முதல் வாசகம்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 6: 12b-15.17-19

அந்நாள்களில் தாவீது புறப்பட்டுச் சென்று கடவுளின் பேழையை ஓபேது - ஏதோமின் இல்லத்திலிருந்து தாவீதின் நகருக்கு அக்களிப்போடு கொண்டு வந்தார். ஆண்டவரின் பேழையை ஏந்தியவர்கள் ஆறு அடிகள் எடுத்து வைத்ததும் ஒரு காளையையும் ஓர் ஆட்டுக் கிடாயையும் பலியிட்டார். நார்ப் பட்டால் நெய்யப்பட்ட ஏபோத்தை அணிந்துகொண்டு, தாவீது தம் முழு வலிமையோடு ஆண்டவர் முன்பாக நடனமாடிக் கொண்டிருந்தார். தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத்தோடும் எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள். ஆண்டவரின் பேழையைக் கொணர்ந்து, அதற்கென நிறுவிய கூடாரத்தின் நடுவில் அதை வைத்தார்கள். தாவீது ஆண்டவர் முன்பு எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினார். எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தியபின் தாவீது படைகளின் ஆண்டவர் பெயரால் மக்களுக்கு ஆசி வழங்கினார். பிறகு தாவீது ஆண் முதல் பெண் வரை மக்கள் அனைவருக்கும் இஸ்ரயேல் கூட்டம் முழுவதற்கும் ஆளுக்கொரு அப்பத்தையும், பொரித்த இறைச்சியையும், திராட்சைப் பழ அடையையும் கொடுத்தார். மக்கள் அனைவரும் தம் இல்லங்களுக்குச் சென்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 24: 7. 8. 9. 10

பல்லவி: மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? ஆண்டவர் இவரே.

7 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். -பல்லவி

8 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்;
இவரே போரில் வல்லவரான ஆண்டவர். -பல்லவி

9 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்.
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். -பல்லவி


10 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
படைகளின் ஆண்டவர் இவர்;
இவரே மாட்சிமிகு மன்னர். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

மாற்கு 3:31-35

பொதுக்காலம், வாரம் 3 செவ்வாய்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-35

அக்காலத்தில் இயேசுவின் தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. ``அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள்'' என்று அவரிடம் சொன்னார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ``என் தாயும் என் சகோதரர்களும் யார்?'' என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, ``இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

இறைச் சமூகமாய்

கிறிஸ்தவர்கள் நடத்தக்கூடிய அன்பு இல்லங்களில் எந்த மதம், சாதி, மொழி சார்ந்தவர்களும் இடம் பெயர்வார்கள். மார்ச் மாதங்களில் சிறப்பிக்கப்படும் பெரிய வெள்ளி (ம) தவக்காலங்களில் நோன்பு என்ற பெயரில் நாம் உதவி செய்கின்றபோது எந்த பாகுபாடும் பார்க்காமல் உதவி செய்கின்ற உள்ளங்கள் அதிகம். கிறிஸ்தவ அமைப்புகளில் பணிபெறக்கூடியவர்கள் எந்த பாகுபாடு அடிப்படையிலும் சேர்க்கப்படவில்லை. மாறாக மனிதாபிமானத்தினை மட்டுமே முன்வைக்கப்படுகின்றன.

இத்தகைய ஒரு நிலைத்தான் இன்று இயேசுவுக்கு வருகின்றது என்று மாற்கு நற்செய்தியாளர் சுட்டிக் காட்டுகின்றார். இயேசுவின் நிலைப்பாடு எதை நோக்கியதாக இருக்கும் என்று அங்கிருந்தவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் இயேசுவின் செயல்பாடு இறைத்திருவுளத்தை சார்ந்ததாக மாறுகிறது. ஏனென்றால் இறைச் சமூகத்தில் நாம் இணையவேண்டும் என்பதனை சுட்டிக்காட்டுகின்றார். இயேசுவின் நிலைப்பாடு ஒருவேளை தாயை நோக்கியதாக இருந்திருந்தால், பரிசேயர்களின் நேற்றைய நாள் வாதிட்ட வாதங்கள் உண்மையாக மாறிவிடும். அதனால்தான் இயேசு அன்னை மரியாளை இறைசமூகத்தில் இணைக்கின்றார். ஏனென்றால் அன்னை மரியாளுக்கும் இயேசுவுக்கும் உள்ள அமைப்பு உடல் சம்பந்தப்பட்டது அல்ல அது உன்னத நிலையைச் சார்ந்தது. அன்னை மரியா தன் வாழ்வின் அடித்தளமாக கொண்டது கடவுளின் வார்த்தை. எனவே இயேசு இறைச்சமூகமாக அன்னையை இணைக்கின்றார்.

நாம் எல்லோரையும் இறைச்சமூகமாக பார்க்கின்றோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

======================

மாற்கு 3: 31 - 35
இரத்த உறவா? இறை உறவா?

உறவு என்பது வீடு, நாடு, உலகம் அனைத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்து அமைதியாக இயக்கக்கூடிய வல்லமை உடையது. அதனால் தான் தமிழர் வாழ்வில் இரத்த உறவு இல்லாதவர்களைக் கூட அன்பு மிகும்போது ‘அண்ணா’ என்றோ ‘தம்பி’ என்றோ ‘மாமா’ என்றோ, ‘தங்கச்சி’ என்றோ அழைப்பது வழக்கம். மிகப்பெரிய மனிதர்களைப் போற்றும்போது கூட உறவுப் பெயர்களால் அழைக்கிறோம். தேசப் பிதாவை காந்தி தாத்தா, நேருவை மாமா, பொியாரை தந்தை பெரியார் என்று குறிப்பிடுகின்றோம். இப்படி மேன்மைக்கு உரியவர்களை உறவுப் பெயர்களால் அழைப்பதன் மூலம், உறவுகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம் என்பது உறுதியாகிறது. ஆனால் எப்படிப்பட்ட உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதனை இன்றைய வாசகம் கற்றுக் கொடுக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இரத்த உறவை விட இறை உறவு மேலானது என்பதன் மகத்துவத்தை எடுத்துக் கூறுகின்றார். என் தாயும் என் சகோதரர்களும் யார்? என்ற இயேசுவின் வார்த்தைகள் தம் தாயை அவமதிப்புள்ளாக்கியவை என்று எண்ண வேண்டியதில்லை. அத்தகைய ஒரு நிலைப்பாட்டை இயேசு கட்டாயம் எடுத்திருக்க மாட்டார் என்று அவர் தொடர்ந்து கூறிய வார்த்தை தெளிவுபடுத்துகின்றன. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் தாயும் ஆவார் என இயேசு கூறியது அன்னை மரியாளுக்கு அழகாய் பொருந்தும். ஏனெனில் அவர் கடவுளின் அழைப்பை ஏற்று அதன்படி வாழ்ந்து கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, அவரைப் போல வாழ்கின்றவர்கள் அனைவருமே தமக்கு நெருங்கிய உறவினர்கள் என்று கூறி உறவுக்கு உரு கொடுக்கின்றார். இறை உறவு என்பது இறைவார்த்தைக்கு செவிமடுப்பதில் அடங்கியுள்ளது என்பதனைச் சுட்டிக் காட்டுகிறார்.

எனது அன்றாட வாழ்வில் நான் எத்தகைய உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றேன்? இரத்த உறவு வேண்டும், ஆனால் அதை விட இறை உறவு முக்கியமானது. இரத்த உறவு உருகிவிடும் ஆனால் இறை உறவு உறைந்து காணப்படும். சிந்திப்போம், உருகுதலா? அல்லது உறைதலா?

- அருட்பணி. பிரதாப்

========================

 

கீழ்ப்படிதல்

தொடக்கத்தில் கடவுள் மனிதர்களைப் படைத்தார். அவர்களை தனது சாயலில், உருவத்தில் படைத்தார். இவ்வாறு தனது அன்புக்குரியவர்களாக, அவருடைய பிள்ளைகளாக மனிதர்களைப் பேணிக்காத்தார். ஆனால், மனிதன் கடவுளை மிஞ்சிவிட வேண்டும் என்கிற, அலகையின் கண்ணியில் சிக்கி, அந்த உறவை இழந்துவிடுகிறான். இவ்வாறு கடவுளின் பிள்ளைகளாகப் படைக்கப்பெற்ற மனிதன் கீழ்ப்படியாமையால், கடவுளின் வார்த்தையைப் புறந்தள்ளியதால், அந்த உறவை இழந்துவிடுகிறான்.

இன்றைய நற்செய்தி, மனிதன் இழந்த உறவை எப்படி புதுப்பிக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனையைத் தருகிறது. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதே, அந்த ஆலோசனை. கீழ்ப்படியாமை தான், உறவைச் சிதைக்கிறது. கீழ்ப்படிதல் உறவை ஆழப்படுத்துகிறது. முதல் மனிதன் ஆதாம் கீழ்ப்படியாமையால் துன்பத்தை வருவித்துக்கொள்கிறான். கடவுளின் மகன் இயேசுவோ, தனது கீழ்ப்படிதல் மூலமாக இழந்த உறவை புதுப்பித்து ஆழப்படுத்துகிறார். நம்மையும் கடவுளின் பிள்ளைகளாக மீண்டும், உறவை புதுப்பித்துக்கொள்ள அறிவுறுத்துகிறார். கடவுளோடு நாம் மீண்டும் இழந்த உறவை புதுப்பித்துக்கொள்ள முடியும். எப்போது நாம் கடவுளின் திருவுளத்தின்படி நடக்கிறோமோ, அந்த நிமிடமே நாம் இழந்த உறவை புதுப்பித்துக் கொள்கிறோம்.

நமது வாழ்வில் நமது கீழ்ப்படியாமையினால் கடவுளோடு உள்ள உறவை, நாமும் சிதைத்திருக்கிறோம். அந்த உறவை நமது கீழ்ப்படிதல் மூலமாக ஆழப்படுத்துவோம். அவருடைய குரலைக் கேட்போம். அதற்கு செவிகொடுப்போம். இயேசுவின் பிள்ளைகளாக மாறுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------

உண்மையான உறவு

உண்மையான உறவு என்பது இரத்தம் தொடர்பான உறவல்ல. அது உணர்வுப்பூர்வமான உறவுமல்ல. அது இறையரசு தொடர்பான உறவு. இறையரசுடனான உறவில் இருக்கிறவர்கள் கடவுளோடு நெருங்கிய தொடர்புடையவர்கள். கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவர்கள். கடவுளுக்காக எதையும் இழப்பதற்கு தயாராக இருக்கிறவர்கள். கடவுளுக்காக, தங்கள் வாழ்வில் எதற்கும் தயாராக இருக்கிறவர்கள். அப்படி வாழ்கிறவர்கள் தான் இயேசுவின் சகோதர, சகோதரிகள். கடவுளின் பிள்ளைகள்.

இந்த உலகில் இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளின் நிலை நமக்குத்தெரியாதது அல்ல. ஒன்றாகப்பிறந்தவர்கள், ஒரே வீட்டில் வாழ்ந்தவர்கள், உறவாடி மகிழ்ந்தவர்கள், தங்களுக்கு திருமணம் ஆனவுடன், தங்களுக்கென்று குழந்தைகள் பிறந்து குடும்பம் சகிதமாக மாறியவுடன், தங்களோடு உடன்பிறந்தவர்கள் எதிரிகளாக மாறிவிடுகின்றனர். ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள், ஒருவர் மற்றவரைத்தாக்கி இறப்பது அன்றாட செய்தித்தாள்களில் நாம் காண முடிகிறது. அதேபோல, உணர்வுப்பூர்வமான உறவும் நிலையானது அல்ல. கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறவர்கள் தான் உண்மையான உறவைக்கொண்டிருக்க முடியும். அதற்கு இயேசு சிறந்த எடுத்துக்காட்டு. இறையரசு என்னும் சமூகத்தைக் கட்டியெழுப்ப அவர் கொண்டிருந்த ஆவல் தான், அவரை மற்றவரோடு நெருங்கிப்பழகவும், உண்மையான அன்பு கொண்டிருக்கவும் தூண்டியது.

நமக்கென்று கிறிஸ்தவ சமூகம் வைத்திருக்கிற மதிப்பீடுகள், விழுமியங்களின் மீது நாம் முழுமையான நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அந்த விழுமியங்களுக்கு எதிரான நிகழ்வுகள் நடக்கிறபோது, அதைத்துணிந்து கேட்கிறவர்களாக இருக்க வேண்டும். அத்தகைய அருள் வேண்டி, ஆண்வரிடத்தில் மன்றாடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்


கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவோம்!

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுகிறவரே என் தாயும், சகோதரியும், சகோதரரும் ஆவார் என்று இயேசு சொல்கிறார். இந்த உலகத்திலே நாம் நமக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறோம், நம்முடைய பெற்றோரும் நமக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். கடவுளும் நமக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார். அந்த திட்டத்தை அறிந்து செயல்படுத்துவதுதான் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது ஆகும்.

தாயின் கருவறையில் உருவாவதற்கு முன்பே நம்மை முன்குறித்து வைத்திருக்கிற நமது இறைவன், நாம் செய்ய வேண்டிய பணி என்று ஒன்றை, நமக்காக வைத்திருக்கிறார். நம்முடைய வாழ்வின் நோக்கம் அந்தப்பணியைச்செய்து முடிப்பது தான். நம்மைத்தவிர, வேறு யாரும் அந்தப்பணியைச்செய்ய முடியாது. ஆனால், அதே வேளையிலே, கடவுள் யாரையும் வற்புறுத்துவதில்லை. முழுச்சுதந்திரம் கொடுத்திருக்கிறார். நமக்காக கடவுள் வைத்திருக்கிற அந்தப்பணியை அடையாளம் கண்டுகொண்டு, அதைத்திறமையாக செய்து முடிக்கும்போது, இறைத்ருவுளத்திற்கு பணிந்து நடக்கிறவர்களாக நாம் வாழ்கிறோம். இயேசுவின் குடும்பத்தில் ஒருவராக நாம் மாறுகிறோம். கடவுளின் திருவுளத்தை அறிந்துகொள்ள நமக்கு உதவி செய்வது, நம்முடைய செபம். செபம்தான் கடவுளின் திருவுளத்தை அறிந்துகொள்ள இயேசுவுக்கு உதவியது. கெத்சமெனி தோட்டத்தில் ‘தந்தையே, கூடுமானால் இந்தத்துன்பக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும்’ என்று சொன்னபோதும், கடவுளின் திருவுளம் இதுதான் என்பதை அவருக்குத்தெரியப்படுத்தி, அதை உறுதிப்படுத்தியது இயேசுவின் செபம். நற்செய்தியாளர்கள் அனைவரும் தெளிவாகக்கூறியிருக்கிறார்கள், இயேசு தனிமையான இடங்களுக்குச்சென்று செபிப்பதற்கு அதிகமான நேரத்தைச்செலவிட்டார் என்று.

நாமும் செபத்திற்கு அதிகநேரம் செலவழிப்போம். கடவுளின் திருவுளத்தை அறிந்து செயல்படுத்துவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

இயேசுவின் குடும்பம் !

"என் தாயும் என் சகோதரர்களும் யார்?" என்று இயேசு கேட்டு, அதற்கான விடையையும் தருகின்றார். தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, "இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார்.

இங்கே இயேசு தனது குடும்பமாகப் புதியதொரு குழுவினரை அடையாளம் காட்டுகிறார். அக்குடும்பம் இரத்த உறவினால் உருவானது அல்ல. மாறாக, இiறாட்சியின் உறவை அடிப்படையாகக் கொண்டது. இறையாட்சி உறவில் இரண்டு கூறுகள் உள்ளன:

1. இயேசுவைப் போலவே, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்கள் அனைவரும் இயேசுவின் நெருங்கிய உறவினர்கள் ஆகிவிடுகின்றனர். இறைத் தந்தையின் பாசத்துக்குரிய பிள்ளைகளாகவும், இயேசுவின் குடும்ப உறுப்பினர்களாகவும் மாறுகின்றனர்.

2. இரண்டாவது பண்பு இயேசுவைச் சூழ்ந்து அமர்ந்திருப்பது. இயேசு தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுட்டிக்காட்டித்தான் "என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே" என்றார். இதற்கு முந்தின வசனத்திலும் "அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது" என மாற்கு நற்செய்தியாளர் எழுதி வைத்திருப்பது தற்செயலான குறிப்புபோலத் N;தான்றவில்லை. இயேசுவின் குடும்பத்தில் உறுப்பினர்களாக இருக்கவேண்டுமென்றால், அவரைச் சூழ்ந்து, அவரோடு அமர்ந்திருக்க வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்புதானே? இயேசு தம் சீடர்களிலிருந்து பன்னிருவரை மட்டும் திருத்தூதர்களாகத் தேர்ந்தெடுத்தபோது, "தம்மோடு இருக்கவும்" (மாற் 3:14) என்பதையும் ஒரு காரணியாகக் கொண்டிருந்தார் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.

ஆம், இயேசுவின் குடும்பத்தில் ஒருவராக நாம் இருக்க வேண்டுமென்றால், அவரைச் சூழ்ந்து அமர்ந்திருக்க வேண்டும். அவரோடு இருக்கவேண்டும், அவரது காலடிகளில் அமர்ந்து அவருக்கு செவி மடுக்க வேண்டும். அதுதானே நல்லுறவு!

இயேசுவோடு அதிக நேரம் செலவழிக்க முயல்வோமா?

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எல்லா வேளையிலும் உம்மோடு இருக்கவும், உம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்து, உமக்காக அதிக நேரம் செலவழிக்கவும் எங்களுக்கு அருள்தாரும். அதனால் நாங்கள் உமது நெருங்கிய உறவினர்களாக, தாயும், சகோதர சகோதரிகளாகவும் மாறுவோமாக. உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-பணி. குமார்ராஜா

 

''இயேசு, 'கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே
என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்' என்றார்'' (மாற்கு 3:35)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- இயேசுவின் உண்மையான உறவினர் யார் என்னும் கேள்விக்குப் பதிலை இங்கே காண்கின்றோம். இயேசு புரிந்த அதிசய செயல்களைக் கண்டு, அவருடைய போதனையைக் கேட்டு மக்கள் அவரைச் சூழ்ந்துகொள்கிறார்கள். அப்போது இயேசுவின் உறவினர் அவரை அணுகி, அவரை மக்களிடமிருந்து மீட்டுத் தம்மோடு அழைத்துச் செல்ல நினைக்கிறார்கள். இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரைத் தம்மோடு வருமாறு கேட்டிருக்கக்கூடும். ஆனால் இயேசுவோ கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் கருத்தாய் இருந்தார். எனவே, இயேசுவின் உறவு இரத்த உறவில் தொடங்கி முடிகின்ற இவ்வுலக உறவு அல்ல. இயேசுவின் உறவினர் இயேசுவோடு வேறொரு ஆழ்ந்த உறவால் பிணைக்கப்பட்டுள்ளனர். அதையே இயேசு விளக்கிச் சொல்கிறார். அதாவது, யார் யார் இயேசுவைப் போலக் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்களோ அவர்களே இயேசுவின் உறவினர். இந்த உறவு இரத்த உறவைவிட ஆழமானது. இதிலிருந்து இயேசு தம் தாயோடு தமக்கிருந்த உறவை உதறித்தள்ளினார் என நாம் முடிவுசெய்தால் அது சரியல்ல. மரியா உண்மையில் இயேசுவின் தாய் மட்டுமல்ல, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் மரியா எப்போதுமே கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

-- மரியாவின் ஆழ்ந்த நம்பிக்கையை இயேசு இங்கே போற்றி உரைக்கிறார் எனலாம். ஆக, மரியாவுக்கும் இயேசுவுக்கும் இடையிலான உறவு இரு நிலைகளில் உள்ளதைப் பார்க்கிறோம். ஒன்று, மரியாவுக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவிய இரத்த உறவு, தாய்-சேய் உறவு. இரண்டு, இறைத்திட்டத்தை ஏற்றுச் செயல்படுத்துவதில் இயேசுவும் மரியாவும் நிலைத்திருந்ததால் அவர்களுக்கிடையே எழுந்த ஆன்மிக உறவு. நாமும் இந்த முறையில் இயேசுவோடு உறவினர் ஆகின்றோம். கடவுளின் பிள்ளைகள் என்னும் தகுதியைக் கடவுளே நமக்கு அளிக்கின்றார். ஆக, கடவுளின் குடும்பத்தினர் என்னும் முறையில் நாம் இறையுறவில் நாளும் வளர அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு
இறைவா, உம் விருப்பத்தை அறிந்து அதைச் செயல்படுத்திட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

---------------------------

"இதோ! என் தாயும் என் சகோதரர்களும்"

இயேசுவின் அன்புக்குரியவரே!

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யாரும் யாருக்கும் தாயாகவோ, சகோதர சகோதரியாகவோ மாற முடியாது.நீங்களோ நானோ, அதுவும் இயேசுவின் தாயாக, சகோதர சகோதரியாக உறவு கொண்டாட நினைப்பது கனவிலும் நம்மால் நினைக்கமுடியாத ஒன்று.ஆனால் இது எல்லோராலும் எட்டிப் பிடிக்கும் ஒன்றாக, இனிய எளிய ஒன்றாக இயேசுவே முன்வந்து நமக்கு மாற்றியுள்ளார்.

நம் அன்னை மரியாள் இயேசுவின் தாயாக எவ்வளவோ தன்னை தயாரிக்க வேண்டியிருந்தது. தன்னை அர்ப்பணிக்க வேண்டியிருந்தது. தன்னை இழக்;க வேண்டியிருந்தது. ஆனால் இந்த பாதையை இயேசு நமக்கு மிக எளிதாக்கியிருக்கிறார். "கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்"(மாற்3:35) என்ற எளிய பாதை அமைத்து இலக்கை எளிதாக்கியுள்ளார்.

"நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்ற இவ்வர்ப்பணத்தைத் தன் வாழ்வாக்கி இயேசுவின் தாயாக அன்னை மரியாள் எவ்வளவோ சிறமப்பட்டு நமக்கு முதல்பாதை அமைத்தார். "மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்". ஆழ்ந்த தியானத்தில் இறைவனின் திருவுளத்திற்கு ஒன்றித்த நிலையில் நமக்கு முன் உதாரணம் அமைத்தார். தன் துன்பங்கள் குடும்ப பாரங்கள் அனைத்தையும் இறை திருவுளம் என ஏற்று, இயேசுவைப் பெற்றெடுத்ததைவிட, திருவுளம் நிறைவேற்றியதால் கடவுளின் தாயானாள். நாமும் இவ்வாறு வாழ்ந்தால் இயேசுவின் தாயாக, சகோதர சகோதரிகளாக மாறமுடியும். இவ் உறவைப் பெற்று இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்;.

:- ஜோசப் லியோன்