புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா

முதல் வாசகம்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-5,12-14,16


அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: ``நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். எனது பெயருக்காகக் கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாய் இருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 89: 1-2. 3-4. 26,28

பல்லவி: அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்.

1 ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்;
நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்;
உமது உண்மை வானைப் போல் உறுதியானது. -பல்லவி

3 நீர் உரைத்தது: `நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்;
என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்;
உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்'. -பல்லவி

26 `நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான்.
28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்;
அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். -பல்லவி



இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13, 16-18, 22

சகோதரர் சகோதரிகளே, உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை; நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது. ஆகவே கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும் - திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப் போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும் - உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை. ஏனெனில் ``எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்'' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள்மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார். ``உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்'' என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாதது போல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார். ஆகவே அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார். ``அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!

ஆண்டவரே, உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். அல்லேலூயா.

மத்தேயு 1:16, 18-21,24

(புனித யோசேப்பு விழா)

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 16, 18-21, 24


யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு. இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழுமுன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ``யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்'' என்றார். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக் கொண்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

அல்லது

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-51

அக்காலத்தில் ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்.

விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒரு நாள் பயணம் முடிந்த பின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர்.

அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, ``மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே'' என்றார்.

அவர் அவர்களிடம், ``நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?'' என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------

மத்தேயு 1: 16, 18 – 21, 24
நிழல்களாக

இந்த உலகத்தை ஆட்டிப்படைத்த கொடிய நோய் கொரோனா தொற்று என்பதை நாம் அறிவோம். அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை திரைக்கு வெளியில் வாழ்ந்த செவிலியர்கள், மருத்துவர்கள் தான் இவர்களுக்கு நிழலாக விளங்கினார்கள். தமிழ்நாட்டில் ஒரு காலக்கட்டத்தில் உடன்கட்டை, கள்ள சாராயம் கொடிகட்டி பறந்தது நாம் அறிந்ததே. இன்று அத்தகைய துன்பங்களில்லாத சமுதாயமாக காணப்படுகிறது என்றால் பெரியார் அதற்கு நிழலாக காணப்பட்டார். இப்படி பல மனிதர்கள் திரைக்கு பின்னால் இருந்து பலவற்றிற்கு நிழலாக இருந்து இருக்கிறார்கள்.

அது போன்று தான் இந்த உலகம் மீட்பு அடைய நிழலாக இருந்த ஒரு மாமனிதனுக்குத் தான் இன்றைய நாளிலே திருஅவை திருவிழா எடுத்து சிறப்பிக்கின்றது. விவிலிய வரலாற்றிலே மிகவும் குறைவாக பேசப்பட்ட ஒரு மனிதர் என்றால் அது யோசேப்பாகத்தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் விவிலியத்திலே வாய் பேசாத மனிதனாக இருந்தவரும் யோசேப்பு என்று கூறினால் அது மிகையாகாது. எகிப்தில் பஞ்சம் ஏற்பட்டு பார்வோனிடம் உணவுக்காக எகிப்தியர்கள் ஓலமிட்ட போது வெளிவந்த பார்வோன், யோசேப்பிடம் செல்லுங்கள் என்ற சொல்லாடல் புனித யோசேப்பில் கொண்டிருக்கும் அளவற்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் சொல்லாடலாகப் பார்க்கப்படுகிறது. பார்வோன் எகிப்தியர் அனைவரையும் நோக்கி, யோசேப்பிடம் செல்லுங்கள், அவர் சொல்வதைச் செய்யுங்கள் என்கிறார். அவர் தம் உடன்பிறந்த சகோதரர்களுடைய பொறாமையின் காரணமாக அடிமையாக இருப்பதற்காக விற்கப்பட்ட யாக்கோபின் மகனாகிய யோசேப்பே பார்வோனால் குறிப்பிடப்படுகிறார். எந்த அளவிற்கு அவர் நிழலாக செயல்பட்டார் என்பதனை புரிந்து கொள்ள முடிகிறது.

நாம் எதற்கு நிழலாக இருக்கின்றோம். அநீதிக்காகவா? அல்லது சமுதாய முன்னேற்றத்திற்காகவா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

==========================

மத் 1:16, 18-21,24
தன்னைக் கரைக்க

தவக்காலத்தில் நாம் கொண்டாடும் விழாக்களில் மிகவும் முக்கியமானது தூய வளனாரின் பெருவிழா. இத்தவக்காலத்தில் இவரை நாம் நினைவு கூர்வது இன்னும் அதிகமாக இத்தவக்காலத்தை வாழ்வாக்க எளிதாக இருக்கும். காரணம் இவர் மௌனத்தில் பேசியவர், பேசியதைக் காட்டிலும் செயலினால் அதிகம் இறைத் திருவுளத்தை நிறைவேற்றியவர். உப்பாக, ஒளியாக இருங்கள் என்று சொன்ன நம் ஆண்டவரின் வார்த்தைகளை உலகின் உப்பாக இருந்து வாழ்ந்து காட்டியவர். நேற்றைய நற்செய்தியில் ‘தீர்ப்பிடாதீர்கள்’ என்ற இறைவார்த்தையை தன் வாழ்க்கை மந்திரமாகக் கொண்டவர். உன் உள் அறைக்கு சென்று செபி என்ற இறைவார்த்தை தன்வார்த்தையாக்கியவர். இதுவரைக்கும் இத்தவக்காலத்தில் நாம் பார்த்த அனைத்து நற்செய்தியின் மதிப்பீடுகளின் மறுஉருவமே இன்றைய விழா நாயகர் தூய வளனார். தன் விருப்பு வெருப்புகளை இறைவனின் விருப்பத்திற்காக கரைத்துக் கொண்டவர். தன்னால் முடிந்தவரை நல்லவர்களின் நற்பெயருக்கு கலங்கம் வராதபடி தன்னையே கட்டி கோட்டையாகப் பார்த்துக் கொண்டவர்.

மொத்தத்தில் இத்தவக்காலம் நம் கண்முன் காட்டுகிற தூய வளனார், நம் அனைவருக்கும் ஒரு முன் உதாரணம். இறைவனின் திருவுளத்தை எப்படி அறிந்து செயல்படுவது என்பதற்கு அவரே நம் அனைவரின் மாதிரி. அவரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவரின் அன்பு மகன் இயேசுவின் மதிப்பீடுகளை நம் வாழ்வாக்குவோம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

============================

திருப்பாடல் 89: 1 – 2, 3 – 4, 26 – 28
”அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்”

பொதுவாக, திருப்பாடல்கள் வேண்டுதல்களோடும், விண்ணப்பங்களோடும் தொடங்கும். இறுதியில் கடவுள் புகழ்ச்சியோடு முடிவடையும். ஆனால், இந்த திருப்பாடல் சற்று வித்தியாசமானது. புகழ்ச்சியோடு தொடங்குகிறது. வேண்டுதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவடைகிறது. தாவீதோடு கடவுள் கொண்டிருந்த உடன்படிக்கையை இது நினைவுபடுத்துவதாக அமைகிறது.

கடவுள் தாவீதோடு என்ன உடன்படிக்கையை ஏற்படுத்தினார்? 2சாமுவேல் 7 வது அதிகாரத்தில், கடவுள் தாவீதோடு செய்து கொண்ட உடன்படிக்கைப் பற்றி தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதில் தாவீதின் வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும் என்கிற வாக்குறுதி வழங்கப்படுகிறது. அந்த உடன்படிக்கையைக் கேட்டவுடன் நிச்சயம் தாவீது கடவுளின் அன்பை எண்ணி உள்ளம் மகிழ்ந்திருப்பார். ஏனென்றால், கடவுள் தாவீதை உயர்வான இடத்தில் வைத்திருந்தார். ஆடு மேய்க்கிற சாதாரண இடையனை, இஸ்ரயேல் மக்களை வழிநடத்தக்கூடிய அளவுக்கு உயர்த்தியிருந்தார். ஆனால், தாவீதோ அந்த நன்றியுணர்வு இல்லாமல், தவறு செய்தான். கடவுளுக்கு எதிராக பாவம் செய்தான். ஆனாலும், கடவுள் அவன் செய்த பாவங்களையெல்லாம் மன்னித்து, அவனுக்கு இன்னும் மிகப்பெரிய பாக்கியத்தை வழங்கியதை எண்ணிப்பார்த்து, தாவீது மகிழ்ச்சியடைகிறார்.

கடவுளிடத்தில் உண்மையான மனநிலையோடு, திறந்த உள்ளத்தோடு நமது பாவங்களை அறிக்கையிட்டு, தாவீதைப்போல மன்றாடுகிறபோது, கடவுளின் மன்னிப்பை நிறைவாகப் பெற்றுக்கொள்கிறோம். அந்த உண்மையான மனமாற்றத்தை, மனநிலையை ஆண்டவர் பாவியிடமிருந்து எதிர்பார்க்கிறார். அப்படிப்பட்ட இதயத்தை நாமும், ஆண்டவரிடத்தில் கேட்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

புனித சூசையப்பர் திருவிழா

திருக்குடும்பத்தின் தலைவராக இருந்து, குடும்பத்தை சவாலான காலக்கட்டத்தில், கடவுளின் திருவுளத்தை அறிந்து, அதனை சிறப்பாக வழிநடத்தியவர் புனித சூசையப்பர். தனக்குள்ளாக இருந்த குழப்பங்களுக்கு கனவு வழியே, தெளிவு பிறந்தபிறகு, கடவுளின் திருவுளம் இதுதான் என்றால், அதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன், என்று தனது வாழ்வு முழுவதும் பிரமாணிக்கத்தோடு வாழ்ந்தவர் இந்த புனிதர். நற்செய்தி நூல்களில் சொற்ப இடங்களில் மட்டுமே காணப்பட்டாலும், சிறப்பான எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்ந்தவர் புனித சூசையப்பர்.

இயேசுவின் வளர்ப்பு தந்தை சூசையப்பரின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 19 ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொடக்கத்தில் இந்த விழா வழிபாட்டு அட்டவணையில் இருந்ததை, எட்டாம் மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ”காப்டிக்” என்று அழைக்கப்படும் எகிப்து நாட்டு திருவழிபாட்டு மரபில், புனித சூசையப்பர் விழா ஜீலை 20 அன்று கொண்டாடப்பட்டதற்கான சான்றுகளும் உள்ளன. சிலுவைப்போர்களில் கிறிஸ்தவர்கள் வெற்றிபெற்றனர். அந்த வெற்றிக்கு நன்றியாக, சூசையப்பருக்கு ஆலயத்தைக்கட்டி, மார்ச் 19 ம் தேதி இவரது விழா கொண்டாடப்பட்டு வந்தது. சியன்னா நகர பெர்நார்டின் போன்ற பிரான்சிஸ்கன் துறவிகள், இவருக்கு அளிக்கப்படும் வணக்கம், மேலும் சிறப்புற முயற்சிகள் எடுத்து, அதில் வெற்றியும் பெற்றனர். கி.பி 1920 முதல் உரோமைய திருப்பலி நூலிலும் இந்த திருவிழா இடம்பெற்று, உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

புனித சூசையப்பரை பலவற்றிற்கு பாதுகாவலராக திருச்சபை ஏற்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து இந்த புனிதரின் சிறப்பை, திருச்சபை அவருக்கு அளித்திருக்கிற மகுடத்தை நாம் புரிந்து கொள்ளலாம். புனித சூசையப்பரிடம் நமது தேவைகளை நம்பிக்கையோடு எடுத்துச் சொல்வோம். பொறுமையின் சிகரமான புனித சூசையப்பர், நிச்சயம் நமது மன்றாட்டுக்களை, தனது பரிந்துரையின் மூலமாக இறைவனிடம் பேசி, நமக்குப் பெற்றுத்தருவார்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறைத்திருவுளம்

இன்றைக்கு தாய்த்திருச்சபை தூய யோசேப்பின் திருவிழாவைக் கொண்டாடுகிறது. யோசேப்பைப்பற்றி வெகுஅரிதாகத்தான் நற்செய்தியிலே நாம் பார்க்க முடியும். அவர் தாவீதின் வழிவந்தவர். நேர்மையாளர். குழந்தைக்கு நல்ல பாதுகாப்பான தந்தையாய் இருந்தார். பலவற்றை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப, தனது வாழ்வை அமைத்துக் கொண்டார்.

வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு நம்மால் பதில் கண்டுபிடிக்க முடியாது. அவற்றிற்கு விளக்கங்களும் நம்மால் சொல்ல முடியாது. யோசேப்பின் வாழ்விலும் கூட பல கேள்விகளுக்கு அவரால் பதில் கண்டுபிடித்திருக்க முடியாது. எதற்காக தான் மரியாளை ஏற்றுக்கொள்ள வேண்டும்? அதனால் அவருக்கு கிடைக்கக்கூடிய அவப்பெயர் என்ன? மரியாள் எப்படி தூய ஆவியினால் கருத்தரித்திருக்க முடியும்? இதை நம்ப முடியுமா? இந்த உலகம் தன்னை எப்படிப்பார்க்கும்? எதற்காக தான் வாழ்க்கை முழுவதும், இந்த குடும்பத்திற்கு காவலாக இருக்க வேண்டும்? இப்படிப்பட்ட கேள்விகள் எல்லாம் அவருடைய உள்ளத்தைத்துளைத்திருந்தாலும், அந்த கேள்விகளுக்கான பதில் அவருக்கு தெரியவில்லை என்றாலும், அதைப்பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறார். அதற்கு, நிச்சயம், அவர் கடவுள் மீது வைத்திருந்த அளவுகடந்த நம்பிக்கை தான் காரணம். நம்பிக்கையாளராக இல்லாமல், யோசேப்பால் இத்தகைய வாழ்வு வாழ்ந்திருக்க முடியாது.

நமது வாழ்வில் நாம் யோசேப்பிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்: நம்பிக்கை. நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையாளர்களாய் இருக்க வேண்டும். நம்பிக்கை உணர்வோடு வாழ வேண்டும். வாழ்வில் விடைகாண முடியாத பல கேள்விகள் நம்மை வாட்டுகிறபோது, அவற்றைப் பொறுமையாக நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். நமது நம்பிக்கைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

பொறுமை

யூதர்களின் திருமணம் மூன்று நிலைகளைக்கொண்டது. முதலில் திருமணம் பேசிவைத்தல். அதாவது குழந்தைகளாக இருக்கிறபோதே, பெற்றோர்களாலோ அல்லது திருமணத்தரகர்கள் மூலமாகவோ இந்த பையனுக்கு, இந்தப்பெண்ணை பிற்காலத்தில் மணமுடிப்போம் என்று பேசி வைத்திருப்பார்கள். சிறுவயதில் ஒருவரையொருவர் பார்க்காமலே இதைப்பெரும்பாலும் முடித்துவைப்பர். ஒருவேளை அந்த சிறுவனோ, சிறுமியோ பெரியவர்களானபிறகு ஒருவருக்கு மற்றவருக்கு பிடிக்கவில்லை என்றால், இந்த உறவை முறித்துக்கொள்ளலாம். இரண்டாவது திருமண ஒப்பந்தம். இந்த திருமண ஒப்பந்த காலம் என்பது ஓர் ஆண்டாகும். இந்த திருமணஒப்பந்தத்தில் கணவன், மனைவிக்குரிய உரிமைகள் அவர்களுக்கு இல்லையென்றாலும், அவர்கள் கணவன், மனைவியாகவே கருதப்படுகிறார்கள். இந்த உறவை முறிப்பதற்கு கண்டிப்பாக விவாகரத்து பெற வேண்டும். இந்தகாலக்கட்டத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிற கணவன் இறந்துபோனால், ‘கணவனை இழந்த கன்னி’ என்று அந்தப்பெண் அழைக்கப்படுவாள். மூன்றாவது திருமணம். அதாவது, திருமணஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிற ஆண்டின் இறுதியில் முறைப்படி திருமணம் நடைபெறும்.

பொறுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு யோசேப்பு. வாழ்வை பொறுமையோடு அணுகுவதுதான் யோசேப்பின் வெற்றி. மரியா கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தி கேள்விப்பட்டதும், அவர் தன்னுடைய உணர்வுகளுக்கு இடமளித்து, மரியாவின் மீது கோபப்படவில்லை. மரியாவைப்பற்றி, அவளுடைய பண்புகளைப்பற்றி யோசேப்பு நிச்சயம் நன்றாக அறிந்திருப்பார். மரியாள் தவறிழைக்கக்கூடிய பெண் அல்ல என்பதும் யோசேப்புக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஏதோ நடந்திருக்கிறது? அது என்னவென்று தெரியவில்லை. தெரியாதவரை பொறுமையாக இருப்பது நல்லது என யோசேப்பு நினைக்கிறார். ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு சென்றுகொண்டிருக்கிறோம். மின்சாரம் தடைபடுகிறது. எங்கும் ஒரே இருட்டு. ஒன்றுமே தெரியவில்லை. அதிலிருந்து மீள ஒரே வழி, பொறுமையாக இருப்பதுதான். ஒருநிமிடம் பொறுமையாக இருந்தால், அந்த இருளுக்கு நமது கண்கள் பழக்கப்பட்டுவிடும். காரிருளில் நம்மால் நடக்கமுடியும். பதற்றத்தில் மின்சாரம் சென்றவுடன், அங்கும் இங்கும் நடந்தால் கீழே விழவேண்டியதுதான். இந்தப்பொறுமையை யோசேப்பு நமக்கு கற்றுத்தருகிறார்.

இந்த உலகம் வேகமான உலகம். இதிலே நிதானத்திற்கு இடமில்லை. எடுத்தோம், கவிழ்த்தோம் என்கிற நிலைதான். இன்றைக்கு பல திருமணங்கள் உடைவதற்கு காரணம் இந்த வேகம் தான். பொறுமை வாழ்விற்கு அவசியம். முடிவெடுக்கும் தருணங்களில், வாழ்க்கைத்துணையை தேர்வு செய்வதில், தேர்வு எழுதுவதில், கடவுளிடம் செபித்து காத்திருப்பதில் பொறுமை அவசியம். அத்தகைய பொறுமையை யோசேப்பிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாத நேர்மையாளர்!

திருக்குடும்பத்தின் பாதுகாவலரும், அனைத்துக் குடும்பங்களுக்கும் எடுத்துக்காட்டான தலைவருமான புனித சூசையப்படைய திருவிழாவை இன்று கொண்டாடுகிறோம்.

அவரைப் பற்றி அவர் ஒரு "நேர்மையாளர்" என நற்செய்தி நூல் சான்று பகர்கிறது. அவருடைய நேர்மைத்தன்மையின் ஓர் அடையாளமாக "அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல், மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதையே இன்றைய நமது சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம்.

ஒருவர் நேர்மையாளர் என்று சொல்வதற்கான அடையாளங்களுள் ஒன்று பிறரைப் பற்றி அவர் கொண்டிருக்கிற நல்லெண்ணம். "எல்லாரும் நல்லவரே", "அனைவரும் நேர்மையாளர்களே" என்னும் அடிப்படை மனநிலை ஒரு நேர்மையாளரின் அடையாளம். நேர்மையாளர்களே பிறரையும் நேர்மையாளர் என ஏற்றுக்கொள்வர். எனவே, சூசையப்பரும் மரியாவின்மீது நல்லெண்ணம் கொண்டு, அவரை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பவில்லை. பிறர்மீது அவர் கொண்ட நல்லெண்ணம், பரிவு அவரது நேர்மையின் ஓர் அடையாளம்.

நம் நல்ல தந்தை சூசையிடமிருந்து இந்த நற்பண்பை நாம் கற்றுக்கொள்வோம். "பிறர் நல்லவர், நேர்மையாளர்" என்னும் மனநிலையில் வளர்வோம். ஒருவேளை சிலர் நேர்மையாளர்களாக இல்லாவிட்டாலும், அவர்களை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல், அவரது நற்பெயரைக் கெடுக்காமல், அவர்களுக்கு உதவிசெய்ய முன்வருவோம்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, புனித சூசையப்பரைக் குடும்பங்களின் பாதுகாவலராகத் தந்ததற்காக உம்மைப் போற்றுகிறோம். அவரது நல்மாதிரியைப் பின்பற்றி, நாங்களும் நேர்மையாளர்களாய் வாழவும், பிறர்மீது நல்லெண்ணத்தில் வளரவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

இணையதள உறவுகளே

இன்று புனித சூசையப்பரின் திருவிழா. அவரின் பெயரைக் கொண்டுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் செபங்களும். புனித வளனாரிடம் இருந்த ஒரு நற்குணம் பொருப்பில் உள்ள அனைவருக்கும் அவசியம். அந்த நற்குணம் சரியான முடிவு எடுப்பது என்பது. இக்கட்டான நேரங்களில் சரியான பொருத்தமான முடிவு எடுப்பது குடும்ப தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கண்காணிப்பவர்களுக்கும் இருக்க வேண்டிய அத்தியாவசிய குணம். சிறந்த ஞானமும் நிதானமும் உள்ளவர்கள்தான் சரியான, நல்ல முடிவை உடனே எடுக்க முடியும்.

சூசையப்பரின் வாழ்வில் மனைவி ஒரு பிரச்சனை (மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது மத்1:18) பொருளாதாரம் ஒரு பிரச்சனை(இவர் தச்சருடைய மகன் அல்லவா? மத் 13:55). வீடு ஒரு பிரச்சனை(எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார் மத் 2:14) பிள்ளை ஒரு பிரச்சனை ("நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?"லூக் 1:49) ஒவ்வொரு கட்டத்திலும் சரியான முடிவெடுத்து யாருக்கும் பாதிப்பு இல்லாமல் சிறப்பாகச் செய்து முடிக்கிறார்.

அதற்குக் காரணம் அவரிடமிருந்த ஆன்மீகம். கடவுள் பக்தி. இறை நம்பிக்கை. அதில் கிடைத்த ஞானம்.அதனால் அவரிடம் இருந்த நிதானம்.அந்த நிதானம் வழங்கிய நிறைவு.அந்த நிறைவில் ஒரு நிம்மதி.நம் வாழ்விலும் இந்த ஆன்மீகத்கத்தை வளர்த்துக்கொண்டால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். வாழ்த்துக்கள்.

-ஜோசப் லீயோன்

''யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே
தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்'' (மத்தேயு 1:24)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசுவின் வாழ்க்கை, பணி, போதனை ஆகியவற்றை உள்ளடக்கிய நற்செய்தி நூல்கள் நான்கிலும் யோசேப்பு பற்றிய பகுதிகள் சிலவே. இயேசுவின் வளர்ப்புத் தந்தையாக யோசேப்பு கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டார். கடவுளுடைய திட்டம் நிறைவேற யோசேப்பு ஒத்துழைத்தார். அதுவே அவருடைய வாழ்க்கையைச் சிறப்படையச் செய்தது. யோசேப்பு கனவின் வழியாகக் கடவுளிடமிருந்து கட்டளை பெறுவதும், கடவுள் தருகின்ற வழிமுறைக்கு ஏற்ப நடப்பதும் பழைய ஏற்பாட்டு யோசேப்பின் கதையை நமக்கு நினைவூட்டுகிறது (தொநூ 37:5-11). அங்கே யோசேப்புவின் வாழ்க்கை பற்றிய முக்கிய செய்திகளைக் கடவுள் கனவில் அவருக்கு அறிவித்தார். இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பு பற்றி அதிக விவரங்கள் தரப்படாவிட்டாலும் ''யோசேப்பு நேர்மையாளராக இருந்தார்'' (காண்க: மத் 1:19) என்னும் செய்தி அவருடைய வாழ்க்கையைச் சுருக்கமாக நம் கண்முன் கொணர்கிறது. ''நேர்மையாளர்'' என்னும் சொல்லுக்கு விவிலியத்தில் தனிப்பொருள் உண்டு. அதாவது யார்யார் கடவுளுக்கு அஞ்சி, அவருடைய வழிகளைப் பின்பற்றி நடக்கின்றார்களோ அவர்கள் ''நேர்மையாளர்'' என அறியப்பட்டார்கள். யோசேப்பு இத்தகைய நேர்மையாளர் வரிசையில் வருகிறார்.

-- யோசேப்பின் ''நேர்மை'' எவ்வாறு துலங்கியது? முதலில், யோசேப்பு மரியாவின் கணவர் என்னும் முறையிலும் இயேசுவின் வளர்ப்புத் தந்தை என்னும் முறையிலும் அவர்களைப் பேணிப் பராமரித்தார் என்பதில் ஐயமில்லை. யோசேப்பு மரியாவைத் திருமணம் செய்துகொண்டு அவரோடு கூடிவாழ்வதற்கு முன்னரே மரியா கருவுறுகிறார். இச்செய்தியை அறிந்த யோசேப்பு அதிர்ச்சியடைகிறார். என்றாலும் மரியாவை இகழ்ச்சிக்கு உட்படுத்துவது சரியல்ல என அவர் முடிவுசெய்து மறைவாக விலக்கிடத் திட்டமிட்டபோது அவருக்கு உண்மை தெரியவருகிறது. ''மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்'' என்னும் செய்தி அவருக்குக் கடவுளிடமிருந்து கனவின் வழியாக வருகிறது. இதை யோசேப்பு எவ்விதத் தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்கிறார். யோசேப்பின் நேர்மை என்பது கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நடப்பதில் அடங்கியிருந்தது. இன்று இயேசுவின் சீடராக வாழ்வோர் யோசேப்பைப் போல ''நேர்மையாளர்களாக'' நடக்க அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்திலும் வாழ்விலும் நேர்மை விளங்கச் செய்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்