முதல் வாசகம்

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 11: 1-4, 9-18, 20


அந்நாள்களில் அகசியாவின் தாய் அத்தலியா தன் மகன் இறந்துவிட்டதைக் கண்டு கிளர்ந்தெழுந்து அரச குடும்பத்தார் அனைவரையும் கொன்றாள். அரசன் யோராமின் மகளும், அகசியாவின் சகோதரியுமான யோசேபா அகசியாவின் மகன் யோவாசைத் தூக்கிக் கொண்டு போய் ஒளித்து வைத்தாள். அவன் கொல்லப்படவிருந்த அரசிளம் புதல்வர்களில் ஒருவன். அவனையும் அவன் செவிலித் தாயையும், தனது பள்ளியறையினுள் அத்தலியாவின் பார்வையிலிருந்து யோசேபா மறைத்து வைத்தாள். எனவே அவன் உயிர் தப்பினான். அவன் ஆறு ஆண்டுகள் அவளோடு ஆண்டவரின் இல்லத்தில் தலை மறைவாய் இருந்தான். அந்நாள்களில் அத்தலியாவே நாட்டை ஆண்டு வந்தாள். ஏழாம் ஆண்டில், அரச மெய்க்காப்பாளர், அரண்மனைக் காவலர் ஆகியோரின் நூற்றுவர் தலைவர்களை குரு யோயாதா வரவழைத்து ஆண்டவரின் இல்லத்திற்குள் கூட்டிச் சென்றார். அங்கு அவர் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். அக்கோவிலில் அவர்களை ஆணையிடச் செய்து அரசனின் மகனை அவர்களுக்குக் காட்டினார். குரு யோயாதா கட்டளையிட்டுக் கூறிய அனைத்தையும் நூற்றுவர் தலைவர்கள் செய்தனர். ஓய்வு நாளில் விடுப்பில் செல்வோர், பணியேற்போர் ஆகிய தங்கள் வீரர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு குரு யோயாதாவிடம் வந்தனர். அவர் ஆண்டவரின் இல்லத்தில் இருந்த தாவீது அரசரின் ஈட்டிகளையும் கேடயங்களையும் நூற்றுவர் தலைவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார். காவலர், கையில் படைக்கலன் தாங்கி, திருக்கோவிலின் தென்புறம் தொடங்கி வடபுறம் வரை, பலிபீடத்தையும் திருக்கோவிலையும் அரசனையும் சூழ்ந்து நின்று கொண்டனர். பின்பு அவர் இளவரசனை வெளியே கூட்டி வந்து, அவனுக்கு முடி சூட்டி, உடன்படிக்கைச் சுருளை அளித்தார். இவ்வாறு அவன் திருப்பொழிவு பெற்று அரசனானான். அனைவரும் கைதட்டி "அரசர் நீடூழி வாழ்க!" என்று முழங்கினர். மக்களும், காவலரும் எழுப்பிய ஒலியை அத்தலியா கேட்டு ஆண்டவரின் இல்லத்தில் கூடியிருந்த மக்களிடம் வந்தாள். மரபுக்கேற்ப, அரசன் தூணருகில் நிற்பதையும், படைத்தலைவர்களும் எக்காளம் ஊதுபவர்களும் அவனருகில் இருப்பதையும், நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடி எக்காளம் ஊதுவதையும் கண்டாள். உடனே அவள் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, "சதி! சதி!" என்று கூக்குரலிட்டாள். அப்பொழுது குரு யோயாதா படைகளுக்குப் பொறுப்பேற்றிருந்த நூற்றுவர் தலைவர்ளை நோக்கி, "படையணிகளுக்கு வெளியே அவளைக் கொண்டு செல்லுங்கள். அவளை எவனாவது பின்பற்றினால் அவனை வாளால் வெட்டி வீழ்த்துங்கள்" என்று கட்டளையிட்டார். "அவளை ஆண்டவரின் இல்லத்தினுள் கொல்லலாகாது" என்றும் கூறியிருந்தார். எனவே அவர்கள் அரண்மனையின் குதிரை நுழைவாயிலை அவள் அடைந்தபொழுது, அவளைப் பிடித்தனர். அங்கே அவள் கொல்லப்பட்டாள்.
பின்பு யோயாதா, ஆண்டவர் ஒரு பக்கமும், அரசன், மக்கள் மறுபக்கமுமாக அவர்களிடையே உடன்படிக்கை செய்து வைத்தார். இதன் மூலம் அரசனும் மக்களும் ஆண்டவரின் மக்களாய் இருப்பதாக ஏற்றுக் கொண்டனர். அவ்வாறே அவர் அரசனுக்கும் மக்களுக்கும் இடையே உடன்படிக்கை செய்து வைத்தார். பிறகு நாட்டிலுள்ள மக்கள் எல்லாரும் பாகாலின் கோவிலுக்குச் சென்று பலிபீடங்களையும் சிலைகளையும் தகர்த்தெறிந்தனர்; பாகாலின் அர்ச்சகன் மத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொலை செய்தனர். பிறகு குரு ஆண்டவரின் இல்லத்தில் காவலரை நிறுத்தி வைத்தார். நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடினர். அத்தலியா வாளால் அரண்மனையில் கொல்லப்பட்டபின் நகரில் அமைதி நிலவியது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 132: 11. 12. 13-14. 17-18 (பல்லவி: 13)

பல்லவி: ஆண்டவர் சீயோனைத் தம் உறைவிடமாக்க விரும்பினார்.

11 ஆண்டவர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்;
அவர்தம் வாக்குறுதியினின்று பின்வாங்க மாட்டார்:
"உனக்குப் பிறந்த ஒருவனை அரசனாக ஏற்படுத்தி உன் அரியணையில் வீற்றிருக்கச் செய்வேன். -பல்லவி

12 உன் மைந்தர் என் உடன்படிக்கையையும் நான் அவர்களுக்குக் கற்பிக்கும் என் நியமங்களையும் கடைப்பிடித்தால்,
அவர்களுடைய மைந்தரும் என்றென்றும் உன் அரியணையில் வீற்றிருப்பர்." -பல்லவி

13 ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்.
14 "இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்;
இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன். -பல்லவி

17 இங்கே தாவீதின் மரபிலிருந்து ஒரு வல்லவனை எழச் செய்வேன்;
நான் திருப்பொழிவு செய்தவனுக்காக ஓர் ஒளிவிளக்கை ஏற்பாடு செய்துள்ளேன்.
18 அவனுடைய எதிரிகளுக்கு இகழ்ச்சியெனும் உடையை உடுத்துவேன்;
அவன்மீதோ அவனது மணிமுடி ஒளிவீசும்." -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

மத்தேயு 6:19-23

பொதுக்காலம் 11 வாரம் வெள்ளி

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 19-23

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக, உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாய் இருந்தால் இருள் எப்படியிருக்கும்!''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

எது நம் செல்வம்?

மத்தேயு 6: 19-23

உலகில் வாழும்போது தங்களுக்கென்று செல்வங்களைச் சேமித்து வைக்க வேண்டாம் என்று இயேசு தமக்கு செவிசாய்ப்பவர்களை எச்சரிக்கிறார். உலகில் செல்வங்கள் திருடப்படலாம் அல்லது அவை சிதைந்து போகலாம் அல்லது அவற்றைக் கண்டு நாம் சலிப்படையலாம். நாம் இறக்கும் நாளில், நமது சொத்துக்கள், செல்வங்கள் அனைத்1தையும் விட்டுவிடுவோம். அவைகளை நம்முடன் விண்ணகத்திற்கும் நரகத்திற்கும் கொண்டு செல்ல முடியாது என்றும், நிரந்தரமான, அழியாத செல்வத்தை நாம் சேமித்து வைக்க வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.

நம்மில் பலர் ஏன் பொருட்களை வாங்கி குவிக்கிறோம்? இது நமது வசதிக்காகவா, பாதுகாப்பிற்காகவா, இன்பத்திற்காகவா அல்லது அந்தஸ்துக்காகவா? எனக்கு ஏன் இவ்வளவு தேவை என்று நினைக்கிறோம்? மண்ணிற்குரிய செல்வங்கள் உண்மையிலேயே நமக்கு அன்பையும் பாதுகாப்பையும் தராது என்பதை நாம் ஆழமாக உணர்கிறோம். கடவுளால் மட்டுமே நமக்கு உண்மையான பாதுகாப்பை வழங்க முடியும்! நமது மிகப்பெரிய தேவை அன்பு: கடவுளிடமிருந்தும் நம் வாழ்வில் நம்மைச் சுற்றி இருக்கும் மக்களிடமிருந்தும் வருகின்ற அன்பு. ஒரு வைரம், ஒரு பெரிய வீடு அல்லது ஒரு வேகமான கார் நம்மை ஒருபோதும் நேசிக்க முடியாது. இன்னும் நம்மில் பலர் "மேலும்" "மேலும்" என்று ஆசைப்படுகிறோம்.

இன்று, உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்: உங்கள் வாழ்க்கையில் யார், எது உண்மையான பொக்கிஷம்? இது ஒரு சில நபர்களாகவோ அல்லது விஷயங்களாகவோ இருக்கலாம். இருப்பினும், நம் வாழ்வில் உள்ள உண்மையான மற்றும் நீடித்த பொக்கிஷங்களை நாம் கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும்; இந்த செல்வங்களே உங்கள் வாழ்விற்கு அர்த்தத்தைக் கொண்டு வரும்.

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ.

........................................................................

2அரசர்கள் 11: 1 – 4, 9 – 18, 20
இறைவன் வழங்கும் வாக்குறுதி

கடவுள் தன்னுடைய ஊழியன் தாவீதுக்கு அவரது வழிமரபு என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று வாக்குறுதி கொடுக்கிறார். யூதாவை ஆள்கிறவர்கள் அவரது வழிமரபினராகத்தான் இருப்பர் என்று கூறுகிறார். அது சாதாரண வாக்குறுதி அல்ல. நிறைவேற்றுவதற்கு எளிதானது அல்ல. ஆனால், கடவுள் தன்னுடைய வல்லமையினால் அதை நிகழச் செய்கிறார். இன்றைய வாசகத்தில், தாவீதின் வழிமரபினர் ஆள்வதற்கு ஏற்பட்ட ஆபத்தையும், இறைவன் அற்புதமாக அந்த வழிமரபைப்பாதுகாத்து, தன்னுடைய வாக்குறுதியை நிலைநாட்டியதையும் பார்க்கலாம்.

அத்தலியா தன்னுடைய மகன் இறந்துவிட்டான் என்பதைக் கேள்விப்பட்டு, அரச குடும்பத்திலுள்ள அனைவரையும் கொலை செய்கிறார். இனி இந்த குடும்பத்திலிருந்து யாரும் ஆட்சி செய்யக்கூடாது என்பதுதான் அவளுடைய எண்ணமாக இருக்கிறது. கிட்டத்தட்ட, கடவுளின் வாக்குறுதியை முறியடிக்கிற ஒரு வேட்கை அவளிடத்தில் இருக்கிறது. அவ்வளவுதான், இனி தாவீதீன் அரியணை தளிர்க்க முடியாது என்பது போன்ற சூழலில், யோராமின் மகளும், அகசியாவின் சகோதரியுமான யோசேபா, அகசியாவின் மகன் யோவாசைத் தூக்கிக் கொண்டு போய், ஒளித்து வைத்தாள். இறைவன் எப்படியெல்லாம் வரலாற்றில் அற்புதமாக செயல்படுகிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி அருமையான உதாரணம். தன்னுடைய வாக்குறுதியை இறைவன் தன்னுடைய வல்லமையினால் நிலைநாட்டி, எக்காலத்திற்குமான உண்மையான, உயிருள்ள தேவன் நானே என்பதை, அவர் அறிவிக்கிறார்.

இறைவன் நமக்கு உண்மையாக இருக்கிறார். தன்னுடைய வாக்குறுதிக்கு ஏற்ப நடந்துகொள்கிறார். ஆனால், பல வேளைகளில் நாம் தான், இறைவனுக்கு உண்மையில்லாதவர்களாக இருக்கிறோம். அவரின் வல்லமை மீது, மாட்சிமை மீது சந்தேகம் கொள்கிறவர்களாக இருக்கிறோம். அதிலிருந்து மீண்டு, இறைவன் மீது முழுமையான நம்பிக்கை உள்ளவர்களாக வாழ முயற்சி எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

நல்ல செயல்பாடுகள்

ஒரு மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன், துறவியைச் சந்தித்தானாம். இந்த உலகத்திலே தான் நினைத்தது எல்லாம் சாதித்து விட முடியும், தனக்கு தேவையானதை எல்லாம் வாங்கிவிட முடியும். என்னால் வாங்க முடியாதது ஒன்றுமேயில்லை, என்று தற்பெருமையாகச் சொன்னானாம். அவர் கூறியதை அமைதியாக கேட்ட அந்த துறவி, ஒரு சிறிய ஊசியைக்கொடுத்து, ”தயவுசெய்து, நீங்கள் இறந்து மேலுலகத்திற்கு வருகிறபோது, இதனை எனக்காக கொண்டு வருவீர்களா? என்று கேட்டானாம். கோபமடைந்த அந்த செல்வந்தன், இது என்ன முட்டாள்தனமான பேச்சு? யாராலும் இதனைக் கொண்டு வரமுடியாதே? என்று கத்தினான். ”அதேபோலத்தான், நீ சேர்த்து வைத்திருக்கிற செல்வமும். இதனால், மேலுலகத்தில் ஒரு பயனும் கிடையாது. ஒரு பைசா கூட, நீ இங்கிருந்து அடுத்த உலகத்திற்கு எடுத்துச்செல்ல முடியாது. பகிர்ந்து வாழ்வதற்கு முயற்சி செய்” என்று துறவி தன் வழியே சென்றாராம்.

வாழ்க்கையில் தேவைக்கு அதிகமாக செல்வத்தைச் சம்பாதித்துவிட்ட பலபேரின் மனநிலை, இந்த செல்வந்தனின் மனநிலையைப் போலத்தான் இருக்கிறது. இந்த உலகத்தில் செல்வத்தை சேர்த்து விட்டோம், இனிமேல் கவலை இல்லை என்று, அகம்பாவத்தோடு, அறியாமையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கிருக்கிற சிறுதுரும்பை கூட அவர்களால், இறப்பிற்கு பின் எடுத்துச்சென்றுவிட முடியாது, என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருக்கிறார்கள். இயேசுவின் போதனை இத்தகைய எண்ணம் கொண்ட மனிதர்களுக்குத்தான் என்றால், அது மிகையாகாது.

இந்த உலகத்தில் வாழக்கூடிய நாம் அனைவருமே எப்போதும், மறுஉலகத்தை நினைத்து நல்லது செய்யவேண்டியதில்லை. நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடு, நன்மைகளை மற்றவர்களுக்குச் செய்ய முன்வருவோம். இந்த உலகத்தில் நாம் எதையும் கொண்டுவரவில்லை. அதேபோல, எதையும் கொண்டு செல்லப்போவதில்லை. எனவே, இந்த உலகத்தில் நல்ல மனிதர்களைச் சம்பாதிப்போம். நல்ல செயல்பாடுகளைச் செய்வதில் நம்மையே ஊக்குவிப்போம்.

----------------------------------------

விண்ணகத்தில் செல்வம் சேர்ப்போம்

”விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்” என்ற இந்த இறைவார்த்தை யூதர்களுக்கு நன்றாக புரியக்கூடிய வார்த்தைகளாக இருந்தன. ஏனென்றால், யூதமக்கள் மத்தியில் யூத சமயத்தைத் தழுவிய ஓர் அரசரைப்பற்றிய கதை ஒன்று சொல்லப்படுகிறது. அதியாபெனேவைச்சார்ந்த மோனோபாஸ் என்கிற அரசர் தான் அவர். யூத சமயத்தைத் தழுவியவுடன் அவர் செய்த முதல் காரியம், தனது செல்வத்தையெல்லாம், பஞ்சகாலத்தில் ஏழைகளுக்குப்பகிர்ந்து கொடுத்தார். அதைப்பார்த்த அவருடைய சகோதரர்கள், ”நமது மூதாதையர்கள் அனைவரும் செல்வத்திற்கு மேல் செல்வம் சேர்த்து வைத்திருந்தார்கள். நீயோ, அதை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டாயா?” என்று கடிந்துகொண்டார்கள். அதற்கு அரசர், நமது மூதாதையர் மண்ணகத்தில் செல்வத்தைச் சேர்த்து வைத்தனர். நானோ விண்ணகத்தில் சேர்த்து வைத்திருக்கிறேன். மண்ணகத்தில் சேர்த்து வைத்த செல்வத்தினால் நமக்கு பயன் ஒன்றும் இல்லை. விண்ணகச்செல்வம் நமக்கு நிலையான வாழ்வு தரும்” என்று பதிலளித்தாராம்.

இயேசு இந்த உவமையைச் சொன்னவுடன், நிச்சயம் அங்கிருந்தவர்களுக்கு, தங்கள் நடுவில் பிரபலமாயிருந்த இந்த கதை நினைவுக்கு வந்திருக்கும். இயேசுவும் சரி, யூதப்போதகர்களும் சரி, சுயநலத்தோடு சேர்த்து வைக்கப்படும் செல்வத்தினால் அழிவுதான் நேரிடும் என்பதில் தெளிவாக இருந்தனர். அதையே மக்களுக்குப் போதித்தனர். தொடக்க கால திருச்சபையில், இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழக்கூடிய பழக்கம் வெகுவாக இருந்தது. ஒருமுறை உரோமை அதிகாரி ஒருவர், திருத்தொண்டர் லாரன்சியசிடம், ”நீங்கள் சேர்த்து வைத்திருக்கிற செல்வத்தை எனக்கு காட்டும்” என்று கட்டளையிட்டாராம். உடனே லாரன்சியஸ், தாங்கள் பணிவிடை செய்கிற ஏழைகளையும், கைம்பெண்களையும் காட்டி, ”இவர்கள்தான் நாங்கள் சேர்த்து வைத்திருக்கிற செல்வம்” என்று பதிலளித்தாராம். ஆக, நாம் அனைவருமே விண்ணகத்தில் செல்வம் சேர்த்து வைப்பதற்கு அழைக்கப்படுகிறோம்.

இன்றைய நாட்களில் மக்கள் பணத்தை எதிர்காலத்திற்கும், அடுத்த தலைமுறையினருக்கும் சேர்த்து வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தங்களிடையே வாழக்கூடிய ஏழை, எளியவர்கள் மட்டில் அக்கறை இல்லாதவர்களாக வாழ்கின்றனர். உண்மையான செல்வம் என்பது, ஏழை, எளியவர்களிடத்தில் இரக்கம் காட்டுவதுதான். அப்போதுதான் நாம் விண்ணகத்திற்குள் நுழைய முடியும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

செயல்பாடுள்ள விசுவாசம்

செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம். நம்முடைய செயல்பாடுகள் விசுவாச வெளிப்பாடுகளாக மாற வேண்டும் என்பதுதான் இயேசுவின் போதனை. எப்பொழுது ஒரு மனிதன் இன்னொருவருடைய தேவையை அறிந்து அவருடைய உணர்வுகளுள் நுழைந்து அத்தேவையை நிறைவேற்றுவதற்குச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறானோ, அப்பொழுது அவன் இயேசுவுடைய இந்தப்போதனையை முழுமையாகப்புரிந்து கொள்கிறான். நல்ல சமாரியன் உவமையிலே, வருகிற சமாரியன் அடிபட்டுக்கிடக்கிற அந்த மனிதன் மீது இரக்கம் கொள்கிறான். இரக்கத்தை செயல்வடிவமாக மாற்றுகிறான். அந்த மனிதனைத்தூக்கி, தன் கழுதையின் மீது வைத்து, அவனைப்பாதுகாப்பாக சத்திரக்காரனிடம் சேர்த்து, அவனுக்குத் தேவையானவற்றைச்செய்ய சொல்கிறான். இரக்கத்தை செயல்வடிவிலே காட்டுகிறான். ஒவ்வொரு செயலிலும் இரக்கம் நிறைந்திருக்க வேண்டும். ஏனெனில் மனித வாழ்வு நீர்க்குமிழி போன்றது. நிலைத்து நிற்கின்ற செயல்கள் நம்முடைய இரக்கச்செயல்கள் மட்டும்தான். மத்தேயு 25 வது அதிகாரத்தில் வாசிக்கிறோம். “சின்னஞ்சிறிய என் சகோதர, சகோதரிகளில் ஒருவருக்கு நீங்கள் செய்தபோதெல்லாம் அதை எனக்கே செய்தீர்கள்”. இந்த வாழ்வு பயனள்ள வாழ்வாக இருக்க வேண்டுமென்றால், நிறைவான வாழ்வாக இருக்க வேண்டும். இரக்கத்திற்குட்பட்ட செயல்களைச் செய்ய வேண்டும். எப்பொழுது ஒருவன் இரகத்திற்குட்பட்ட செயல்களைச்செய்கிறானோ, அவன் இறைவனுக்குள் நெருங்குகிறான் என்று அர்த்தம்.

அன்னை மரியாளிடம் இத்தகைய இரக்கம் அவளுடைய செயலில் வெளிப்படுகிறது. கபிரியேல் தூதர் மங்களவார்த்தையை அன்னை மரியாளுக்கு சொல்கிறார். நம்மைப்பொறுத்தவரை அது மங்களவார்த்தை. மனுக்குலத்தை மீட்கிற வார்த்தை. அன்னை மரியாளைப்பொறுத்தவரை அது மங்களவார்த்தையா? என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால், அவளுடைய வாழ்வே கேள்விக்குறியாகப்போகிறது.. ஆனால், மனுக்குலத்தின் மீது அவள் வைத்திருந்த அந்த இரக்கம், கடவுள் என்னோடு இருக்கின்றபோது, சோதனைகளை என்னால் சாதனைகளாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை, மற்றவர்களை துன்பத்திலிருந்து விடுவிப்பதற்காக, தன்னை அடிமையாக இறைவன் திருமுன்னிலையில் கையளிக்கிறாள். மனுக்குலத்தின் மீது தான் வைத்திருந்த இரக்கத்தை செயலிலே வெளிப்படுத்துகிறாள். அதனுடைய வடிவம் தான் ‘இதோ, ஆண்டவருடைய அடிமை’ என்ற அவளுடைய வார்த்தைகள். இரக்கத்தை செயல்வடிவமாக்குதற்கு முன்னோடியான வார்த்தைகள்.

நம்முடைய வாழ்விலும் இரக்கம் செயல்வடிவமாக்கப்பட வேண்டும். நாம் இறந்தபிறகு நம்மோடு வரப்போவது நாம் சேர்த்து வைத்த சொத்துக்கள் அல்ல, நமக்கு கிடைத்த புகழ் அல்ல. மாறாக, நாம் செய்கிற இரக்கச்செயல்கள் தான். எனவே, நம்முடைய வாழ்வில் இரக்கச்செயல்களை செய்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

2 அர 11: 1-4, 9-18, 20
மத் 6: 19-23

கண்தான் உடலுக்கு விளக்கு!

“கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப்போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும்”“ என்னும் உளவியல் வல்லுனர் இயேசுவின் அருமையான செய்தியை இன்று சிந்தித்து வாழ்வாக்குவோம்.

கண்ணே நமது உடல், மன மற்றும் ஆன்ம நலனுக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. கண் கெட்டுப்போனால், உடல் முழுவதும் இருளாய் இருக்கும் என்பது நூறு விழுக்காடு உண்மை.

இதைப் பற்றி வேறொரு இடத்தில் பேசும் இயேசு, “ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று”“ என்று சொல்லி நம்மை மலைப்புக்குள்ளாக்குகிறார். ஆம், பாவம் செயலில் இல்லை, கண் பார்வையிலேயே தொடங்கிவிடுகிறது. எனவே, நமது பார்வையைப் பற்றிக் கவனமாயிருப்போம்.

நல்லனவற்றை மட்டும் பார்ப்போம். நல்ல எண்ணத்தோடு பார்ப்போம். நமது பார்வை நேர்மையானதாக அமையட்டும். யோபு “கண்களோடு நான் உடன்படிக்கை செய்துகொண்டேன். பின்பு, கன்னி ஒருத்தியை எப்படி நோக்குவேன்?””“ என்று தம் மாசின்மையை வலியுறுத்தியதுபோல, நாமும் நமது கண்களோடு உடன்படிக்கை செய்துகொள்வோம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் கண்கள் என்னும் கொடைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் கண்களால் நாங்கள் பாவம் செய்யாதவாறு எங்களைக் காத்துக்கொள்ளும். எங்கள் கண் நலமாயிருந்து எங்கள் உடல் முழுவதும் ஒளி பெறும் அருளை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

செல்வமும், உள்ளமும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

#8220;உங்கள் செல்வம் எங்கே உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்;” என்னும் ஆண்டவரின் அமுத மொழிகளை இன்று தியானிப்போம். நமது மனம் நாம் விரும்பும் நபரையோ, அல்லது பொருளையோ, அல்லது இடத்தையோ எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கும் பழக்கம் கொண்டது. ஓரளவு தன்னுணர்வு கொண்ட அனைவரும் இதை உணர்ந்திருப்பர். நமது சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி, ஒரே சீராக வைத்திருப்பதையே யோகா அல்லது தியானம் என்கின்றனர். நமது மனம் இறைவனையே எண்ணிக்கொண்டிருந்தால், அவரே நமது செல்வம். நமது மனம் வேறு ஒரு மனிதரையோ, அல்லது பொருளையோ எண்ணிக்கொண்டிருந்தால் அவர் அல்லது அது நமது செல்வமாக மாறிவிடுகிறது. திருப்பாடல் 63ல் #8220;படுக்கையிலும் உம்மை நினைத்திருப்பேன். இரவுகளில் உம்மை சிந்திப்பேன்” என்று நாம் வாசிக்கிறோம். இறைவனையே தனது மிகப்பெரும் செல்வமாகக் கொண்ட ஒரு மனிதரின் உணர்வுகளின் வெளிப்பாடே இது. எனவே, நமது செல்வம் எது என்று எண்ணிப் பார்த்து, இறைவனையே நமது ஒப்பற்ற செல்வமாக மாற்றிக்கொள்வோம்.

மன்றாடுவோம்: ஒப்பற்ற செல்வமான இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் உள்ளம் எப்போதும் உம்மையே பற்றிக்கொண்டு வாழும் அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

 

ஒப்பற்ற செல்வம் சேர்ப்போம்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இப் பகுதிகளில் தவிர்க்க வேண்டிய மூன்றைச் சொல்லுகிறார்.

1. மண்ணுலகில் செல்வம் சேர்த்து வைக்க வேண்டாம். 2.கவலை வேண்டாம்.3. தீர்ப்பிட வேண்டாம் என்பன

1. மண்ணுலகில் செல்வம் சேர்த்து வைக்க வேண்டாம்: செல்வம் என்றால் அழியாததாக இருக்கவேண்டும்; நிரந்தரமானதாக இருக்க வேண்டும்.நிலையான நிம்மதியான வாழ்க்கையைத் தருவதாக இருக்க வேண்டும். ஆகவே காணாமல் போய்விடுவதும், பூச்சி அரித்துவிடுவதும், நிம்மதியைக் குலைத்துவிடுவதும் செல்வமாக இருக்க முடியாது. பவுலடியார் அருமையான விளக்கம் தருகிறார், "உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம்".(பிலிப் 3:8)

ஒப்பற்ற செல்வமாம் கிறிஸ்துவைப்பற்றிய அறிவிலும் அவருக்கு உகந்த வாழ்க்கை வாழ்வதையும் அதிலே கிடைக்கும் மன நிறைவையும் நிம்மதியையும் செல்வமாகக் கருதி, அதைச் சேமிப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கச் சொல்கிறார்.இந்தச்; செல்வத்தை யாரும் களவாட முடியாது; எந்த பூச்சியும் அழிக்காது; எதைப்பற்றியும் கவலை இருக்காது.

மண்ணுலகில் செல்வம் சேர்ப்பதில் நேரத்தையும் திறமையையும் வாழ்கையைச் செலவிட்டுவிட்டுச், செல்வம் சேர்த்த பின் வாழ்க்கையை இழந்து நிற்கும் மனிதனை என்ன சொல்ல.சிரிப்பதா! அழுவதா? இந்த நிலை வேண்டாம் என்று இயேசு சொல்லுகிறார்.இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

--அருட்திரு ஜோசப் லீயோன்