குருத்தோலைப் பவனி

முன்னுரை

அன்றைக்கு ஒரு பவனி, கழுதைக்கு மேல் படைத்தவரை அமர்த்தி ஓசான்னா சொல்லி வழிநெடுகிலும் ஆடைகளையும், மரக்கிளைகளையும் போட்டு ஆரவாரத்தோடு அழைத்துச் செல்லப்பட்டார் இயேசு. இதுவே பாடுகளின் தொடக்கமாக அமைந்தது. கடந்த விபூதி புதன் தொடங்கி பல்வேறு பக்திமுயற்சிகள், ஒறுத்தல்கள், ஒருசந்தி என கடைபிடித்து வந்த நாம் இறுதி வாரத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த புனித வாரம் எல்லாருக்கும் ஆசீர்வாதமாக அமைய வாழ்த்துகின்றோம். நாமும் அன்றைய நாளில் எருசலேமுக்குள் நுழைந்த இயேசுவின் மனநிலையோடு சேர்ந்து பவனியை மேற்கொண்டு, பக்தியோடு பாடுகளில் நுழைவோம்.

இரண்டாம் ஆண்டு
ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!
+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-10

இயேசு தம் சீடரோடு ஒலிவ மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களைஅனுப்பி, ``உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், `ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டால், `இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார்' எனச் சொல்லுங்கள்'' என்றார். அவர்கள் சென்று ஒரு வீட்டு வாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண்டிருக்கையில், அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், ``என்ன செய்கிறீர்கள்? கழுதைக்குட்டியையா அவிழ்க்கிறீர்கள்?'' என்று கேட்டனர்.
அவர்கள் இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர். பிறகு அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, அதன்மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார். பலர் தங்கள் மேலுடைகளையும் வேறு சிலர் வயல்வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர். முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், ``ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று ஆர்ப்பரித்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

அல்லது


ஆண்டவர் பெயரால் வருபவர் போற்றப்பெறுக!
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 12-16

அக்காலத்தில் பாஸ்கா திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், ``ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதன்மேல் ஏறி அமர்ந்தார். ``மகளே சீயோன், அஞ்சாதே! இதோ! உன் அரசர் வருகிறார்; கழுதைக் குட்டியின்மேல், ஏறி வருகிறார்'' என்று மறைநூலில் எழுதியுள்ளதற்கேற்ப அவர் இவ்வாறு செய்தார். அந்நேரத்தில் அவருடைய சீடர்கள் இச்செயல்களின் பொருளைப் புரிந்துகொள்ளவில்லை. அவரைப் பற்றி மறைநூலில் எழுதப் பட்டிருந்தவாறே இவையனைத்தும் நிகழ்ந்தன என்பது இயேசு மாட்சி பெற்ற பிறகே அவர்கள் நினைவுக்கு வந்தது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------------------------------------------------------------

திருப்பலி

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-7

நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார். நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 22: 7-8. 16-17. 18-19. 22-23
பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?

7 என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,
8 `ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்' என்கின்றனர். -பல்லவி

16 தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்;
17 என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். 17ய என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம். -பல்லவி

18 என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.
19 நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். -பல்லவி

22 உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
23 ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே,
அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11

கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக `இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

மாற்கு 14:1 - 15:47

தவக்காலம் -ஆறாம் வாரம் (குருத்து) ஞாயிறு

தூய மாற்கு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பாடுகள்” 14:1 - 15:47

விரிவுரையாளர் : பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நிகழ இன்னும் இரண்டு நாள்கள் இருந்தன. தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்யலாம் என்று வழிதேடிக் கொண்டிருந்தனர்; ஆயினும், "விழாவின்போது வேண்டாம்; ஒரு வேளை மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும்" என்று நினைத்தனர். இயேசு, பெத்தானியாவில் தொழு நோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார். அந்தத் தைலம் கலப்பற்றது, விலையுயர்ந்தது. அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றினார். ஆனால் அங்கிருந்த சிலர் கோபமடைந்து,

யூதர் : "இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை முந்நூறு தெனாரியத்துக்கும் மேலாக விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே,

விரிவுரையாளர் : என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அப்பெண் மீதும் சீறி எழுந்தனர். இயேசு அவர்களிடம்,

இயேசு : "அவரை விடுங்கள். ஏன் அவருக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே. ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள். நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யமுடியும். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை. இவர் தம்மால் இயன்றதைச் செய்தார். என் அடக்கத்திற்காக இவர் முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசிவிட்டார். உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவர் செய்ததும் எடுத்துக் கூறப்படும்; இவரும் நினைவு கூறப்படுவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்"

விரிவுரையாளர் : என்று கூறினார். பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான். அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக் காட்டிக்கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர்,

சீடர் ஒருவர் : "நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?"

விரிவுரையாளர் : என்று கேட்டார்கள். அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்;

இயேசு : "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், "நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?" என்று போதகர் கேட்கச் சொன்னார்" எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்."

விரிவுரையாளர் : சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார். அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தபொழுது இயேசு,

இயேசு : "என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்"

விரிவுரையாளர் : என்றார். அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக,

சீடர் : "நானோ?நானோ?"

விரிவுரையாளர் : என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர்,

இயேசு : "அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன். மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்"

விரிவுரையாளர் : என்றார். அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து,

இயேசு : "இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்"

விரிவுரையாளர் : என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம்,

இயேசு : "இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்"

விரிவுரையாளர் : என்றார். அவர்கள் புகழ்ப்பாடல் பாடிவிட்டு ஒலிவமலைக்குச் சென்றார்கள். இயேசு அவர்களிடம்,

இயேசு : "நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏனெனில், "ஆயரை வெட்டுவேன்; அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன்"

விரிவுரையாளர் : என்றார். பேதுரு அவரிடம்,

பேதுரு : "எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன்"

விரிவுரையாளர் : என்றார். இயேசு அவரிடம்,

இயேசு : "இன்றிரவில் சேவல் இருமுறை கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன்"

விரிவுரையாளர் : என்றார். அவரோ,

பேதுரு : "நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்"

விரிவுரையாளர் : என்று மிக அழுத்தமாகச் சொன்னார். அப்படியே அவர்கள் அனைவரும் சொன்னார்கள். பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம்,

இயேசு : "நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள்"

விரிவுரையாளர் : என்று கூறி, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர்,

இயேசு : "எனது உள்ளம் சாவுவருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள்"

விரிவுரையாளர் : என்று அவர்களிடம் கூறினார். சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார்.

இயேசு : "அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்"

விரிவுரையாளர் : என்று கூறினார். அதன்பின்பு அவர் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம்,

இயேசு : "சீமோனே, உறங்கிக் கொண்டா இருக்கிறாய்? ஒரு மணிநேரம் விழித்திருக்க உனக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வம் உடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்"

விரிவுரையாளர் : என்றார். அவர் மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம் வேண்டினார். அவர் திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி கூறுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் மூன்றாம் முறை வந்து அவர்களை நோக்கி,

இயேசு : "இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? போதும், நேரம் வந்துவிட்டது. மானிடமகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படப் போகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான்"

விரிவுரையாளர் : என்று கூறினார். இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது. அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன்,

யூதாஸ் : "நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு, அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள்"

விரிவுரையாளர் : என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி,

யூதாஸ் : "ரபி"

விரிவுரையாளர் : எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர். அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். இயேசு அவர்களைப் பார்த்து,

இயேசு : "கள்வனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைது செய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் கற்பித்துக் கொண்டு உங்களோடு இருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே! ஆனால் மறைநூலில் எழுதப்பட்டுள்ளவை நிறைவேற வேண்டும்"

விரிவுரையாளர் : என்றார். அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர். இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக் கொண்டு அவர் பின்னே சென்றார்; அவரைப் பிடித்தார்கள். ஆனால் அவர் துணியை விட்டு விட்டு ஆடையன்றித் தப்பி ஓடினார். அவர்கள் இயேசுவைத் தலைமைக் குருவிடம் கூட்டிச் சென்றார்கள். எல்லாத் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் ஒன்று கூடினார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றம் வரை வந்து காவலரோடு உட்கார்ந்து நெருப்பின் அருகே அவர் குளிர்காய்ந்து கொண்டிருந்தார். தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகச் சான்று தேடினார்கள். ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை. பலர் அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொன்னார்கள். ஆனால் அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன. சிலர் எழுந்து,

சிலர் : "மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்து விட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம்"

விரிவுரையாளர் : என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினர். அப்படியும் அவர்களுடைய சான்று ஒத்துவரவில்லை. அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவர்களின் நடுவே நின்று,

தலைமைக் குரு : "இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி ஒன்றும் கூற மாட்டாயா?"

விரிவுரையாளர் : என்று இயேசுவைக் கேட்டார். ஆனால் அவர் பேசாதிருந்தார். மறுமொழி ஒன்றும் அவர் கூறவில்லை. மீண்டும் தலைமைக் குரு,

தலைமைக் குரு : "போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ?"

விரிவுரையாளர் : என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு,

இயேசு : "நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள் "

விரிவுரையாளர் : என்றார். தலைமைக் குருவோ தம் அங்கியைக் கிழித்துக்கொண்டு,

தலைமைக் குரு : "இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது?"

விரிவுரையாளர் : என்று கேட்க, அவர்கள் அனைவரும்,

எல்லாரும் : "இவன் சாக வேண்டியவன்"

விரிவுரையாளர் : என்று தீர்மானித்தார்கள். பின்பு சிலர் அவர்மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி அவரைக் கையால் குத்தி, "இறைவாக்கினனே, யார் எனச் சொல்" என்று கேட்கவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர். அப்பொழுது பேதுரு கீழே முற்றத்தில் இருக்க, தலைமைக் குருவின் பணிப் பெண் ஒருவர் வந்து, பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருக்கக் கண்டு அவரைக் கூர்ந்து நோக்கி,

பணிப் பெண் : "நீயும் இந்த நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்தானே"

விரிவுரையாளர் : என்றார். அவரோ,

பேதுரு : "நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, புரியவுமில்லை"

விரிவுரையாளர் : என்று மறுதலித்து, வெளி முற்றத்திற்குச் சென்றார். (அப்பொழுது சேவல் கூவிற்று ). அந்தப் பணிப்பெண் அவரைக் கண்டு சூழ இருந்தவர்களிடம்,

பணிப் பெண் : "இவனும் அவர்களைச் சேர்ந்தவன்தான்"

விரிவுரையாளர் : என்று மீண்டும் கூறத் தொடங்கினார். அவர் மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் சூழ இருந்தவர்களும்,

எல்லாரும் : "உண்மையாகவே நீ அவர்களைச் சேர்ந்தவனே. ஏனெனில் நீ ஒரு கலிலேயன்"

விரிவுரையாளர் : என்று மீண்டும் பேதுருவிடம் கூறினார்கள். அவரோ,

பேதுரு : "நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த மனிதனை எனக்குத் தெரியாது"

விரிவுரையாளர் : என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே இரண்டாம் முறை சேவல் கூவிற்று. அப்பொழுது, "சேவல் இருமுறை கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப் பேதுரு நினைவு கூர்ந்து மனம் உடைந்து அழுதார்.

பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று பிலாத்திடம் ஒப்புவித்தனர். பிலாத்து அவரை நோக்கி,

பிலாத்து : "நீ யூதரின் அரசனா?"

விரிவுரையாளர் : என்று கேட்க அவர்,

இயேசு : "அவ்வாறு நீர் சொல்கிறீர்"

விரிவுரையாளர் : என்று பதில் கூறினார். தலைமைக் குருக்கள் அவர்மீது பல குற்றங்களைச் சுமத்தினார்கள். மீண்டும் பிலாத்து,

பிலாத்து : "நீ பதில் ஒன்றும் சொல்ல மாட்டாயா? உன் மீது இத்தனை குற்றங்களைச் சுமத்துகிறார்களே!"

விரிவுரையாளர் : என்று அவரிடம் கேட்டான். இயேசுவோ எப்பதிலும் கூறவில்லை. ஆகவே பிலாத்து வியப்புற்றான். விழாவின்போது மக்கள் கேட்டுக் கொள்ளும் ஒரு கைதியை அவர்களுக்காகப் பிலாத்து விடுதலை செய்வதுண்டு. பரபா என்னும் கைதி ஒருவன் இருந்தான். ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு பிடிபட்டவன் அவன். மக்கள் கூட்டம் வந்து, வழக்கமாய்ச் செய்வதுபோல ஒரு கைதியை விடுதலை செய்யுமாறு பிலாத்துவை வேண்டத் தொடங்கியது. அதற்குப் பிலாத்து,

பிலாத்து : "யூதரின் அரசரை உங்களுக்காக நான் விடுதலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா?"

விரிவுரையாளர் : என்று கேட்டான். ஏனெனில் தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்திருந்தார்கள் என்று அவன் உணர்ந்திருந்தான். ஆனால் தலைமைக் குருக்கள் தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள். பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து,

பிலாத்து : "அப்படியானால் நீங்கள் யூதரின் அரசர் என்று குறிப்பிடும் இவனை நான் என்ன செய்ய வேண்டும்?"

விரிவுரையாளர் : என்று கேட்டான். அவர்கள்,

எல்லாரும் : "அவனைச் சிலுவையில் அறையும்"

விரிவுரையாளர் : என்று மீண்டும் கத்தினார்கள். அதற்குப் பிலாத்து,

பிலாத்து : "இவன் செய்த குற்றம் என்ன?"

விரிவுரையாளர் : என்று கேட்க, அவர்கள்,

எல்லாரும் : "அவனைச் சிலுவையில் அறையும்"

விரிவுரையாளர் : என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். ஆகவே பிலாத்து கூட்டத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பரபாவை விடுதலை செய்து, இயேசுவைக் கசையால் அடித்து, சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான். பிறகு படைவீரர் அவரை ஆளுநர் மாளிகையின் முற்றத்திற்கு இழுத்துக்கொண்டு போய்ப் படைப்பிரிவினர் அனைவரையும் கூட்டினர்; அவருக்குச் செந்நிற ஆடையை உடுத்தினர்; ஒரு முள் முடி பின்னி அவருக்குச் சூட்டி,

வீரர் : "யூதரின் அரசே வாழ்க!"

விரிவுரையாளர் : என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்; மேலும் கோலால் அவர் தலையில் அடித்து. அவர்மீது துப்பி, முழந்தாள்படியிட்டு அவரை வணங்கினர். 0 அவரை ஏளனம் செய்த பின் செந்நிற ஆடையைக் கழற்றி விட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக வெளியே கூட்டிச் சென்றனர். அப்பொழுது அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படைவீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் "மண்டைஓட்டு இடம்" எனப்பொருள்படும் "கொல்கொதா" வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள்; அங்கே அவருக்கு வெள்ளைப் போளம் கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை. பிறகு அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; குலுக்கல் முறையில் யாருக்கு எது என்று பார்த்து அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி. அவரது மரண தண்டனைக்கான காரணத்தை அறிவிக்க "யூதரின் அரசன்" என்று அவர்கள் எழுதிவைத்தார்கள்; அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக, இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள். அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து,

சிலர் : "ஆகா, திருக்கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள்"

விரிவுரையாளர் : என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர்களுடன் சேர்ந்து அவரை ஏளனம் செய்து, "பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க முடியவில்லை" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அவர்கள்,

தலைமைக் குரு : "இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் கண்டு நம்புவோம்"

விரிவுரையாளர் : என்றார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள். நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது. பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு,

இயேசு : "எலோயி, எலோயி, லெமா சபக்தானி?"

விரிவுரையாளர் : என்று உரக்கக் கத்தினார். "என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்பது அதற்குப் பொருள். சூழ நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக்கேட்டு,

சிலர் : "இதோ! எலியாவைக் கூப்பிடுகிறான்"

விரிவுரையாளர் : என்றனர். அப்பொழுது அவர்களுள் ஒருவர் ஓடிச்சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே,

ஒருவர் : "பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்"

விரிவுரையாளர் : என்றார். இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.

(அனைவரும் முழந்தாளிட்டு சிறிது நேரம் செபிக்கவும்)

விரிவுரையாளர் : அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு,

நூற்றுவத் தலைவர் : "இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்"

விரிவுரையாளர் : என்றார். பெண்கள் சிலரும் தொலையில் நின்று உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். அவர்களுள் மகதலா மரியாவும் சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் இருந்தனர். இயேசு கலிலேயாவில் இருந்த போது அவர்கள் அவரைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்தவர்கள், அவருடன் எருசலேமுக்கு வந்திருந்த வேறுபல பெண்களும் அங்கே இருந்தார்கள். இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து,

பிலாத்து : "அவன் இதற்குள் இறந்து விட்டானா?"

விரிவுரையாளர் : என்று கேட்டான். நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான். யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார். அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

-------------------------

உண்மையான நட்பு

இயேசு தனது பாடுகளின் ஒவ்வொரு வேதனைகளையும் தெளிவாக அறிந்திருந்தார். அதற்காக தன்னையே தயார்படுத்தியிருந்தார். அவருக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர்கள், அதிகாரவர்க்கத்தினரின் ஆணவவெறி, பழிவாங்கும் தன்மை, தன்னுடன் இருக்கிறவர்களே காட்டிக்கொடுப்பது, சிலுவையின் பாரம் மற்றும் வேதனை, தனது நண்பர்கள் தன்னைக் கைவிட்டு விடுவது. இவை அனைத்தையும் இயேசு அறிந்திருந்தார். இவற்றில் அதிகபட்சமாக இயேசுவுக்கு வேதனையை, நிச்சயம் அவருடைய நண்பர்கள் அவரை விட்டுச்சென்றதாகத்தான் இருக்கும்.

நண்பர்கள் என்பவர்கள் வேதனையில் துணையிருப்பவர்கள். அது ஓர் அழகிய குளம். நீரருந்த நிறைய பறவைகள் அடிக்கடி அங்கே வரும். அக்குளத்தில் தாமரைச்செடிகளும், அல்லிச்செடிகளும் அழகாக பூத்து நிறைந்திருக்கின்றன. மழைக்காலம் தீர்ந்து, கோடை வெயிலில் அக்குளம் வற்றிப்போகிறது. அதுவரை அக்குளத்தை நாடி நலம்பெற்ற பறவைகள் இதற்கு மேலும், அக்குளத்தால் தமக்கு நன்மைகள் ஏதுமில்லை என்பதை உணர்ந்து, கொஞ்சமும் நன்றியின்றி அங்கிருந்து பிரிந்து சென்றன. ஆனால், தாமரையும், அல்லியும் அக்குளத்திலேயே தம் இறுதிக்காலம் வரை பிரியாது, உடனிருக்கின்றன. உண்மையான நட்பு, போலியான நட்பு ஆகியவற்றின் வேறுபாட்டை, ஒளவையார், இங்கு தெளிவாக உணர்த்துகிறார். துன்பத்தில் உற்ற துணையாக இருப்பவனே உண்மையான நண்பன். இயேசு நிச்சயம் மிகுந்த கவலைப்பட்டிருப்பார். அவர்களு்க்காக செபித்திருப்பார்.

கடவுளுக்கும், நமக்கும் இடையேயான நட்பு உண்மையான நட்பாக இருக்க வேண்டும். துன்பம் வந்தாலும், இன்பம் வந்தாலும், கடவுள் நம்மோடு இருந்து நல்ல நண்பராக இருப்பது போல, நாமும் நமது இன்பத்திலும், துன்பத்திலும் கடவுளை நாடிச்செல்கிறவர்களாக இருக்க வேண்டும். அதுதான் நட்பிற்கு இலக்கணம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

ஓசன்னா எனும் புகழ்ப் பாடல்!

இன்று குருத்து ஞாயிறு. ஆண்டவர் இயேசுவின் பாடுகளின் ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. இன்றைய வாசகங்கள் குருத்தோலைப் பவனியைப் பற்றி மட்டும் பேசாமல், ஆண்டவர் இயேசுவின் பாடுகள், இறப்பைப் பற்றியும் பேசுகின்றன. எனவேதான், "பாடுகளின் ஞாயிறு" என்னும் பெயரும் உண்டு.

இன்றைய நாளில் இயேசுவின் பாடுகள், துன்பங்களைப் பற்றிச் சிந்திப்போம். ஒரு மாற்றத்துக்காக, அவருடைய உடல் துன்பத்தை அல்லாது, உளவியல் துன்பங்களை, மன உளைச்சலை எண்ணிப் பார்ப்போம். இயேசு மெய்யான மனிதர் என்னும் உண்மையின் அடிப்படையில், இயேசு உண்மையான பாராட்டுதல்களை ஏற்றுக்கொண்டார், மகிழ்ச்சி அடைந்தார் என நாம் நம்பலாம். அதுபோல, அவரைப் பற்றித் தவறான செய்திகள், வதந்திகள் பேசப்பட்டபோது அவர் மனம் புண்பட்டார், தாம் அநியாயமாகக் குற்றம் சாட்டப்படுவதாக எதிர்வாதிட்டார் என்பதையும் நற்செய்தி ஏடுகள் பதிவு செய்திருக்கின்றன.

எனவே, இயேசுவின் பாடுகளின் நாள்களில் அவருக்கு நேரிட்ட உச்ச கட்ட மன அழுத்தங்கள், உளைச்சல், தனிமை உணர்வு, அவமான உணர்வு... இவற்றையும் நாம் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

"ஓசன்னா" என்று புகழ்ப் பாடல் பாடிய அதே மக்கள் கூட்டம், "சிலுவையில் அறையும்" என்று கூச்சலிட்டபோது, இயேசு மேற்சொன்ன அத்தனை உணர்வுகளையும் நிச்சயம் அனுபவித்திருப்பார். இருப்பினும், உளமுதிர்ச்சி பெற்ற ஒரு மனிதர், அறிவுத் தெளிவு பெற்ற ஒரு தலைவர், யதார்த்த நிலை உணர்ந்த ஒரு போராளி என்ற வகையில் இந்த மன உளைச்சலையும், அவமான உணர்வுகளையும் அவர் நேர்மனதோடு ஏற்றுக்கொண்டிப்பார் என்றும் நாம் நிச்சயம் நம்பலாம். அந்த வகையில், உணர்வுரீதியில் துன்பம் அடைந்தாலும், அறிவின் பார்வையில் அவற்றையெல்லாம் இயேசு தெளிவோடு ஏற்றுக்கொண்டார். அவற்றையும் உலக மீட்பின் விலை என்று ஒப்புக்கொடுத்தார்.

இயேசுவைப் பின்பற்றி, நாமும் நமது வாழ்வில் வரும் உணர்வியல் சிலுவைகளையும், துன்பங்களையும் தெளிந்த மனதுடன் ஏற்கவும், அவற்றையும் மீட்பின் பணியாக அர்ப்பணிக்கவும் அருள்வேண்டுவோம்.

மன்றாடுவோம்: பாடுகளையும், உளவியல் துன்பங்களையும் ஏற்றுக்கொண்ட இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்வில் நாங்கள் எதிர்கொள்ளும் எதிர் உணர்வுகளையும் நேர்மனதோடும், விவிலிய மனநிலையிலும் ஏற்றுக்கொள்ளும் வலிமையைப் பெற்றுக்கொள்வோமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

''இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்...அவருக்கு எதிராக நின்றுகொண்டிருந்த
நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு இறந்ததைக் கண்டு,
'இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்' என்றார்'' (மாற்கு 15:37,39)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மாற்கு நற்செய்தியில் காணப்படுகின்ற இயேசுவின் துன்பங்கள் பற்றிய பகுதி சில தனித்தன்மைகளைக் கொண்டது. இயேசு அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் உயிர்துறக்கிறார். கடவுள் கூட அவரிடமிருந்து அகன்றுவிட்டதுபோலத் தோன்றிய வேளையில் இயேசு ''உரக்கக் கத்தி உயிர்விடுகிறார்'' (காண்க: மாற் 15:37). ஆனால், இருள் சூழ்ந்த அந்த நேரத்திலும் ஓர் ஒளிக்கதிர் அங்கே தோன்றி மிளிர்கின்றது. இயேசுவைத் தங்கள் எதிரியாகக் கருதிய உரோமை அதிகார வர்க்கத்தைச் சார்ந்த நூற்றுவர் தலைவரின் வாயிலிருந்து ஒரு மகத்தான உண்மை வெளிப்படுகிறது. அதாவது, நூற்றுவர் தலைவர் இயேசுவை ''இறைமகன்'' என அறிக்கையிடுகிறார். மாற்கு நற்செய்தி முழுவதுமே இங்கே தன் உச்சக் கட்டத்தை எய்துகிறது. இயேசு தம் பணிக்காலத்தின் தொடக்கத்திலிருந்தே தம் சீடர்களுக்கு அறிவுறுத்திய உண்மை இங்கே அப்பட்டமாகிறது. மானிட மகன் துன்பங்கள் அனுபவிப்பார் என்றும், துன்பத்தின் வழியே வாழ்வு பிறக்கும் என்றும் இயேசு போதித்திருந்தார். இங்கே சிலுவையில் தொங்கும் இயேசு துன்பத்தின் உச்சக்கட்டத்தை எட்டிவிட்ட போதிலும் ''இறைமகன்'' எனப் போற்றப்படுகிறார். அதுவும் பிற இனத்தைச் சார்ந்த ஒரு மனிதர் இயேசுவை இவ்வாறு போற்றுகிறார்.

-- இயேசு ''இறைமகன்'' என்பதன் பொருள் என்ன? இயேசுவிடத்தில் நாம் கடவுளின் பண்புகளைக் காண்கின்றோம். கடவுள் என்றால் யார் என்பதை இயேசு தம் வாழ்வின் வழியாக, சாவின் வழியாக, உயிர்த்தெழுதல் வழியாக நமக்கு வெளிப்படுத்துகின்றார். கடவுன் அன்பு மயமாக இருக்கிறார் எனவும், அவரிடத்தில் துலங்குகின்ற இரக்கத்திற்கும் மன்னிப்பு வழங்கும் இதய நெகிழ்ச்சிக்கும் எல்லையே கிடையாது என இயேசு நமக்குக் காட்டுகிறார். நாம் உண்மையிலேயே இயேசுவை இறைமகன் என ஏற்று, நம்புகிறோமா?

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனில் உம்மைக் கண்டு ஏற்றிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்