முதல் வாசகம்

தோபித்து நூலிலிருந்து வாசகம் 3: 1-11, 16-17

அந்நாள்களில் தோபித்து ஆகிய நான் மனம் வெதும்பி அழுது புலம்பினேன்; தேம்பியவாறு மன்றாடத் தொடங்கினேன்: �ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர். உம் செயல்களெல்லாம் நேரியவை; உம் வழிகள் அனைத்திலும் இரக்கமும் உண்மையும் விளங்குகின்றன. நீரே உலகின் நடுவர். இப்பொழுது, ஆண்டவரே, என்னை நினைவுகூரும்; என்னைக் கனிவுடன் கண்ணோக்கும். என் பாவங்களுக்காகவும் குற்றங்களுக்காகவும் என் மூதாதையருடைய பாவங்களுக்காகவும் என்னைத் தண்டியாதீர். என் மூதாதையர் உமக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். உம் கட்டளைகளை மீறினார்கள். எனவே நாங்கள் சூறையாடப்பட்டோம், நாடு கடத்தப்பட்டோம், சாவுக்கு ஆளானோம். வேற்று மக்களிடையே எங்களைச் சிதறடித்தீர்; அவர்களுடைய பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் இகழ்ச்சிக்கும் எங்களை உள்ளாக்கினீர். என் பாவங்களுக்கு நீர் அளித்த தீர்ப்புகள் பலவும் உண்மைக்கு ஏற்றவை. நாங்கள் உம் கட்டளைகளின்படி ஒழுகவில்லை; உம் திருமுன் உண்மையைப் பின்பற்றி வாழவில்லை. இப்பொழுது, உம் விருப்பப்படி என்னை நடத்தும்; என் உயிர் பிரிந்துவிடக் கட்டளையிடும். இவ்வாறு நான் மண்ணிலிருந்து மறைந்து மீண்டும் மண்ணாவேனாக. நான் வாழ்வதினும் சாவதே மேல்; ஏனெனில் சற்றும் பொருந்தாத பழிச்சொற்களை நான் கேட்க நேர்ந்தது. ஆகவே கடுந்துயரில் மூழ்கியுள்ளேன். ஆண்டவரே, இத்துயரத்தினின்று நான் விடுதலை பெற ஆணையிடும்; முடிவற்ற இடத்திற்கு என்னைப் போகவிடும்; உமது முகத்தை என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளாதேயும்; ஆண்டவரே! வாழ்வில் மிகுந்த துன்பங்களைக் காண்பதினும், இத்தகைய இகழ்ச்சிகளைக் கேட்பதினும் நான் சாவதே மேல்.'' அதே நாளில் மேதியா நாட்டின் எக்பத்தானா நகரில் வாழ்ந்து வந்த இரகுவேலின் மகள் சாரா, தன் தந்தையின் பணிப்பெண்களுள் ஒருத்தி தன்னைப் பழித்துரைத்ததைக் கேட்க நேரிட்டது. ஏனெனில் ஒருவர் இறந்தபின் ஒருவராக அவள் ஏழு ஆண்களை மணந்திருந்தாள். மனைவிகளுக்குரிய மரபுப்படி அவளுடைய கணவர்கள் அவளுடன் கூடிவாழுமுன் கொடிய அலகையான அசுமதேயு அவர்கள் எல்லாரையும் கொன்று விட்டது. இதனால் அந்தப் பணிப்பெண் அவளிடம், நீயே உன் கணவர்களைக் கொன்றவள். நீ கணவர்கள் எழுவரை மணந்திருந்தும் அவர்களுள் எவருடைய பெயரும் உனக்கு வழங்கவில்லை. உன் கணவர்கள் இறந்துவிட்டதற்காக எங்களை ஏன் தண்டிக்கிறாய்? நீயும் அவர்களிடம் போ. உன் மகனையோ மகளையோ நாங்கள் என்றுமே காணவேண்டாம் என்று பழித்துரைத்தாள். அன்று அவள் மனம் நொந்து அழுதாள்; தன்னைத் தூக்கிலிட்டுக் கொள்ளும் நோக்குடன் தன் தந்தையின் மாடியறைக்குச் சென்றாள். ஆனால் மீண்டும் சிந்தித்து, என் தந்தையை மக்கள் பழிக்கலாம்; உனக்கு ஒரே அன்பு மகள் இருந்தாள்; அவளும் தன் துயர் பொறுக்க இயலாமல் நான்றுகொண்டாள் என்று இகழலாம். இவ்வாறு என் தந்தை தமது முதுமையில் துயருற்று இறக்க நான் காரணம் ஆவேன். எனவே நான் நான்று கொள்ளமாட்டேன். மாறாக நான் சாகுமாறு ஆண்டவரை இரந்து வேண்டுவேன். அவ்வாறாயின் என் வாழ்நாளில் பழிச்சொற்களை இனி மேல் கேட்க வாய்ப்பு இராது என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். அதே நேரத்தில் சாரா பலகணியை நோக்கிக் கைகளை விரித்துப் பின்வருமாறு மன்றாடினாள்: இரக்கமுள்ள இறைவா போற்றி! என்றும் உம் திருப்பெயர் போற்றி! உம் செயல்களெல்லாம் உம்மை என்றும் போற்றுக! அந்நேரமே தோபித்து, சாரா ஆகிய இருவருடைய மன்றாட்டும் கடவுளின் மாட்சியுடைய திருமுன் கேட்கப்பட்டது. தோபித்து தம் கண்களினால் கடவுளின் ஒளியைக் காணும்பொருட்டு அவருடைய கண்களிலிருந்து வெண்புள்ளிகளை நீக்கவும், தம் மகன் தோபியாவுக்கு இரகுவேலின் மகள் சாராவை மணமுடித்து, அசுமதேயு என்னும் கொடிய அலகையை அவளிடமிருந்து விரட்டவும், இவ்வாறு அவர்கள் இருவருக்கும் நலம் அருள இரபேல் அனுப்பப்பட்டார். சாராவை அடைய மற்ற அனைவரையும் விட தோபியாவுக்கே முன்னுரிமை இருந்தது. தோபித்து முற்றத்திலிருந்து வீட்டிற்குள் வந்தார். அதே நேரத்தில் இரகுவேலின் மகள் சாராவும் மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 25: 2-3. 4-5. 6-7b. 8-9

பல்லவி: ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.

2 என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுற விடாதேயும்;
என் பகைவர் என்னைக் கண்டு நகைக்க விடாதேயும்.
3 உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை;
காரணமின்றித் துரோகம் செய்பவரோ வெட்கத்திற்கு உள்ளாவர். பல்லவி

4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்;
உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;
ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். பல்லவி

6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்;
ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.
7 உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்;
ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்;
எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே; என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். அல்லேலூயா.

மாற்கு 12:18-27

ஆண்டின் பொதுக்காலம் 9ஆம் வாரம் புதன் கிழமை

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 18-27

அக்காலத்தில் உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி, போதகரே, ஒருவர் மகப்பேறின்றித் தம் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவரைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று மோசே நமக்கு எழுதி வைத்துள்ளார். சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாமவர் அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இறந்தார். மூன்றாமவருக்கும் அவ்வாறே நிகழ்ந்தது. ஏழு பேருக்கும் மகப்பேறு இல்லாமற்போயிற்று. அனைவருக்கும் கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அவர்கள் உயிர்த்தெழும்போது, அவர் அவர்களுள் யாருக்கு மனைவியாக இருப்பார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே!� என்று கேட்டனர். அதற்கு இயேசு அவர்களிடம், �உங்களுக்கு மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள். இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்துகொள்வதில்லை. மாறாக, அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள். இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்தது இல்லையா? ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே� என்று கடவுள் அவரிடம் சொன்னாரே! அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

-------------------------

இறைவன் பார்வையில்!

மாற்கு 12: 18-27

“உயிர்த்தெழுதல் இல்லை” என்று கூறும் சதுசேயர்கள் அந்தக் காலத்தைச் சேர்ந்த மற்றொரு மதக் குழுவாக இருந்தனர். சதுசேயர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்டதை நிராகரித்தனர்; ஆன்மீக பரிமாணத்தை நம்பவில்லை; வானதூதர்களை நம்பவில்லை. மேலும் அவர்கள் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையையோ அல்லது கடவுளுடைய மக்கள் விண்ணகத்தில் கடவுளுடன் என்றென்றும் வாழ்வதற்கு உயிர்த்தெழுப்பப்படுவதையோ நம்பவில்லை. பண்டைய இஸ்ரேயலில் பெண்களின் நில உடைமை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழியாக இந்தச் சட்டம் இணைச் சட்டம் 25:5-10 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மனிதன் திருமணமாகி வாரிசு பெறாமல் இறந்துவிட்டால், அவனுடைய சகோதரன் கணவனை இழந்த பெண்ணை மணந்து, அவர்கள் குழந்தைகளைப் பெற முயற்சிப்பார்கள். குழந்தை இறந்த கணவரின் நிலத்திற்கான சரியான வாரிசாக இருக்கும், இதனால் நிலத்தை குடும்பம் தக்க வைத்திருக்கும். இதுதான் பண்டைய இஸ்ரேயலிய கலாச்சாரத்தில் ஒரு பொதுவான நடைமுறையாக இருந்தது. சதுசேயர்கள் மரணத்திற்குப் பின் வாழ்க்கை என்ற கருத்தை கேலி செய்தார்கள், மேலும் அவர்கள் இந்த பழைய ஏற்பாட்டு சமூக சட்டத்தை கேலி செய்யும் முறையாக அவர்களின் கேள்விகளை பயன்படுத்தினார்கள்.

அவர்களின் தவறான கேள்விக்கு இயேசு இரண்டு முக்கிய காரணங்களைக் கூறினார். முதலாவதாக, அவர்கள் விவிலியத்தை அறியவில்லை. இரண்டாவதாக, அவர்கள் கடவுளின் வல்லமையை அறியவில்லை. கடவுள் தம் மக்களை மரித்தோரிலிருந்து எழுப்புவார் என்பதையும் உயிர்த்தெழுந்த நிலையில், அவருடைய மக்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. விண்ணகத்தில் கடவுள் திருமணம் செய்து கொள்ளாத வானதூதர்களைப் போல மனிதர்களை ஆக்குவார் என்பதையும் அவர்கள் அறிய முற்படவில்லை.

அவர்களுக்கு விவிலியம் தெரியாது என்பதை இயேசு காட்டினார். அவர் அவர்களை மீண்டும் விடு.பய 3-4 க்கு அழைத்து வந்தார். எகிப்திலிருந்து இஸ்ரயேலை விடுவிக்க அவர் அழைக்கப்படுவதற்கு முன்பு மோசே பாலைவனத்தில் பார்த்த எரியும் புதரைக் குறிப்பிடுகிறார். அந்த பகுதியில், "நான் ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்” என்று கூறி கடவுள் தன்னைக் குறிப்பிட்டார். சதுசேயர்கள் உட்பட ஒவ்வொரு இஸ்ரயேலருக்கும் இது ஒரு முக்கியமான அறிக்கை. "நான் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் கடவுள், ஆனால் அவர்கள் இப்போது இறந்துவிட்டார்கள்" என்று கடவுள் சொல்லவில்லை என்பதே இயேசுவின் கருத்து. கடவுள் இறந்தவர்களின் கடவுள் அல்ல, ஆனால் உயிருள்ளவர்களின் கடவுள் என்பதையும் அழுத்தமாக பதிவிடுகிறார். மோசேக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆபிரகாம் இறந்திருந்தாலும், கடவுள் மோசேயிடம் பேசியபோது ஆபிரகாம் உயிருடன் இருந்ததால், "நான் ஆபிரகாமின் கடவுள்" என்று கூறினார். ஈசாக்கு உயிருடன் இருந்ததால், "நான் ஈசாக்கின் கடவுள்" என்று கடவுள் கூறினார். மேலும் யாக்கோபு உயிருடன் இருந்தார். மூவரும் இறந்து பல வருடங்கள் ஆனாலும் உயிருடன் இருக்கிறார்கள்.

இயேசுவின் கூற்று மிகவும் புத்திசாலித்தனமானது. பழைய ஏற்பாட்டு புனிதர்களுக்கு மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றி எதுவும் தெரியாது என்று கூறும் பல நவீன இறையியலாளர்களுக்கு எதிராகவும் அவரது வார்த்தைகள் ஒரு திருத்தம். ஆகவே, உயிர்த்தெழுதல், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைப் பற்றிய விவிலியத்தின் உண்மையான விளக்கத்துடன் இயேசு அவர்களின் தவறான கருத்துக்களை எதிர்த்துப் போராடினார்.

கடவுளின் வார்த்தை இன்றும், என்றும் உண்மையுள்ளது. அவர் எப்போதும் மாறாதவர். நாம் தான் நம்முடைய தேவைக்கேற்ப விவிலியத்தை வாசிக்கிறோம்; நமக்கு தேவையானதயும், தோன்றுவதையும் எடுத்துக் கொள்கிறோம். இறைவார்த்தையை வாசிக்கும்போதும், கேட்கும் போதும் திறந்த மனதுடன் செவி கொடுத்தால் மாறாத இறைவன் அவர் வழியில் நம்மை வழிநடத்துவார். கடவுளின் எண்ணங்கள் மனிதரின் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவை என்பதையும் அறிந்து செயல்படுதல் அவசியமாகிறது.

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ.

........................................................................

திருப்பாடல் 25: 2 – 3, 4 – 5, 6 – 7, 8 – 9
”ஆண்டவரே, உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்”

ஒரு மனிதர் அடிபட்டு கீழே கிடக்கிறார் என்றால், அவரது உள்ளம் என்ன நினைக்கும்? யாராவது தன்னைக் கைதூக்கி விடமாட்டார்களா? தன்னைக்காப்பாற்ற மாட்டார்களா?. அப்படி வேதனையில் உழன்று வருந்துகின்ற உணர்வுகளின் வெளிப்பாடு தான், இன்றைய திருப்பாடல். வாழ்க்கையில் பலவிதமான சோகங்களால் சூழப்பட்டு, நண்பர்களால் ஏமாற்றப்பட்டு, பொறாமையினால், வெறுப்பினால் பழிவாங்கப்பட்ட திருப்பாடல் ஆசிரியர், தன்னுடைய உள்ளத்தின் வேதனைகளை இங்கே பாடலாக தருகிறார். இந்த பாடலை நம்முடைய வாழ்க்கையோடு பொருத்திப்பார்த்தால், நிச்சயம் நாமும் இந்தவிதமான அனுபவத்தைப் பெற்றிருப்போம்.

தாவீது அரசர் ஆண்டவரின் மீது நம்பிக்கை கொண்ட ஓர் அரசர். ஆண்டவரால் உயர்த்தப்பெற்ற அரசர். ஆண்டவரின் ஆவியினால், மிக உயர்ந்த இடத்தை அடைந்த அரசர். ஒரு கட்டத்தில், தன்னுடைய உயர்வுக்கு தானே காரணம் என்ற இறுமாப்பு கொண்டவராய், கடவுளிடமிருந்து விலகிச்சென்று, தன்னுடைய மனம் விரும்புவதையெல்லாம் செய்யத் தொடங்குகிறார். தவறி கீழே விழுகிறார். அந்த தருணம் தான், கடவுளிடமிருந்து எவ்வளவு தூரம் விலகி வந்துவிட்டோம் என்பதை, அவருக்குக் காட்டுவதாக இருக்கிறது. தான் வீழ்ந்து கிடக்கிற தருணத்தில், தன்னுடை பகைவர்கள் தன்னை வெற்றி கொள்ள நினைப்பதையும், இழிவாக, ஏளனமாக எண்ணுவதையும் அவர் உணர்கிறார். இழந்த நம்பிக்கையை பெறுவதற்கு முயற்சி எடுக்கிறார். கடவுளை நோக்கி உள்ளத்தை உயர்த்துகிறார்.

உடைந்து போன உள்ளங்களுக்கு ஆறுதல் தரக்கூடியவர் நம் ஆண்டவர். எவ்வளவு தான் நாம் கடவுளை விட்டுச் சென்றாலும், ஆண்டரை நோக்கி நமது உள்ளத்தை வேதனையான தருணங்களில் உயர்த்துகிறபோது, கடவுள் நம் கரம் தூக்கி விடக்கூடியவராக இருக்கிறார். அந்த இறைவனிடத்தில் நாமும் நம்மையே ஒப்படைப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

மனித எண்ணம்

இன்றைய நற்செய்தியில் சதுசேயர்கள் சொல்வது இணைச்சட்டம் 25: 5 – 10 முதல் காணப்படக்கூடிய பகுதியாகும். இந்த சட்டத்திற்கான நோக்கம் இரண்டு: முதலாவதாக, வம்சம் தொடர வேண்டும். இரண்டாவதாக, சொத்துக்கள் வம்சத்தோடு இருக்க வேண்டும். அது கையைவிட்டு போகக்கூடாது என்பதுதான். இந்த அடிப்படையில்தான், இந்த சட்டம் இயற்றப்பட்டது. உயிர்ப்பு என்பதை, சதுசேயர்கள் நம்பாததால், அதை ஒரு கேலிப்பொருளாக, இயேசுவிடம் அவர்கள் பரிகசிக்கிறார்கள். ஆனால், இயேசு இந்த வாய்ப்பைப்பயன்படுத்திக்கொண்டு, அவர்களுக்கு உயிர்ப்பு பற்றிய சரியான புரிதலை கொடுக்கிறார்.

உயிர்ப்பு என்பதை நமது இந்த உலக வாழ்வோடோ அல்லது நமது மனித எண்ணத்தின்படியோ நாம் சிந்திக்கக்கூடாது, என்பது இயேசு தரும் முதல் விளக்கம்.  நாம் அனைவருமே வானதூதர்களைப்போல இருப்போம். கத்தோலிக்கத் திருச்சபையால், ஏவப்பட்ட நூல் என்று கருதப்படாத, ஏற்றுக்கொள்ளப்படாத புத்தகத்தில், நேர்மையாளர்கள், வானதூதர்கள் போல கருதப்படுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. யூதப்போதகர்களின் விளக்கநூலில், உயிர்ப்பு என்பது கடவுளின் மாட்சிமையில் பங்குகொள்ளக்கூடிய வாழ்க்கை என்றும், உயிர்ப்பில் பொறாமையோ, வெறுப்போ, வைராக்கியமோ இருக்காது என்று விளக்கம் தரப்படுகிறது. இயேசு தரும் இரண்டாவது விளக்கத்தில், உயிர்ப்பிற்கான ஆதாரத்தைத்தருகிறார். விடுதலைப்பயணம் 3: 6 ல், கடவுள் தன்னை ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் கடவுளாகக் குறிப்பிடுகிறார். அவர் மூதாதையர்களின் கடவுள் என்றால், ஆபிரகாமும், ஈசாக்கும், யாக்கோபும் இன்னும் வாழ்கிறார்கள் என்பதுதான் பொருள். ஆக, அவர் வாழ்வோரின் கடவுள்.

சதுசேயர்கள் இந்த உலகத்தைப்போல விண்ணகத்தையும் கற்பனைசெய்து பார்க்கிறார்கள். மனித அறிவைக்கொண்டு, அனைத்தையும் அறிந்துவிடலாம், அனைத்திற்கும் விளக்கம் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அது மிகப்பெரிய தவறு என்பதை, இன்றைய நற்செய்தியின் மூலம் இயேசு நமக்கு விளக்குகிறார்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

மறைநூலும்...

உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லாத சதுசேயர் இயேசுவிடம் ஏழு சகோதரர் ஒரே பெண்ணை மணந்ததாக ஒரு நிகழ்வைச் சொல்லி விடை கேட்கின்றனர். அவர்களுக்கு இயேசு தரும் மறுமொழியை இன்றைய சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம்.

“உங்களுக்கு மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்” என்கிறார் இயேசு.

இறையியல் தவறுகள் ஏற்படக் காரணங்கள் மறைநூல் அறிவு இல்லாமையும், இறையாற்றல் அனுபவம் இல்லாமையும் என்கிறார் இயேசு. திருச்சபையின் வரலாற்றில் எத்தனையோ இறையியல் பேதகங்கள் தோன்றியிருக்கின்றன. அவற்றையெல்லாம் திருச்சபை மேற்கொண்டு, உண்மையைப் பற்றிக்கொண்டு பயணம் செய்கின்றது. இறைவார்த்தையும், இறை அனுபவமும் நம்மை இறையியல் மற்றும் வாழ்வியல் பிழைகளினின்று காக்கின்றன. எனவே, இறைவார்த்தையை ஆர்வத்துடன் பற்றிக்கொள்வோம். அத்துடன், “இறைவனால் எல்லாம் கூடும்” என்பதையும் மனதார ஏற்று நம்பிக்கை கொள்வோம். அனைத்துச் சிக்கல்களும் தீர்க்கப்படும்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது வார்த்தையில் நம்பிக்கை கொண்டு, உமது ஆற்றலில் திடம் அடையும் அருளை எங்களுக்குத் தந்தருளும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

''இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்துகொள்வதில்லை.
மாறாக அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்' என்றார்'' (மாற்கு 12:25)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசுவை அணுகிக் கேள்வி கேட்டு அவரிடம் குறைகாண முயன்றவர்களுள் பரிசேயரும் இருந்தனர், சதுசேயரும் இருந்தனர். இறப்புக்குப் பின் மனிதர் உயிர்பெறுவர் என்பது பரிசேயர் கொள்கை. ஆனால் சதுசேயர் இதை மறுத்தனர். இயேசு யாருக்குச் சார்பாகப் பேசுவார் என்றறிய இரு கட்சியினரும் முனைகின்றனர். ஆனால் வழக்கம்போல இயேசு அவர்களுடைய கேள்விக்கு நேரடியான பதில் கூறாமல் அவர்களுக்குக் கடவுளின் போதனையை எடுத்துக் கூறுகிறார். கடவுளை நாம் நம்முடைய குறுகிய அறிவுக்குள் கொண்டுவர இயலாது. நமது குறுகிய சிந்தனைப்படி கடவுள் செயல்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கவும் கூடாது. எனவேதான் இயேசு இவ்வுலகப் பாணிக்கும் மறுவுலகப் பாணிக்கும் இடையே வேறுபாடு உண்டு என்பதைக் குறிப்பிடுகிறார். இவ்வுலக முறைப்படி மனிதர் திருமணம் செய்கின்றனர்; குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, குடும்பத்தை நிறுவுகின்றனர். மறுவுலகில் இத்தகைய முறை இராது. அங்கே திருமணத்திற்கும் குழந்தைப் பேற்றுக்கும் இடம் இல்லை. ஏனென்றால் ''அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்'' (மாற் 12:25).

-- விண்ணகத் தூதர் எப்படி இருப்பார்கள் என்னும் கேள்வி எழுகிறது. இதற்கும் இயேசு நேரடியான பதில் தரவில்லை; மாறாக, மனிதருக்கும் விண்ணகத் தூதருக்கும் இடையே வேறுபாடு உண்டு என நாம் அறிகிறோம். இதை உறுதிப்படுத்துகின்ற விதத்தில் இயேசு கடவுளின் உண்மைத் தன்மையை நமக்குக் காட்டுகிறார். அதாவது கடவுள் ''இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள்'' (மாற் 12:27). மனிதருக்கு வாழ்வு வழங்குவதே கடவுளின் திட்டம்; மனிதர் மடிந்து ஒழிய வேண்டும் என்பதல்ல அவருடைய பார்வை. எனவே, கடவுள் மனிதருக்கு உயிர் வழங்குவதையே தம் நோக்கமாகக் கொண்டிருப்பதால் அவர் மனிதரை சாவுக்குக் கையளித்துவிட மாட்டார். மாறாக, அவர்களுக்குத் தம் வாழ்வில் பங்களிப்பார். ஆனால் இத்தகைய பங்கேற்பு மனித சிந்தனைக்கு ஏற்ப நிகழும் என நாம் எதிர்பார்க்க முடியாது. மாறாக, கடவுளுக்கே தெரிந்த விதத்தில் நாம் எல்லோரும் வாழ்வு பெற்று நிறைவடைய அழைக்கப்படுகிறோம். கடவுளே நமக்கு நிலைவாழ்வில் பங்களிப்பார். எனவே நாம் நம்பிக்கையோடு கடவுளை நாடிச் செல்ல வேண்டும். இந்த உண்மையை இயேசு நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். எனவே, இயேசுவையும் அவர் நம்பிய கடவுளையும் நாம் நம்பி ஏற்கும்போது நாமும் உயிர்த்தெழுதலில் பங்கேற்போம். நம் வாழ்வு ஒரு நாளும் அழியாது.

மன்றாட்டு
இறைவா, நீர் எங்களுக்கு வழங்குகின்ற வாழ்வை நாங்கள் பிறரோடு பகிர்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

உயிரோட்டம் உள்ள வாழ்வு

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

சிலருக்கு வாழ்வு - அது இவ் உலக வாழ்வாக இருந்தாலும் சரி, உயிர்த்த வாழ்வாக இருந்தாலும் சரி - திருமணம், குடும்பம், பணம், பதவி இவற்றோடு நின்றுவிடுகிறது. இறந்த பின் உள்ள மறு வாழ்வையும் இப்படியே நோக்குகின்றனர்.

இயேசுவின் பார்வையில் இந்த வட்டத்துள் உள்ள வாழ்வு உயிர்த்த வாழ்வு அல்ல. உயிரோட்டம் உள்ள வாழ்வு அல்ல. உயர்த்த வாழ்வு என்பது உயிரோட்டமுள்ள வாழ்வு. திருமணம், குடும்பம், பணம், பதவி, சுயநலம் என்ற வட்டத்தை விட்டு விலகி, பரந்து விரிந்து, அயலானுக்காகவும் அனைவருக்காகவும் ஆண்டவனுக்காகவும் தியாகம் செய்யும் அன்பு வாழ்வு.

ஆகவே உயிர்ப்பு என்பது இறந்த பின் வாழும் ஒரு வாழ்க்கை மட்டும் அல்ல. அதன் வேறும் விழுதும் இன்று நாம் வாழும் வாழ்க்கையில் ஆழப் புதைந்து பதிந்துள்ளது. உயிரோடு இன்று உலகில் வாழும் போது பிணமாக செத்துப்போன நாற்றமடிக்கும் வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, உயிர்ப்பில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

வானதூதரைப்போல் வாழும் வாழ்க்கை வாழ்ந்தோர் அயலானுக்காகவும் அனைவருக்காகவும் ஆண்டவனுக்காகவும் தியாகம் செய்து வாழ்ந்தவர்கள். அவர்களின் உயிர்த்த வாழ்வும் முற்றிலும் தெய்வீகமாக இருக்கும். அவர்கள் உயிருள்ள கடவுளின் மக்களாக இருப்பார்கள். வாழ்ந்தாலும் இறந்தாலும் அவர்கள் மகிழ்ந்து வாழ்வர். இவ்வாறு நாமும் இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

--அருட்திரு ஜோசப் லியோன்