முதல் வாசகம்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 4-7,11-15

சகோதரர் சகோதரிகளே, பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை. தம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்: ``பிள்ளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும்போது தளர்ந்து போகாதே. தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.'' திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ? இவ்வாறு திருத்தப்படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாய் இராமல், துயரத்துக்குரியதாகவே தோன்றும். ஆனால் பின்னர், இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும் நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர். எனவே, ``தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்.'' அப்போதுதான் ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும். அனைவருடனும் அமைதியாய் இருக்க முயலுங்கள்; தூய்மையை நாடுங்கள். தூய்மையின்றி எவரும் ஆண்டவரைக் காணமாட்டார். உங்களுள் எவரும் கடவுளின் அருளை இழந்துவிடாமலிருக்கப் பார்த்துக்கொள்ளுங்கள். கசப்பான நச்சுவேர் எதுவும் உங்களுக்குள் முளைத்து, தொல்லை கொடுக்காதபடியும் அதனால் பலர் கெட்டுப் போகாதபடியும் பார்த்துக்கொள்ளுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 13-14. 17-18

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சுவோர் மீது அவரது பேரன்பு நிலைத்திருக்கும்.

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி

13 தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார்.
14 அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவில் உள்ளது. -பல்லவி

17 ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்;
அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீது இருக்கும்.
18 அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து
அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

மாற்கு 6:01-06

பொதுக்காலம், வாரம் 4 புதன்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6

அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிலிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், ``இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?'' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், ``சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

மெத்தனமற்றவர்களாய் ...

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியில் கே.எல். ராகுல் என்ற வீரரை களமிறக்க யோசித்தார்கள். மெத்தனமான வார்த்தைகளால் வசம்பாடி அனுமதித்தனர். அந்த போட்டி அவரால்தான் வெற்றி பெற்றது. ஒரு நடிகர் அரசியலிலே குதிக்கின்றார். அவருடைய குறைகளை பலர் வெளிச்சமிட்டுக் காட்டினார்கள். எனவே அவர்தன் தகுதியை இழந்தார். பலரும் மெத்தனமாக பேசினார்கள். ஆனால் அவரது இறப்பிற்கு இந்த தமிழக மண் மக்கள் முழுவதும் அழுதார்கள். ஆழ்துளை கிணறுகள் அங்கும், இங்குமாய் மெத்தனத்தோடு காணப்பட்டது. ஆனால் அதே ஆழ்துளை ஒரு குழந்தையின் உயிரை வாங்கியதன் வழி அதற்கு முடிவு எடுக்கப்படுகிறது.

இத்தகைய ஒரு நிலைமைதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவுக்கு நிகழ்கின்றன. தூய ஆவியால் கருவுற்றவர், முப்பது ஆண்டுகள் தாயின் பாதுகாப்பில் பராமரிக்கப்பட்டவர். உரோமை பேரரசை எதிர்த்தவர், இயலாதவர்களை இயலச் செய்தவர். இவ்வாறு பல நல்ல திட்டங்களை தீட்டியபோதும்கூட, சொந்த நபர்கள் இயேசுவை மெத்தனமாக பார்க்க ஆரம்பிக்கின்றனர். மோசே இஸ்ரயேல் மக்களை விடுவிக்கும்போது அவர்கள் மெத்தனமாகத்தான் பார்த்தார்கள். ஆனால் பாறையிலிருந்து தண்ணீர் பொங்கும்போதுதான் உணர்கின்றார்கள். இத்தகைய மெத்தனமான எண்ணம்தான் இயேசுவால் அவர் சொந்த ஊரில் அதிசயங்களை செய்ய முடியவில்லை.

நாம் எப்படிப்பட்ட மனநிலைகொண்டு வாழ்கின்றோம். அறிந்தவர்களை மெத்தன சிந்தனையோடு பார்க்கின்றோமா (அ) மதிப்பளிக்கின்றோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

======================

01.02.2023 – மாற்கு 6: 1 - 6
ஏற்பா? நிராகரிப்பா?

இந்த சமுதாயமானது ஏற்றுக் கொள்ளக்கூடிய சமுதாயம் அல்ல. மாறாக நிராகரிக்கின்ற சமுதாயம். ஏனென்றால் தாயின் பிடியிலிருந்து தவறி விழுகின்ற குழந்தை குட்டியை மீண்டும் ஏற்றுக்கொள்வதில்லை. இழந்த கோதுமை கனிகளை கதிர் மீண்டும் ஏற்றுக்கொள்வதில்லை. இவ்வாறு எல்லா இடங்களிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பாங்கு இல்லை. இவை இயற்கையாகவே நடைபெறுகின்ற ஒன்று. மனித வாழ்விலும் இத்தகைய நிராகரிப்பு பழக்கம் அதிகமாக இருக்கிறது. 13 நபர்கள் இந்த முத்து நகரை காப்பாற்ற முற்பட்டார்கள். ஆனால் அவர்களை இந்த அரசாங்கம் நிராகரித்தது, ஸ்டொ்லைட் எனும் அழிவு நிறுவனத்தால். நாங்கள் உற்பத்தி செய்து தான் உண்போம் என்று போராடிய விவசாயம் பெருமக்களை நிராகரித்தது, இந்த அரசியல் ஆசான்கள். இது தொடர்கிறது.

இயேசுவின் பணிவாழ்விலும் இத்தகைய நிராகரிப்பு இருப்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காண்கிறோம். இயேசுவின் பணிவாழ்வை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று கலிலேயப் பணி, இங்கு தான் இன்றைய நாளில் தன் சொந்த இனத்தினரால் நிராகரிக்கப்படுகின்றார். மற்றொன்று எருசலேம் பணி, அதாவது சமாரியர்கள் வாழக்கூடிய பகுதி. தொழுகை கூடத்தில் கற்பிக்கின்றார். கேட்டவர்கள் வியக்கின்றார்கள். இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு பிறந்தார் என்ற பேச்சு நாசரேத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பரவியது. அதனால் தான் அதனை கேலி செய்யும் விதமாக (யோசேப்பின் மகன்) என்று சொல்லாமல் மரியாவின் மகன் என அழைக்கின்றார். மேலும் தச்சன் என்று கூறி இயேசுவின் எளிமையான பிறப்பை சுட்டிக்காட்டி ஏற்க மறுக்கின்றனர். இயேசுவின் எளிய பின்புலம் கண்டு இரங்காமல், இடறல்படுகின்றனர். அவர்களின் எதிர்ப்பும் நிராகரிப்பும் எந்த அளவிற்கு என்றால், இயேசுவால் வேறு வல்ல செயல்கள் அங்கு செய்ய முடியவில்லை. அதனால் தான் ஏச்சும் பேச்சும் குருக்கள் வாழ்வில் அடிப்படையானது என்பார்கள்.

நான் எல்லோரையும் ஏற்றுக்கொள்ள முயற்சி எடுக்கிறேனா? பல நேரங்களில் நம்முடைய முற்சார்பு எண்ணம் நம் அறிவை மூடிக்கொள்கிறது. எனவே முற்சார்பு நீக்கி அனைவரையும் ஏற்றுக்கொள்ள வரம் வேண்டி மன்றாடுவோம்.

- அருட்பணி. பிரதாப்

=======================

4ம் வாரம் புதன்
போற்றுவார் போற்றட்டும்: தூற்றுவார் தூற்றட்டும்

இறை மனிதர்கள் மட்டுமல்லாது கிறித்தவ மதிப்பிடுகளின் படி வாழ்ந்தாலே நமக்கு நல்லதும் கிடைக்கும் கெட்டதும் நிகழும், நம் கிறித்தவ வாழ்வில் இயேசுவின் வார்த்தைகளை கடைப்பிடித்து வாழும் போது இன்பம் ஒருபுறம் வந்;தாலும் துன்பமும் மறுபுறம் வரும். சாதனைகள் பல நம் வாழ்வில் நடந்தாலும், மறுபுறம் சோதனைகள் பலவும் அரங்கேறும். ஆனாலும் இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசுவினைப் போல தோல்விகளையும் வெற்றிகளையும், புகழ்ச்சிகளையும் இகழ்ச்சிகளையும் ஒரே போல் எடுத்துக்கொண்டு நாம் அடுத்த பணியினை நோக்கியும், தேவையில் இருப்பவர்களை நோக்கியும் கடந்து செல்ல வேண்டும்.

சொந்த ஊரினைத் தவிர மற்ற அனைவரும் அவரைக் கடவுளின் மகனாகப் பார்த்தார்கள் ஆனால் தன் சொந்தகாரர்கள் அவரை ஒரு மனிதராக்கூடப் பொருட்படுத்தவில்லை. இதன் மூலம் நமக்கு இன்றைய பாடம் என்னவென்றால் கிறித்தவ வாழ்வு என்பது எதிரும் புதிரும், இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்க்கை. இரு துருவங்களையும் சம நிலையுடன் சந்தித்து எதிர்கொள்ள வேண்;டும்.

திருத்தொண்டர். வளன்அரசு

திருப்பாடல் 103: 1 – 2, 13 – 14, 17 – 18
”ஆண்டவருடைய கனிவான செயல்களை மறவாதே!”

ஆண்டவருடைய கனிவான செயல்கள் எவை? ஆண்டவர் நம் குற்றங்களை மன்னிக்கின்றார். நம் நோய்களை குணமாக்குகின்றார். நம் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார். மொத்தத்தில் நம் வாழ்நாளை அவர் நலன்களால் நிறைவுறச் செய்கிறார். எனவே, நாம் ஆண்டவரையும், அவர் நமக்குச் செய்திருக்கிற உதவிகளையும் மறக்கக்கூடாது. இந்த செயல்களை நாம் மறக்காமல், ஆண்டவர்க்கு நன்றியுணர்வோடும், நம்பிக்கை உணர்வோடும் வாழுகிறபோது மட்டும் தான், இந்த செயல்களை நாம் தொடர்ந்து நமது வாழ்க்கையில் பெற முடியும். அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு உணர்த்துகிறது.

இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சொந்த ஊரில், வல்ல செயல்கள் செய்ய முடியாத நிலையில் இருப்பதைப் பார்க்கிறோம். தீய ஆவிகளைத் துணிவோடு எதிர்த்து அடக்கியவர், காற்றையும், புயலையும் உரிமையோடு கடிந்து கொண்டவர், நோயாளிகளை ஏராளமான எண்ணிக்கையில் குணப்படுத்தியவர், இங்கே தன்னுடைய சொந்த ஊரில் சுகம் கொடுக்க முடியாமல் இருப்பதைப்பார்க்கிறோம். அதற்கு காரணம், அவர்களிடத்தில் நம்பிக்கை இல்லை, நன்றியுணர்வும் இல்லை. இயேசு செய்திருக்கிற வல்ல செயல்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இயேசு செய்வார் என்கிற நம்பிக்கையும் அவர்களிடத்தில் இல்லை. இதனால், இயேசுவால் வல்ல செயல்களைச் செய்ய முடியவில்லை.

நமது வாழ்வில் ஆண்டவருடைய ஆசீர்வாதம் நமக்கு நிறைவாக கிடைக்க வேண்டுமென்றால், கடவுள் நமக்குச் செய்திருக்கிற செயல்களை நாம் நன்றியுணர்வோடு நினைத்துப்பார்க்க வேண்டும். தேவைக்கு மட்டும் கடவுளை நாடக்கூடியவர்களாக வாழக்கூடாது. நம்பிக்கை உணர்வும் கொண்டு, அவரிடத்தில் நாம் வருகிறபோது, நிச்சயம் நம்மால் ஆசீரைப் பெற்றுக்கொள்ள முடியும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

சிந்திக்கத் தெரிந்தவர்களாக…

ஒரு துளி விஷம், பால் முழுவதையும் விஷமாக்கிவிடுகிறது. அதுபோலத்தான் கெட்ட எண்ணங்களும், கெட்ட குணங்களும். இயேசு தனது ஊருக்கு வந்து, ஆண்டவரின் வார்த்தையை அறிவிக்க வருகிறார். அங்கே ஏற்கெனவே, அவரைப்பற்றிய தவறான எண்ணத்தை ஒருசிலர் பரப்பிவருகின்றனர். சற்று ஆழமாகப் பார்த்தால், முதலில் மக்கள் வியப்படைகிறார்கள். அவரது போதிக்கும் ஆற்றலைப் பார்த்து, அதிசயிக்கிறார்கள். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, இவ்வளவு ஆற்றலோடு நற்செய்தியைப் பறைசாற்றும் இயேசுவிடத்தில், அவர்களுக்கு உண்மையிலே அதிகமான ஈர்ப்பு. ஆனால், அவர்கள் உள்ளத்தில் துளி விஷத்தை, கெட்டவர்கள் ஊற்றிவிடுகிறார்கள். அது அப்படியே கடைசிவரிகளில் பிரதிபலிக்கிறது.

எது நல்லது, எது கெட்டது என மக்களே, சிந்தித்து, முடிவெடுக்க ஆற்றல் இல்லாதவரை, உண்மைக்கெதிரான இந்த போராட்டங்கள் நடந்து கொண்டேயிருக்கும். ஏமாற்றுகிறவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். உண்மையை நாம் உரைப்பதைவிட, உண்மையை உணரும் ஆற்றலை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இன்றைக்கு அரசியல்வாதிகள் இலவசங்கள் என்ற பெயரில் ஆயிரம் ரூபாய்க்கு கூட தேராத பொருட்களைக் கொடுத்து, பேருந்து கட்டணத்தையும், அத்தியாவசியப்பொருட்களையும் விலையேற்றி, ஏழைமக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள். ஆனால், மக்கள் இன்னும் இதனை உணராத நிலையில் இருக்கிறார்கள். அவர்களின் உணர்ச்சி வார்த்தைகளில், மாயவலைகளில் சிக்கிவிடுகிறார்கள். இந்த மாய வலையை அறுத்தெறிய வேண்டும். கட்சி அரசியலில் சேராது, நேர்மையானவர்களுக்கு, நல்லவர்களுக்கு நாம் வாக்களிக்க முன்வர வேண்டும். தலையாட்டிப் பொம்மைகளையும், ஊமைக் கோமாளிகளையும், எலும்பில்லாதவர்களையும் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் அரசியல் அறிவும், அனுபவமும் பெற வேண்டும்.

இன்றைக்கு மக்களின் சிந்திக்கத் தெரியாத இந்த நிலையைப் பயன்படுத்தி, ஆளாளுக்கு ஏழை, எளிய மக்களை சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள். தங்களது உரிமைகளை உணராது இருக்கிறார்கள். பிச்சைக்காரர்களாக கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். அதை உடைத்து, ஏழை, எளிய மக்களை, சிந்திக்கத் தெரிந்தவர்களாக மாற்ற உறுதியேற்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கடவுள் நம்பிக்கை

இயேசு தனது சொந்த ஊருக்கு வந்தபோது, அவரால் வல்ல செயல் எதையும் செய்ய முடியவில்லை. அதற்கான காரணம், இயேசுவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அடிப்படையில் இயேசுவிடத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இயேசு ஒரு சாதாரண தச்சருடைய மகன். இவரைப்பற்றித் தெரியாதா? இவரால் எப்படி வல்ல செயல்கள் செய்ய முடியும்? நம்மோடு வாழ்ந்தவர், சாதாரண தச்சுத்தொழிலைச் செய்தவர், ஏழைப்பிண்ணனியிலிருந்து வந்தவர். இவரிடத்திலே எப்படி கடவுளின் அருள் அதிகமாக இருக்க முடியும்? இவரிடத்திலிருந்து நான் என்ன பெரிதாகப் பெற்றுக்கொள்ள முடியும்? என்கிற அந்த எண்ணம் தான், புதுமைகள் செய்வதற்கு இயேசுவால் முடியாமல் போனதற்கான காரணம்.

முடியும் என்ற நம்பிக்கை இல்லையென்றால், நிச்சயமாக செய்யக்கூடிய காரியம் முடியாமல் தான் போகும். அடிப்படையில் நம்பிக்கை இருந்தால் தான் எதையும் செய்ய முடியும் என்பதை இது காட்டுவதாக அமைகிறது. முடியும் என்ற நம்பிக்கை கடவுள் மேல் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை அடிப்படையாக வைத்து அமைகிறது. எந்த ஒரு மனிதர் கடவுள் பக்தியோடு இருக்கிறாரோ, கடவுள் நம்பிக்கையோடு வாழ்கிறாரோ, அவர், தனது வாழ்வில் எல்லாம் முடியும் என்று நம்புகிறார். கடவுளின் வல்ல செயல்களில் முழுநம்பிக்கை வைத்து, தன்னையே அர்ப்பணிக்கிறார்.

நமது வாழ்வில் நம்மால் எதையும் செய்ய முடியும் என்று முதலில் நாம் முழுமையாக நம்ப வேண்டும். அதற்கு அடிப்படையில் கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த கடவுள் நம்பிக்கை இருக்கிறபோது, நம்மால் முடியாத காரியங்கள் ஒன்றும் இருக்க முடியாது. அத்தகைய கடவுள் நம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நம்பிக்கையின்மையை அகற்றுவோம்

இயேசு அதிகமாக புதுமைகளை அங்கே செய்ய முடியவில்லை என்று நாம் பார்க்கிறோம். அதற்கான காரணம்: நம்பிக்கையின்மை. இயேசு கடவுளின் மகன். இயேசுவிடத்தில் கடவுளின் அருளும், ஆற்றலும் அதிகமாக இருந்தது. அவரால் அனைத்தையும் செய்ய முடியும். இருந்தும் மக்களின் நம்பிக்கையின்மையினால், அவரால் அதிகமான புதுமை செய்ய முடியவில்லை என்பது, சற்று ஆச்சரியமானதாக இருக்கிறது. இயேசுவால் மக்களின் நம்பிக்கை இல்லாமல் புதுமை செய்ய முடியாதா? இயேசுவால் முடியாதது என்று ஏதேனும் இருக்கிறதா? இந்தக் கேள்விகள் நம் உள்ளத்தில் எழக்கூடியவை.

இங்கே இயேசுவின் ஆற்றலையோ, வல்லமையையோ நற்செய்தியாளர் குறைத்து மதிப்பிடவில்லை. மாறாக, நம்பிக்கையின்மை எந்த அளவுக்கு கடவுளின் வல்லமையைப் பெறுவதற்குத் தடையாக இருக்கிறது என்பதையும், நமது நம்பிக்கையும் இறையருளைப் பெறுவதற்கு எவ்வளவுக்கு உந்துசக்தியாய் இருக்கிறது என்பதையும் இந்தப் பகுதி நமக்கு எடுத்துக்காட்டுகிறது. எந்த அளவுக்கு நாம் நம்பிக்கையோடு இருக்கிறோமோ, அந்த அளவுக்கு நமது நம்பிக்கையின்மை நம்மை விட்டு அகன்றுவிடும். நமது நம்பிக்கையினால் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த செய்தியைத்தான் நற்செய்தியாளர் வலியுறுத்துகிறார்.

நமது வாழ்வில் நம்பிக்கையின்மையை அகற்றுவதற்கு முயற்சிகள் எடுப்போம். இறைவனிடமிருந்து, அருளையும், வல்லமையையும் இழப்பதற்கு காரணமாக இருக்கும் நம்பிக்கையின்மையை வேரோடு அகற்றுவோம். இறைநம்பிக்கையில் நாளும் வளர்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

முன்சார்பு எண்ணங்களைக் களைவோம்

இயேசு ஒரு புதிய மனிதராக தன்னுடைய சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். போதகர் என்ற அடையாளத்தோடு, அவருடைய சீடர்களோடு தொழுகைக்கூடத்தில் போதிக்கிறார். பொதுவாக, இயேசு வாழ்ந்த காலத்தில் போதகர்கள் எனப்பட்டவர்கள் தங்களுடைய சீடர்களோடு ஊர், ஊராகச்சென்று, போதிப்பது வழக்கமாக இருந்தது. போதகர்களை மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர். போதகர்களுக்கு மக்கள் நடுவில் மதிப்பும், மரியாதையும் இருந்தது. நோய்கள் குணமாக போதகர்களை செபிக்க சொல்வதும், அவர்களின் போதனைகளைக்கேட்பதற்கு செல்வதும் மக்களுக்கு பழக்கமானதாக இருந்தது.

இந்த நற்செய்தியில் இயேசுவின் போதனையைக்கேட்க இயேசுவுடைய நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் அங்கே நிச்சயம் இருந்திருப்பார்கள். இயேசுவைப்பற்றி மக்கள் பேசுவதைக் இதுநாள் வரை கேள்விப்பட்டிருந்தார்கள். இப்போது நேரிடையாக அவரின் போதனையைக் கேட்பதற்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், அவருடைய போதனையைக்கேட்டு வியப்பில் ஆழ்ந்தவர்கள், இயேசுவைப்போற்றுவதற்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளத்தயங்குகிறார்கள். அதற்குக்காரணம் இயேசு நன்றாக போதிக்கவில்லை என்பது அல்ல: மாறாக, அவர்களின் முன்சார்பு எண்ணம். ஏனென்றால், இயேசுவினுடைய போதனையைக்கேட்ட அவருடைய சொந்த ஊர் மக்களும், அவருடையப்போதனையைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தார்கள். ஆனாலும், அவரை ஏற்றுக்கொள்ள தயங்கினார்கள். காரணம், அவர்களுடைய இந்த முன்சார்பு எண்ணம் (Pசநதரனiஉந). ‘இவருடைய குடும்பத்தைப்பற்றி தெரியாதா?’ என்ற முன்சார்பு எண்ணம் தான், இயேசுவின் மீது முழுமையான நம்பிக்கையை வைப்பதற்கு, இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருந்தது.

நாமும் இறையாட்சிக்கு தகுதி பெறுவதற்கு தடையாக இருப்பது இத்தகைய முன்சார்பு எண்ணம் தான். நான் மட்டும் நல்லவன், மற்றவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்ற பரிசேயருடைய முன்சார்பு எண்ணம் நமக்குள்ளும் இருப்பதை நாம் உணர்ந்து அதைக்களைய முற்படுவோம். இறையாட்சிக்கு நம்மையே தகுதியாக்கிக்கொள்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

---------------------------------------

நம்மிடையே ஒர் இறைவாக்கினர்!

இயேசு தம் சொந்த ஊருக்கு வந்து, தொழுகைக்கூடத்தில் கற்பித்தபோது, அவரது ஊரினர் வியப்பில் ஆழ்ந்தனர். அவருடைய பேச்சில் ஞானம் இருந்தது என்பதையும், அவரது செயல்களில் ஆற்றல் இருந்ததையும் அவர்கள் உணர்ந்தார்கள். ஆனாலும், “அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்”. அதற்கான காரணங்கள்:

  1. அவர் ஒரு தச்சர். எளிய தொழிலைச் செய்தவர். மறைநூல் அறிஞரோ, பரிசேயரோ அல்லர். சமயப் பின்புலம் இல்லாதவர்.
  2. அவர் மரியாவின் மகன். ஓர் ஏழைப் பெண்ணின் மகன். அவரும் ஏழை. பண பலம் இல்லாதவர்.
  3. அவரது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தெரிந்தவர்கள். எளிய குடும்பப் பின்னணி. ஆள் பலம் இல்லாதவர்.
  4. அனைவருக்கும் நன்கு அறிமுகமான, உள்ளுர்க்காரர். எனவே, முற்சார்பு எண்ணத்தால் அவரது போதனை எடுபடவில்லை.

எனவே, இயேசு தமது சொந்த ஊரில் ஓர் இறைவாக்கினராக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது இறைவாக்கினர்கள் அனைவருக்கும் நேரும் கதியே என்பதை இயேசுவே “சொந்த ஊரிலும், சுற்றத்திலும், தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” எனச் சொல்லி அறிவிக்கின்றார்.

இன்றைய வாசகங்கள் நம் கண்களைத் திறக்கட்டும். நமது முற்சார்பு எண்ணங்களை அகற்றிவிட்டு, நம்மிடையே நிற்கும் இறைவாக்கினரை அறிந்துகொள்வோம், அவர்கள் தரும் செய்தியை ஏற்றுக்கொள்வோம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் பார்வைக் குறைவை நீக்கி, எங்களுக்குப் புதிய பார்வை தந்தருளும், எங்கள் மத்தியிலே நிற்கும் இறைவாக்கினரை நாங்கள் கண்டுகொள்ள அருள்தாரும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

என்னே ஞானம்... என்னே வல்ல செயல்கள்!

தமது சொந்த ஊரில் ஓய்வுநாளின்போது தொழுகைக்கூடத்தில் இயேசு கற்பித்தபோது, அவருடைய போதனையைக் கேட்ட பலரும் வியப்பில் ஆழ்ந்தனர் என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். அவர்கள் "இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்!" என்று தம் வியப்பை வெளிப்படுத்தினர், பாராட்டினர்.

இந்த வியப்பு மொழிகள் நமக்கு இன்று இரண்டு செய்திகளைத் தருகின்றன:

1. ஞானம் என்பது யாரும் தாமாகச் சம்பாதிக்கும் ஒரு பொருளல்ல. அது இறைவனால் அருளப்பட வேண்டும். தந்தை இறைவன் தமது அன்பு மகன் இயேசுவைத் தூய ஆவி என்னும் கொடையால், ஞானத்தால் நிரப்பியிருந்தார். ஞானம் அவருக்கு அருளப்பட்டிருந்தது. "உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும். அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர்" (யாக் 1: 5) என்னும் அறிவுரையின்படி நாம் ஞானத்தைப் பெற்றுக்கொள்வோமாக.

2. ஞானம் நிறைந்தோர் அதைப் பயன்படுத்தி வல்ல செயல்களை ஆற்றவேண்டும். தாலந்துகளைப் பெற்றவர்கள் அதைப் பயன்படுத்தி, அதிக தாலந்துகளைச் சம்பாதித்ததுபோல, ஞானம் நிறைந்தவர்கள் அதைப் புதைத்து வைக்கக்கூடாது. மாறாக, அந்த ஞானத்தைக் கொண்டு திருச்சபைக்காக, நாம் வாழும் சமூகத்துக்காக வல்ல செயல்களைச் செய்யவேண்டும். "பொதுநன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது" (1 கொரி 12: 7) என்னும் இறைவாக்கிற்கேற்ப, நமது ஞானத்தைப் பொதுநன்மைக்காக வல்ல செயல்கள் நிகழ்த்தப் பயன்படுத்துவோமாக.

மன்றாடுவோம்: முகம் கோணாமல் அனைவருக்கும் வாரி வழங்கும் அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். ஞானம் என்னும் கொடையை எங்களுக்கு நிறைவாகத் தந்தருளும். இதனால் நாங்கள் பொதுநன்மைக்காக வல்ல செயல்கள் புரியும் வலிமையைப் பெற்றுக்கொள்வோமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--பணி. குமார்ராஜா

 

இவர் தச்சர் அல்லவா”!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

மாற்கு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடைக்கம் ஓர் அபூர்வமான செய்தி இது. பிற நற்செய்தியாளர்கள் இயேசு தச்சரின் மகன் என்பதைப் பதிவு செய்திருக்கும்போது, மாற்கு மட்டுமே இயேசுவும் ஒரு தச்சர் என்று எழுதியுள்ளார். இயேசு தன் முப்பதாவது வயதில் பணிவாழ்வைத் தொடங்கும் முன், தன் குடும்பத்தில் ஓர் உழைப்பாளியாக, தன் தந்தையின் தொழிலாகிய தச்சுத் தொழிலையே செய்து வந்தார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். மாற்கு அதனைப் பதிவு செய்துள்ளார். ஆம், இயேசு ஒரு தச்சர், உழைப்பாளி. உழைப்பின் மேன்மையை அனுபவமுறையில் அறிந்தவர்.

இந்தத் தகவல் நம் உள்ளங்களில் பல எண்ணங்களை மலரச் செய்கிறது.
1.
இறைவன் உழைப்பை மேன்மைப்படுத்துகிறார். நாம் உழைக்க வேண்டும். உழைக்காதவர் உண்ணலாகாது.
2. எந்தத் தொழிலும் இழிவானது அல்ல. நேர்மையுடன் செய்யப்படும் எந்தத் தொழிலும் இறைவனுக்கு ஏற்றதே.
3. ஒரு மனிதரை அவர் செய்யும் தொழிலைக் கொண்டு மதிப்பிட்டு, இழிவு படுத்தாமல், அவரது பண்புகள், இயல்புகளுக்காக அவரை மதிக்க வேண்டும்.
4. உழைப்பின் அருமையை உணர்ந்தவர்கள்தான் பிறரின் சுமைகளை உணர முடியும். சுமை சுமந்து சோர்ந்திருப்போர், வாருங்கள் என்று இறைப்பாறுதல் தரமுடியும். உழைப்பவர் மட்டுமே உழைக்கும் மக்களின் உணர்வுகளைப் புரிய முடியும். இன்றைய நாளில் உழைப்பாளிகள் பற்றிய நம் பார்வையை ஆழப்படுத்திக்கொள்வோம்.

மன்றாடுவோம்: உழைப்பின் மாண்பை வெளிப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நீர் ஒரு தச்சராகப் பணி செய்து, உழைப்பவர் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர். நானும் பிறரின் உழைப்பை மதிக்கவும், உடல் உழைப்பில் ஈடுபடுவோர்மீது அக்கறை கொள்ளவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

வாழ்கை அனுபவங்கள் பல

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

ஆண்டவர் இயேசு தனது சொந்த ஊருக்கு வந்தபோது அவருக்குக் கிடைத்த அனுபவத்தை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தருகிறது. அவருடைய போதனையைக் கேட்ட அவருடைய சொந்த ஊரினர் அவரை நம்ப மறுத்தனர். அவரை ஓர் இறைவாக்கினராக ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். இந்த அனுபவம் அவருக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்திருக்க வேண்டும். எனவேதான், இயேசுவே கூறினார்; சொந்த ஊரிலும், சுற்றத்திலும், தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் என்று.

இத்தகைய அனுபவங்கள் சில நேரங்களில் நமக்கும் நடந்திருக்கும். நம்மைச் சுற்றி வாழ்பவர்களே நமது ஆர்வங்களை, கனவுகளை, நம்பிக்கைகளை அங்கீகரிக்க மறுத்தபோது நாமும் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருப்போம். நமது பெற்றோர், உடன் பிறந்தோர் நமது திறமைகளை, ஆற்றல்களை ஏற்றுக்கொள்ளத் தயங்கியபோது நாமும் மிகுந்த வேதனை அனுபவித்திருப்போம்.

ஆனால், இன்று இந்த வாசகம் வழியாக ஆண்டவர் நமக்கு விடுக்கும் அழைப்பே பிறர் நமக்குச் செய்த தவறுகளை, நாம் பிறருக்குச் செய்யக்கூடாது என்பதுதான். எனவே, நமது வீட்டில் நம்மோடு வாழ்பவர்களை இனி நிறைவான பார்வையால் பார்க்கக் கற்றுக்கொள்வோம். அவர்களுக்குரிய அங்கீகாரத்தை, தன் மதிப்பை வழங்க முன் வருவோம். அதுபோல, நம்மோடு பணிபுரிகி;ன்ற, உழைக்கின்ற, படிக்கின்ற நண்பர்கள், தோழியரின் திறமைகளை, ஆற்றல்களை ஊக்கப்படுத்துவோம். அவரவர்க்குரிய தன் மதிப்பை வழங்குவோம்.

மன்றாடுவோம்; அன்பின்; இயேசுவே, நீர் எங்களுக்குக் கொடையாகத் தந்திருக்கிற எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக, உடன் பிறப்புகளுக்காக, உடன் உழைப்பாளர்களுக்காக, நண்பர்கள், தோழியருக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களோடு வாழ்கின்ற, உழைக்கின்ற அவர்களைப் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், மதிக்கவும், ஊக்குவிக்கவும் எங்களுக்கு அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

---------------------------

''இயேசு தமது சொந்த ஊருக்கு வந்தார்...அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல்
கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை.
அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார்'' (மாற்கு 6:1,5-6அ)

சிந்தனை
-- ''யார் இந்த இயேசு?'' என்னும் கேள்வி மாற்கு நற்செய்தியில் மைய இடம் பெறுகிறது. இயேசு தம் சொந்த ஊராகிய நாசரேத்து வந்து, அங்கே ஓய்வுநாளன்று கற்பிக்கத் தொடங்குகிறார். இயேசு யூத முறைப்படி திருச்சட்டம் பயின்றவரல்ல; அக்கால வழக்கப்படி வேறொரு யூத அறிஞரை அணுகி அவரிடம் பாடம் பயின்றவருமல்ல. எனவே, அவர் தொழுகைக் கூடத்தில் கற்பித்தது வழக்கத்துக்கு மாறானது; சட்டத்திற்கு முரணானது. இதை மக்கள் கவனிக்கிறார்கள். ''இவர் தச்சரல்லவா?'' (மாற் 6:3) என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இயேசு தச்சர் என அழைக்கப்படுவது இந்த ஓரிடத்தில் மட்டுமே என்பதையும் நாம் கருதலாம். மேலும் மக்கள் இயேசுவைப் பார்த்து, ''இவர் மரியாவின் மகன்தானே!'' என்று வியப்புறுகின்றனர் (மாற்6:3). வழக்கமாக ஒருவரை அடையாளம் காட்டும்போது அவருடைய தந்தையின் பெயரைக் குறிப்பிட்டு அவருடைய மகன் இன்னார் என்று கூறுவது யூத மரபு. ஆனால் இங்கே இயேசு ''மரியாவின் மகன்'' என அடையாளம் காட்டப்படுகிறார். ஒருவேளை இயேசு மரியாவும் யோசேப்பும் கூடி வாழும் முன்னரே மரியாவின் வயிற்றில் கருவானது இவ்வாறு குறிக்கப்படுகிறதோ? எவ்வாறாயினும், ''யார் இந்த இயேசு?'' என்னும் கேள்வி மக்களின் உள்ளத்தில் எழுந்ததையும் அக்கேள்விக்கு மக்கள் வெவ்வேறு பதில்கள் அளித்ததையும் மாற்கு பதிவு செய்கிறார்.

-- ஆக, இயேசுவின் உறவினரும் சரி, சீடர்களும் சரி, ஊர் மக்களும் சரி, இயேசுவை யார் என அடையாளம் காணத் தவறிவிட்டார்கள். தீய ஆவிகள்தாம் இயேசுவை அடையாளம் கண்டு, அவரை ''உன்னத கடவுளின் மகன்'' (மாற் 5:7) என அழைக்கின்றன. இயேசுவுக்கு மிகவும் நெருக்கமாக நாம் இருக்கின்றோம் என்பதால் மட்டுமே நம்மில் உண்மையான நம்பிக்கை தோன்றிவிடாது. இயேசுவின் குடும்பத்தினரே அவரை அடையாளம் காணத் தவறினார்கள்; அவரை நன்கு அறிந்த ஊர் மக்கள் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை; அவரோடு வழிநடந்து அவருடைய போதனைக்குச் செவிமடுத்த சீடர்கள் கூட அவரை அறிந்திடவில்லை. உள்வட்டத்தில் இருப்போர் பார்வையற்றிருக்க வெளிவட்டத்தில் இருப்போர் தெளிந்த பார்வையோடு இயேசுவை அடையாளம் காண்கிறார்கள். இதிலிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக்கொள்ளலாம். இயேசுவை நாம் உண்மையாகவே அறிந்துள்ளோம் என இறுமாப்புக் கொள்ளாமல் அவரை மேன்மேலும் ஆழமாக அறிந்து அன்புசெய்திட நம் உள்ளத்தைத் திறந்திட வேண்டும். அப்போது நம்மில் நம்பிக்கை வளரும். இறை அறிவும் பளிச்சென ஒளிரும்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனை அறிந்து அன்புசெய்திட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''இயேசு அவர்களிடம், 'சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும்
இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்' என்றார்'' (மாற்கு 6:4)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு தம் சொந்த ஊருக்கு வருகிறார். ஆனால் ஊர்மக்கள் அவரைக் கண்டு, ''இவர் நம்மைப் போல் ஒருவர்தானே. இவரிடத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது'' என எண்ணுகிறார்கள். மண்ணின் மைந்தரிடம் துலங்கிய மாண்புமிகு பண்புகளைக் காணத் தவறிவிடுகிறார்கள் சொந்த ஊர் மக்கள். ஆனால் வேறு ஊர்களைச் சார்ந்த மக்களோ இயேசுவிடம் ஓர் அதிசய சக்தி துலங்குவதை அடையாளம் காண்கிறார்கள். இந்த முரண்பாட்டை மாற்கு தெளிவாக விளக்குகிறார். இயேசு ''புதிய போதனை'' வழங்கினார் (மாற் 1:27). நோய்வாய்ப்பட்டிருந்த மனிதருக்குக் குணம் நல்கினார் (மாற் 1:21-28; 322-30). தீட்டுப்பட்டோர் எனக் கருதப்பட்ட மக்களைத் தொட்டுக் குணமாக்கி, தீட்டு என்பது மனித கற்பனையே என உணர்த்தினார் (மாற் 1:40-45; 51-43). நோயும் சாவும் மனிதரை அடிமைப்படுத்த இயலாது எனக் காட்டும் விதத்தில் மக்களுக்கு உயிரளித்து, அவர்களைக் ''கைதூக்கிவிட்டார்'' (மாற் 1:29-31; 5:21-43). பாவிகள் என முத்திரை குத்தப்பட்டு, சமுதாயத்தால் விலக்கிவைக்கப்பட்ட மக்களை அன்போடு வரவேற்றார் (மாற் 2:13-17). பாவ மன்னிப்பு வழங்கினார் (மாற் 3:22-30). மக்களை அடிமைகளாக்கிய சமய ஒழுங்குகளைத் தகர்த்தெறிந்தார் (மாற் 2:18-28). மனிதரின் நலனுக்கு முதன்மை அளித்தார் (மாற் 3:1-5). குடும்பம் என்னும் சொல்லுக்குப் புதுப்பொருள் வழங்கினார் (மாற் 3:31-35). கதைகள் வழியாகக் கடவுளாட்சி பற்றிய பேருண்மைகளை மக்களுக்குக் கற்பித்தார் (மாற் 4:1-34). மனிதரைச் சிறுமைப்படுத்திய தீய சக்திகளை அடக்கினார் (மாற் 1:25; 4:39; 5:8).

-- இவ்வாறு அதிசய செயல்கள் புரிந்த பிறகும் இயேசுவை அவருடைய ஊர்மக்கள் மதிக்கத் தவறிவிட்டார்கள். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை என முடிவுசெய்துவிட்டார்கள். இவர் என்ன சாதித்துவிட்டார் எனக் கேட்ட அவர்கள் ஒருவேளை மண்ணும் விண்ணும் அதிர்கின்ற விதத்தில் இயேசு அற்புதங்கள் நிகழ்த்தவில்லை என நினைத்தார்களோ! ஞானமே உருவாக வந்த இயேசுவைப் பார்த்து, ''இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?'' என்று கேட்ட தம் ஊர்மக்களுக்கு இயேசு தகுந்த பதில் அளிக்கிறார்: ''சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' (மாற் 6:4). இதிலிருந்து நாம் அறிவது என்ன? கடவுளிடமும் அவரால் அனுப்பப்பட்டு நமக்காகத் தம்மையே கையளித்த இயேசுவிடமும் நாம் நம்பிக்கை கொள்வதற்கு அதிசயங்களும் அற்புதங்களும் மட்டுமே காரணமாக இருப்பதில்லை. இயேசு ஆற்றிய புதுமைகளை எத்தனையோ மக்கள் கண் முன்னே கண்டார்கள். ஆனால் அவர்கள் எல்லாரும் உடனே இயேசுவை நம்பிவிடவில்லை. கடவுளிடத்தில் நம்பிக்கை பிறக்க வேண்டும் என்றால் நாம் நம்மில், நம்மோடு வாழ்ந்து செயலாற்றுகின்ற கடவுளின் குரலைக் கேட்க நம் இதயச் செவிகளைத் திறக்கவேண்டும்; நம் அகக்கண்களை அகல விரிக்கவேண்டும். அப்போதுதான் கடவுள் மட்டில் நாம் நம்பிக்கை கொள்ள இயலும்.

மன்றாட்டு
இறைவா, ஒவ்வொரு நாளும் எங்கள் வாழ்வில் நீர் நிகழ்த்துகின்ற அற்புதங்களை நாங்கள் கண்டுணர்ந்து உள்ளார்ந்த விதத்தில் உம்மை நம்பிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-----------------------

''அவர்கள், 'இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?
இவர் தச்சர் அல்லவா? மரியாவின் மகன்தானே!' என்றார்கள்'' (மாற்கு 6:2-3)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு புரிந்த அரும் செயல்களைக் கண்டும், அவருடைய போதனையின் சிறப்பை உணர்ந்தும் பலர் மிக வியப்புற்றனர். அந்த வியப்பின் வெளிப்பாடு இருவகையில் அமைந்தது. சிலர் இயேசுவைப் பற்றி உயர்ந்த எண்ணம் கொள்ளலாயினர். ஆனால் வேறுசிலரோ இயேசுவிடத்தில் கடவுளின் வல்லமை துலங்கியதைக் காணத் தவறிவிட்டார்கள். இயேசுவை நேரடியாகக் கண்டு, அவரோடு நெருங்கிப் பழகியவர்களே அவரைப் புரிந்துகொள்ளவில்லை. ஒருவிதத்தில் அவர்கள் இயேசுவைப் பற்றி பல தகவல்களைப் பெற்றிருக்கக் கூடும். ஆனால் அவர்களின் அகக்கண்கள் திறந்திருக்கவில்லை. அவர்களுடைய உள்ளத்தின் கதவு மூடியிருந்ததால் அவர்கள் சாதாரண நிலைக்கு மேலாக எழுந்துசெல்ல இயலவில்லை. எனவே, வெளியில் அவர்களுக்கு அதிசயமாகத் தெரிந்தது அவர்களின் உள்ளத்தில் ஆழ்ந்த நம்பிக்கையை எழுப்புகின்ற உந்துதலை அளிக்க இயலவில்லை.

-- இதற்கு நேர் மாறாக, இயேசுவின் போதனையைத் திறந்த மனத்தோடு அணுகிய மக்கள் அவரிடத்தில் கடவுளின் வல்லமையைக் கண்டார்கள். அவர்கள் வெளித்தோற்றத்தை மட்டும் பார்க்காமல் தங்கள் அகக் கண்களால் இயேசுவைப் பார்த்தார்கள். அப்போது கடவுள் இயேசுவிடம் செயல்பட்டதை அவர்களால் அறிய முடிந்தது. நாமும் சில வேளைகளில் நம் வாழ்வில் கடவுளின் செயல்பாட்டை உணரத் தவறிவிடுகிறோம். ஏனென்றால் கடவுள் என்றால் இப்படி இப்படி செயல்பட வேண்டும் என நாம் அவருக்கு வரையறைகளை விதித்துக்கொள்கின்றோம். அவ்வரையறைகளுக்கு அப்பால் செல்ல நம்மால் இயலுவதில்லை. மாறாக, கடவுளின் செயல்பாடு இவ்வாறுதான் இருக்கவேண்டும் என நாமாகவே தீர்மானிக்காமல் அவருடைய கைகளில் நம்மைக் கையளிக்கும்போது அவரை நாம் ஆழமாக அனுபவித்து உணரும் பேறு நமக்குக் கிடைக்கும்.

மன்றாட்டு
இறைவா, வெளித்தோற்றத்தைத் தாண்டி உள் ஆழத்திற்குச் செல்ல எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்