒரு பணியைத்தொடங்கினாலும், கடவுளின் ஆசீரோடு தொடங்குவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

தொழுகைக்கூடம் என்பது யூத மக்களின் வாழ்வில் முக்கியமான இடத்தைப்பெற்றிருந்தது. ஏனெனில் யூதர்களுக்கு என்று ஒரே ஒரு ஆலயம் தான் இருந்தது, அதுதான் யெருசலேம் தேவாலயம். எல்லாநாட்களிலும், எல்லாரும் யெருசலேம் தேவாயலத்திற்குச்சென்று வழிபடுவது இயலாத காரியம். எனவேதான் தொழுகைக்கூடம் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. பத்து யூதக்குடும்பங்கள் இருந்தால் அங்கே கட்டாயம் ஒரு தொழுகைக்கூடம் இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஒழுங்காக இருந்தது. தொழுகைக்கூடத்திலே மூன்றுவிதமான செயல்பாடுகள் நடைபெற்றது. 1. செபம் 2. இறைவார்த்தையை வாசிப்பது 3. இறைவார்த்தையின் போதனை. மற்றபடி பலிசெலுத்துவதற்கோ, வழிபடுவதற்கோ வாய்ப்பில்லை. ஒவ்வொரு தொழுகைக்கூடத்திற்கும் ஒரு தலைவர் உண்டு. இந்த தலைவர், போதிக்கக்கூடிய வல்லமையை பெற்றிருக்கிற யாரையும் போதிப்பதற்கு அழைப்பு விடுக்கலாம். அது அவருடைய அதிகாரம். இயேசு மக்கள் மத்தியிலே மிகச்சிறந்த போதகர் என்ற பெயரைப்பெற்றிருந்ததால், தொழுகைக்கூடத்தலைவர் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார் என்பதில் ஐயமில்லை.

இங்கே மாற்கு நற்செய்தியாளர் குறிப்பிடுகிற செய்தியின் முக்கியத்துவம் ‘இயேசுவின் அதிகாரம் கொண்ட போதனை’. 1: 22 “அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்”. 1: 27 “இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே!”. எந்த ஒரு மனிதன் உண்மையுள்ளவனாக இருக்கிறானோ, மனச்சான்றுக்கு பயந்து நேர்மையோடு, நீதியோடு வாழ்கிறானோ அவனால், துணிவோடு, அதிகாரத்தோடு பேசமுடியும். அதுதான் இயேசுவின் வாழ்வில் வெளிப்படுகிறது. இயேசு எதற்காகவும், யாருக்காவும் உண்மையை, நேர்மையை, நீதியை விட்டுக்கொடுக்கவில்லை. எதற்காகவும் அவற்றை, அவர் சமரசம் செய்ததில்லை. போதித்தார்;, போதித்ததை வாழ்ந்து காட்டினார். அதுதான் அவருடைய போதனையை அதிகாரம் மிகுந்த போதனையாக மாற்றிக்காட்டியது. இயேசு வாழ்ந்த காலத்தில் மற்றப் போதகர்களால் அதிகாரத்தோடு போதிக்க முடியவில்லை, காரணம் அவர்கள் தங்களின் சுயநலத்துக்காக, தங்கள் உறவுகளுக்காக, பலவற்றைச்சமரசம் செய்து வந்தார்கள். தங்களுக்கு ஒரு நீதி, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மற்றொரு நீதி என்று தங்கள் மனச்சான்றை காற்றிலே பறக்கவிட்டு வாழ்ந்தார்கள். அதனால் தான் அவர்களின் போதனை மக்களின் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

உண்மையுள்ளவர்களாக, மனச்சான்றுக்கு அஞ்சி வாழ்கின்றவர்களாக வாழ்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

உமக்கு இங்கு என்ன வேலை ?

தீய ஆவி இயேசுவை நோக்கிக் கேட்ட கேள்வி இது: "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்".

மேலோட்டமாகப் பார்த்தால், இது நடுக்கமுற்ற ஒரு தீய ஆவியின் அதட்டலான கேள்விபோலத் தோன்றினாலும், தொடர்ந்து வருகின்ற செய்தி ஒரு விசுவாச அறிக்கை. ஆம், அலகையே இயேசுவை கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்று அறிக்கையிடுகின்றது. அது மட்டுமல்ல, கடவுளுக்கு அர்ப்பணமான இயேசுவின் முகாமையான வேலை தீமைகளை ஒழிப்பது என்பதையும் அது அறிக்கையிடுகின்றது. இயேசுவின் அர்ப்பண வாழ்வின் இலக்கை சீடர்கள் அனைவரின் முன்னிலையில் விசுவாச அறிக்கையாக தீய ஆவி வெளிப்படுத்துகின்றது என்றே நாம் பொருள்கொள்ளலாம்.

இயேசுவுக்கு மட்டுமல்ல, இயேசுவைப் பின்பற்றி கடவுளுக்குத் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட அனைவருக்கும் இந்த மண்ணுலகில் என்ன வேலை? தீமையை ஒழித்து, நன்மைசெய்துகொண்டே செல்வதுதான். ஏனெனில், இயேசு "அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் விடுவித்து, எங்கும் நன்மைசெய்துகொண்டே சென்றார்" என்று திருத்தூதர் பணியில் (10:38) வாசிக்கிறோம். நாமும் நமது "வேலை"யை நன்கு செய்ய உறுதிகொள்வோம்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். என்ன நோக்கத்துக்காக நீர் எங்களைப் படைத்தீரோ, அந்த நோக்கத்தின்படி நாங்கள் இயேசுவைப் போல, தீமையை ஒழித்து, நன்மையைச் செய்யும் அருளைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி. குமார்ராஜா

அதிகாரம் கொண்ட புதிய போதனை !

இயேசுவின் காலத்தவர் அவரிடம் கண்டு வியந்த புதுமைப் பண்புகளுள் ஒன்று இயேசுவின் அதிகாரம். இயேசு இயற்கையின்மீதும் (மாற் 4:41), மனிதர்கள்மீதும் (யோவா 17:2), அலகையின்மீதும், தீய ஆற்றல்கள்மீதும் (இன்றைய நற்செய்தி வாசகம்) கொண்டிருந்த அதிகாரம் அவர்களுக்கு மலைப்பை ஏற்படுத்தியது. இந்த அதிகாரம் எங்கிருந்து வந்தது என்று பரிசேயர்கள் கேட்டபோது, இயேசு அவர்களுக்கு விடையளிக்க மறுத்துவிட்டார் (மத் 21: 27). இருப்பினும், இயேசுவின் பணியையும், வாழ்வையும் அலசிப்பார்த்தால், எங்கிருந்து இந்த அதிகாரம் அவருக்கு வந்தது என்பதை நாம் கண்டுகொள்ளலாம்.

முதலில், இயேசு தந்தை இறைவனோடு கொண்டிருந்த நெருக்கமான உறவு. தந்தையிடமிருந்தே இயேசு தனது அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டார். தந்தையின் விருப்பத்தை மட்டுமே செயல்படுத்தியதால், தந்தை அவரை எப்போதும் வலிமைப்படுத்தினார். இரண்டாவதாக, இயேசுவின் தூய, நேர்மையான வாழ்வு. அவரிடம் குற்றம் ஒன்றும் காணவில்லை என பிலாத்துவும் (யோவா 19:4,6), பரிசேயர்களும் (மத் 22:46) அறிந்துகொண்டனர். இந்த அகத்தூய்மை இயேசுவுக்கு அதிகாரம் தந்தது.

நம்முடைய பேச்சிலும், செயலிலும் அதிகாரம் இருக்கவேண்டுமென்றால், நாம் செய்யவேண்டியவை இரண்டு: 1. தந்தை இறைவனிடம் வேண்டி, தூய ஆவியின் ஆற்றலைப் பெறவேண்டும். 2. மனச்சான்றுக்கு கீழ்ப்படிந்து, நேர்மையுடன் வாழவேண்டும். அப்போது, இயேசுவைப் போல நாமும் அதிகாரத்துடன் செயல்படமுடீயும்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இயேசுவைப்போல நாங்களும் அதிகாரம் கொண்டவர்களாகப் பணியாற்ற உமது தூய ஆவியின் ஆற்றலையும், நேர்மையான உள்ளத்தையும் எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-பணி. குமார்ராஜா

=======================

இணையதள உறவுகளே

இயேசுவின் போதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இயேசுவின் செயல்கள் அனைவரையும் திகைப்புறச் செய்தது. இந்த இயேசு இன்று என்ன தாக்கத்தை இந்த சமுதாயத்தில் உங்களுக்கு ஏற்படுத்துகிறார். எதுவுமே இல்லை என்றால், இயேசு போதிக்கப்படவில்லையா! இயேசு செயல்படவில்லையா?

இல்லை என்று சொல்ல முடியாது. இயேசு போதிக்கிறார், செயல்படுகிறார். ஆனால் செபக்கூடத்திற்குச் செல்லும் ஆட்கள் குறைவு. போதனையைக் கேட்க ஆளில்லை. செயல்களை கூர்ந்து கவனிப்பாரில்லை. இன்று மக்களுக்குப் பல விதமான ஈர்ப்புக்கள். இயேசுவின் போதனைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் வினோதமான விஞ்ஞான விளக்கங்கள் கொடுத்துத் திசை திருப்பிவிட பலர் உள்ளனர்.

ஆலயம் செல்வோம். ஆலய வழிபாடுகளில் ஆர்வமாய் பங்கெடுப்போம். அது உங்கள் வாழ்க்கை வியப்பூட்டும் விதத்தில் உதவும். உங்கள் வாழ்க்கையில் அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் எல்லோரும் வியக்கும் வண்ணம் உண்டாக்கும். வாருங்கள் ஆலயம் செல்வோம்.

-ஜோசப் லீயோன்

 

போதனையும், சாதனையும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இருபத்தோராம் நூற்றாண்டின் மனிதர்கள் போதனைகளைவிட சாதனைகளுக்கும், அறிவுரைகளைவிட வாழ்க்கை அனுபவங்களுக்கும் அதிக அழுத்தம் தருகின்றனர் என்றார் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் தனது ”மீட்பரின் பணி” என்னும் திருமடலில். உண்மைதான், இந்த மனநிலை எல்லாக் காலத்து மனிதர்களுக்கும் இருக்கிறது. இயேசுவின் காலத்திலும், அவரது போதனைகளைக் கேட்ட மக்கள் வியந்தனர். காரணம் அவரது போதனை அதிகாரம் நிறைந்ததாக இருந்தது. அந்த அதிகாரத்தை இயேசுவின் செயல்களிலும் அவர்கள் கண்டனர். இயேசு தீய ஆவியிடம் “வாயை மூடு. இவரைவிட்டு வெளியே போ” என்று அதிகாரத்தோடு அதட்டி, வெளியேற்றினார். எனவேதான், மக்கள் திகைப்புற்று, “இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! என்று வியந்தனர்.

நமது சொற்கள் அதிகாரம் கொண்டதாக அமையவேண்டுமென்றால், நமது சொற்களுக்கும், செயல்களுக்கும் முரண்பாடு இல்லாமல் இருக்கவேண்டும். நமது சொற்கள் நமது செயல்களில் எதிரொலிக்க வேண்டும்.

மன்றாடுவோம்: வானகத் தந்தையே இறைவா, உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம். ஆண்டவர் இயேசுவின் அதிகாரம் நிறைந்த போதனைக்காக உம்மைப் போற்றுகிறோம். எங்களுடைய வாழ்விலும் நாங்கள் பேசுகின்ற வார்த்தைகளின்படி செயல்பட்டு, அதன்வழியாக அதிகாரம் நிறைந்து பேச அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------------

 

''ஓய்வு நாள்களில் இயேசு (கப்பர்நாகும்) தொழுகைக்
கூடத்திற்குச் சென்று கற்பித்துவந்தார்'' (மாற்கு 1:21)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- இயேசு தலைசிறந்த ஆசிரியரும் போதகருமாக விளங்கினார். அவர் ஆற்றிய பணியில் முக்கியமான ஒன்று கற்பிக்கும் பணி என்றால் மிகையாகாது. முற்காலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு மோசே கற்பித்ததுபோல, எசாயா போன்ற இறைவாக்கினர் போதித்ததுபோல, இயேசுவும் மக்களைத் தேடிச்சென்று அவர்களுக்குக் கடவுள் பற்றியும் கடவுளின் ஆட்சி பற்றியும் எடுத்துரைத்தார். இவ்வாறு போதிப்பதற்கு இயேசு தேர்ந்துகொண்ட இடம் யூதர்களின் ''தொழுகைக் கூடம்'' ஆகும். இத்தகைய தொழுகைக் கூடம் ஒன்று கப்பர்நாகும் ஊரில் இருந்தது. அவ்வூருக்கு இயேசு அடிக்கடி செல்வது வழக்கம். தற்கால அகழ்வாராய்ச்சியின் பயனாக அவ்வூர்த் தொழுகைக் கூடம் பற்றிய தடயங்கள் கிடைத்துள்ளன. இயேசுவின் போதனையைக் கேட்க மக்கள் குழுமி வந்தனர். இயேசு ''மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்துவந்தார்'' (மாற் 1:22) என்னும் குறிப்பு கருதத்தக்கது. இயேசுவின் போதனையில் அதிகாரம் இருந்தது என்பதன் பொருள் என்ன? இயேசு கடவுள் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்த வேளையில் வெறும் சொற்களை மட்டும் பயன்படுத்தவில்லை. விவிலியத்தில் கூறப்பட்டிருப்பதை மட்டுமே எடுத்துக் கூறவும் இல்லை. மாறாக, தம் தந்தையாகிய கடவுளோடு தமக்கிருந்த நெருங்கிய உறவின் ஆழத்தை மக்களோடு பகிர்ந்துகொண்டார்.

-- கடவுளோடு நமக்கிருக்கும் உறவு தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையே, தாய்க்கும் சேய்க்கும் இடையே நிலவுகின்ற உறவுக்கு ஒப்பானது. நாம் கடவுளையே முற்றிலும் சார்ந்திருக்கின்றோம். இயேசுவும் மக்களுக்குப் போதித்தபோது கடவுள் யார் என்பதைச் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்தினார். கடவுளைப் பற்றிப் பேசுவதற்கு மாறாக, கடவுள் யார் என்பதை இயேசு தம் வாழ்க்கையில் வெளிப்படுத்தினார். எனவே அவருடைய சொல்லுக்கும் செயலுக்கும் ''அதிகாரம்'' இருந்தது. இயேசு கடவுளின் உறவை மனிதரோடு பகிர்ந்துகொண்டார். அந்த உறவை அனுபவித்தவர்கள் அவருடைய அதிகாரத்தையும் கண்டுகொண்டார்கள். இயேசு நம் ஆசிரியர் என்றால், அவரது பள்ளியில் பயில்கின்ற மாணவர் நாம் என்றால் அவரிடமிருந்த கற்றவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் பெற்ற கல்வி அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்திட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகன் இயேசுவின் போதனையை ஏற்க எங்கள் இதயங்களைத் திறந்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

''நீர் யாரென எனக்குத் தெரியும்.
நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' (மாற்கு 1:24)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- மாற்கு நற்செய்தியின் தொடக்கத்திலேயே இயேசுவுக்கும் தீய சக்திகளுக்கும் இடையே ஒரு பெரிய போராட்டம் நிகழ்வது குறிக்கப்படுகிறது. தீய ஆவியை இயேசு துரத்துகிறார். ஆனால் அந்த ஆவி இயேசு யார் என்பது குறித்துச் சான்று பகர்கிறது. ''நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' (மாற் 1:24) என்னும் சொற்கள் தீய ஆவியின் வாயிலிருந்து புறப்பட்டதாக மாற்கு எடுத்துரைக்கிறார். இயேசு கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்னும் உண்மையை இயேசுவின் சீடரே படிப்படியாகத்தான் அறிந்துகொண்டார்கள். ஆனால் தீய ஆவியோ இயேசு யார் என்பதை அறிக்கையிட முந்திக்கொள்கிறது. இவ்வாறு இயேசு பற்றிய தகவலைத் தீய ஆவி அறிக்கையிட்டபோது இயேசு அதைக் கடிந்துகொள்கிறார். ''வாயை மூடு'' என இயேசு கடுமையாகக் கூறுகிறார்.

-- இதிலிருந்து நாம் அறியும் முக்கிய கருத்து இயேசு பற்றிய நம்பிக்கை அறிக்கை மனிதரின் வாயிலிருந்து வெளிவர வேண்டும் என்பதாகும். தீய ஆவியின் அறிக்கை ஒரு தகவலாக இருக்கலாமே ஒழிய, கடவுளின் திட்டத்தை ஏற்றுப் பணிகின்ற பண்பு தீய ஆவிக்கு இல்லை. மாறாக, மனிதரின் உள்ளத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே இயேசுவின் பணி நோக்கம். மனிதர் உள்ளத்தில் மாற்றம் பெற்று, கடவுளின் வெளிப்பாட்டை ஏற்று, அவர் அனுப்பிய அவர்தம் மகனில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இந்நோக்கம் நிறைவேறும்போது இயேசுவின் பணி நம்மில் பயன் நல்குகிறது என நாம் கூறலாம்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனை அறியவும் அவர் அறிவிக்கின்ற நற்செய்தியை ஏற்கவும் எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

----------------------

"..ரூhநடடip;.. அதிகாரம் கொண்ட புதிய போதனையாய்.. .."

இயேசுவின் அன்புக்குரியவரே!

".. ..அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்." (மாற்1'22) "வாயை மூடு; இவரை விட்டு வெளியோ போ" என்று இயேசு அதனை அதட்டினார்."(மாற்1'25) "இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே" (மாற் 1'27) ஒரு நிகழ்ச்சியில் பலமுறை பலரிடமிருந்து இதே கருத்து வெளிப்பட்டுள்ளது என்றால், அந்த அதிகாரத்தில் ஏதோ சிறப்பு உள்ளது.

கொஞ்சம் கூட உள்ளவனுக்கு அதிகாரம், ஆணவம், அகங்காரம் இருப்பது இயல்பு. அறிவு அதிகம் உள்ளவனிடம் அறிவு சார்ந்த அதிகாரம் இருக்கும். பணம் படைத்தவனிடம் அதற்குறிய அதிகாரம் இருக்கும். உடல் வலிமை உள்ளவனிடம் ஒரு அதிகாரம் இருக்கும். ஆட்சியில் உள்ளவனிடம் ஒரு அதிகாரம் இருக்கும். இந்த அதிகாரம் அழிவைக் கொடுக்கும். அழிந்து போகும். இன்று இருந்து நாளை இல்லாமல் போகும். இவனை விட அதிகம் உள்ளவன் இவனை மடக்கிவிடுவான்.

இயேசுவிடம் இருந்தது இத்தகைய அதிகாரம் அல்ல. ஆவியில் நிறைந்த அதிகாரம். தாழ்ச்சியிலும் பணிவிலும் உருவான அதிகாரம். அன்புப் பணி செய்வதில் மகிழ்வடையும் அதிகாரம். அநீதியை, தீமையை அழிக்கும் அதிகாரம். இத்தகையோரை யாரும் மடக்கமுடியாது. செத்துமடிவார்களேயொழிய மடிந்து மயங்கி விழமாட்டார்கள். இத்தகையோரின் அதிகாரம் யாருக்கும் பணியாது. குறையற்றவன் யாருக்கும் குனிந்து போக வேண்டிய அவசியம் இல்லை.

கொஞ்சம் இந்த அதிகாரம்பண்ணத்தான் பாருங்களேன். வாழ்த்துக்கள். ஆசீர்;.

-: ஜோசப் லியோன்