முதல் வாசகம்

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 1-6

அந்நாள்களில் கிலயாதில் குடியிருந்த திஸ்பே ஊரைச் சார்ந்த எலியா ஆகாபு அரசனிடம், �நான் பணியும் இஸ்ரயேலின் கடவுளான வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் வாக்கினாலன்றி, வரும் ஆண்டுகளில் பனியோ மழையோ பெய்யாது என்றார். பின்னர் ஆண்டவரின் வாக்கு எலியாவுக்கு வந்தது: �இங்கிருந்து ஓடிவிடு; கிழக்கு முகமாகப் போய் யோர்தானுக்கு அப்பாலுள்ள கெரீத்து ஓடையருகில் ஒளிந்து கொள். அந்த ஓடையில் தண்ணீர் குடித்துக்கொள். அங்கே உனக்கு உணவளிக்குமாறு காகங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன். அவ்வாறே அவர் போய் ஆண்டவரது வாக்கின்படி செய்தார். அவர் சென்று யோர்தானுக்கு அப்பாலிருந்த கெரீத்து ஓடையருகில் தங்கியிருந்தார். காகங்கள் காலையிலும் மாலையிலும் அப்பமும் இறைச்சியும் அவருக்குக் கொண்டு வந்தன. ஓடையில் தண்ணீர் குடித்துக் கொண்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 121: 1-2. 3-4. 5-6. 7-8

பல்லவி: விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவர் எனக்கு உதவிடுவார்.

1 மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்!
எங்கிருந்து எனக்கு உதவி வரும்?
2 விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே
எனக்கு உதவி வரும். -பல்லவி

3 அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்;
உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார்.
4 இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதும் இல்லை;
உறங்குவதும் இல்லை. -பல்லவி

5 ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்;
அவர் உம் வலப் பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்!
6 பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது;
இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. -பல்லவி

7 ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்;
அவர் உம் உயிரைக் காத்திடுவார்.
8 நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும்
எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.

மத்தேயு 5:1-12

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: ``ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

முரண்பாடாண ஆசீர்வாதங்கள்!

மத்தேயு 5: 1-12

சிலுவையில் ஒரு மனிதனின் மரணத்தின் மூலம் உங்களுக்கு அமைதியும், மன்னிப்பும், நிலை வாழ்வும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது வரலாற்றில் மிகப்பெரிய முரண்பாடு. மரணத்திலிருந்து உயிர் எப்படி வரும்? இறந்த மனிதன் கல்லறையில் வைக்கப்படுவது எவ்வாறு கடவுளின் நீதியை நமக்குக் கொண்டுவருகிறது? பவுல் தனது கடித்த்தில் கூறுவது போல், "சிலுவை அழிந்து போகிறவர்களுக்கு முட்டாள்தனம், ஆனால் நமக்கு அது கடவுளின் வல்லமை." தொடர்ந்து அவர் கூறுகிறார், "கடவுளின் முட்டாள்தனம் மனிதர்களை விட ஞானமானது, கடவுளின் பலவீனம் மனிதர்களை விட வலிமையானது." சிலுவை என்பது முட்டாள்தனம், அது நம்பிக்கையற்றவர்க்கு எந்த அர்த்தமும் கொடுப்பது இல்லை, ஆனால் கிறிஸ்தவர்களுக்கு, அது உண்மையில் கடவுளின் ஞானம், மற்றும் உலகில் உள்ள அனைத்தையும் விட மேலான ஒன்றை உணர்த்துகிறது. நாம் கடவுளின் மகன்கள்/மகள்கள் என்பதையும் மன்னிக்கப்படுகிறோம் என்பதையும் உணர்த்துகிறது. அவருடைய பலவீனமே நமது மாட்சியின் சக்தியாக மாறியது. இது ஒரு முரண்பாடான ஒன்றுதான். ஏனெனில் இது உலகத்தின் போக்கில் நடைபெற முடியாத ஒன்று.

ஆசீர்வாதங்கள் என்பது கடவுள் உங்களுக்கு வழங்கும் வெகுமதி மேலும் அவை உலகின் பார்வையில் முரண்பாடாகத் தோன்றினாலும், கடவுளுக்கு அப்படி இல்லை. இந்த முரண்பாடான ஆசீர்வாதங்கள் நீங்கள் எதிர்பார்க்க வேண்டிய ஆசீர்வாதங்கள் அல்ல; இந்த ஆசீர்வாதங்கள் இப்போது உங்களுடையவை. விண்ணரசு உங்களுடையது, அதை யாராலும் பறிக்க முடியாது. உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டன என்பதை அறிந்து நீங்கள் ஆறுதலடையலாம். நீங்கள் பசித்திருப்பதாலும், இறைவனுடைய நீதிக்காக ஏங்குவதாலும் நீங்கள் பேறுபெற்றவர்கள். எனவே கடவுளின் ஆசீர்வாதங்களைக் கேட்டு, அவை உங்களுக்காகனவை என்று நம்புங்கள், ஏனென்றால் நீங்கள் கடவுளின் ஆசீர்வதிக்கப்பட்ட சீடர். கடவுள் புனிதப்படுத்திய பாவிகள் தான் நாம் என்பது மிகப்பெரிய முரண்பாடுகளில் ஒன்றாகும்.

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ.

........................................................................

மத்தேயு 5: 1 - 12
மகிழ்ச்சி

2013 ம் ஆண்டு நமது திருத்தந்தை எழுதிய ‘நற்செய்தியின் மகிழ்ச்சி’ என்ற திருத்தூது இதழில் மகிழ்ச்சிக்கான காரணம் என்ன என்பதனை ‘துன்பமும் துயரமும் கரைவதே’ என்றும் கூறுகின்றார். கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்னதாக வந்த ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகர் தன்னுடைய கதாபாத்திரத்தின் எல்லா சூழ்நிலையிலும் கூறக்கூடிய வார்த்தை: மகிழ்ச்சி. தாயின் வயிற்றில் கரு தங்கியிருக்கிறதா அல்லது இல்லையா என்று வினவ, மருத்துவரிடம் செல்கின்றபோது, மருத்துவர் கூறுகின்ற வார்த்தை கணவருக்கும், மனைவிக்கும் மகிழ்ச்சி. இத்தகைய மகிழ்ச்சி வெளியிலிருந்து ஒரு நபரின் வழியாக நமது மனதிற்கு எட்டுவதாக அமைகிறது. இது உண்மையான மகிழ்ச்சி அல்ல. உண்மையான மகிழ்ச்சி எதில் இருக்கிறது என்பதனை உளவியல் சிந்தனையாளர் சிக்மண்ட் ப்ராய்ட் இவ்வாறு கூறுவார், “ஒருவனின் இன்பமோ, துன்பமோ, அதனை அவனுடைய சுய சிந்தனையில் கடக்க முயல்வதே மகிழ்ச்சி தரும்”. இது தான் உண்மையான மகிழ்ச்சி.

அத்தகைய ஒரு மகிழ்ச்சியைத் தான் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து பெற்றார். அதனை உணர்ந்து தான் மக்களை மகிழ்ச்சியாக இருக்க அழைப்பும் விடுக்கின்றார். இயேசு பெருமையுடன் முழங்கும் எட்டு பேறுகள் யூத மரபுக்கு அப்பாற்பட்டவை. இந்த மலைப்பொழிவினை விவிலிய பேராசிரியர்கள் இரண்டு விதமாக பிரித்து முதல் நான்கு வகை ‘பேறுபெற்றோர்’ வழியாக கடவுளோடும், மற்றொரு நான்கு வகை ‘பேறுபெற்றோர்’ வழியாக சகமனிதர்களோடும் நல்லதொரு உறவு வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளதாக கூறுவார்கள். அப்படிப்பட்ட உறவு தான் நம் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதனைத் தான் இன்றைய முதல் வாசகத்தில் பார்க்கின்றோம். ‘அனைவரும் ஆண்டவரை நாடுங்கள். ஏனென்றால் அவர் எல்லா சிக்கல்களையும் கடந்தவர். அதனால் தான் வலுவற்றவையில் தான் மகிழ்ச்சி என அறிந்து கொண்டார்’ என்று பவுல் இரண்டாம் வாசகத்தில் கூறுகின்றார். மகிழ்ச்சி சமுதாயத்திலே புறந்தள்ளப்பட்ட பாமர மக்களிடையே புகுந்து கிடக்கிறது என்பதனை வெளிப்படுத்தத்தான் சமுதாயம் எவையெல்லாம் புறந்தள்ளப்பட்ட குலமாக கருதியதோ அவர்களெல்லாம் பேறுபெற்றவர்கள் என கூறுகின்றார். அதனால் தான் பிறப்பின் செய்தியே புறந்தள்ளப்பட்ட இடையர்களுக்கு கொடுக்கப்பட்டது. மகிழ்ச்சி அதன் வழியாகத் தான் வெளிவருகிறது.

நான் மகிழ்ச்சியை எங்கே தேடுகிறேன்? வசதியிலா? அல்லது எளிமையிலா? பணத்திலா? அல்லது குணத்திலா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

=======================

பயன்படுத்தும் வார்த்தைகள்

”இயேசு திருவாய் மலர்ந்து” என்கிற வார்த்தையின் அர்த்தத்தை நாம் பார்ப்போம். இது ஏதோ, ஒரு அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் அல்ல. மாறாக, அர்த்தத்தோடு பயன்படுத்தப்பட்டிருக்கிற வார்த்தைகள். இந்த வார்த்தைகளுக்கு, கிரேக்க மொழியில் இரண்டு அர்த்தங்கள் தரப்படுகிறது. 1. கடவுளின் இறைவாக்கை அறிவிப்பதைச் சொல்லும் வார்த்தைகள். இந்த வார்த்தைகளுக்கு தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. இந்த வார்த்தைகளுக்கு தனி அழுத்தம் உண்டு. இந்த வார்த்தைகள் வழக்கமான சாதாரண அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் அல்ல.

இந்த வார்த்தையின் இரண்டாவது பொருள் 2. மக்கள் தங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து பேசுவதைக்குறிப்பது. இது சாதாரண போதனையல்ல. இயேசு பலமுறை மக்களுக்குப் போதித்திருக்கிறார். இந்தப் போதனையை சாதாரண போதனையோடு நாம் ஒப்பிடக்கூடாது. இது அதைவிட மேலானது. தனது உள்ளத்தின் ஆழக்கிடங்கை இயேசு வெளிப்படுத்துகிறார். இயேசுவை நேர்மையான உள்ளத்தோடு பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவருக்கும், இதுதான் வாழ்வின் மையமாக இருக்க வேண்டும், என்கிற ஆதங்கத்தோடு வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள். நாம் பொதுவாகப் பேசுவதற்கும், முக்கிய கூட்டத்தில் பேசுவதற்கும் வேறுபாடு உண்டு. இரண்டிற்குமே ”பேசுதல்” என்கிற வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறோம். அதுபோலத்தான், மத்தேயு தனது வார்த்தைகளை தனி அர்த்ததோடு பயன்படுத்துகிறார்.

நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் எல்லா நேரத்திலும் ஒரே பொருளை தருவதில்லை. வார்த்தைகள் ஒன்றாக இருந்தாலும் அதன் அர்த்தங்கள் மாறுபடுகிறது. எனவே, வார்த்தைகளைப் பயன்படுத்தும் விதத்தில் நாம் எச்சரிக்கை உணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். .இடத்திற்கும், சூழலுக்கும் தகுந்த வார்த்தைகளை நாம் பயன்படுத்த வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்,

ஏழைகள் என்றால் யார்? ஏழைகளுக்கு, விவிலியத்திலே இரண்டு வார்த்தைகள், கிரேக்க மொழியில் பயன்படுத்தப்படுகிறது. 1. Pநநௌ 2. Pவழமழள. Pநநௌ என்றால், நம்முடைய வழக்கிலே, அன்றாடங்காய்ச்சிகள் என்று, பொருள் கொள்ளலாம். தங்களுடைய உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவர்கள். இவர்கள் தினமும் உழைப்பதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, தங்கள் வாழ்க்கையை ஓட்டுபவர்கள். தங்களுக்கென்று, வேறு எதுவும் கிடையாது. உழைப்பை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள். Pவழமழள என்றால், தங்களுடைய ஒருவேளை உணவுக்காக கூட மற்றவர்களுடைய தயவை எதிர்பார்த்து இருப்பவர்கள். மனிதன் என்கிற தங்களுடைய மாண்பை இழந்து, மற்றவர்களிடம் கையேந்துபவர்கள். ஒருவேளை உணவு கிடைத்தாலும் உண்டு, இல்லையென்றால் பட்டினி என்ற நிலையோடு வாழ்பவர்கள்.

மத்தேயு நற்செய்தியிலே, இந்த இரண்டாவதாக பொருள்படக்கூடிய ஏழையைத்தான் இங்கே குறிப்பிடுகிறார். அதாவது, ஒருவேளை உணவுக்காகக்கூட, மற்றவர்களை எதிர்பார்த்து, சார்ந்து இருக்கக்கூடிய ஏழைகளை, இங்கே கூறுகிறார். அப்படியானால், ஏழையரின் உள்ளத்தவர்கள் என்றால் என்ன பொருள்: யாரெல்லாம், தங்களுடைய செல்வம், திறமை, அழகு, பதவி, பட்டங்கள் மீது நம்பிக்கை வைக்காமல், கடவுள் ஒருவர்தான் எங்களுடைய வாழ்க்கை, கடவுள் தான் எனக்கு எல்லாமே என்று, கடவுளை மையமாகக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் தான், ஏழையரின் உள்ளத்தவர். அப்படிப்பட்டவர், பணக்காரராகவும் இருக்கலாம். ஏழையாகவும் இருக்கலாம். ஒருவர் பணக்காரராக இருப்பதால், ஏழையரின் உள்ளத்தைக்கொண்டிருக்க முடியாது என்றில்லை. அதேபோல, ஒருவர் ஏழையாக இருப்பதால், ஏழையரின் உள்ளத்தைக் கொண்டிருப்பார் எனவும், கூற முடியாது.

அப்படிப்பட்ட ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றவர்கள் என, இந்த நற்செய்தி நமக்கு கூறுகிறது. பேறுபெற்றவர்கள் என்பதன் பொருள், பேரானந்தம், பேரின்பத்தைப் பெற்றவர்கள் என்று பொருள். அவர்களுக்கு, வேறு ஒன்றுமே இந்த உலகத்தில் தேவையில்லை. இறைவனை முழுமையாகப் பற்றிக்கொண்டு வாழும்போது நம் வாழ்வில் இத்தகைய பேரானந்தத்தைப் பெற்றுக்கொள்கிறோம். அத்தகைய பேரின்பத்தைப்பெற இறைவனிடம் மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

தெளிந்த சிந்தனை உள்ளவர்களாக…..

இயேசுவின் மலைப்பொழிவு இன்றைய நற்செய்தியாக நமக்குத்தரப்படுகிறது. இந்த மலைப்பொழிவு போதனையின் முக்கியத்துவத்தை இங்கே சிந்திப்போம். முதலில் இயேசு மலைமீது ஏறி அமர்ந்ததாக சொல்லப்படுகிறது. அமர்தல், உட்காருதல் என்பதற்கு ஆழமான பொருள் சொல்லப்படுகிறது. பொதுவாக, போதகர்கள் எழுந்து நின்று மக்களுக்குப்போதிப்பார்கள். ஆனால், அவர்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்து சொல்கிறார்கள் என்றால், அது அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அரசர் சிம்மாசனத்தில் அமர்ந்து சொல்வது, ஆயர் தன்னுடைய அதிகார இருக்கையில் அமர்ந்து போதிப்பதற்கு தனி விளக்கமே இருக்கிறது. இவை அவர்களின் அதிகாரத்தையும், போதனையின் முக்கியத்துவத்தையும் உறுதிப்படுத்துகிறது.

இயேசு திருவாய் அமர்ந்து போதிப்பதாகவும் நற்செய்தியாளர் சொல்கிறார். அதாவது இதயப்பூர்வமாக இயேசு போதிக்கிறார். உள்ளத்தின் ஆழத்திலிருந்து, உணர்வின் உறைவிடத்திலிருந்து இயேசுவின் வார்த்தைகள் வருகிறது. அவருடைய போதனையின் மைய அறிக்கைகள் தான் இந்த மலைப்பொழிவு. தான் யாருக்காக வந்திருக்கிறேன்? தன்னுடைய பணி யாருக்காக இருக்கப்போகிறது? கடவுளின் பிள்ளைகள் எப்படிப்பட்ட வாழ்வு வாழ்வதற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் இங்கே தெளிவாக்கப்படுகிறது. ஆக, தன்னுடைய நிலைப்பாட்டில், சிந்தனையியலில் இயேசு தெளிந்த சிந்தனையுடையவராக இருப்பது இங்கே வெளிப்படுகிறது.

நமது சிந்தனைகளும், எண்ணங்களும் அடிப்படையில் உயர்ந்தவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நமது செயல்பாடுகள் நல்லவகையாக இருக்கும். தெளிந்து சிந்தனையைத்தருகிறவர் கடவுள். சிந்தனையில் தெளிவு இருக்கும்போது, நம்மால் துணிவோடு பேச முடியும், எதைக்கண்டும் பயப்படாமல் மதிப்பீடுகளுக்கா நிற்க முடியும். அதற்கான அருளை இறைவனிடம் வேண்டுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

    --------------------------------------------------------

    இணையதள உறவுகளே

    நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இவ்வுலகு ஏகப்பட்ட போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்தது. பணம் சம்பாதிக்க வேண்டும். எந்த வழியிலாவது பதவி உயர்வு பெற்றுவிட வேண்டும் என்று யாருடைய கையை காலை பிடிக்கவும் பையை நிறைக்கவும் தயாராக இருக்கிற காலம்.அடித்து பிடித்து அள்ளிவிடத் துடிக்கும் காலகட்டம்.

    இந்த ஒரு காலகட்டத்தில், ஏழையரின் உள்ளத்தோர், துயருறுவோர், கனிவுடையோர்,நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர்,தூய்மையான உள்ளத்தோர்,அமைதி ஏற்படுத்துவோர்,நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் என்னும் பட்டியல் வகைக்கு உதவுமா என்ற ஐயம் எழலாம். நியாயமானதே. ஆனால் இத்தகையோரே வரலாற்றில் வாழவோர். அன்னை தெரேசா, மகாத்மா காந்தி இவர்கள் இம்மலைப்பொழிவுப் பகுதியால் ஈர்க்கப்பட்டு, தங்கள் வாழ்வை, அன்பு வழியிலும் அகிம்ஸை வழியிலும் வாழ்ந்து வரலாறு படைத்தனர். வரலாறு அவர்களை வாழ்த்துகிறது.

    இப்படி வாழ முடியாது. இது கஷ்டம் என்பதற்காக இக் கொள்கைகளை ஒதுக்குவதும் நடைமுறைப்படுத்த தயங்குவதும் மனித நேயத்திற்கு முரணானது. மனித இயல்பை புறக்கணிப்பதாகும். முழுமையாக இந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி, அம்முயற்சியில் முழுமை பெறாவிட்டாலும் நாம் பேறுபெற்றவராவோம். முயல்வோம். பேறு பெற்றோராவோம்.

    -ஜோசப் லீயோன்

    -------------------------------

--------------------------------------------------------

''நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்'' (மத்தேயு 5:6)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- ''தாகமுற்றோர்க்குக் கடவுள் நிறைவளித்தார்; பசியுற்றோரை நன்மைகளால் நிரப்பினார்'' எனத் திருப்பாடல்கள் நூல் கூறுகிறது (காண்க: திபா 107:5,9). பசியும் தாகமும் மனிதருக்கு இயல்பான அனுபவம். உணவும் நீரும் பசிதாகம் போக்க உதவுகின்றன. நீதியை நிலைநாட்ட வேண்டும் என்னும் ''வேட்கை''யும் அடிப்படையில் பசி, தாகம் போன்ற ஆவல்தான். அந்த வேட்கையை நாம் நிறைவுசெய்ய வேண்டும் என்றால் எத்தகைய நீதியை நிலைநாட்டுவது என்னும் கேள்வி எழுகிறது. பழைய ஏற்பாட்டில் ''நீதி'' என்பது கடவுள் தம் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை முழுமனத்தோடு கடைப்பிடிப்பதைக் குறித்தது. மத்தேயு ''நீதி'' என்னும் சொல்லை ஏழு முறை பயன்படுத்துகிறார். இயேசுவின் மலைப் பொழிவில் மட்டும் இச்சொல் ஐந்துமுறை வருகிறது (மத் 5:6,10,20; 6:1,33). தமிழ் மொழி பெயர்ப்பில் ''நீதி'', ''நெறி'', ''அறச்செயல்'', ''ஏற்புடையவை'', ''நீதிநெறி'' (காண்க: மத் 3:15; 21:32) என்னும் பல சொல்கள் ஒரே கருத்தை வலியுறுத்தும் வகையில் உள்ளன. எனவே, நாம் ''நீதிநிலைநாட்டுவதில் வேட்கை'' கொண்டிருக்க வேண்டும் என இயேசு கற்பிப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் விவிலியப் பார்வையில் நீதி எதைக் குறிக்கிறது என்பதை அறிவது தேவை.

-- இவ்வுலகில் மனிதர் எவ்வாறு வாழ வேண்டும் எனக் கடவுள் விரும்புகிறாரோ அவ்வாறு நாம் வாழ்ந்தால் நாம் நீதியைக் கடைப்பிடிக்கிறோம் என்பது பொருள். இது உறவுகளின் அடிப்படையில் எழுகின்ற ஓர் ஒழுங்குமுறை எனலாம். கடவுள் நம்மோடு உறவாடுகின்றார். அந்த உறவின் பயனை நாம் அனுபவிக்கின்ற அதே வேளையில் கடவுளோடு நாமும் நல்லுறவு கொள்வது ''நீதி'' ஆகும். கடவுள் எல்லா மனிதரையும் அன்புசெய்து அவர்களுக்குத் தம் வாழ்வில் பங்களிக்கின்றார். அதையே நம் வாழ்க்கை நெறியாக நாம் கொள்ளும்போது ''நீதி'' நம் வாழ்வில் துலங்கும். இறுதியாக, கடவுள் தாம் படைத்த உலகை அன்போடு பராமரிக்கின்றார். நாமும் படைப்புலகைப் பொறுப்போடு ஆண்டு நடத்தும்போது ''நீதி'' அங்கே துலங்கும். இத்தகைய வாழ்க்கை நெறியை இயேசு நமக்குக் கற்றுத் தருகிறார். அந்நெறிப்படி நாம் நடக்கும்போது எந்நாளும் நீடிக்கின்ற வாழ்வை, விண்ணக நாட்டை நாம் அடைவோம் என்பது இயேசு நமக்குத் தருகின்ற வாக்குறுதி (காண்க: மத் 5:6).

மன்றாட்டு
இறைவா, எங்கள் வாழ்வில் நல்லுறவுகள் நாளும் வளர்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

-------------------------
''இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.
அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: 'ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது'...'' (மத்தேயு 5:1-3)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- ''மலைப் பொழிவு'' என்னும் பெயரில் வருகின்ற மத்தேயு நற்செய்திப் பகுதி (மத்தேயு அதி. 5-7) தனிச் சிறப்பு வாய்ந்தது. அதன் தொடக்கத்தில் நாம் காண்பது ''பேறுபெற்றோர்'' என இயேசு கூறுகின்ற சொற்றொடர்கள். ஒன்பது முறை இச்சொல் வருகிறது (மத் 5:3-12). இயேசு ''பேறுபெற்றோர்'' என வாழ்த்துகின்ற மனிதர் யார் என்னும் கேள்விக்குப் பதில் கூறுவதுபோல அமைந்திருப்பது முதல் கூற்று ஆகும்: ''ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது'' (மத் 5:3). கடவுளாட்சியே மத்தேயு நற்செய்தியில் ''விண்ணரசு'' என அழைக்கப்படுகிறது. ''விண்'' என்னும் சொல் நாம் அண்ணாந்து பார்த்தால் தெரிகின்ற வானத்தைக் குறிப்பதில்லை; மாறாக, நம்மைக் கடந்து வாழ்கின்ற கடவுளைக் குறிக்கிறது. எனவே ''விண்ணரசு'' என்பது கடவுளின் ஆட்சி எனப் பொருள்படும். கடவுளின் ஆட்சியில் நாம் பங்கேற்க வேண்டும் என்றால் நாம் ''ஏழையரின் உள்ளத்தைக் கொண்டிருக்க வேண்டும்''. இங்கே ஏழையர் எனக் குறிக்கப்படுவோர் உலகச் செல்வங்கள் இல்லாமல் வறுமையில் வாடுவோர் மட்டுமல்ல. ஏழையர் என்போர் ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பிழைக்க வழியறியாமல் வாடுவோர், தங்கள் அன்றாட வாழ்க்கைக்குப் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோர், சமுதாயச் சம்பிரதாயங்களின் ஆதிக்கத்தின் காரணமாகக் கூனிக் குறுகி நிற்போர் போன்ற எண்ணிறந்த மக்களை உள்ளடக்குவர்.

-- இவ்வாறு பல வகையான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகின்ற மக்கள் யாரிடம் அடைக்கலம் புகுவார்கள்? அவர்களுக்கு ஆறுதல் அளிப்பவர் கடவுள் ஒருவரே. எனவே, ''ஏழையரின் மனநிலை'' நமதாக இருக்க வேண்டும். நாம் எப்போதும் கடவுளை நம்பி வாழ வேண்டும். நம் சொந்த சக்தியால் பெரிதாக ஒன்றையும் நம்மால் சாதிக்க இயலாது என்பதை உணர்ந்து ஏற்று, நாம் கடவுளிடம் கையேந்தி நிற்க வேண்டும். அப்போது கடவுள் நம் கைகளை மட்டுமல்ல, நம் உள்ளத்தையும் வாழ்வையும் தம் கொடைகளால் நிரப்புவார். அவர் தருகின்ற உயர்ந்த கொடை அவருடைய வாழ்வில் நமக்குப் பங்களிப்பதே. இதையே நாம் ''விண்ணரசு'' என்கிறோம். கடவுளின் வாழ்வில் நாம் பங்கேற்கின்ற பேற்றினை இவ்வுலகிலேயே பெற்றுள்ளோம். இப்பேறு இறுதிக்காலத்தில் நிறைவாக மலரும். இயேசு நம்மைப் பேறுபேற்றோர் என வாழ்த்த வேண்டும் என்றால் நாம் அவர் எதிர்பார்க்கின்ற பண்புகளை நம் வாழ்வில் கொண்டிருக்க வேண்டும். கடவுளின் கொடையாக வருகின்ற ஆட்சியில் நாம் பங்கேற்க அழைக்கப்படுகிறோம். அந்த ஆட்சியை நமக்கு வழங்குகின்ற கடவுள் முன்னிலையில் நாம் ஏழையரின் உள்ளத்தோராக, கனிவுடையோராக, நீதி வேட்கை கொண்டோராக, இரக்கமுடையோராக, தூய்மையுடையோராக, அமைதியை நாடுவோராக, துன்பத்தின் நடுவிலும் கடவுளை நம்புவோராக வாழ்ந்திட வேண்டும் (மத் 5:3-12).

மன்றாட்டு
இறைவா, உம் ஆட்சியில் நாங்கள் பங்கேற்று, பிறரையும் உம்மிடம் அழைத்துவர எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

...... பேறுபெற்றோர்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

'பேறுபெற்றோர்' இறை அருள் பெற்றவர், ஆண்டவரின் ஆசீர் பெற்றவர்,எனப் பொருள் கொள்ளலாம்.
ஏழையரின் உள்ளத்தோர்: கடவுள் பராமரிக்கும் மக்கள்,(வி.ப 22:25;, கடவுளைச் சார்ந்திருப்போர்

துயருறுவோர்: இழப்புக்களாலும் வாழ்க்கைச் சுமையாலும் கடவுளின் தண்டனையை நினைத்தும் (ஏசா 61:3) உள்ளத்தில் மனத்துயர் அனுபவிப்போர்

கனிவுடையோர்: மத் 11:29,குறிப்பிடும் இனிய, எளிய உள்ளம் உடையோருக்க இவ்வுலகில் ஆசீர் வழங்கப்படுகிறது. தி,பா 37:11 எளியோர் நிலத்தை உடைமையாகப் பெறுவர்; அவர்கள் வளமிகு வாழ்க்கையில் இன்பம் காண்பர்.

நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர்: நீதியை நிலை நாட்டுவதில் உள்ள அவசரத்தையும் அழுத்தத்தையும் வேட்கை கொண்ட மனிதனின் நிலைக்கு ஒப்பிட்டு உணர்த்துகிறார்.
இரக்கமுடையோர்: "பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்"(மத் 9:13) துன்புறும் மனிதனில் தெய்வத்தைக் காணும் இரக்கம் இங்கு குறிப்பிடப்படுகிறது.

தூய்மையான உள்ளத்தோர்: ஓரு மனம்,ஒரே மனம்கொண்டு இறைவனைப்பற்றியோர். "கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்; வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர்"(திபா.19:3)

அமைதி ஏற்படுத்துவோர்: மிகவும் உயர்த்தப்படுகின்றனர்.மத் 5:21,43-48 ல் குறிப்பிடும் செயலைச் செய்வோர் அமைதியை ஏற்படுத்துகின்றனர். கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர்: இயேசுவுக்காக, நற்செய்தி மதிப்பீட்டின்படி வாழ்வதால் துன்புறுவோர்(மத்10:16-31)

என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

 

--அருட்திரு ஜோசப் லியோன்