முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-8

என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய வாக்குறுதிக்கு ஏற்ப அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது: தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக! என் முன்னோரைப் போன்று தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவு கூருகின்றேன். உன் கண்ணீரை நினைவிற்கொண்டு உன்னைக் காண ஏங்குகின்றேன்; கண்டால் என் மகிழ்ச்சி நிறைவடையும். வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன். உன்மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்
திபா 96: 1-2ய. 2b-3. 7-8ய. 10
பல்லவி: பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.
2ய ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
அவர் பெயரை வாழ்த்துங்கள். -பல்லவி

2b அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.
3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;
அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி

7 மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்;
மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
8ய ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். -பல்லவி

10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்:
ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;
பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது;
அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

மாற்கு 4:21-25

பொதுக்காலம், வாரம் 3 வியாழன்


நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-25

அக்காலத்தில் இயேசு மக்களிடம், ``விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா? வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்'' என்றார். மேலும் அவர், ``நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும். ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்'' என்று அவர்களிடம் கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

உண்மையின் வழிநடப்போம்

நாம் வாழும் உலகம் உண்மையோடு சமரசம் செய்து கொள்ள பழகிவிட்டது. ”என் தந்தை செய்வது தவறுதான். அது எனக்கும் தெரியும். ஆனால், என்ன செய்ய? அவரை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? அவர் என் தந்தை ஆயிற்றே?”. செய்வது தவறு என்பது தெரிந்தாலும், அதனை எதிர்க்க வேண்டும் என்பதோ, அதனால் எத்தனை துன்பங்கள் வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் என்பதோ, இலட்சத்தில் ஒருவரின் இலட்சியமாகத்தான் இருக்கிறது. கிறிஸ்தவர்கள் அனைவருமே, இந்த இலட்சத்தில் ஒருவராக இருக்க வேண்டும் என்பது இயேசுவின் ஆசையாக இருக்கிறது.

நமது தனிப்பட்ட வாழ்க்கையில், நமது வாழ்வு அனுபவத்தில் உண்மையோடு தோழமை கொள்வது எவ்வளவு சவாலான வாழ்வு என்பது நாம் அறியாதது அல்ல. ஆனால், அதனை வாழ்வதற்கு நாம் தயார் இல்லை. மார்ட்டின் லூதர் கிங் கத்தோலிக்கத் திருச்சபையில் நடந்து வந்த ஒருசில செயல்பாடுகள், உண்மையான விசுவாசத்திற்கு எதிரானது என்று நினைத்தார். அதனை உண்மையாக ஏற்றுக்கொண்டார். பலமிக்க திருச்சபையை எதிர்ப்பது, மற்றவர்கள் பார்வையில் முட்டாள்தனமான காரியம். ஆனால், அவர் துணிகிறார். அதனால் வரக்கூடிய எந்த துன்பங்களையும் ஏற்றுக்கொள்ள தயாராகிறார். உண்மை என்று தான் உணர்ந்ததை, உறுதியாக, உரக்க, இந்த உலகத்திற்கு சொல்கிறார்.

நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் இத்தகைய உறுதியை நாம் வாழ்ந்து காட்ட முடியுமா? அதனால் வரக்கூடிய விளைவுகளை சந்திக்க தயாராக இருக்கிறோமா? உண்மைக்காக உழைக்கிறவர்களுக்கு துணையாகவாவது நம்மால் நிற்க முடியுமா? சிந்திப்போம், செயல்படுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------

இறை அறிவில் வளர்வோம்

”உள்ளவருக்குக்கொடுக்கப்படும்” என்கிற வார்த்தைகள் நமது சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கிறது. இதை ”அறிவு” என்கிற கொடையோடு பொருத்திப்பார்க்கலாம். நாம் எந்த அளவுக்குக் கற்றுக்கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நமது அறிவு வளரும். நாம் எடுக்கக்கூடிய முயற்சிதான், நம்மை ஒரு பாடத்தில் சிறந்து விளங்குவதற்கு உறுதுணையாக இருக்கும். எந்த அடிப்படை ஞானமும் இல்லாமல் ஒன்றில் நாம் சிறந்த புலமை பெற முடியாது.

கடவுளைப்பற்றிய நமது புரிதலும் இதுதான். எந்த அளவுக்கு கடவுளைப்பற்றிய அறிவில் நாம் வளர வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் கடவுளைப்பற்றி தெரிந்து கொள்ளலாம். கடவுளைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், கடவுளைப்பற்றி நாம் எந்தக்கருத்தையும் சொல்ல முடியாது. செபத்தின் பலன் ஒருவருக்குக் கிடைக்க வேண்டுமென்றால், அவர் செபிக்க வேண்டும். ஒவ்வொருநாளும் செபிக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் செபிக்க வேண்டும். அப்படி செபிக்கிறபோதுதான், செபத்தின் மேன்மையை நாம் அறிய முடியும். செபத்தின் ஆழத்தை நாம் அறிந்துகொள்ள முடியும்.

கடவுளைப்பற்றி அறிவில் நாம் தினமும் வளர, கடவுளைப்பற்றி அறிய அதிகமான முயற்சிகள் எடுக்க வேண்டும். கடவுளைப்பற்றி அறிய நாம் எடுக்கக்கூடிய முயற்சிகள் தான் நாம் கடவுள் அறிவில் வளர துணைசெய்யும். அத்தகைய ஒரு முயற்சியை நாம் எடுப்போம். இறையருளில், இறையறிவில் வளர்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

பெற்ற விசுவாசத்தைப் பேணிக்காப்பது நமது கடமை

தொடக்கத்திருச்சபையில் கிறிஸ்தவம் என்கிற அடையாளம் பெருமையை அல்ல, மாறாக, மரணத்தைக்கொடுப்பதாக இருந்தது என்றால் அது மிகையல்ல. அது உரோமையர்களின் ஆட்சி நடந்த காலம். அவர்களின் பேரரசு உலகின் எல்லா மூலைகளிலும் பரவியிருந்தது. தாங்கள் அரசாண்ட பகுதிகளை ஒருங்கிணைப்பதற்காக அரசர் உருவ வழிபாடு (Emperor Worship) வைத்திருந்தார்கள். அவருடைய உருவச்சிலைகள் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன. ஆண்டின் குறிப்பிட்ட நாளில் ஒவ்வொருவரும் அங்கு நிறுவப்பட்டிருக்கிற சிலைகளுக்கு பலியும், ஆராதனையும் செலுத்த வேண்டும். செலுத்தியவர்களுக்கு அதற்கான சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டன.

ஆனால், கிறிஸ்தவர்கள் அரசரின் சிலைக்கு வணக்கம் செலுத்தி கிறிஸ்துவை மறுதலிப்பதைவிட, தங்கள் உயிரை விடத்தயாரானார்கள். ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் விசுவாசத்தைக்காப்பதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தனர். தங்களின் உயிரைக்காப்பாற்றிக்கொள்வதற்காக, வெகு எளிதாக, பாசாங்காக அவர்கள் வணக்கமும், பலியும் செலுத்தியிருக்கலாம். மறைவாக கிறிஸ்தவ வாழ்வை மேற்கொண்டிருக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட கோழைத்தனமான வாழ்வுக்கு அவர்கள் தயார் இல்லை. உயிரே போனாலும் பரவாயில்லை, பெற்றுக்கொண்ட விசுவாசத்திற்கு உண்மையாக இருப்போம் என்ற எண்ணத்தில் வாழ்ந்தனர். ‘விளக்கு’ என்கிற விசுவாசத்தைக்கொண்டிருப்பது மறைவாக வைத்திருப்பதற்கு அல்ல, மாறாக, மற்றவர்களுக்கு ஒளிதர என்று மாற்கு நற்செய்தியாளர் கூறுவது இந்த வரலாற்றுப்பிண்ணனியை அடிப்படையாக வைத்துதான்.

இப்படிப்பட்ட வீரமும், தீரமும் நிறைந்த நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற விசுவாசத்தை, சாதாரண காரியங்களுக்காக விட்டுவிட்டு, பிரிவினைச்சபைகளில் சேர்வதும், கத்தோலிக்க மதத்தை இகழ்ந்துரைப்பதும் திருச்சபையையும் அதனை வழிநடத்தும் தலைவர்களையும் மோசமான வாhத்தைகளால் மொட்டைக்கடிதங்களால் வசைபாடுவதும் இன்றைக்கு நடக்கிற அன்றாட நிகழ்வுகள். அவற்றிலிருந்து விடுதலை பெறுவோம். பெற்ற விசுவாசத்தைப்பேணிக்காப்போம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

விளக்கு எதற்காக ?

இன்று ஆயர்களான புனித திமொத்தேயு, தீத்து ஆகியோரின் விழாவைக் கொண்டாடுகிறோம். தொடக்கத் திருச்சபையின் ஆயர்கள் இவர்கள். இவர்களுக்குப் பவுலடியார் எழுதிய மூன்று திருமடல்களும் தொடக்கத் திருச்சபை எவ்வாறு இயங்கியது, ஆயர்கள், மூப்பர்கள், இறைமக்கள் என்னும் படிமுறை அப்போதே எவ்வாறு செயல்பட்டது என்னும் தகவல்களைத் தருகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ, கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா?" எனக் கேட்கிறார். விளக்கு விளக்குத் தண்டின்மீது வைக்கப்பட்டு, ஒளி தரவேண்டும். அதனால், நமது பணிகள் இருளையும் பொருட்படுத்தாது தொடரவேண்டும் என்பதே விளக்கைக் கொண்டுவருவதன் நோக்கமாகும்.

திருச்சபையின் தலைமைப் பொறுப்புகளும் அவ்வாறே விளக்குகள்போலவே. ஆயர்கள், குருக்கள், பொதுநிலைத் தலைவர்கள் தங்கள் பொறுப்புகளை, திறமைகளை மரக்காலின்கீழோ, கட்டிலின்கீழோ வைக்காமல், அதாவது எப்பணியும் செய்யாது சோம்பியிராமல், விளக்குத் தண்டின்மீது அனைவரும் காணும்படியாகப் பணியாற்றவேண்டும். அப்போதுதான், அதைப் பார்க்கின்ற பிறரும் பணியாற்றுவர், பிறருக்கு அது எடுத்துக்காட்டாகவும் அமையும்.

தொடக்கத் திருச்சபையின் ஆற்றல்மிகு ஆயர்கள் திமொத்தேயு, தீத்து போலவே, இன்றைய தலைவர்களும் தங்கள் பணிகளை அனைவரும் கண்டு பின்பற்றும் வண்ணம் ஆற்ற மன்றாடுவோம்.

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, ஆயர்களான திமொத்தேயு, தீத்து என்னும் புனிதர்களுக்காக இன்று உம்மைப் போற்றுகிறோம். நாங்களும் அவர்களைப் போலப் பிறரை ஊக்குவிக்கும் வண்ணம் பணிபுரிய அருள்தாரும். உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-பணி. குமார்ராஜா

 

இணையதள உறவுகளே

சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான்.ஆண்டவரின் வார்த்தைக்கு எதிரான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும்போதும், பிறருக்கு எடுத்துச்சொல்லும்போதும் சாத்தான்போல வாழ்வுதரும் வார்த்தை என்னும் விதையை அழித்து விடுகிறோம்.

இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள்.ஒரு கஷ்டம், இழப்பு, துன்பம், ஏமாற்றம் வந்தால், கடவுளை குறை சொல்லி, கோயிலை மறந்து, இயேசுவோடு தொடர்பினை துண்டித்து, வாழ்வுதரும் வார்த்தை என்னும் விதையை வளர விடாமல் அழித்து விடுகிறோம்.

உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கி விடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்.ஆமாம். பணம் சம்பாதிக்க எல்லா தீய வழிகள், தவறான சுகமான வாழ்வைத்தேடும் முயற்சிகள் இவற்றால் வாழ்வுதரும் வார்த்தை என்னும் விதையை அழித்து விடுகிறோம்.

அதை ஏற்றுக் கொண்டு பயன் அளிப்பார்கள். வார்தையை உள்ளத்தில் ஏற்று, ஆழ அடி மனிதில் பதித்து, அதை சிந்தித்து தியானித்து வருவோர், அன்னை மரியாபோல பேறுபெற்றோராய் எல்லாச் செல்வங்களோடு சீறும் சிறப்புமாய் வாழ்வர்.

-ஜோசப் லீயோன்

 

கூடுதலாகக் கொடுக்கப்படும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும் என்கிறார் ஆண்டவர் இயேசு. அத்துடன் இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும் என்றும் சொல்கிறார். நியூட்டனின் மூன்றாம் விதி சொல்கிறது எந்த ஒரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்று. இயேசுவின் பொன்விதி சொல்கிறது எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதைவிடக் கூடுதலாகக் கொடுக்கப்படும். இதுதான் இறைநீதி என்பது. இதுதான் இறைவனின் பேரன்பு என்பது. நாம் எவ்வளவு கொடுக்கிறோமோ, அவ்வளவையும் நமக்குத் தந்து, இன்னும் கூடுதலாகவும் தர முன்வருகிறார்.  எனவே, நமது செல்வத்தை, திறமைகளை, ஆற்றல்களை, நேரத்தைப் பிறருக்காக, இறைவனுக்காக செலவழிக்க முன்வருவோம். அப்போது, நாம் செலவழித்ததைவிடக் கூடுதலாக இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்வோம். இந்த நம்பிக்கையுடன் இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

மன்றாடுவோம்: பேரிரக்கமும், பேரன்பும் உடையவரான ஆண்டவரே, உமது நீதிக்காக, அன்புக்காக உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் உமக்கும், பிறருக்கும் தருவதைவிடக் கூடுதலாக எங்களை ஆசிர்வதிப்பவரே, உமக்கு நன்றி. இதனால், நாங்கள் இன்னும் அதிக ஆர்வத்துடன் பகிர்ந்துகொள்ள முன்வரும் தாராள மனதை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

 

''நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ
அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்'' (மாற்கு 4:25)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- பிறருக்கு நன்மை செய்தால் நமக்கும் பிறர் நன்மை செய்வர் என்னும் தத்துவம் பெரும்பாலும் உண்மையாக இருக்கலாம். ஆனால் சில வேளைகளில் சில மனிதர்கள் இதைப் பொய்யாக்கிவிடுகிறார்கள். ஏனென்றால், நன்மை செய்கின்ற மனிதருக்கும் தீமையைக் கைம்மாறாக அளிக்கும் அவல நிலை நம் சமுதாயத்தில் தொடர்ந்து நிலவுகிறது. இயேசு அளித்த போதனையில் இரு கருத்துக்கள் உள்ளன: முதலில், நாம் பிறருக்கு எப்போதுமே நன்மை செய்ய வேண்டும் என இயேசு வலியுறுத்துகிறார். நம் வாழ்வு விளக்கைப் போல ஒளிவீச வேண்டும்; யாவருக்கும் தெரியும் விதத்தில் விளங்க வேண்டும் (காண்க: மாற் 3:21). இவ்வாறு பிறருக்கு ஒளியாக அமைகின்ற வாழ்க்கையை அணைத்துப்போட நினைப்பவர்கள் உண்டு. இயேசுவுக்கு இதுதான் நிகழ்ந்தது. உலகுக்கு ஒளியாக வந்த அவரை இருள் ஏற்றுக்கொள்ளவில்லை (காண்க: யோவா 1:9-10). நன்மை செய்வோருக்குத் தீமையே பரிசாகக் கிடைப்பதும் உண்டு. இரண்டாவதாக, பிறருக்கு நாம் தீங்கு செய்தால் அதன் உடனடி விளைவு நம்மைப் பாதிக்காததுபோலத் தோன்றினாலும் கடவுளின் தீர்ப்பு ஒருநாள் நம்மை வந்தடையும்.

-- எனவே, எப்போதும் எவ்விடத்திலும் நன்மை செய்வதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும் என இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார். நன்மை செய்வோர் கடவுளின் பணியைத் தொடர்கின்றனர். மாறாக, தீங்கு செய்வோர் கடவுளின் செயலுக்குத் தடைபோட முனைகிறார்கள். அத்தடைகளைத் தாண்டி தீமையிலிருந்தும் நன்மை விளைவிக்கும் திறனும் கடவுளுக்கு உண்டு. நாம் அளக்கும் அளவை கடவுளின் அளவையாக இருக்க வேண்டும். அப்போது நம் வழியாகக் கடவுளின் செயல் உலகில் வல்லமையோடு தோன்றும்.

மன்றாட்டு
இறைவா, நன்மை செய்யும் ஆற்றலை எங்களுக்கு அளிப்பவர் நீரே என உணர்ந்து வாழ அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-----------------------------

"விளக்கு ரூhநடடip;.. .. எதற்காக?"

இயேசுவின் அன்புக்குரியவரே!

விளக்குகள் வீட்டின் இருளையும் வீதியின் இருளையும் அகற்றப் பயன்படுகிறது. இயேசு இங்கே குறிப்பிடும் விளக்குகள் உயிருள்ள மனித விளக்குகள். இறை அருள் பெற்று ஒளிரும் கிறிஸ்தவ விளக்குகள். மனிதனின் உள்ளத்துள்ளும் மனித சமுதாய வாழ்கையிலும் படர்ந்திருக்கும் அக இருளை அகற்றும் ஒளி உமிளும் விளக்குகள். "என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!"(தி,பா 119:105)

இயேசுவின் சீடர்கள் நாம், அவரிடமிருந்து பெற்ற ஒளியைத் தாங்கும் எரியும் விளக்குகளாக இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். எரிந்து, சுடர்விட்டு பிரகாசித்து, பலருக்கும் ஒளிகொடுத்து, பலரை உண்மையான நிறைவான வாழ்வுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது அவரின் ஆசை.

நீ எரியும் விளக்கா? அப்படியாயின் எத்தகைய எரியும் விளக்கு? சாதாரண மின்மினியா? வீட்டு விளக்கா? பலருக்கும் பயன்படும் தெரு விளக்கா? திசை மாறியோருக்குப் பயன்படும் கலங்கரை விளக்கா? என்ன நிறம், பச்சை, சிவப்பு, மஞ்சள்.

எரியும் விளக்காக, தண்டின்மீதுள்ள விளக்காக வாழ்வோம். இயேசு மகிழ்வார். வாழ்த்துக்கள். ஆசீர்;.

:- ஜோசப் லியோன்