முதல் வாசகம்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 8: 6-13

சகோதரர் சகோதரிகளே, சீரிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டு, இயேசு கிறிஸ்துவை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிடச் சிறப்புமிக்கது. முதல் உடன்படிக்கை குறையற்றதாய் இருந்திருப்பின், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடமே இருந்திருக்காது. ஆனால், கடவுள் அவர்களது குற்றத்தை எடுத்துக் கூறிச் சொன்னது இதுவே: ``இதோ, நாள்கள் வருகின்றன. அப்போது இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன்'' என்கிறார் ஆண்டவர். `எகிப்து நாட்டிலிருந்து அவர்களுடைய மூதாதையரைக் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது நான் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. ஏனெனில், நான் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள்; நானும் அவர்கள்மீது அக்கறை கொள்ளவில்லை' என்கிறார் ஆண்டவர். `அந்நாள்களுக்குப் பின் இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்ய இருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்' என்கிறார் ஆண்டவர். இனிமேல் எவரும் `ஆண்டவரை அறிந்துகொள்ளும்' எனத் தம் அடுத்தவருக்கோ, சகோதரர் சகோதரிகளுக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில், அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர். அவர்களது தீச்செயலை நான் இரக்கத்தோடு மன்னித்து விடுவேன். அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூர மாட்டேன்.' ``புதியதோர் உடன்படிக்கை'' என்பதால், முன்னையதை அவர் பழையதாக்கிவிட்டார். பழமையானதும் நாள்பட்டதும் விரைவில் மறைய வேண்டியதே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 85: 7,9. 10-11. 12-13 (பல்லவி: 10ய)
பல்லவி: பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்.

7 ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்;
உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி;
நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். -பல்லவி

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்;
நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்;
விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். -பல்லவி

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்;
நல் விளைவை நம் நாடு நல்கும்.
13 நீதி அவர்முன் செல்லும்;
அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.

மாற்கு 3:13-19

பொதுக்காலம், வாரம் 2 வெள்ளி

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-19

இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.
அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் - இவ்விருவருக்கும் `இடியைப் போன்றோர்' எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் - அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

தெளிவான பார்வை

பலநேரங்களில் நம்முடைய மனக்குழப்பங்களே துன்பத்திற்கு காரணம் என்பார் ஸ்டீவ் ஜாப்ஸ். அதனால்தான் இந்த உலகை டிஜிட்டலாக மாற்றிய ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ‘நாம் மனத் தெளிவோடு இருக்கும்போது மற்றவர்கள் எட்டிப்பார்க்க முடியாத வளர்ச்சிக்கு செல்ல முடியும்” என்பார். இதனை தன் வாழ்வில் உணர்ந்துதான் 1976ல் யுppடந என்ற கணினியை வெளியிட்டார். மிக வெற்றியாக அமைந்தது.

இன்றைய வாசகத்திலும் இத்தகைய தெளிவான பார்வை வாழ்வை வளமாக்கியதாக எடுத்தியம்புகிறது. முதல் வாசகத்தில் சவுல், தாவீதை கொலைசெய்யப் போவதாக காற்றாக வந்த செய்தியினால் மனம் புலம்பி திரிகின்றார்கள். ஆனால் எப்பொழுது இருவருமே ஒன்றாக சந்திக்கின்றார்களோ, அப்போது மனதெளிவு பெறுகின்றார்கள். ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கடவுளால் அருள்பொழிவு செய்யப்பட்டவர்கள் எனவே நாம் தீண்டக்கூடாது என்ற புரிதலைப் பெறுகின்றார்கள். நற்செய்தி வாசகத்திலும் இயேசு சீடர்கள் தெளிவு பெற்றால்தான் உண்மையான சீடர்களாக விளங்குவார்கள். எனவேதான் அவர்களை தெளிவுபடுத்த முதலிலே தேர்வு செய்ததாக இன்றைய நற்செய்தி வாசகத்திலே பார்க்கின்றோம். ஆக இரண்டு தெளிவுகளுமே புதுமையான படைப்பாக மாற்றுகின்றது.

நாம் தெளிவு பெற்றிருக்கின்றோமா? (குடும்பங்களில், அலுவலகங்களில், சமுதாயத்தில்) சிந்திப்போம்.
- அருட்பணி. பிரதாப்

======================


இருத்தல் இன்பம் பயக்கும்

தமிழ் மரபாலும் சரி, திருச்சபை மரபிலும் சரி, இருத்தலின் வழியாகத்தான் இன்பம் பெற்றிருக்கின்றார்கள். ஓர் இளைஞன் குறிப்பிட்ட குருவை நாடி அவரோடு இருக்கின்றபோது தான் வாழ்க்கையின் தத்துவத்தை பெற்றுக் கொள்கிறான். குரு அவனுடைய இருத்தலின் தன்மையை வைத்து தான் அவனை உருவாக்குகின்றார். கிரேக்க மரபிலும் இதே முறைதான் கடைப்பிடிக்கப் படுகின்றது. சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்ற கிரேக்க அறிஞர்களை நாடி இருந்து தான் வாழ்வின் சுவையை அறிந்து கொள்கின்றனர். உலகப் பாரம்பரியங்களில் பயிற்சி பெறும் வாலிபர்கள் இவ்வாறு அறிவு நிறைந்த பெரியவர்களோடு இருந்து தான் அறிவு தெளிவு பெறுகின்றார்கள். அதனால் தான் கிராமப்புறங்களில் இந்த திண்ணை அமைப்பு இன்னும் இருக்கிறது. பொழுது போக்கிற்காக சிறுவர்கள் அந்த திண்ணையில் இருந்து தான் பெரியவர்களிடம் நாகரீகம் பற்றி கேட்டு தெரிந்து கொள்வார்கள்.

ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஒரு சிலரை விரும்பி தம்மிடம் இருக்க அழைக்கின்றார். எதற்காக இந்த பன்னிருவரை மட்டும் தோ்வு செய்கின்றார் என்றால் கடவுள் அகில உலகையும் படைத்து விட்டு இறுதியில் தம் மக்களாக தோ்ந்து கொண்டதை பன்னிரு கோத்திரங்கள் அடங்கிய அந்த இஸ்ரயேல் இனத்தைத்தான். இஸ்ரயேல் கடவுளின் அன்புக்கு ஏற்றவாறு உருவாக்கிய புதிய படைப்பு. அது போலவே இயேசுவும் புதிய இனத்தைப் படைத்து தமக்கே உரியவர்களாக அவர்களை உருவாக்க விரும்பினார். ஆகவே பன்னிரண்டு என்ற எண் இயேசு உருவாக்க விரும்பிய திருச்சபையின் ஓர் அடையாளம். அவர்கள் எத்தகைய பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும் என்பதனைக் கற்றுக் கொடுக்கின்றார். அவர்கள் இயேசுவோடு இருந்து தான் கற்று கொள்கின்றார்கள்.

நான் யாரோடு இருக்க விரும்புகிறேன்? நாம் திருச்சபையின் அங்கத்தினர்களாக இருக்கிறோம். அப்படியென்றால் யாரோடு இருக்க வேண்டும்? எதோடு இருக்கின்றோம்? பெரும்பாலும் தொலைக்காட்சி, அலைபேசி, சூதாட்டத்தோடு தான் இருக்கின்றோம். இயேசுவோடு இருப்போம், வாழ்வில் இன்பம் பயக்கும்.

அருட்பணி. பிரதாப்

========================

 

தியானப்பாடல் சிந்தனை : திருப்பாடல் 85: 7, 9, 10 – 11, 12 – 13
”ஆண்டவரே! உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்”

இந்த திருப்பாடல் இஸ்ரயேல் மக்கள். பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டு, அங்கிருந்த திரும்பி வந்த நிலையில் எழுதப்படுவதாக, விவிலிய அறிஞர்கள் நம்புகிறார்கள். கடவுளுக்கு எதிராக இஸ்ரயேல் மக்கள் செய்த பாவங்களுக்கு, பாபிலோன் சிறைவாசம் கடவுளின் தண்டனையாக அமைந்தது. கடவுளுக்கு எதிராக பாவம் செய்ததும், கடவுளின் குரலுக்கு செவிகொடுக்காமல் புறக்கணித்ததும் இந்த தண்டனைக்கான காரணங்கள். பாபிலோனில் இஸ்ரயேல் மக்கள் சந்தித்த கொடூரங்கள், கொடுமைகள் நிச்சயம் கடவுளின் அன்பை அவர்கள் உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பாக இருந்திருக்கிறது, என்பதை இந்த திருப்பாடலின் வரிகள் நமக்கு உணர்த்துகிறது.

புதிய விடியலை, புதிய வாழ்வை எதிர்நோக்கியிருக்கக்கூடிய இஸ்ரயேல் மக்கள், தங்களின் கடந்த கால கசப்பு வாழ்வை மறந்து, இனியாவது கடவுளின் மீது நம்பிக்கை வைத்து, தங்களது வாழ்வை வாழ. இது அழைப்புவிடுக்கிறது. கடவுளின் கோபம் தங்கள் மீது முழுமையாக தணிந்துவிட்டதா? இல்லையா? என்ற சந்தேகம் அவர்களுக்கு இன்னும் தீர்ந்தபாடில்லை. அந்த ஒரு சந்தேகத்தோடு தான், இழந்துபோன கடவுளின் அன்பைப்பெற வேண்டும் என்கிற வேகத்தோடு, இந்த பாடல் பாடப்படுகிறது. இனிவரக்கூடிய நாட்களில், கடவுளின் குரலுக்கு கீழ்ப்படிந்து நடக்கிற உறுதியையும், அவரது வார்த்தைகளை மதித்து வாழும் மனதையும் மக்கள் பெற்றுக்கொள்ள அழைப்புவிடுக்கிறது.

கடவுள் நம்மோடு இருக்கிறவரை தான் நமக்கு பாதுகாப்பு. கடவுள் என்றும் நம்மை அரவணைக்கக்கூடியவராக இருக்கிறார். அவரது வழிநடத்துதலை நாம் ஏற்று, அவரது குரலுக்கு பணிந்து வாழக்கூடிய அருள்வேண்டி, இந்த திருப்பாடலை நாம் தியானிப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------

உண்மையான சீடர்கள்

இந்த உலகப்போக்கின்படி பார்த்தால், இயேசு எப்படி இந்த படிக்காத பாமரர்களை தனது திருத்தூதர்களாக தேர்ந்தெடுத்தார் என்பது நமது கேள்வியாக இருக்கும். காரணம், அவர்கள் செல்வந்தர்கள் அல்ல, அந்த சமுதாயத்தின் விளிம்புநிலை மக்கள். அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தில் அவர்களுக்கென்று எந்த செல்வாக்கும் கிடையாது. அவர்கள் படிக்காதவர்கள். மறைநூலைப்பற்றிய அறிவே இல்லாதவர்கள். இப்படிப்பட்டவர்கள் எப்படி போதனையாளர்களாக மாற முடியும்? இப்படிப்பட்டவர்கள் எப்படி இயேசுவின் போதனையைப் புரிந்து, அறிவிக்க முடியும்? எந்த அடிப்படையில் இயேசு இவர்களை தனது சீடர்களாக அழைத்தார்?

இரண்டு காரணங்களை நாம் உறுதியாகச் சொல்ல முடியும்? இயேசுவிடத்தில் அவர்களுக்கு ஏதோ ஒருவிதமான ஈர்ப்பு இருந்தது. அதனால் தான் இயேசு அழைத்தவுடன் மறுப்பு சொல்லாமல், அவரைப்பின்தொடர்ந்தனர். அதாவது, இயேசுவை தங்களது போதகராக ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் சிறந்த போதகர் என்கிற நம்பிக்கை அவர்களுடைய மிகப்பெரிய பலம். இரண்டாவது காரணம், அவர்கள் இயேசுவின் சார்பில் துணிவோடு நின்றார்கள். ஏனென்றால், இயேசு பாரம்பரியம் என்ற பெயரில் நடந்துகொண்டிருந்த அநீதிகளை, அக்கிரமங்களை துணிவோடு எதிர்த்து நின்றார். எதிர்ப்பைச் சம்பாதித்தார். அவருக்கு பல முனைகளிலிருந்து எதிர்ப்புகள் வரத்தொடங்கின. அந்த சமயத்தில், சீடர்கள் துணிவோடு அவர் பக்கம் நின்றார்கள். துணிவு, சீடர்களின் மிகப்பெரிய பலம்.

இயேசுவைப் பின்பற்றுகிற நம்மிடத்தில், சீடர்களிடம் இருந்த இந்த இரண்டு குணங்களும் இருக்கிறதா? என்று சிந்திப்போம். இயேசுவிடத்தில் நமக்குள்ள நம்பிக்கையும், இயேசுவோடு நிற்கக்கூடிய துணிவும் தான், நம்மை உண்மையான சீடர்களாக அடையாளம் காட்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறைவார்த்தை அறிவிக்கிறவர்களாக….

சீடர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி, இயேசுவின் வாழ்வில் மிக, மிக முக்கியமான நிகழ்ச்சி. இயேசு தனது போதனையின் மையக்கருத்தான ”காலம் நிறைவேறிவிட்டது. மனம்திரும்பி நற்செய்தியை நம்புங்கள்” என்ற சிந்தனையை மக்கள் மனதில் வேரூன்றிவிட்டார். கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதற்கான திட்டங்களையும் அவர் மனதில் நிச்சயம் வைத்திருப்பார். கலிலேயா பகுதி முழுவதும் சுற்றிவந்து, போதித்து, நோயாளர்களைக் குணப்படுத்தி தனது வல்லமையை நிரூபித்து விட்டார். இயேசுவை மக்கள் சிறந்த போதகராக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு, மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார்.

இப்போது, இயேசுவுக்கு இரண்டு பிரச்சனைகள் வருகிறது. 1. அவருடைய செய்தி, அவருக்குப்பின்னாலும் அறிவிக்கப்பட வேண்டும். 2. அந்தப்போதனையை, புத்தகங்களும், செய்தித்தாள்களும் இல்லாத அந்த காலகட்டத்தில், மக்களுக்கு தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டும். இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் தீர்வாக இயேசு கண்டுபிடித்த முறைதான் சீடர்களைத் தேர்ந்தெடுத்தது. போதகர்களுக்குப் பின்னால் சீடர்கள் செல்வது என்பது, பாலஸ்தீனத்தில் புதிதல்ல. ஆனால், குருவுக்கும் பிறகும், அதே தாகத்தோடு போதிப்பது என்கிற நிலை இல்லாமலிருந்தது. குருவோடு, ஏறக்குறைய அவருடைய போதனையும் மறைந்துவிடும். அப்படி ஒன்றாக இயேசுவின் வாழ்வும் இருந்துவிடக்கூடாது என்பதில் இயேசு கருத்தாயிருக்கிறார். எனவே தான், அவர் சீடர்களைத் தேர்ந்தெடுத்தது மட்டுமல்ல, அவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சியும் தருகிறார்.

நாம் அனைவருமே இயேசுவின் சீடர்கள். கிறிஸ்தவர்கள் அனைவருக்குமே நற்செய்தி அறிவிக்கும்பணி இருக்கிறது. நாம் இறைவார்த்தையோடு கேட்டதோடு நமது வாழ்வு நின்றுவிடக்கூடாது. அது நமது வாழ்வில் வெளிப்பட வேண்டும். இறைவார்த்தை தொடர்ந்து நமது வாழ்வில், வாழ்வு மூலமாக அறிவிக்கப்பட வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

விசுவாசம் - கடவுளின் கொடை

இயேசு கடவுளின் நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச்செல்ல திருத்தூதர்களை தேர்ந்தெடுக்கிறார். இயேசுவின் இந்த செயல், விசுவாசம் என்பது போற்றிப்பாதுகாக்க வேண்டியது மட்டுமல்ல, அது பறைசாற்றப்பட வேண்டியது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

கத்தோலிக்க திரு அவை இரண்டாயிரம் வருடத்திற்கும் மேலான பாரம்பரியத்தைகொண்டு இருக்கிறது. இந்த இரண்டாயிரம் வருட பாரம்பரியத்தின் வெற்றி, ஒவ்வொரு தலைமுறையினரின் அர்ப்பணத்திலே இருந்திருக்கிறது. அன்றைக்கு சீடர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட விசுவாசத்தை அர்ப்பண உணர்வோடு தலைமுறையினர் தோறும் அடுத்த தலைமுறையினர்க்கு மிகுந்த பாதுகாப்போடு, மகிச்சியோடு, தியாக உள்ளத்தோடு பரிமாறியிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் சந்தித்த துன்பங்கள், துயரங்கள், கொடுமைகள் எண்ணிலடங்காதவை. ஆனாலும், தாங்கள் பெற்றுக்கொண்ட அந்த மாட்சிமையை, உண்மையை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தாங்கள் சந்தித்த இன்னல்களை பொறுமையோடு ஏற்றுக்கொண்டார்கள். இதற்கு சிறந்த உதாரணம் திருத்தூதர்கள். திருத்தூதர்கள் அனைவரும் இயேசுவுக்காக சிந்திய இரத்தம் அதற்கு சாட்சி.

இன்றைக்கும் நாம் பெற்றிருக்கிற இந்த பாரம்பரியமான விசுவாசத்தை சிதைக்காமல் எந்தச்சேதாரமும் இல்லாமல் அடுத்த தலைமுறையினருக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. குறிப்பாக பொய்யையும், புரட்டையும், மாயத்தோற்றத்தையும் கல்வியறிவில்லா மக்கள் மனதில் விதைத்து, சாதாரண மக்களின் விசுவாசத்தில் குழப்பம் செய்து, குழம்பிய குட்டையில் மீன்களை தேடும் வேலை செய்கின்ற பிரிவினைச்சபைகளிடமிருந்து இந்த பாரம்பரியமான விசுவாசத்தை பாதுகாத்து, பறைசாற்றக்கூடிய பொறுப்பை உணர்வோம். சிலை வழிபாடு, அன்னைக்கு வணக்கம், நற்கருணையில் இறைப்பிரசன்னம் போன்ற நம்முடைய விசுவாச வடிவங்களை சிதைக்க நினைப்பவர்களுக்கு இறைவார்த்தையின் துணைகொண்டு பதிலடி கொடுப்பது, ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமை என்பதை உணர்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------------

 

பன்னிரு திருத்தூதர்களை நியமித்தார் !

இயேசு பன்னிரு திருத்தூதர்களை நியமித்த நிகழ்வை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக் கேட்கிறோம். தம்மோடு இருக்கவும், நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும், பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் பன்னிருவரை நியமித்தார். அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார் என்று வாசிக்கிறோம்.

திருத்தூதர் என்னும் பெயரை என்று சிந்திப்போம். அப்போஸ்தலோஸ் என்னும் கிரேக்கச் சொல்லுக்கு "அனுப்பப்பட்டவர்" என்று பொருள். இ;ந்தப் பெயரிலிருந்துதான் திருத்தூதுப் பணி, நற்செய்தி அறிவிப்புப் பணி என்னும் சொல்லாடல்கள் எழுகின்றன. அது மட்டுமல்ல, இந்தப் பன்னிரு திருத்தூதர்களின் வாரிசுகளாகத்தான் இன்றைய திருத்தந்தையும், ஆயர்களும் திகழ்கின்றனர். நமது திருச்சபையும், ஏக, பரிசுத்த, கத்தோலிக்க, "அப்போஸ்தலிக்க" திருச்சபை என்று இவர்களைக் கொண்டே அழைக்கப்படுகின்றது. உலகெங்கும் பரவியுள்ள ஒரே தூய திருச்சபை திருத்தூதர்களை அடிக்கல்லாகவும், திருத்தூதுப் பணியைத் தனது உயிர்த் துடிப்பாகவும் கொண்டுள்ளது. திருத்தூதுப் பணியின்றி திருச்சபை இயங்க முடியாது. திருத்தூதர்கள், அவர்களின் வாரிசுகளான திருத்தந்தை மற்றும் ஆயர்கள் இன்றியும் திருச்சபை இயங்க முடியாது. ஏனென்றால், நாம் "கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய்" இருக்கிறோம் (எபே 2: 20) என்கிறார் பவுலடியார்.

இதுவே நமது விசுவாசம், இதுவே நமது கத்தோலிக்க மரபு. இந்தத் திருத்தூது மரபில் பெருமிதம் கொண்டு, திருச்சபைத் தலைவர்களுக்கு மதிப்பும், கீழ்ப்படிதலும் தந்து, பவுலடியார் சொல்வதுபோல, "கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி" (எபே 2: 21) வளர்ச்சி பெறுவோமாக!

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, திருத்தூதர்களுக்காகவும், அவர்களின் இன்றைய வாரிசுகளான எங்கள் திருத்தந்தை, ஆயர்களுக்காக உம்மைப் போற்றுகிறோம். திருத்தூதர்களை அடிக்கல்லாகக் கொண்டு நீர் உருவாக்கிய திருச்சபையில் நாங்கள் உயிர்த் துடிப்புள்ள உறுப்பினர்களாக வாழ அருள்தாரும். உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

 

இணையதள உறவுகளே

“இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள்.
தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்;  அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.”(மாற் 3:13-15) பன்னிரெண்டு திருத்தூதரை அழைக்க, இவ்வளவு சிரமப்பட்டு மலை உச்சிக்குப்போய், தந்தை இறைவனோடு செபத்தில் கலந்தாலோசித்து  தேர்ந்தெடுத்துள்ளார்.

சாதிக்கு ஒரு திருத்தூதர், சங்கத்துக்கு இன்னொருவர், கோடி பணம் கொடுத்தவர் மற்றொருவர், குடும்பத்தில் பாதிபேர் என்று மிக எளிதாக தேர்ந்தெடுத்திருக்கலாம். ஒரு குருமாணவனைப்பற்றிய ஒரு புகார் அந்த ஆயரிடம் வந்தபோது, ‘நான் செபித்து முடிவு செய்வேன்’ என்றார். அவர் இன்று இல்லை.

அது ஆயராக இருக்கலாம், அமைச்சராக இருக்கலாம், குருக்களாக இருக்கலாம், குருத்துவப் பணியிடமாக இருக்கலாம், உங்கள் கணவனாக மனைவியாக இருக்கலாம், பிள்ளைகளின் படிப்பு, எதிர்கால வாழ்வாக இருக்கலாம். மலைக்குச் செல்லுங்கள். ஆண்டவரின் உதவியைத் தேடுங்கள். சரியான முடிவு எடுப்பீர்கள். நடப்பவை நல்லவையான இருக்கும்.

-ஜோசப் லீயோன்

----------------------------------------------

 

விரும்பியவர்களை அழைத்தார் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு தம் திருத்தூதர்களை அழைத்த நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். நமக்கு நன்கு அறிமுகமான பகுதிதான். அதில் இன்று நாம் சிந்திக்க எடுத்துக்கொள்ளும் இரு செய்திகள்: 1. அவர் தாம் விரும்பியவர்களை தம்மிடம் அழைத்தார். கிறித்தவ அழைத்தல் என்பது ஒரு கொடை. அது சம்பாதிப்பது அல்ல, இறைவன் தாமாக விரும்பி இலவசமாகக் கொடுப்பது. அந்த அழைத்தலுக்குத் தகுதி என்று எதுவுமில்லை. இறைவனின் இரக்கம் ஒன்றுதான் அலகு. யாரையெல்லாம் அவர் அழைத்திருக்கிறாரோ, அவர்களெல்லாம் பேறுபெற்றவர்கள். நன்றி சொல்ல வேண்டியவர்கள். 2. தம்மோடு இருக்க... என்பது அவரது அழைத்தலின் நோக்கங்களுள் ஒன்று. அவரால் அழைக்கப்பட்டவர்கள் அடிப்படையில் செய்யவேண்டியது அவரோடு ஒன்றி வாழ்வது, அவரோடு வாழ்வது. இந்த இரு செய்திகளையும் இன்று நம் இதயத்தில் பதித்துக்கொள்வோம்.

மன்றாடுவோம்: எம்மைப் பெயர் சொல்லி அழைத்த ஆண்டவரே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். எங்கள் தகுதியின்மையைப் பாராமல், உமது பேரன்பையே மனதில் கொண்டு, எங்களை விரும்பி அழைத்தீரே, உமக்கு நன்றி. உம்மால் அழைக்கப்பட்ட நாங்கள் என்றும் உம்மோடு வாழவும், ஒன்றித்திருக்கவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

-----------------------------

 

''தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட
அதிகாரம் கொண்டிருக்கவும் இயேசு பன்னிருவரை நியமித்தார்'' (மாற்கு 3:14-15)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- இயேசு பன்னிரு சீடரைத் தனிப்பட்ட முறையில் தேர்ந்துகொண்டார் என்பது நற்செய்தி நூல்களில் காணப்படுகின்ற உறுதியான செய்தி. பண்டைக் காலத்தில் பன்னிரு குலமுதல்வர்கள் யூத மக்களின் தந்தையர்களாக விளங்கியதுபோல, புதிய உடன்படிக்கையின் காலத்தில் புதிய இன மக்களுக்குக் குலமுதுவர்கள் போல அமைந்தவர்கள்தான் இந்தப் பன்னிருவர். இவர்களுக்கு இயேசு ''திருத்தூதர்'' என்னும் பெயரைக் கொடுக்கிறார். தூது அறிவிக்க அனுப்பப்பட்டதால் அவர்கள் இப்பெயர் பெற்றனர். ஆயினும், தூது சொல்லச் செல்வதற்கு முன்னால் அவர்கள் இயேசுவோடு ''இருக்க வேண்டும்'' - அதாவது, இயேசு யார் என்பதை அவர்கள் அவரோடு இருந்து, பழகி, நேரடியாக அனுபவித்து உணர வேண்டும். இவ்வாறு தாங்கள் அனுபவித்து அறிந்ததை அவர்கள் மக்களுக்குப் பறைசாற்ற வேண்டும். மேலும் தீய சக்திகளை முறியடிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் தரப்படுகிறது.

-- பன்னிரு திருத்தூதர்களுக்கு இயேசு வழங்கிய பொறுப்பு திருச்சபைக்கு அளிக்கப்படுகின்ற பொறுப்பாகும். இயேசுவின் பெயரால் ஒன்றுகூடி வருகின்ற மக்கள் குழுவே திருச்சபை. இக்குழு இயேசுவோடு ஒன்றித்திருக்க வேண்டும். இயேசுவிடமிருந்து பெற்ற அனுபவத்தை உலக மக்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். இவ்வாறு நற்செய்தி அறிவிக்கும்போது திருச்சபை தீய சக்திகளை எதிர்த்து நின்று, கடவுளின் சார்பாகப் போராடிட அழைக்கப்படுகிறது. திருச்சபைக்கு வழங்கப்படுகின்ற திருத்தூதுப் பணி இயேசுவின் பணியைத் தொடர்வதையே குறிக்கிறது. இது புதிய பணியல்ல, மாறாக இயேசுவின் பணித்தொடர்ச்சியே. இப்பணியில் பங்கேற்க நாம் அழைக்கப்படுகிறோம் என்பதை உணரும்போது நம்மில் நன்றியுணர்வு பொங்கி எழ வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனின் பள்ளியில் பயின்ற பாடத்தைப் பிறரோடு பகிர்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்