டிசம்பர் 17 திருவருகை காலம்-மூன்றாம் வாரம், டிசம்பர் 17
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-17 ------------------------- டிசம்பர் – 17 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்றைய நற்செய்தி வாசகம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியலை நமக்கு வழங்குகிறது. இது நம் மூதாதையர்களின் முக்கியத்துவத்தை நமக்கு வலியுறுத்துகிறது. அவர்கள் இன்றி நாம் இங்கில்லை. ஆகவே இன்று நம் மூதாதயரை நாம் நினைக்க வேண்டும். நினைப்பதோடு மட்டும் நிறுத்தாமல் இரண்டு செயல்களிலும் இறங்குவது இன்றைய நாளுக்கு அதிக பலத்தைக் கொடுக்கும். 1. அவர்களைப் போல்... 2. அவர்களை விட... மனதில் கேட்க… மனதில் பதிக்க… தொடக்கநூல் 49: 1, 2, 8 – 10 ஒரு குடும்பத்தின் தலைவர் என்பவர், இஸ்ரயேல் மக்களின் வரலாற்றில் மிக மிக முக்கியமானவர். இஸ்ரயேல் குடும்பத்தை வழிநடத்திய தலைவர்கள், இறைவனோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்கள். ஒரு தலைவரின் இறப்பு என்பது, ஒரு பாரம்பரியத்தின் முடிவு. அந்த தருணத்தில், இதுநாள் வரை போற்றிப் பாதுகாத்த பாரம்பரியத்தை, இறையனுபவத்தை, தன்னுடைய குடும்பத்தினர்க்கு சொல்ல வேண்டியதும், அந்த இறையனுபவத்தில் அவர்களை வளர்க்க வேண்டியதும், ஒரு தலைவரின் கடமையாக இருக்கிறது. அதைத்தான், இன்றைய முதல் வாசகத்தில், யாக்கோபு தன்னுடைய புதல்வர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். எதிர்காலத்தில் நடக்கவிருப்பவற்றை, தன்னுடைய புதல்வர்களுக்கு அறிவிக்கிறார். இறைவனோடு நெருங்கியிருப்பவர்களால், எதிர்காலத்தில் நடக்கவிருப்பவற்றை அறிந்து, மற்றவர்களுக்கு அறிவிக்க முடியும் என்பதை, இங்கு மெய்ப்பிக்கப்படுகிறது. அது ஆசீவாதமாகவும் இருக்கலாம். எச்சரிக்கையாகவும் இருக்கலாம். ஆசீவாதம் என்பதற்காக எதையும் செய்து விடலாம் என்றில்லை. எச்சரிக்கை என்பதால், இனிமேல் நடப்பதற்கு ஒன்றுமில்லை என்று நம்பிக்கை இழப்பதற்கும் ஒன்றுமில்லை. இறுதி வரை இறைவனுக்கு பிரமாணிக்கமாக இருக்க வேண்டும் என்பதே, இந்த வாசகத்தின் மையச்செய்தியாக இருக்கிறது. நம்முடைய வாழ்விலும் எல்லா தருணத்திலும், இறைவனின் பிள்ளைகளாக வாழ ஆண்டவரிடம் மன்றாடுவோம். நாம் எப்போதும் அவருடைய பிள்ளைகள் என்கிற உணர்வோடு, இறைவன் எல்லா நன்மைகளையும் நமக்கு வழங்குவார் என்கிற நம்பிக்கையோடு, எப்போதும் ஆண்டவரில் இணைந்திருப்போம். அதற்காக முயற்சி எடுப்போம்.
---------------------------------------------------- உண்மையான உறவு எந்த ஒரு மனிதரைப் பற்றி அறிய வரும்போது, மக்களிடையே எழக்கூடிய இயல்பான கேள்வி, இவருடைய குடும்பம் எது? இவர் பிறந்த ஊர் எது? போன்றவை. மத்தேயு நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தியை யூதர்களுக்கு எழுதுகிறார். இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர் யூதர்களுக்கு அறிவிக்க வேண்டுமென்றால், அதற்கேற்றாற்போல, தன்னுடைய நற்செய்தியை அவர் எழுத வேண்டும். யூதர்களின் வாழ்வில் மையம் கொண்டிருக்கிற முக்கியமானவர்கள், இயேசுவுக்கு நெருக்கமாக இருந்தால், அதை வைத்து, அவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பது எளிதானது. எனவே தான், மத்தேயு நற்செய்தியாளர் ஆபிரகாமை, நம் ஆண்டவர் இயேசுவுக்கு தொடக்கமாக தருகிறார். ஆபிரகாம் யார்? எதற்காக ஆபிரகாமை இயேசுவின் தொடக்கமாக மத்தேயு நற்செய்தியாளர் எழுத வேண்டும்? ஆபிரகாம் இஸ்ரயேல் மக்களின் தந்தை என்று அழைக்கப்படுகிறவர். மிகப்பெரிய இறைவாக்கினராகக் கருத்தப்பட்டவர். அவர் வழியாகத்தான் கடவுள் தங்களை தேர்ந்து கொண்டதாக மக்கள் நம்பினர். அதையே வழி, வழியாக ஏற்றுக்கொள்ளவும் செய்தனர். ஆபிரகாமுக்கு இணையானவராக அவர்கள் வேறு எவரையும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை. அந்த அளவுக்கு ஆபிரகாம் இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் ஒன்றாக இணைந்திருந்தார். எனவே தான், இயேசுவை அவருடைய வழித்தோன்றலாக அறிவிப்பதன் மூலம், மக்கள் வெகு எளிதாக இயேசுவை ஏற்றுக்கொள்ள முடியும் என்று நம்பி, மூதாதையர் பட்டியலை அவர் எழுதுகிறார். நாம் அனைவருமே கடவுளின் பிள்ளைகளாகப் படைக்கப்பட்டிருக்கிறோம் நமக்குள் எப்போதும் இந்த எண்ணம் மேலோங்கியிருக்க வேண்டும். கடவுள் தான் நம் அனைவருக்கும் தந்தை. நாம் அவரின் பிள்ளைகள். அந்த எண்ணம் நமக்குள்ளாக இருந்தால், நிச்சயம் நம்மால் எல்லோரையும் அன்பு செய்து, நல்ல உறவோடு வாழ முடியும். ---------------------------------- இயேசுவே ஆண்டவர் யூதர்களுக்கு மூதாதையர் பட்டியல் என்பது முக்கியமானது. அவர்கள் ஒருவருடைய பிண்ணனி அறிவதிலும், அதன் அடிப்படையில் அவருக்கு மதிப்பும், மரியாதையும் கொடுப்பதில் கருத்தாயிருந்தனர். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. யூதர்களைப் பொறுத்தவரையில் தூய்மை இனம் என்ற கருத்தியலில் உறுதியாக இருந்தனர். கலப்பு என்பது அவர்களது வார்த்தையில் அருவருக்கத்தக்கது. எனவே தான், சமாரியர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே வெறுப்புணர்வு அதிகமாக இருந்தது. பெற்றோரோ அல்லது மூதாதையர்களோ கலப்பு மணம் புரிந்தவர்களாக இருந்தால், ஒருவர் யூதர் என அழைக்கப்படும் தகுதியையும், கடவுளின் மக்களாக கருதப்படும் தகுதியையும் இழந்துவிடுவார்கள். இறைவனுடைய பீடத்தில் பணிபுரிய விரும்பும் குரு, ஆரோனின் வழிவந்தவர் என்பதற்கான, சான்றை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், அவர் அந்த தகுதியை இழந்துவிடுவார். இந்த மூதாதையர் பட்டியல் தலைமைச்சங்கத்தால் நிர்வகிக்கப்பட்டது. ஏரோது, யூதர்களின் குறுநில அரசராக இருந்தாலும், அவன் ஈதோம் இனத்தைச்சார்ந்தவன். எனவே, அவன் யூதர்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இயேசு, தாவீதின் வழிவந்தவர் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தவே, இயேசுவைப்பற்றிய இந்த மூதாதையர் பட்டியல் எழுதப்பட்டது. இயேசு உண்மையிலே மெசியா. கடவுளின் மகன். தாவீதின் வழிவந்தவர் என்று, நற்செய்தியாளர் பல வழிகளில் வெளிப்படுத்தினர். இவ்வாறு, இயேசுவே ஆண்டவர் என்று அறிக்கையிட்டனர். நாமும் நமது வாழ்வில், இயேசு தான் நம் அனைவருக்கும் மெசியா, என்கிற உண்மையை, நமது வாழ்வு மூலமாக அறிக்கையிட வேண்டும். அதற்கு நாம் தகுதியான முறையில் வாழ வேண்டும்.
---------------------------------------------------------- கடவுளின் அருள் இயேசுவின் மூதாதையர் பட்டியலில் ஏறக்குறைய 40க்கும் மேற்பட்ட ஆண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் நான்கு பெண்களின் பெயர்களும் சொல்லப்படுகிறது. இஸ்ரயேல் குடும்பம் ஆண் வர்க்கச் சிந்தனையுள்ள குடும்பம். பெண்களின் நிலை குறிப்பிடும்படியாக இல்லை. அப்படியிருந்தும், இங்கே நான்கு பெண்களின் பெயர்கள் இருப்பது சற்று ஆச்சரியமளிக்கிறது. அந்த நான்கு பெண்களும் யூதரல்லாத வேற்று இனத்தவர் என்பது கூடுதலாக நாம் ஆச்சரியப்படும் செய்தி. யார் அந்த நான்கு பெண்கள்? தாமார் (1: 3) ஒரு கானானியப்பெண், ரூத்து (1: 5) ஒரு மோவாபியப்பெண், இராகாபு (1: 5) ஒரு எரிக்கோ நகரத்தைச் சேர்ந்த புறவினத்துப்பெண். உரியாவின் மனைவி பத்சேபா (1: 6) இத்தியப்பெண், அவர்களுடைய வாழ்வும் போற்றுதற்குரிய வாழ்வு அல்ல. மாறாக, சமூகத்தின் பார்வையில் கறைபடிந்த வாழ்வு. தொடக்க நூல் 38ல், தாமார் தன் மாமனாரோடு உடலுறவு கொள்கிறாள். ரூத்துவின் நடத்தையில் நாம் குறை காணவில்லை என்றாலும், அவள் ஒரு மோவாபியப்பெண். இணைச்சட்டம் 23: 3 மோவாபியர்களை ஆண்டவரின் மக்களிடமிருந்து ஒதுக்கப்பட்டவர்களாக சொல்லப்படுகிறதை நாம் பார்க்கிறோம். ”அம்மோனியரும் மோவாபியரும் அவர்களது பத்தாம் தலைமுறை வரைக்கும், அவர்களைச் சார்ந்த எவரும் எக்காலத்திலும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையக்கூடாது. யோசுவா இரண்டாம் அதிகாரத்தில், இராகாபு விலைமாது என்று பார்க்கிறோம். தாவீது பத்சேபாவோடு செய்த பாவம் அனைவரும் அறிந்ததே. ஆக, மூதாதையர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அனைவருமே, கறைபடிந்த பெண்களாக இருக்கின்றனர். ஆனாலும், ஆண்டவர் அவர்களைத் தேர்ந்துள்ளார். மற்றவர்களை நாம் தீர்ப்பிடுவது என்பது தவறான செயல். யாரையும் நாம் தீர்ப்பிட முடியாது. கடவுளின் பார்வை வித்தியாசமானது. மற்றவர்களைத் தீர்ப்பிடாத மனதைக்கடவுளிடம் வேண்டுவோம். கடவுளின் அருள் யாருக்குக் கிடைக்கப்பெற்றாலும், அவர்களை ஏற்றுக்கொள்வோம்.
-------------------------------------------------------- இயேசுவின் தலைமுறை அட்டவணை !இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே, மத்தேயு நற்செய்தி இயேசுவின் தலைமுறை அட்டவணையோடுதான் தொடங்குகிறது. ஒரு மனிதரின் தலைமுறை வரிசையை எண்ணிப் பார்ப்பது, மத்தேயுவின் காலத்தில் எவ்வளவு முக்கியமானதாக இருந்ததோ, அதுபோலவே இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டிலும் முக்கியமானதாகத்தான் இருக்கிறது. ஒரு மனிதரின் நற்பண்புகளும், நல்லியல்புகளும் பெற்றோர் மற்றும் முந்தைய தலைமுறையினரிடமிருந்தே அவருக்கு வருகின்றன என்பதை நாம் அறிவோம். உள நலப் பண்புகள், படைப்பாற்றல், தலைமைப் பண்பு, நோய் எதிர்ப்பு ஆற்றல், அறிவுக் கூர்மை போன்றவை அனைத்துக்கும் நாம் மட்டுமல்ல பொறுப்பு. நமது முன்னோரிடமிருந்தே நாம் பெற்றுக்கொள்கிறோம் என்பதை இன்று அறிவியல் நன்கு எண்பித்துவிட்டது. எனவே, நல்ல முன்னோரிடமிருந்து உடல், உள்ள, சமூக நலனைப் பெற்றுக்கொள்கிறோம். நமது முன்னோர் ஆற்றலும், நன்மைத்தனமும் குறைந்தவர்களாக இருந்தால், நாமும் அப்படியேதான் இருப்போம், பெரிய முயற்சிகள் எடுக்காவிட்டால். எனவே, தலைமுறை அட்டவணை என்பது இன்றளவும் முக்கியமானதாக இருக்கிறது. எனவே, வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லும் மிகப் பெரிய செல்வம் இன்றைய நல்ல தலைமுறைதான். எனவே, நாம் உடல், உள்ள, ஆன்ம நலத்தோடு வாழ்ந்து, அடுத்த தலைமுறையும் அவ்வாறே வாழ வழிவகுப்போம். மன்றாடுவோம்: ஆண்டவரே, தலைமுறை தலைமுறையாக நீரே எங்களுக்குப் புகலிடமாய் இருக்கிறீர் (திபா 90:1). எனவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் முன்னோருக்காக, முந்தின தலைமுறையினர் எங்களுக்கு விட்டுச் சென்ற நன்மைகளுக்காக நன்றி கூறுகிறோம். வருங்கால தலைமுறைகளுக்காக நாங்கள் நிறைவான வாழ்வு வாழ எங்களுக்கு வரம் அருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். -- அருள்தந்தை குமார்ராஜா ----------------------------- ''தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் அன்பார்ந்த இணைதள நண்பர்களே! -- எபிரேய மக்கள் தங்கள் மூதாதையர் பட்டியலைத் தயாரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். பொதுவாகவே மனிதர் தங்கள் குடும்ப வரலாற்றைப் பற்றி அறிவதில் அக்கறை காட்டுவார்கள். ஆனால் அந்த வரலாறு பல முறையும் எழுத்தில் அமைந்த பதிவுகளாக இருப்பதில்லை. மாறாக, வாய்மொழி வழியாகத் தலைமுறை தலைமுறையாக அந்த வரலாறு பாதுகாக்கப்படும். இஸ்ரயேல் மக்களிடையேயும் இந்த வழக்கம் நிலவியது. தங்கள் மூதாதையர் யார் என்பது பற்றி அவர்கள் பதிவு செய்த குறிப்புகள் பல நூற்றாண்டுகளாக வாய்மொழி வடிவில் இருந்து பின்னர் எழுத்து வடிவம் பெற்றன. மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் வரலாற்றை எழுதப் புகுந்த போது இயேசு தாவீதின் வழி வந்தவர் என்றும், ஆபிரகாமின் வழி வந்தவர் என்றும் முதல் வரியிலேயே குறிப்பிடுகிறார். ஏன் தாவீது, ஏன் ஆபிரகாம் என்னும் கேள்வி எழுகிறது. தாவீது என்பவர் இஸ்ரயேல் என்னும் வட நாட்டையும் யூதா என்னும் தென் நாட்டையும் ஒன்றிணைத்து ஒரு பெரிய அரசாக மாற்றி ஆட்சி செய்தவர். அவருடைய பெருமை விவிலியத்தில் பல இடங்களில் போற்றப்படுகிறது. ஆனால் தாவீது குற்றம் குறைகள் நிறைந்த மனிதரே. அவருடைய ஆட்சியில் விளங்கிய சிறப்பைவிட அதிகச் சிறப்பைக் கொணர வல்ல ஒருவர் பிறப்பார் என்றும், அவர் தாவீதின் வழி வந்து, கடவுளால் திருப்பொழிவு பெற்றவராக (''மெசியா'') மக்களை நீதி நேர்மையோடு ஆட்சி செய்வார் என்றும் இறைவாக்கினர் முன்னுரைத்தனர். மத்தேயு நற்செய்தியாளர் தம் நூலின் தொடக்கத்திலேயே இயேசு தாவீதின் வழி வந்தவர் என்பதைக் குறிப்பிடுகிறார். தாவீதின் வழி வந்ததால் இயேசு உண்மையான ''மெசியா'' என்பதையும் மத்தேயு குறிப்பாய் உணர்த்துகிறார். -- மேலும், இயேசு ஆபிரகாமின் வழி வந்தவர் என்பதையும் மத்தேயு தெரிவிக்கிறார். ஆபிரகாம் என்பவர் இஸ்ரயேல் மற்றும் யூத குல மக்களுக்குத் தந்தை என அழைக்கப்படுகிறார். ஆபிரகாம் தாம் வாழ்ந்துவந்த நாட்டை விட்டு, கடவுள் அவருக்குக் காட்டிய நாட்டுக்குச் சென்றார். கடவுளுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, தம் சொந்த மகனாகிய ஈசாக்கைக் கடவுளுக்குப் பலியாக்கிடவும் முன்வந்தார். எனவே, கடவுள் மீது ஆபிரகாம் கொண்ட நம்பிக்கை மிக ஆழமானதாக இருந்தது. மத்தேயு நற்செய்தியில் இயேசு ''ஆபிரகாமின் மகன்'' எனக் குறிக்கப்படுகிறார் (மத் 1:1). இயேசு புதியதொரு மக்கள் குலத்திற்குத் தலைவராக ஏற்படுத்தப்படுகிறார் என்னும் உண்மையை இங்கே காண்கிறோம். மேலும் கடவுள்மீது இயேசு முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தார். தம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, அவருடைய திட்டத்தை இவ்வுலகில் செயல்படுத்துவதே இயேசுவின் வாழ்க்கைக் குறிக்கோளாக இருந்தது. அவர் ஆபிரகாமின் மகன் என்னும் முறையில் நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார். தாவீதுக்கும் ஆபிரகாமுக்கும் மகனாகப் பிறந்தவர் இயேசு என்பதிலிருந்து நாம் இயேசுவின் மனிதப் பண்பை அறிகிறோம். கடவுளிடமிருந்து புறப்பட்டு வந்து, கடவுளின் மகனாக வரலாற்றில் நம்மிடையே தோன்றிய இயேசு உண்மையிலேயே மனிதராகவும் இருந்தார். மனித வாழ்வு எவ்வாறு அமைய வேண்டும் என நமக்கு வழி காட்டித் தந்தார். அவரை நம் வாழ்வின் மையமாகக் கொண்டு செயல்பட நாம் அழைக்கப்படுகிறோம். மன்றாட்டு
''யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. அன்பார்ந்த இணைதள நண்பர்களே! -- இயேசுவின் மூதாதையர் யார் என்னும் கேள்விக்குப் பதில் தருவதாக அமைந்துள்ள நற்செய்திப் பகுதி மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்தில் உள்ளது (மத் 1:1-17). இதில் சில சிறப்புக் கூறுகள் உண்டு. பொதுவாக இன்னாரின் தந்தை இன்னார் என்று வரிசைப்படுத்துவதே எபிரேய வழக்கம். ஆனால் இயேசுவின் மூதாதையர் பட்டியலில் நான்கு பெண்களின் பெயர் வருகிறது (தாமார், இராகாபு, ரூயஅp;த்து, உரியாவின் மனைவி பத்சேபா (காண்க: 2 சாமு 11:3) என்னும் இந்நான்கு பெண்களுமே வெவ்வேறு வகைகளில் சமுதாயத்தின் ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள். இவர்களும் இயேசுவின் மூதாதையராகக் குறிக்கப்படுவது வியப்புக்குரிய செய்தியே. அதைவிடவும் வியப்புக்குரியது இயேசுவின் தாய் கணவரின் துணையின்றி இயேசுவைக் கருத்தரித்து மகவாக ஈன்றளித்தது ஆகும். யோசேப்பின் வழியில் இயேசு தாவீது மன்னரின் வாரிசாகிறார். ஆனால் மரியா வழியாக அவர் கடவுளின் வல்லமையால் மனிதக் குழந்தையாகப் பிறக்கிறார். -- இயேசுவின் மனித வாழ்க்கையின் தொடக்கமே ஒழுங்கிற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. கடவுள் கொணர்கின்ற ஒழுங்கு மனித கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதை இங்கே காண்கின்றோம். குறையுள்ள மனிதரின் துணையோடு கடவுள் குறையற்ற செயல்களை நிகழ்த்த முடியும். வரம்புக்கு உட்பட்ட மனித சக்தியைவிட கடவுளின் சக்தி வலிமை வாய்ந்தது. இதை நம் வாழ்வு அனுபவத்திலிருந்து நாம் அறிகிறோம். மனித வலுவின்மையில் கடவுளின் வல்லமை துலங்குகிறது. இக்கருத்தைப் பவுல் அழகாக விளக்கியுள்ளார். எப்போது நாம் நம் சொந்த சக்தியைப் பெரிதாக எண்ணுகிறோமோ அப்போது அது குறையுள்ளது என்பதையும் கடவுள் நமக்கு உணர்த்திவிடுகிறார். நம் பட்டறிவு நமக்குப் பாடம் புகட்டியபின் நாம் மீண்டும் கடவுளை அணுகிச் சென்று அவருடைய கைகளில் நம்மை ஒப்புவிக்கும்போது நம் வாழ்வு ஒளிபெறும். மன்றாட்டு --அருட்திரு பவுல் லியோன் வறுவேல் ---------------------------------- குல பெருமை காப்போம் அன்பார்ந்த இணைதள நண்பர்களே! இது என்ன பெயர் பட்டியல் என்று நம்மில் பலர் இதில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் நற்செய்தியாளர் மத்தேயு இதை எழுதியதில் பொருள் உள்ளது. தன்னுடைய கிறிஸ்து இறையியலை இப்பகுதியில் மத்தேயு உள்ளடக்கியுள்ளார். தன்னுடைய நற்செய்தியை யூதருக்கு எழுதியதால், கிறிஸ்து தாவீதின் வழித்தோன்றல் என்னும் செய்தியையும், ஆபிரகாமின் வாரிசு என்பதையும் உறுதிப்படுத்த இவர்களை முன்னிலைப்படுத்தி முதன்மைப்படுத்தி தன் நற்செய்தியைத் தொடங்குகிறார். --அருட்திரு ஜோசப் லியோன்
|